வெள்ளி, 30 டிசம்பர், 2016

விரைவில் வெளிவருகிறது...




இனிய திசைகள் ​டிசம்பர்​'2016 இதழ்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.வப.)
இறையருள் நம் அனைவர்மீதும் பொலிவதாக...​
இனிய திசைகள் 
​டிசம்பர்​
'2016 இதழைப் படிக்க அட்டைப் படத்தின்மீது “CLICK" செய்க....
 
​  ​
தங்கள் வசதிக்காக PDF இணைப்பும் உள்ளது. 
 
​  ​
அன்புகூர்ந்து இனிய திசைகளைப்
​ ​
படித்தும் தங்கள் உற்றார், உற
​வினர்கள்​   
    மற்றும் 
நண்பர்கள் ​குழாத்திற்கு அனுப்பிப் பரப்பியும்
​ 
​    
தங்களது மேலான சிந்தனைகளைத்
​ ​
தெரிவித்தும் உதவுக....
நன்றி,
வஸ்ஸலாம்,

Inline image 1
Attachments area

வெள்ளி, 23 டிசம்பர், 2016

நபிகளார் நவின்ற நான்குகள் (தொடர்-9)


முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி.

நான்கு நபர்களை மாண்பும் வல்லமையுமிக்க அல்லாஹ் வெறுக்கின்றான். (அவர்கள் வருமாறு:) அதிகமாகச் சத்தியம் செய்து விற்பனை செய்பவர்; பெருமையடிக்கும் ஏழை; விபச்சாரம் புரியும் முதியவர்; அநீதி செய்யும் தலைவர்என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நூல்: நஸாயீ: 2529) இதை அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பொதுவாக ஒருவர் வியாபாரத்தில் ஈடுபடும்போது பொய் பேசுவது தவிர்க்க முடியாதது. அத்தகைய சூழல்தான் இன்றைய கலிகாலத்தில் நிலவுகிறது. ஆனால் அவ்வாறு பொய் சொல்லி வியாபாரம் மேற்கொள்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென இஸ்லாமிய மார்க்கச் சட்டம் வலியுறுத்திக் கூறுகிறது. தவறான முறையில் உழைத்த சம்பாத்தியம் நன்மை பயக்காது. எனவேதான் இஸ்லாம் முறைதவறிய சம்பாத்தியத்தைத் தடைசெய்கிறது.
அக்கால அரபியர்கள் அடிக்கடி சத்தியம் செய்வது அவர்களின் பழக்கம். அதனால்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகமாகச் சத்தியம் செய்து விற்பனை செய்பவனை அல்லாஹ் வெறுப்பதாகக் கூறியுள்ளார்கள்.  அடிக்கடி சத்தியம் செய்து பொருளை விற்பனை செய்வதன் மூலம் அவர் பல தடவை பொய்ச்சத்தியம் செய்ய வேண்டியிருக்கும். அதற்கெல்லாம் அல்லாஹ்வுடைய தண்டனையைப் பெற்றுத்தானே ஆக வேண்டும்?

வியாபாரத்தில் பொய்யைத் தவிர்க்க முடியாது. எனவேதான் ஒரு கவிஞன் சொன்னான்: அவன் கடையைத் திறந்தான், திறந்தவுடன் முதன் முதலாக உண்மையை விற்றான்.ஆம். இதுதான் இன்றைய நிலை. மூன்றுகள் எனும் தொடரில் நான் ஏற்கெனவே எழுதிய ஒரு நபிமொழி, பொய்ச்சத்தியம் செய்து தன் பொருளை வியாபாரம் செய்பவனை அல்லாஹ் மறுமை நாளில் பார்க்க மாட்டான். (திர்மிதீ: 1132)

ஆகவே எவரெல்லாம் விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளாரோ அவரெல்லாம் பொய் பேசி வியாபாரம் செய்வதை முற்றிலுமாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் நாளை மறுமையில் இழிவடைய நேரிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பெருமை என்பது யாருக்கும் கூடாது. அதிலும் குறிப்பாக ஏழைக்குப் பெருமை அறவே கூடாது. ஏனென்றால்  பெருமை என்பது எனது மேலாடை; கண்ணியம் என்பது எனது கீழாடை. அவ்விரண்டில் ஒன்றை எவர் என்னிலிருந்து கழற்ற முற்படுகின்றாரோ அவரை நான் நரகத்தில் போட்டு (வேதனை செய்து) விடுவேன்என்று மகத்துவமும் வல்லமையும் கொண்ட அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: அபூதாவூத்: 3567)

பெருமை குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனின் பல்வேறு இடங்களில் எச்சரிக்கை செய்துள்ளான். பூமியில் பெருமையாக நடக்காதே. நிச்சயமாகக் கர்வம்கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.  (31: 18)  பூமியில் (பெருமையுடன்) கர்வம்கொண்டு நடக்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாகப் பூமியைப் பிளந்து விடவோ மலையின் உச்சியை அடைந்து விடவோ உங்களால் முடியாது.” (17: 37) அதேநேரத்தில் ஒரு செல்வந்தன் தன்னுடைய பணத்திமிரால் பெருமை கொண்டான் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்று சொல்லலாம்.  ஒன்றுமே இல்லாத ஓர் ஏழை பெருமை கொள்ள என்ன இருக்கிறது? அல்லாஹ்வுக்கு முன்னால் பணிந்து மண்டியிட்டு அல்லவா இருக்க வேண்டும்? அவன் பெருமை கொள்ளலாமா?

பெருமை என்பது பல வழிகளில் ஏற்படலாம். செல்வத்தால் பெருமையடிக்கலாம். கல்வியால் பெருமையடிக்கலாம். அல்லாஹ்விடம் எனக்கு எந்தத் தேவையும் இல்லை என்று அவனிடம் எதையும் கேட்காமல் இருக்கலாம். அதுவும் பெருமைதான்.

உங்கள் இறைவன் கூறுகின்றான்: "நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும்) என்னிடமே கேளுங்கள். நான் உங்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வேன். என்னை வழிபடாமல் பெருமையடிக்கின்றவர்கள் நிச்சயமாகச் சிறுமைப்பட்டவர்களாக நரகம் புகுவார்கள். (40: 60) ஆகவே  பெருமையடித்தல் முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. அது எவ்வகைப் பெருமையாக இருப்பினும் சரியே! 

விபச்சாரம் ஒரு மானக்கேடான செயல்என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அதை நெருங்கவும் வேண்டாம்என அது எச்சரிக்கை விடுக்கிறது. அந்த எச்சரிக்கையையெல்லாம் மறந்துவிட்டு, இன்றைய கலியுகத்தில் சிலர் தவறான பாதையை நோக்கிச் சென்றுகொண்டுதான் இருக்கின்றார்கள். ஓர் இளைஞன் திருமணம் செய்வதற்கு முன்பே விபச்சாரம் செய்துவிட்டால் அவனுக்கு நூறு கசையடி தண்டனையாகக் கொடுக்க வேண்டும். திருமணம் செய்தபின் அவன் விபச்சாரம் செய்துவிட்டால் கல்லால் எறிந்து கொலை செய்ய வேண்டும். இதுவே இஸ்லாமியச் சட்டம். இஸ்லாம் வகுத்துள்ள வரைமுறையை மீறிச் செல்பவருக்குக் கடுமையான தண்டனை உண்டு என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.

ஓர் இளைஞன், கட்டுப்படுத்த முடியாத தன் உணர்ச்சிகளின் உந்துதலால் ஏதோ ஒரு தடவை தவறு செய்துவிடலாம்.  அதனை அறிவு ஏற்றுக்கொள்ளும். ஆனால் எல்லாம் அடங்கி, உணர்ச்சிகள் முடங்கிப்போன ஒரு முதியவர் எவ்வாறு விபச்சாரம் செய்யலாம்? உணர்ச்சிகள் யாவும்  தன் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு முதியவர் விபச்சாரம் செய்கின்றார் என்றால், அவருக்கு இறைவனைப் பற்றிய அச்சம் அறவே இல்லை என்றுதான் பொருள். அத்தகையவருக்குக் கேடுதான் என்பதைவிட வேறென்ன சொல்ல முடியும்

இன்றைய கலியுகத்தில் வயதில் மூத்தவரும் இளஞ்சிறுமிகளை வன்புணர்வு செய்துவிடுகின்ற செய்திகளை நாளிதழ்களில் படிக்க நேரிடும்போது, நமது மனம் மிகுந்த வேதனைக்குள்ளாகிறது. எனவே இத்தகைய இழிநிகழ்வுகள் எதுவும் இஸ்லாமிய வட்டத்திற்குள் வாழ்வோருக்கு நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு முன்னெச்சரிக்கை செய்துள்ளார்கள். அந்த அறிவுரையைப் பின்பற்றி வாழ்வதை  ஒரு நற்பேறாகக் கருத வேண்டும்.
ஒருவர் மற்றொருவருக்கு அநீதி இழைப்பது மிகப்பெரும் குற்றமாகும். சாதாரணமாக வாழ்கின்ற ஒருவன் மற்றொருவனுக்கு அநீதியிழைக்க ஏதோ ஒரு காரணம் இருக்கும். அல்லது அது தவறுதலாகக்கூட நேர்ந்திருக்கலாம். ஆனால் தலைவனாக உள்ள ஒருவன் மற்றொருவனுக்கு அநீதியிழைக்கின்றானென்றால் அதற்கு எந்தச் சாக்குப்போக்கும் கூற முடியாது. தலைமைப் பொறுப்பில் உள்ளவன் பிறருக்கு அஞ்ச வேண்டிய தேவையில்லை; யாரேனும் தன்னை அச்சுறுத்துவார் என்ற அச்சமும் இல்லை. யாருக்கும் பணிந்து செல்ல வேண்டுமென்ற நிர்ப்பந்தமும் இல்லை. 

அவ்வாறிருக்க அவன் மற்றவனுக்கு அநியாயம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? அதனால்தான் அல்லாஹ் அவனை வெறுக்கின்றான். அவனுக்கு மறுமையில் கடுமையான தண்டனை கொடுப்பான் என்பதில் ஐயமில்லை. அநியாயம் செய்யப்பட்டவன் செய்யும் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையுமில்லை. அது நேரடியாக அங்கீகரிக்கப்படும்என்பதைத் தலைவனாக உள்ளவன் உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஆக, பொய்ச்சத்தியம் செய்தல், பெருமையடித்தல், விபச்சாரம் செய்தல், அநியாயம் செய்தல் முதலிய பாவங்களில் நாம் சிக்கிவிடாமல் நம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக.
                        -இன் ஷாஅல்லாஹ் தொடரும்

=============================================================





செவ்வாய், 20 டிசம்பர், 2016

அநியாயக்காரர்களுக்கெதிராகப் பிரார்த்தனை செய்வோம்!


- முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

உலகெங்கும் முஸ்லிம்களுக்கெதிரான போக்கு அதிகரித்து வருவதைக் கண்டு மனம் வெதும்பாமல் இருக்க முடியவில்லை. முஸ்லிம்களுக்கெதிரான எதிரிகளின் சூழ்ச்சியும் வஞ்சமும்  நாளுக்கு நாள்  மிகுதியாகிக் கொண்டே வருவதை ஊடகங்கள் வாயிலாக உணர்ந்து வருகிறோம். ஆனால் முஸ்லிம்களோ, எல்லாவற்றையும் அல்லாஹ் பார்த்துக்கொள்வான் என்று மேம்போக்கான மனநிலையிலேயே இருந்து வருகின்றனர்.

குறிப்பாக இந்தியாவில் முஸ்லிம்களுக்கெதிராக மத்திய, மாநில அரசுகள் செய்யக்கூடிய அநியாயமும் சூழ்ச்சியும் அளவில் அடங்காது. மாட்டுக்கறி உண்ணக்கூடாது, மாட்டை அறுக்கக்கூடாது எனத் தொடங்கி பொது சிவில் சட்டம் கொண்டுவருதல், கூம்பு வடிவிலான ஒலிபெருக்கியை அகற்றுதல் உள்ளிட்டவை வரை ஒவ்வொன்றாக  வந்துகொண்டுதான் இருக்கின்றன.

முஸ்லிம்கள் தொடர்பான என்னென்ன வரலாற்று அடையாளங்கள் எஞ்சியிருக்கின்றனவோ அவற்றை நீக்குவது, திப்பு சுல்தான், அவுரங்கசீப் முதலான முஸ்லிம் மன்னர்களின் வரலாற்றை மாற்றுவது, அவர்கள் செய்த தொண்டுகளையெல்லாம் சதித்திட்டங்களாகத் திரித்துச் செய்தி வெளியிடுவது, பாடப்புத்தகங்களில் வரலாற்றை மாற்றி எழுதுவது உள்ளிட்ட எத்தனையோ அநியாயங்களை மத்திய அரசு செய்து வருகிறது.

அரசுக்கு அப்பாற்பட்டு, திரைப்பட இயக்குநர்கள் முஸ்லிம்களுக்கெதிரான திரைப்படங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் முஸ்லிம்களைத் தவறான பிம்பத்தில் மக்களுக்குக் காட்டுவது, அனைத்துக் குண்டுவெடிப்புகளுக்கும் முஸ்லிம்கள்தாம் காரணம் என்ற தவறான தோற்றத்தையும்  எதிரான கருத்துருவையும் மக்கள் மனங்களில் பதியவைப்பது உள்ளிட்ட தீச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தகைய  திரைப்படங்களின் மாயப்பிம்பத்தால் ஈர்க்கப்பட்ட முஸ்லிமல்லாத மக்கள் முஸ்லிம்களுக்கு வீடு வாடகைக்கு விட மறுத்தல், அவர்களோடு கொடுக்கல் வாங்கலில் கடுகடுப்பாக நடந்துகொள்ளுதல், இணக்கமாகப் பழகாதிருத்தல், அவர்களை ஏளனமாகக் கருதுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதை நாம் காணமுடிகிறது; அனுபவிக்க நேரிடுகிறது.

கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பின்தங்கியுள்ள நாம் பல்வேறு இன்னல்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது. அது மட்டுமின்றி எவ்வளவோ படித்தும் உரிய வேலை வாய்ப்பை "முஸ்லிம்' என்ற காரணத்தால் இழக்க நேரிடுகிறது. அத்தோடு காவல்துறையின் அட்டூழியங்களும் அதிகரித்துள்ளன. அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை ஆங்காங்கே கைது செய்து  விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று சிறைச்சாலைக்குள் தள்ளுவது, அவர்களின் வாழ்க்கையைச் சிறைக்குள்ளேயே பல்லாண்டு காலம் முடக்கிப்போடுவது, அதன்மூலம் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையைச் சீரழிப்பது உள்ளிட்ட கொடுமைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

திரைப்படங்களின் தவறான பிம்பத்தால் முஸ்லிம்கள்தாம் தீவிரவாதிகள் என்ற பொய்யான கருத்துருவை உண்டாக்கியபின், ஆங்காங்கே உள்ள அரபு மத்ரஸாக்களுக்குள் புகுந்து சோதனையிடுவது, அங்குள்ள மாணவர்களை விசாரிப்பது, அவர்களுக்கான செலவீனங்கள் குறித்துத் துருவித் துருவி ஆராய்வது உள்ளிட்ட வன்கொடுமைகளும் ஒருபுறம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம் பெண்கள் அணிகின்ற பர்தாவைப் பயன்படுத்தித் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதைப் போன்ற காட்சிகளைத் திரைப்படங்களின்மூலம் மக்கள் மனங்களில் பதிவுசெய்துஅதன்மூலம் கண்ணியமான அந்த ஆடைக்கு இழுக்கை ஏற்படுத்தி, அதை அணிந்து வருகின்ற முஸ்லிம் பெண்களைச் சோதனைக்கு உள்ளாக்குவது, பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் பெண்களுக்குப் பர்தாவைத் தடை செய்வது உள்ளிட்ட அட்டூழியங்களும் மற்றொரு புறம் நடந்தேறுகின்றன.

புதிதாக வழிபாட்டுத்தலங்கள் கட்டுவதற்குத் தடைவிதித்தல், அல்லது அதற்கு ஆயிரம் கட்டுப்பாடுகளை விதித்தல், ஏற்கெனவே இருக்கின்ற பள்ளிவாசல்களில் வேண்டுமென்றே பிரச்சனைகளை ஏற்படுத்துதல், முஸ்லிம்களின் வழிபாடுகளுக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட பல்வேறு தொல்லைகளையும் துன்பங்களையும் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். முஸ்லிம்களின் அடக்கத்தலங்களை ஆக்கிரமித்துக்கொண்டு அங்கு சிலைகளை வைத்து வழிபடத் தொடங்குதல் உள்ளிட்டவையும் அரங்கேறுகின்றன. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது, வேண்டுமென்றே முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்கின்ற பாதை வழியாகச் சென்று, அப்பாதையிலுள்ள வழிபாட்டுத்தளங்களுக்கும் வணிகத் தளங்களுக்கும்  சேதத்தை விளைவிப்பது உள்ளிட்ட கொடூரங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

மற்ற நாடுகளோடு இணக்கமான உறவை மேற்கொள்கின்ற அரசு, முஸ்லிம் அண்டை நாடான பாகிஸ்தானோடு தீராப் பகையை வளர்த்துக்கொள்கிறது. அதேநேரத்தில் அண்டை நாடான சீனா அருணாச்சலப் பிரதேசத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துவிட்டதையும் கண்டுகொள்வதில்லை. இலங்கை இராணுவம் தமிழக மீனவர்களுக்கெதிராக எத்தனையோ முறை வன்முறையில் ஈடுபட்டுள்ளது. மீனவர்களைக் கைது செய்துள்ளது. அவர்களின் படகுகளைச் சேதப்படுத்தியுள்ளது.  அவர்களைக் கொன்றுள்ளது. அதனையெல்லாம் கண்டிக்காமலும் எதிர்த்துக் கேட்காமலும் விட்டுவிடுகிறது இந்திய அரசு. இதன்மூலம் இந்த அரசு முஸ்லிம்களுக்கெதிரான போக்கை மட்டுமே பிரதானமாக விரும்புகிறது என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

இப்படி அங்கிங்கெனாதபடி திரும்பும் திக்கெங்கும் முஸ்லிம்களுக்கெதிரான விரோதப்போக்கை மத்திய, மாநில அரசுகளும், முஸ்லிம்களைத் தவறாகப் புரிந்துகொண்டோரும் மேற்கொள்வது நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததில்லை. சமயச் சார்பற்ற ஜனநாயக நாட்டில் குறிப்பிட்ட ஓர் இனத்தாரை மட்டும் புறக்கணிப்பது, அவர்களை நசுக்குவது, திட்டமிட்டுத் தாக்குவது, வீண் பழி சுமத்திச் சிறையில் அடைப்பது உள்ளிட்ட அவர்களுக்கெதிரான போக்கைக் கடைப்பிடிப்பது நாட்டின் வளர்ச்சிக்கு மிகப் பெரும் ஆபத்தை உண்டாக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

இத்தனை தொல்லைகளையும் சகித்துக்கொண்டு வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்கள், இந்துக்களுக்கு ஒரு பிரச்சனையென்றால் அவர்கள்தாம் முதலில் நிற்கின்றார்கள். கடந்த டிசம்பர் (2015) மாதம் கடுமையான மழை பொழிந்து, சென்னை உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியபோது அதில் பாதிக்கப்பட்ட இந்து மக்களுக்கு ஓடோடிச் சென்று உதவி செய்தவர்கள், உணவு வழங்கியவர்கள் முஸ்லிம்கள் ஆவர். என்னதான் நாம் ஓடோடிச் சென்று உதவி செய்தாலும் அதுவெல்லாம் ஊடகக் கண்களுக்குத் தெரியாது. அவர்களைப் பற்றிய தவறான செய்தி இருந்தால் மட்டும் முதல் பக்கத்தில் வெளியிடுவார்கள். நல்ல செய்திகளை இருட்டடிப்புச் செய்வார்கள். இதுவே அவர்களுக்கு எழுதப்படாத விதியாக உள்ளது.

இத்தகைய நெருக்கடியான சூழலிலும் ஓர் அச்சமான நிலையிலும் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்கள் பின்வரும் நபிமொழிகளைக் கூர்ந்து கவனிப்பதும் அதன்படிச் செயல்படுவதும் காலத்தின் கட்டாயமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பிரார்த்தனைகளுக்குப் பதிலளிக்கப்படுகின்றது. அவற்றில் சந்தேகமில்லை. அநியாயம் செய்யப்பட்டவரின் பிரார்த்தனை, ஒரு பயணியின் பிரார்த்தனை, ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யும் பிரார்த்தனை.  இதை அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: இப்னுமாஜா: 3852)

"எவர் தமக்கு அநியாயம் செய்தவருக்கு எதிராகப் பிரார்த்தனை செய்கிறாரோ அவர் (தம் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுவதன்மூலம்) வெற்றிபெற்றுவிட்டார்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 3475)

முஸ்லிம்கள் அனைவரும் அனுதினமும் ஐவேளைத் தொழுகையைப் பேணித் தொழுது இந்த அநியாயக்காரர்களுக்கெதிராகப் பிரார்த்தனை செய்தால், திண்ணமாக உயர்ந்தோன் அல்லாஹ் அவர்களைப் பார்த்துக்கொள்வான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயம் செய்யப்பட்டோரின் பிரார்த்தனையை அங்கீகரித்துக்கொள்வான். இந்த அநியாயக்காரர்களை அடியோடு அழிப்பான், அல்லது அவர்களின் உள்ளங்களை இஸ்லாத்திற்குச் சாதகமாகப் புரட்டிப்போடுவான்.

நபி (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருந்தபோது, இறைச்சிக்காக அறுக்கப்பட்ட ஒட்டகக் கருவைச் சுற்றியிருந்த சவ்வுகளை அள்ளிக்கொண்டு வந்து அவர்களின் முதுகில் போடச்செய்து, அதைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துக்கொண்டிருந்த குறைஷியருக்கு எதிராக, "இறைவா! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்!'' என்று மூன்று முறை பிரார்த்தனை செய்தார்கள்.... பிறகு நபி (ஸல்) அவர்கள் (அங்கிருந்தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, "இறைவா! அபூஜஹ்லை நீ கவனித்துக்கொள்வாயாக! உத்பா பின்  ரபீஆ, வலீத் பின் உத்பா, உமய்யா பின் கலஃப், உக்பா பின் அபீமுஐத் ஆகியோரைக் கவனித்துக்கொள்வாயாக!'' என்று (அறுவரின் பெயர் குறிப்பிட்டுப்) பிரார்த்தனை செய்தார்கள். (நூல்: புகாரீ: 240)

நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை ஏற்கப்பட்டதால், அவர்கள் அனைவரும் பத்ருப் போரில் கொல்லப்பட்டு மாண்டு ஒழிந்தார்கள் என்பது வரலாறு. சிறுபான்மை மக்களாக உள்ள நாம் செய்ய வேண்டியதும் இதைத்தானே தவிர, புரட்சி எனும் பெயரில் பொங்கி எழுவதும், கிளர்ச்சி என்ற பெயரில் கிளர்ந்தெழுவதும் நம்மை நாமே அழித்துக்கொள்வதற்குச் சமமாகும். தொடர்ந்து ஏகன் அல்லாஹ்விடம் கையேந்திக் கொண்டிருந்தால் திண்ணமாக இந்த நெருக்கடி நிலை தலைகீழாக மாறும் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் மனமுருகிச் செய்யும் பிரார்த்தனைக்கு நிகராக வலுவான எந்த ஆயுதமும் இல்லை என்பதை உணர்ந்து செயல்பட முற்படுவோம். 

=========================





ஞாயிறு, 20 நவம்பர், 2016

ஏழைகளோடு வாழும் காலம் ஒரு பொற்காலம்!


- முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

ஏழைகள்-செல்வர்கள் ஆகிய இருவகையாக மனிதர்களை உயர்ந்தோன் அல்லாஹ் தோற்றுவித்துள்ளான். செல்வர்கள் தன்னிறைவு பெற்றவர்கள். அல்லாஹ்வின் அருட்கொடைகளை முழுமையாக அனுபவிப்பவர்கள். ஏழைகளோ இறைவனிடம் கையேந்துபவர்கள்.  அவர்களுள் சிலர் தம் பசியைப் போக்க மனிதர்களிடம் கையேந்துகின்றார்கள். மனிதர்களாகிய நம்மிடம் ஏழைகள் கையேந்தும்போது நம்மால் இயன்றதை ஈய வேண்டும். முரணாக, அவர்களை வெறுப்பதோ விரட்டுவதோ, சுடுசொல் உதிர்ப்பதோ கூடாது. வாங்கும் நிலையில் அவர்களை வைத்து, கொடுக்கும் நிலையில் நம்மை உயர்த்திய தூயோன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துமுகமாக அவர்களுக்கு வழங்குவதே நமக்குச் சிறப்பு.

"தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை'' எனும் மூதுரைப் பாடலுக்கிணங்க ஏழைகளாகிய பலவீனர்களின் சார்பாகத்தான் நாம் இவ்வுலகில் மகிழ்ச்சியோடும் நிம்மதியோடும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அது குறித்து உணர்த்தும் நபிமொழிகளைக் காணீர்!

நபி (ஸல்) அவர்கள், "(உங்களிடையேயுள்ள) பலவீனர்களின் (சாமானிய மக்களின்) பொருட்டால்தான் -அவர்களின் பிரார்த்தனை, தொழுகை, மனத்தூய்மை ஆகியவற்றால்தான்- இந்தச் சமுதாயத்திற்கு அல்லாஹ் உதவிசெய்கிறான்'' என்று கூறினார்கள். (நூல்: நஸாயீ: 3127)

"உங்களில் நலிந்த மக்களிடையே என்னைத் தேடுங்கள். ஏனென்றால் உங்களில் நலிந்தவர்களால்தான் நீங்கள் வாழ்வாதாரம் வழங்கப்பெறுகின்றீர்கள்; (பகைவர்களுக்கெதிராக) உதவியும் வழங்கப் பெறுகின்றீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன் என அபுத்தர்தா (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: திர்மிதீ: 1624)

நாம் கொடுப்பதால்தான் ஏழைகள் வாழ்கின்றார்கள் என்று நினைப்பதைவிட, அவர்கள்மூலம்தான் அல்லாஹ் நமக்கு வாழ்வளிக்கிறான் என்பதை மீண்டும் மீண்டும் எண்ணிப்பார்க்கத் தவறக்கூடாது. இருக்கும் செல்வமனைத்தும் நமக்கே சொந்தம் என்று கருதினால் அது மடமைத்தனம். நம்மூலம் ஏழைகள் பயன்பெறவே அல்லாஹ் நம்மிடம் மிதமிஞ்சிய செல்வத்தை வழங்கியுள்ளான் என்று எண்ணி, நம் செல்வத்திலிருந்து ஏழைகளுக்கு ஈந்தால் உயர்ந்தோன் அல்லாஹ் மேன்மேலும் நமக்கு அபிவிருத்தி செய்வான்.

பள்ளிவாசல்களின் முற்றங்களில் நின்றுகொண்டு, திருமணத்திற்காகவோ, தீராத நோய்க்கான சிகிச்சைக்காகவோ இன்னபிற தேவைகளைக் கூறியோ தர்மம் கேட்டால், நாம் நம்மால் இயன்றதை மனதார ஈந்துவிட்டுச் செல்ல வேண்டுமே தவிர, இது உண்மையாக இருக்குமா, பொய் சொல்லித் தர்மம் கேட்கின்றாரா என்ற ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லை. அல்லாஹ் நம் எண்ணத்தைத்தான் பார்க்கிறான். அதற்கேற்ற நற்கூலியைத் தயாளன் அல்லாஹ் நமக்குப் பரிபூரணமாக வழங்கியே தீருவான். வாங்கியவர் ஏமாற்றுக்காரரா, மோசடிக்காரரா என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லை.  அதனை உணர்த்தும் நபிமொழியைப் பாரீர்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “(முன்னொரு காலத்தில்) ஒருவர் நான் தர்மம் செய்யப் போகிறேன் எனக் கூறிக் கொண்டு (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து (தெரியாமல்), ஒரு திருடனிடம் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், "இன்றிரவு ஒரு திருடனுக்குத் தர்மம் வழங்கப்பட்டுள்ளது'' எனப் பேசிக்கொண்டனர். (இதைக் கேட்ட) அவர் "அல்லாஹ்வே! உனக்கே எல்லாப் புகழும் (நாளை) நான் தர்மம் செய்வேன்''  என்று கூறினார். மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) வெளிவந்து அதை ஒரு விபச்சாரியிடம் கொடுத்துவிட்டார். மறுநாள் காலை மக்கள், "இன்றிரவு ஒரு விபச்சாரிக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது'' எனப் பேசிக் கொண்டார்கள். (இதைக் கேட்ட) அவர் "அல்லாஹ்வே! விபச்சாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே எல்லாப் புகழும்! (நாளையும்) நான் தர்மம் செய்வேன்!''  எனக் கூறினார்.

(மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் வெளிவந்து ஒரு பணக்காரரின் கையில் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், "ஒரு பணக்காரருக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது'' எனப் பேசிக்கொண்டனர். உடனே அவர் "அல்லாஹ்வே! திருடனிடமும் விபச்சாரியிடமும் பணக்காரரிடமும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும்'' எனக் கூறினார். அப்போது ஒரு(வான)வர் அவரிடம் வந்து, "நீர் திருடனுக்குக் கொடுத்த தர்மம் அவன் திருடுவதைவிட்டுத் திருந்தக் காரணமாகலாம். விபச்சாரிக்கு நீ கொடுத்த தர்மம் அவள் விபச்சாரத்திலிருந்து விடுபடக் காரணமாகக் கூடும். பணக்காரனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தினால் அவன் படிப்பினை பெற்று அதனால் அவன் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து தர்மம் செய்யக்கூடும்'' எனக் கூறினார். (நூல்: புகாரீ: 1421) இதை அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ், கொடுப்பவரின் உள்ளத்தைத்தான் பார்க்கிறான். வாங்குபவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை என்பதை மேற்கண்ட நபிமொழிமூலம் அறிகின்றோம். வாழும் காலத்தில் ஏழைகளுக்கு வழங்கும் வாய்ப்புக் கிடைக்கப்பெற்றால் அதை அல்லாஹ்வின் அருட்கொடையாகக் கருதிக்கொள்ள வேண்டும். ஏனெனில் எத்தனையோ பேருக்கு அத்தகைய வாய்ப்பே கிட்டாமல் உள்ளது. மரணத்திற்கு முன்னர் நம் செல்வத்தை ஏழைகளுக்கு ஈந்து நம்முடைய வினைச்சுவடியில் நன்மைகளைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். மரணம் நெருங்கிவிட்டால் நாம் நினைத்தவாறு தர்மம் செய்ய இயலாது. மரணித்த பின்னரோ அறவே செய்ய இயலாது. தர்மம் செய்ய வாய்ப்புக் கிடைத்தும் அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லையானால் இழப்பு நமக்குத்தானே? அதை முன்னரே உணர்த்துமுகமாக அல்லாஹ் கூறியுள்ள வசனத்தைக் காணுங்கள்: 

உங்களுக்கு மரணம் வருவதற்கு முன்பாகவே, நாம் உங்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தானம் செய்யுங்கள். (அவ்வாறு செய்யாதவன் மரணிக்கும் சமயத்தில்,) "என் இறைவா! ஒரு சொற்பக் காலத்திற்கு என்னை விட்டுவைக்க வேண்டாமா? (அவ்வாறு விட்டால்,) நான் தானமும் செய்வேன்; (நன்மைகளைச் செய்து) நல்லோர்களிலும் ஆகிவிடுவேனே'' என்று கூறுவான்.  (எனினும்) யாதொரு ஆத்மாவுடைய (மரணத்தின்) தவணை வந்துவிடும் பட்சத்தில் அதனை அல்லாஹ் பிற்படுத்தவே மாட்டான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கின்றான். (63: 10-11)

மரணப்படுக்கையில் இருந்துகொண்டு, தானம் செய்வதற்குத் தருணம் கேட்டால் எப்படிக் கிடைக்கும்? எனவே மரணத்திற்கு முன்பே அறிவாளித்தனமாகத் தானம் வழங்கி நம் வினைச்சுவடியில் நன்மைகளைப் பதிவு செய்துகொள்வோம்.
இன்னும் சொல்லப்போனால், ஏழைகள் வாழும் நாட்டில், ஊரில், பகுதியில் நாம் வாழ்வதே அல்லாஹ் நமக்கு வழங்கிய ஓர் அருட்கொடைதான். ஏனென்றால் நாம் எஞ்சிய செல்வத்தை ஏழைகளுக்கு ஈந்து நன்மையை ஈட்டிக்கொள்ளலாம் அல்லவா? அதேநேரத்தில் நாம் ஒரு பணக்கார நாட்டில், ஊரில், பகுதியில் வாழ்ந்தால், நம்முடைய எஞ்சிய செல்வத்தைத் தானமாக வழங்க முன்வந்தாலும் அதைப் பெறுவார் இருக்கமாட்டார். பிறகெப்படி நாம் நன்மையை ஈட்டிக்கொள்ள  முடியும்? அது நமக்கு ஒரு பேரிழப்புதானே? எனவேதான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: தர்மம் செய்யுங்கள்! ஏனெனில் உங்களிடையே ஒரு காலம் வரும். அக்காலத்தில் ஒருவன் தனது தர்மப் பொருளை எடுத்துக்கொண்டு அலைவான். அப்போது ஒருவன், நேற்றே இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக்குத் தேவையில்லையே என்று கூறுவான். (நூல்: புகாரீ: 1424)

ஆக ஏழைகளை அல்லாஹ் நம்மிடையே வாழ வைத்திருப்பது நாம் நன்மைகளை ஈட்டிக் கொள்வதற்காகத்தான் என்பதை விரைவாக விளங்கிக்கொண்டு, துரிதமாகத் தர்மம் செய்ய முனைய வேண்டும். ஏனென்றால் நாம் கொடுக்கும் தர்மத்தை வேண்டாம் என நிராகரிக்கும்  காலம் வந்தாலும் வந்துவிடலாம். ஏழைகள் நமக்கு நன்மையைப் பெற்றுத் தருபவர்கள். ஆதலால் அவர்களை நன்றாகப் பயன்படுத்திக்கொள்வதோடு அவர்களை நாம் மதிக்கவும் வேண்டும். ஏழைகளுக்கு ஈவதையும் அவர்களோடு வாழ்வதையும் ஒரு நற்பேறாகக் கருத வேண்டும்.

உங்களுள் யாருக்கேனும் வாழ்க்கைத் துணை இல்லாவிட்டால், அவர்களுக்கு(ம் விதவைகளுக்கும்) திருமணம் செய்து வையுங்கள். (அவ்வாறே) உங்கள் அடிமையிலுள்ள நல்லோர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி (வாழ்க்கைத் துணைவரில்லாத) அவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாயிருந்தாலும் அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களுடைய வறுமையை நீக்கிவிடுவான். (கொடை கொடுப்பதில்) அல்லாஹ் மிக்க விசாலமானவனும் (மனிதர்களின் நிலையை) நன்கறிந்தவனும் ஆவான். (24: 32)

இவ்வசனத்தின் கட்டளைக்கேற்ப நம்முள் உள்ள செல்வர்கள் ஒவ்வொருவரும் தம் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்கின்றபோது யாரேனும் ஓர் ஏழைக் குமருக்குத் திருமணம் செய்து வைத்தால் எத்தனையோ ஏழைப் பெண்களின் ஏக்கப் பெருமூச்சைத் தணிக்க முடியும். அவர்களின் திருமணக் கனவை நனவாக்க முடியும். அவர்கள் வாழும் காலமெல்லாம் அந்தச் செல்வருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். திருமண உதவி, கல்வியுதவி, மருத்துவ உதவி உள்ளிட்ட அவசியமான உதவிகளை ஏழைகளுக்குச் செய்வதன்மூலம் அவர்களின் துஆவைப் பெறுவதோடு உயர்ந்தோன் அல்லாஹ்வின் அன்பையும் உவப்பையும் பெறலாம். அத்தகைய பொன்னான வாய்ப்பு நமக்குக் கிட்டும்போதெல்லாம் நாம் அதை விருப்பத்தோடு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதுதான் நம் செல்வ வளர்ச்சிக்குக் காரணமாக அமையும்.

ஏழைகள் கீழானவர்கள் இல்லை. அவர்கள் அல்லாஹ்வின், அவனுடைய தூதரின் பார்வையில் மேலானவர்கள். அவர்கள் தம் ஏழ்மையின் காரணமாகச் சொர்க்கத்தில் நிறைந்து இருப்பவர்கள். அதை மெய்ப்பிக்கும் வண்ணம் நபி (ஸல்) அவர்கள் கூறிய தெள்ளுரையைக் காணுங்கள்: நான் (மிஅராஜ்-விண்ணுலகப் பயணத்தின்போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் பெரும்பான்மையினராக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் பெரும்பான்மையினராகப் பெண்களைக் கண்டேன். (நூல்: புகாரீ: 3241)

அது மட்டுமல்ல, "ஏழைகளைவிடப் பணக்காரர்கள் அரை நாள் (ஐந்நூறு ஆண்டுகள்) தாமதமாகத்தான் சொர்க்கத்தில் நுழைவார்கள்'' (திர்மிதீ: 2276) என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதை எண்ணி, நாம் வெட்கப்படத்தான் வேண்டும். ஏழைகளுக்கு ஈயாமல் சேர்த்துச் சேர்த்து வைத்த பொருள்களுக்கெல்லாம் கணக்குக் கொடுத்துவிட்டுத்தான் சொர்க்கத்தை நோக்கிச் செல்ல முடியும். ஆனால் ஏழைகளோ அதற்குள் சொர்க்கத்திற்குள் நுழைந்துவிடுவார்கள். இது அவர்களுக்குள்ள உயர் சிறப்புதானே? எனவே நாம் ஏழைகளுக்கு ஈவதில் மகிழ்ச்சியடைவோம். அவர்களைக் கண்ணியத்தோடும் மரியாதையோடும் பார்ப்போம். 
================







புதன், 19 அக்டோபர், 2016

நபிகளார் நவின்ற நான்குகள் (தொடர்-8)


முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள் அவற்றைக் கைவிடமாட்டார்கள். (அவையாவன:) 1. குலப்பெருமை பாராட்டுதல், 2. (அடுத்தவரின்) பாரம்பரியத்தைக் குறைகூறுதல், 3. கிரகங்களால் மழை பொழியும் என எதிர்பார்த்தல், 4. ஒப்பாரிவைத்து அழுதல். (நூல்: முஸ்லிம்: 1700) இதை அபூமாலிக் கஅப் பின் ஆஸிம் அல்அஷ்அரீ (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அறியாமைக் காலச் செயல்பாடுகளாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறியுள்ளவை இன்று வரை சமுதாய மக்களிடம் எஞ்சியிருக்கத்தான் செய்கின்றன. அந்தப் பழக்கத்தால் மக்கள் இன்றும் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள் என்பதே உண்மை.
குலப்பெருமை பாராட்டுதல் எனும் போக்கு முஸ்லிம்களிடம் இன்றும் புரையோடிப்போய்க் கிடக்கிறது. முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்கின்ற குறிப்பிட்ட சில ஊர்களில், அவர்கள் தமக்குள்ளேயே பெண்கொடுத்தல், பெண் எடுத்தல் உள்ளிட்டவற்றைச் செய்துகொள்கின்றார்கள். அடுத்த ஊர்க்காரர்களுக்கு அறவே பெண்கொடுக்க மாட்டார்கள்.  வெளியூரிலிருந்து வந்து அங்கேயே நீண்ட காலம் குடியிருந்தாலும் அவர்களுக்குக்கூடப் பெண் கொடுக்க மாட்டார்கள். தாங்கள் மட்டுமே உயர்குலத்தவராகவும் உயர்குடி மக்களாகவும் கருதிக்கொள்கின்ற அறியாமக்கள் இன்றும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.
நாங்கள் சையது வமிசம்’, நாங்கள் ஷேகுவமிசம் என்று கூறிக்கொண்டு குலப்பெருமையடிப்பவர்களும் இருக்கின்றார்கள். இப்படி எந்த வமிசத்திற்கும் எந்த உயர்மதிப்பும் கிடையாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள். ஆக, இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரை குலப்பெருமை அறவே கூடாது.
அடுத்தவரின் பாரம்பரியத்தைக் குறை கூறுதல் எனும் போக்கு ஆங்காங்கே காணப்படுகிறது. நம்முடைய குடும்பத்திற்கென ஒரு பாரம்பரியம் இருக்கு. அதனால நாம் அவங்க குடும்பத்துல பெண் எடுக்கக் கூடாதுஎன்று பேசும் பெண்களும் ஆண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். மேலும் அவரவர் செய்யும் தொழிலை  வைத்து, அவரவர் குடும்பத்தை மதிப்பிடுவதும் நடைமுறையில் இருக்கத்தான் செய்கிறது. சில விஜயங்களை வெளிப்படையாகச் சொல்லாமல் அந்தரங்கமாகவே வைத்துக்கொண்டு, பெண் கொடுக்க மறுப்பதற்கான காரணம் உயர்குலம், உயர்குடி என்றும் தாழ்நிலை மனிதர்கள் என்றும் பாகுபடுத்துவதுதான். இந்தப் பாகுபாடு மறையுமா?
முஸ்லிம்கள் அல்லாதோர் கிரகங்களின் ஓட்டத்தாலும் அவற்றில் ஏற்படுகின்ற மாற்றத்தாலும்தான் மழைபொழிகிறது என்று கூறுவதைக் காண்கிறோம். அறிவியல் வளர்ச்சியடைந்த இக்காலத்தில், அறிவியல்அறிஞர்கள் வேறொரு கோணத்தில் ஆய்வுசெய்து, “காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஏற்பட்டிருப்பதால் இன்று மழைபொழியலாம்என்று கூறுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ் நாடினால்தான் மழைபொழியும் என்பதே ஒரு முஸ்லிமின் இறைநம்பிக்கையாகும். அதற்கப்பால் மனிதன் எது சொன்னாலும் அதுவெல்லாம் பொய்த்துப்போக நூறு சதவிகித வாய்ப்புண்டு. மழை பொழியப் போவதைப்போன்ற சூழல் ஏற்பட்டும் எத்தனையோ தடவை மழை பெய்யாமல் போனதை நாம் பார்த்திருக்கிறோம். அதுபோலவே மழைபெய்யும் எந்த அறிகுறியும் தென்படாமலேயே திடீரென மழை பொழிந்ததையும் நாம் எத்தனையோ தடவை கண்ணாறக் கண்டு அனுபவித்திருக்கிறோம். ஆக மழைபொழிதல், பொழியாமல் இருத்தல் எதுவும் அல்லாஹ்வின் விருப்பத்திற்கேற்ப நடைபெறுகின்ற செயலாகும்.  அதில் மனிதர்கள் தம் குற்றறிவால் கூறுவதெல்லாம் குலைந்துபோய்விடும்.
பொழிகின்ற மழைநீரில் எவ்வளவு மனிதனுக்குரியது; எவ்வளவு நிலத்திற்குரியது; எவ்வளவு கடலில் கலக்க வேண்டியது என்ற கணக்கை அல்லாஹ்வே நிர்ணயிக்கின்றான். அதன்படியே செயலாற்றுகின்றான். அல்லாஹ்வின் திட்டத்திற்கு எதிராக மனிதனின் எண்ணமும் செயலும் ஒருபோதும் நடந்தேறப் போவதில்லை என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
நான்காவது அறியாமைக்காலச் செயலாக ஒப்பாரி வைத்து அழுதல்என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள். பிறந்த ஒவ்வொரு மனிதனும் இறந்தே ஆக வேண்டும் என்ற நியதியை அல்லாஹ் விதித்துள்ளான். இதை மனித சமுதாயமும் ஏற்றுக்கொண்டுதான் உள்ளது. ஆனாலும் இறந்தவரின் அருமை பெருமைகளைச் சொல்லிச் சொல்லி ஒப்பாரி வைத்து அழும் பழக்கம் அறியா மக்களிடம் அண்டிக்கொண்டிருக்கிறது. இறந்தவனை நினைத்து அழுகவும் ஒப்பாரி வைத்து ஓலமிடவும் பெண்கள் நியமிக்கப்படுகின்றார்கள். அவர்கள் இறந்தவனின் முன்னிலையில் அமர்ந்துகொண்டு ஒப்பாரி வைத்து ஓலமிட்டு அழுவார்கள். அதாவது அழுவதைப் போன்று நடிப்பார்கள். அழுது முடிந்ததும் அதற்கான தொகையும் கொடுக்கப்படும். இந்த அறியாமைச் செயல்பாடு இன்றும் எத்தனையோ கிராமங்களில் நடைமுறையில் உள்ளது.
ஆனால் முஸ்லிம்கள், இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டுவிட்டதால் அதுபோன்ற செயல்பாடுகளிலிருந்து தவிர்ந்து வாழ்கின்றார்கள். இருப்பினும் யாரேனும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்பும் இதுபோன்ற அறியாமைக்காலச் செயலைத் தெரியாமல் செய்துவந்தால், அவள் தன் மரணத்திற்குமுன்பே அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அச்செயலிலிருந்து மீள வேண்டும். இல்லையேல் மறுமை நாளில் தாரால் ஆன நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக அவள் நிறுத்தப்படுவாள்” (நூல்: முஸ்லிம்: 1700) என்று மேற்கண்ட நபிமொழியின் தொடரில் இடம்பெற்றுள்ளது. எனவே மேற்கண்ட அறியாமைக்காலச் செயல்பாடுகளையும் அவைபோன்ற வேறு மூடப்பழக்கங்களையும் விட்டு ஒதுங்கி அறிவுப்பூர்வமான மார்க்கத்தைப் பின்பற்றி வாழ்வோமாக!            
-இன் ஷாஅல்லாஹ் தொடரும்.
================


==========

திங்கள், 17 அக்டோபர், 2016

மறதி ஒரு வெகுமதி!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

மறதி என்பது மனித இயல்பாகும். அதனால்தான், "மக்களுள் முதலாமவர் மறதியில் முதல்வர்'' என்று ஓர் அரபுப் பழமொழி உண்டு. முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள்தாம் அல்லாஹ்வின்  கட்டளையை மறந்து, தடை செய்யப்பட்ட மரத்திலிருந்து உண்டுவிட்டார். அதனால்தான் அவர் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது வரலாறு. ஆக, மறதி என்பது முதல் மனிதரிடமிருந்தே தொடங்குகிறது என்பதை அறியும்போது மறதி மனித இயல்புதான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

மறதி மனித இயல்பாக இருப்பதால்தான் அவ்வப்போது மனிதன் மறந்துவிடுகின்றான். அதன் காரணமாக அவன் அல்லாஹ்விடம் தண்டனை பெற்றுவிடக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். எனவே அது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: "திண்ணமாக அல்லாஹ் என்னுடைய சமுதாய மக்கள் தவறுதலாகச் செய்துவிடுதல், மறதியாகச் செய்துவிடுதல், நிர்ப்பந்திக்கப்பட்டுச் செய்தல் ஆகியவற்றை எனக்காக மன்னித்துவிட்டான்.'' (நூல்: இப்னுமாஜா: 2033)

மேலும் நபி (ஸல்) அவர்கள், "உங்களுள் ஒருவர் உணவுண்டால் பிஸ்மில்லாஹ் சொல்லட்டும்தொடக்கத்தில் (பிஸ்மில்லாஹ் சொல்ல) மறந்துவிட்டால், பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆகிரிஹி என்று சொல்லட்டும்''  (பொருள்: முதலிலும் கடைசியிலும் அல்லாஹ்வின் பெயரால் உண்கிறேன்) எனக் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 1781)

ஒரு துஆவைக் கற்றுத் தருகின்றபோதே, அதைச் சொல்ல மறந்துவிட்டால் இவ்வாறு சொல்லட்டும் எனச் சொல்லித் தருகின்றார்கள் என்றால் மறதி மனித இயல்பு என்பதை எந்த அளவிற்கு உணர்ந்துள்ளார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
ஒரு தடவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். அது ஓர் அந்தி நேரத் தொழுகை. அது நான்கு ரக்அத்களைக் கொண்டது. ஆனால் மறதியால் இரண்டு ரக்அத்கள் மட்டும் தொழுது, தொழுகையை முடித்துவிட்டார்கள். அதன்பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் அது குறித்துப் பேச எல்லோருக்கும் தயக்கம். அப்போது துல்யதைன் எனும் நபித்தோழர், "அல்லாஹ்வின் தூதரே! தொழுகை(யின் ரக்அத்கள்) குறைக்கப்பட்டுவிட்டதா? அல்லது தாங்கள் மறந்துவிட்டீர்களா?'' என்று வினவினார். "இவர் சொல்வது உண்மைதானா?'' என்று சூழ இருந்த நபித்தோழர்களிடம் கேட்டார்கள். "ஆம்! இவர் சொல்வது உண்மைதான். தாங்கள் இரண்டு ரக்அத்கள்தாம் தொழுவித்தீர்கள்'' என்று மறுமொழி பகன்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானும் உங்களைப் போன்ற மனிதர்தாம்.  நீங்கள் மறப்பதைப் போலவே நானும் மறந்துவிடுகிறேன். எனவே நான் (எதையேனும்) மறந்துவிட்டால் எனக்கு நீங்கள் நினைவூட்டுங்கள்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 401)

 இந்நபிமொழியில், "நானும் உங்களைப் போன்ற மனிதர்தாம்'' என்று கூறி,  "நீங்கள் மறப்பதைப் போலவே நானும் மறந்துவிடுகிறேன்'' என்று கூறியுள்ளதன்மூலம் மறதி மனித இயல்பு என்பதை மெய்ப்பிக்கின்றார்கள். மறதி என்பது சாதாரண மனிதர்கள் முதல் இறைத்தூதர்கள் வரை அனைவருக்கும் சமமானது என்பதை உணர முடிகிறது. இருப்பினும் இறைத்தூதர்கள் நம்மைப்போன்ற மறதியாளர்கள் கிடையாது என்பதையும் நாம் மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.
இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களுக்கும் மறதி ஏற்பட்டுள்ளது என்பதைத் திருக்குர்ஆன் வாயிலாக அறிகிறோம். களிர் (அலை) அவர்களோடு மூஸா (அலை) அவர்கள் கடற்பயணம் மேற்கொண்டபோது, தாங்கள் என்னிடம் எது குறித்தும் வினா எழுப்பக்கூடாது; பொறுமையாக இருக்க வேண்டுமென நிபந்தனை விதித்தார்கள். அந்நிபந்தனையை மறந்துவிட்ட மூஸா (அலை) அவர்கள், களிர் (அலை) அவர்கள் தாம் பயணம் செய்து சென்றுகொண்டிருந்த மரக்கலத்தைத் துவாரமிட்டதைக் கண்டபோது,  "தாங்கள் ஏன் இந்த மரக்கலத்தில் துவாரமிடுகின்றீர்?'' என்று வினவினார்கள். அது குறித்துத் திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:

அவ்விருவரும் (கடலோரமாக) நடந்தனர். இறுதியில் அவ்விருவரும் மரக்கலம் ஒன்றில் ஏறியதும் அவர் அதில் துளையிட்டார். மூஸா, "இதிலுள்ளோரை மூழ்கடிக்கவா நீங்கள் துளையிட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் மோசமான செயலைச் செய்துவிட்டீர்கள்'' என்று கூறினார். அதற்கு, "என்னுடன் பொறுமையாக இருக்க உங்களால் ஒருபோதும் இயலாது என்று நான் (முன்பே) சொல்லவில்லையா?'' என அவர் (களிர்) கேட்டார். அப்போது அவர் (மூஸா), "நான் மறந்துவிட்டதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர். என் விஷயத்தில் என்னைச் சிரமத்திற்குள்ளாக்கிவிடாதீர்'' என்று கூறினார்.  (18: 71-73)

மறதி மனித இயல்பாக இருந்தாலும் சில வேளைகளில் ஷைத்தான் மனிதனுக்கு மறதியை ஏற்படுத்துகின்றான். அவன் ஒரு மனித விரோதி என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் அவ்வப்போது அவன் மனிதனுக்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டே இருப்பான்.  நல்லறங்களைச் செய்ய முனையும் போது அதில் மறதியை ஏற்படுத்திக் குழப்பத்தை உண்டுபண்ண முனைந்து செயல்படுவான். அது குறித்து நபி (ஸல்) அவர்கள் நமக்கு முன்னெச்சரிக்கை செய்துள்ளார்கள்.

"உங்களுள் யாரேனும் தொழுதுகொண்டிருக்கும்போது அவரிடம் ஷைத்தான் வருவான். அவர் எத்தனை ரக்அத்கள்  தொழுதார் என்பதை அறியாத அளவுக்கு (மறதியை ஏற்படுத்தி)க் குழப்பத்தை உண்டாக்குவான். எனவே இந்த நிலையை உங்களுள் யாரேனும் அடைந்தால், (தொழுகையின் இறுதியில்) அமர்ந்தவாறு அவர் இரண்டு சஜ்தாக்கள் (சலாம் கொடுக்குமுன்) செய்துகொள்ளட்டும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 363)

மற்றொரு வரலாற்றுச் சான்றைக் காணலாம். மூஸா (அலை) அவர்கள் இறைநேசர் களிர் (அலை) அவர்களைச் சந்திக்கச் சென்றபோது தம்முடன் ஓர் இளம் பணியாளரையும் அழைத்துச் சென்றார்கள். அவர் பெயர் யூஷஉ பின் நூன் ஆகும். அல்லாஹ்வின் கட்டளைப்படி, உப்புத் தோய்க்கப்பட்ட மீனைச் சுமந்து வருமாறு தம் பணியாளரிடம் கேட்டுக்கொள்ள, அதை அவர் சுமந்து சென்றார். அந்த மீன் உயிர்பெற்று, கடலுக்குள் நழுவிச் செல்லும் இடமே களிர் (அலை) அவர்களைச் சந்திக்கும் இடம் என்று மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் அடையாளம் சொல்லியிருந்தான். அந்தத் தகவலை மூஸா (அலை) அவர்கள் தம் பணியாளரிடம் சொல்லி, தமக்கு அதைத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்கள். பின்னர் இருவரும் அவரைச் சந்திக்கப் புறப்பட்டுச் சென்றார்கள். கடற்கரை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ஓரிடத்தில் ஓய்வெடுத்தார்கள். அப்போது அந்த மீன் உயிர்பெற்று, கடலுக்குள் சென்றுவிட்டது. சட்டென விழித்த அந்தப் பணியாளர் அந்த மீன் உயிர்பெற்றுச் சென்றதைப் பார்த்துவிட்டார். ஆனால் மூஸா (அலை) அவர்கள் தம் உறக்கத்திலிருந்து எழுந்ததும்  அந்தத் தகவலை அவர் தெரிவிக்க மறந்துவிட்டார். அது குறித்துத் திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

"பார்த்தீர்களா? நாம் அந்தப் பாறையில் ஒதுங்கியபோது அந்த மீனை நான் நிச்சயமாக மறந்துவிட்டேன். அதைப் பற்றி (உங்களிடம்) சொல்லவிடாமல் ஷைத்தான்தான் என்னை மறக்கச் செய்துவிட்டான். அது கடலில் விந்தையான முறையில் தனது பாதையை அமைத்துக்கொண்டது'' என்று கூறினார். (18: 63) ஒரு நல்வினையைச் செய்ய மனிதன் முயலும்போது மனித விரோதியான ஷைத்தான் அதை மறக்கச் செய்கிறான் என்பதை இந்நிகழ்வின் மூலம் விளங்கிக்கொள்ள முடிகிறது.
மறதி மனித இயல்பாக இருந்தாலும் நாம் மறக்காமல் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய எத்தனையோ விஷயங்கள் உள்ளன. முதலில் நம்மையெல்லாம் படைத்த இறைவனை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது; மறுமை நாள், மரணம், நம் அன்றாடக் கடமைகள் முதலியவற்றை மறக்கவே கூடாது. இன்று கடமையை மறந்த பலர் நம் அன்றாட வாழ்வில் வலம் வருகின்றார்கள். ஐவேளைத் தொழுகை ஒவ்வொரு முஸ்லிம் ஆண்-பெண்மீதும் கடமை; அதைப் பெரும்பாலோர் அலட்சியமாகக் கருதி விட்டுவிடுவது தொடர்ந்துகொண்டே உள்ளது. கணவன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்துவிடுகின்றான்; மனைவி தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய  கடமைகளை மறந்துவிடுகின்றாள்; முதலாளி-தொழிலாளி, தாய்-தனயன், தந்தை-மகன், மகள்-தந்தை, பெரியவர்-சிறியவர் இப்படி ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து, பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கின்றனர். இப்பழக்கத்தை முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். கடமையை நிறைவேற்றுதல் குறித்து நாம் மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் கடமை தவறாமல் செயலாற்ற முடியும்.

நன்றி மறப்பது நன்றன்று-நன்றல்லது
அன்றே மறப்பது நன்று- என்று வள்ளுவர் கூறியுள்ளார்.

மறதி மனித இயல்பாக இருந்தாலும் நாம் மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது பிறர் நமக்குச் செய்த உதவியைத்தான். அதை நாம் ஒருபோதும் மறவாமல் அவர் செய்த அந்த உதவிக்குக் கைம்மாறு செய்வது நம் கடமையாகும். எனவே பிறர் நமக்குச் செய்த உதவியை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அதே நேரத்தில், பிறர் நமக்குச் செய்த தீவினைகளையோ துன்பங்களையோ இடர்களையோ நாம் அவ்வப்போது மறந்துவிட வேண்டும். அதுதான் நம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உகந்ததாகும். 

மற்றொரு கோணத்தில் பார்த்தால், சில வகை மறதி அல்லாஹ்வின் அருட்கொடையும் வெகுமதியும் ஆகும் என்றே சொல்லலாம். ஆம்!  நாம் பார்க்கின்ற, செய்கின்ற, சொல்கின்ற எத்தனையோ விஷயங்களை அவ்வப்போது மறந்துவிடுகின்றோம். அந்த மறதி இயல்பாகவே நமக்குள்  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் அவ்வப்போது மறந்துவிடும் இயல்புநிலையை மட்டும் இறைவன் வைக்காதிருந்தால் நாம் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருப்போம்.  எனவே இது இறைவனின் வெகுமதி என்றே சொல்ல வேண்டும்.
ஒரு கணவன் செய்கின்ற சின்னச் சின்ன தவறுகளை மனைவி மறந்துவிடுகின்றாள்; அவன் தன்னைத் திட்டுவதையும் அடிப்பதையும் தொல்லை கொடுப்பதையும் அவ்வப்போது மறந்துவிடுகின்றாள். அதனால்தான் காலையில் சண்டையிட்டு, திட்டிவிட்டுச் சென்ற கணவனை மாலையில் மகிழ்ச்சியோடும் இன்முகத்தோடும் வரவேற்கிறாள். அதுபோலவே மனைவி அவ்வப்போது  செய்துவிடுகின்ற சின்னச்சின்ன தவறுகளையும் குறைபாடுகளையும் கணவன் மன்னித்து, மறந்துவிடுகின்றான். அதனால்தான் காலையில் மனைவி செய்த ஏதோ ஒரு தவறுக்காக அவளைத் திட்டிவிட்டுச் சென்றவன் இரவில் இல்லம் திரும்பும்போது அவளுக்குத் தேவையானதை வாங்கிவந்து அன்போடு கொடுக்கின்றான்.

இப்படித் தம்பதியர் ஒருவருக்கொருவர் மறந்துவிடுவதால்தான் இல்லறமே நல்லறமாய் நடைபெறுகிறது; அதுபோன்றே ஒரு தொழிலாளி செய்யும் தவற்றை முதலாளி மறந்துவிடுவதால்தான் அந்தத் தொழிலாளி தொடர்ந்து அங்கேயே பணியாற்ற முடிகிறது. சிறியவர்கள் செய்யும் தவறுகளைப் பெரியவர்கள் மறந்துவிடுவதால்தான் சமூக வாழ்க்கை சீராக நடைபெறுகிறது. ஆக மறதி என்பது ஒரு கோணத்தில் இறைவனின் வெகுமதி என்றே சொல்லலாம்.

"எங்கள் இறைவா! நாங்கள் (எங்கள் கடமைகளைச் செய்ய) மறந்துவிட்டாலும் அல்லது அதில் தவறிழைத்துவிட்டாலும் அதற்காக நீ எங்களை(க் குற்றம்) பிடித்துவிடாதே!'' (2: 286) என்ற பிரார்த்தனையை நாம் நாள்தோறும் மறக்காமல் செய்துவருவோம். 






=====================