செவ்வாய், 29 அக்டோபர், 2019

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

என்ன பிடுங்கினாய்?



நீ அஞ்சு வருஷமா எம்.எல்.ஏ.வா இருந்து என்ன புடுங்கின?” என்று கொச்சையாக மக்கள் கேட்பதுண்டு. பிடுங்கினாய் என்பதைத்தான் புடுங்கினாய் என்று பேச்சுத் தமிழில் கேட்கிறார்கள். சிலர் அதைக் கெட்ட வார்த்தையாக எண்ணிக்கொண்டு அதைப் பயன்படுத்துவதையே தவிர்த்துவிடுகின்றனர்.

சரி! எம்.எல்.ஏ.வாக உள்ள ஒருவர் என்ன பிடுங்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள்? ஊரில் ஆங்காங்கே தேவையில்லாமல் மண்டிக்கிடக்கின்ற புதர்களையும் களைகளையும் பிடுங்கிச் சுத்தம் செய்து ஊரின் சுற்றுப் புறங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். குளத்தில் படர்ந்து கிடக்கின்ற செடிகொடிகளையும் தாமரைக் கொடிகளையும் பிடுங்கி எறிந்துவிட்டு, குளநீரைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆங்காங்கே தவறு செய்யக்கூடிய அதிகாரிகளின் பதவியைப் பிடுங்கிக்கொண்டு, வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மக்களின் வறுமையைப் பிடுங்கி எறிந்துவிட்டு, செழுமையை விதைக்க வேண்டும். அவர்களின் அறியாமையைப் பிடுங்கி எறிந்துவிட்டு, கல்வியைப் புகட்டப் பாடுபட வேண்டும். குண்டும் குழியுமான சாலைகளைப் பிடுங்கி எறிந்துவிட்டு, சீரான சாலைகளை அமைக்க வேண்டும். இவை போன்ற செயல்களைத்தான் மக்கள் அவரிடம் எதிர்பார்க்கிறார்கள். இவற்றுள் எதையாவது அவர்கள் பிடுங்கி இருக்கிறார்களா என்பதே கேள்விக்குறி.

நீ பத்து வருஷமா ஆசிரியரா இருந்து என்ன புடுங்கின?” என்று கேட்கப்பட்டால் அவர் அதற்கான பதிலைத் தயாராக வைத்திருக்க வேண்டும். நான் இத்தனை வருடங்களாக, இங்கே அறியாமையில் உழன்றுகொண்டிருந்த பிள்ளைகளின் அறியாமையைப் பிடுங்கிப் போட்டுவிட்டு, கல்வி எனும் அறிவொளியை ஏற்றிவைத்துள்ளேன். அவர்களின் மனங்களில் வேரூன்றியிருந்த கெட்ட பழக்கங்களை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டு, நற்பழக்கங்களையும் நற்குணங்களையும் விதைத்துள்ளேன். அவர்களின் மனங்களில் பதிந்திருந்த தாழ்வு மனப்பான்மையைப் பிடுங்கி எறிந்துவிட்டு, துணிவை விதைத்துள்ளேன். இதோ என்னிடம் பயின்றவர்கள் என்னைவிட மேம்பட்ட நிலையில் உள்ளதைக் காணீர்என்று சுட்டிக்காட்ட வேண்டும்.

இப்படியே பொறுப்பில் உள்ள ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பில் இருந்துகொண்டு எதையெதைப் பிடுங்கினோம் என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பார்த்து, செயலாற்றத் தொடங்கினால் சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கின்ற தீயவற்றைப் பிடுங்கிவிட்டு, நல்லவற்றை விதைக்கத் தொடங்கிவிடுவோம். பின்னர் யாராவது மேற்கண்ட வினாவை நம்மிடம் தொடுக்கின்றபோது, நாம் அதற்குரிய பதிலைச் சொல்ல முடியும்.

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

27 10 2019     27 02 1441




வெள்ளி, 25 அக்டோபர், 2019

சிந்திப்போருக்கே சீரான பாதை!


மதிப்பிற்குரிய முஹம்மது அல்தாஃப் அவர்கள் தொகுத்த அத்தாட்சிகள்’ 
எனும் திருக்குர்ஆன் கலைக்களஞ்சியத்திற்கு நான் எழுதிய மேலாய்வுரை உங்கள் பார்வைக்கு...

சிந்திப்போருக்கே சீரான பாதை!
-
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி.
(இமாம், மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார்-மணலி, சென்னை-68)
-----------------------------------------------------------------------------------------

ஆகுக எனும் சொல்லால் அகிலத்தைப் படைத்த ஆற்றலும் வல்லமையும் கொண்ட அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கிறேன். அகில மக்கள் யாவருக்கும் நல்வழிகாட்ட வந்த கருணையுள்ளம் கொண்ட கண்மணி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள்மீதும் அவர்கள்தம் குடும்பத்தார், ஆருயிர்த் தோழர்கள்மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் பொழிவதாக!

மதிப்பிற்குரிய முஹம்மது அல்தாஃப் அவர்கள் அத்தாட்சிகள்எனும் திருக்குர்ஆன் கலைக்களஞ்சியத்தை என்னிடம் கொடுத்து, மேற்பார்வையிடச் சொன்னார். அதனால் நூல் முழுவதையும் புரட்டிப் பார்த்து வாசிக்கத் தொடங்கியபோது, திருக்குர்ஆன் ஓர் அறிவியல் நூலோ என்ற எண்ணம் தோன்றியது. அவ்வளவு அறிவியல் கருத்துகளை உயர்ந்தோன் அல்லாஹ் அதனுள் நிறைத்து வைத்துள்ளான்.

திருக்குர்ஆனில் பொதிந்து கிடக்கின்ற கருத்துகள்மூலம் ஈருலகப் பயன்களைப் பெறவேண்டுமென்றால் அவர் நல்வழி பெற்று, இறைநம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும். அந்த நல்வழி அனைவருக்கும் கிடைத்து விடாது. இறைவனைப் பற்றிச் சிந்தித்து, அவனை உணர்ந்து, நல்வழியை அடைய வேண்டுமென்ற எண்ணம் கொஞ்சமாவது அவர்தம் மனத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு அல்லாஹ் அத்தகைய நல்வழியை மனத்தில் போட்டு, சீரான பாதைக்கு அழைத்துச் செல்வான். மனிதனுக்கு ஆறாம் அறிவு வழங்கப்பட்ட காரணமே, அவன் சுயமாகச் சிந்தித்து, தன்னைப் படைத்தவனைக் கண்டறிய வேண்டுமென்பதற்காகத்தான். தவறான மார்க்கத்தில் பயணிப்பவன்கூட, தன் பகுத்தறிவால், தன்னைப் படைத்தவனைக் கண்டறிந்துவிடலாம். அத்தகைய அறிவுத் திறனோடுதான் அல்லாஹ் மனிதனைப் படைத்துள்ளான். அதற்கு இக்கலைக் களஞ்சியம் வழிகாட்டுகிறது.

நிச்சயமாக மனிதர்களிலும், ஜின்களிலும் பலரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கிறோம். அவர்கள் உள்ளங்கள் இருந்தும் சிந்திக்காதவர்கள்; கண்கள் இருந்தும் (இவ்வுலகிலுள்ள இறைவனின் சான்றுகளைப்) பார்க்காதவர்கள்; செவிகள் இருந்தும் (நல்லுபதேசங்களுக்குச்) செவிசாய்க்காதவர்கள். அத்தகையோர் விலங்குகளைப்போல் ஏன், அவற்றைவிட மிகக் கேடுகெட்டோர்” (7: 179) என்று அல்லாஹ் கூறுகின்ற இவ்வசனத்தில், சிந்திக்காத மனிதனை, வனவிலங்குகளைவிட மிக மோசமாக அவன் சித்திரிக்கிறான்.

மனிதன் தன் அறிவால் எவ்வளவு தொலைநோக்கோடும் ஆழமாகவும் சிந்திக்கின்றானோ அதற்கேற்ப விரிவான, ஆழமான கருத்துகளை அடைந்துகொள்ளும் விதத்தில்தான் மனித அறிவை அல்லாஹ் படைத்துள்ளான். திருக்குர்ஆன் வசனங்களைப் பரந்த மனத்தோடும் திறந்த உள்ளத்தோடும் சிந்திக்கும்போது அதில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான வசனங்கள் அறிவியல் உண்மைகளைப் பற்றிப் பேசுபவையாக இருப்பதைக் காணலாம். ஏதேனும் ஓர் உதாரணம் கூறி, மக்களுக்கு விளக்குவதாக இருந்தாலும் அதனுள்ளும் ஓர் அறிவியல் உண்மையைப் பொதிந்து பேசுவது அல்லாஹ்வின் வழக்கம்.

பின்வரும் வசனங்கள் அதற்குச் சான்றாக அமையும்.
விண்வெளியில் ஆக்ஸிஜன் இல்லை: அல்லாஹ் யாருக்கு நல்வழி காண்பிக்க விரும்புகின்றானோ அவருடைய உள்ளத்தை இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் (செல்ல) விரிவாக்குகிறான். யாரை அவருடைய வழிகேட்டிலேயே விட்டுவிட நாடுகின்றானோ அவருடைய உள்ளத்தை வானத்தில் ஏறுபவரைப்போல் சிரமப்பட்டு (உள்ளம்) சுருங்கும்படியாக்கி விடுகிறான். (6: 125)

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள அறிவியல் கருத்து வெளிப்படையாகத் தெரியாது. ஆழமாகச் சிந்திப்போருக்கே விளங்கும். இந்தப் பூமியை மனிதன் வாழ்வதற்கேற்ப வகையில் அல்லாஹ் படைத்துள்ளான். அதாவது அவன் எப்போதும் சுவாசிக்க சுத்தமான காற்றை நிரப்பி, வளி மண்டலமாக அமைத்துள்ளான். அதனால்தான் மனிதன் எவ்விதச் சிரமுமின்றி வாழ முடிகிறது. அதேநேரத்தில் மனிதன் வானத்தை நோக்கி ஏறும்போது, ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்து சென்றுவிட்டால் வளிமண்டலப் பகுதி முடிந்துவிடும். அதற்கு அப்பால் அவன் சுவாசிப்பதற்கான காற்று கிடையாது. அதனால் அவன் தன் இதயம் சுருங்கி, சுவாசிக்கச் சிரமப்படுவான்; இறுதியில் இறந்தும்விடுவான். அதனால்தான் விண்வெளிப் பயணம் மேற்கொள்வோர் தம் முதுகில் ஆக்ஸிஜனோடு செல்கிறார்கள். இந்த அறிவியல் உண்மை இவ்வசனத்தினுள் உள்ளதை அறிகிறோம்.

எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோஅவன் வானத்திலிருந்து கீழே விழுபவனைப் போலாவான். அவனைப் பறவை கொத்திச் செல்லும்; அல்லது காற்று தூரமான இடத்திற்கு அடித்துச் செல்லும்” (22: 31) என்று அல்லாஹ் கூறுகின்றான். ஒருவன் மேலிருந்து ஒரு பொருளைப் போட்டால் அது மேல்நோக்கிச் செல்லாமல் பூமியை நோக்கியே மிக வேகமாக வந்து கீழே விழும். இது எதனால்? இப்பூமி புவியீர்ப்பு விசையைக் கொண்டிருப்பதால்தான். இணைவைப்பவன் குறித்துப் பேசும்போது அதனூடாக ஓர் உதாரணத்தைக் கூறி, அதில் ஓர் அறிவியல் உண்மையைக் கூறியுள்ளான் இறைவன். இதுதான் அவன் நுண்ணறிவாளன் என்பதற்கான அடையாளம். மேலும் மேலிருந்து கீழே விழும் மனிதன் எவ்வாறு உயிர்பிழைக்க மாட்டானோ அவ்வாறே இணைவைப்பவன் அச்செயலிலிருந்து மீளவில்லையென்றால் அவன் வானிலிருந்து கீழே விழுந்து, தன்னைத்தானே மாய்த்துக் கொள்வதற்குத் தயாராகின்றான் எனப் பொருளாகும்.

பேரிரைச்சலால் மரணம்: ஒரே ஒரு பேரிரைச்சல்தான். அப்போது அவர்கள் அணைந்து (பொசுங்கிப்போய்) விட்டார்கள்” (36: 29) என்று அல்லாஹ் கூறுகின்றான். இவ்வசனத்தை ஆழமாகச் சிந்தித்துப் பார்த்த அறிவியல் அறிஞர்கள் இதன் உண்மையைப் புரிந்துகொண்டார்கள். ஆம்! மனிதன் சராசரியாகக் கேட்பதற்கென ஓர் ஒலி அளவு உண்டு. அது டெசிபல் அளவால் அறியப்படுகிறது. மனிதன் இயல்பாகக் கேட்பதற்கான டெசிபல் அளவு 60 முதல் 80 வரை இருக்கலாம். எண்பதைத் தாண்டினால் அது ஒலிமாசுஆகும். அதையும் தாண்டினால் பேரிரைச்சல் ஆகும். தொழிற்சாலையின் இராட்சத மெஷின்களுக்கு அருகில் தொடர்ந்து வேலைசெய்யும் ஒருவர் குறிப்பிட்ட காலத்திற்குப்பின் தமது கேட்கும் திறனை இழந்துவிடுவார். அந்த அடிப்படையில் ஓர் இடியின் டெசிபல் அளவு எவ்வளவு இருக்கும்

அப்படியானால் மக்களை அழிப்பதற்கான பேரிடியின் சத்தம் எப்படி இருந்திருக்கும்? பேரிடியின் பேரிரைச்சல் மூலம் காதுச் சவ்வு கிழிந்து, மனிதன் அழிந்துவிடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆக, அந்த அடிப்படையில்தான் இறைவனை மறுத்த சில ஊர் மக்களை ஒரே ஒரு பேரிடியின்மூலம் ஒரேயடியாக அல்லாஹ் அழித்தான்.

புவி ஈர்ப்பாற்றல்: உயிருள்ளவர்களுக்கும் மரணித்தவர்களுக்கும் இப்பூமியை ஒன்றுதிரட்டி வைக்கும் இடமாக நாம் ஆக்கவில்லையா?” (77: 25-26) என்று அல்லாஹ் கேட்கின்றான். மற்றொரு வசனத்தையும் பாருங்கள்: ஒவ்வொன்றும் (அதனதன்) கோள்வீதியில் நீந்தி(யவாறு சுற்றி)க் கொண்டிருக்கின்றன.” (36: 40)

நிலத்தின் முதுகில் மனிதன் வாழ்கிறான். இறந்தபின் அதன் வயிற்றினுள் அடக்கம் செய்யப்படுகிறான். பூமியின் ஈர்ப்பாற்றலால்தான் மனிதன் அதன்மீது நிலையாக நடக்கவும் ஓடவும் முடிகின்றது. அதன் ஈர்ப்பாற்றல் மூலமே எத்தனையோ உடல்களையும் பொருள்களையும் அது தன்னுள் வைத்துக்கொள்கிறது. அதேநேரத்தில் ஈர்ப்பாற்றல் இல்லாத வானத்திலோ பொருள்கள் ஒவ்வொன்றும் நீந்திக்கொண்டிருக்கின்றன. ஒருவேளை புவிக்கு ஈர்ப்பாற்றல் இல்லாதிருந்திருந்தால் நாம் அனைவரும் நீந்திக்கொண்டுதான் இருந்திருக்க வேண்டும். அதை மாற்றி, மனிதன் வாழ்வதற்கேற்ற இடமாக இப்புவிப் பரப்பை அல்லாஹ் ஆக்கியுள்ளான். அதனை ஒரு சான்றாகக் கருதி, தன்மீது நம்பிக்கைகொண்டு, தன்னையே வணங்குமாறு அவன் கட்டளையிடுகின்றான்.

மற்றோர் வசனத்தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்: அ(ந்த இறை)வன்தான் (நடந்து செல்லவும் விவசாயம் செய்யவும்) பூமியைக் கட்டுப்பட்டதாக ஆக்கித் தந்தான். எனவே பூமியின் (பல்வேறு) பாகங்களில் நடந்து செல்லுங்கள்.” (67: 15) நடப்பதற்கேற்ற முறையில் இப்பூமிப் பந்தை அல்லாஹ் ஆக்கியிருப்பதன்மூலம், அவன் தன்னை ஒரு நுட்பமான படைப்பாளன் என நிரூபிக்கிறான்.

கைரேகை: நாமோ அவனுடைய விரல்நுனிகளைக்கூடத் துல்லியமாக அமைத்திட ஆற்றலுடையோராய் இருக்கின்றோம்” (75: 4) என்று அல்லாஹ் கூறுகின்றான். தம் பெயரை எழுதி, கையொப்பம் போடத் தெரியாத படிக்காத பாமரர்கள், தம் கையின் பெருவிரலை மையில் தோய்த்து, கைரேகையைப் பதியச் செய்வார்கள். ஆனால் விஞ்ஞானம் மிகவும் வளர்ச்சியடைந்த இக்காலத்தில் படித்தோர், படிக்காதோர் என அனைவரும் தம் கைரேகையைப் பதிவு செய்கின்றனர். இந்த அளவிற்குக் கைரேகை முக்கியத்துவம் பெறக் காரணமென்ன? ஒருவரின் கைரேகையைப் போல் மற்றொருவரின் கைரேகை இருப்பதில்லை. அவ்வளவு நுட்பமாக நுண்ணறிவாளன் அல்லாஹ் மனிதனைப் படைத்துள்ளான். அதனால்தான் அவனை மறுத்த இறைமறுப்பாளர்கள், நாங்கள் இறந்தபின் எங்களை அவன் எவ்வாறு உயிர்ப்பிப்பான் என்று ஏளனமாகக் கேட்டபோது, அதற்குப் பதிலளித்து, தன் வல்லமை குறித்துச் சொல்லும்போது, “அவனுடைய விரல்நுனிகளைக்கூடத் துல்லியமாக மீண்டும் அமைப்போம்என்று அல்லாஹ் தெரிவிக்கிறான்.

ஒவ்வொன்றிலும் இணை: பூமி விளைவிப்பவையிலும் (மனிதர்களாகிய) அவர்களிலும் இன்னும் அவர்கள் அறியாவற்றிலும்-அவை ஒவ்வொன்றிலும் இணைகளைப் படைத்த அவன் தூயவன்” (36: 36) என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான். நிலத்தில் விளைகின்ற காய்கறிகள், வளர்ந்தோங்கி நிற்கின்ற மரங்கள், பரவலாகப் படர்ந்துள்ள தாவரங்கள் உள்ளிட்ட அனைத்திலும், மனித உடலமைப்பிலுள்ள ஒவ்வோர் அணுவிலும், மனிதர்கள் அறியாத எத்தனை பொருள்கள் உள்ளனவோ அவை அனைத்திலும் இணை உண்டு என அல்லாஹ் கூறுகின்றான்.
இன்றைய விஞ்ஞானம் இதை மெய்ப்பிக்கின்றது. நாம் காணும் ஒவ்வொன்றும் ஒன்றல்ல, இரண்டு. தாவர இனங்களிலும் ஆண்-பெண் என்ற இணை உண்டு. மகரந்தச் சேர்க்கை (Pollination) மூலமே இனப்பெருக்கம் நடைபெறுகிறது. மலரின் மகரந்தம்-மஞ்சள்நிறத் தூள்-சூல் முடியில் சேரும் இனப்பெருக்க நிகழ்வே மகரந்தச் சேர்க்கை எனப்படுகிறது. இச்செயல் நடைபெறுவதாலேயே செடி, கொடி, மரம் ஆகியவற்றில் பூ பூத்து, காயாகி, பழம் வருகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற மின்சாரத்திலும் இணை இருப்பதாக இன்றைய அறிவியல் கண்டுபிடித்துள்ளது.

மின்சாரத்தில் பாசிடிவ்-நெகடிவ் ஆகிய இணை இருப்பதால்தான் விளக்கு எரிகிறது; மின்விசிறி சுழல்கிறது. அணு சக்தியிலும் புரோட்டான்-எலக்ட்ரான் ஆகிய இணை உண்டு. மனிதன் அறியாதவற்றிலும்என்ற ஒற்றை வாக்கியத்தில், மனிதன் அறியாத பல்வேறு பொருள்களிலும் இணை இருப்பதை அல்லாஹ் உணர்த்திவிட்டான்.

எல்லைமீறாத கடல்நீர்: அவன் இரண்டு கடல்களை ஒன்றோடொன்று சந்திக்கும் வகையில் அமைத்தான். ஆயினும் அவ்விரண்டிற்கும் இடையே ஒரு தடுப்பு உள்ளது. (அதை) அவை மீறுவதில்லை.” (55: 19-20) பல்வேறு கிளை நதிகளிலிருந்தும் ஆறுகளிலிருந்தும் கால்வாய்களிலிருந்தும் பலதரப்பட்ட நீர்கள் கடலினுள் கலக்கின்றன. இருப்பினும் அடர்த்தி குறைந்த நீரும் அடர்த்தி மிகுதியான நீரும் ஒன்றையொன்று கலந்துவிடாமல் ஒரு கோடு போட்டதைப்போல் ஒன்றையொன்று தொட்டு நிற்குமாறு இறைவன் அமைத்துள்ள விந்தையை என்னவென்பது! அத்தகைய ஒரு பகுதி எங்கே உள்ளது என ஆய்வு செய்த அறிஞர்கள், “மத்தியத் தரைக்கடலும் கருங்கடலும் நிலப்பரப்பால் பிரிக்கப்பட்டிருந்தன. 12,000 ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்ட ஒரு பிரளயத்தின்போது இரண்டும் இணைந்தன. இரண்டு கடல்களும் சந்திக்கும் இடத்தில் இரண்டும் சமமான அடர்த்தியில் இல்லாததால் அடர்த்தி மிகுந்த கடல்நீர் கீழேயும் அடர்த்தி குறைந்த கடல்நீர் மேலேயும் சென்று 200 அடி அளவுக்கு ஒன்றின்மேல் ஒன்றாக நிற்கிறதுஎனக் கண்டறிந்தார்கள்.

அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும் தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும் கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டிற்குமிடையே ஒரு திரையையும் வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான்” (25: 53) எனும் இறைவசனம் இவ்விடத்தில் கவனிக்கத்தக்கது. இரண்டு கடல்கள் சந்திக்கும்போது ஒரு திரை இருப்பதாகக் கூறிய இறைவன், கடலுடன் நல்ல தண்ணீர் கலக்கும்போது இரண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறுகின்றான். தண்ணீரின் அடர்த்தி மிகுதிக்கும் குறைவுக்கும் இடையே ஒரு திரை என்றால், இங்கு உப்புநீரும் நன்னீரும் சிறிதளவு கலந்த கலவை ஒன்று உருவாகி, அது மற்றொரு தடையாக நிற்கின்றது. ஆக இதில் இரண்டு தடைகள் உள்ளன என்பதை அறியலாம்.

பூமி உருண்டை: இரண்டு கிழக்குத் திசைகளுக்கும் இறைவன்; இரண்டு மேற்குத் திசைகளுக்கும் இறைவன்” (55: 17) என்று அல்லாஹ் கூறுவதைக் கூர்ந்து பாருங்கள். மேலும், “கிழக்குத் திசைகளின் மற்றும் மேற்குத் திசைகளின் இறைவ(னாகிய எ)ன்மீது நான் சத்தியம் செய்கிறேன்” (70: 40) என்று அல்லாஹ் கூறுவதைக் கூர்ந்து நோக்குங்கள். பூமி உருண்டையாக இருந்தால் உதிக்குமிடம் ஒவ்வொரு நாளும் மாறுபடும். அதற்கேற்ப ஒவ்வொரு நாளும் ஒரு புள்ளியிலிருந்து உதிக்கும். அதனால் பல கிழக்குகளும் பல மேற்குகளும் இயல்பாகவே ஏற்படுகின்றன. ஆக, பூமி உருண்டையானது என்பதை இதன்மூலம் அறியலாம்.
இரண்டு கிழக்குத் திசைகளுக்கும் இறைவன்...என்ற தொடர் தெரிவிக்கும் செய்தி என்னவென்றால், புவியின் ஒரு பகுதியில் பகலாக இருந்தால் மற்றொரு பகுதி இரவாக இருக்கும். இரவாக இருந்த பகுதி பகலாக ஆனதும் பகலாக இருந்த பகுதி இரவாக மாறிவிடும். இந்த அடிப்படையில் ஒரே நாளில் இரு வேறு நாடுகளில் இரண்டு பகலும் இரண்டு இரவுகளும் ஏற்படுகின்றன. ஆக, உதிக்குமிடங்கள் இரண்டும் இரண்டு கிழக்குத் திசைகளாகவும் மறையுமிடங்கள் இரண்டும் இரண்டு மேற்குத் திசைகளாகவும் உள்ளன. ஆகவே இருபத்து நான்கு மணிநேரத்தில் இரண்டு பகல்கள் இரண்டு இரவுகள் இரு வேறு நாடுகளில் ஏற்படுகின்றன என்பதை இவ்வசனம் சுட்டிக்காட்டுகின்றது.
சூரியன் மறையாத நாடுகள்: (நபியே!) நீங்கள் கேளுங்கள். இரவை மறுமை நாள் வரை அல்லாஹ் நீட்டித்துவிட்டால், உங்களுக்கு(ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டுவரக்கூடிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு ஒருவன் இருக்கின்றானா?” (இதனை) நீங்கள் செவியுற மாட்டீர்களா? (மேலும் நபியே!) நீங்கள் கேளுங்கள்: பகலை இறுதி நாள் வரை உங்களுக்கு அல்லாஹ் நீட்டித்துவிட்டால், நீங்கள் இளைப்பாறக்கூடிய இரவை உங்களுக்குக் கொண்டுவரக்கூடிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறொருவன் இருக்கின்றானா?” (இதனை) நீங்கள் (சிந்தித்துப்) பார்க்க வேண்டாமா? (28: 71-72)

சரி, உலகில் எங்கேனும் சூரியன் மறையாமல் பகலாகவே நீடித்திருக்கிறதா என்று ஆய்வு செய்தபோது என்னே ஆச்சரியம்! அப்படியும் சில நாடுகளை அல்லாஹ் இப்புவிப் பரப்பில் அமைத்துள்ளான். குறிப்பிட்ட மாதங்களில் சூரியன் மறையாமல் எப்போதும் பகலாகவே நீடிக்கிறது. இங்குதான் அல்லாஹ்வின் அறைகூவல் நிதர்சனமாகிறது. அத்தகைய காலங்களில் யாரும் அந்தப் பகலை இரவாக மாற்ற முனைவதில்லை. அது மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது என்பதை நாம் எளிதாக அறிந்துகொள்ளலாம்.

அல்லாஹ் திருக்குர்ஆனில் துல்கர்னைன் குறித்துக் கூறுகின்றான். அதன் விரிவுரையில் அவர் உலகைச் சுற்றி வந்த வரலாற்றுக் குறிப்புகள் இடம்பெறுகின்றன. "முதலில் அவர் ஓரிடத்திற்குச் சென்றார். அங்கு கருஞ்சேற்று நீரில் சூரியன் மறைவதைக் கண்டார். அங்கு மக்கள் சிலர் வசித்து வந்தனர். பிறகு அவர் நெடுந்தூரப் பயணத்தை மேற்கொண்டு வேறோர் இடத்தை அடைந்தார். அங்கு சூரியன் உதித்துக் கொண்டிருந்ததைக் கண்டார். அதனையன்றி எந்தத் திரையும் இல்லாத நிலையைக் கண்டார்'' என்று அல்கஹ்ஃப் அத்தியாயத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.

முதலில் அவர் சென்றதும் இரண்டாவது சென்றதும் நீண்ட நிலப்பரப்பின் இருமுனைகள் சந்திக்கின்ற ஒரே இடம்தான் என்பதைச் சிந்தித்தால் உணர்ந்துகொள்ளலாம். ஏனெனில் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள "ஃபீ அய்னின் ஹமிஅத்தின்' என்ற சொற்கோவையிலுள்ள "ஹமிஅத்தின்' என்பது "ஹாமியத்தின்' என்றும் படிக்கப்படுகிறது. அதனடிப்படையில் ""அது வெந்நீர் ஊற்று நீரில் மறைவதைக் கண்டார்'' என்று பொருள்படுகிறது. ஐஸ்லாந்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெந்நீர் ஊற்றுகள் உள்ளன என்பது உண்மைத் தகவல். அதனுள் சூரியன் மறைவதையே இங்கு அல்லாஹ் கூறுகின்றான்.

அத்தோடு "சூரியன் உதித்துக்கொண்டிருப்பதைக் கண்டார். அதற்கு அதனையன்றி எந்தத் திரையும் இல்லை'' என்பதன்மூலம் அங்கு சூரியன் மறையாமல் பகலாகவே நீடித்திருந்ததைச் சுட்டிக்காட்ட விரும்புகிறான் என்பதையும் உணர முடிகிறது. ஐஸ்லாந்தில் மே முதல் ஜூலை வரை சூரியன் மறைவதில்லை. இந்த நிகழ்வையே அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான். அத்தோடு, ஃபின்லாந்தில் கோடைக்காலத்தில் உதிக்கின்ற சூரியன் 73 நாள்கள் மறையாமல் நீடிக்கிறது; அலஸ்காவில் மே முதல் ஜூலை வரை சூரியன் மறைவதில்லை; ஐஸ்லாந்தில் மே முதல் ஜூலை கடைசி வரை சூரியன் மறைவதில்லை; கனடாவில் கோடைக்காலத்தில் 50 நாள்கள் சூரியன் மறையாது. அதாவது குறிப்பிட்ட காலத்திற்குப் பகலாகவே நீடிக்கக்கூடிய சில நாடுகளையும் இப்புவிப்பரப்பில் அல்லாஹ் அமைத்துள்ளான் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

மற்றவை...: தாயின் கருவறையில் மூன்று இருள்களுக்கு இடையே படைத்தல், கருவுற்ற மேகங்களிலிருந்து மழையைப் பொழிவித்தல், ஆழமான கடல்களுக்குள் ஏற்படும் அலைகள், இரும்பு வானத்திலிருந்து இறக்கப்பட்டது; அது நிலத்திற்குச் சொந்தமானதல்ல, உடலின் மேல் தோலில் மட்டுமே தொடுஉணர்ச்சி உண்டு, அதைத் தாண்டினால் உணர்ச்சி இருக்காது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவியல் உண்மைகள் கொட்டிக் கிடக்கின்றன திருக்குர்ஆனில். அவற்றையெல்லாம் ஆய்வுக் கண்கொண்டு ஆய்ந்துணர்ந்து, அதன்பின் இறைவனை அடைய வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் மனிதனுக்குப் பகுத்தறிவைக் கொடுத்துள்ளான். எனவே இறைவன் வழங்கிய பகுத்தறிவால் சிந்தித்து, தன்னைப் படைத்த இறைவனைக் கண்டறிந்து, நேரிய பாதையை அடைவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட பொறுப்பாகும்.

அண்ணன் முஹம்மது அல்தாஃப் அவர்கள் தொகுத்துள்ள திருக்குர்ஆன் கலைக்களஞ்சியம்ஓர் அறிவியல் கருவூலமாகத் திகழ்கிறது. ஏறத்தாழ 2800 பக்கங்களுக்கு மேல் உள்ள இக்கலைக்களஞ்சியத்தைத் தொகுத்துள்ள இவர் மிகவும் பாராட்டுக்குரியவர். இஸ்லாமியச் சமுதாயம் அவரைப் பாராட்டவும் வாழ்த்தவும் வேண்டும். ஏனெனில் பரபரப்பான இக்காலத்தில் ஒரு கட்டுரை எழுத நேரம் ஒதுக்குவதே மிகவும் சிரமமாக உள்ளது.

அப்படியிருக்கும்போது இத்தகைய ஒரு பெருநூலைத் தொகுப்பது மிக மிகச் சிரமம் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? இந்தச் சமுதாய மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற பேராவலும், தாம் வாழ்ந்ததற்கான ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்ல வேண்டுமே என்ற உந்துதலும் உயர்ந்தோன் அல்லாஹ்வின் உவப்பை எப்படியாவது பெற்றுவிட மாட்டோமா என்ற பேராசையும்தான் இவர் இப்பெரு நூலைத் தொகுக்கக் காரணம் என்பதை நான் உணர்கிறேன். சமுதாயப் பிரக்ஞையும் தொண்டுள்ளமும் கொண்ட இவர் இன்னும் பயன்மிகு பன்னூல்களை இச்சமுதாயத்திற்கு வழங்கவும், ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் நெடுநாள் வாழவும் இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.

இவர் என்னிடம் இக்கலைக்களஞ்சியத்தைக் கொடுத்து மேலாய்வு செய்து தருமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க, திருக்குர்ஆன் வசனங்களையும் அதற்கான மொழிபெயர்ப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். வாக்கிய அமைப்புகளைச் சீரமைத்து, தட்டெழுத்துப் பிழைகளையும் ஒற்றுப் பிழைகளையும் களைந்து கொடுத்தேன். இருப்பினும் இன்னும் ஆங்காங்கே சில பிழைகள் திருத்தப்படாமல் கவனக்குறைவாக விடுபட்டுள்ளதைக் காண்கிறேன். அடுத்த பதிப்பில் அந்தப் பிழைகளையும் சரிசெய்து வெளியிட்டால் வாசகர்கள் எந்தவித நெருடலும் இல்லாமல் தெளிந்த நீரோடை போன்று படிக்க வசதியாக இருக்கும் என்பதை மெத்தப் பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

புதிய சமுதாயம் அறக்கட்டளைமூலம் பயனுள்ள ஒரு கருத்துப் பெட்டகம் இதோ இச்சமுதாயத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இதைச் சமுதாய மக்கள் அனைவரும் வாங்கிப் படித்துப் பயன்பெறுவதோடு தம் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சகோதரச் சமுதாய நண்பர்களுக்கும் வாங்கிப் பரிசளித்தால் ஈருலகப் பயனை அடையலாம் என்பது திண்ணம். அதுவே என் ஆழ்மன எண்ணம். உங்கள் பகுதியிலுள்ள பள்ளிவாசல்களுக்கும் நூல்நிலையங்களுக்கும் வாங்கி அன்பளிப்புச் செய்யுங்கள். இதுவே நாம் இந்நூலாசிரியருக்குச் செய்யும் பேருதவியாகும்.

இந்நூலின் உருவாக்கத்தில் பங்குகொண்ட மேலாய்வாளர்கள், மொழியாக்க மேற்பார்வையாளர், மொழிநடையைச் சரிபார்த்தவர், கணினித் தட்டெழுத்தர், ஒளிஅச்சு செய்தோர், நூலை அச்சிட்டோர் உள்ளிட்ட அனைவருக்கும் உயர்ந்தோன் அல்லாஹ் எல்லா நலன்களையும் தந்தருள்வானாக. நம் அனைவரின் நற்செயல்களையும் மாசற்ற மனத்தோடு அவனுக்காகவே செய்ததாக அங்கீகரிப்பானாக.
======================================











செவ்வாய், 22 அக்டோபர், 2019

பிறரின் குறைகளைப் பேசாதீர்

அத்தாட்சிகள் - திருக்குர்ஆன் கலைக்களஞ்சியம் நூல் வெளியீட்டு விழா

அத்தாட்சிகள் - திருக்குர்ஆன் கலைக்களஞ்சியம் நூல் வெளியீட்டு விழாவில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் இப்ராஹீம் கலீஃபுல்லாஹ் அவர்களிடமிருந்து நினைவுப்பரிசு பெற்றபோது ... இடம் :கோவை நாள் : 20/10/2019



பிறர் குறைகளை மறைப்போம்

செவ்வாய், 15 அக்டோபர், 2019

கோவையில் நூலாய்வுரை நிகழ்த்துகிறார்

கோவையில் இன் ஷாஅல்லாஹ் 20/10/2019 அன்று திருக்குர்ஆன் கலைக்களஞ்சியம் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. அதில் மணலி பள்ளிவாசல் இமாம் டாக்டர் மெளலவி நூ.அப்துல் ஹாதி பாகவி கலந்துகொண்டு நூலாய்வுரை நிகழ்த்துகிறார்.






சனி, 12 அக்டோபர், 2019

பொருளாதாரச் சீரழிவுக்கான தீர்வென்ன?



-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

தற்போது இந்தியப் பொருளாதாரம் மிகவும் சீரழிந்து கிடக்கிறது என்பதை நாம் அறிவோம். அதற்குப் பலரும் பல்வேறு காரணங்களைக் கூறுகின்றனர். பணமதிப்பிழப்புச் செய்யப்பட்டதிலிருந்து பொருளாதாரம் சீரழிந்து வருகிறது என்று ஒரு சாரார் கூறுகின்றனர். மத்திய அரசு மதியில்லாமல் விதித்த ஜி.எஸ்.டி. வரிதான் பொருளாதாரச் சரிவுக்குக் காரணம் என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர். பொருளாதார மந்த நிலையின் எதிரொலியால், பல நிறுவனங்கள் தம் உற்பத்தியைக் குறைத்துக்கொண்டன. ஐந்து ரூபாய் பிஸ்கெட்டைக்கூட வாங்குவதற்கு மக்கள் யோசிக்கிறார்கள் என்று சில பிஸ்கெட் நிறுவனங்கள் புலம்புகின்றன. சாதாரண காரை வாங்கவும் ஆள் இல்லை என கார் நிறுவனம் ஒன்று புலம்புகிறது. இப்படி ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொருவிதமாகப் புலம்புவதைக் காணமுடிகிறது.

பொருளாதார வல்லுநர்கள், அறிவொளி இழந்த இன்றைய ஆட்சியாளரின் முரட்டுத்தனமான நிர்வாகத்தைக் குறைகூறுகின்றனர். இந்நிலை இப்படியே நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் நம் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்குச் சென்றுவிடும். பணமதிப்பு முற்றிலும் குறைந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர்.

வட்டி: வட்டியை அடிப்படையில் பொருளாதாரக் கணக்கை மேற்கொண்டால் அது எந்த நாட்டுக்கும் கேடுதான். ஏனென்றால் வட்டி குட்டி போடும் என்று சொல்வார்கள். அவ்வாறு வட்டி குட்டி போட்டால், அது பணத்தைக் கடனாக வாங்கியவனுக்கு மிகப் பெரிய பாதிப்பையே ஏற்படுத்தும். அது பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துமே தவிர பரவலான, தாராளமான பணப்புழக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தாது. அது ஒரு சாராரை வாட்டி, மற்றொரு சாராரை வாழ வைக்கும். பொருளாதாரம் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் தேங்குவதற்கு வழிவகுக்கும். இதனால்தான் நுண்ணறிவாளன் அல்லாஹ் வட்டியைத் தடைசெய்துள்ளான்.
இறைநம்பிக்கைகொண்டோரே! பன்மடங்காகப் பல்கிப் பெருகும் வட்டியை உண்ணாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். (அதன்மூலம்) நீங்கள் வெற்றி பெறலாம். (3: 130)

இந்த அடிப்படையில் நம் நாடு உலக வங்கியிடம் வாங்கிய கடனுக்கு மட்டும் 6.6 இலட்சம் கோடி வட்டியாகக் கட்டுகிறது. அசல்தொகையைச் செலுத்தவே இல்லை. ஒவ்வோர் ஆண்டும் பெருகி வருகிற வட்டியை மட்டுமே செலுத்திக்கொண்டு வருகிறது. இதுதான் வட்டியின் கொடூரமுகம். வாங்கியவன் தொடர்ந்து அடிமையாகவே இருக்க வேண்டுமே தவிர, அதிலிருந்து மீளமுடியாது. இதனால் நம்முடைய குறிப்பிட்ட வரி வருமானத்தில் மக்களுக்கான திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. மீண்டும் மீண்டும் கடன் வாங்கியே திட்டங்களை நிறைவேற்றும் அவல நிலை தொடர்கிறது.
வாராக்கடன்: விவசாயக்கடன், கல்விக்கடன், வீட்டுக்கடன், தொழிற்கடன் முதலான கடன்களைப் பெறுவோர் அதைத் திருப்பி ஒப்படைக்க முடியாமல் போவதற்கு முக்கியக் காரணம், அவர்கள் செலுத்துவதற்குள் வட்டி பன்மடங்காகப் பெருகிவிடுவதுதான். அதனால் அவர்கள் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டுமென்ற மனநிலையே மாறிவிடுகிறது. ஆகையால் வங்கிக்கு வாராக்கடன் பெருகி, இழப்பு ஏற்படுகிறது. அதை ஈடுகட்ட வட்டி விகிதத்தை மேலும் உயர்த்துகிறது வங்கி.

மற்றொரு புறம், பெரும் பெரும் நிறுவனங்களை நடத்துவோர் தம் நிறுவனங்களின் வளர்ச்சியைக் காட்டி, பல்லாயிரம் கோடி வங்கிகளிடமிருந்து கடனாகப் பெறுகின்றார்கள். குறிப்பிட்ட காலத்தில் அதைத் திருப்பிச் செலுத்தாமல் நஷ்டக் கணக்கைக் காட்டித் தப்பித்துக்கொள்கின்றனர். அல்லது அரசியல் தலைவர்களின் ஆதரவோடு அயல்நாடுகளுக்குத் தப்பித்துச் சென்றுவிடுகின்றனர். இதனால் வங்கிகளுக்குப் பல்லாயிரம் கோடி நட்டம் ஏற்படுகிறது. அதன்மூலம் இந்தியப் பொருளாதாரம் கணிசமாகப் பாதிக்கப்படுகிறது.

வரிக்குமேல் வரி: ஒரு கல்லூரியிலோ நிறுவனத்திலோ பணியாற்றும் ஒருவர், தம் சம்பளத்தைப் பெறும்போது வரிபிடித்தம் செய்யப்பட்டுத்தான் பெறுகிறார். பின்னர் அவர் பொதுவெளிக்கு வந்து, தமக்குத் தேவையான பொருள்களை வாங்கும்போது ஜி.எஸ்.டி. என்ற வகையில் 5 முதல் 28 சதவிகிதம் வரை வரி கட்ட வேண்டியுள்ளது. இப்படி அவர் வாங்குகின்ற ஒவ்வொரு பொருளுக்கும் ஜி.எஸ்.டி. கட்டுவதால் அவர் பெருமளவு பாதிக்கப்படுகிறார். இதனால் பலர் தம் அடிப்படைத் தேவைகளைத் தவிர, பிறவற்றை வாங்காமல் ஒத்திப்போடுகின்றனர். ஆகவே பணப்புழக்கம் குறைகிறது. மக்களின் பணம் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது; பொருளாதார மந்தநிலை ஏற்படுகிறது.

வரிஏய்ப்பு: பெரும் செல்வந்தர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், திரைப்படக் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் தம் வருமானத்திற்கான வரியை அரசாங்கத்திற்கு உரிய முறையில் செலுத்தாமல் வரி ஏய்ப்புச் செய்கின்றனர். அதற்கான காரணம், வருமான வரியும், தொழிற்சாலை வரியும் உச்சத்தில் இருப்பதுதான். கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் முப்பது சதவிகித வரியைச் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றார்கள். எனவே அவர்கள் இவ்வளவு அதிகமான வரியைச் செலுத்த முன்வருவதில்லை. அதனால் அவர்கள் பொய்க்கணக்கையும் நட்டக் கணக்கையும் காட்டி, வரி கட்டுவதிலிருந்து தப்பித்துக்கொள்கிறார்கள். அல்லது குறைவான வரியைச் செலுத்துகின்றார்கள். அது மட்டுமல்ல, செல்வந்தர்கள், அரசியல் தலைவர்கள், திரைப்படக் கலைஞர்கள் உள்படப் பலர் வெளிநாட்டு வங்கிகளில் தம் பணத்தைச் சேமித்துவைக்கிறார்கள். இதனாலும் இந்தியப் பொருளாதாரம் சீரழிந்து நிற்கிறது.

வேலையின்மை: இந்திய நாட்டில் பல பேருக்கு வேலை இல்லை. இது பல ஆண்டுகளாகத் தொடரும் பிரச்சனை. உழைப்பு எங்கே இருக்கிறதோ அந்த நாடுதான் முன்னேற்றமும் வளர்ச்சியும் அடையும். வேலையில்லாத் திண்டாட்டம் என்பதும் பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகும் என்பதை யாரும் மறுக்க முடியாது. பிறரைச் சார்ந்து வாழ்வது, பிச்சையெடுப்பது, கொள்ளையடிப்பது, திருடுவது, ஏமாற்றுவது உள்ளிட்டவை பரவலாக இருப்பதும் வேலையின்மையின் விளைவுகள்தாம். எல்லோருக்கும் வேலை கிடைத்து, எல்லோரும் உழைக்கத் தொடங்கிவிட்டால் அந்நாடு பன்மடங்கு வளர்ச்சியடைந்துவிடும்.

உழைப்பு குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதைக் காணீர்!
ஒருவர் தமது கையால் உழைத்து உண்பதைவிடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தமது கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தார்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 2072) கைத்தொழில் செய்தும், கையால் உழைத்தும் உண்ண வேண்டும் என்பதற்கான வழியைக் காட்டியுள்ளார்கள். ஒவ்வோர் இறைத்தூதரும் ஒவ்வொரு கைத்தொழிலை மேற்கொண்டுள்ளார்கள். நபி ஸகரிய்யா (அலை) தச்சராகவும், நபி தாவூத் (அலை) கவச ஆடைகளைச் செய்பவராகவும், இத்ரீஸ் (அலை) தையலராகவும், மற்றும் இறைத்தூதர்கள் பலர் ஆடுமேய்ப்போராகவும் இருந்துள்ளார்கள். உழைப்பு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாதது என்பதை இறைத்தூதர்கள் மூலம் இறைவன் கற்பித்துள்ளான்.

நூறு நாள்கள் வேலைத் திட்டம் என்பதும் கானல் நீராக உள்ளது. பற்பல நிறுவனங்கள் தம் பணியாள்களைக் குறைக்கின்றன. இவ்வாறு வேலையிழப்பு மிகுந்து சென்றுகொண்டிருக்கின்றது. மற்றொரு பக்கம் வேலை வாய்ப்பு என்பதே உருவாக்கப்படுவதில்லை. பல பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையெல்லாம் சரிசெய்யாமல் நம் நாட்டின் பொருளாதாரத்தைச் சரிசெய்ய முடியாது. எனவே வேலையின்மையை முதலில் களைய அரசு முன்வர வேண்டும்.

தீர்வு: வட்டிப் பொருளாதாரப் பகிர்வை அடியோடு ஒழிக்க வேண்டும். அப்போதுதான் பொருளாதாரச் சுமையிலிருந்து ஒவ்வொருவரும் மீண்டெழ முடியும். வாராக்கடன்களை மீட்டெடுக்க வேண்டும்; வங்கிகளில் கடன் பெற்று, அதைத் திரும்பச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய தொழிலதிபர்களை இந்தியாவிற்குத் திரும்பக் கொண்டுவந்து, அவர்களின் சொத்துகளை ஏலம்விட்டு பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும். கணக்கில் காட்டாமல் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைத்துள்ள பணத்தை உடனடியாக மீட்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரே சீரான வரியை விதிக்க வேண்டும். அதாவது ஒரே நாடு, ஒரே வரி என்ற அடிப்படையில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் வருமானம் ஈட்டுகின்ற ஒவ்வொருவருக்கும் இரண்டரை சதவிகித வரி என்பதை நாடு முழுக்க ஒரே சீராகச் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு குறைந்தபட்ச வரி விதித்தால் எல்லோரும் தத்தம் வரியை முறையாகச் செலுத்திவிடுவார்கள். அதனால் பொருளாதாரச் சுமை குறையும்; அரசுக் கருவூலம் நிறையும்; பணப்புழக்கம் பரவும்; பொருளாதார மந்த நிலை முடிவுக்கு வரும்.
=========================================








ஆக்கப்பூர்வமான விளையாட்டுகளில் ஆர்வப்படுத்துவோம்!




-
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

விளையாட்டு என்றால் பொதுவாக எல்லோருக்கும் பிடிக்கும்; சிலர் விதிவிலக்கு இருக்கலாம். சிறுவர்-சிறுமியர் தம்மைச் சுற்றியுள்ள எதையும் பொருட்படுத்தாமல் விளையாடிக்கொண்டிருப்பார்கள். விளையாட்டுதான் அவர்களுடைய ஆரோக்கியமான வளர்ச்சியின் அடையாளமாகத் திகழ்கிறது. ஓடியாடி விளையாடாமல் ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தால் அப்பிள்ளைக்கு ஏதோ உடல்சார் குறைபாடு உள்ளது என்பதைப் பெற்றோர் அறிந்துகொள்வார்கள்.

குழந்தைப் பருவ விளையாட்டின் நீட்சியாக இளமைப்பருவ விளையாட்டுகள் தொடர்கின்றன. சிறுபிராயத்தில் விளையாடிய விளையாட்டுக்கும் இளமைப் பருவத்தில் விளையாடுகின்ற விளையாட்டிற்கும் வித்தியாசம் உண்டு. குழந்தைப் பருவத்தில் விளையாடுவது இயல்பானதும் குறிக்கோள் அற்றதுமாகும். இளமைப் பருவம் வந்ததும், தமக்குப் பிடித்தமான விளையாட்டைத் தேர்ந்தெடுத்து, வெற்றி#தோல்விக்கென ஓர் இலக்கை நிர்ணயித்து விளையாடி, வெற்றிபெற்றதும் குதூகலித்து மகிழ்வதாகும். தோல்வியடைந்தவர்கள் நாம் அடுத்த முறை வெற்றிபெற வேண்டும் என்ற வைராக்கியத்தை மனதில் கொள்வதாகும்.
இளைஞர்கள் சிலருக்கு ஓடுவதும் தாண்டுவதும் பிடிக்கும்; சிலருக்குப் பந்து விளையாட்டு பிடிக்கும்; வேறு சிலருக்கு கிரிக்கெட் பிடிக்கும்; இன்னும் சிலருக்கு நீச்சல் பிடிக்கும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விளையாட்டு பிடிக்கும்.

பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு, ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்ற, மனவலிமையைப் பெருக்குகின்ற விளையாட்டுகளைத் தேர்ந்தெடுத்து, வழிகாட்டி, ஊக்கப்படுத்த வேண்டும். ஓட்டப் பயிற்சி, அம்பெறிதல், ஈட்டி எறிதல், துப்பாக்கி சுடுதல், குதிரையேற்றம், நீச்சல் பயிற்சி உள்ளிட்டவற்றைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆர்வமூட்டி, முறையான பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும்.

குதிரையேற்றம், அம்பெறிதல் போன்ற பயிற்சிகளை இஸ்லாம் அங்கீகரிக்கிறது. ஒரு தடவை நபித்தோழர்கள் தம்மிடையே இரு பிரிவினராக நின்றுகொண்டு அம்பெறிந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களுள் ஓரணியினர் பக்கம் நின்றுகொண்டு, இப்போது நீங்கள் அம்பெறியுங்கள் என்றதும், மற்றோர் அணியினர் விளையாட்டை நிறுத்திவிட்டனர். ஏன் நிறுத்திவிட்டீர்கள் என்று நபியவர்கள் கேட்டபோது, தாங்கள் அந்தப் பக்கம் இருக்கும்போது நாங்கள் எப்படித் தங்களுக்கெதிராக அம்பெறிய முடியும்? என்று கேட்க, சரி, நீங்கள் அம்பெறியுங்கள். நான் உங்கள் அனைவரின் பக்கமும் இருக்கிறேன் என்றார்கள்.

இந்திய நாட்டின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்றிருந்தாலும், கிரிக்கெட் விளையாட்டையே இன்றைய இளைஞர்கள் பலர் விரும்புகிறார்கள். அதில் உரிய பயிற்சி மேற்கொண்டால் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ளலாம்; பின்னர் தேசிய அளவிலான போட்டியில் வென்றால், இந்திய அணியில் ஒருவராகப் பங்குபெற்று உலக அளவில் சாதனை படைக்கலாம்.

அதே நேரத்தில் ஒலிம்பிக்கில் அனுமதிக்கப்பட்டுள்ள விளையாட்டுகளைத் தேர்வு செய்து அதில் பயிற்சி பெற்றால் உலக அளவில் சாதனை படைக்கலாம் என்பதையும் இன்றைய இளைஞர்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஓட்டம், நீளம் தாண்டுதல், நீச்சல், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளில் கவனம் செலுத்தினால் உலக அளவில் மேம்பாடு அடைவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை நம் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டும்.

இவ்வாறு பரந்த நோக்கோடு சிந்தித்துச் செயல்படுவதும் விளையாட்டிற்கான சீரான வழியைக் காட்டுவதும் பெற்றோரின் பெரும் பொறுப்பாகும். இவற்றில் கவனம் செலுத்தாமல், உங்கள் பிள்ளைகள் செல்போன் விளையாட்டுகளில் மூழ்கிப்போவதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அவர்களின் மனவலிமையும் உடற்திறனும் குன்றிப்போவதோடு ஆரோக்கியத்தை இழப்பதற்கான சாத்தியமும் நிறையவே உண்டு என்பதை மறவாதீர்கள்.

வீட்டிற்குள் விளையாடும் (இன் டோர் கேம்ஸ்) விளையாட்டுகளிலேயே இன்றைய சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை மூழ்கிப்போகின்றார்கள். வெளியில் சென்று விளையாடுவதற்கான சூழ்நிலை இல்லை. அதனால் அவர்கள் செல்போனிலும் கணினியிலும் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுகளை விளையாடுவதிலேயே பொழுதைக் கழித்துவிடுகின்றனர். அவர்கள் விளையாடும்

விளையாட்டுகளில் சுடுதல், அடித்தல், மிதித்தல், கொல்லுதல், வேகமாக கார் ஓட்டுதல் போன்ற வன்மமான செயல்களே இருக்கின்றன. சிறுவர்களின் இளநெஞ்சில் நஞ்சை விதைக்கும்வண்ணம் திட்டமிட்டு, இவை போன்ற விளையாட்டுகள் யூதர்களால் பரப்பப்படுகின்றன. சில விளையாட்டுகள் நம் சிறுவர்களை அவற்றிலேயே அடிமையாக்கிவிடுகின்றன.

அதையும் தாண்டி, உயிருக்கு ஆபத்தான விளையாட்டுகளும் உள்ளன. ஈராண்டுகளுக்கு முன்பு சிறுவர்கள், இளைஞர்கள் மத்தியில் புளூவேல் (நீலத்திமிங்கலம்) எனும் தற்கொலை விளையாட்டு நுழைந்து, பல்வேறு உயிர்களைப் பலிகொண்டது அனைவருக்கும் நினைவிருக்கலாம். பின்னர் மக்கள் பலரின் எதிர்ப்பால் அது தடைசெய்யப்பட்டது. தற்போது அதே வகையில் பப்ஜி (PUBG) எனும் விளையாட்டு சிறுவர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்த விளையாட்டு இன்றையச் சிறுவர்களைக் கட்டிப்போட்டுள்ளது. இந்த விளையாட்டில் கண்மூடித்தனமாக மூழ்கிய சிறுவர்கள் சிலர் உயிரிழந்துள்ளார்கள். இவ்வாறுதான் இன்றைய செல்போன் விளையாட்டுகள் உள்ளன. எனவே பெற்றோர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவைபோன்ற ஆபத்தான விளையாட்டுகளைத் தவிர்த்துவிட்டு, பயன்தரும் விளையாட்டுகளையும் அறிவுத்திறனை மேம்படுத்தும் விளையாட்டுகளையும் நம் பிள்ளைகளுக்குச் சுட்டிக் காட்டி அவர்களுடைய சிந்தனையை மடைதிருப்பலாம். சொற்களை உண்டாக்குகிற அல்லது கண்டுபிடிக்கிற சொல்விளையாட்டு (வேர்ட் கேம்), வார்த்தைகளை இணைத்து வாக்கியங்களை உருவாக்கும் விளையாட்டு, கணித விளையாட்டு எனப் பயன்தரும் விளையாட்டுகளும் இருக்கவே செய்கின்றன. அவற்றைக் கண்டறிந்து நம் பிள்ளைகளை அவற்றில் ஈடுபடுத்தினால் விளையாட்டு மூலமே கல்வியைக் கற்றுக்கொள்வார்கள்.
விளையாட்டு மனவலிமையையும் நிர்வாகத்திறனையும் தரவல்லது. அத்தோடு வெற்றி-தோல்வியை எதிர்கொள்கின்ற பக்குவத்தையும் கொடுக்கிறது. அதன் அடிப்படையிலேயே விளையாட்டு வீரர்கள் பலர், பெரும் பெரும் பதவிகளில் இருந்துள்ளார்கள்; தற்போதும் இருந்து வருகிறார்கள் என்பதை அறிகிறோம். இந்தியக் கிரிக்கெட் வீரர் முஹம்மது அஸாருத்தீன் 2009ஆம் ஆண்டு உ.பி.யில் முராதாபாத் தொகுதியில் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி.யாகத் திகழ்ந்தார். பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த இம்ரான்கான் தற்போது அந்நாட்டின் அதிபராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் போன்று பலர் உள்ளனர். நம் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் பலர் விளையாட்டுத் துறையில் போதுமான கவனம் செலுத்தாமைக்குக் காரணம் அதைக் குறித்த விழிப்புணர்வின்மையே ஆகும்.

விளையாட்டில் ஈடுபட்டால் வாழ்க்கையே விளையாட்டாக ஆகிவிடுமோ என்ற அச்சமும் ஒருபுறம் உண்டு. நன்கு விளையாடி, சிறந்த விளையாட்டு வீரனாக உருவானால் அதுவே அவரது வாழ்க்கைக்குப் போதுமல்லவா? ஏன் அந்தக் கோணத்தில் நாம் சிந்திப்பதில்லை?

இஸ்லாமிய மார்க்கம் தீங்கான விளையாட்டைத்தான் கண்டிக்கிறது. வீண்விளையாட்டுகளில் ஈடுபடாதீர்கள் என்று எச்சரிக்கிறது. சூதாட்டத்தைத் தடைசெய்கிறது.
அதாவது அல்லாஹ்வை மறந்து விளையாட்டில் இலயிப்பதுதான் வீண்விளையாட்டு. அத்தோடு உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை, தீய எண்ணங்களைத் தூண்டுபவை, வன்முறையைத் தூண்டுபவை, சண்டையை உண்டாக்குகிற சூதாட்டம் இவையெல்லாம் வீண்விளையாட்டுகளாகும். இவற்றைத் தவிர்த்துக்கொள்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவசியமாகும்.

விளையாடுபவர்கள் குறைவாக இருந்தாலும் விளையாட்டைப் பார்த்து இரசிக்க நிறையப் பேர் உண்டு. இது எல்லாக் காலத்திலும் இருந்து வந்துள்ளது. அந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள், தம் தோழர்களோடு அம்பெறியும் விளையாட்டில் கலந்துகொண்டுள்ளதோடு, தம் அன்பு மனைவி ஆயிஷா (ரளி) அவர்களோடு விளையாட்டைப் பார்த்து இரசித்திருக்கிறார்கள். குறிப்பாக பெருநாள் அன்று, தம் அன்பு மனைவி ஆயிஷாவோடு, அபிசீனியர்கள் அம்பெறிந்து விளையாடிய விளையாட்டைப் பார்த்து இரசித்திருக்கிறார்கள். தம் மனைவி ஆயிஷாவிடம், போதுமா என்று கேட்டு, அவரது ஆசை தீரும் வரை கண்டு இரசித்திருக்கிறார்கள் என்ற செய்தியை புகாரீ, நஸாயீ உள்ளிட்ட நபிமொழித் தொகுப்பு நூல்களில் காண முடிகிறது.
ஆக, விளையாட்டைப் பார்த்து இரசிப்பது குற்றமில்லை. அல்லாஹ்வை மறந்து அதிலேயே இலயிப்பதும் தன்னை மறந்து அதில் மூழ்கிவிடுவதுமே குற்றம். இறையச்சம் கொண்ட விளையாட்டு வீரர்கள் தொழுகை நேரம் வந்ததும் அம்மைதானத்திலேயே தொழுவதை நாம் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம். அதுதான் இறையச்சத்தின் வெளிப்பாடு. தொழுகைக்குரிய நேரத்தைத் தவறவிட்டு விடாமல் விளையாட்டில் ஈடுபடலாம்; விளையாட்டைப் பார்த்து இரசிக்கலாம்.

முடிவாக, இஸ்லாம் விளையாட்டிற்குத் தடைவிதிக்கவில்லை என்பதையும் சூதாட்டத்தையும் வீண்விளையாட்டுகளையுமே இஸ்லாம் எதிர்க்கிறது என்பதையும் உணர்ந்துகொள்வோம். ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபடுவதையும் செல்போன் விளையாட்டுகளில் மூழ்கி, தம் உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்வதையும் தடுத்து நிறுத்தி, மனவலிமையை அதிகரிக்கச் செய்யும் விளையாட்டுகளிலும் வீரவிளையாட்டுகளிலும் ஈடுபட வழிகாட்டுவோம். ஆளுமைத்திறன் பெற்ற பிள்ளைகளாக உருவாக்கப் பாடுபடுவோம்.
=========================================