ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

சனி, 20 ஏப்ரல், 2019

சிறந்த மருமகள்!



சென்னை மாநகரத்திலிருந்து வாழ்க்கைப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி எனும் ஊருக்குச் சென்றாள் மூமினா.

மூமினா ஒரு முஸ்லிம் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவள். அவளது முந்தைய பெயர் முத்தழகி. அவள் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே இஸ்லாமிய நூல்களையும் திருக்குர்ஆனையும் வாசித்து வந்தாள். அதன் கொள்கைக் கோட்பாடுகளாலும் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டு முஸ்லிமாகிவிட்டாள். 

கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே இஸ்லாமிய இதழ்களை வாசித்து வந்ததால், அவள் அந்த இதழில் கிடைத்த எண்ணுக்கு அழைத்தாள். நேரடியாக வரச் சொன்னதால் தாவா சென்டருக்குச் சென்றாள். அங்கிருந்த இஸ்லாமியப் பெண்அழைப்பாளரிடம் கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாள். அவர் கற்றுக்கொடுத்த அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொண்டாள். 

பின்னர் அங்குள்ளோரின் வழிகாட்டுதலோடு வேலூரில் அமைந்துள்ள இஸ்லாமிக் சென்டரில் சேர்ந்து நான்கு மாதங்கள் படித்தாள். பின்னர் சென்னையில் ஒரு மகளிர் அரபுக் கல்லூரியில் மூன்றாண்டுகள் பயின்று ஆலிமா பட்டம் பெற்றாள். 

அத்தருணத்தில் இஸ்லாமிய ஈடுபாடுகொண்ட ராஸிக், மகளிர் அரபுக் கல்லூரியில் பணியாற்றிய தன் ஊர்க்காரரான அக்பர் என்பவரைச் சந்தித்து, தான் ஓர் ஆலிமா பெண்ணைத் திருமணம் செய்யப்போவதாகவும் தாங்கள்தாம் எனக்காகப் பெண் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அப்போது அவர் காட்டிய ஆலிமா பெண்தான் மூமினா.

பின்னர் முற்றிலும் இஸ்லாமிய வழிகாட்டுதலோடு அவர்களின் திருமணம் இனிதே நிறைவேறியது.
ராஸிக் தன் ஊர்மீதும் ஊர்மக்கள்மீதும் மிகுந்த பற்றுகொண்டவன். தன் ஊர்மக்கள் அனைவரும் இஸ்லாமிய நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ வேண்டும். அவர்கள் அனைவரும் ஐவேளைத் தொழுகையாளிகளாக மாற வேண்டும். அதன்மூலம் அல்லாஹ்வின் அன்பு எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். அதனால் அல்லாஹ்வின் அருள்பெற்று ஊரே செழிப்பாக இருக்க வேண்டும் என்ற அவனுடைய நீண்ட கால கனவு மூமினாவைத் திருமணம் செய்ததன் மூலம் நிறைவேறத் தொடங்கியது. 

மூமினா தன் சிறுபிராயத்திலேயே சிந்தனைத் திறனுடன் செயல்பட்டு வந்தாள். எதையும் கேள்வி கேட்டு விடைதெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வமுடையவள். அந்தச் சிந்தனையும் ஆர்வமும்தான் அவள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளக் காரணமாக இருந்தன.

திருக்குர்ஆனின் தமிழாக்கத்தைப் படித்து, அதன் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட அவள், நம்மைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்க, நாம் இத்தனை நாள்களாக எதையெதையோ வணங்கி வழிபட்டு, காலத்தை வீணாக்கிவிட்டோமே என்று வருந்தினாள். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ள தான் இந்த அழகிய மார்க்கத்தைப் பலருக்கு அறிமுகப்படுத்த வேண்டுமென ஆவல் கொண்டாள். 

தன் ஆவலைத் தன் கணவரிடம் தெரிவித்தாள். அவளின் ஆவலைத் தெரிந்துகொண்ட ராஸிக் தான் விரும்பியவாறே தனக்குரிய மனைவி அமைந்துள்ளாள் என்பதை எண்ணி மகிழ்ச்சியடைந்தான்.

"
நீ பிற சமுதாய மக்களை இஸ்லாத்தை நோக்கி அழைப்பது இருக்கட்டும். அதற்குமுன் நம் சமுதாய மக்கள் இன்னும் இஸ்லாத்திற்குள் முழுமையாக நுழையாமல் இருக்காங்க. முதலில் அவர்களைத் திருத்த உன்னால் முடிஞ்சதச் செய். இஸ்லாமிய நெறிமுறைகளை அவர்களின் மனசுல பதிய வை. அதுதான் இன்றைய அவசரத் தேவை. ஏனென்றால் நம்மைச் சார்ந்தவங்களே நரகத்துல நுழையிறத நாம் எப்படிச் சகித்துக்கொள்ள முடியும்?'' என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.

"
சரிங்க! நீங்க சொல்லுற மாதிரியே செய்யிறேங்க. முதல்ல நான் நம்ம வீட்லயிருந்தே தொடங்குறேங்க'' என்று கணவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டுச் செயல்படத் தொடங்கினாள்.

அவ்வூர்க்காரர்கள் அக்கம் பக்கத்து ஊர்களில்தான் பெண் எடுத்தல் கொடுத்தலைச் செய்துகொள்வார்கள். ஆனால் ராஸிக் சென்னையிலிருந்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வந்ததை அந்த ஊரே அதிசயமாகப் பார்த்தது. பெண்களிடையே அவ்விருவரைப் பற்றித்தான் பேச்சு. 

"
அடியே மும்தாஜ்! நம்ம ராஸிக் மெட்ராஸிலிருந்து கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்கானாம். பொண்ணு காலேஜ்ல படிச்சவளாம்'' - எதிர்வீட்டு காலிதா சொன்னாள்.
"
ஆமாக்கா, அப்படித்தான் நான் கேள்விப்பட்டேன். நாகூட இன்னும் அவங்ககிட்ட பேசல. ம்... போகப் போக அவங்களே நம்மைத் தேடி வருவாங்க'' என்றாள் மும்தாஜ். 

மூமினா, முதன்முதலில் தனது வீட்டிலுள்ளோரைத் தொழுகக் கிளப்பினாள். தன்னுடைய மாமனார் அவ்வப்போது தொழுகச் செல்வதைக் கண்டாள். ஃபஜ்ருக்கும் லுஹருக்கும் பள்ளிவாசல் செல்வதில்லை. அஸருக்குப் போயி இஷாத் தொழுகை முடித்துவிட்டு, வீட்டுக்கு வருவது வழக்கம். ஆகவே அவள் தன் மாமனாரிடம் பேசினாள். 

"
அதிகாலைத் தொழுகை ரொம்ப முக்கியம் மாமா. அதனால நீங்க ஃபஜ்ர் தொழுகைய விட்றாதீங்க மாமா. நாளையிலிருந்து இன் ஷாஅல்லாஹ் ஃபஜ்ர் தொழுகப் போங்க மாமா'' என்று அன்பொழுகக் கூறினாள். 

புதிதாக வந்துள்ள மருமகள் ரொம்ப அக்கறையோடு தன்னிடம் வந்து தொழுகையைப் பற்றிப் பேசுவதை எண்ணி மனம் நெகிழ்ந்தார். "அதிகாலைல பச்சத்தண்ணில ஒலு செய்தா எனக்கு ஒத்துக்கிறாதும்மா. அதனாலதான் நான் ஃபஜ்ர் தொழுகப் போறதில்ல'' என்றார்.

"
கவலைப்படாதீங்க மாமா! நான் ஒங்களுக்கு ஃபஜ்ர் தொழுகைக்கு வெந்நீர் வச்சுத் தாறேன். நீங்க நல்லவிதமா வீட்லேயே ஒலு செய்துட்டுப் போகலாம்'' என்றாள்.

"
அப்படின்னா சரிம்மா! நான் நாளையிலேருந்து ஃபஜ்ர் தொழுகப் போறேம்மா'' என்றதும் அவள் மகிழ்ச்சியடைந்தாள்.

அதன்பின் தன்னுடைய மாமியாரைத் திருத்த முயன்றாள். அவளோ வாரம் ஒரு தடவை வெள்ளிக்கிழமை மட்டும் தொழுபவள். அவளிடம் தொழுகையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியதோடு, அதனால் உடலுக்குக் கிடைக்கும் ஆரோக்கியத்தையும் விளக்கிச் சொன்னாள். 

புதிதாக வந்துள்ள மருமகள் சொல்கிறாளே என்பதற்காகத் தொழுகத் தொடங்கினாள். அதன்பிறகு அவளுக்கே தொழுகையில் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு, இப்போதெல்லாம் மனஓர்மையோடு தொழுகப் பழகிவிட்டாள். ஆனால் மாமி எப்போதும் தொலைக்காட்சித் தொடர்களையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்த மூமினா, அதை எப்படியாவது மாற்ற வேண்டும் என்றெண்ணினாள். 

மாமிக்கு காஃபி கொடுத்தவாறே அவளிடம் பேசத் தொடங்கினாள். "மாமி! இந்தத் தொடர் நாடகங்களெல்லாம் உண்மை கிடையாது. அதெல்லாம் யாரோ ஒருத்தர் எழுதுற கதைதான். அந்தக் கதைக்கேற்ப இவர்களெல்லாம் நடிக்கிறாங்க. அவ்வளவுதான். இதப்போயி நாம் ஏன் பார்த்து, வருத்தப் படணும்? ஏன் கண்ணீர் விடணும்?'' என்று மனதில் படுமாறு நச்செனக் கேட்டாள்.

"
ஓ! அப்படியா? இதெல்லாம் நெஜமாவே நடக்குதுன்னு தானே நான் நெனச்சுக்கிட்டு இருந்தேன்'' என்றாள் அப்பாவியாக.

"
மாமி! இந்தச் சோகக் கதைகளைப் பார்ப்பதை விட்டுவிட்டு, அந்த நேரத்துல குர்ஆனை ஓதுனா நன்மைக்கு மேல் நன்மை நமக்குக் கிடைக்குமே!'' என்றாள். 

"
மூமினா! எனக்கு குர்ஆன் ஓதத் தெரியாதும்மா. எங்க ஊர் பள்ளிவாசல்ல அப்பப்ப இமாமை மாத்திடுவாங்க. அதனால நான் ஒழுங்கா ஓதப் போகாம இருந்துட்டேன். இப்ப எனக்கு குர்ஆன் ஓதத் தெரியாமப் போச்சு'' என்று கவலையுடன் கூறினாள். 

"
கவலைப்படாதீங்க மாமி! நான் ஒங்களுக்கு குர்ஆன் ஓதச் சொல்லித் தாறேன். "எளிய முறையில் திருக்குர்ஆன் ஓதக் கற்போம்'னு ஒரு டிவிடியே வந்திருக்கு. அதப் பாத்தாலே போதும். எல்லாரும் குர்ஆனை ஓதக் கத்துக்கலாம். ஒங்களுக்கு மட்டுமில்ல, நம்ம ஊர்ல யாருக்கெல்லாம் குர்ஆன் ஓதத் தெரியாதோ அவங்க எல்லாருக்கும் நான் சொல்லித் தரப்போறேன். இன் ஷாஅல்லாஹ் சீக்கிரமாவே நான் வகுப்பைத் தொடங்குறேன் மாமி!'' என்றாள் ஆர்வத்தோடு. 

குர்ஆன் வகுப்பைத் தொடங்கி எல்லோருக்கும் அதைக் கற்றுக்கொடுத்தாள். வயதான பெண்களுக்கு மிகச் சிரமப்பட்டுத்தான் கற்றுக்கொடுக்க வேண்டியிருந்தது. அதனால் அந்த டிவிடியை கம்ப்யூட்டரில் போட்டு மீண்டும் மீண்டும் ஓடவிட்டாள். அதையே திரும்பத் திரும்பச் சொல்லச் சொன்னாள். அதை அப்படியே மீண்டும் மீண்டும் அவர்களெல்லாம் சொல்லிச் சொல்லி அரபு எழுத்துகளை மனதில் பதிய வைத்துக்கொண்டார்கள். பின்னர் ஒவ்வொரு பாடமாகப் படித்து, பதினைந்து பாடங்களையும் முடித்த பிறகு, குர்ஆனை ஓதத் தொடங்கிவிட்டார்கள். 

குர்ஆன் வகுப்பிலேயே தொழுகையைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் அடிக்கடி சொல்லி வந்தாள். "இன்றைக்கு சுப்ஹு தொழுதவங்கெல்லாம் கையத் தூக்குங்க''ன்னு சொல்லி அவர்களை உற்சாகப்படுத்தினாள். 

இஸ்லாத்தைப் புரிந்து ஏற்றுக்கொண்டவளே இந்தளவுக்குத் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, நாமெல்லாம் முஸ்லிமான பெற்றோருக்குப் பிறந்தும் தொழுகையின் முக்கியத்துவத்தை உணராமல் இருக்கோமே என்று வெட்கப்பட்டே பெண்கள் பலரும் ஐவேளைத் தொழுகையைத் தொழத் தொடங்கிவிட்டார்கள். 

அத்தோடு விடாமல் ஒவ்வொரு தாயும் தன் பிள்ளையை எவ்வாறெல்லாம் வளர்க்க வேண்டும். என்னென்ன ஒழுக்கங்களைச் சொல்லித் தர வேண்டும் என்பதையெல்லாம் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை போதித்தாள். "நீங்க ஒவ்வொருவரும் லுக்மான் நபி தம் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுத்த அறிவுரையைச் சொல்லிக் கொடுக்கணும்'' என்று கூறி, அந்த வசனங்களைச் சுட்டிக் காட்டினாள். 

இவ்வாறு மூமினாவுடைய இடைவிடாத இஸ்லாமியப் பணியால் அந்த ஊர்ப் பெண்கள் அனைவரும் திருந்தி வாழத் தொடங்கினார்கள்.

அப்பெண்கள் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் இஸ்லாமியப் பழக்க வழக்கங்கள் மேம்படத் தொடங்கின. சுப்ஹு தொழுகைக்கு ஆண்களின் வருகை அதிகமாயிற்று. 

அந்த ஊரிலுள்ள ஷரீஃப் ஹாஜியார் அவ்வூருக்கு ஓர் அருட்கொடை என்றே சொல்லலாம். ஊர் மக்களின் நலனுக்காகப் பாடுபடுபவர். மாணவ மாணவிகளின் படிப்புக்கு உதவித்தொகை வழங்குவது, அவர்களுக்கு தீனிய்யாத் சார்ந்த போட்டி வைத்துப் பரிசுகள் வழங்குவது, ஏழைப்பெண்கள், விதவைப் பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பது உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளைப் படைத்தோனின் உவப்பை நாடிச் செய்து வருபவர். அவர் இந்த ஆண்டு, குடும்பத்தில் அமைதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதற்காக, மாமியார்-மருமகள் இடையே சுமூகமான உறவை ஏற்படுத்தும் விதத்தில் சிறந்த மருமகளுக்கான போட்டியை அறிவித்தார். இரண்டு மாதங்களுக்கு முன்னரே போட்டி அறிவிக்கப்பட்டு, அதற்கான நிபந்தனைகளும் பரிசுத்தொகை மூன்று பவுன் தங்கம் என்றும் அறிவிக்கப்பட்டது.

போட்டி அறிவிக்கப்பட்டதிலிருந்து நாற்பது நாள்கள் ஒவ்வொரு மருமகளும் தன் மாமியாருக்கு நல்ல முறையில் பணிவிடை செய்திருக்க வேண்டும். மாமியார் தன் மருமகளைப் பற்றி எந்தப் புகாரும் சொல்லக்கூடாது. ஒவ்வொரு மாமியாரும் தன் மருமகள் பற்றிக் கூறும் தகவலை வைத்துத்தான் பரிசுக்குரியவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதெல்லாம் போட்டியின் நிபந்தனைகள். பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்க மூன்று பெண்கள் கொண்ட குழு ஒன்று தேர்வு செய்யப்பட்டது. 

போட்டி அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு மருமகளும் அந்த மூன்று பவுன் தங்கத்தைத் தானே வாங்க வேண்டுமென்று தன் மாமியாருக்கு விழுந்து விழுந்து பணிவிடை செய்யத் தொடங்கினார்கள். மாமியார் கேட்பதற்கு முன்பே அவருக்கு காஃபி போட்டுத் தருவது, உணவு தருவது என்று எல்லாவற்றையும் ஆர்வத்தோடு செய்யத் தொடங்கினார்கள். 

பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்க மூவர் குழு ஒவ்வொரு வீடாகச் சென்று பத்து கேள்விகளைக் கேட்டனர். 

மாமியாருக்குப் பணிவிடை செய்தல், நேரம் தவறாமல் தொழுதல், கனிவாகப் பேசுதல், அரட்டையடிக்காமல் நேரத்தைப் பயனுள்ள வழியில் கழித்தல், பொதுநலன் விரும்புதல், பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ளுதல், கணவனுக்குப் பணிந்து நடத்தல், குர்ஆன் ஓதுதல் உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டுப் பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுத்தார்கள். 

ஒவ்வொரு மருமகளும் ஒவ்வொரு விதத்தில் நல்லவர்களாக இருந்தாலும் சிலவற்றில் பின்தங்கியிருந்ததைக் குறித்துக்கொண்டார்கள். கடைசியாகப் பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்கள். பரிசளிப்பு விழா ஒன்றை ஏற்பாடு செய்து, அவ்வூர் இமாமைச் சிறப்புப் பேச்சாளராகப் பேச வைத்தார் ஷரீஃப் ஹாஜியார். பயான் முடிந்ததும், பரிசு பெறப்போகும் சிறந்த மருமகள் யார் என்பதை அறிய எல்லோரும் ஆவலாக இருந்தார்கள். 

"
நம்ம ஊரின் சிறந்த மருமகளுக்கான பரிசை சென்னையிலிருந்து வாழ்க்கைப்பட்டு வந்துள்ள ராஸிக் மனைவி மூமினா பெறுகிறார்'' என்று அவ்வூர் இமாம் அறிவித்ததும்  "அல்ஹம்து லில்லாஹ்'' என்று கூறியவாறே மேடையேறிப் பரிசைப் பெற்றாள் மூமினா. 

தன் மனைவியின் சேவையைத் திருப்திகொண்டு இறைவன் கொடுத்த பரிசாக எண்ணி மகிழ்ந்தான் ராஸிக். 

                                                      -ஆலங்குடியார்
===========================================







வெள்ளி, 19 ஏப்ரல், 2019

பொறாமை கொள்ளாதீர்

வியாழன், 18 ஏப்ரல், 2019

கட்டுப்படுவோம்; வெற்றிபெறுவோம்!



-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.


யாரும் யாருக்கும் கட்டுப்படாத நிலை பெருகிவருகிறது. கட்டுப்படுவது அடிமைத்தனம் என்ற கருத்து போதிக்கப்படுகிறது; திரைப்படங்கள் மூலம் காட்சிப்படுத்தப்படுகிறது; தொலைக்காட்சித் தொடர்கள்மூலம் பரப்பப்படுகிறது. இது சமுதாய, குடும்ப, நாட்டு நலனுக்கு உகந்ததல்ல. 


பிள்ளைகள் தம் பெற்றோருக்குக் கட்டுப்படுவதும், மாணவர்கள் தம் ஆசிரியருக்குக் கட்டுப்படுவதும் சிறியோர் பெரியோருக்குக் கட்டுப்படுவதும், மனைவி தன் கணவனுக்குக் கட்டுப்படுவதும் சமுதாயம் சீராக இயங்க உதவும். அவர்கள் தம் கட்டுப்பாட்டை மீறி, எல்லை தாண்டிப் போகும்போது சமுதாயச் சீர்கேடுகள் பெருகும். அதுதான் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 


பெற்றோருக்குக் கட்டுப்பட வேண்டிய பிள்ளைகள், அவர்களுக்குக் கட்டுப்படாமல் அவர்கள் கூறும் அறிவுரையைக் கேளாமல், தம் விருப்பப்படியும் எண்ணப்படியும் செயல்படுவதால் கூடா நட்பு, வேண்டாப் பழக்கங்கள், தீராப் பிரச்சினைகள் எல்லாம் சூழ்ந்துகொள்கின்றன. இளவயதிலேயே அவர்கள் ஒரு சிக்கலான வாழ்க்கைக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். இது ஆண்-பெண் இருபாலருக்கும் பொதுவானதாகும். 


மாணவர்கள் தம் இளமைப்பருவத்தில், கற்கும் காலத்தில் தம் ஆசிரியர்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதால் அவர்கள் தம் எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்ள முடியும். அவர்கள் கூறும் அறவுரைகளைக் கேட்டு, அதன்படி செயல்படும்போது அவர்கள் தம் வாழ்க்கையைச் செவ்வனே கட்டமைத்துக்கொள்ள முடியும். ஆசிரியர்களின் அறவுரைகள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் முன்னின்று வழிகாட்டும். அதேநேரத்தில் ஆசிரியர்கள்மீதான மதிப்பும் மரியாதையும் மாணவர்களின் மனத்திலிருந்து மாணவப்பருவத்திலேயே அகன்றுவிடும்போது அவர்களின் மதிப்புமிக்க அறவுரைகள் மாணவர்களின் காதுக்கு ஏறா.


அதனால் அவர்கள் தம் வாழ்க்கையில் அவ்வப்போது எதிர்கொள்கின்ற சிக்கல்களையும் பிரச்சனைகளையும் எப்படி எதிர்கொள்வது என்ற வழிமுறை தெரியாமல், வழிகாட்ட ஆளின்றி மனஅழுத்தத்திற்கு ஆட்பட்டு அல்லாடுவார்கள்; சிலர் தற்கொலை செய்துகொள்ள முனைவார்கள். இதுவே இன்றைய எதார்த்த நிலை. 

ஒவ்வோர் ஊருக்கும் ஜமாஅத் தலைவர் ஒருவர் இருப்பார். அவருக்கு அவ்வூர் மக்கள் கட்டுப்பட்டு வாழ்கின்றபோது எந்தப் பிரச்சனையுமின்றி, நிம்மதியாக வாழலாம். ஊர்க்கட்டுப்பாட்டை மீறி, ஊர்த் தலைவருக்குக் கட்டுப்படாமல் வாழத் துணிந்துவிட்டால், நன்மை செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு தேவையற்ற இயக்கங்கள் ஊருக்குள் நுழையும். மக்கள் இரண்டாகப் பிரிவார்கள். நானா, நீயா என்ற போட்டி ஏற்படும்; பின்னர் பிளவுகள் ஏற்பட்டு, இரண்டு நான்காகும்; நான்கு எட்டாகும். ஒரே ஊரில் இரண்டு நாள்களில் பெருநாள் தொழுகை நடைபெறும். காலப்போக்கில் மக்களின் நிம்மதியான வாழ்க்கை பறிபோகும். இதுவும் இன்றைய எதார்த்த நிலை. 
அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்ற வசனம் கவனத்தில் கொள்ளத்தக்கது. 


இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள்; அவனுடைய தூதருக்கும் உங்களுள் அதிகாரம் உடையோருக்கும் கீழ்ப்படியுங்கள். (4: 59) ஒரு ஜமாஅத்தினரைக் கட்டுப்படுத்துகின்ற ஊர்த்தலைவருக்குக் கட்டுப்பட்டு நடந்திருந்தால், ஒரு குடையின் கீழ் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்றிருந்தால், நமது மதிப்பும் மரியாதையும் பிற அரசியல் கட்சிகளின் பார்வையில் இவ்வளவு தரம் தாழ்ந்து போயிருக்காது. 


நம்முடைய ஒற்றுமையின்மையும் கட்டுப்பாடின்மையும் நம்மை அரசியல் அநாதைகளாகத் தள்ளிவிட்டிருக்கின்றன. முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் தொகுதிகளில்கூட முஸ்லிம் அல்லாத வேட்பாளர்களை நிறுத்தி, வெற்றிகொள்ள முடியும் என்ற எண்ணம் எப்படி வளர்ந்தது? நம்மில் தலைமைக்குக் கட்டுப்படாத நிலை மேலோங்கிவிட்டது என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்


ஓர் ஆணுக்கு மனைவியாக உள்ளவள் தன் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பது அடிமைத்தனம் என்று போதிக்கப்படுகிறது. அது அடிமைத்தனம் அல்ல. குடும்பம் சீராக இயங்க  இறைவன் காட்டிய வழிமுறை. பெண்ணின் அமைதியும் பணிவும் கணவனின் மகிழ்வுக்குக் காரணமாகும். கணவன் மகிழ்ச்சியாக இருந்தால் அவனைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவனுடைய உழைப்பு மேன்மேலும் கூடும். இதனைச் சிதைக்கவே இன்றைய காட்சி ஊடகங்கள் சதிசெய்கின்றன. அவர்களின் சதி வலையில் சிக்கிக்கொண்ட பெண்கள்தாம் தம் கணவருக்குக் கட்டுப்பட்டு வாழ்வதை வெறுக்கத் தொடங்குகிறாள். அதனால் அவளுக்கு இம்மை-மறுமை ஈருலக வாழ்க்கையும் இழப்புக்குள்ளாகிறது. 


ஒரு பெண், தன் இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செவ்வனே செய்து, தன் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடந்து, அவருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை அன்போடு மேற்கொண்டு அவருடைய திருப்தியைப் பெற்றநிலையில் இறப்பெய்தினால், அவள் மறுமையில் சொர்க்கத்தின் எவ்வாயில் வழியாகவும் அதனுள் நுழைந்துகொள்ளலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஒரு பெண் தன் கணவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடப்பது, பணிவிடைகள் செய்வது, அவர் வெளியே சென்றுவிட்டால் அவனுடைய பொருள்களையும் தனது கற்பையும் பாதுகாத்துக் கொள்வது இதுவே ஒரு குடும்பப் பெண்ணின் பண்பாகும் என்ற நபிமொழியில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. ஒரு பெண் இறைக்கடமைகளை நிறைவேற்றியபின், எஞ்சிய நேரங்களில் தன் வீட்டைப் பராமரிப்பதிலும் கணவனை மகிழ்விக்கும் செயல்களிலும் ஈடுபடுவது அவளுக்கான இபாதத் ஆகும். 

"எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவர் ஆவார். எனக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவர் ஆவார்...'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 3745) இந்த நபிமொழியின்படி அல்லாஹ்வின் தூதர் சொன்ன ஒவ்வொரு கூற்றுக்கும் பணிந்து நடப்பதும் அதை ஏற்று, நம் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்ட நன்மையைப் பெற்றுத்தரும்.

ஆகவே ஒரு பெண் தன் கணவனுக்குக் கட்டுப்படுவதும் ஒரு பிள்ளை தன் பெற்றோருக்குப் பணிந்து நடப்பதும் அவர்களுக்கான பணிவிடைகளைச் செவ்வனே செய்வதும், மாணவன் ஆசிரியருக்குக் கட்டுப்பட்டு நடப்பதும் இறைவனுக்குக் கட்டுப்படுவதாகவே கருதப்படும். அதற்கான நன்மை அவரவர்க்கு உண்டு என்பதில் ஐயமில்லை. 

ஆக, கட்டுப்பட்டு நடப்பதில்தான் மகிழ்ச்சியும் சுதந்திரமும் இருக்கின்றன என்பதை மனத்தில் பதிய வைத்துக்கொண்டால் இன்று நாம் எதிர்கொள்கின்ற பெரும்பாலான பிரச்சனைகளுக்கும் சிக்கல்களுக்கும் தீர்வு கண்டுவிடலாம். கரையின் கட்டுப்பாட்டில் நீர் இருப்பதால் அது எல்லோருக்கும் பயன்படுகிறது. அது கட்டுப்பாட்டை மீறி, கரையை உடைத்துக்கொண்டு, கட்டற்ற முறையில் ஓடினால் மக்களுக்கு அழிவையே உண்டாக்கும். அதுபோலவே ஒவ்வொருவரும் தமக்குப் பொறுப்பாளியாக உள்ளவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற வரை அவர்களுக்குப் பாதுகாப்பும் சுதந்திரமும் மகிழ்ச்சியான வாழ்க்கையும் உண்டு. கட்டுப்பாட்டை மீறிச் செல்கின்றபோதுதான் இழப்பும் அவமரியாதையும் இழுக்கும் ஏற்படும். இது எல்லாத் தளங்களுக்கும் பொருந்தும் என்பதைச் சிந்திப்போர் உணர்வர். 
=====================================






செவ்வாய், 16 ஏப்ரல், 2019

திங்கள், 15 ஏப்ரல், 2019

ஆலோசனை செய்வோம்

திங்கள், 8 ஏப்ரல், 2019

எளிமையான வாழ்வே மகிழ்ச்சி!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எளிமையான வாழ்க்கை முறையைக் கற்றுத் தந்ததோடு அவ்வாறே எளிமையாக வாழ்ந்து காட்டினார்கள். எளிய வாழ்க்கை என்றால் என்ன? அதில் மகிழ்ச்சி உண்டா? என்று கேட்போர் உண்டு. எளிய வாழ்க்கை என்பது அவசியத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக்கொள்ளாமல் கஞ்சத்தனமாக வாழ்க்கையை நடத்துவதல்ல. மாறாக, தேவையைச் சுருக்கிக்கொள்வதும் திட்டமிட்டுச் செலவழிப்பதுமே ஆகும். 

இன்றைய அவசர உலகில் நுகர்வுக் கலாச்சாரத்தால் மனிதன் சிறைவைக்கப்பட்டுள்ளான் என்றே சொல்லலாம். விளம்பரங்களால் ஈர்க்கப்படுகின்ற பெண்கள் தம் கணவர்களை வற்புறுத்தி வாங்கச் செய்கின்ற எத்தனையோ பொருள்கள் வீட்டில் பயன்பாடு இல்லாமல் பரணியில் கிடப்பதைக் காணலாம். மனிதர்கள் மத்தியில் தம் பகட்டைக் காட்டுவதற்காகத் தேவையில்லாத பொருள்களையும் வாங்கிக் குவிக்கும் பேராசை எண்ணமே நுகர்வுக் கலாச்சாரம். எதையாவது வாங்கிக்கொண்டே இருப்பதுதான் மகிழ்ச்சி என்று சிலர் நினைக்கின்றனர். அதை வாங்குமுன், அப்பொருள் நமக்குத் தேவையா என்று யோசிக்க வேண்டும். அது இல்லாமலும் நம்மால் வாழ முடியுமா என்று கூடி ஆலோசிக்க வேண்டும். ஏனென்றால் எத்தனை பொருள்கள் வாங்கினாலும் மனம் நிறைவுபெறாது என்பதுதான் உண்மை. 

சிலர் பணம் கொடுத்து வாங்குகின்றனர். பலர் பணமே இல்லாமல் எதிர்கால வருமானத்தை அடகுவைத்து வாங்கிக் குவிக்கின்றனர். எல்லாவற்றிற்கும் கடன் (லோன்)தான். இருசக்கர வாகனக் கடன், வீட்டுக் கடன், மகிழுந்துக் கடன் உள்ளிட்ட ஏராளமான கடன்கள். அவற்றைத் திரும்பச் செலுத்துவதற்காக இரவு-பகல் பாராமல் ஓடியோடி உழைக்க வேண்டியுள்ளது. மாதந்தோறும் தவணை கட்டவேண்டுமே என்ற நெருக்கடியிலும் மனஅழுத்தத்திலுமே மனிதன் ஓடிக்கொண்டிருப்பதால் அக்கம் பக்கம் யார் இருக்கிறார் என்றோ, குடும்ப உறவுகள் யார் யார் என்றோ தெரிந்துகொள்ள நேரமில்லை; குடும்ப உறுப்பினர்களிடம் மனம்விட்டுப் பேச நேரமில்லை; மனைவியிடம் மகிழ்ந்து பேச நேரமில்லை; ஒரே படபடப்பு; பதற்றம். இதுதான் இன்றைய நகர மக்கள் பெரும்பாலோரின் வாழ்க்கை. 

வீட்டில் எல்லாப் பொருள்களும் உள்ளன. ஆனால் மகிழ்ச்சி இல்லை. சொந்த வீடு, சொந்த வாகனம் எல்லாம் இருந்தும் மகிழ்ச்சி இல்லை. மகிழ்ச்சியாக வாழ்வதற்காக எல்லாவற்றையும் வாங்கியும் மகிழ்ச்சி மட்டும் இல்லாமல் போனதேன்? மகிழ்ச்சி எதில் உள்ளது என்பதை அறியாமல் போனதே அதற்கான காரணம். வீட்டில் எல்லாப் பொருள்களும் இருந்துவிட்டால் மகிழ்ச்சி ஏற்படுமா? நம்மை எல்லோரும் பாராட்டினால் மகிழ்ச்சி வந்துவிடுமா? சொந்த வீடுதான் மகிழ்ச்சிக்குக் காரணமா?

போதுமென்ற மனம்தான் மகிழ்ச்சிக்குக் காரணம். எளிமையான வாழ்க்கைதான் மகிழ்ச்சிக்குக் காரணம். கடனின்றி யாருக்கும் அடிமையாக இல்லாமல் தலை நிமிர்ந்து வாழ்வதுதான் மகிழ்ச்சி. இது தெரியாமல் பலர் சிரமப்படுவதைக் கண்டு கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. அதாவது மனிதன் இவ்வுலக வாழ்க்கையை மேற்கொள்ள மிகுந்த சிரமங்களை மேற்கொள்கிறான். பிறர் தம்மை மதிக்க வேண்டுமென்பதற்காகவும் கேவலமாகக் கருதிவிடக்கூடாது என்பதற்காகவும் தேவையைவிட மிகுதியாகச் செலவு செய்ய முனைகிறான். தன்னுடைய மகன் அல்லது மகளின் திருமணத்தை மிக எளிதாக நடத்தி முடிக்க எல்லா வாய்ப்புகளும் இருந்தும், பிறரின் மதிப்பைப் பெறுவதற்காக மிகுந்த பொருட்செலவில் அத்திருமணத்தைச் செய்து முடிக்கிறான். இதனால்தான் அவன் மிகுதியாக உழைக்க வேண்டியுள்ளது. கடன் பெற்றாவது ஆடம்பரமாகத் திருமணம் செய்து முடிக்கவே எண்ணுகிறான். அதுவே அவனுடைய மகிழ்ச்சியை இழக்கச் செய்கிறது.

செலவுக்குப் போதாது என்ற காரணத்திற்காகவே ஆணும் பெண்ணும் சம்பாதிக்கப் புறப்பட்டு விடுகின்றார்கள். இரண்டு பேரும் நாள்தோறும் உழைத்துக் களைத்து, வீட்டுக்கு வருகின்றார்கள். இதனால் வீட்டிலுள்ளோரையும் பிள்ளைகளையும் ஒழுங்காகக் கவனிக்க முடிவதில்லை. ஒரு பெண் ஆணுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்ய முடிவதில்லை. அதனால் அங்கே இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டு, மனக்கசப்பு ஏற்பட்டுவிடுகிறது. அல்லது ஒரு பெண் அலுவலகப் பணிகள், வீட்டு வேலைகள் ஆகிய இரண்டுவிதமான சுமைகளையும் சுமக்க வேண்டிய கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்படுகின்றாள். தாராளமாகச் செலவு செய்து, மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்பதற்காகவே பெண்ணும் சம்பாதிக்கப் புறப்பட்டாள். ஆனால் தாராளமாகவும் செலவு செய்ய முடிவதில்லை. மகிழ்ச்சியாகவும் வாழ முடிவதில்லை. இதை இன்றைய இளம் தம்பதிகள் தெளிவாக உணரலாம். 

புதிதாக வீடு கட்டிக் குடியேறும்போது பெருமளவில் செலவு செய்து ஒரு திருமண விருந்தைப்போல் விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது. எளிதாக, ஆர்ப்பாட்டம் இல்லாமல் செய்ய வேண்டிய நிச்சயதார்த்த நிகழ்வைக்கூட திருமண விருந்துபோல் நடத்தப்படுகிறது. திருமணமோ ஈராயிரம், மூவாயிரம் பேர் கொண்ட மாநாடாக நிகழ்த்தப்படுகிறது. கத்னா (விருத்தசேதனம்) ஊர்வலம், வளைகாப்பு விழா, பூப்பு   நீராட்டு விழா, காதணி விழா உள்ளிட்ட எத்தனையெத்தனையோ சடங்குகளைச் செய்து சங்கடங்களை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். ஏன், மரணித்த வீட்டிலேயே திருமண விருந்தைப்போல் உணவு பரிமாறப்படுகிறது. இப்படி எல்லாச் செயல்பாடுகளிலும் மனிதன் தன் சக்திக்கு மீறிய செலவைச் செய்யத் துணிந்துவிட்டான். அவ்வாறு செய்யாவிட்டால் தன் மதிப்புக்கும் மரியாதைக்கும் களங்கம் ஏற்பட்டுவிடும் என்று கருதுகிறான்; மற்றவர்கள் என்ன பேசுவார்களோ என்று அஞ்சுகிறான். இறைவனின் அன்பைப் பெறுவதற்கோ, இறைத்தூதரின் வழிமுறையைப் பின்பற்றுவதற்கோ சிறிதும் முயல்வதில்லை.
ஒரு திருமணத்தை நடத்தி முடிக்கப் பல இலட்சங்கள் செலவழிக்கப்படுகின்றன. மேடை அலங்காரம், மாப்பிள்ளை-பெண் அலங்காரம், வீடியோ, விருந்து, ஐஸ்க்ரீம், பழ வகைகள், வெற்றிலை பாக்கு உள்ளிட்டவை அடங்கும். இவற்றுள் சிலவற்றைத் தவிர மற்றவை வேண்டாத செலவுகள் என்றே சொல்லலாம். “செலவு குறைவான திருமணமே அபிவிருத்தி மிக்கது” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள பொன்னான வாக்கை ஓர் ஓரமாய் ஒதுக்கிவைத்துவிடுகின்றார்கள். சுயகௌரவத்தை நிலைநாட்டப் பல இலட்சங்கள் செலவழிக்கின்றார்கள். 

போதாது, போதாது என்று நினைக்கும்போதெல்லாம் நாம் நம் மகிழ்ச்சியை இழக்கிறோம்; தவிக்கிறோம். போதும், போதும் என்று சொல்லும்போதெல்லாம் நம் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. குறைவாக இருந்தாலும் மனத்திருப்தி ஏற்பட்டுவிடுகிறது. இதுவே இருப்பதைக்கொண்டு மகிழ்தல் ஆகும். நாம் என்னதான் பிறர் மெச்சவேண்டுமென்பதற்காக அள்ளி அள்ளிச் செலவு செய்தாலும் அவர்கள் குறைதான் சொல்வார்கள். ஏனெனில் இது குறை சொல்லும் உலகம். மனிதன் குறையுடையவனாகத்தான் படைக்கப்பட்டுள்ளான். இறைவனுடைய திருப்தியைப் பெற வேண்டுமென்பதற்காகவே நாம் நம் செயல்களை மேற்கொள்ளும்போது மனிதர்களுடைய திருப்தியும் அதில் கிடைத்துவிடும். நபித்தோழர்கள் அத்தகைய நோக்கத்தில்தான் எல்லாச் செயல்களையும் மேற்கொண்டார்கள். அதனால் இறைவனுடைய திருப்தியைப் பெற்றார்கள். இன்று வரை நாம் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறோமல்லவா! 

அன்றைய காலத்தில் ஓர் இணை ஆடைகளுடன் திருப்தியுடன் வாழ்ந்தார்கள் பெண்கள். இரண்டு இணை ஆடைகள் உள்ளவர்களைக் கண்டு வியப்படைந்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். இன்று பீரோ முழுக்க சேலைகளாக அடுக்கி வைத்துக்கொண்டும் அவற்றை உடுத்திக்கொள்ளாமல் அடுத்த சேலையை வாங்குவதிலேயே நாட்டம் கொள்கிறார்கள் இன்றைய பெண்கள். இப்போது மகிழ்ச்சி எங்கே உள்ளது? வாங்கிக் குவிப்பதிலா, இருப்பதைக் கொண்டு திருப்தியடைவதிலா?

சேமிப்புப் பணம் கையில் இல்லாமலேயே கடனை வாங்கி, வீட்டைக் கட்டிவிட்டு, பிறகு அக்கடனை அடைக்கப் பாடாய்ப்படுபவர்கள், ஓடாய்த் தேய்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். சிலர் அக்கடனை அடைக்க முடியாமல் கட்டிய வீட்டை இழக்கவும் நேரிடுகிறது. இவ்வாறு திட்டமிடல் இல்லாமல் மகிழ்ச்சியைக் கடன் வாங்கினால் அது நிலைக்காது. எத்தனை நாளைக்குத்தான் வாடகை வீட்டிலேயே இருப்பது என்று யோசிப்பதைவிட, எத்தனையோ பேர் வாடகைக்கு ஒரு வீடு பிடித்து இருக்க முடியாமல் சாலையோரம் வாழ்வதைப் பார்க்கிறோமே. அத்தகையவர்களைவிட அல்லாஹ் நம்மை மேல்நிலையில்தானே வைத்துள்ளான் என்ற உயர்ந்த எண்ணம் மனதில் வந்தால்தான் நாம் மகிழ்ச்சியை உணர முடியும். இறைவனின் வெகுமதியை உணர்ந்து அவனுக்கு நன்றி செலுத்த முடியும். 

“உனக்கு மேல் உள்ளோரைப் பார்க்காதே. உனக்குக் கீழ் உள்ளோரைப் பார்” எனும் நபிமொழிக்கேற்ப நம் பார்வையை நாம் மாற்றிக்கொண்டால் மகிழ்ச்சி தானாக வரப்போகிறது. 
===========================================





 

நம் இனத்துக்கு நாமே எதிரியா?


-----------------------------------------------
எந்தப் பிடிமானமும் இன்றித் தண்ணீரில் மூழ்கப்போகும் நேரத்தில், ஒருவர் ஒரு மரக்கட்டையைத் தூக்கிப் போட்டார். அதைப் பிடித்துக்கொண்டு கரையேறி வந்து, தம் சமுதாய மக்களையெல்லாம் காப்பாற்றலாமே என்று எண்ணிக்கொண்டு கரையேறி வரத் துடிக்கும் ஒருவரை, நாமே அந்தக் கட்டையைப் பிடுங்கிப்போட நினைக்கலாமா? ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, தேசியக் கட்சி எதுவுமே நம் இனத்திற்கான பிரதிநிதியாக ஒருவரைக்கூடக் களத்தில் நிறுத்தாதபோது, ஏதோ ஒரு கட்சி, நமக்கான ஓர் அங்கீகாரத்தைக் கொடுக்கும்போது, அதை இறைவன் வழங்கிய ஒரு பொன்னான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, அவரை ஒன்றுசேர்ந்து வெற்றிபெறச் செய்வது நம் கடமையல்லவா?


நம்மைக் காப்பாற்றுவார், நமக்காகக் குரல் கொடுப்பார் என்று யார் யாரையோ நாம் நம்பும்போது, ஓர் இறைநம்பிக்கையாளரை நம்ப மறுப்பதேன்? வெற்றி பெற்றபின் நமக்கெதிராகச் செயல்படுவார் என்ற எண்ணமா அவரைக் கரைசேரவிடாமல் உங்களைத் தடுக்கிறது?


“39 தொகுதிகளுள் 38 தொகுதிகளில் திமுக-காங். கூட்டணியை வெற்றிபெறச் செய்வோம். ஒரே ஒரு தொகுதியான-மத்தியச் சென்னைத் தொகுதியில் மட்டும் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் தெஹ்லான் பாகவியை வெற்றிபெறச் செய்வோம்” என்பதே மார்க்கம் கற்ற பெரும்பாலான அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும். 


அல்லாஹ்வின் அருளாலும் நாட்டத்தாலும், அவர் வெற்றிபெற்றால் தேசியக் கட்சியான காங்கிரசுக்குத்தான் ஆதரவளிப்பார் என்பதில் எள்முனையளவும் ஐயமில்லை. பெரும்பாலோர் எதிர்பார்க்கும் ஆட்சி அமைய அவர் எவ்வகையிலும் தடையாக இருக்க மாட்டார் என்ற உறுதியோடு மத்தியச் சென்னையில் தெஹ்லான் பாகவியை வெற்றிபெறச் செய்வது நம் சமுதாய மக்களின் தார்மீகக் கடமையாகும். 


-முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி, மணலி, சென்னை-68
===================================

நல்லோரைத் தேர்வு செய்வோம் பெண்கள் பயான்

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

திங்கள், 1 ஏப்ரல், 2019