வெள்ளி, 31 ஜனவரி, 2020

வியாழன், 30 ஜனவரி, 2020

வரம்புமீறிய சட்டத் திருத்தம்


------------------------------------------
அண்மைக்காலமாகப் பல்வேறு சட்டத் திருத்தங்களும் மக்களுக்கு எதிரான புதிய புதிய சட்டங்களும் இயற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று (புதன்கிழமை 29.01.2020) மக்களவையில் ஒரு புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது கருக்கலைப்புக்கான கால வரம்பை 20லிருந்து 24 வாரமாகத் திருத்தியமைக்கப்பட்ட சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பெரும்பாலான பெண்களின் நலன் கருதி இச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதுஎன மத்திய அமைச்சர் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

இது பெண்களின் உடல் நலனுக்குக் கேடானது. உயிரிழக்கும் ஆபத்தும் இதில் உள்ளது என்பதே உண்மை. கருவில் ஆறு மாதங்கள் வளர்ச்சியடைந்த சிசுவை வயிற்றுக்குள் வைத்துக் கொலை செய்வதே கருக்கலைப்பு. இதனால் எவ்வளவு சிரமத்தை ஒரு பெண் தாங்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை எல்லோரும் யோசிக்க வேண்டிய தருணமிது.

நம் நாட்டில் இயல்பான பிரசவத்திலேயே தாயும் சேயும் சேமத்துடன் வீடு வந்து சேர்வது அதிசயமே. அப்படியிருக்கையில் கவனக்குறைவு நிறைந்த மருத்துவர்கள் பணியாற்றுகின்ற நம் நாட்டில் இதனால் இன்னும் எத்தனை பெண்கள் மடிய இருக்கின்றார்களோ தெரியவில்லை.

இது இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான சட்டமாகும். ஒரு சிசு கருவில் உருவான நான்கு மாதங்களில் ஒரு வானவர் மூலம் அல்லாஹ், அச்சிசுவின் நன்மை-தீமை, வாழ்வாதாரம், ஆயுள், இறப்பு ஆகியவற்றைப் பதிவு செய்து, உயிரையும் ஊதிவிடுகின்றான். உயிர் ஊதப்பட்ட சிசுவைக் கலைப்பது கொலையே ஆகும். இது குறித்து நாளை மறுமையில் விசாரிக்கப்படும்.

அல்லாஹ் கூறுகின்றான்: உயிரோடு புதைக்கப்பட்ட பெண் குழந்தை, என்ன குற்றத்திற்காக நீ கொலை செய்யப்பட்டாய் என்று விசாரிக்கப்படும்.” (81: 8-9) பிறந்த பின் உயிரோடு புதைத்தல், பிறக்குமுன்னரே உயிரோடு அழித்தல் எல்லாமே இவ்வசனத்திற்குள் அடக்கம்.

வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகள் தம்மையறியாமல் கருவுற்றுவிடுகின்றனர். அது அவர்களுக்குத் தெரியாமலே போய்விடுகிறது. ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகுதான் அவர்களுக்கு அது தெரிய வருகிறது. அத்தகைய சிறுமிகளுக்கு இச்சட்டம் ஆதரவாக அமையும்என்றும் தெரிவிக்கப்படுகிறது. அப்படியெனில் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகளுக்கான கருவைக் கலைப்பதில் விதிவிலக்கு உண்டுஎன்றே சட்டத்திருத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, எல்லாப் பெண்களுக்குமான பொதுச்சட்டமாக, கருக்கலைப்பின் கால வரையறையை ஆறு மாதங்களாக மாற்றுவது பல்வேறு சிக்கல்களுக்கும் உயிரிழப்பிற்கும் காரணமாக அமையும். மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள இச்சட்டம் பெண்களுக்கு எதிரானதாக அமையுமே தவிர சாதகமாக அமையாது என்பது உறுதி.

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி,
30 01 2020
===========================
==




சனி, 25 ஜனவரி, 2020

சனி, 18 ஜனவரி, 2020

தஜ்வீத் சட்டங்கள் -1

வெள்ளி, 17 ஜனவரி, 2020

தீமையைத் தடுப்போம்

செவ்வாய், 14 ஜனவரி, 2020

இளைஞர்களின் ஆற்றல் சமுதாயத்திற்கு அரண்!



-
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
==============

மனித வாழ்வின் முப்பருவங்களில் முக்கியமான பருவம் இளமைப்பருவமே ஆகும். இளமைப்பருவத்தின் ஆற்றலும் வீரமும் சீரான நேர்க்கோட்டில் சென்றால் அவர்கள் பயன்பெறுவதோடு அவர்களால் சமுதாயமும் பயன்பெறும். அவர்களின் அளப்பரிய ஆற்றலைப் புரிந்துகொண்டு அவர்களைச் சரியான பாதையில் நடத்துவது சமுதாயப் பொறுப்பிலுள்ள பெரியவர்களின் கடமையாகும்.

சுறுசுறுப்போடும் துடிப்போடும் இயங்குவதால் அவர்களுக்கென ஏதாவது பொறுப்பைக் கொடுக்க வேண்டும். அவர்கள் ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டுவிட்டால் அதைச் செவ்வனே செய்துமுடிப்பார்கள். ஏனெனில் அறிவும் ஆற்றலும் ஒருசேரக் கொண்டுள்ள பருவம் அல்லவா அது?

ஒவ்வொரு மஹல்லாவிலும் இளைஞர் மன்றம் ஒன்றை அமைத்து, அதில் அப்பகுதியிலுள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து அவரவருக்கான பொறுப்பை ஒப்படைக்க வேண்டியது அந்தந்த மஹல்லாவிலுள்ள பள்ளி நிர்வாகிகளின் கடமையாகும்.

இளைஞர்களின் ஆற்றலைச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் வெற்றிபெறுவார்கள். அவர்களைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியாதவர்கள் தோல்வியடைவார்கள். அது மட்டுமின்றிப் பல்வேறு பிரச்சனைகளையும் சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டிவரும். எனவே பிரச்சனைகளையும் சிக்கல்களையும் எதிர்கொள்வதற்கான ஆற்றலைக் கொண்டுள்ள அவர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுதான் பொறுப்புணர்வுமிக்க சமுதாய நிர்வாகத்தின் வெற்றியாகும். முதியவர்களை மட்டும் கொண்டுள்ள எந்த நிர்வாகமும் வெற்றியடைய முடியாது.

நபி (ஸல்) அவர்கள் தம் ஏகத்துவப் பிரச்சாரத்தை முன்னெடுத்தபோது பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்தார்கள். ஒரு கட்டத்தில் மனச்சோர்வுற்ற அவர்கள், "அல்லாஹ்வே! அபூஜஹ்ல், உமர் பின் கத்தாப் ஆகிய இரண்டு இளைஞர்களுள் யாரையாவது ஒருவரை இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்கச் செய்து, இம்மார்க்கத்திற்குப் பக்கபலமாக ஆக்கு'' என்று பிரார்த்தனை செய்தார்கள். இறைத்தூதரின் பிரார்த்தனையை ஏற்ற அல்லாஹ், உமர் பின் கத்தாப் (ரளி) அவர்களுக்கு அத்தகைய நல்வாய்ப்பை நல்கினான். எனவே உமர் (ரளி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள்; இஸ்லாமிய மார்க்கத்திற்குப் பக்கபலமாகத் திகழ்ந்தார்கள்.

ஒருநாள், உமர் (ரளி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கொண்டுவந்துள்ள இம்மார்க்கம் உண்மையானதுதானே?'' என்று வினவ, "ஆம்! உண்மைதான்!'' என்று கூற, "பிறகேன் இந்த இறைமறுப்பாளர்களுக்குப் பயந்து, நாம் மறைந்துகொண்டு தொழ வேண்டும்? பகிரங்கமாகத் தொழலாமே?'' என்று வினவினார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பக்கபலமாகத் திகழ்ந்தார்கள். அதன்பின்னர் ஏகத்துவப் பிரச்சாரம் பகிரங்கமாகச் செய்யப்பட்டது என்பது வரலாறு.

"
உமர் (ரளி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து நாங்கள் கண்ணியமாகவே இருந்து வந்தோம்'' என்று அப்துல்லாஹ் (ரளி) அவர்கள் அறிவிக்கின்ற செய்தி புகாரீ எனும் நபிமொழித் தொகுப்பு நூலில் (3408) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதான் இளமையின் ஆற்றல். இளைஞர்களின் ஒருங்கிணைந்த ஆற்றல் சமுதாயத்திற்கு அரண் என்பதை இச்செய்தியின் வாயிலாக அறியலாம்.

நபி (ஸல்) அவர்களே தம் தூதுத்துவத்திற்கு முன்பாக, தம் 35ஆம் அகவையில் ஹிஸ்புல் ஃபுளூல் எனும் ஓர் இளைஞர் மன்றத்தை உருவாக்கி, அதன்மூலம் இளைஞர்களை ஒன்றுதிரட்டி, சமுதாயத் தொண்டாற்றினார்கள் என்பதை வரலாற்றில் அறிகிறோம். ஆக இளைஞர் மன்றம் என்பது இளைஞர்களுக்குச் சமுதாயப் பொறுப்புணர்வை ஊட்டுவதற்காகவும் சமுதாயத்திற்குப் பயனுள்ள வகையில் அவர்கள் தொண்டாற்ற வேண்டும் என்பதற்காகவுமே ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் இளைஞர்களைச் சரியான முறையில் பயன்படுத்தினார்கள். அவர்களுக்கான பொறுப்புகளைக் கொடுத்து, அவர்களைச் சீரான முறையில் வழிநடத்தினார்கள். இளம் வயதிலேயே போர்ப்படையை வழிநடத்திச் செல்லும் தளபதி பொறுப்பை ஸைத் பின் ஹாரிஸா (ரளி) அவர்களுக்கு வழங்கினார்கள். ஸைத் (ரளி) அவர்கள் தம் படையினரை வழிநடத்திச் சென்று, வெற்றி வாகை சூடி வந்தார்கள் என்பது வரலாறு.

நபி (ஸல்) அவர்களிடம் யூதர்கள் வந்து, தம் வேதத்தைப் படித்துக் காட்டும்போது, அதில் சிலவற்றைப் படித்துக் காட்டிவிட்டு, வேறு சிலவற்றை மறைத்து விடுவார்கள். எங்கள் வேதத்தில் இப்படித்தான் சட்டம் உள்ளது என்று கூறி ஏமாற்றுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அவர்கள்மீது சந்தேகம் கொண்ட நபியவர்கள், ஸைத் பின் ஸாபித் (ரளி) அவர்களிடம், "நீங்கள் ஹீப்ரு மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். ஸைத் அவர்கள், நபியவர்களின் கட்டளையை ஏற்று, மிகுந்த சிரத்தையோடும் அக்கறையோடும் ஈடுபட்டு, பதினேழே நாள்களில் அம்மொழியைக் கற்றுக்கொண்டுவிட்டார்கள். இதுதான் இளைஞரின் ஆற்றல்.

நபி (ஸல்) அவர்கள் தம் தாயகம் துறந்து மதீனா செல்ல நேரிட்டபோது, எதிரிகளின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க ஸவ்ர் குகையில் மூன்று நாள்கள் தங்கினார்கள். அப்போது பகலெல்லாம் மக்காவின் முக்கிய வீதிகளில் குரைஷித் தலைவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, இரவில் ஆடு மேய்க்கும் இடையராகச் சென்று, நபி (ஸல்) அவர்களுக்கு ஆட்டிலிருந்து பால் கறந்து கொடுத்துவிட்டு, மக்காவின் செய்திகளையும் சொல்லிவிட்டுச் செல்லும் ஓர் ஒற்றராகச் செயல்பட்டவர் அபூபக்ர் (ரளி) அவர்களின் மகன் அப்துல்லாஹ் எனும் இளைஞர்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எத்தனையோ அசாதாரணமான செயல்களைச் செய்து காட்டும் திறன்மிக்கவர்கள்தாம் இளைஞர்கள். அத்தகைய இளைஞர்களுக்கு அவரவரின் திறமையறிந்து உரிய பொறுப்புகளை வழங்கி, அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் அவர்கள் வேறு எங்கேனும் சென்று, பொறுப்பைப் பெற்றுக்கொண்டு அந்த இயக்கத்திற்காகப் பாடுபடத் தொடங்கிவிடுவார்கள். அது நமக்கே எதிராகக் கூட அமையலாம்.

நபி (ஸல்) அவர்களின் வழியைக் கடைப்பிடித்து, அபூபக்ர் (ரளி) அவர்களும் இளைஞர்களைச் சரியாகப் பயன்படுத்தி வெற்றிபெற்றார்கள். நபியவர்களின் இறப்பிற்குப்பின், ஹிஜ்ரீ 11ஆம் ஆண்டு நடைபெற்ற யமாமா போரில் ஹாஃபிழ்கள் எழுபது பேர் மரணமடைந்துவிட்டார்கள். அதனைத் தொடர்ந்து இறுதிவேதமான திருக்குர்ஆனை ஒரே தொகுப்பாகத் தொகுக்க வேண்டும் என்ற கருத்து கலீஃபா அபூபக்ர் ஸித்தீக் (ரளி) அவர்களிடம் முன்வைக்கப்பட்டபோது, நீண்ட ஆலோசனைக்குப்பிறகு அக்கருத்தை ஏற்றுக்கொண்ட அவர்கள், இவ்வளவு பெரிய பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்று யோசித்த வேளையில், அப்பொறுப்பை இளைஞரான ஸைத் பின் ஸாபித் (ரளி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அவர்களின் தலைமையின்கீழ் வேறு சில இளைஞர்களையும் நியமித்து உத்தரவிட்டார்கள். ஸைத் பின் ஸாபித் (ரளி) அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வோடும் அக்கறையோடும் ஆழ்ந்த கவனத்தோடும் இப்பணியை மேற்கொண்டார்கள். இறுதியில் வெற்றிகரமாக இப்பணியை முடித்து, அனைவரின் பாராட்டையும் பெற்றார்கள்.

சத்தியத்தைத் துணிந்து ஏற்கும் திறனும் அசத்தியத்தை எதிர்க்கின்ற துணிச்சலும் இளைஞர்களுக்கு உண்டு. அதனால்தான் அத்தகைய வரலாற்று நிகழ்வைத் திருக்குர்ஆன் பதிவுசெய்கிறது. தன்னை வணங்குமாறு கட்டளையிட்ட அரசனின் கட்டளையை ஏற்க மறுத்து, அவனை வணங்காமல் இறைவன் ஒருவனே வணங்கப்படத் தகுதியானவன் என்ற ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்ட இளைஞர்கள், தமது இருப்பிடத்தைவிட்டுப் புறப்பட்டு, ஊரின் எல்லையில் அமைந்துள்ள ஒரு குகையில் ஒளிந்துகொண்டார்கள். அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு அல்லாஹ் அவர்களை நீண்ட நித்திரையில் ஆழ்த்திவிட்டான். 300 ஆண்டுகளுக்கும் மேலாக உறங்கி, ஒரு நாள் விழித்தெழுந்தார்கள். அவர்கள் தமக்குள் எத்தனை நாள்கள் உறங்கினோம் என்று பேசிக்கொண்டபோது, ஒரு நாள், அல்லது அரை நாள் தூங்கியிருக்கலாம் என்று கூறிக்கொண்டார்கள். அவர்களுள் ஒருவரை உணவு வாங்க அனுப்பிவைத்தார்கள். அவர் தம்மிடம் இருந்த பழைய காசைக் கொடுத்து, உணவு வாங்க முற்பட்டபோது, அச்செய்தி அரசருக்குச் செல்கிறது. பின்னர் அவரைப் பின்பற்றி அக்குகைக்கு எல்லோரும் சென்றார்கள். ஆனால் அவர் உள்ளே நுழைந்ததும் அக்குகை வாசல் மூடிக்கொண்டது. ஆக அநியாயத்திற்கு எதிராகப் போராடும் துணிச்சல் இளைஞர்களுக்கு உள்ளது என்பதையும் அவர்களுக்கு அல்லாஹ் உதவி செய்வான் என்பதையும் இவ்வரலாற்றின் மூலம் அறியலாம்.

இன்றைய இளைஞர்கள் சிலர் தம் இளமைக் காலத்தில் எந்த நோக்கமும் திட்டமும் இல்லாமல் மனம்போன போக்கில் செயல்படுகிறார்கள். அதனால் அவர்களின் வாழ்க்கை மிகச் சாதாரணமாக அமைந்துவிடுகிறது. வேறு சிலர் எதிர்காலத் திட்டத்தோடு வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுகின்றார்கள். அவர்கள் நல்லவிதமாகப் படித்து, நல்லதொரு பணியில் அமர்ந்து தமது வாழ்க்கையைச் சீராக அமைத்துக்கொள்கின்றார்கள். இந்த இரண்டையும் தாண்டி, வேறு சில இளைஞர்களோ சேரக்கூடாத நண்பர்களோடு சேர்ந்து, தவறான பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொண்டு, போதைப் பொருளுக்கும் மதுவுக்கும் அடிமையாகி, தமது வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்கின்றார்கள். அவர்கள் தமது வாழ்க்கையை மட்டுமின்றி, தம்மை நம்பி வந்த மனைவி-
பிள்ளைகளின் வாழ்க்கையையும் கெடுத்துவிடுகின்றார்கள்.

இன்றைய இளைஞர்கள் அனைவரும் பின்வரும் நபிமொழியைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் ஆதமின் மகனிடம் (மனிதனிடம்) ஐந்து விஷயங்கள் குறித்து விசாரிக்கப்படுவதற்குமுன் இறைவனுக்கு அருகிலிருந்து அவன் பாதம் நகர முடியாது. (அவை:) 1. அவன் தனது வாழ்நாளை எவ்வாறு கழித்தான்? 2. அவன் தனது இளமையை எவ்வாறு பயன்படுத்தினான்? 3. அவன் தனது பொருளாதாரத்தை எவ்வாறு ஈட்டினான்? 4. அ(ந்தப் பொருளாதாரத்)தை எவ்வாறு செலவிட்டான்? 5. அவன் கற்ற கல்விமூலம் என்ன செயலாற்றினான்? (நூல்: திர்மிதீ: 2340)

வாழ்நாள் குறித்து ஒரு வினாவும் இளமையைக் குறித்து ஒரு தனிப்பட்ட வினாவும் உண்டு என்பதை இளைஞர்கள் உணர வேண்டும். ஏனெனில் முப்பருவங்களுள் அது முக்கியமான பருவமாகும். அந்தப் பருவத்தைச் செம்மையாகப் பயன்படுத்திக்கொண்டவர்கள் வெற்றிபெறுகின்றார்கள். அப்பருவத்தை வீணடித்தவர்கள் தம் வாழ்க்கையில் தோல்வியடைகின்றார்கள். எனவே இளைஞர்கள் தமது இளமைப் பருவத்தைச் சீரான பாதையில் செலுத்த வேண்டும். பெரியவர்களின் ஆலோசனைப்படி தமது போக்கை அமைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் வெற்றிப்பாதையாக அமையும். அது இவ்வுலக வெற்றி மட்டுமல்ல மறுமையின் வெற்றியுமாகும்.
இவ்வுலகில் ஓர் இளைஞன் மூத்தோரின் ஆலோசனையை ஏற்று, அல்லாஹ்வுக்குப் பிடித்தமான முறையில் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டால், அவன் ஈருலகிலும் வெற்றிபெற்றவனாக மாறிவிடுகின்றான். ஆம். பின்வரும் நபிமொழி அதற்குச் சான்றாக அமைந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தனது (இறையாசனத்தின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பேருக்கு நிழல் (#அடைக்கலம்) அளிப்பான்: 1. நீதி மிக்க ஆட்சியாளர். 2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்... (நூல்: புகாரீ: 660)

இறைவணக்கத்திலேயே தனது இளமையைக் கழிக்கும் இளைஞர்கள் எத்தனை பேர்? பள்ளிவாசல்களோடு தொடர்புவைத்துக்கொள்ளும் இளைஞர்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு ஈருலகிலும் வெற்றி உள்ளதை இந்நபிமொழி சுட்டிக் காட்டுகிறது.

இளைஞர்களின் ஆற்றலைச் சமுதாயப் பெரியவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மஹல்லாவிலும் இளைஞர் மன்றம் அமைத்து, இளைஞர்களுக்குப் பொறுப்புகளை வழங்கி, அவர்களைச் சமுதாயச் சேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதை ஒவ்வொரு மஹல்லாவிலும் செய்யத் தொடங்கிவிட்டால் இளைஞர்கள் பாதை மாறிச் செல்வது தடுக்கப்பட்டு, இச்சமுதாயத்திற்கு அவர்களின் ஆற்றல் பயன்படும். அது மட்டுமல்ல அவர்களின் வாழ்க்கை ஈருலகிலும் வெற்றிக்குரியதாக மாறும் என்பதில் ஐயமில்லை. இளைஞர்கள் சமுதாயத்தின் அரண் என்பதை நம் சமுதாயப் பெரியவர்கள் எப்போது உணர்கிறார்களோ அப்போது இச்சமுதாயம் இன்னும் தழைக்கும்; தலைநிமிர்ந்து நிற்கும்.
==============================================






ஞாயிறு, 12 ஜனவரி, 2020

சனி, 11 ஜனவரி, 2020

புத்தாண்டில் புதிய சிந்தனை!



-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
========================
2020ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நாம் ஒவ்வொருவரும் நம் அகவை குறித்துச் சிந்திப்போம். இந்த ஆண்டின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்குப் பிறந்த நாள் வரலாம். இத்தகைய தருணத்தில், “அல்லாஹ் நம்மை இத்தனை ஆண்டுகள் ஆரோக்கியத்தோடு வாழ வைத்தானே அவனுக்காக நாம் என்ன செய்தோம்என்று சிந்தித்துப் பார்ப்பது அவனுடைய அடிமைகளாகிய நமக்கு அவசியமாகும். இவ்வளவு வயது வரை நம்மை வாழ வைத்த இறைவனுக்கு நன்றியுள்ள அடியாராக நாம் இருந்துள்ளோமா, அவனது திருப்தியைப் பெறுமளவிற்கு நம்முடைய வாழ்க்கை அமைந்திருந்ததா என்றெல்லாம் யோசிப்பது நம் கடமையாகும். ஏனென்றால் உன் அகவையை எவ்வாறு கழித்தாய்எனும் இறைவனின் கேள்விக்கு நாம் எவ்வாறு பதில் சொல்லப்போகிறோம்?
ஒவ்வொருவரும் தம் நேரத்தையும் காலத்தையும் வீணடித்துக்கொண்டுதானே இருக்கின்றார்கள்? எத்தனை பேர் திருக்குர்ஆன் ஓதுவதிலும் இறைவனை (திக்ர் செய்து) நினைவுகூர்வதிலும் கழித்துக்கொண்டிருக்கிறார்?

பெரும்பாலோர் தம் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் காலம் என்பது ஒரு பொழுதுபோக்கு; அவ்வளவுதான். காலம் என்பது விலைமதிக்க முடியாத ஒன்றல்லவா? அதன் மதிப்பை நாம் உணர வேண்டாமா? பல ஆண்டுகளைக் கடந்து ஈராயிரத்து இருபதில் காலடி வைத்துள்ள நாம் இதுவரை செய்த சாதனைகள் என்ன, சேவைகள் என்ன, பெற்ற கல்வி எவ்வளவு, கொடுத்த பயன்கள் எவ்வளவு என்று சிந்திப்பதும் அவற்றுக்கான பதில் எதிர்மறையாக இருந்தால், அதை நேர்மறையாக ஆக்கிக்கொள்வதற்கான வழியைத் தேடுவதும்தான் நாம் வாழும் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தைக் கொடுக்கும்.

ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம் என்றில்லாமல் நாம் மரணித்த பிறகும் நம்மைப் பற்றிப் பேசும் சில அடையாளங்களையாவது இவ்வுலகில் விட்டுச் செல்ல வேண்டும். அதுதான் நம் மறுமைக்கான வெற்றிக்கு வழியாகும். பெரும்பாலோரின் காலமும் நேரமும் வீணாகவே கழிந்துகொண்டிருக்கின்றன. உலக ஆசைகளும் தேவைகளும் அல்லாஹ்வின் சிந்தனையைவிட்டு அப்புறப்படுத்திவிட்டன. எதற்காகப் படைக்கப்பட்டோமோ அந்த நோக்கத்தை மறந்து, உலக வாழ்வே நிலையானதைப் போன்ற எண்ணத்தில் அதற்காகவே உழைத்துக் கொண்டிருக்கிறோம். குழந்தைகள் தம் பெற்றோரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இருப்பதைப்போல் நாம் அல்லாஹ்விடம் பொறுப்பை ஒப்படைத்தால் நிம்மதியாக வாழலாம். ஆனால் நாம் அல்லாஹ்விடம் நம்மை முழுமையாக ஒப்படைக்காமல் நம் தொழிலையும் கடையையும் வியாபாரத்தையுமே நம்பி வாழ்கிறோம். அதனால்தான் நாம் ஒவ்வொரு நாளும் போராட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.


புத்தாண்டில் காலடி வைத்துள்ள நாம் ஒவ்வொருவரும் புதிய கோணத்தில் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இத்துணைக் காலம் எவ்வாறு கழிந்ததோ, போகட்டும். இனிவரும் காலத்தில், நம்முடைய ஒவ்வொரு நிமிடமும் அல்லாஹ்வுக்கு உவப்பான தருணமாகக் கழிய வழிவகை என்ன என்பதைப் பற்றிச் சிந்திப்போம்.

அதாவது நம்முள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணியில் அல்லது பொறுப்பில் இருக்கிறோம். ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பைச் சரியாக நிறைவேற்றுகிறோமா என்று சுயமதிப்பீடு செய்வதுதான் நம்முடைய அடுத்த கட்ட இலக்கை நோக்கி நாம் துடிப்போடும் ஆர்வத்தோடும் செல்ல ஏதுவாக அமையும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், சென்ற ஆண்டில் சாதித்தது என்ன, இந்த ஆண்டில் சாதிக்கப்போவது என்ன என்று முடிவு செய்துகொள்ள வேண்டும்.

குர்ஆனை மனனம் செய்யும் ஒரு ஹாஃபிழ், சென்ற ஆண்டில் எத்தனை ஜுஸ்வுகள் மனனம் செய்துள்ளார் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்து, அதைவிட இந்த ஆண்டில் கூடுதலாக மனனம் செய்ய வேண்டும் என ஓர் இலக்கு நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி வேகமாகச் செல்ல முடியும். இலக்கே இல்லாமல் மனனம் செய்துகொண்டிருந்தால் ஆண்டுகள் கழிந்துகொண்டே இருக்குமே தவிர அதை விரைவாக முடிக்க முடியாது.

ஓர் ஆசிரியர், சென்ற ஆண்டு வரை தம்மிடம் கற்ற மாணவர்களுள் குறிப்பிடத்தக்க உயர் பதவிகளில் இருப்போர் எத்தனை பேர் என்பதைச் சிந்திக்க வேண்டும். இவ்வாண்டு முதல் இன்னும் சிறப்பான மாணவர்களை உருவாக்க உறுதிகொள்ள வேண்டும். தம்மிடம் கற்று, உயர் பதவிகளில் உள்ள மாணவர்களைத் தற்போதைய மாணவர்களிடம் எடுத்துக்கூறி, இதுபோன்ற உயரிய இடத்தை நீங்கள் பெற வேண்டுமென்ற உந்துதலையும் உத்வேகத்தையும் அவர்களின் நெஞ்சில் பதிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் உயர் பதவியை அடைகின்ற திறமைமிகு மாணவர்களை இன்னும் அதிகமாக உருவாக்குவேன்என்று உறுதியேற்க வேண்டும். அந்த உறுதிதான் இனிவரும் காலத்தில் அவர் உத்வேகத்தோடு செயல்படத் தூண்டும்.
ஒரு விவசாயி, தான் உற்பத்தி செய்த விளைபொருள்களின் அளவைக் கணக்கிட்டுப் பார்த்து, இதுவரை செய்த மகசூலைவிட, இவ்வாண்டு இன்னும் அதிகமான மகசூலைப் பெற வேண்டுமென்ற உந்துதலோடு செயல்பட உறுதியேற்க வேண்டும். மற்ற விவசாயிகளைவிட நான் மேம்பட்ட விவசாயியாக உயர்வேன் என்று சபதம் ஏற்க வேண்டும். அதுதான் அவரைப் புத்தாண்டில் புதிய இலக்கை நோக்கிப் பயணிக்கத் தூண்டும்.

ஒரு மனைவி, “என் கணவனின் அன்பைப் பெற நான் இதுவரை என்ன செய்தேன், அவருடைய அன்பைப் பெறும் வகையில் நான் நடந்துகொண்டேனாஎன்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தன் கணவருக்கான பணிவிடைகளில் குறைவு இருந்தால், அதைச் சரிசெய்துகொண்டு, அவரின் அன்பைப் பெற முயல வேண்டும். ஏனெனில் ஒரு பெண்ணைப் பொறுத்த வரை, “கணவனின் திருப்தியில்தான் அவள் சொர்க்கம் செல்ல முடியும்என்பதை நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். எனவே கணவனின் திருப்தியைப் பெறத் தன்னால் ஆன முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதுதான் அவள் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதற்கான அடையாளமாகும்.

கணவனாக உள்ள ஒருவன், தன் மனைவிக்காக அல்லும் பகலும் உழைத்தாலும், அவளை நல்ல முறையில் கவனித்துக்கொண்டாலும் அவளுடைய விருப்பம் என்ன, அவள் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்று தெரிந்துகொண்டு அதை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும். அவளிடம் மனம் விட்டுப் பேச நேரம் ஒதுக்க வேண்டும். கடந்த காலங்களைவிட இனிவரும் காலத்தில் இன்னும் அன்பாக அவளிடம் நடந்துகொள்வேன் என்று உறுதியேற்க வேண்டும். அதுதான் தம்பதியர் இருவரின் வாழ்க்கையை அன்புமயமாக்க உதவும்.

ஒரு மஹல்லா பள்ளிவாசல் பொறுப்பிலுள்ளோர் தம் மஹல்லா மக்களின் முன்னேற்றத்திற்காக இதுவரை நான் என்ன செய்தேன் என்று சிந்திக்க வேண்டும். இது வரை நான் செய்யாதது என்ன என்று யோசிக்க வேண்டும். என் பொறுப்பின்கீழ் உள்ளோர் அனைவரும் நல்லவிதமாக வாழ்கிறார்களா என்று ஆய்வு செய்ய வேண்டும். பின்னர், “என் மஹல்லா மக்கள் எல்லா வசதிகளையும் பெற என்னால் இயன்ற வரை பாடுபடுவேன்என்று உறுதியேற்க வேண்டும். ஒரு மஹல்லாவிற்குத் தேவையான பைத்துல்மால், மக்தப் மத்ரஸா, பெண்கள் மத்ரஸா, நூலகம், மஹல்லா மக்கள் கணக்கெடுப்பு, இளைஞர் மன்றம், சிறுவர் மன்றம் முதலானவற்றில் கவனம் செலுத்தி, மஹல்லாவின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட உறுதியேற்க வேண்டும். அதை நோக்கி விரைந்து செல்ல வேண்டும். தம்மோடு பிறரையும் சேர்த்துக்கொண்டு செயலாற்ற வேண்டும். அதுதான் இனிவரும் நாள்களில் சிறப்பாகவும் பொறுப்புணர்வோடும் செயல்பட ஒரு தூண்டுதலாக அமையும்.

ஓர் இமாமைப் பொறுத்த வரை, “என் கல்வியால் இச்சமுதாய மக்களுக்கு நான் இதுவரை என்னென்ன சேவைகள் செய்தேன்; என் கல்வியால் இம்மக்கள் என்ன பயன் பெற்றார்கள்என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் இதைவிடச் சிறப்பாக என் கல்வியால் இம்மக்கள் பயன்பெறும் வகையில் நான் செயல்படுவேன் என்று உறுதியேற்க வேண்டும். அதுதான் அவரைப் புத்துணர்வோடு செயல்படத் தூண்டும். மக்தப் மத்ரஸாவைத் திறம்பட நடத்துதல், இதுவரை அரபியில் குர்ஆனை வாசிக்கத் தெரியாத முதியவர்களுக்கு அதனைக் கற்பித்தல், சமுதாய மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தம் கல்வியை வழங்குதல், பெண்கள் பயான் ஏற்பாடு செய்தல் முதலானவை முக்கியமானவை. இன்னும் சீராக இச்சமுதாய மக்களுக்கு வழிகாட்டுவேன்; இச்சமுதாய மக்களுக்கு மிகப் பயனுள்ளவராக இருப்பேன்; சடங்கு சம்பிரதாயங்களில் மக்களை மூழ்கடிக்காமல் அறிவுப்பூர்வமாக மக்களைச் சிந்திக்கத் தூண்டுவேன்; அதற்கேற்ப என் செயல்பாடுகளை அமைத்துக்கொள்வேன்; ஏகத்துவச் சிந்தனையைப் பெருக்கும்விதத்திலான செயல்களைச் செய்யத் தூண்டுவேன்; அவர்களின் இறைநம்பிக்கை இங்குமங்கும் சிதறும்வண்ணம் செயல்பட மாட்டேன்; அத்தகைய பாதையை நோக்கி வழிகாட்ட மாட்டேன்என்று உறுதிகொள்ள வேண்டும். அத்தகைய உறுதிமொழிதான் அவர் தம் சமுதாய மக்களுக்குச் சீரான பாதையைக் காட்டவும் அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாகத் திகழவும் உத்வேகத்தைக் கொடுக்கும்.


ஒரு வியாபாரி இதுவரை சம்பாதித்துச் சேர்த்த பொருட்செல்வத்தையும் அதனை அவர் எவ்வாறு, எவ்வழியில் ஈட்டினார் என்பதையும் மீளாய்வு செய்துகொள்ள வேண்டும். நல்வழியில் சேர்த்தோமா, அல்வழியில் சேர்த்தோமாஎன்பதைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அல்வழியாக இருந்தால், அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவதோடு தர்மமும் செய்ய வேண்டும். நல்வழியாக இருந்தால், தொடர்ந்து அவ்வழியே செல்ல உறுதியேற்க வேண்டும். ஏனெனில் நீ எவ்வாறு சம்பாதித்தாய்? எவ்வாறு செலவழித்தாய்?” முதலான வினாக்களுக்கு அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும். எனவே சம்பாதிக்கும் ஒவ்வொருவரும் எவ்வழியில் சம்பாதித்தோம் என்பதை ஊன்றிப் பார்க்க வேண்டும். இனிவரும் காலங்களில் முறையான வியாபாரத்தில் ஈடுபடுவேன்; தடைசெய்யப்பட்ட (ஹராமான) வழியில் நான் ஒருபோதும் பொருளீட்ட மாட்டேன்; யாரையும் ஏமாற்ற மாட்டேன்; வட்டி வாங்க மாட்டேன்; அளவு-நிறுவையில் மோசடி செய்ய மாட்டேன்என்று சபதமேற்க வேண்டும்.

நம்பகத்தன்மையுள்ள வாய்மையான வியாபாரி நபிமார்கள், வாய்மையாளர்கள், இறைப்பாதையில் உயிர்த்தியாகம் செய்தோர் ஆகியோருடன் (சொர்க்கத்தில்) இருப்பார்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ: 1130) அத்தகைய வாய்மையாளர்களுடன் சொர்க்கத்தில் இடம்பிடிக்க வேண்டுமெனில் செய்யும் வியாபாரமும் தொழிலும் நேர்மையானதாக இருக்க வேண்டும். அதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்படி, பொறுப்பிலுள்ள ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பில் நேர்மையாக நடந்துகொண்டோமாஎன்பதை மீளாய்வு செய்து, இதைவிடச் சிறப்பாகவும் பொறுப்புணர்வோடும் நடந்துகொள்ள உறுதியேற்பதுதான் புத்தாண்டின் தொடக்கத்தில் நாம் செய்ய வேண்டிய முக்கியப் பணியாகும். எடுத்துக்கொண்ட உறுதிமொழியிலும் சபதத்திலும் உறுதியாக இருந்து அதனை நிறைவேற்ற முழுமுயற்சி செய்ய வேண்டும். அதுவே இனிவரும் காலத்தில் நாம் ஒவ்வொருவரும் புத்துணர்வோடும் புதுத்தெம்போடும் பணியாற்ற வழிவகுக்கும். கடந்து சென்றுவிட்ட காலங்களை எண்ணிக் கவலைப்படாமல் நிகழ்காலத்தில் எத்தகைய உத்வேகத்தோடு பணியாற்ற வேண்டும் என்று சிந்திப்பதே காலம் உணர்த்தும் பாடமாகும். ஒவ்வொரு நாளும் கழிந்து கொண்டிருந்தாலும் அடுத்தடுத்த நாள்கள் வந்துகொண்டேதான் இருக்கும். அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது நம் கையில் உள்ளது. காலம் கரைந்துவிடும்; அத்தோடு நம் ஆயுளும் அழிந்துவிடும். ஆனால் அக்காலத்தைப் பயன்படுத்தி நாம் செய்த நல்லறங்களே நம்மோடு இறுதி வரை வரும். அதற்காக உழைப்போம்; வெற்றிபெறுவோம்.
===============================









வெள்ளி, 10 ஜனவரி, 2020

திங்கள், 6 ஜனவரி, 2020

வெள்ளி, 3 ஜனவரி, 2020

புதன், 1 ஜனவரி, 2020

நூல் அறிமுகம்


==============


திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து ஓதுவது ஒரு சுகம் என்றால், அதனை தஜ்வீத் சட்டங்களைப் பேணி, இனிய தொனியில் ஓதுவது மற்றொரு சுகம். திருக்குர்ஆனை இனிய தொனியில் நிறுத்தி நிறுத்தி ஓதுமாறு அல்லாஹ்வும் அவனுடைய திருத்தூதரும் நமக்குக் கட்டளையிடுகின்றார்கள்.

தஜ்வீத் சட்டங்களைப் பேணி ஓத எத்தனையோ நூல்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் இதோ தாருல் ஹுதா ஒரு நூலை வெளியிட்டுள்ளது. எழுத்துகளின் பிறப்பிடம் குறித்த வண்ணப் படங்களையும் வெளியிட்டுள்ளது இந்நூலின் சிறப்பாகும். நம் பிள்ளைகளுக்கேனும் இந்த நூலை வாங்கிக் கொடுத்து அதன்படி ஓதுமாறு பழக்கலாம்.

இன்று திருக்குர்ஆனை இனிய குரலில் கேட்க எத்தனையோ காணொலிகள் கிடைத்தாலும் நம் பிள்ளைகள் அதேபோன்று இனிய தொனியில் ஓதுவதைக் கேட்டால் நம் மனம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவுண்டோ? அதற்கான நம்முடைய முயற்சி என்ன?

தஜ்வீத் சட்டங்களைப் பேணி, நம் பிள்ளைகள் அழகிய தொனியில் ஓத நம்மாலான முயற்சியைச் செய்வோம். இந்நூலை வாங்கிப் பயனடைவோம்.

நூல்: இல்முத் தஜ்வீத்
வெளியீடு: தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை.
விலை: 220 ரூபாய்.
பக்கங்கள்: 248
தொடர்புக்கு: 044-25247866, 9840174121

அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி
மணலி, சென்னை.
01.01.2020