சனி, 27 ஜூலை, 2013

நபிகளார் நவின்ற மூன்றுகள்... தொடர்-3


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் மனங்களில் எளிதாகப் பதிகின்ற வகையில் மும்மூன்றாகக் கூறிய அறிவுரைகள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று: மூன்று மஸ்ஜிதுகளுக்குத் தவிர (நன்மையைக் கருதிப்) பயணம் மேற்கொள்ளப்படாது. 1. மஸ்ஜிதுல் ஹராம், 2. மஸ்ஜிதுல் அக்ஸா, 3. என்னுடைய இந்த மஸ்ஜித் (மஸ்ஜிதுந் நபவீ) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 1122)

மக்கள் நன்மையைக் கருதி மஸ்ஜிதுகளுக்குச் செல்ல நாடினால் மேற்கண்ட இந்த மூன்று மஸ்ஜிதுகளுக்குச் செல்லலாம். இவை தவிர மற்ற மஸ்ஜிதுகளுக்கு நன்மையை நாடிச் செல்லக்கூடாது என்பதே நபிகளாரின் கூற்றிலிருந்து நாம் விளங்கிக்கொள்கிறோம். ஏனெனில் இந்த மஸ்ஜிதுகளுக்குத்தான் மற்ற மஸ்ஜிதுகளைவிட அதிகமான நன்மையைப் பெற்றுத்தருகின்ற சிறப்பு உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் கூறியுள்ள மற்றொரு நபிமொழி அதற்கு ஆதாரமாக உள்ளது.

மஸ்ஜிதுல் ஹராமில் தொழுகின்ற ஒரு தொழுகை மற்ற மஸ்ஜிதுகளில் தொழுவதைவிட ஒரு இலட்சம் மடங்கு சிறப்புடையதாகும். மதீனாவிலுள்ள (என்னுடைய) மஸ்ஜிதில் தொழுகின்ற ஒரு தொழுகை மற்ற மஸ்ஜிதுகளில் தொழுவதைவிட ஆயிரம் மடங்கு சிறப்புடையதாகும். பைத்துல் முகத்தசில் தொழுகின்ற ஒரு தொழுகை மற்ற மஸ்ஜிதுகளில் தொழுவதைவிட ஐந்நூறு மடங்கு சிறப்புடையதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்கள்: தப்ரானீ, இப்னு குஸைமா)

இந்த நபிமொழியின் அடிப்படையில்தான் மக்கள் பலர் உம்ராவுக்கும் ஹஜ்ஜுக்கும் நன்மையை நாடிச் செல்கின்றார்கள். அதன்பின் மஸ்ஜிதுன் நபவீக்குச் செல்கிறார்கள். அங்கு சில நாள்கள் தங்கித் தொழுதுவிட்டு வருகின்றார்கள். அதையும் தாண்டி, அல்லாஹ்வின் சான்றுகளைக் காணப்புறப்பட்டவர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கும் சென்றுவருகின்றார்கள். ஆக, இன்றைக்கு இம்மூன்று பள்ளிகளுக்குச் செல்வது எளிதாகிவிட்டது. அத்தகையோர் நன்மையை நாடி இம்மூன்று பள்ளிவாசல்களுக்குச் செல்லலாம். இவை தவிர வேற்று ஊர்களுக்கோ மஸ்ஜிதுகளுக்கோ நன்மையை நாடிச் செல்ல வேண்டிய அவசியமோ கடமையோ இல்லை என்று விளங்க முடிகிறது.

மூன்று பேரைவிட்டு எழுதுகோல்  உயர்த்தப்பட்டுவிட்டது. 1. தூங்குபவன் விழித்தெழுகின்ற வரை, 2. சிறுவன் பெரியவனாகின்ற வரை, 3. பைத்தியக்காரன் சுயசிந்தனையுடையவனாக ஆகும் வரை- என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: திர்மிதீ: 1343)

அதாவது தூங்குபவன், சிறுவன், சுயசிந்தனை இழந்தவன்-ஆகிய மூவரும் செய்கின்ற  செயல்பாடுகள் தம் சுயகட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகும். தம் சுய சிந்தனையை இழந்து ஒருவன் செய்யும் செயல் சுயசிந்தனையோடு செய்பவனுடைய செயலோடு ஒப்பிடப்பட மாட்டாது. ஒரு சிறுவன், அவன்தன் பருவ வயதை அடைகின்ற வரை அவன் செய்கின்ற சின்னச் சின்னத் தவறுகளும் பிழைகளும் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன. தொழுகை அவன்மீது கடமையாவதில்லை. எனவே தொழுகையை விட்டதற்கான தண்டனைக்கு ஆளாக மாட்டான். இதுவெல்லாம் பருவ வயதை அடைகின்ற வரைதான். இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களைப் பொறுத்த வரை 14 வயது வரை. அவன் 15 வயதை அடைந்துவிட்டால் முற்றிலும் வளர்ச்சியடைந்த, சுயசிந்தனையோடு  செயல்படுகின்ற ஆற்றலைப் பெற்றுவிடுகின்றான். அதன்பின்னர் அவன் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் அவனே  பொறுப்பாளியாவான். நன்மை செய்தால்  நன்மைக்கும் தீமை செய்தால் தீமைக்கும் அவனே பொறுப்பாளியாவான்.

இன்றைய இந்தியச் சட்டப்படி 17 வயது வரை பால்ய பருவமாகவும் 18 வயதை அடைந்தால்  வாலிபப் பருவமாகவும் கணிக்கப்படுகிறது. அதாவது, 18 வயதை அடைந்தால்தான் அவன் சட்ட வரம்புக்குள் வருவான். அது வரை அவன் சிறுவனாகவே கருதப்படுவான். ஆகவே 15 வயது முதல் 17 வயது வரை உள்ள மூன்றாண்டு காலங்களில் அவன் செய்கின்ற குற்றச் செயல்களுக்கு அவனைப் பொறுப்பாளியாக்குவதில்லை. ஆனால் அப்பருவத்தில் அவன் தன்னை அறிந்தேதான் பாலியல் குற்றங்களிலும் கொலைக் குற்றங்களிலும் ஈடுபடுகின்றான் என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம். சட்டத்தில் உள்ள இந்த ஓட்டையைப் பயன்படுத்தி, குறுமதி கொண்ட சிலர் சிறுவர்களைப் பயன்படுத்திச் சில குற்றச் செயல்களைச் செய்யவைக்கின்றார்கள் என்பதும் உய்த்துணர வேண்டிய உண்மை. எனவே இஸ்லாமியச் சட்டப்படி 15 வயதை அடைந்துவிட்ட ஒருவன் பிற மனிதர்களைப்போல் சட்ட வரம்புக்குள் வந்துவிடுகின்றான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

உறங்குபவன் இறந்தவனில் பாதி என்பார்கள். உறங்குபவன் தன் சுயகட்டுப்பாட்டை இழந்துவிடுகின்றான். எனவே அவன் தன் உறக்கத்தில் ஏதேனும் தவறுகள் நிகழ்வதற்குக் காரணமாகிவிட்டால், அவன் தவறாகச் செய்துவிட்ட சட்ட வரம்புக்குள் வருகின்றான். சான்றாக, ஒருவன் உறங்கிக்கொண்டிருக்கும் போது உருண்டு அல்லது மேலிருந்து கீழே படுத்திருப்பவன்மீது விழுந்ததால், அவன் இறந்துவிட்டான் என்றால், அவன் மற்றவர்களைப்போல் பழிக்குப் பழி வாங்கப்படமாட்டான். மாறாக, தவறுதலாகச் செய்துவிட்ட சட்டவரம்புக்குள் வருவான். அதன்படி அவன் இறந்தவனின் குடும்பத்தாருக்கு இழப்பீடு கொடுப்பான்.

இரண்டாம் கலீஃபா உமர் (ரளி) அவர்களின் ஆட்சிக் காலத்தில், சுயநினைவிழந்த பெண்ணொருத்தி விபச்சாரம் செய்துவிட்டதாகக் கூறி அவர்களின் முன்னிலையில் கொண்டுவரப்பட்டாள். அப்போது உமர் (ரளி) அவர்கள் (அங்கிருந்த) மக்களிடம் ஆலோசனை செய்துவிட்டு, அவளைக் கல்லால் அடித்துக்கொல்லுமாறு கட்டளையிட்டார்கள். எனவே அவர்கள் அவளைக் கல்லால் அடிப்பதற்காகக் கொண்டு சென்றார்கள். அப்போது அவர்கள் அலீ (ரளி) அவர்களைக் கடந்து       அப்பெண்ணைக் கொண்டுசென்றார்கள். அலீ (ரளி) அவர்கள், என்ன விஷயம்? என்று வினவினார்கள்.  இன்ன குலத்தைச் சார்ந்த இவள் பைத்தியக்காரி. இவள் விபச்சாரம் செய்துவிட்டாள். எனவே உமர் (ரளி) அவர்கள் இவளைக் கல்லால் அடித்துக்கொல்லுமாறு எங்களை ஏவியுள்ளார்கள் என்று கூறினார்கள். அப்போது அலீ (ரளி) அவர்கள், இவளைத் திரும்பக் கொண்டு செல்லுங்கள் என்று கூறி, அவர்களுடன் அலீ (ரளி) அவர்களும் சென்று, அமீருல் முஃமினீன் அவர்களே! உங்களுக்குத் தெரியாதா? மூன்று பேரைவிட்டு எழுதுகோல் உயர்த்தப்பட்டுவிட்டது. சுயநினைவிழந்தவன் தெளிவடைகின்ற வரை, தூங்குபவன் விழித்தெழுகின்ற வரை, சிறுவன் பருவ வயதை அடைகின்ற வரை. அதனைக் கேட்ட உமர் (ரளி) அவர்கள், ஆம் என்று கூறினார்கள்.  இவள் சுயநினைவற்றவளாக இருப்பதுடனே இவளுடைய நிலை என்ன? என்று அலீ (ரளி) அவர்கள் வினவ, உமர் (ரளி) அவர்கள், (அவளுக்கு) ஒன்றுமில்லை என்று கூறினார்கள். அப்படியானால் அவளை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். எனவே உமர் (ரளி) அவர்கள் அவளை விட்டுவிட்டார்கள். பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறினார்கள்.  (அபூதாவூது: 3823)

ஆக, மூன்றுபேர் செய்யும் செயல்பாடுகள் பிறருக்கு வழங்கப்படுகின்ற சட்டவரம்புக்குள் வராது என்பதையே மேற்கண்ட ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது.

மூன்று விசயங்களை வினையாகச் செய்தாலும் வினைதான். விளையாட்டாகச் செய்தாலும் வினைதான். 1. திருமணம், 2. தலாக்-மணவிலக்கு, 3. மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளல்-என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: இப்னுமாஜா: 2029)

அதாவது, ஒருத்தி தன் உறவுக்காரனிடம் அன்பாகப் பேசிக்கொண்டிருக்கும்போது, நீ என்னைத் திருமணம் செய்துகொள்கின்றாயா மச்சான்? என்று வினவ, அவனும் நான் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறிவிட்டால் அவ்விருவருக்கும் திருமணம் நடைபெற்றுவிடும். அதன்பின் நான் விளையாட்டுக்குத்தானே சொன்னேன் என்று சொல்ல முடியாது. எனவே இதுபோன்ற பேச்சுக்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல் ஒருவன் தன் மனைவியைப் பார்த்து, நீ தலாக் என்று கூறிவிட்டால் அவள் அப்போதே தலாக் ஆகிவிடுவாள். நான் விளையாட்டுக்குத்தான் சொன்னேன் என்று கூறினாலும் அவ்விருவருக்கிடையே தலாக் நிகழ்ந்துவிடும். இருப்பினும் மீண்டும் சேர்ந்துகொள்ளுதல் என்ற அடிப்படையில் இருவரும் சேர்ந்து வாழலாம். ஆனால் இவ்வாறு அவன் மூன்றாம் தடவை கூறிவிட்டால் அவ்விருவருக்கிடையே முற்றிலும் பிரிவு ஏற்பட்டுவிடும். பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்துவாழ இயலாது. அவளை மற்றொருவனுக்குத் திருமணம் செய்துகொடுத்து, அவன் சுயமாக அவளைத்  தலாக் விட்டால்தான் முதல் கணவன் அப்பெண்ணை மீண்டும் திருமணம் செய்துகொள்ள முடியும். எனவே இதுபோன்ற விபரீத விளையாட்டுகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அதுபோலவே, ஏற்கெனவே தலாக் விட்டுவிட்ட தன் மனைவியை, நான் உன்னைத் திரும்ப அழைத்துக்கொண்டுவிட்டேன் என்று விளையாட்டாகக் கூறினாலும் அவர்கள் இருவரிடையே திருமணப் பந்தம் மீண்டும் ஏற்பட்டுவிடும். பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழலாம். எனவே  நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகளை நிதானத்தோடு பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்வோம்.







========================


திங்கள், 22 ஜூலை, 2013

மறதி நல்லது (சிறுகதை)


அன்றொரு நாள் அன்வர் தன்னுடைய தம்பி ராஸிக்கிற்குப் பெண் பார்க்கச் சென்றிருந்தான். தம்பியும் கூடவே சென்றிருந்தான். பெண் நல்ல முறையில் படித்துப் பட்டம் பெற்றுள்ளதோடு, ஓர் இஸ்லாமியப் பள்ளிக்கூடத்தில் தலைமையாசிரியையாகவும் பணியாற்றி வருகிறாள். இஸ்லாமிய மார்க்கப் பற்று மிக்கவள். பணிவும்  அன்பும் நிறைந்தவள். இஸ்லாமிய முறைப்படி நடந்த பேச்சு வார்த்தையில் இருவீட்டாருக்கும் திருப்தி ஏற்படவே மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்திருந்த கல்லூரிப் பேராசிரியரிடம் தன் படிப்பைப் பற்றியும் அதற்கு உதவி செய்தவர்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தான் ராஸிக்.

அவனுக்கு மூன்று அண்ணன்கள். அவர்களுள் கடைசி அண்ணன்தான் அன்வர். அவனுடைய படிப்புக்கும் அன்வருடைய படிப்புக்கும் மூத்த இரண்டு அண்ணன்கள்தாம் உதவிசெய்தனர். நாளடைவில் அன்வர் படித்து முடித்து ஒரு பணியில் சேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கிவிட்டான். அப்போது ராஸிக், “பி.எஸ்ஸி. வரைக்கும் ரெண்டு அண்ணன்களும் நெறைய உதவி செய்துட்டாங்க. இப்ப நீங்க எம்.எஸ்ஸிக்கு உதவி செய்யுங்க” என்று உதவி கேட்டான். அன்வர் சரியென ஒத்துக்கொண்டான்.

ராஸிக் தன் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கிப் படித்து வந்தான். மாதந்தோறும் அன்வர் முகவரிக்குத்தான் கல்லூரி பில் வரும். ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கான வரைவோலை எடுத்து கல்லூரி முகவரிக்கு அனுப்பிவிடுவான். இவ்வாறு சில மாதங்கள் தொடர்ந்தது. பின்னர் அன்வர் தன் மூத்த அண்ணனுக்கே பணத்தை அனுப்பி, நீங்களே கல்லூரிக்குப் பணத்தைக் கட்டிவிடுங்கள் என்று கூறினான். அதன்படி அவரே கட்டிவந்தாலும் எம்எஸ்ஸி முடியும் வரை உதவி செய்தவன்  அன்வர்தான். ஆனால், அன்று ராஸிக் பேசிக்கொண்டிருந்தபோது, “என் இரண்டு அண்ணன்கள்தாம் என்னைப் படிக்க வைத்தனர்” என்று கூறினான்.

உண்மைதான். அவர்கள் இரண்டு பேரும் நிறைய செலவு செய்திருக்கிறார்கள். அவர்கள் அளவுக்கு  அன்வர் செய்யாவிட்டாலும், அவனால் முடிந்த அளவுக்கு அவன் கொடுத்துக்கொண்டுதான் இருந்தான். ஏன், இன்றைக்குத் திருமணம் வரைக்கும் முயற்சி செய்தது யார்? அன்வர்தானே? இதை அவன் மறுக்க முடியுமா?

அவன் எம்.எஸ்ஸி. முடித்துவிட்டுச் சென்னைக்கு வேலை தேடி வந்தபோது அவனுக்கு இருப்பிடம் கொடுத்து, செல்போனும் வாங்கிக் கொடுத்தவன் அன்வர்தான். தான் பணிசெய்த இடத்திலேயே தன் தம்பி ராஸிக்கைத் தங்க வைத்து, தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தான். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவன் மேற்படிப்பு படிக்க விரும்பினான். தன் மூத்த அண்ணனிடம்  பண உதவி பெற்று பி.எட் படித்தான். பிறகு எம்.எட். படித்தான். பிறகும் படிக்க வேண்டும் என்று  கூறி அன்வரிடம் பண உதவி கேட்டான். அவன் ஒருவரிடம் கடன் பெற்று எட்டாயிரம் ரூபாய் கொடுத்து, மேற்படிப்புக்கு ஆர்வமூட்டினான்.

இத்தனையும் செய்து, இன்றைக்கு ஒரு நல்ல இடத்தில் பெண்பார்த்துக் கொடுத்து, தன் தம்பி நல்லா வாழ வேண்டும் என்று நினைக்கின்ற தன்னை அவன் மறந்துவிட்டானே என்றெண்ணி  அவன் மனம் குமுறியது. இருப்பினும் அதையெல்லாம் காட்டிக்கொள்ளாமல் அன்வர் இயல்பாகப் பேசிவிட்டு, குறிப்பிட்ட நாளில் நிச்சயதார்த்தம் வைத்துக்கொள்ளலாம் என்று கூறிக்கொண்டே விடைபெற்றான்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட அன்வருடைய சின்னம்மா மகிழ்ச்சி கொள்ளவில்லை. ஏனென்றால் அவர் வேறொரு பக்கம்  பெண் பார்த்துக்கொண்டிருந்தார். இறுதியில் சென்னையில் பார்த்த பெண்ணையே முடிவுசெய்வதாகக் கூறி, நிச்சயதார்த்தம் செய்வதற்கான தேதி குறித்தாயிற்று. நிச்சயதார்த்தம் நடக்க இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில் அன்வர் தன் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றான். அங்குதான் அந்நிகழ்வு நடைபெறுவதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஊருக்குப் புறப்பட்டு, பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது ராஸிக் போன் செய்தான். அண்ணே, நிச்சயதார்த்தத்தை கேன்சல் செஞ்சாச்சு. நீங்க நேரா வாங்க, முழுமையான விவரத்தை அங்கு சொல்றேன் என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.

சரி, நேரடியாகச் சென்று விவரத்தைத் தெரிந்துகொள்ளலாம் என்று அன்வர் அமைதியாகப் பயணத்தைத் தொடர்ந்தான். மறுநாள் அவன் தன் அண்ணன்கள், தந்தை மற்றுமுள்ள உறவினர்கள் முன்னிலையில் பேசும்போதுதான் தெரிந்தது அவனுடைய மனமாற்றம்.

அதாவது, சென்னையில் பார்த்த பெண் வசதியான குடும்பத்தைச் சார்ந்தவளாக இல்லை என்பதால் அவனுடைய சின்னம்மா, தான் ஏற்கெனவே சொல்லிவைத்திருந்த வேறொரு பெண்வீட்டாரிடம், ராஸிக் உடைய செல்பேசி எண்ணைக் கொடுத்துப் பேசச் சொல்லியுள்ளார். அங்கிருந்து ஒருவர் அவனிடம் பேசி எல்லா விவரங்களையும் சொன்னதோடு மட்டுமில்லாமல் அவர்கள் காரில் வந்து அவனை அழைத்துச் சென்றுள்ளனர்.

இதற்குமுன் என்ன நடந்தது தெரியுமா? அவனுடைய சின்னம்மா ராஸிக்கிற்கு போன் செய்து, “இன்ன எடத்துல ஒரு  பொண்ணு இருக்கு. பிளஸ் டூ தான் படிச்சிருக்கு. அதப் பாக்காதே. நூறு பவுன் போடுவாங்க. செலவுக்கு 5 இலட்சம், கார் எல்லாம் தர்றாங்களாம். நீ என்ன சொல்றே?” என்றதும் அவன் சற்றுத் தடுமாறித்தான் போனான். அவனுடைய மனம் ஒரு குரங்கைப் போல கிளைவிட்டுக் கிளை தாவிக் கொண்டிருந்தது.  “பொண்ணு வீட்லயிருந்து போன் செய்வாங்க. நீ எதுவும் பேச வேண்டாம். ஓ.கே. மட்டும் சொல்லு” என்று சொல்லி போன் அழைப்பைத் துண்டித்தார்.

மறுநாளே, அவன் வேலை செய்யுற கல்லூரிக்கு மணப்பெண் வீட்டிலிருந்து காரில் இரண்டு பேர் வந்து அவனைப் பார்த்தாங்க. அது மட்டுமில்லாம அவனைக் காரிலேயே அழைத்துக்கொண்டு நேரடியாகப் பெண்ணிடம் பேசச் செஞ்சாங்க. அவனுக்குப் பிடித்துப்போய்விட்டது. படிப்பா, பணமா என்று மனம் தடுமாறிய வேளையில் பணத்தின் பக்கமே அவன் மனம் சாய்ந்தது.

இறுதியில் அந்தப் பணக்காரப் பெண்ணோடுதான் திருமண நிச்சயதார்த்தம் என்று அவனுடைய சின்னம்மா தலைமையில் அவனே முடிவுசெய்தான். இதனால் மனமுடைந்த அன்வர், முன்னர் நிச்சயதார்த்த தேதி குறித்த வீட்டாருக்கு என்ன பதில் சொல்வது என்று விழிபிதுங்கி நின்றான். அவனுடைய தம்பி ராஸிக் ஒரு வார்த்தையில் கேன்சல் என்று சொல்லி விட்டான். ஆனால் பெண்வீட்டில் சொல்லி, அதற்கான ஏற்பாடு செய்யச் சொன்னது அன்வர்தானே. ஆகவே அவன்தான் போன் செய்து  சொல்லியாகணும். அவர்கள் திட்டுவதையும் வாங்கிக்கொள்ளணும். திட்டினாலும் பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டு, அன்வர் போன் செய்து, தன் வருத்தத்தைத் தெரிவித்தான். பதிலுக்கு அவர்கள் அன்வரைக் கடிந்துகொண்டார்கள்.

நிச்சயதார்த்தம் முடிவுற்று, திருமணம் நெருங்கி வந்துகொண்டிருந்தது. அவன் அனுப்பிய திருமணப் பத்திரிகையும் வீடு வந்து சேர்ந்தது.

ராஸிக்கின் நன்றியறியாமையையும் அவசரப்போக்கையும் துடுக்கான பேச்சுகளையும் இன்னபிற செயல்பாடுகளையும் மறந்துவிட்டுத்தான், இதோ நாளை நடக்கவுள்ள அவனுடைய திருமணத்திற்குச் செல்ல இரயில் நிலையம் நோக்கி நடந்துகொண்டிருக்கிறான் அன்வர்.



====================