புதன், 15 ஆகஸ்ட், 2018

மக்கள் பணி மிளிரும் பரங்கிப்பேட்டை!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
-----------------------------------------------------------------------------
"நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே; நாட்டிற்காக நீ என்ன செய்தாய் என்று கேள்'' எனும் அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடியின் கூற்றுக்கேற்ப ஈன்றெடுத்த ஊருக்கும் ஊர் மக்களுக்கும் தம்மால் இயன்ற தொண்டுகளைச் செய்வது ஒவ்வொருவர்மீதும் கடமையாகும். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பரங்கிப்பேட்டை ஊர்மக்கள் தமது ஊர் நலனுக்காகப் பல்வேறு சமூகப் பணிகளைப் படைத்தோனின் திருப்தியையும் உவப்பையும் நாடிச் செய்துவருவது மனதாரப் பாராட்டத்தக்கது. 

பாக்கியாத் அரபுக் கல்லூரியில் ஓதிப் பட்டம்பெற்ற முப்பதுக்கும் மேற்பட்ட பாகவிகள் சென்ற மாதம் (ஜூலை 2018) பரங்கிப்பேட்டைக்குச் சென்றிருந்தோம். ஒருவரையொருவர் சந்தித்துப் பழைய நினைவுகளைப் புதுப்பித்துக்கொள்வதும் நபித்தோழர் உக்காஷா (ரளி) அவர்களின் அடக்கவிடத்தைத் தரிசிப்பதுமே பயணத்தின் நோக்கம். அச்சமயத்தில் அவ்வூர்க்காரர்களான அ.பா. கலீல் அஹ்மது பாகவி, முஹம்மது ஃபாரூக் பாகவி ஆகிய இருவரும் அவ்வூர்த் தலைவரையும் சமூக சேவகர்களையும்  சந்தித்து உரையாடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போதுதான் அவர்கள் அவ்வூருக்காகச் செய்துவரும் தன்னலமற்ற சேவைகள் குறித்து எங்களுக்குத் தெரிய வந்தது.

"தர்மம் தலை காக்கும்'' எனும் முதுமொழிக்கேற்பவும் "தர்மம் சோதனைகளை நீக்கும்'' எனும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிக்கேற்பவும் அவ்வூர் மக்கள் பல்வேறு வகையான தர்மங்களைச் செய்வது வியப்பாக இருந்தது.  
  
ஒரு பிடி அரிசித் திட்டம்: தர்மம் செய்வது ஒரு வகை; தர்மம் செய்யத் தூண்டுவது மற்றொரு வகை. அதே நேரத்தில் மக்கள் மத்தியில் ஒரு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமெனில் பலரும் எளிதில் பங்குகொள்ளுமாறு அத்திட்டம் இருக்க வேண்டும். அந்த வகையில் "ஒரு பிடி அரிசித் திட்டம்' அனைவருக்கும் எளிதானது. நீங்கள் உங்களுக்காகச் சமைக்க அரிசி எடுக்கும்போது, ஏழைகளுக்காக இதில் ஒரு பிடி அரிசியைப் போட்டுவிடுங்கள் என்ற கோரிக்கையோடு வீட்டுக்கொரு வாளி கொடுக்கப்படுகிறது. அவர்களும் இன்முகத்தோடு அதை வாங்கி, அதில் ஒவ்வொரு நாளும் ஒரு பிடி அரிசியைப் போட்டு, ஒரு மாதத்தில் அது நிறைந்ததும் சமூகத் தொண்டர்கள் அதைப் பெற்றுச் சென்று, வகை பிரித்து, ஏழ்மையிலும் வாய்திறந்து கேளாமல் மௌனமாக இருப்போரின் நிலையறிந்து தர்மம் செய்யப்படுகிறது. அதைப் பெறுவோரின் வெட்க உணர்வுகளைக் காணக்கூடாது என்பதற்காக, இரவு நேரத்தில் அவரவரின் இல்லத்திற்குமுன் வைத்துவிட்டு வந்துவிடுகின்றனர். விடிந்ததும் அவர்கள் அதை எடுத்துக்கொள்கின்றார்கள். இது ஒவ்வொரு மாதமும் தொய்வின்றி நடைபெற்று வருகிறது. 

தம் ஊரிலுள்ள ஏழைகளுக்குப் போக, எஞ்சியதைப் பக்கத்து ஊரிலுள்ள இருளர் இனத்தாருக்கும் ஏனையோருக்கும் வழங்குகின்றார்கள். "அவர்கள் ஏழைகளுக்கு உணவளிக்கத் தூண்ட மாட்டார்கள்'' என்று நரகவாசிகள் குறித்து இறைவன் திருக்குர்ஆனில் இயம்புகின்றான். ஆனால் "தாம் தர்மம் செய்வதோடு பிற மக்களையும் தர்மம் செய்யத் தூண்ட வேண்டும்'' என்ற அடிப்படையில்  உருவானதே இத்திட்டம் என்கிறார் "தர்மம் செய்வோம் குழுமத்தின்'' செயலாளர் ஹாஜி முஹம்மது அலீ.  

சிறுவர் உண்டியல் திட்டம்: சிறுவர்-சிறுமியரின் இளநெஞ்சில் தர்மச் சிந்தனையை விதைத்து விட்டால் பிற்காலத்தில் பிறருக்கு உதவும் குணம் தானாகவே வந்துவிடும் என்பதை மனதில்கொண்டு, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள சிறுவர்-சிறுமியருக்கு ஓர் உண்டியல் கொடுத்து, ஒவ்வொரு நாளும் கிடைக்கின்ற "பாக்கெட் மணி'யி-ருந்து ஒவ்வொரு ரூபாய் அதில் போட்டுவிட வேண்டும். மாதம் ஒரு முறை அவ்வுண்டியல் காசுகள் ஒன்று சேர்க்கப்பட்டு, அவ்வூரிலுள்ள ஏழைகளுக்குப் பங்கிட்டு வழங்கும் சேவையை அவ்வூர் இளைஞர்கள் செய்து வருகின்றார்கள்.  

ஆடையற்றோருக்கு ஆடை: "யார் ஆடையில்லாத ஒரு முஸ்லிமுக்கு ஆடை வழங்கினாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தின் பச்சை நிற(ப் பட்டு) ஆடைகளை அணிவிப்பான்'' என்ற நபிமொழிக்கேற்ப ஆடையற்றோருக்கு ஆடை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆடை வழங்குவோர் கிழிசல் இல்லாத ஆடையை அல்லது புதிய ஆடையை வழங்க வேண்டும். அவ்வாடைகளை ஒருங்கிணைத்து, தேவைப்படுவோருக்கு வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டம் இப்போது மிகுந்த வளர்ச்சியடைந்துள்ளது. ஆடைகளுக்கென ஒரு கடை திறந்து, சேகரித்த ஆடைகளை அங்கு வைத்துவிடுகின்றனர். தேவைப்படுவோர் அக்கடைக்குச் சென்று புத்தாடை வாங்கி வருவதைப்போன்றே, தமக்கு விருப்பமான ஆடைகளைத் தேர்வு செய்து எடுத்துக்கொள்கின்றனர். ஆடையை வைப்போர் ஒருபுறம் வைத்துவிட்டுச் செல்கின்றனர். ஆடை தேவைப்படுவோர் மறுபுறம் எடுத்துச் செல்கின்றனர். இதனால் நேரடியாகத் தர்மத்தைப் பெறுவோர் கொள்ளும் நாணஉணர்வும் கூனிக் குறுகும் நிலையும் ஏற்படாமல் மனித உணர்வுகள் மதிக்கப்படுகின்றன. 

குருதிக்கொடை: "மூன்றில் நிவாரணம் உண்டு. குருதி குத்தி எடுத்தல், தேனைப் பருகுதல், சூடிட்டுக் கொள்ளுதல். எனினும் என் சமுதாயம் சூடிட்டுக் கொள்வதை நான் தடைசெய்கிறேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். (நூல்: புகாரீ: 5249) இந்நபிமொழிக்கேற்ப மருத்துவ முறைப்படி குருதியை வெளியேற்றுவது உடல் நலத்திற்கு உகந்தது என்பதை அறிய முடிகிறது. முற்கால மக்கள் குருதி குத்தி எடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். தற்காலத்தில் மனிதக் குருதி பிற மனிதர்களின் உயிரைக் காக்க உதவுகிறது. அதனடிப்படையில் குருதிக்கொடை வழங்கப்படுகிறது. அந்த வகையில் இவ்வூரில் குருதிக்கொடையாளர்கள் பலர் தயாராக இருக்கின்றார்கள். தன்னார்வலர்கள்  சுழல் முறையில் குருதிக்கொடை வழங்கி, மனித உயிர்களைக் காக்க உதவுகின்றார்கள். சுற்று வட்டாரக் கிராமங்களிலிருந்து செல்பேசி வழியாக அழைப்பு வந்ததும், மிகத் துரிதமாகச் செயல்பட்டு, குருதிக்கொடை வழங்கிவருகின்றார்கள்.     
    
பசுமைத் திட்டம்: சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்துக்கொள்ளவும் தூய காற்று, நன்னீர் கிடைக்கவும் மரங்கள் பெரிதும் உதவுகின்றன. அந்த வகையில் ஊர் முழுக்க மரங்களை நடுவதற்கென  "பசுமை ஹாஜி'யாரின் தலைமையில் ஒரு குழு செயல்படுகிறது. தமது ஊர் மட்டுமின்றிப் பக்கத்து ஊர்களுக்கும் அயல்நாடுகளுக்கும் சென்று மரங்களை நட்டுவருகின்றார்கள். இன்று அவ்வூர் செழிப்பாகவும் பசுமையாகவும் வளமாகவும் காணப்படுகிறது. 

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரளி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் உம்மு மஅபத் (ரளி) அவர்களது பேரீச்சந் தோப்புக்குச் சென்றார்கள். அவரிடம், "உம்மு மஅபதே! இந்தப் பேரீச்ச மரங்களை நட்டு வைத்தது யார்? முஸ்லிமா அல்லது இறை மறுப்பாளரா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இல்லை; ஒரு முஸ்லிம்தான் (நட்டு வைத்தார்)'' என்று விடையளித்தார். நபி (ஸல்) அவர்கள், "முஸ்லிம் ஒரு மரத்தை நட்டுவைத்து, அதிலிருந்து ஒரு மனிதனோ, ஒரு கால்நடையோ, ஒரு பறவையோ உண்டால், மறுமைநாள் வரை அது அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 3162)

இந்த நபிமொழியின் அடிப்படையில், அவர்களின் இச்சேவையால் பெரிதும் ஈர்க்கப்பட்ட பாகவிகள் தமது பங்குக்கு 21 மரங்கள் நடுவதற்கான தொகையைக் கொடுத்து, தங்கள் சார்பாக மரங்களை நடுமாறு கேட்டுக்கொண்டார்கள். 

ஐக்கிய ஜமாஅத் தலைவர் எஸ்.ஓ. சையது ஆரிப் என்பார் இவ்வூரிலுள்ள பதினைந்து பள்ளிவாசல்களுக்கும் ஒரே தலைவராக உள்ளார். அவரின் ஒத்துழைப்போடுதான் மேற்கண்ட சேவைகள் அனைத்தும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பள்ளிவாசல் சார்பாக இங்குள்ள நாற்பது விதவைகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு இயக்கங்கள் இவ்வூரில் இருந்தாலும் அனைவரும் ஒரே குடையின்கீழ் செயல்படுகின்றார்கள். சமுதாயத்தில் பிளவையோ குழப்பத்தையோ ஏற்படுத்திவிடக் கூடாது  என்ற உணர்வோடு செயல்படுகின்றார்கள். 

ஆக, ஓர் ஊர்மக்கள் தன்னிறைவோடும் மகிழ்ச்சியோடும் வாழ வேண்டுமெனில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதும் தம்மிடம் உள்ளதைப்  பிறருக்குப் பகிர்ந்தளிப்பதும் அவசியமாகும். எல்லா ஊராரும் இவ்வூர் மக்களைப் போன்றே ஒருங்கிணைந்து செயல்பட்டால் எல்லோரும் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழலாம்.


==========================================





செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

இன் ஷா அல்லாஹ் விரைவில் வெளிவருகிறது...

பேரறிஞர் ஷம்சுத்தீன் முஹம்மது பின் அபீபக்ர் பின் கய்யிம் (ரஹ்) அரபியில் எழுதிய அத்திப்புந் நபவீ எனும் நூலின் முழுமையான தமிழாக்கம் விரைவில்  வெளிவருகிறது. (நபிவழி மருத்துவம்) 

 கண்ணியத்திற்குரிய என்னுடைய மூத்த பேராசிரியர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுப் பல்கலைக்கழகத்தின்  முன்னாள் முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் பி.எஸ்.பி. ஜைனுல் ஆபிதீன் பாகவி இந்நூலுக்கு ஆசியுரை வழங்கியுள்ளது சிறப்புக்குரியது. 

 மௌலானா மௌலவி அல்ஹாஜ் கே.எம். இல்யாஸ் ரியாஜி இந்நூலை முழுவதுமாக வாசித்துப் பார்த்து  ஆய்வுரை வழங்கியுள்ளார். 

பன்னூலாசிரியர் எழுத்தாளர்  ஏம்பல் தஜம்முல் முஹம்மது இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார். 

  சென்னை மண்ணடியிலுள்ள சாஜிதா புக் சென்டர் இந்நூலை வெளியிடுகிறது. 

தமிழாக்கம்: முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.   


புதன், 1 ஆகஸ்ட், 2018

இப்போது வெளிவந்துவிட்டது




இந்நூலில் இடம்பெற்றுள்ள எனது முன்னுரை: 





உலகையும் அதனுள் அடங்கியுள்ள எண்ணற்ற பொருட்களையும் மனிதனின் பயன்பாட்டுக்காகவும் அவற்றை இணை இணையாகவும் படைத்துள்ள பேரிறைவன் அல்லாஹ்வுக்கே புகழ் யாவும் உரித்தாகுக! உலக மாந்தர் யாவரும் நேரிய பாதையில் சென்று நன்னெறி வாழ்க்கை வாழ வழிகாட்டிய இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதும் அவர்கள்தம் குடும்பத்தார்மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றி வந்த அவர்கள்தம் தோழர்கள்மீதும் இறையருளும் கருணையும் பொழிவதாக! 

மரியாதைக்குரிய என்னுடைய ஆசிரியர் மௌலானா மௌலவி ஏ. முஹம்மது இல்யாஸ் பாகவி இறைநம்பிக்கை தொடர்பான தம் கருத்துகளையும் விளக்கவுரைகளையும் ஒரு தொகுப்பாக எழுதி, என்னிடம் கொடுத்து, தட்டச்சுச் செய்து தருமாறு கேட்டுக்கொண்டார். நானும் தட்டச்சுச் செய்து அனுப்பிவைத்தேன். அதைச் சரிசெய்து என்னிடம் ஒப்படைப்பதற்குள் ஏகன் அல்லாஹ் அவர்தம் இன்னுயிரைக் கைப்பற்றிக்கொண்டான். (இன்னா லில்லாஹி...)

இன்னும் சிலபல கருத்துகளை ஆங்காங்கே சேர்க்க வேண்டும்; பின்னர் இறைநம்பிக்கையின் (ஈமான்) கடமைகள் ஏழினையும் ஒவ்வொன்றாக எழுத வேண்டும் என்று  என்னிடம் தம் எண்ணத்தைச் சொல்லியிருந்தார்.  அவற்றுள் ஒன்றை எழுதி, நூலுரு பெறுவதற்குள் தமது வாழ்வை முடித்துக்கொண்டதை எண்ணி, நான் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளானேன். 

இறைநம்பிக்கை தொடர்பாக நிறைய கருத்துகளைத் தெரிந்துகொள்ளலாம் என்ற ஆர்வத்தில் இருந்த எனக்கு எல்லாம் ஏமாற்றமாய் முடிந்துபோனது. அதற்கான வாய்ப்பு ஒரேயடியாகப் பறிக்கப்பட்டுவிட்டதை எண்ணியெண்ணி வருந்தினேன்.  இருந்தாலும் கையில் கிடைத்துள்ள இந்த அரிய கருத்துகளையும் விளக்கங்களையும் எப்படியேனும் நூலுருவில் கொண்டுவந்து மக்களிடம்  சமர்ப்பிப்பதே ஒரு மாணவனாக நான் அவருக்குச் செய்யும் கைம்மாறு எனக் கருதினேன். என் எண்ணத்திற்கேற்பவே அவர்தம் புதல்வர் புர்ஹானுத்தீன்  என்னைத் தொடர்புகொண்டு தம் தந்தையின் நூலைச் செம்மைப்படுத்தித் தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.  அதனை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு இந்நூலைச் செம்மைப்படுத்தத் தொடங்கினேன். ஆங்காங்கே இடம்பெற்றிருந்த நபிமொழிகளுக்கு, அவை இடம்பெற்றுள்ள நூலையும் அவற்றிற்குரிய எண்களையும் பதிவு செய்தேன். இந்நூலுக்கேற்ற ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து, “இஸ்லாமியக் கொள்கைகளும் முஸ்லிம்களின் முரண்பாடுகளும் எனச் சூட்டினேன். அரபு வார்த்தைகளை இயன்ற வரை தமிழாக்கம் செய்தேன். சொல்லிச் சொல்லிப் பழகிப்போன அரபுப் பதங்களைத் தொடாமல் அப்படியே விட்டுவிட்டேன்.

இந்நூலை வாசிக்குமுன் வாசகர்கள் தம் உள்ளத்தில் எந்தக் கருத்தையும் தீர்க்கமாக முடிவுசெய்துகொள்ளாமல் திறந்த மனத்துடன் படிக்கத் தொடங்க வேண்டும். ஏனெனில் இந்நூலில் கூறப்பட்டுள்ள எதுவும் நூலாசிரியரின் சொந்தக் கருத்தில்லை; ஒவ்வொன்றையும் திருக்குர்ஆனோடும் திருத்தூதரின் பொய்யாமொழிகளோடும் ஒப்பிட்டு, உரசிப் பார்த்துத்தான் கூறியுள்ளார்.

அறிஞர்கள் சிலரின் தவறான புரிதல்களும் மக்களின் அறியாமையும்  சேர்ந்துகொண்டுதான், மார்க்கம் வலியுறுத்துகின்ற கொள்கைகளுக்கு முரணான இன்றைய நடைமுறைகளை மக்கள் பின்பற்றிவருகின்றார்கள். மார்க்கத்தின் பெயரால் செய்கின்ற எந்தச் செயலாக இருந்தாலும் அது திருக்குர்ஆனுக்கும் திருத்தூதர் போதனைகளுக்கும் ஒத்ததாக இருக்க வேண்டும். அந்த நடுநிலைப்போக்கு எல்லோருக்கும் வந்துவிட்டால் எந்தச் சிக்கலும் இல்லை.

ஒரு கருத்தை வலியுறுத்துகின்ற நபிமொழி தெளிவாக இருக்க, அறிஞர்கள் சிலர் தம் கருத்துகளுக்குத் தோதுவான நபிமொழியைப் பலவீனமான அறிவிப்பாளர்தொடர்மூலம்  அல்லது புனைந்துகூறப்பட்டுள்ள தகவல்மூலம் ஆதாரமாக முன்வைத்து அதைச் செய்வது கூடும் என்று பேசிவிடுகின்றனர்; எழுதிவிடுகின்றனர். அவர்கள் சற்று நிதானப்போக்கோடு சிந்தித்துத் தெளிவடைய  முற்பட்டால் சீரான பாதையை அடையலாம்.

இவ்வவனியில் தோன்றிய எல்லா இறைத்தூதர்களும் போதித்த கொள்கை ஏகத்துவம்தான். அந்த ஏகத்துவத்திற்கு எதிராக எதுவெல்லாம் இருக்கின்றனவோ  அவை அனைத்தும் ஏற்கத்தகாதவை என்பதை ஆணித்தரமாக எடுத்தியம்பியுள்ளார் நூலாசிரியர். ஏகன் அல்லாஹ்வின் ஆற்றலையும் வல்லமையையும் கேலி செய்யும் விதத்தில் மக்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இறைமறைக் குர்ஆனையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இனிய போதனைகளையும் மார்க்க அறிஞர்கள் சிலர் இன்னும் முழுமையாகவும் திறந்த மனத்தோடும் திறந்து பார்க்காமலேயே இருக்கின்றார்கள் என்பது முற்றிலும் உண்மை. அவர்கள் நடுநிலையோடும் திறந்த மனத்தோடும் அவற்றை ஆய்வு செய்யத் தொடங்கினால் நேரிய வழி அவர்களின் கண்முன்னே தெள்ளெனத் தெரியும்.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பொறுத்த வரை, நம்முடைய ஒவ்வொரு செயல்பாட்டிலும் அவர்களைப் பின்பற்றுவதுதான் நம் தலையாய கடமையே தவிர அவர்கள் சொன்னதற்கு முரணாக, அவர்களுக்கு மறைவான ஞானம் இருக்கின்றது என்றோ, அல்லாஹ்வுடைய தன்மைகள் அவர்களுக்கு இருப்பதாகவோ ஏற்றிப்போற்றுவது இல்லை. ஏனெனில் அவர்களுக்கு முகமன் கூறுவதையும் அவர்கள்மீது அருள்புரியுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதையும் ஒவ்வொரு தொழுகையிலும் அல்லாஹ்வே கடமையாக்கியுள்ளான். இதற்கு மேலாக ஒரு சிறப்பும் புகழும் அவர்களுக்குக் கிடைத்துவிடப்போவதில்லை. எனவே நாமாக எதையாவது கற்பனை செய்துகொண்டு அவர்களுக்குத் தகாத தன்மைகளைக் கூறுவதும் புகழ்வதும் இறைநம்பிக்கையைக் குலைக்கக்கூடியது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இன்றைய முஸ்லிம்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கைகளும் செய்கின்ற செயல்பாடுகளும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்தவைதாமா? இவர்களின் செயல்பாடுகளைக் கண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியடைவார்களா? அல்லது ஷைத்தான் குதூகலிப்பானா? அவர்கள் செய்துவருகின்ற செயல்பாடுகள் அல்லாஹ்வைத் திருப்திப்படுத்துமா என்று சற்று நேரம் சிந்தித்துப் பார்த்தால் அவர்கள்தம் செயல்பாடுகளைக் கண்டு அவர்களே வெட்கப்பட வேண்டியிருக்கும். எனவே நாம் ஒவ்வொருவரும் நம்முடைய செயல்பாடுகளைத் திருக்குர்ஆனோடும் திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் பொன்மொழிகளோடும் ஒப்பிட்டுப் பார்ப்பது நம் தலையாய கடமையாகும்.  
              
இந்நூலிலுள்ள எல்லா விசயங்களையும் நீங்கள் படித்துத் தெரிந்துகொள்வதோடு நின்றுவிடாமல் பிறரையும் படிக்கத் தூண்டுங்கள். யார் ஒருவர் ஒரு நன்மையை அறிவிக்கின்றாரோ அவருக்கு அதைச் செய்தவரைப் போன்றவரின் நன்மை இருக்கிறது (நூல்: முஸ்லிம்) என்ற நபிமொழிக்கேற்ப நீங்கள் பிறருக்குச் சொல்லத் தவறிவிடாதீர்.

இந்நூலை நல்ல முறையில் அச்சிட்டுத் தந்த மாஹின் பிரிண்டர்ஸ் உரிமையாளருக்கும் இந்நூலை அச்சிடப் பொருளாதார உதவி நல்கிய என் ஆசிரியரின் மகன் புர்ஹானுத்தீனுக்கும் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி அணிசேர்த்த என் ஆசிரியத் தந்தை மௌலவி ஏ. ஹைதர்அலீ பாகவி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைச் சமர்ப்பித்துக் கொள்கிறேன்.  இந்நூல் அனைவரையும் சென்றடையத் தாங்கள் அனைவரும் உதவி செய்யுமாறும் என் மறுமை நற்பேற்றிற்காகப் பிரார்த்தனை செய்யுமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

                                                                அன்புடன் 
                 மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி


இந்நூல் கிடைக்குமிடங்கள்:

1. குட்வேர்ட் புக்ஸ் 324, காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5
தொடர்புக்கு: 94422 45023

2. சலாமத் புக் ஹவுஸ் லிங்கிச் செட்டித் தெரு, மண்ணடி, சென்னை-1
தொடர்புக்கு: 96000 12039

3. பஷாரத் புக்ஸ் (மஸ்ஜித் மஃமூர் அருகில்) அங்கப்ப நாயக்கன் தெரு, மண்ணடி, சென்னை-1
தொடர்புக்கு: 97899 99256

4. சாஜிதா புக் சென்டர், 248, தம்புச் செட்டித் தெரு, மண்ணடி, சென்னை-1
தொடர்புக்கு: 98409 77758, 044-25224821 
===================