புதன், 24 மார்ச், 2021

பெரிதாக ஆசைப்படு



Dr. மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
_______________

மனித மனம் இந்நீண்ட நெடிய நிலப்பரப்பைப்போல பரந்துவிரிந்து கிடக்கிறது. அதனுள் பல்வேறு ஆசைகள் புதைந்துகிடக்கின்றன. அதனால்தான் நாள்தோறும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இளைஞர்கள் முதல் முதியோர் வரை புதிய புதிய சாதனைகள் படைத்துக்கொண்டிருக்கின்றனர். மனிதன் இந்நிலப்பரப்பைத் தாண்டி சந்திரனுக்கும் செவ்வாய்க் கிரகத்திற்கும் விண்வெளிப்பயணம் செய்து கொண்டிருக்கிறான் என்றால் அது அவனது ஆசையின் வெளிப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும்.

 
மனித மனம் ஆசைகளால் நிரம்பியுள்ளன. ஒவ்வொரு நாளும் அதனுள் புதிய புதிய ஆசைகள்  பிறக்கின்றன. அவையே மனித மனத்தை உயிர்ப்போடு வைத்திருக்க உதவுகின்றன. இவ்விடத்தில் ‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்ற புத்தரின் போதனை உங்கள் உள்ளத்தில் தோன்றி மறையலாம். அது உண்மைதான். ஆனால் அந்த ஆசைகளால் கிடைத்த, அடைந்த பயன்களைத் தனக்காக மட்டுமே வைத்துக்கொண்டால்தான் ஆபத்து. மாறாக ஆசைகளின் பயனால் விளைந்தவற்றைப் பிறருக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றெண்ணி, அவற்றைப் பகிர்ந்தளித்தால் அந்த ஆசை வரவேற்கத்தக்கது. அதாவது நான் சொல்ல வருவது என்னவென்றால் நம் ஆசைகளால் கிடைத்த பயன்களை மக்களுக்குப் பயன்படும் விதத்தில் பகிர்ந்தளிக்கும் எண்ணம் கொண்டவர்களாக உருவாக வேண்டும். அதற்கேற்ப நாம் உள்ளத்தைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.  


ஒருவர் ஒரு சிறிய கடை வைத்துள்ளார். நான் இந்தக் கடையிலிருந்து சம்பாதித்து ஒரு பெரிய கடையைக் கட்ட வேண்டும். அதி-ருந்து சம்பாதிக்கிற பணத்திலிருந்து என்னால் இயன்ற வரை ஏழைகளுக்கும் தேவையுடையோருக்கும் வழங்க வேண்டும் என்றெண்ணுகிறார். அந்த ஆசையோடு  ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைக்கிறார் என்றால் அவருடைய ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாகவே கழியும். ஏனென்றால் அவர் ஒவ்வொரு நாளும் தம் இலக்கை நோக்கிப் பயணிக்கிறார். அவர்தம் உயர்ந்த எண்ணத்தை அடையவே உழைக்கிறார். அதனால் அல்லாஹ்வும் அவரது எண்ணத்தை அடையவும் நிறைவேற்றவும் உதவுகிறான். அவர் அவ்வாறே சம்பாதித்து மேன்மேலும் வளர்ச்சியடைவதோடு தாம் சம்பாதித்த பணத்திலிருந்து ஏழைகளுக்கு உதவி செய்கிறார்; வாரி வழங்குகிறார். 


ஓர் இளைஞன் தன் இளமைப்பருவத்தில் நன்றாகப் படிக்க ஆசைப்படுகிறான். இறுதி வரை படித்து, உயர் மதிப்பை அடைந்து, உயர் பதவியைப் பெற்று அதன்மூலம் தன்னால் இயன்ற வகையில்  மக்கள் சேவையாற்ற வேண்டும் என்று எண்ணுகிறான். அதனால் அவன் ஒவ்வொரு நாளும் தன் இலக்கை நோக்கிப் பயணிக்கிறான்; ஆர்வத்தோடு படிக்கத் தொடங்குகிறான். கடிகாரம் பார்க்காமல்,  சிரமங்களைப் பொருட்படுத்தாமல் படிக்கத் தொடங்கிவிடுகின்றான். ஒவ்வொரு படியாக முன்னேறிச் செல்கிறான். இறுதியில் அவன் கொண்டிருந்த இலக்கை அடைந்துவிடுகின்றான். அவன் தன் மனத்தில் ஆசை கொண்டதைப்போல் உயர்பதவியை அடைந்து மக்கள் சேவையாற்றத்  தொடங்கிவிடுகின்றான். அதனால் அவன் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாகக் கழிக்கிறான். 


ஒரு மாமியாரின் கண்காணிப்பின்கீழ் வாழ்கிற ஓர் இல்லத்தரசி தன் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாகக் கழிக்க எளிய வழி உண்டு. அவள் அதிகமான வேலைகள் செய்ய ஆசைப்பட வேண்டும்; நல்லதொரு மருமகளாக, இந்த ஊருக்கே ஒரு முன்னோடியாகத் திகழ வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும். இந்த இரண்டும் இருந்தால் அவளது இல்வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாகவே கழியும். 


அத்தகைய எண்ணம் கொண்டவள் மாமியாரின் கட்டளைகளுக்குப் பணிந்து அவள் மனதைக் கவர முனைவாள். மாமியார் வாய் தவறிப் பேசிய வார்த்தைகளை வன்மமாகச் சேர்த்து வைக்காமல் ஒதுக்கிவிடுவாள். அவள் உத்தரவிடுவதற்கு முன்னரே அதைச் செய்து முடித்துவிடுவாள். மிகுந்த பொறுமையோடு இருப்பாள். ஒவ்வொரு நாளும் தன் இலக்கை நோக்கிப் பயணிப்பாள்.


கணவனிடம் மகிழ்ச்சியாகப் பேசுவதோடு, தன் கணவன் சார்ந்த உறவினர்களோடு அன்பாகப் பழகி அவர்களின் உள்ளங்களில் இடம் பிடிக்க முயல்வாள். அவர்களிடம் இனிமையாகப் பேசத் தொடங்குவாள். அண்டை வீட்டாரிடம் இணக்கமாகப் பழகுவாள். தேவையுடையோருக்கும் ஏழைகளுக்கும் தேவையான உதவிகளைச் செய்வாள். ஆக ஒவ்வொரு நாளும் தன்னுடைய மதிப்பைக் கூட்டும் வகையில் தன் நடவடிக்கைகளை மாற்றியமைத்துக் கொள்வாள். அதனால் அவளுடைய ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாகவே கழியும். காண்போரெல்லாம் அவளைப் புகழ்ந்து பேசுவார்கள். அவளுடைய சுறுசுறுப்பையும் துள்ளலான உள்ளுணர்வுகளையும் போற்றிப் பேசிக்கொள்வார்கள்.


அதாவது நாம் எப்போதும் ஆசைப்பட வேண்டும். விசாலமாகவும் உயர்வாகவும் நம் ஆசைகள் இருக்க வேண்டும். அத்தோடு நம் ஆசைகளால் கிடைக்கிற பயன்களையும் பலன்களையும் பிறருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். நாம் எதை ஆசைப்படுகிறோமோ அதை நோக்கியே நம் பயணம் அமைகிறது. இறுதியில் நாம் அதையே அடைகிறோம். எனவே நம்முடைய ஆசைகள் ஏன் சிறியனவாக இருக்க வேண்டும்? பெரியனவாகவும் உயர்வானவையாகவும்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் அதை அடைவதிலேயே நம்முடைய காலம் கழியும். அதை நோக்கியே நம் மனது நம்மை அழைத்துச் செல்லும்.


ஒருவன் செல்வத்தின்மீது ஆசை கொள்வதால்தான் அவனால் செல்வத்தைச் சேர்க்க முடிகிறது. ஒருவன் கல்விமீது ஆசை கொள்வதால்தான் அவனால் கல்விச் செல்வத்தை அடைய முடிகிறது. ஓர் இளைஞன் நன்றாகப் படித்து ஒரு கல்லூரியை அல்லது ஒரு பல்கலைக் கழகத்தை நிறுவ வேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஒவ்வொரு நாளும்  அந்தக் கனவோடும் ஆசையோடும் படித்து முன்னேறுகிறான். ஒவ்வொரு நாளும் தன் இலக்கை நோக்கியே பயணிக்கிறான். அவ்வாறு இலக்கை நோக்கிப் பயணிப்பதால் இடையிடையே அவன் எதிர்கொள்கிற சங்கடங்கள், துன்பங்கள், சிரமங்கள், அவனுடைய கண்களுக்குத் தெரிவதில்லை. இறுதியில் அவன் தன் இலக்கை அடைந்து, தான் நினைத்ததைப்போல் கல்லூரியை உருவாக்கத் தொடங்கிவிடுகின்றான். அதற்கான கால்கோள் விழாவை நடத்திவிடுகிறான். அப்போது அவன் அடைகின்ற மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. 

அதன்பிறகு அதைக் கட்டி முடிக்கப் பாடுபடுவது அதை மேம்படுத்த உழைப்பதிலுமே காலம் வேகமாகச் சென்று கொண்டிருக்கும். அதனால் அவனுடைய ஒவ்வொரு நாளும் உயிர்ப்போடும் உற்சாகத்தோடும் கழிந்துகொண்டிருக்கும். 
இவ்வுலகில் ஒருவர் செய்கின்ற நல்லறங்களின் அடிப்படையிலும் அல்லாஹ்வின் கருணையின் அடிப்படையிலும்தான் ஒரு முஸ்லிம் சொர்க்கத்தை அடைய முடியும். அப்படியிருக்கும்போது உத்தமத் திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொர்க்கத்தில் உயர்வான சொர்க்கத்தைக் கேட்குமாறு கூறியுள்ளார்கள். நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால், ஃபிர்தவ்ஸ் என்னும் (சொர்க்கத்தின்) படித்தரத்தையே கேளுங்கள்; ஏனெனில், அதுவே சொர்க்கத்தின் மிகச் சிறந்த படித்தரமும் மிக உயர்ந்த படித்தரமும் ஆகும்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 2790)


அதாவது மிக உயர்ந்ததை ஆசைப்படச் சொல்லியிருக்கிறார்கள். ஏனெனில் அந்த உயர்ந்த சொர்க்கத்தை அடைய நிறைய நல்லறங்கள் செய்ய வேண்டிய தேவை ஏற்படும். அதிகமான நல்லறங்கள் செய்ய வேண்டுமென்ற உந்துதல் எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் நபியவர்கள் அவ்வாறு கூறினார்கள். 


மற்றொரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவ்வாறு கூறினார்கள்: ஆதமின் மகனுக்கு (-மனிதனுக்கு) இரு நீரோடைகள் (நிறையச்) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது... (நூல்: புகாரீ: 6436) 

மரணம் வரை அவனது ஆசை தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.  ஆனால் அந்த ஆசை மூலம் விளைகின்ற பயன்களைப் பிறருக்குப் பகிர்ந்தளிக்கும்போது அது தடை செய்யப்பட்ட ஆசை அன்று என்பதைப் பிற நபிமொழிகள் மூலம் அறியலாம். அதாவது ஒருவன், தனக்குக் குவியல் குவியலாகச் செல்வம் இருந்தால் நான் அவற்றை இறைவழியில் செலவிட்டு மிக அதிகமான நன்மைகளை அடைந்துகொள்வேன் என்று ஆசைப்பட்டால் அது வரவேற்கத்தக்க ஆசையாகும். 


இதே கருத்தில்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: ‘எனக்கு ஒரு குவியல் தங்கம் இருந்தாலும், கடனுக்கான தொகையை மட்டும் எடுத்து வைத்துவிட்டு மற்றெல்லாவற்றையும் மூன்று நாள்களுக்குள் செலவிட்டுவிடுவேன்.’ ஆக செல்வம் சேர்க்க நினைப்பது தவறன்று. அதைத் தனக்கேயுரியது எனச் சேர்ப்பதுதான் தவறு. அதுதான் ஆபத்தான செல்வம். அதுபோலவே கல்வியும். கல்வியைத் தேடித் தேடிக் கற்று, கற்றதன்மூலம் பிறருக்குப் பயனளிக்க வேண்டும்; கற்பிக்க வேண்டும். அத்தகைய கல்வியே சிறந்த கல்வி. 


கல்வியும் செல்வமும் பிறருக்குப் பயன்படும் வகையில் தேடிக்கொள்ள வேண்டும்; ஈட்ட வேண்டும். எனவே பெரிய பெரிய ஆசைகளை மனத்தில் கொள்வோம். அவற்றை அடைய முறையாகத் திட்டமிடுவோம். அதன்மூலம் நம் வாழ்க்கையை உயிர்ப்போடு ஆக்கிக்கொள்வோம்.  
=======================

சனி, 13 மார்ச், 2021

கடன் வாங்காதீர்

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
___________

பெரும்பாலும் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்கள் பிறருக்குக் கொடுத்துதவும் பொருளாதார உதவியே கடன் எனப்படுகிறது. இது பெரும்பாலும் வட்டிக்காகத்தான் வழங்கப்படுகிறது. சும்மா யாரும் கொடுப்பதில்லை.  “கடன் அன்பை முறிக்கும்” என்ற முதுமொழி கடன் வாங்கக்கூடாது என எச்சரிக்கிறது. வாங்கிய கடனைத் திரும்ப ஒப்படைத்தல் குறித்தும், ஒப்படைக்காதவரை எச்சரித்தும் நபிமொழிகள் உள்ளன. இறந்துபோனவரின் பிரேதம் இறுதித் தொழுகைக்காகக் கொண்டுவரப்பட்டபோது, “இவர்மீது கடன் இருக்கிறதா” என்று கேட்டு, ஆம் என்றபோது “அவருக்கு நான் தொழவைக்க மாட்டேன்” என்று கூறினார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். பின்னர் ஒருவர் அதற்குப் பொறுப்பேற்றுக்கொண்டபின் அவருக்கு இறுதித் தொழுகை நடத்தினார்கள். 


கடன் எப்போது வாங்கலாம்? அடுத்த வேளை உணவுக்குப் பணமில்லை; நிர்ப்பந்த நிலை, மருந்து வாங்கப் பணமில்லை போன்ற தவிர்க்க இயலாத நிலையில்தான் கடன் வாங்க வேண்டும். ஆனால் இன்று மக்கள் எதற்கெடுத்தாலும் கடன் வாங்குகிறார்கள். ஆடம்பரப் பொருள்களை வாங்க, வீடு கட்ட, வாகனங்கள் வாங்க, தங்க நகை வாங்க, மொபைல் வாங்க என எல்லாவற்றிற்கும் கடன் வாங்குகிறார்கள். அதாவது ஒரு குடும்பத்தில் ஓர் ஆண் நல்லவிதமாகச் சம்பாதித்து மாதந்தோறும் சம்பளம் பெறுபவராக இருந்தால் அவன் கடன் வாங்கத் தகுதியானவனாகக் கருதப்படுகிறான். அவனை நம்பி கடன் கொடுக்கப்படுகிறது. அல்லது அவனைத் துரத்தித் துரத்தி கடன் கொடுக்கப்படுகிறது.

 
நன்றாகச் சம்பாதிக்கிற ஒருவன் கடன் வாங்கும்போது கணக்குப் போடுகிறான். குறிப்பிட்ட இந்த இடத்தில் இரண்டடுக்கு வீட்டைக் கட்டினால் நாம் ஒரு வீட்டில் இருந்துகொண்டு, மீதி வீடுகளை வாடகைக்கு விடலாம். வாடகைதாரர்களிடம் அட்வான்ஸ், வாடகை ஆகியவற்றை வாங்கி, வங்கிக் கடனை அடைத்துவிடலாம் என்றெல்லாம் எண்ணிக்கொள்கிறான். நினைத்தபடி கடன் வாங்கி வீட்டைக் கட்டி முடிக்கிறான். ஆனால் அவன் எண்ணியபடி வாடகைக்கு ஆள்கள் வரவில்லை. ஒரு மாதம் கழிந்தது. இரண்டு மாதங்கள்... ஆறு மாதங்கள் கடந்தன. வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் திணறத் தொடங்குகிறான். சில மாதங்கள் எப்படியோ கட்டினான். பிறகு சில மாதங்கள் கட்டாமல் விட்டுவிட்டான். அவ்வளவுதான். இப்போது கட்டாமல் விட்ட பணத்திற்கான வட்டியும் சேர்ந்துகொண்டு அவனை வாட்டியது; அவனுடைய சுமை கூடியது. இதுவரை கட்டிய பணத்தையெல்லாம் மீண்டும் ஒரு தடவை கட்டுவதைப் போன்ற துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. மிகவும் சிரமப்பட்டு, கட்டிக்கொண்டே வந்தான். கடைசியில் அவனால் பணம் கட்ட இயலவில்லை.  எவ்வளவு கட்டினாலும் அசல் தொகை குறைந்தபாடில்லை. 


இச்சூழ்நிலையில் அவன் ஒரு முடிவுக்கு வந்தான். முக்கியமான இடத்தில் உள்ள அந்த வீட்டை விற்றுவிட்டு அதில் கிடைக்கிற பணத்தில் கடனை அடைத்துவிட்டு, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் குறைந்த விலையில் ஒரு வீடு கட்டுகிற அளவிற்குச் சிறியதோர் இடத்தை வாங்கிக்கொள்ளலாம் என முடிவெடுத்தான். ஆக தேவையின்றி வட்டிக்குக் கடன் வாங்கியதால் அதில் அல்லாஹ்வின் உதவி கிடைக்காமல் போய்விட்டது. அதே நேரத்தில் அவன் வட்டியிலிருந்து மீள நினைத்தான். எனவே தெளிவான முடிவெடுத்து, அவ்வீட்டை விற்று, உடனடியாகக் கடனை அடைத்துவிட்டு, இப்போது நிம்மதியாக வாழ்கிறான். அதாவது நாம் நம்முடைய வருமானத்திற்குள் வாழ்க்கையைத் திட்டமிட்டு அமைத்துக்கொண்டால் நிம்மதியாக வாழலாம் என்பதையே மேற்கண்ட நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது. 


இன்று மக்கள்மீது கடன் வாங்கும் பழக்கம் கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது. விளம்பரங்களாலும் செல்பேசி வாயிலாகவும் வலிந்து வலிந்து பேசப்படுகிறது. கடன் வாங்க மூளைச் சலவை செய்யப்படுகிறது. இருப்பினும் நீங்கள் கடன் வாங்கிவிடாதீர்கள். உங்கள் தேவைகளை உங்கள் வருமானத்திற்குள் சுருக்கிக்கொண்டால் நிம்மதியான வாழ்க்கை வாழலாம். பிறர் இன்னின்ன பொருள்களை வாங்கிவிட்டார்கள்; நாமும் வாங்கவேண்டுமென நினைக்காதீர்கள். நீங்கள் உங்கள் வருமானத்திற்குள் திட்டமிட்டு வாழ்க்கை நடத்தினால் யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை; யாருக்கும் அஞ்சி ஓடி ஒளிய வேண்டியதில்லை; தலைநிமிர்ந்து நிம்மதியாக வாழலாம்.

 
நீங்கள் எதையேனும் வாங்க விரும்பினால் அப்பொருளுக்கான பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேருங்கள்.  அப்பொருளுக்கான பணம் சேர்ந்ததும் அதனை வாங்கிக்கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் நீங்கள் யாருக்கும்  கடன்பட வேண்டியதில்லை. நிம்மதியான வாழ்க்கையைத் தொடரலாம். ஆனால் உங்கள் நிம்மதியான வாழ்க்கையைக் குலைப்பதற்காகத்தான் கடன் வாங்கும் பழக்கம் ஊக்குவிக்கப்படுகிறது. கடன் வாங்கத் தூண்டப்படுகிறது. கடன் வேண்டுமா? என்று உங்கள் செல்பேசிக்கு அழைப்புவிடுக்கப்பட்டு, உங்கள் ஆசை தூண்டப்படுகிறது. 


கடன்தான் சிரமமின்றிக் கிடைக்கிறதே என்பதற்காக வாங்கிவிட்டால் அவ்வளவுதான். அதனைத் திரும்பச் செலுத்துவதற்குப் பாடாய்ப்பட வேண்டும்; ஓடியோடி உழைத்து ஓடாய்த் தேய வேண்டும். அதைக் கட்ட முடியாமல் போனால், கடன் கொடுத்தவன் நம் வீட்டு வாசலில் வந்து நின்றுகொண்டு, கண்டபடி திட்டுவதைக் காதுகொடுத்துக் கேட்க முடியாமல் கூனிக் குறுகி நிற்க வேண்டும். அது மட்டுமல்ல அக்கம் பக்கத்திலுள்ளோரிடம் நம்முடைய மானம், மரியாதை காற்றில் பறக்கும். 


அல்லாஹ் திருமறைக் குர்ஆனில், “அல்லாஹ்வுக்காக அழகான முறையில் கடன் கொடுங்கள்” (73: 20) என்று கூறுகின்றான். ‘அழகிய கடன்’ என்பது சிரமப்படுவோருக்கு வட்டியில்லாமல் நன்மையை எதிர்பார்த்து வழங்குவதாகும். ஆனால் இன்று வழக்கத்தில் உள்ளதோ வட்டிக்குக் கடன் என்பதே. முஸ்லிம்களும் வட்டி வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்ற கசப்பான உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். கடன் கொடுக்கும்போதே வட்டிப்பணத்தைப் பிடித்துக்கொண்டுதான் கொடுக்கின்றார்கள். அங்கிருந்தே தொடங்கிவிடுகிறது வட்டி. உரிய காலத்தில் ஒப்படைக்காவிட்டால் வட்டி கட்ட வேண்டும். பின்னர் அப்படியே அது தொடரும்.

 
இன்று இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கியதன் காரணத்தால் அதற்கான வட்டியைக்கூடக் கட்ட முடியாமல், மீண்டும் கடன் வாங்கி வட்டியைக் கட்ட வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அத்தோடு உலக வங்கி இடுகின்ற கட்டளையை அப்படியே கைகட்டி வாய்பொத்திக் கேட்டுக்கொள்ள வேண்டும். அதாவது உங்கள் நாட்டில் இன்னின்ன தொழிற்சாலைகளும் அணு உலைகளும் அமைய உள்ளன. அவற்றிற்கு வேண்டிய நிலத்தையும் இன்னபிற வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டால் அதை அப்படியே ஏற்க வேண்டும். ஏனென்றால் நாம் கடன்பெற்றுள்ளோம். அணுஉலையால் எங்கள் மக்களுக்கு மிகுந்த ஆபத்து ஏற்படலாம். எனவே எங்கள் நாட்டில் அணுஉலை அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று சொல்ல முடியாது. “நிபந்தனையற்ற அனுமதி வழங்கு; இல்லையேல் வாங்கிய கடனை நிறைவேற்று” என்று சொல்லும். 


இது உலக வங்கியில் தொடங்கி, பெரும் பெரு முதலாளிகள், தனிமனிதர்கள் உள்பட அனைவருக்கும் பொருந்தும். தனி மனிதன் ஒருவனிடம் கடன் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்த முடியவில்லையென்றால், “உன் மகனை என்னிடம் வேலைக்கு அனுப்பு. கடனைத் திருப்பிச்  செலுத்துகிற வரை வேலை செய்யட்டும்” என்பான். வக்கிரப்புத்தியுடையோர் சிலர் “உன் மனைவியை என்னோடு அனுப்பு” என்பார்கள். எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள வேண்டும். அங்கே அவர்களுக்கெதிராகச் சினம்கொள்ள இயலாது. ஏனென்றால் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த இயலாததால் இப்படியெல்லாம் அவமானப்படத்தான் வேண்டும். 


கடன் கொடுத்தவர்கள் கடனை வசூலிக்கும்போது மேற்கொள்கிற கடினப்போக்காலும் மீண்டும் மீண்டும் வட்டி வளர்ந்து வருவதை அடைக்க முடியாமலும் நாள்தோறும் நெக்குருகிப் போய்விடுகிறார்கள். கூனிக் குறுகி, மனமுடைந்து இறுதியில் தம் வாழ்க்கையைத் தூக்குக் கயிற்றுக்கு இரையாக்கிவிடுகிறார்கள். தற்காலத்தில்  நாள்தோறும் வட்டியின் கொடுமையால் சிலர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொள்கிற செய்தியை நாளிதழ்களில் படிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. கடன் அன்பை முறிக்கும் என்பது மாறி கடன் உயிரையே குடிக்கும் என்ற புதுமொழி பிறந்துவிட்டது. 


இருபத்தைந்தாயிரம் ரூபாய் மாதச் சம்பளம் பெறுகிற ஒருவன் தன் வாழ்க்கையை நிம்மதியாக நடத்தலாம்; எந்தவிதச் சிரமுமின்றி நிம்மதியாக வாழலாம். ஆனால் வட்டித் தொழில் செய்வோர் அவனை நிம்மதியாகவோ மகிழ்ச்சியாகவோ வாழ விடமாட்டார்கள். எப்படியாவது அவனைக் கடன் வாங்க வைத்துவிடுவார்கள். அதன்பின் அவன் அந்தக் கடனை அடைக்க ஓடோடி உழைத்து, ஓவர்டைம்-மிகைநேரப் பணி செய்து, உடம்பைக் கெடுத்துக்கொண்டு, ஒவ்வொரு நாளும் பதற்றத்துடனேயே நிம்மதியற்ற வாழ்க்கை வாழத் தொடங்கிவிடுவான்.


சற்று நிலையாக இல்லாவிட்டால்,  “கடன் வாங்கவே மாட்டேன்; குறிப்பாக வட்டிக்குக் கடன் வாங்கவே மாட்டேன்” என்பதில் உறுதியாக இல்லாவிட்டால் நம்முடைய நிம்மதியான வாழ்க்கை கெட்டது என்று பொருள். அதனால்தான் இன்று ஐம்பதாயிரம் சம்பளம் பெறுகிறவர்கள்கூட நிறையக் கடனை வைத்துக்கொண்டு நிம்மதியான வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர். 


இன்று பெண்களும் கடன் வாங்கத்  தொடங்கிவிட்டனர். ஆம் மகளிர் சுய உதவிக் குழு நடத்துகிற பெண்கள்  வங்கியில் கடன் பெறுகிறார்கள். அங்கு கிடைத்ததுபோக, தனி மனிதர்களிடமும் கடன் வாங்குகின்றார்கள். தொழில் தொடங்குகிறார்கள். தொழிலோ வியாபாரமோ நன்றாக நடைபெறாத பட்சத்தில் வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலை ஏற்படலாம். அப்போது அவர்கள் தம் நிம்மதியை இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.  வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வேண்டுமென்பதற்காகக் கூடுதல் நேரம் உழைக்கிறார்கள். குடும்ப வாழ்க்கையை இழக்கின்றார்கள். வட்டி கட்ட முடியாத பெண்கள் தம் கற்பையும் இழக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படுகிறது.


அதாவது குடும்ப வறுமையில் சிக்கியவர்கள், கணவனை இழந்தோர், கணவனால் கைவிடப்பட்டோர் ஆகிய பெண்கள் மகளிர் சுய உதவிக்குழுவில் சேர்கிறார்கள். வட்டிக்குக் கடன் வாங்கி ஏதாவது தொழில் தொடங்குகின்றார்கள். அத்தகைய பெண்கள்தாம் இவ்வாறு படாதபாடுபட  வேண்டியுள்ளது. ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு வலியும் வேதனையும் மிக்கதாகவே கழிகிறது. இதுபோன்ற குழுக்களில் முஸ்லிம் பெண்களும் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.  


ஆகவே வட்டிக்குக் கடன் என்பதை முஸ்லிம் ஆண்களும் பெண்களும் முற்றிலுமாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். வீட்டு லோன், கார் லோன், நிலம் வாங்க லோன் என்று பட்டியல் நீள்கிறது. இவை எதிலும் சிக்கிக்கொள்ளாமல் வட்டி எனும் பாவத்தில் மூழ்கிவிடாமல்-அதன்மூலம் அல்லாஹ்வின் கோபப் பார்வைக்கு ஆளாகிவிடாமல் ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணும் ஆணும் தத்தம் ஈமானை-இறைநம்பிக்கையைக் காத்துக்கொள்வது கடமையாகும்.


 ஆண்களின் பொருளாதார நிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்பச் செலவு செய்து, அதிலேயே சிலவற்றைச் சேமிப்பது இறைநம்பிக்கைகொண்ட பெண்களின் புத்திசாலித்தனமாகும். கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழப் பழகிக்கொள்ள வேண்டும். அத்தகைய நற்பேற்றையும் நிம்மதியான வாழ்க்கையையும் நல்லோன் அல்லாஹ் நல்குவானாக.
====================