சனி, 30 நவம்பர், 2019

வியாழன், 28 நவம்பர், 2019

வெள்ளி, 22 நவம்பர், 2019

புதன், 20 நவம்பர், 2019

மூலாதார நூல்களை முதலில் படிப்போம்!



------------------------------------------------------------
இன்று இஸ்லாமிய மூலாதார நூல்கள் அனைத்தும் தமிழில் வெளிவந்துவிட்டன. படித்துத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வமுள்ளோர் அவற்றை வாங்கிப் படிக்கின்றார்கள். எல்லோரும் கட்டாயம் படிக்க வேண்டிய முக்கியமான நூல்களைத் தங்களுக்கு முன்வைக்கிறேன்.

தஃப்சீர் இப்னு கஸீர்-தமிழாக்கம்

ஸிஹாஹுஸ் ஸித்தா-ஆதாரப்பூர்வமான ஆறு நூல்கள் (புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், சுனனுந் நஸாயீ, இப்னு மாஜா) தமிழாக்கம்

தஃப்சீர் ஜவாஹிருல் குர்ஆன் (பல்வேறு தஃப்சீர்களின் தமிழாக்கம்-பாக்கியாத் வெளியீடு)

நபிமார்கள் வரலாறு (தற்போது வரை 8 பாகங்கள் வெளிவந்துள்ளன. ஆயிஷா பதிப்பக வெளியீடு)

இவை தவிர மற்ற நூல்களையும் படிக்கலாம். ஆனால் மேற்கண்ட நூல்களை ஒவ்வொரு முஸ்லிமும் படித்துத் தெரிந்துகொள்வது அவசியம். அப்போதுதான் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைகளை ஓரளவுக்கேனும் விளங்கிச் செயல்பட முடியும்.

மேற்கண்ட மூலாதார நூல்களையும் இன்னும் பயனுள்ள பல்வேறு நூல்களையும் படிக்க அல்லாஹ் எல்லோருக்கும் நல்வாய்ப்பை நல்குவானாக.

அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி
20.11.2019  22.03.1441
===================================











திங்கள், 18 நவம்பர், 2019

இமாமாக உள்ளோர் கவனிக்க...



-----------------------------------------
தற்காலத்தில் பெரும்பாலானோரின் கைகளில் அறிதிறன் கைப்பேசி (ஸ்மார்ட் ஃபோன்) உள்ளது. பல்வேறு செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக்கொள்கிறார்கள். உலகச் செய்திகளைக்கூட உடனுக்குடன் தெரிந்துகொள்கிறார்கள். இருப்பினும் தம் மஹல்லா-பகுதிக்குள் என்ன நடக்கிறது, யார் இறந்தார், யாருக்குத் திருமணம், யார் நோய்வாய்ப்பட்டுள்ளார், யாருக்கு உதவி வேண்டும் முதலான எதுவும் பலருக்குத் தெரிவதில்லை. எனவே இந்நிலையை மாற்றியமைக்கும் விதத்தில் ஒவ்வோர் இமாமும் தத்தம் பகுதியில் வசிப்போரின் அறிதிறன் கைப்பேசி எண்களைப் பெற்று, கட்செவி (வாட்ஸ்அப்) குழு ஒன்றை உருவாக்கி, அதில் பதிவு செய்துகொள்ள வேண்டும். தம் பகுதி சார்ந்த இறப்புச் செய்தி, திருமணச் செய்தி, வெள்ளிக்கிழமை பயான், மத்ரஸா நேரம், தொழுகை நேரம், அவ்வப்போது வருகின்ற ஜமாஅத்துல் உலமாவின் அறிக்கைகள், அறிவிப்புகள் முதலான தகவல்களைப் பதிவு செய்தால் மக்கள் பயன்பெறுவார்கள்.

அத்தோடு திருமணத்திற்காக மணப்பெண்-மணாளர் தேடுவோரின் விவரங்களைப் பதிவுசெய்து பிற குழுக்களிலும் பகிரலாம். அதனால் அவர்களுக்கு மிகத் துரிதமாக மணப்பெண்-மணாளர் அமையக்கூடிய வாய்ப்பு ஏற்படும். (சேவை அடிப்படையில் தெரிவிக்க வேண்டிய தகவலை இன்று பணத்திற்கு விற்கிறார்கள். இதனால் பலரின் திருமணம் தள்ளிப்போவதைக் காண முடிகிறது. இதற்காகவே திருமணத் தகவல் மையங்கள் பல முளைத்திருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.)

ஒவ்வோர் இமாமும் இதன்மூலம் தத்தம் மஹல்லா மக்களை இயன்ற அளவு ஒருங்கிணைக்க முடியும்.

ஏற்கெனவே இமாம்கள் சிலர் இவ்வாறான வாட்ஸ்அப் குழுவை ஏற்படுத்தி, சேவை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். மற்ற இமாம்களும் இச்சேவையில் ஈடுபட்டால் மக்கள் பலரும் பயன்பெறுவார்கள் என்பது திண்ணம். அதுவே என் எண்ணம்.

ரமளான் மாதத்தில், ஸகாத் பெறத் தகுதியானோர் பட்டியலைத் தயார் செய்து தளத்தில் வெளியிட்டால் ஸகாத் கொடுக்கும் செல்வர்கள் தம் ஸகாத்தை உரியவர்களுக்கு நேரடியாக வழங்க ஏதுவாக இருக்கும்.

திடீர் உதவி தேவைப்படுவோர் குறித்த விவரத்தைப் பதிவு செய்தால் விரும்புவோர் அவருக்கு நேரடியாக உதவி செய்ய வசதியாக இருக்கும்.

இப்படிப் பற்பல சேவைகளை மேற்கொள்ள வசதியாக உள்ள வாட்ஸ்அப் குழுவை ஒவ்வோர் இமாமும் உருவாக்கி, சேவை செய்வது தற்காலத்தில் தவிர்க்க முடியாததாகும்.

பின்குறிப்பு: அட்மின் (இமாம்) மட்டுமே செய்திகளைப் பதிவிடுமாறு வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தேவையற்ற செய்திகளைத் தவிர்க்க முடியும்.

அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி
18.11.2019 20.03.1441
===============================

வெள்ளி, 15 நவம்பர், 2019

வியாழன், 14 நவம்பர், 2019

வள்ளுவர் எந்த மதம்? (கட்டுரை)

நபிபுகழைத் தமிழில் பாடுவோம்!



-
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
---------------------------------------------------------------------------------
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்ந்து பாடலாமா என்று ரபீஉல் அவ்வல் மாதத்தில் மிகுதியானோர் கேட்கத் தொடங்கிவிடுகின்றனர். இது குறித்து வினாத் தொடுக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது? ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அருமை பெருமைகளையும் சிறப்புகளையும் மேன்மைகளையும் எடுத்துச் சொன்னால்தானே முஸ்லிம்களுக்கு மட்டுமின்றிப் பிற சமுதாய மக்களுக்கும் அவர்களின் முக்கியத்துவம் விளங்கும்? அவர்களைப் பற்றிப் புகழ்ந்து சொல்லாமல் எப்படி அவர்கள் குறித்து பிற மக்கள் அறிந்துகொள்வார்கள்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்பையும் மேன்மையையும் கவிதைகளாக, சொற்பொழிவுகளாக எடுத்துரைப்பதன் மூலம் அவர்களைப் பற்றிப் பிற சமுதாய மக்கள் படிக்கத் தொடங்குவார்கள். இவ்வளவு சிறப்பும் மதிப்பும் கொண்ட அந்த நபி யார்? அவர் இறுதி இறைத்தூதர்தானா என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்குவார்கள். இத்தகைய உயர்நோக்கத்தில்தானே கவிதை பாடுகிறார்கள்? பிறகென்ன தாராளமாக அவர்களைப் புகழ்ந்து பாட வேண்டியதுதானே?

இறைவனுடைய பண்புகளை இறைத்தூதருக்குப் பொருத்தலாமா? அது ஷிர்க்-இணைவைத்தல் ஆகாதா? என்று சிலர் வினாத் தொடுக்கின்றனர். அப்படி என்னதான் அல்லாஹ்வின் பண்பை இறைத்தூதருக்குப் பொருத்திவிட்டார்கள் என்று மறுவினாத் தொடுத்தால், "நீங்கள் பாவங்களை மன்னிக்கக் கூடியவர் (அன்த்த ஃகஃப்பாருல் கத்தாயா)'' என்று புகழ்வது அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாக ஆகாதா? என்று வினவுகின்றனர்.


அதற்கு நீங்கள் கூறும் பொருள் பொருந்தாது. அதன் பொருள், "நீங்கள் பாவங்களை மன்னித்தவர்'' என்பதுதான். தமிழ் இலக்கணத்தில், வினையாலணையும் பெயர் என்று ஒன்று உண்டு. அது முக்காலத்தையும் காட்டும். அதனடிப்படையில் மன்னித்தவர், மன்னிக்கிறவர், மன்னிப்பவர் என முக்காலமும் பொதிந்ததுதான் வினையாலணையும் பெயர். அரபியில் ஃபஉஆல் வாய்பாட்டில் அமைந்துள்ள ஃகஃப்பார் என்பது மிகை வினையாலணையும் பெயர் ஆகும். கவிதையில் இடம்பெற்றுள்ள அவ்வார்த்தைக்குக் கவிஞரின் எண்ணம் என்னவெனில், "நீங்கள் உங்களுக்கு இழைக்கப்பட்ட துன்பங்களையும் தொல்லைகளையும் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட பாவங்களையும் மன்னித்தீர்கள். எனவே நீங்கள் பாவங்களை மன்னித்தவர்'' என்பதாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மைக் கொல்ல வந்த எதிரிகளை மன்னித்துள்ளார்கள்; தமக்குத் தொல்லைகொடுத்த எத்தனையோ பேர்களை மன்னித்துள்ளார்கள். அந்த அடிப்படையில் பாடப்பட்டதுதானே தவிர "நீங்கள் எப்போதும் பாவங்களை மன்னிக்கக்கூடியவர்'' என்ற பொருளில் இல்லை; அது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

ரபீஉல் அவ்வல் மாதத்தில் அனைவரும் அவர்களைப் புகழ்ந்து பாடுவது கட்டாயமா? என்று சிலர் வினவுவதுண்டு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது நேசம் கொண்டுள்ள ஒவ்வொருவரும் அவர்களின் புகழை ஏதாவது ஒருவகையில் வெளிப்படுத்தத்தான் வேண்டும்.

அதேநேரத்தில் கவிதையால்தான் புகழை வெளிப்படுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை. ரபீஉல் அவ்வல் மாதத்தில் ஒவ்வொருவரும் தத்தம் வீடுகளில் கவிபாடும் சபையை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தமோ, தமக்கு ஓதத் தெரியாவிட்டாலும் ஓதத் தெரிந்தவர்களை அழைத்து கவிபாடித்தான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமோ இல்லை.

அறிந்தோர் மட்டும் கவிபாடினால் போதுமானது. அறியாதோர் அமைதியாக இருந்துவிடட்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்த எத்தனையோ வழிகள் உள்ளன. நபியவர்கள் காட்டித்தந்த சுன்னத்தான வழிமுறைகளைச் செவ்வனே பின்பற்றுதல், அவர்கள்மீது ஸலவாத் ஓதுதல், பாங்கு சொல்லி முடித்தபின் வசீலா எனும் சொர்க்கத்தின் உயர்பதவியை அவர்களுக்கு வழங்குமாறு அல்லாஹ்விடம் பரிந்துரை செய்தல் ஆகிய அனைத்தும் அவர்கள்மீதுள்ள அன்பின் வெளிப்பாடுதானே? பாங்கு சொல்லி முடிக்கப்பட்டபின், நபி (ஸல்) அவர்கள்மீது ஸலவாத் சொல்லிவிட்டு, பாங்கு துஆ ஓதினால் மறுமையில் அவர்களின் பரிந்துரை உறுதியாகிவிட்டது (முஸ்லிம்: 628) என்ற நபிமொழி இங்கு நினைவுகூரத்தக்கது. நபியவர்களின் பரிந்துரையைப் பெற மிக எளிய வழியை அவர்களே சொல்லித் தந்துள்ளார்கள். ஆனால் நம்மில் இதைக் கடைப்பிடிப்போர் எத்தனை பேர்?

அறிந்தவர்கள் நபிபுகழை அரபியில் ஓதுகின்றார்கள். அரபி தெரியாத, புரியாத மக்கள் அச்சபையில் அமர்ந்து வெறுமனே கேட்டுக்கொண்டிருப்பதால் அவர்களுக்கு என்ன பயன்? பொதுமக்களுக்குப் புரியாத மொழியில் ஓதப்படுகின்ற புகழால் நபிகள் நாயகத்தின் உயர்வையும் சிறப்பையும் மேன்மையையும் அவர்கள் எங்ஙனம் விளங்கிக்கொள்ள முடியும்? மொழி புரியாமல் ஓதினாலும் "ஓர் எழுத்துக்குப் பத்து நன்மை'' (திர்மிதீ: 2835) என்பது திருக்குர்ஆனுக்கு மட்டுமே பொருந்தும். அதுவல்லாத வேறெதற்கும் அச்சிறப்பு கிடையாது. எனவே மொழி புரியாதவர்கள் அதனை வெறுமனே கேட்டுக்கொண்டிருப்பதால் எந்தப் பயனுமில்லை. அதற்குப் பதிலாக மக்களுக்குப் புரியும் மொழியில் பாடல்களையும் கவிதைகளையும் பாடினால் அவற்றின்மூலம் நபிகள் நாயகத்தின் மேன்மையும் உயர்வும் சிறப்பும் அவர்களுக்குத் தெள்ளென விளங்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னிலையில் கவிதை பாடிய ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரளி) அவர்கள் தம் தாய்மொழியான அரபியில்தான் பாடினார்கள். தமக்குத் தெரியாத அல்லது சபையோருக்கு விளங்காத ஹீப்ரு, ஃபார்சி, சூடானி போன்ற மொழிகளில் பாடவில்லை. எனவே ஒரு சபையில் நபிகள் நாயகத்தைப் புகழ்ந்து கவிதை பாடினால் அச்சபையில் உள்ளோருக்கும் அதனைப் பாடுபவருக்கும் அப்பாடலின் மொழி புரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அதில் அனைவருக்கும் உளப்பூர்வமான ஈடுபாடு ஏற்படும். அது மட்டுமல்ல, ஒருவர் தம் தாய்மொழியில்தான் உணர்வுப்பூர்வமாகப் பாட முடியும்; புகழ முடியும். கற்றுக்கொண்ட மொழிகளில் புகழ்வது உணர்வுப்பூர்வமாக இருக்காது; உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படுபவையாக இருக்க முடியாது.

அரபியில் மட்டும் பாடுவது ஏன்? தமிழில் பாடினால் எல்லோருக்கும் விளங்குமே? உமறுப்புலவர் எழுதிய "சீறாப்புராணம்', கவிவேந்தர் மு. மேத்தா எழுதிய "நாயகம் ஒரு காவியம்', கவிஞர் சிராஜ் பாகவி எழுதிய "நெஞ்சில் நிறைந்த நபிமணி', பன்னூலாசிரியர் கவிஞர் எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம் எழுதிய "நபிகள் நாயகக் காவியம்', இறையருட்கவிமணி அப்துல் கபூரின் "நாயகமே', கலைமாமணி கா.மு.ஷெரீஃப் எழுதிய "நபியே எங்கள் நாயகமே' முதலான பல்வேறு கவிதைகளும் காவியங்களும் தாய்மொழியாம் தமிழ்மொழியில் உள்ளன. அவற்றை யாரும் படிப்பதில்லையே? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த ரபீஉல் அவ்வல் மாதத்தில் இவை போன்ற தமிழ் மவ்லிது நூல்களைப் படித்து அவர்களின் சிறப்பையும் மேன்மையையும் எல்லோருக்கும் எடுத்துரைக்கும் சபை எங்கேனும் நடந்ததுண்டா?

நல்ல கவிதைக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் வரவேற்பு உண்டு. அதன்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த மாதத்தில் அவர்களின் புகழை எல்லோருக்கும் எடுத்துரைக்கும்வண்ணம் கவியரங்கம் நடைபெறுவதுண்டா? நபிபுகழ் உள்ளிட்ட எல்லாவற்றிற்கும் பக்திச் சாயம் பூசப்பட்டுள்ளதால் தமிழறிஞர்களும் மார்க்க அறிஞர்களும் தனித்தனியாக விலகியே இருக்கின்றார்கள். எனவே பக்திச் சாயத்தை நீக்கிவிட்டு, நபிகள் நாயகத்தின் சிறப்பையும் மேன்மையையும் அவர்கள்தம் பொய்யாமொழிகளையும் பட்டிதொட்டியெங்கும் பரப்ப வேண்டும். கவியரங்கம், பட்டிமன்றம், சொற்பொழிவு, சிறுவர் நிகழ்வுகள் முதலான வழிகளிலும் அவர்களுடைய சிறப்பையும் மேன்மையையும் மக்களின் செவிகளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். அப்போதுதான் பிறசமுதாய மக்களுக்கு நபிகள் நாயகத்தின் செய்திகள் செவ்வனே சென்று சேரும்.

நபிகள் நாயகத்தின் புகழைப் பள்ளிவாசல்களுக்குள்ளேயே சுருக்கிக்கொள்வதோ அரபியில் மட்டும் பாடுவதோ போதாது. பரந்த பொதுவெளியில் பொதுமக்கள் முன்னிலையில் அவர்களுக்குப் புரியும் மொழியில் நபிகள் நாயகத்தின் செய்திகள் சொல்லப்பட வேண்டும். அதன்மூலம் அவர்களின் புகழ் பாரெங்கும் பரவலாக அறியப்பட நாம் பாடுபட வேண்டும். அதுதான் அவர்கள்மீது நாம் கொண்டுள்ள அன்பின் அடையாளமாகும்.
==========================







புதன், 13 நவம்பர், 2019

திங்கள், 11 நவம்பர், 2019

ஆலிம்கள் அரசியலில் தடம் பதிக்காமல்...



-------------------------------------------------------------
நாட்டின் தற்போதைய நிலையும் அரசின் போக்கும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்த பின்னும் அரசியலைவிட்டு அப்பால் நின்றுகொண்டு ஆலிம்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், முஸ்லிம்களை அரசியல்ரீதியாக வழிநடத்துவது யார்? ஆலிம்கள் அரசியலில் தடம் பதிக்காமல் முஸ்லிம் சமுதாயத்திற்கு விமோசனம் இல்லை என்பதை எப்போது உணரப்போகிறோம்?

ஜமாஅத்துல் உலமாவின் ஒருங்கிணைந்த ஒற்றைக் குரலுக்காகக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகத் திமுகவிற்கு வாக்களித்தார்கள். ஆனால் முஸ்லிம்களுக்கான திமுகவின் அறிக்கையையும் குரலையும் நாம் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம்.

போதும். பிற கட்சிகளுக்குத் தோள் கொடுத்தது போதும். ஜமாஅத்துல் உலமாவில் ஓர் அரசியல் பிரிவு உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு தேர்தலையும் நேரடியாகச் சந்திக்க வேண்டும். வெற்றிபெற்ற ஆலிம்களின் குரல் சட்டசபையிலும் நாடாளுமன்றத்திலும் அதிரடியாக ஒலிக்க வேண்டும்.

எதிர்வரும் சட்டசபைத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டாம். இதோ விரைவில் வரவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலிலேயே களம் காணுவோம். நகர் மன்றச் சபைகளில் முதலில் குரலை உயர்த்துவோம்; பின்னர் அடுத்தடுத்து உயர்வோம். முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக மாசற்ற மனதோடு சேவையாற்ற ஆலிம்களையன்றி யாரை முன்னிலைப்படுத்த முடியும்?

ஆலிம்களின் குரல் மிம்பர் மேடைகளோடு முடங்கிவிட வேண்டாம். அரசியலில் ஆர்வத்துடிப்போடு சேவையாற்ற விரும்புவோர் அனைவரும் இன்றே முன்வாருங்கள். ஜமாஅத்துல் உலமா சபையைத் தட்டியெழுப்புங்கள்.

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, மணலி, சென்னை.

===========================================================

ஞாயிறு, 10 நவம்பர், 2019

புதன், 6 நவம்பர், 2019

பிறர் குறைகளை மறைப்போம்!



-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

மனிதன் தன்னையறியாமல் சின்னச் சின்னத் தவறுகளை அவ்வப்போது செய்துவிடுகின்றான். சில பெருந்தவறுகளையும் சிலவேளை செய்துவிடுகின்றான். அவற்றுள் சில மக்களுக்குத் தெரிந்துவிடுகின்றன; சில அவனுள்ளேயே புதைந்துவிடுகின்றன. ஆனால் அவன், தான் செய்த தவறுகளுக்கும் பாவங்களுக்கும் அளப்பரிய கருணையாளனாகிய அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டுத் திருந்தி வாழ நினைக்கின்றான்; திருந்தி வாழ்ந்து கொண்டிருக்கிறான். அத்தகைய மனிதரைப் பற்றி, அந்த மஹல்லாவிற்குப் புதிதாக வந்துள்ள ஒருவரிடம் சென்று, “உங்களிடம் சிரித்துச் சிரித்துப் பேசுகிறாரே, அவர் யார் தெரியுமா? அவருடைய முந்தைய நிலை தெரியுமா? அவர் இப்படி இப்படி. ஆனால் அவருடைய கடந்த காலம் எப்படி இருந்ததென்று எனக்குத்தான் தெரியும். அவர் ஓர் ஏமாற்றுப் பேர்வழிஎன்று கூறி, அவருடைய கடந்த காலக் குறைகளையும் பாவங்களையும் சொல்லிவிடுகிறார் ஒருவர்.

அவர் கடந்த காலத்தில் அறிந்தோ அறியாமலோ சில தவறுகளைச் செய்துவிட்டார்; ஏமாற்றிப் பிழைத்துவிட்டார்; எப்படியோ சம்பாதித்துவிட்டார். அதெல்லாம் எப்போதோ கடந்துவிட்டது. அவர் அதற்கான பாவமன்னிப்பைக் கேட்டு, தற்போது திருந்தி வாழ்கிறார். இப்போது ஐவேளைத் தொழுகையையும் செவ்வனே நிறைவேற்றுகிறார். அவரைப் பற்றிய நன்மதிப்பு மக்கள் மத்தியில் உள்ளது. அவரின் தொடக்கக் கால விவகாரங்கள் தெரியாதோர் அவரிடம் மரியாதையாகப் பழகுகின்றார்கள்; அன்பாகப் பேசுகின்றார்கள்.

இத்தருணத்தில் அவர்களிடம் சென்று, அவரின் கடந்த காலக் குறைகளைச் சொல்வதன் மூலம் அவர்மீது மக்கள் கொண்டுள்ள நன்மதிப்பைக் குலைத்துவிடுகிறார்; அவரைப் பற்றி இதுவரை அறியாதோரும் அவரை அவமரியாதையாகப் பார்க்கும் சூழ்நிலையை ஏற்படுத்திவிடுகின்றார். இதனால் கலங்கமில்லாமல் பழகியவர்கள் மனத்தில் அவரைப் பற்றிய மதிப்பு குறைந்துவிடுகின்றது. பிறரின் குறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் இதுபோன்ற மனிதர்களால் சமுதாயத்திற்குப் பயனேதும் உண்டா? பிறரின் குறைகளை இவ்வாறு வெளிச்சம் போட்டுக் காட்டலாமா?

இஸ்லாமியப் பார்வையில் இது மிகப்பெரும் குற்றமாகும். பிறர் குறையை மறைக்க வேண்டுமே தவிர பிறருக்கு அதைப் பரப்பக்கூடாது. இதுதான் நபி (ஸல்) அவர்களின் அழகிய வழிகாட்டலாகும்.

யார் ஒரு முஸ்லிமுடைய பாவத்தை மறைத்தாரோ அவருடைய பாவத்தை அல்லாஹ் இவ்வுலகிலும் மறுமையிலும் மறைக்கின்றான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா: 2534)

தண்டனைக்குரிய குற்றத்தை ஒருவர் மறைமுகமாகச் செய்துவிட்டாரெனில் அதைப் பார்த்தவர், மக்கள் மத்தியில் அதைப் பகிரங்கப்படுத்தாமல் மூடிமறைப்பதே சாலச் சிறந்தது. அது அல்லாஹ்வுக்கும் அவருக்கும் இடையே உள்ள விவகாரம் என்ற பரந்த எண்ணத்தோடு அதை விட்டுவிட வேண்டும். இதுதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கருணையான அறிவுரை. தண்டனைக்குரிய குற்றம் செய்வதை மறைப்பது ஒருபுறம் இருக்கட்டும். ஒருவர் செய்கின்ற சின்னச் சின்னத் தவறுகளைக்கூட ஊதிப் பெரிதாக்கி, அவருடைய மதிப்பைக் குறைப்பதில் மனிதர்கள் முனைப்புக் காட்டுகின்றார்கள். புதிதாக அந்தப் பகுதிக்குக் குடியேறியவரிடம், அச்சமுதாயத்தில் நன்மதிப்போடு வாழ்கின்றவரைப் பற்றி, அவர்தம் கடந்த காலக் குறைகளையும் குற்றங்களையும் பரப்புவது எவ்வளவு பெரிய தவறு என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
அதுபோலவே கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் தம் துணையிடம் உள்ள குறைகளை மறைக்க வேண்டும். புதுமணத் தம்பதிகளாக உள்ள கணவனோ மனைவியோ தன் துணை குறித்த சின்னச் சின்னக் குறைகளைத் தன் பெற்றோரிடமோ உறவினர்களிடமோ சொல்லக்கூடாது. கணவன் ஒழுங்கான முறையில் பொருளாதாரத்தை ஈட்டாதவனாகவோ இல்லறத்தில் ஆர்வத்தோடு ஈடுபடாதவனாகவோ இருக்கலாம். இது ஆரம்ப நிலைதான். போகப் போக எல்லாம் சரியாகிவிடும் என்ற பக்குவம் மனைவிக்கு இருக்க வேண்டும். அதுவே காலப்போக்கில் அவளுடைய வாழ்க்கை மேம்பட உதவும். அவளுடைய பொறுமையின் காரணமாக அல்லாஹ் அவளுடைய கணவரின் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவான்.

பக்குவமற்ற, பொறுமையற்ற பெண் தன் கணவன் குறித்த சின்னச் சின்னத் தவறுகளையும் குறைகளையும் தன் தாயிடம் உடனுக்குடன் கூறிவிடுகின்றாள். தன் கணவன் தன் தாய் வீட்டாரைப் பற்றி ஏதாவது தவறாகப் பேசிவிட்டால் உடனே அலைபேசியில் அதைத் தெரிவித்துவிடுகின்றாள். இதனால் மருமகன் மீதுள்ள மதிப்பும் மரியாதையும் குறைந்துவிடுகின்றன. அவன் தன் மாமியார் வீட்டுக்குச் செல்கின்றபோது, அவனைப் பற்றிய தவறான பிம்பம் அவளுடைய தாய் வீட்டில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருப்பதால், அவர்கள் அவனைச் சரியான முறையில் மதிப்பதில்லை; உபசரிக்க வேண்டிய முறைப்படி உபசரிப்பதில்லை. அதன்பின் அவன் அங்கு செல்வதை நிறுத்திவிடுகின்றான். கணவனின் சின்னச் சின்னத் தவறுகளையும் குறைகளையும் தன் தாயிடமும் உறவினர்களிடமும் அவ்வப்போது தெரிவித்து, அதனால் ஏற்பட்ட தவறான பிம்பத்தின் விளைவுதான் இது.

இதுபோலவே மனைவியின் சின்னச் சின்னத் தவறுகளையும் குறைகளையும் கணவன் தன் தாயிடமோ உறவினர்களிடமோ கூறினால் என்னாகும்? “அவ அப்படித்தான்டா; அவ என் பேச்சே கேக்குறதில்ல; அவ முகமே சரியில்ல; பார்த்தாலே திமிரு பிடிச்சவ மாதிரி தெரியுதுஎன்று சொல்லி, அவனுக்கு இன்னும் கொஞ்சம் அவள்மீது வெறுப்பு ஏற்படுமாறு செய்துவிடுவார்கள்; அவள்மீதுள்ள அன்பைக் குறைக்கவே முயல்வார்கள். காலப் போக்கில் கணவன்-மனைவி இடையே பிணக்கு ஏற்பட்டு, இறுதியில் மணமுறிவும் ஏற்பட்டுவிடும். பெரும்பாலான இடங்களில் மணமுறிவு ஏற்பட இருதரப்பு குடும்பத்தாரே முக்கியக் காரணம் என்றால் அது மிகையில்லை. ஒரு பெண்ணோ ஆணோ தன் தாயிடம் தன் துணையைப் பற்றிக் குறை கூறினால், “ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும்; போகப்போகச் சரியாகிவிடும்என்ற அறிவுரையை வழங்கி ஆற்றுப்படுத்தினால் அத்தம்பதிகள் அமைதியாக வாழ்வார்கள். மாறாக, அதில் கொஞ்சம் எண்ணெய் வார்த்தால், இறுதியில் மணமுறிவுதான். எனவே இதுவிஷயத்தில் பெற்றோர் கவனமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும்.

ஒரு பெண் தன் கணவனின் சின்னச் சின்னக் குறைகளை மறைத்து, தன் தாயிடமும் உறவினர்களிடமும் தன் கணவன் தன்னை நன்றாகக் கவனித்துக் கொள்வதாகவும் தன்மீது அன்பாக இருப்பதாகவும் தெரிவித்தால் அதைக் கேட்டுப் பெற்றோர் மகிழ்ச்சியடைவார்கள். அத்தோடு தன் கணவன்மீது அவர்களுக்கு நன்மதிப்பு ஏற்படும். காலப்போக்கில் கணவனின் உள்ளத்தில் மாற்றம் ஏற்படும். இருவரின் இல்வாழ்வு சிறக்கும்.

ஒரு பெண் தன் கணவன்மீதுள்ள கோபத்தில், தன் பிள்ளைகளிடம், “உங்க அப்பா இப்படி இப்படிஎன்று அவரது குறைகளைக் கூறினால், அவர்களின் மனத்தில் தந்தையைப் பற்றிய தவறான பிம்பம் பதிந்துவிடும். அது தந்தை சொல் கேளாப் பிள்ளைகளை உருவாக்கிவிடும். பின்னர் அப்பிள்ளைகள் தாய்க்குக் கட்டுப்படாத, தாயையும் மதிக்காத பிள்ளைகளாக மாறிவிடுவார்கள். எனவே இதில் ஒரு பெண் கவனமாக இருக்க வேண்டும்.

கணவன் அவ்வப்போது தனக்குச் சின்னச் சின்ன முரண்பாடுகளைச் செய்தாலும் அவற்றை மனத்தில் கொள்ளாமல், தன் கணவன்மீது தன் பிள்ளைகளுக்கு மரியாதை ஏற்படும் விதத்திலான வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். தந்தை சொர்க்கத்தின் நடுவாசல்என்ற நபிமொழியை பிள்ளைகளின் மனத்தில் பதிய வைக்க வேண்டும். அதுவே பிள்ளைகள் தம் தந்தையை மதிப்பதற்கும் மரியாதை செலுத்துவதற்கும் உகந்ததாக அமையும். அத்தோடு அப்பிள்ளைகள் தாயையும் மதித்து நடக்கத் தொடங்குவார்கள்.

அதுபோலவே ஓர் ஆண் தன் மனைவி மீதுள்ள சினத்தில், தன் பிள்ளைகளிடம் அவள்மீதுள்ள குறைகளையோ குற்றங்களையோ கூறிவிடாமல், அவள்மீது பிள்ளைகளுக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்படும் வகையிலான வார்த்தைகளையே சொல்ல வேண்டும். தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளதுஎன்ற நபிமொழியை அவ்வப்போது எடுத்துக்கூறி, தாய்மீதான மரியாதையையும் உயர்வையும் ஏற்படுத்த வேண்டும். அதுதான் சிறந்த பிள்ளைகளை உருவாக்கும்.

மேலும் ஆசிரியர்-மாணவர் உறவு ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாத உறவு. அதில் கலங்கம் ஏற்பட்டு விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆசிரியர் என்ன தவறு செய்கிறார் என்ற கண்ணோட்டம் மாணவர்களுக்கு அறவே இருக்கக்கூடாது. ஆசிரியரின் குறைகளைத் துருவி ஆராயக்கூடாது. ஏனெனில் மாணவர்களின் மனத்திலிருந்து ஆசிரியர்கள்மீதான மரியாதை அகன்று விட்டால் அவர்கள் சொல்லித் தருகின்ற எதுவும் அம்மாணவர்களின் மனத்தில் ஏறாது. அதனால் மாணவர்களுக்குத்தான் இழப்பே தவிர ஆசிரியர்களுக்கு அல்ல. இது குறித்துப் பெற்றோர் விழிப்போடு இருக்க வேண்டும். தம் பிள்ளைகள் வகுப்பாசிரியர் குறித்து ஏதேனும் முரணாகவோ அவமரியாதையாகவோ பேசினால் உடனடியாக அதைக் கண்டிக்க வேண்டும். ஆசிரியர்மீது பிள்ளைகளுக்கு மரியாதை ஏற்படும் விதத்தில் அவர்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்க வேண்டும்.

ஆக, ஒருவருக்கொருவர் பிறரின் குறைகளை மூன்றாம் மனிதரிடம் கூறுவதற்குப் பதிலாக அவர் குறித்த நல்ல செய்தி ஏதேனும் இருந்தால் தெரிவிக்கலாம்; இல்லையேல் மௌனமாக இருந்துவிடலாம். அதுவே சாலச் சிறந்தது. 

யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைகொண்டாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும்; இல்லையேல் மௌனமாக இருந்துவிடட்டும்என்ற நபிமொழி இங்கு நினைவுகூரத்தக்கது. அதை விடுத்து, ஒருவரின் குறைகளை மூன்றாம் மனிதரிடம் கூறத் தொடங்கினால், நம் குறைகளை யாரோ ஒருவர் நமக்கு அறிமுகமானோரிடம் கூறிக்கொண்டிருப்பார். அது நமது மதிப்பையும் மரியாதையையும் குலைத்துவிடும். எதை விதைக்கிறோமோ அதுவே விளையும்என்ற அடிப்படையில் நாம் பிறர் குறைகளை மறைத்தால் பிறர் நம் குறைகளை மறைக்கும் விதத்தில் அல்லாஹ் நமக்கு உதவி செய்வான்.

யார் தம் சகோதர முஸ்லிமுடைய மானத்தை மறைத்தாரோ அவருடைய மானத்தை அல்லாஹ் மறுமையில் மறைப்பான். எவன் தன் சகோதர முஸ்லிமுடைய மானத்தை வெளிப்படுத்தினானோ அவனுடைய மானத்தை அல்லாஹ் வெளிப்படுத்தி, அதன்மூலம் அவனுடைய வீட்டிலேயே அவனைக் கேவலப்படுத்துவான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா: 2536)

எனவே நாம் பிறரின் குறைகளை மறைப்போம். நம் குறைகளை அல்லாஹ் இவ்வுலகிலும் மறுமையிலும் மறைப்பான். ஒவ்வொருவரும் தத்தம் குறைகளை முதலில் திருத்த முனைவோம். அதுவே நாம் பிறர் குறைகளைக் காணாதிருக்க உதவும்.
===========================================








செவ்வாய், 5 நவம்பர், 2019

வேதமொழியில் இருப்பவை யாவும் புனிதமானவையா?



----------------------------------------------------------------------

தொழுகை, குத்பா உள்ளிட்ட வழிபாடுகள் அரபியில் அமைந்திருப்பது அஃபீஷியல் அடிப்படையில் ஆகும். அதாவது நமது தேசிய மொழி ஹிந்தி. அது பிற மாநில மக்களுக்குத் தெரியாவிட்டாலும், மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட இடங்களிலெல்லாம் அது இடம்பெறும். அது போலவே நம் வழிபாடுகளில் உள்ள அரபி உலக அளவில் அஃபீஷியல்-அலுவல் மொழியாக உள்ளது. அதை இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் எவ்வாறு கற்றுக் கொடுத்தார்களோ அப்படித்தான் நாம் பின்பற்ற வேண்டும்.
வழிபாடுகள் தவிர பிறவற்றை அவரவர் தத்தம் தாய்மொழியில் படித்துக்கொள்ளலாம். அந்த அடிப்படையில் நபியின் புகழ்ப்பாவை நாமே உருவாக்கிக்கொண்டோம். அதைத் தாய்மொழியில் புகழ்ந்தால்தான் நம்மைச் சுற்றி இருப்போருக்கு விளங்கும். நபியின் தியாகமும் அவர்கள் இச்சமுதாய மக்கள்மீது கொண்டிருந்த அன்பும் கருணையும் புரிய வரும். கேட்போரின் கவனத்தை ஈர்க்கும்.

குர்ஆனைப் பொறுத்த வரை, பொருள் உணர்ந்து படித்தாலும், உணராமல் படித்தாலும், ஓர் எழுத்துக்குப் பத்து நன்மை என்ற நபிமொழியின் அடிப்படையில் நன்மை கிடைத்துவிடும். அதில் ஐயம் கொள்ள வேண்டியதில்லை. அதனால் பொருள் உணராமல் அல்ஹம்து சூரா ஓதினாலும் இறைவன் அதற்கான நன்மையைக் கொடுத்துவிடுவான்.

குத்பாவைப் பொறுத்த வரை முதலில் தாய்மொழியில் பயான் செய்துவிட்டுத்தான் பிறகு சுன்னத்என்ற அடிப்படையில் அரபியில் ஓதுகிறோம். அதுவும் அஃபீஷியல்தான். தொழுகைக்குப் பிறகு ஓதும் துஆவிலும் குர்ஆன் வசனங்களே பெரும்பாலும் இடம்பெறுகின்றன. அது மட்டுமல்ல, துஆவைப் பொறுத்த வரை, அதை ஓதுபவருக்குப் பொருள் தெரிந்தாலே போதுமானது. ஆமீன் சொல்பவருக்குப் பொருள் தெரியாவிட்டாலும் அதற்கான பிரதிபலன் எல்லோருக்கும் கிடைத்துவிடும். இமாமின் துஆ (அஃபீஷியல்) முடிந்தபின் அவரவர் தாய்மொழியில் பிரார்த்தனை செய்துகொள்ள எந்தத் தடையும் இல்லையே.

ஸலாமைப் பொறுத்த வரை, உலக முஸ்லிம்கள் மொழி வேறுபாடின்றி ஒருவருக்கொருவர் தம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த சுன்னத்-வழிமுறை. அதை அவரவர் தாய்மொழியில் சொல்லத் தொடங்கினால் பிற மாநிலங்களிலும் நாடுகளிலும் நாம் நம்மை அறிமுகம் செய்துகொள்ள இயலாது. அது மட்டுமல்ல, அதற்குரிய நன்மை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொன்னால் பத்து நன்மை; அத்துடன் வ ரஹ்மத்துல்லாஹி என்று சேர்த்துக் கூறினால், இருபது நன்மை; அத்துடன் வ பரக்காத்துஹு என்று இணைத்துக் கூறினால், முப்பது நன்மை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேறு மொழிகளில் கூறினால், அத்தகைய நன்மையை நாம் இழந்துவிடுவோம். நபிமீது ஸலவாத் அரபியில்தான் கூறுகிறோம். அதற்கான நன்மை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் இவையெல்லாம் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த சுன்னத்-வழிமுறைகள். எனவே அவற்றை அப்படியேதான் பின்பற்ற வேண்டும். அவற்றை மாற்றியமைக்க நமக்கு எந்த அதிகாரமும் இல்லை.


பொருளை விளங்கிக்கொள்வதற்காகத் திருக்குர்ஆனைத் தமிழில் படிக்கிறோம். அதை அரபியில் படித்தால்தான் ஓர் எழுத்துக்குப் பத்து நன்மை. பிற மொழிகளில் படித்தால் அத்தகைய நன்மை கிடையாது. அதுபோலவே நபிமொழியை-ஹதீஸை அரபியில் படித்தால் எத்தனை நன்மை என்று யாரும் சொல்ல முடியாது. ஏனெனில் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அதைச் சொல்லவில்லை. அதே நேரத்தில் அதைத் தமிழில் படித்து, அதன்படி செயல்பட்டால் நன்மை உண்டு.

அரபியில் செய்தித்தாள் படித்தால் நன்மை உண்டா? எத்தனை நன்மை? அரபியில் எழுதப்பட்ட நாடகங்கள், புதினங்கள் முதலானவற்றைப் படித்தால் எத்தனை நன்மை? யாராவது சொல்ல முடியுமா? ஏனெனில் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அதைச் சொல்லவில்லை. அதனால் நாம் எதையும் சொல்ல முடியாது.

பொதுவாக, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கட்டளையிட்ட செயல்பாடுகளுக்குரிய நன்மை தெளிவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜமாஅத்துடன் தொழுதால் இருபத்தைந்து மடங்கு நன்மை என்றும் தானம் செய்தால் ஏழு முதல் எழுநூறு மடங்கு நன்மை என்றும் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கான நன்மை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நபி புகழ்ப்பாவை அரபியில் பத்து வரி படித்தால் எத்தனை நன்மை, நூறு வரிகள் படித்தால் எத்தனை நன்மை என்று யாராவது கூற முடியுமா?

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் புகழ்ப்பாவை அரபியில் மட்டும் படிப்பதால்தான், குர்ஆன் இடம்பெற வேண்டிய இடங்களிலெல்லாம் சுப்ஹான மவ்லிது நங்கூரமிட்டு அமர்ந்துகொண்டுள்ளது. அதனால்தான் எல்லா சுபகாரியங்களுக்கும் துக்கமான நிகழ்வுகளுக்கும் அதனை ஓதும் பழக்கம் மக்கள் மத்தியில் பரவிவிட்டது. திருக்குர்ஆனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அது முன்னணியில் இடம்பிடித்துக்கொண்டது. இதற்குக் காரணம் அரபியில் இருப்பதுதான். அரபியில் இருப்பதெல்லாம் வேதமென்றும் புனிதமென்றும் கருதத் தொடங்கினால் அரபியிலுள்ள நாடகங்களும் புதினங்களும் புனிதமானவையே. இதை யாராவது ஒத்துக்கொள்வாரா?

புதிதாக வீடு கட்டிய ஒருவர், புதுமனைப் புகுவிழாவிற்கு சுப்ஹான மவ்லிதை ஓதுவதற்குப் பதிலாக, தமிழ்க் கவிஞர்கள் அழகு தமிழில் எழுதிய அண்ணலின் அழகிய சரிதையை, கவிதையை வாசிக்க முற்படுவாரா? அதற்கான சபையை வீட்டில் ஏற்பாடுசெய்வாரா? மாட்டார். ஏனெனில் இது தமிழில் உள்ளது. அதுவோ அரபியில் உள்ளது. அது புனிதமானது என்று அவர் நம்புகிறார்.

ஆகவே தவறான புரிதலில் காலம் கழித்தது போதும். புதிய சிந்தனைக்குள் வாருங்கள். மார்க்கம் எதுவெனச் சிந்தியுங்கள். எல்லோருக்கும் புரியும் மொழியில் அண்ணல் நபியவர்களைப் புகழ வாருங்கள்.

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, மணலி, சென்னை.

==========================================