சனி, 27 ஏப்ரல், 2024

செவ்வாய், 16 ஏப்ரல், 2024

தினமணி வாசகர் கடிதம் (16 04 2024)


 

நாணயம் மனிதனுக்கு அவசியம் - மா. இராமச்சந்திரன் எழுதியிருந்த  (09 04 2024) துணைக்கட்டுரை  வாசித்தேன். நா நயம் உள்ளவரே பிழைக்க முடியும் என்ற நிலை எப்போதோ உருவாகிவிட்டது. நாணயம் என்பது யாரோ சிலரிடம் இருக்கிறது என்று நம்பலாம். பேச்சு ஒன்று, செயல் வேறாக இருப்பவன்தான் பெரும் பெரும் பொறுப்புகளில் இருக்கின்றான்; அவன்தான் மக்களை ஆள்கிறான். நாணயமாகவும் நேர்மையாகவும் இருப்பவன் தோல்வி காண்கிறான். எல்லாப் பணி வாய்ப்புகளிலும் உள்ளடி வேலைகள் நடக்கின்றன; பணம் குறுக்கு வழியில் பாய்கிறது; பதவியைப் பெற்றுத்தருகிறது. இதுதான் இன்றைய யதார்த்த நிலை. அரசியல், விளையாட்டு, கல்வி, பணிவாய்ப்பு முதலான எல்லாவற்றிலும் நாணயம் நசுங்கிப்போய்விட்டது; பணம் மட்டுமே ஆள்கிறது. இந்நிலை மாற வேண்டுமெனில் நாணயமாக இருப்பதுதான் நம் மரணத்திற்குப் பின்னும் நம்மைப் பற்றிப் பேசவைக்கும் என்ற உண்மையை உணர்ந்தால் மட்டுமே சாத்தியமாகும். 

 

நூ. அப்துல் ஹாதி பாகவி

பட்டினம்பாக்கம், சென்னை-28

=============


புதன், 10 ஏப்ரல், 2024

விவாத மேடை (தினமணி நாளிதழ் 03 04 2024)

 


 

பிரதமர் மோடியால் மட்டுமே கச்சத்தீவை மீட்க முடியும் என்று ஜி.கே. வாசன் கூறியிருப்பது நகைப்புக்குரியது. இது மக்களவைத் தேர்தலில் மக்களை ஏமாற்றுவதற்காகச் சொல்லப்படுகிற பொய்யான வாக்குறுதிகளுள் ஒன்று. பத்தாண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த மோடி அதை மீட்டிருக்க வேண்டியதுதானே? யார் தடுத்தார்?

 

கச்சத்தீவு குறித்த பேச்சு தேவையற்றதும் மக்களின் பார்வையை மடைமாற்றுவதும் ஆகும். ஏனெனில் மோடி ஆட்சியில் சீனா அருணாச்சலப் பிரதேசத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து, புதிய பெயர்களையும் சூட்டிவிட்டது. அது ஆக்கிரமித்துள்ள அளவு கிட்டத்தட்ட கேரள மாநிலத்தின் பரப்பளவைவிடப் பெரியது என்று சொல்லப்படுகிறது. இவ்வளவு ஆக்கிரமிப்புக்குப் பிறகும் சீனாவுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காதவர் கச்சத்தீவை மீட்பார் என்று எவ்வாறு நம்ப முடியும்? இழந்ததை மீட்கப் போராடுவதைவிட இருப்பதை இழக்காமல் பாதுகாப்பதே புத்திசாலித்தனமாகும்.

 

நூ. அப்துல் ஹாதி பாகவி

பட்டினம்பாக்கம், சென்னை-28