சனி, 30 மார்ச், 2024

உள்பள்ளியில் சத்தமிட்டு அறிவிப்புச் செய்ய அனுமதிக்கலாமா?


காணாமற்போன ஒரு பொருளைப் பள்ளிவாசலுக்குள் தேடிக்கொண்டிருப்பவரின் குரலைச் செவியுறுபவர் "அல்லாஹ் அதை உனக்குத் திரும்பக் கிடைக்காமல் செய்வானாக!'' என்று கூறட்டும். ஏனெனில், பள்ளிவாசல்கள் இதற்காகக் கட்டப்படவில்லை என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்: 981)

 

ஒருவர் தமக்குரிய பொருளைத் தொலைத்துவிட்டு, அதைப் பள்ளிவாசலில் சத்தமிட்டுத் தேடுவதற்கே தடை செய்யப்பட்டுள்ளது என்றால், ஜமாஅத் தொழுகை முடிந்தவுடன், தாமதமாக வந்தோர் எழுந்து தொழுதுகொண்டிருக்கும் நிலையில், எந்த அனுமதியுமின்றி, ஒருவர் எழுந்து தம் குறையைச் சொல்லி, “உங்களின் உதவியை நாடி வந்திருக்கிறேன்; எனக்குத் தாராளமாக உங்கள் ஸதகா, ஸகாத்தை வழங்குங்கள்” என்று சத்தமிட்டு அறிவிப்புச் செய்கிறார். இதைப் பெரும்பாலான இமாம்களும் நிர்வாகிகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

 

அவர்களுள் யாரும் இந்த ஹதீஸைப் படிக்கவில்லையா? அல்லது நமக்கேன் வம்பு என்று அமைதி காக்கின்றார்களா?

 

தாமதமாக வந்தோர் எஞ்சிய தொழுகையைத் தொழுதுகொண்டிருக்கும்போது இவ்வாறு சத்தமிட்டு அறிவிப்புச் செய்வது அவர்களுக்கு எவ்வளவு இடைஞ்சலாகவும் தொல்லையாகவும் இருக்கும் என்பதை யாரேனும் சிந்தித்ததுண்டா?

 

தொழுது கொண்டிருக்கும்போது அலைபேசி சிணுங்கினாலே முகம் சுளிக்கின்ற நாம், இவ்வளவு சத்தமிட்டு அறிவிப்புச் செய்வோரை வெறுமனே வேடிக்கை பார்ப்பது சரியா?

 

இனியேனும் இத்தகைய அறிவிப்பை உள்பள்ளியில் அனுமதிக்காமல் நிர்வாகிகள் அதற்குரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவோம்.

பின்குறிப்பு: சில பள்ளிகளில் அத்தகைய கட்டுப்பாடு உண்டு.

 

அன்புடன்

நூ. அப்துல் ஹாதி பாகவி

30 03 2024

===========

புதன், 27 மார்ச், 2024

எழுத்தாளரும் பேச்சாளரும்...


-------------------------------------

எங்கள் மத்ரஸாவில் இவ்வாண்டு சிறப்பு மலர் ஒன்று வெளியிட உள்ளோம். அதற்கு உங்கள் கட்டுரை ஒன்று வேண்டும் என்று கேட்டனர். சில நாள்கள் குறிப்பெடுத்து பல மணி நேரங்கள் செலவழித்து, அந்தக் கட்டுரையை எழுதி முடித்து, அதைத் தட்டச்சு செய்து, மின்னஞ்சலில் அனுப்பி வைத்தோம்.

பிறகு அந்த மத்ரஸாவின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சிறப்புப் பேச்சாளர்கள் அழைக்கப்பட்டார்கள். அவர்கள்  உரையாற்றினார்கள். இடையில் அந்தச் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. அந்த மலர் குறித்துப் புகழ்ந்து பேசப்பட்டது. விழா முடிந்தது. பேச்சாளர்களுக்கு உரிய முறையில் அன்பளிப்புத் தொகைகள் வழங்கப்பட்டன. எல்லோரும் சென்றுவிட்டார்கள்.

அந்தச் சிறப்பு மலரில் கட்டுரை எழுதிய நாற்பது எழுத்தாளர்களை அந்த மத்ரஸாவின் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. அவர்களுள் நானும் ஒருவன்.

பின்குறிப்பு: மிக அரிதாகச் சில மத்ரஸாக்கள் எழுத்தாளர்களுக்கு அன்பளிப்புத் தொகை வழங்குவதுண்டு.

அன்புடன்

நூ. அப்துல் ஹாதி பாகவி

27 03 2024

===========


புதன், 20 மார்ச், 2024

மக்களின் அழுக்குகள்

 

---------------------------

முன்குறிப்பு: பெறத் தகுதியுடையோருக்கு இந்தக் கட்டுரை பொருந்தாது.

 

தர்மப் பொருள் (ஸகாத்) முஹம்மதின் குடும்பத்தாருக்குத் தகாது. (ஏனெனில்,) அவை மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள்தாம்'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்: 1945)

 

பாக்கியாத்தில் நாங்கள் பயின்ற காலத்தில், ‘ஏற்பது இகழ்ச்சி என்று எங்களின் ஆசிரியர்கள் பலர் எங்களுக்குப் போதித்திருந்தாலும் மேற்கண்ட இந்த நபிமொழியை, அப்துல் ஹமீது ஹஜ்ரத் (பாக்கியாத்தின் தற்போதைய முதல்வர்) அவர்களின் வாயிலிருந்துதான் முதன்முதலாகக் கேட்டோம். ஸகாத் என்பது ஓர் அழுக்குஎன்பதும் கை நீட்டுவது இகழ்ச்சிஎன்பதும் எங்கள் மனங்களில் பதிந்துவிட்டது.

 

 ‘மக்களின் அழுக்குகள்என்பதுதான் நான் அழுத்தமாகச் சொல்ல வேண்டிய செய்தி. ஸகாத் கடமையாகியும் அதை வழங்காமல்  கஞ்சத்தனம் செய்தவர்கள், மறுபக்கம் அதையெல்லாம் மருத்துவமனையின் பில்-லுக்காகச் செலுத்துவதைப் பார்த்தபின்னர்தான் அந்த நபிமொழியின் பொருள் புரிந்தேன்;

அந்த அழுக்குகளெல்லாம் தோல்நோயாக, சொறியாக, சிரங்காக இன்னும் பற்பல நோய்களாக வெளிப்பட்டதைப் பார்த்தபோதுதான் உண்மை தெளிந்தேன்.

 

அதுபோலவே கடமையான ஸகாத்தை உரிய முறையில் வழங்காத செல்வர்களையும் பார்த்தேன். அவர்கள் தாம் சேர்த்துவைத்த சொத்துகள் அனைத்தையும் இறுதியில் மருத்துவமனையில் அள்ளிக்கொடுத்துவிட்டுத்தான் மரணமடைந்தார்கள். அத்தோடு அங்கு நீண்ட காலமாகத் துன்பத்திற்குள்ளானார்கள். அத்தகையோரிடம் அல்லாஹ் தன் கணக்கை முடிக்காமல் மரணிக்க விட்டுவிடுவதில்லை என்பதையும் அறிந்துகொண்டேன்.

 

ஒருவரின் செல்வம் அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவதால்தான் அதை ஸகாத் என்கிறோம். அந்த அழுக்குகள் யாருக்குச் சேர வேண்டும்? தகுதியுடையோருக்குச் சேர வேண்டும். தகுதியில்லாதோர் பெற்றால் அவர் அழுக்குகளை உண்கிறார் என்று பொருள். அழுக்குகளைச் சாப்பிடுவோருக்கு நோய் வரவே செய்யும். அதேநேரத்தில் ஏழைகளுக்கு அது வாழ்வாதாரம் ஆகும். அதாவது குளத்தில் குளிக்கிறபோது நம் கால்களில் உள்ள அழுக்குகளை மீன்கள் உண்ணும்; அது மீன்களுக்கு உணவு; நமக்கோ அழுக்கு. அதுபோலவே ஸகாத் என்பது செல்வர்களுக்கும் தகுதியற்றோருக்கும் அழுக்கு; அது அவர்களுக்குத் தகாது; ஏழைகளுக்கோ அது வாழ்வாதாரம் ஆகும். 

 

செல்வர்கள் தம் செல்வத்திற்குரிய ஸகாத்தை-அழுக்கை உரிய முறையில் வழங்காமல் தாமே உண்பதாலும் தகுதியற்றோர் அந்த அழுக்குகளைப் பெறுவதைத் தவிர்த்துக் கொள்ளாமல் அதைப் பெற்று உண்பதாலும் இருசாராரும் நோய்வாய்ப்பட்டு அவதிப்படுவதைப் பார்த்து, அதிலிருந்து பாடம் படித்து, அந்தப் பாடத்தை என் இனிய சகோதரர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற நன்னோக்கத்தில் எழுதப்பட்டதே இந்த ஆக்கம்; இறைச்சினம் என்மீது ஏற்படாதிருக்கவே இந்த அறச்சினம்.

 

அழுக்குகளை உண்பதைத் தவிர்த்துவிட்டு, தூய்மையானவற்றை மட்டுமே உண்டு, அதன்மூலம் தோன்றுகிற தூய சிந்தனைகளைப் பிறருக்கு வழங்குவோம்.

 

அன்புடன்      

நூ. அப்துல் ஹாதி பாகவி

20 03 2024

=================

திங்கள், 18 மார்ச், 2024

விழலுக்கு இறைத்த நீர் போல...


--------------------------------------------

இந்தியா கூட்டணி ஒரு பக்கம் பல்வேறு அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, நீதிக்கெதிரான ஆட்சியை அகற்றுவதற்காகத் தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கது.  அதேநேரத்தில் மறுபக்கம் ஆளும் பிஜேபி அரசு தனக்குச் சாதகமாக மின்னணு வாக்கு இயந்திரங்களை வைத்துக்கொண்டு, அதிகாரத்தோரணையோடு தேர்தல் பரப்புரைகளைச் செய்துவருவது மிகுந்த கவலையளிக்கிறது.

மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கெதிரான அரசியல் கட்சிகளின் போராட்டமெல்லாம் மிதமான போக்கில்தான் இருந்தன. எனவே அவையெல்லாம் தற்போது, கடலில் கரைத்த கற்பூரமாகக் காணாமல் போய்விட்டன.

 

மின்னணு வாக்கு இயந்திரங்களை யாரும் தவறாகப் பயன்படுத்த முடியாது; யாரும் அதை ஹேக் (Hack) செய்ய முடியாது; முடிந்தால் செய்து காட்டுங்கள் என்று தேர்தல் ஆணையம் அறைகூவல் விடுத்து, ஹேக் செய்ய முடியாத இயந்திரத்தை முன்வைத்தது.

அந்த நேரத்தில், “நீங்கள் தேர்தலுக்குப் பயன்படுத்துகிற அத்துணை இயந்திரங்களையும் எங்கள்முன் வையுங்கள்; அவற்றிலிருந்து நாங்கள் விரும்பிய பத்து இயந்திரங்களை எடுத்து ஹேக் செய்து காட்டுகிறோம் என்று நம் பொறியாளர்களுக்குச் சவால்விடத் தெரியவில்லை. அப்படி ஒருவேளை கேட்டிருந்தால் அதை நிரூபித்துக் காட்டியிருக்கலாம். அந்தோ பரிதாபம்! அவ்வாறு யாருக்கும் கேள்வி கேட்கத் தெரியவில்லை.

 

அத்தகைய மின்னணு வாக்கு இயந்திரங்களை வைத்துத் தேர்தல் நடத்திக்கொண்டு, இங்கு மக்களாட்சி நடக்கிறது என்றும் இது மக்களாட்சியை நிலைநிறுத்தும் 18ஆவது ஜனநாயகத் தேர்தல் என்றும் விளம்புவது ஏமாற்று வேலை என்றே பலரும் கூறுகின்றார்கள்.

 

உண்மையில் இது ஜனநாயக நாடு என்றால், மக்களின் ஐயத்திற்குள்ளான ஓர் இயந்திரத்தை வைத்துத் தேர்தல் நடத்தாமல், நாட்டில் பெரும்பாலோர் விரும்புகிற, எல்லோரும் முற்றிலும் நம்புகிற, எல்லோருக்கும் எளிதான வாக்குச் சீட்டு முறையில் தேர்தலை நடத்திக் காட்ட வேண்டும்; அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் வரை தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும்.

 

மின்னணு வாக்கு இயந்திரங்கள்மூலம் தேர்தல் நடத்தப்பட்டு, அதன்மூலம் பிஜேபி மீண்டும் வெற்றி பெற்றால்  அது ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்ததற்குச் சமமாகும். அதன்பிறகு அரசியல் கட்சிகள் போராடிப் பயனில்லை. அதை அகற்ற முனையாமல் தேர்தலை எதிர்கொள்ளும் எதிர்க்கட்சிகளின் பரப்புரை விழலுக்கு இறைத்த நீர் போன்றதாகும்.

 

ஒருக்கால் இதையும் தாண்டி அதிசயம் நடந்தால் இந்திய மக்கள்மீது இறைவன் கருணைகாட்டியுள்ளான் என்று கருதலாம்.

 

பொறுத்திருந்து பார்ப்போம்.

 

அன்புடன்

நூ. அப்துல் ஹாதி பாகவி

18 03 2024

==============



சனி, 16 மார்ச், 2024

போதும்... போதும்...!

  


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

கட்டுரைச் சுருக்கம்:

 

ஸகாத் பெறத் தகுதி இல்லாதவர்கள், எனக்கு வேண்டாம் என ஒதுங்கிக்கொண்டால், தகுதியானவர்கள் அதைப் பெற்றுக்கொள்வார்கள்.

 

தகுதி இல்லாதவர்கள் ஏழைகள் என்ற போர்வையில் ஸகாத் பணத்தைப் பெறுவது ஒருவகை ஏமாற்றமும் மோசடியும் ஆகும்.

 

செல்வர்கள் தம் செல்வத்துக்குரிய ஸகாத்தை முறைப்படி கணக்கிட்டு வழங்கினால் ஏழைகள் பயன்பெறுவார்கள்.

 

பணத்தை யார் நீட்டினாலும், உடனடியாக அதை வாங்கிக்கொள்ளாமல், இது ஸகாத்தா, அன்பளிப்பா என்று கேட்டு, நான் ஸகாத்தைப் பெறுவதில்லை என்று சொல்ல, இறைநம்பிக்கை மிகுந்தவர்களால் மட்டுமே முடியும்.

---------------------------

 

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேவை (டிமாண்ட்) இருந்துகொண்டே இருக்கிறது. நீர், உணவு, உடை, இருப்பிடம், பணம் என அவரவர் தேவைக்கேற்பப் பட்டியல் மாறுபடும்.  நம்முள் பெரும்பாலோர் தம் தேவையைத் தம் உழைப்பின்மூலம் நிவர்த்திசெய்துகொள்கிறார்கள். வேறு சிலரோ தம் ஏழ்மையின் காரணமாகப் பிறர் வழங்குகிற உதவிமூலமே தம் அன்றாட வாழ்க்கையை நடத்திவருகின்றார்கள்.

 

நம்முள் ஒரு வகையினர் தம் உறவினர்கள், நண்பர்கள், அன்பர்கள் எனப் பலர் வழங்குகிற உதவித்தொகையால் தம் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றார்கள். அவர்கள் அந்த உதவியைப் பெற்று வாழ்வதில் தவறில்லை. ஆனால் காலம் முழுவதும் அவ்வாறே வாழ்ந்து முடித்துவிடலாம் என்று அவர்கள் எண்ணுவதுதான் தவறு. குறுகிய எண்ணத்திலேயே காலம் கடத்துவது அல்லது தம்மால் உழைக்க முடியும் என்றிருந்தும் அதற்காக எந்த முயற்சியும் செய்யாமல், பிறர் கொடுப்பதை வைத்தே வாழ்ந்துவிடலாம் என்று எண்ணுவது அவர்களின் நீடித்த சோம்பலுக்கு அடையாளமாகத் திகழ்கிறது.

 

அவர்களுள் யாரும் ஏற்பது இகழ்ச்சி என்ற முதுமொழியை நினைத்துக்கூடப் பார்ப்பது கிடையாது. தாங்கள் இதுவரை எனக்குச் செய்துவந்த உதவிக்கு நன்றி; அல்லாஹ் உங்களுக்கு அதற்கான நற்கூலியை இம்மையிலும் மறுமையிலும் கொடுப்பானாக. எனக்கு இதுவரை நீங்கள் செய்துவந்த உதவி போதும். இனியும் நீங்கள் எனக்குப் பணஉதவி வழங்க வேண்டாம் என்று கூறும் துணிவு எத்தனை பேருக்கு ஏற்பட்டிருக்கிறது? இனி நான் யாரிடமும் உதவி பெறப்போவதில்லை என்று முடிவெடுக்கின்ற மனத்திட்பம் எத்தனை பேருக்கு ஏற்பட்டிருக்கிறது

 

இதுவரை நீங்கள் செய்துவந்த உதவி போதும் என்று சொல்லும் துணிவும் மனஉறுதியும் அவ்வளவு சீக்கிரம் எந்த மனிதனுக்கும் வந்துவிடாது. அவன் தன் நிலையைக் குறித்து, தானே சிந்திக்க வேண்டும்; ‘ஏற்பது இகழ்ச்சி என்ற முதுமொழியை மீண்டும் மீண்டும் தன் மனத்துக்குள் அசைபோட்டுப் பார்க்க வேண்டும்; தன் நிலையைக் கண்டு தானே அசிங்கமாகக் கருத வேண்டும்; சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட வேண்டும். அப்போதுதான் அவ்வாறு முடிவெடுக்கத் தோன்றும்.

 

இந்நாள் வரை பிறரின் தயவோடுதானே வாழ்ந்துகொண்டிருக்கிறேன்; இனியேனும் யாருடைய  உதவியையும் பெறாமல் இறைவனின் உதவியோடு ஏன் வாழக்கூடாது என்ற சிந்தனை உள்ளத்தில் தோன்றினால் மட்டுமே ஒருவன் தன் நிலையை மாற்றிக்கொள்ள முடியும். இல்லையில்லை; அவன் தன்  வாழ்க்கை நிலையை மேம்படுத்திக்கொள்ள முடியும். இது நாள் வரை அவன் எனக்காகச் செலவழித்தான்; இனி நான் அவனுக்காகச் செலவு செய்யாவிட்டாலும், எனக்கேனும் நான் செலவு செய்துகொள்ள  என்னால் இயன்றதை உழைத்துச் சம்பாதிப்பேன்; இனி அவனுடைய உதவியை நான் அறவே பெறமாட்டேன் என்று உறுதியாக முடிவெடுக்க வேண்டும்.

 

நாம் சிறுவராக இருக்கிறபோது ஒவ்வோர் எழுத்தாகக் கற்றுத் தருகிற ஆசிரியர், காலப் போக்கில்  வார்த்தைகளாகக் கற்றுத் தருகிறார்; பின்னர் அதையும் விட்டுவிட்டுச் சரளமாக வாசிக்கத் தொடங்கிவிடுகிறார். ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு நிலையைக் கடந்துசென்றுகொண்டே இருக்கிறோம். ஆக, காலம் செல்லச் செல்ல கற்பிக்கும் நிலை மாறுகிறதல்லவா? அதுபோலவே நம் வாழ்க்கை நிலையும் மாற வேண்டுமல்லவா? கடந்த காலங்களில் பெற்றுக்கொண்டே இருந்தேன்; இனி பெறுவதை நிறுத்திவிடுவேன்; இன்னும் சில ஆண்டுகள் கழித்து, கொடுக்கும் நிலைக்கு உயர்வேன் என்று எண்ணுவதும் அதனை நோக்கி நகர்வதும்தானே வாழ்க்கையில் நாம் அடையும் முன்னேற்றம்?

 

ஆனால் சிலர் ஆண்டுதோறும் பெற்றுக்கொள்ளும் நிலையிலேயே இருக்கிறார்கள். அதற்காக ஆர்வத்தோடு காத்திருக்கின்றார்கள். அவர்கள் கொடுக்கும் நிலைக்கு மனதளவில்கூட வருவதே இல்லை. கொடுக்கும் நிலைக்கு வராவிட்டாலும், தன்னைத்தானே  காத்துக்கொள்ளும் தற்சார்பு நிலைக்குக்கூட வருவதில்லை. பிறர் கையை எதிர்பார்க்கும் இந்த நிலையை எப்போதுதான் அவர்கள் மாற்றிக்கொள்வார்கள்?

 

அஸ்ஸலாமு அலைக்கும் பாய், போன வருஷம் வந்திருந்தேனே உங்களுக்கு நினைவிருக்கிறதா? என்ன பாய் மறந்துட்டீங்களா? நான்தான் காதர்பாய் வந்திருக்கேன். போன வருஷம் மாதிரி, இந்த வருஷமும் உங்களுடைய உதவியை நாடித்தான் வந்திருக்கேன் என்று ஒவ்வோர் ஆண்டும் சொல்லும் பலர் நம்முள் உள்ளனர். அவர்கள் அவ்வாறு சொல்வதையும் பெறுவதையும் இழிவாகக் கருதுவதில்லை. இப்ப நேற்றா நான் வாறேன்; ஒங்க வாப்பா காலத்திலிருந்தே வந்துகிட்டு இருக்கேன் என்று சிலர் தம்முடைய இகழ்ச்சியின் காலநீட்சியைப் பறைசாற்றுவர். 

 

தன்மீதே ரோஷம்கொண்டு, பிறரிடம் பெறுவதை இழிவெனக் கருதி, இறைவன்மீது அளவிலா நம்பிக்கைகொள்ளும்போதுதான், “இதுவரை பெற்றது போதும்; இனி நான் யாரிடமும் எந்த உதவியும் பெறப் போவதில்லை; அல்லாஹ்வையன்றி வேறு யாரிடமும் கையேந்தப்போவதில்லை என்று முடிவெடுக்கத் தூண்டும். அத்தகைய உறுதி மனத்தினுள் தோன்றும்போது அவன் பின்வருமாறு பிரார்த்தனை செய்வான்: அல்லாஹும்மக்ஃபினீ பிஹலாலிக அன் ஹராமிக. வ அஃக்னினீ பி ஃபள்லிக அம்மன் ஸிவாக். பொருள்: அல்லாஹ்வே! நீ விலக்கியதை விட்டுவிலகி, நீ ஆகுமாக்கியதைக் கொண்டு எனக்குப் போதும் என்ற நிலையை உருவாக்குவாயாக! மேலும் உனது கருணையால் உன்னைத் தவிர உள்ள அனைத்தைவிட்டும் என்னைத் தேவையற்றவனாக ஆக்குவாயாக. (நூல்: திர்மிதீ: 3563)

 

மேலும் இறைவன் கூறுவதை மனத்தில் பதித்துக்கொண்டவருக்கே அத்தகைய முடிவெடுக்கும் தன்னம்பிக்கை ஏற்படும். யார் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின்றாரோ, அவருக்கு ஒரு (நல்) வழியை ஏற்படுத்தித் தருவான். மேலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவருக்கு வேண்டிய வாழ்வாதார வசதிகளை அளிப்பான். யார் அல்லாஹ்வைச் சார்ந்திருக்கிறாரோ அவருக்கு அவனே போதும்(65:2-3).

 

பிறரிடம் கேட்கக்கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக, அவர்கள்தம் அன்புத்தோழர்கள் கீழே விழுந்த சாட்டையைக்கூட, ஒட்டகத்திலிருந்து கீழே இறங்கித் தாமே எடுத்துக்கொள்வார்களே தவிர, பிறரிடம் அதை நீ என்னிடம் எடுத்துக்கொடு என்று கேட்கமாட்டார்கள். அந்த அளவிற்குச் சுயமரியாதைகொண்டவர்களாக இருந்தார்கள். கேட்டுப் பெறுவதை இழிவாகக் கருதிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஏற்பது இகழ்ச்சி என்ற மூலமந்திரத்தைத் தம் தோழர்களுக்குப் போதித்தார்கள். நபியவர்களின் வாக்குகளை அப்படியே தம் அன்றாட வாழ்க்கையில் பின்பற்றி, சுயமரியாதைமிக்க சமுதாயமாக வாழ்ந்தார்கள்.

 

சுயமரியாதையைப் போதித்த நபியவர்களின் சமுதாயம்தான் ரமளான் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் பிறரின் உதவிதேடி அலைந்துகொண்டிருக்கிறது. அவர்களுள் பலர் தம் அடிப்படைத் தேவைக்காக அல்லாமல், கையேந்திப் பிழைப்பதையே தொழிலாகச் செய்துவருவோரும் உண்டு. எந்த நாளிலும் போதும் என்ற நிலைக்கு அவர்கள் வருவதே இல்லை.

 

இத்தகையோரைப் பார்த்தே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: ஆதமுடைய மகனுக்கு (மனிதனுக்கு) இரண்டு ஓடைகள் (நிறையத்) தங்கம் இருந்தாலும் தனக்கு மூன்றாவதாக ஓர் ஓடை இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனுடைய வாயை (அடக்கத்தலத்தின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது... (திர்மிதீ: 2259)

 

அதாவது அவன் இறந்து மண்ணுக்குள் புதையுண்டு போகின்ற வரை, ‘கையேந்தும் தொழிலைவிட்டுவிடமாட்டான்; ஏந்திய கைகளை மடக்கவும் மாட்டான்; இறுதி வரை ஏந்திக்கொண்டே இருந்து, கடைசியில் ஏந்திய நிலையிலேயே மரணிப்பான். அல்லாஹ்வை மறந்து, பிறரிடம் கையேந்தியோருக்கு அவன் கொடுக்கும் தண்டனைதான் இது. 

 

போதும் என்ற உணர்வு ஒரு கட்டத்தில் பெரும் செல்வருக்கு ஏற்படும். தொடர்ந்து சம்பாதித்துச் சேர்த்துக்கொண்டே இருந்தால், அதற்கு முடிவுதான் என்ன? அந்தப் பணத்தையெல்லாம் என்னதான் செய்வது, ஏன் சம்பாதிக்கிறோம், ஏன் சேர்க்கிறோம், யாருக்காகச் சேர்த்துக்கொண்டே இருக்கிறோம் என்ற வினாக்கள் தோன்றி, அவருடைய மனத்தைப் புரட்டிப்போடும். இதுவரை சேர்த்தது போதும்இனியேனும் ஏழைகளுக்கும் தேவையுடையோருக்கும் செலவழிப்போம் என்ற உந்துதல் ஏற்படும். அதன்பின் அவர் தாம் சேர்த்து வைத்த பணத்தைச் செலவழிக்கத் தொடங்கிவிடுவார். பின்னர் அவரை யாரும் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது. கேரளாவைச் சார்ந்த தொழிலதிபர் யூசுப் அலீ, அஜீம் பிரேம்ஜி, லெட்சுமி மிட்டல் போன்றோரை இதற்குச் சான்றாகக் காட்டலாம்.

 

அது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: இரண்டு பேர்மீது தவிர வேறெவர்மீதும் பொறாமை கொள்ளக் கூடாது. (அவர்களுள் ஒருவர்) ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்கிறார்... (புகாரீ: 73) 

 

இவ்வாறு வாழ்வாங்கு வாழும் வசதிபடைத்தோர் உரிய முறையில் செலவு செய்யத் தொடங்கிவிட்டால் காலப்போக்கில் சமுதாயத்திலிருந்து ஏழ்மை விடைபெற்றுக்கொள்ளும். அத்தகைய நிலையைத்தான் இஸ்லாம் எதிர்பார்க்கிறது. அல்லாஹ் அதற்காகவே ஸகாத்தைக் கடமையாக்கினான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதைச் செயல்படுத்தினார்கள்; நபித்தோழர்கள் பின்பற்றினார்கள்; நாமும் அதையே பின்பற்றிவருகிறோம்.

 

ஆகவே நம்முள் இதுவரை கையேந்திப் பழக்கப்பட்டவர்கள் அப்பழக்கத்தை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும்; அல்லாஹ்வின் மீதே நம்பிக்கைகொண்டு தம் வாழ்க்கையைத் தொடர முயல வேண்டும்.  நம்முள் வசதிபடைத்தோர் தம் ஸகாத்தை உரிய முறையில் உரியவர்களுக்குச் செலவு செய்ய முன்வர வேண்டும். இந்த இரண்டும் தொடர்ந்தால் காலப்போக்கில் நம் சமுதாயம் மேம்பட்டுவிடும்; சுயமரியாதைமிக்க சமுதாயமாக மாறும். அத்தகைய நிலை உருவாக வல்லோன் அல்லாஹ் மனித மனங்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்துவானாக.

0======================0








சனி, 9 மார்ச், 2024

மது குடிக்க மாட்டேன் (சிறுகதை- Short story)


மது குடிக்க மாட்டேன் (சிறுகதை)

காலத்திற்கேற்ற சிறுகதை

கேளுங்கள்

உங்கள்

கருத்தைக் கூறுங்கள்.