புதன், 25 ஜனவரி, 2017

சினிமா பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்

இலங்கையில் நடைபெற்ற (10, 11, 12-12-2016) உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டு இதழுக்கு நான் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை. இதோ உங்கள் பார்வைக்கு... உங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய மறவாதீர்.


சினிமா ஊடகத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட இஸ்லாம் பற்றிய பயங்கரவாத மாயை

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி.

வெளியில் பார்ப்பதைத் திரையிலும் பார்க்கலாம்; வெளியில் பார்க்கத் தகாததைத் திரையிலும் பார்க்கக்கூடாது என்பதே சினிமா பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம் ஆகும். சினிமா என்பது ஓர் ஊடகம். அவ்வளவுதான். அதன்மூலம் மக்கள் மனதில் நன்மையை விதைப்பதும் தீமையை விதைப்பதும் அவரவரின் எண்ணத்திற்கேற்ற வெளிப்பாடு. நல்லெண்ணம் கொண்டு மக்கள் நலன் நாடுவோர் நன்மையைக் கொண்டு செல்கின்றனர்; தீய எண்ணம் கொண்டோர் அதன்மூலம் தீமையை விதைத்துக் கொண்டிருக்கின்றனர். கத்தி நன்மையா, தீமையா என்று கேட்டால் அதனைப் பயன்படுத்துவதை வைத்துதான் அதற்கான விடையைச் சொல்ல முடியும். மாறாக, பொத்தாம் பொதுவாக, ‘அது தீமைஎன்று சொல்லிவிட முடியாது. அதுபோலவே சினிமாவும் அமைந்துள்ளது. மக்களின் அளவற்ற விருப்பத்தால் இது ஊடகத் துறையில் முக்கிய இடத்தைக் கைப்பற்றியுள்ளது.

அதேநேரத்தில் ஓர் ஊடகத்தைப் பிறர் எவ்வாறு பயன்படுத்துகின்றார்களோ அதே விதத்தில்தான் முஸ்லிம்களாகிய நாமும் அதைப் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த ஊடகத்தை நல்வழியில் எவ்வாறு நாம் பயன்படுத்த இயலும் என்பதை யூகித்துணர்ந்து, அதை நோக்கித் திருப்ப வேண்டும். அதற்காகத்தான்  படைத்தோன் அல்லாஹ் நமக்குப் பகுத்தறிவை வழங்கியுள்ளான். வழிகாட்ட வான்மறையும் அண்ணல் நபியின் அமுத மொழிகளும் உள்ளன. அவற்றை மைல்கல்லாகக் கொண்டு நன்மையை நோக்கி மக்களை இழுக்கும் விதத்தில் இந்த சினிமா ஊடகத்தைப் பயன்படுத்த வேண்டும்.

இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சமூக விழிப்புணர்வு, பகுத்தறிவை ஊட்டுதல், மூடப்பழக்கங்களை முறியடித்தல், மதுவின் தீமைகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வரலாற்றைப் பதிவு செய்தல் உள்ளிட்ட எத்தனையெத்தனையோ நல்ல கருத்துகள்மூலம் மக்கள் மனதை மாற்றிச் செம்மைப்படுத்தும் வகையிலான திரைப்படங்கள் வெளிவந்தன. மக்கள் அவற்றைப் பார்த்துப் பொழுதுபோக்கியதோடு நல்ல கருத்துகளையும் தெரிந்துகொண்டனர்.

அதன் பின்னர் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு சினிமா தயாரிக்கப்படலானது. அப்போது தொடங்கி இன்று வரை அது மிகப்பெரிய அளவிலான ஒரு வியாபாரமாகிவிட்டது. வியாபாரம் என்று வந்துவிட்டால் மோசடி என்பதும் அதனைத் தொற்றிக்கொண்டு வந்துவிடும். மோசடி என்பதற்கு முகம் தெரியாது.  யாரை வேண்டுமானாலும் அது மோசடியால் வஞ்சிக்கும். அதனால்தான் இந்த இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட முஸ்லிம்களையே தேசத் துரோகிகளாகக் காட்டத் தொடங்கிவிட்டனர் அந்த மோசடிக்காரர்கள்.

சினிமா என்பது ஓர் ஆற்றல் வாய்ந்த ஊடகம் ஆகும். அது மக்களின் மனதில் நேரடியாகச் சென்று ஆழமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அது இன்றைக்கு மக்களோடு இரண்டறக் கலந்துவிட்டது. அது அவர்களின் பொழுதுபோக்கு மட்டுமல்ல; வாழ்க்கையாகவே மாறிப்போய்விட்டது. இதை நன்றாக அறிந்துகொண்ட யூதர்கள்  ஆங்காங்கே உள்ள திரைப்பட இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பணத்தை அள்ளிக் கொடுத்து, முஸ்லிம் சமுதாயத்திற்கெதிரான தவறான மாயப் பிம்பத்தை மக்கள் மனதில் உருவாக்கும் விதத்தில் கதையை அமைக்க வலைவீசினார்கள். அந்த மாய வலைக்குள் விழுந்தவர்கள்தாம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தும் விதமாகவும் அவர்கள்மீது வெறுப்புணர்வைத் தூண்டுமுகமாகவும் திரைப்படங்களை உருவாக்கினார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை முதன் முதலாக இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு ரோஷா எனும் திரைப்படம் வெளியானது. அதில் காஷ்மீர் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டினார். அதுதான் தொடக்கம். அதன்பிறகு ஒன்றன்பின் ஒன்றாகப் பல்வேறு இயக்குநர்கள் முஸ்லிம்களுக்கெதிரான திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார்கள். அந்த வரிசையில் 2013ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கத்தில் வெளிவந்த விஸ்வரூபம் எனும் திரைப்படம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் ஒன்றிணைந்து ஒரே குரலாகத் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தன. அதன் பயனாக அதிலிருந்து சில காட்சிகள் நீக்கப்பட்டன. இருந்தாலும் அந்தத் திரைப்படம் மக்கள் மனதில் முஸ்லிம்கள் குறித்த ஒரு தவறான பிம்பத்தைப் பதியத்தான் செய்தது. 

Innocence of Muslims  எனும் தலைப்பில் முன்னோட்டம் வெளியாகி, அதன்பின்  The innocent Prophet  எனும் பெயரில் திரைப்படமாக வெளிவந்து, உலக முஸ்லிம்கள் அனைவரும் தம் உயிரைவிட மேலாக மதித்துப் பின்பற்றி வருகின்ற இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைக் கொச்சைப்படுத்தியது; உலக முஸ்லிம்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பியது. ஆக, அவர்களின் நோக்கம் இஸ்லாமிய மார்க்கத்தையும் அதைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்களையும் சொச்சைப்படுத்த வேண்டும். அனைவரும் அவர்களை வெறுக்க வேண்டும் என்பதேயாகும்.

இதன் பின்னணி நோக்கம் என்னவென்றால், உலக அளவில் மக்களை அழிவுக்குள்ளாக்குவதும் அதன்மூலம்  வியாபாரம் செய்வதும்தான். அழிவு என்பது மக்களை நேரடியாக அழித்தல், சமுதாயச் சீர்கேட்டை ஏற்படுத்தி அதன்மூலம் அழித்தல் என இரண்டும் அடங்கும். இவ்வுலகை எவ்வாறு கட்டமைக்க வேண்டும் என யூதர்கள் எண்ணுகிறார்களோ அதற்கேற்பக் கட்டமைக்க முனைகிறார்கள்.

திரைப்படத்தின் மூலம், வன்முறையைத் தூண்டுதல், சமுதாயச் சீர்கேட்டை உண்டுபண்ணுதல், குடும்பத்தைச் சிதைத்தல், ஆடம்பரப் பொருள்களை விரும்பச் செய்தல், நாணத்தை நீக்குதல், உறவுகளைச் சிதைத்தல், சின்னச்சின்ன விஷயங்களுக்காகக் கொலை செய்யத் தூண்டுதல், பாலியல் வன்புணர்வு செய்தல் உள்ளிட்ட பல வகையான கேடுகளைக் காட்சியாகக் காட்டி மக்கள் மனதைக் கெடுத்து, தாம் விரும்பிய கருத்தைத் திணிக்க முயல்கின்றார்கள். தாம் காட்டுவதுதான் நாகரிகம், பண்பாடு என்ற சிந்தையை ஊட்டுகின்றார்கள். 

எல்லாமே அவர்களுக்கு வியாபாரம்தான். வன்முறையைத் தூண்டுவதன்மூலம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிபொருள்கள் வியாபாரம், சிறுவர்களின் மனதைக் கவர்வதன்மூலம் விளையாட்டுப் பொருள்கள், விளையாட்டுகளைப் பதிவிறக்கம் செய்தல் (கேம்ஸ்)குறிப்பிட்ட அலைவரிசைகளைப் பார்க்கத் தூண்டி வியாபாரம், பெண்களைக் கவர்ச்சியாகவும் அழகாகவும் அரைகுறை ஆடைகளுடன் காட்டுவதன்மூலம் ஆடைகள், அழகு சாதனப் பொருள்களின் வியாபாரம், மது குடித்தல், சிகரெட் பிடித்தல் போன்ற காட்சிகளைத் தவறாது ஒவ்வொரு திரைப்படத்திலும் காட்டுவதன்மூலம் மது, சிகரெட் வியாபாரம் என ஒவ்வொன்றிலும் வியாபாரத் தந்திரம் மறைந்துள்ளது. ஏனென்றால் இவை அனைத்தையும் தயாரிப்பது அவர்கள்தாம். 

திரைப்படங்களில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டுவதன்மூலம் புதிதாக யாரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத நிலையை உண்டுபண்ணுவது மற்றொரு தந்திரம். ஏன்? முஸ்லிம்கள் மது குடிப்பதில்லை; போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; புகைப்பழக்கத்திற்கு அடிமையாவதில்லை; வட்டிக்குக் கடன் வாங்குவதில்லை; பெண்கள் புர்கா அணிவதால் அவர்கள் அழகுசாதனப் பொருள்களையோ அரைகுறை ஆடைகளையோ  வாங்கி அலங்கரித்துக்கொண்டு வீதியில் உலா வருவதில்லை; இதனால் அவர்களின் வியாபாரம் கொழிப்பதில்லை. ஆகவேதான் முஸ்லிம்கள்மீது அவர்களுக்கு எந்தவித விருப்பமுமில்லை. அவர்களைப் பொறுத்த வரை முஸ்லிம்களை அவர்களின் வியாபாரத்திற்கு ஒரு தடைக்கல்லாகத்தான் எண்ணுகின்றார்கள்.

தற்போது இந்தியாவில் இருபத்தைந்து கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உள்ளனர். இஸ்லாமிய மார்க்கத்தைப் புரிந்துகொண்டு, அதன் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இன்னும் ஐம்பது கோடிப் பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டால் நிலைமை என்னாகும்? அங்கெல்லாம் மதுக்கடைகள் மூடப்படும்; அழகு சாதனப் பொருள்கள், கவர்ச்சியான ஆடைகளின் வியாபாரம் படுத்துக்கொள்ளும்; விபச்சாரத் தொழில் நசிந்துபோகும்; வட்டிக் கடைகள் வழக்கொழிந்துபோகும்; பீடி, சிகரெட், புகையிலை, பான்பராக், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்கள் மறைந்துபோகும். சமூகம் தூய்மையடைந்து விடுவதால் சமுதாயச் சீர்கேட்டை உண்டுபண்ணுகின்ற எந்த வியாபாரமும் முஸ்லிம்கள் மத்தியில் நடைபெறாது. இவற்றையெல்லாம் அவர்கள் விரும்புவார்களா?

சனிக்கிழமை மீன்பிடிக்கக் கூடாதுஎன்ற இறைக்கட்டளையையும் மீறி, தம் சூழ்ச்சியாலும் தந்திரத்தாலும் மீன்பிடித்தவர்கள்தாமே இந்த யூதர்கள்? அவர்கள் தம் வியாபாரம்  நொடித்துப் போகுமாறு விட்டுவிடுவார்களா? தம் வியாபாரத்திற்கு எதிராக உள்ள எவரையும் வளரத்தான் விடுவார்களா?

இந்தத் திரைப்படங்களின் தாக்கம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சரியாக அறியாதோரின் மனங்களில்  அவர்களைப் பற்றிய தவறான பிம்பத்தைப் பதிவு செய்துவிட்டது. இதனால் முஸ்லிம்கள் உண்மையிலேயே தீவிரவாதிகள்தாம் என்ற மனஓட்டத்திற்கு அவர்களைத் தள்ளிவிட்டது. ஆதலால் அம்மக்கள் முஸ்லிம்களுக்கு வீடு வாடகைக்கு விடுவதில்லை; அவர்களோடு இயல்பாகப் பழகுவதில்லை; நட்புகொள்வதில்லை; அண்டைவீட்டினராக இருக்க விரும்புவதில்லை. இன்னும் ஒருபடி மேலேபோய், அண்ணன்-தம்பிகளாக, மாமன்-மச்சான்களாகப் பழகிவந்தோரும் அவர்களைத் தவறான எண்ணத்தோடும் நம்பிக்கையின்மையோடும் பார்க்கும் நிலைக்கு ஆளாக்கிவிட்டது. அது மட்டுமல்ல, அவர்களை யாராவது அடித்தாலும் ஓடிவந்து தடுப்பதில்லை. அவர்கள் எவ்வகையில் பாதிக்கப்பட்டாலும் கைகொடுப்பதில்லை. இதனால் பிற சமயச் சகோதரர்களைவிட்டு விலகியே வாழ வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் இன்றைய முஸ்லிம்கள்.

இவ்வாறு தீய எண்ணத்தோடு உருவாக்கப்பட்ட திரைப்படங்களின் தாக்கம் அப்போது தோன்றி, குறிப்பிட்ட சில நாள்களோடு முடிந்துபோய்விடுவதில்லை. அந்தத் தவறான கருத்தை அடுத்தடுத்த தலைமுறை வரை கொண்டு போய்ச் சேர்ப்பதில் முனைப்போடு செயல்படுகின்றார்கள். ஆம்! தொலைக்காட்சி அலைவரிசைகளில் அந்த நச்சுக் கருத்தைக் கொண்டுள்ள திரைப்படங்களை அவ்வப்போது ஒளிபரப்புகின்றார்கள். அதைக் காணும் பிஞ்சு உள்ளங்களில் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் தவறான பிம்பம் பதிந்துபோய்விடுகிறது. அது மட்டுமின்றி, யூ-டியூப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவதால் அவை காலந்தோறும் முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் வேலையைச் செவ்வனே செய்துகொண்டே இருக்கும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

1995ஆம் ஆண்டு வெளியான பம்பாய், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான துப்பாக்கிவிஜயகாந்த் நடிப்பில் வெளியான நரசிம்மா உள்ளிட்ட பல திரைப்படங்கள், அர்ஜுன் நடித்துள்ள பல திரைப்படங்கள் முதலியவை முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தி, அவர்களைத் தீவிரவாதிகளாகவும் சமூக விரோதிகளாகவும் நாட்டுப்பற்று இல்லாதவர்களாகவும் கடத்தல்காரர்களாகவும் தவறாகச் சித்திரிப்பதைத் தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றன. இந்தப்போக்கு நிறுத்தப்படாவிட்டால் இவ்வுலகில் அமைதி திரும்பாது; வன்முறை தொடர்ந்துகொண்டே இருக்கும். அதைச் செய்வோர் முஸ்லிம்கள் அல்லர். ஏனென்றால், “பாதையில் இடர்தரும் பொருள்களை அகற்றுவதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதிஎன அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போதித்த பொய்யாமொழியை முஸ்லிம்கள் தம் அன்றாட வாழ்வில் பின்பற்றி வருவதால் அவர்கள் யாருக்கும் எந்த இடையூறும் செய்ய மாட்டார்கள். ஆனால் முஸ்லிம்களின் எதிரிகள் வன்முறைச் செயல்களைத் தொடர்ந்துகொண்டே இருப்பார்கள். அவற்றைச் செய்துமுடித்ததும் முஸ்லிம்கள்மீது பழி போடுவார்கள்; அவர்கள் கைது செய்யப்படுவார்கள்; சிறைக்குள் வைத்துச் சித்திரவதை செய்யப்படுவார்கள். திரைப்படங்களால் தவறான கருத்தை உள்வாங்கிக்கொண்டிருக்கின்ற மக்கள் அதை உண்மையென நம்புவார்கள். இது ஒரு தொடர்கதையாகத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

உலக அளவில் அந்தந்த நாட்டு மொழிகளில் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு உலக மக்கள் அனைவரின் மனதிலும் ஒரே நேரத்தில் இஸ்லாத்திற்கெதிரான கருத்தை விதைக்கும் வேலையை யூதர்கள் தொடர்ந்து மறைமுகமாகவே செய்துகொண்டிருக்கின்றார்கள். காட்சி ஊடகம் மட்டுமின்றி, அச்சு ஊடகத்தின் மூலமாகவும் இஸ்லாத்திற்கு முரணான செய்திகளைப் பரப்பிக்கொண்டிருக்கின்றார்கள். அத்தோடு நயமான நயவஞ்சகப் பேச்சாளர்கள்மூலமும் தவறான கருத்தை விதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கான தீர்வு என்னவென்றால் இஸ்லாமிய மார்க்கத்தையும் அதன் கொள்கைக் கோட்பாடுகளையும் திருக்குர்ஆனையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நயமாக நவின்ற பொய்யாமொழிகளையும் சகோதரச் சமுதாய மக்களுக்கு எவ்வகையிலேனும் தெரியப்படுத்த வேண்டும். அத்தோடு நாம் நடத்துகின்ற இஸ்லாம் சார்ந்த சொற்பொழிவுகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் அவர்களைச் சிறப்பு விருந்தினர்களாக அழைக்க வேண்டும். மேலும் நாம் இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்டு, காட்சி ஊடகத்தையும் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். அப்போதுதான் மக்கள் மனங்களில் உள்ள தவறான மனப்பான்மையை மாற்ற முடியும்.   =====================================








வியாழன், 19 ஜனவரி, 2017

விரைவில் வெளிவருகிறது. (மறு பதிப்பு)

விரைவில் வெளிவருகிறது. (மறு பதிப்பு)
இது இலவசப் பிரதி.
நன்மையை நாடி...


விரைவில் வெளிவருகிறது.

விரைவில் வெளிவருகிறது.
இது இலவசப் பிரதி.
நன்மையை நாடி...

மனிதன் பேராசைக்காரன்...


- முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

மனிதன் ஒரு பேராசைக்காரன் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஆட்சியாளர்கள் அதைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்; சட்டங்களையும் திட்டங்களையும் தீட்ட வேண்டும். இல்லையேல் அவனைக் கட்டுப்படுத்த முடியாது. மனிதனுக்குப் பொருள்மீதுள்ள பேராசையை எந்த வேலி போட்டும் தடுக்க முடியாது. அறிவுரைகள் கூறியும் அந்த ஆசையை அகற்ற முடியாது. ஏன், துறவிகளுக்கும் பொருளாசை உண்டு என்பதை யாராவது மறுக்க முடியுமா?

எவ்வளவுதான் சம்பாதித்துத் சேர்த்துவைத்தாலும் மீண்டும் மீண்டும் சேர்க்கத்தான் நினைப்பானே தவிர அதை நிறுத்திக்கொள்ள மாட்டான். அவனுக்கு எத்தனையெத்தனை பாடம் நடத்திப் புரிய வைக்க முயன்றாலும் அது தோல்வியில்தான் முடியும். அன்றாட வாழ்க்கையில் எப்போதும் பொருளைச் சேர்த்து, ஒன்றையும் அனுபவிக்காமல் இறந்துபோன எத்தனையெத்தனை நிகழ்வுகளைக் கண்ணாரக் கண்டாலும் அவன் நிறுத்த மாட்டான்; திருந்த மாட்டான்.
இதனால்தான் படைத்த இறைவன் மனிதனைப் பற்றி இவ்வாறு கூறுகின்றான்: (இறந்து) மண்ணறையைச் சந்திக்கும் வரை அதிகமாகச் சேர்க்க வேண்டும் என்ற பேராசை உங்களை வீணாக்கிவிட்டது. (102: 1-2) அதாவது மனிதனின் பேராசை அழிய வேண்டுமென்றால் முதலில் அவன் அழிய வேண்டும். அப்போதுதான் அவனது பேராசையும் அழியும். அது வரை அது தொடரும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மனிதனின் பேராசை குறித்து இலக்கணம் கூறியுள்ளதாவது: ஆதமின் மகனுக்கு (-மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது.... (நூல்: புகாரீ: 6436) இதை இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இன்று நாம் அன்றாடம் காணுகின்ற நாளிதழ் செய்திகள் இதை உண்மைப்படுத்துகின்றன. மக்களுக்குச் சேவையாற்ற வேண்டிய அரசு அதிகாரிகள் முதல் அதிகாரத்தில் இல்லாத பெரும் பணக்காரர்கள் வரை எல்லைமீறிக் கொள்ளையடிப்பதையும் வரம்புமீறிப் பொருள் சேர்ப்பதையும் காணும்போது நமக்குத் தலையே சுற்றுகிறது. அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியை உரிய முறையில் செலுத்தாமல் அரசுக்குத் தெரியாமல் சேர்த்த மொத்தப் பணமும் இறுதியில் பறிபோகிறது. அவன் எண்ணி எண்ணிச் சேர்த்த எந்தப் பணத்தையும் அவன் அனுபவிக்க முடியாமல் போகிறது.

மேலும் எவ்வளவு பணத்தைத்தான் எண்ணியெண்ணிச் சேர்த்தாலும் அதையெல்லாம் அவன் அனுபவித்திடத்தான் முடியுமா? யாருக்காகச் சேர்க்கின்றான்? எதற்காகச் சேர்க்கின்றான்? அளவுக்கு மீறிச் சேர்க்கின்ற எந்தப் பணமும் அவனுக்கில்லை என்பதை நாம் அறுதியிட்டுச் சொல்ல முடியும். ஏனென்றால் "தன்னுடைய பணம்' என்றால் என்னவென்ற இலக்கணம் தெரியாமல் மனிதன் வாழ்ந்துகொண்டிருக்கின்றான். "உண்டு கழித்ததும், உடுத்திக் கிழித்ததும், கொடுத்து மகிழ்ந்ததும் தவிர மனிதனுடைய செல்வம் எதுவும் இல்லை'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ள பொன்மொழி சிந்திக்கத்தக்கது.  

எவ்வளவு உண்கின்றானோ அதுவும், எவ்வளவு ஆடைகளை வாங்கி உடுத்துகின்றானோ அதுவும், எவ்வளவு பணத்தைத் தர்மம் செய்கின்றானோ அதுவும் தவிர பிறவற்றை எவ்வாறு அவனது செல்வம் என்று சொல்ல முடியும்? அவன் இறந்தவுடனேயே அவையெல்லாம் பிறருக்குரிய சொத்தாகிவிடுகின்றது. பிறகெப்படிச் சேர்த்தவற்றையெல்லாம் தனது சொத்தாகக் கருத முடியும்? சான்றாக, மறைந்த தமிழக முதல்வர் பல கோடி மதிப்புள்ள 306 சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார். அவற்றையெல்லாம் அவர் மறைந்தபோது எடுத்துக்கொண்டா சென்றுவிட்டார்? யாரோ ஒருவர் அவற்றை அனுபவிக்கப்போகிறார். ஆக, மனிதனின் பேராசை ஒரு மாயை என்பதை அவன் புரிந்துகொள்கின்ற வரை அவன் பொருள் சேர்ப்பதை விட்டுவிட மாட்டான்.

இந்தப் பேராசைதான் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தவிடாமல் அவனைத் தடுக்கிறது. பேராசைகொண்டவனோடு கஞ்சத்தனமும் சேர்ந்துகொள்ளும். அவனுக்கு அள்ளி அள்ளிச் சேர்க்கத்தான் தெரியும். பிறருக்குக் கொடுக்க மனது வராது. ஏனென்றால் பேராசையும் கஞ்சத்தனமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். ஆதலால் வருவதையெல்லாம் வாரி வாரிச் சுருட்டிக்கொள்வானே தவிர தன்னிடமிருந்து எதையும் பிறருக்குக் கொடுக்க மாட்டான். 

 மெய்யாகவே மனிதன் பதற்றக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான். ஏனென்றால், அவனை ஒரு தீங்கு அடைந்தால், (திடுக்கிட்டு) நடுங்குகின்றான். அவனை யாதொரு நன்மை அடைந்தாலோ, அதனை (தர்மம்  செய்யாது) தடுத்துக் கொள்கின்றான். (70: 19-21) அதாவது வர வரச் சேர்த்து வைத்துக்கொள்வான். தனது செல்வத்திற்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் கதிகலங்கிப் போய்விடுவான்.  அல்லும் பகலும் சிரமப்பட்டுச் சேர்த்த பணத்தில் முப்பது சதவிகிதத்தை அரசுக்கு வரியாகச் செலுத்துமாறு கூறினால் அவன் எப்படிச் செலுத்துவான்? எப்படியாவது ஏமாற்றிவிடத்தான் நினைப்பான். அரசு தனது பணத்தைக் கணக்குப் பார்க்கிறது என்று தெரிந்தால் அதைப் பதுக்க முயல்வான். அந்தரங்க அறைக்குள் மறைத்து வைப்பான். வெளிநாட்டு வங்கியில் போட்டு வைப்பான். ஆக அவனிடமிருந்து அரசு எந்தப் பணத்தையும் வாங்க முடியாது.

படைத்த இறைவன் மனிதனின் பேராசையை நன்றாகவே அறிந்தவன். அதனால்தான் அவனிடமிருந்து மிகக் குறைந்த தொகையாக வருடத்திற்கு இரண்டரை சதவிகிதம் மட்டுமே கேட்கிறான். இது முற்றிலும் குறைந்த தொகைதான். அதனால்தான் முஸ்லிம்கள் யாவரும் இறைவனுக்குப் பயந்து இதைத் தவறாது கொடுத்துவிடுகின்றனர். இதனால் முறையாக வரி செலுத்தப்படுகின்ற இஸ்லாமிய நாடுகளில் செல்வத்திற்குப் பஞ்சமில்லை; ஏழைகள் எஞ்சவில்லை.

இந்தியாவில் பல்வேறு புரட்சிகரமான திட்டங்கள் அண்மைக் காலமாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகின்றன. "ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்'' என்பதும் ஒரு புரட்சிகரமான திட்டம்தான். இது சிலருக்குப் பாதகமாகவும் வேறு சிலருக்குச் சாதகமாகவும் இருக்கலாம். ஆனால்  "நாடு முழுவதும் அனைவருக்கும் ஒரேவிதமான வருமான வரி-அது இரண்டரை சதவிகிதம்'' எனும்  ஒரு திட்டத்தை அரசு செயல்படுத்தினால் வரி ஏய்ப்புச் செய்ய யாரும் எண்ணிக்கூடப் பார்க்கமாட்டார். முறையாகவும் துல்லியமாகவும் அரசுக்கு வரிகள் வந்து குவியும்; மக்களுக்கு மகிழ்ச்சி பெருகும். அரசு தான் எண்ணுகின்ற திட்டங்களை எளிதாகச் செயல்படுத்தலாம். அதுபோலவே விவசாயம் செய்து பொருளீட்டுவோருக்கு அவர்களுடைய மகசூலின் மதிப்பில் 5 சதவிகிதம் வரியாகச் செலுத்த ஆணை பிறப்பித்தால் அரசுக்கு நல்ல முறையில் வரி வந்து குவியும். இந்திய அரசின் வருமான வரிச் சட்டப்படி விவசாயிகளுக்கு வரிச் சலுகை உண்டு. அவர்கள் வரி கட்டத் தேவையில்லை. இதைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்வோர் முறைகேடாக ஈட்டிய பணத்தை விவசாயத்தில் ஈட்டியதாகப் பொய்யான கணக்கைக் காட்டி, வரி கட்டாமல் தப்பித்துக்கொள்கின்றனர். அதற்கு ஒரு முடிவு கட்டிவிடலாம்.

வருமான வரித்துறை தகவல்படி, 2.5 இலட்ச ரூபாய்க்குக் குறைவாக வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. 2.5 இலட்சம் ரூபாய் முதல் 5 இலட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்கள் 10 சதவிகிதம் வரியும் 5 இலட்ச ரூபாயிலிருந்து 10 இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுபவர்கள் 20 சதவிகித வரியும் செலுத்த வேண்டும். ரூ. 10 இலட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் பெறுவோர் 30 சதவிகிதத்தை வருமான வரியாகச் செலுத்த வேண்டும். இது இந்திய அரசின் இன்றைய நிலைப்பாடு. இதை மாற்றி, "ஒரே பணம் ஒரே வரி-இரண்டரை சதவிகிதம்'' எனும் புதிய சட்டம் அறிவிக்கப்பட்டால் வரி ஏய்ப்பு நிச்சயம் ஏற்படாது என்று நம்பலாம். சட்டங்கள் எளிமையாக இருக்கும்போது அதை அனைவரும் விரும்பிப் பின்பற்றுவார்கள். அது மனித இயல்புக்கு மாற்றமாகவும் முரணாகவும் இருந்தால் அதை அனைவரும் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது அறியாமை. எனவே படைத்த இறைவன் விதித்த வரையறையை நடைமுறைப்படுத்தினால் வெற்றி நிச்சயம்.

மேலும் இப்போது உள்ள வரையறையையும் மாற்றி, ஒரு இலட்சம் வங்கி இருப்பில் உள்ளவர்கள் அனைவரும் ஆண்டுக்கொரு முறை இரண்டரை சதவிகிதம் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையையும் விதிக்க வேண்டும். இதனால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகும். இன்னும் ஒரு படி மேலாகச் சொல்ல வேண்டுமானால், அவரவரின் வங்கி இருப்பிலிருந்து நேரடியாக வருமான வரித்துறையே வரியைப் பிடித்தம் செய்துகொள்கின்ற நடைமுறையையும் செயல்படுத்தினால் யாரும் வரி ஏய்ப்புச் செய்ய முடியாது என்பது உறுதி. இவ்வாறு வரியை முறைப்படுத்தினால், அரசு விரிவான திட்டங்களைச் செயல்படுத்தலாம். அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாது. உலக வங்கியிடம் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் நிகழாது. அது மட்டுமல்ல கூடிய விரைவிலேயே உலக வங்கியிடம் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்திச் சுய மரியாதையோடு ஒவ்வோர் இந்தியனும் தலைநிமிர்ந்து நடக்கலாம். அத்தோடு வல்லரசு நாடுகளின் சட்டாம்பிள்ளைத்தனத்திற்குக் கட்டுப்பட வேண்டிய அவசியமும் ஏற்படாது.

இத்திட்டத்தைச் செயல்படுத்தும்போது வரி குறைந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படலாம். வேறொரு கோணத்தில் சிந்தித்துப் பார்த்தால் அச்சம் தீர்ந்துவிடும். ஆயிரம் பேர் தலா ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கும் ஒரு இலட்சம் பேர் தலா நூறு ரூபாய் கொடுப்பதற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொண்டால் இலாபமா, நட்டமா என்பதை யூகிக்க முடியும்.


நம் நாடு மட்டுமல்ல எந்த நாட்டிலும் வரி ஏய்ப்பு நடைபெறாமல் இருக்க வேண்டுமானால் குறைவான வருமான வரியை விதித்தால்தான் அது சாத்தியமாகும். இத்திட்டத்தைத் துணிச்சலாகச் செயல்படுத்தும் பிரதமரைத்தான் இந்தியா எதிர்பார்க்கிறது.








வியாழன், 12 ஜனவரி, 2017

ஔவையின் அறநெறி நூல்களில் சமுதாயச் சிந்தனைகள்

ஜமால் முஹம்மது கல்லூரியில் 11-01-2017 அன்று “தமிழ் இலக்கியங்களில் முதாயச் சிந்தனைகள் என்னும் பொருண்மையில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்து கொண்டு என் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தேன்.

இதோ அக்கட்டுரை உங்கள் பார்வைக்கு...

ஔவையின் அறநெறி நூல்களில் சமுதாயச் சிந்தனைகள்
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி.
(மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர்)

ஔவையைத் தமிழ் மூதாட்டிஎனத் தமிழர்கள் அன்போடு அழைப்பர். அவர் ஏராளமான பாடல்களை இயற்றித் தமிழுலகிற்கு ஈந்துள்ளார். அவை அனைத்தும் படிப்போர் இதயங்களைப் பண்படுத்துபவை; சமுதாயச் சிந்தனையோடு எழுதப்பட்டவை. அவர் இயற்றிய அறநெறி நூல்களான ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நூல்களில் காணப்படுகின்ற சமுதாயச் சிந்தனைகளைக் கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்.

பிறருக்கு உதவிசெய்தல், நல்லவர்களோடு நட்புகொள்ளுதல், இல்லார்க்கு ஈதல், உழைத்துண்ணல், மணம் புரிந்து வாழ்தல், இல்லாளை நல்லவளாய்த் தேர்ந்தெடுத்தல், விதியை நம்புதல் உள்ளிட்ட பல்வேறு சமுதாயச் சிந்தனைகளை உள்ளடக்கித் தம் பாடல்களை இயற்றியுள்ளார். படிப்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் அவர்தம் பாடல்கள் அமைந்துள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்க சில சமுதாயச் சிந்தனைகளை விரிவாகக் காணலாம்.

உதவி செய்தல்

பிறருக்கு உதவி செய்தல் மிகச் சிறந்த மனிதப் பண்பு என்பதை நாம் பல்வேறு நன்னெறி நூல்கள் மூலமும் ஆன்றோர்களின் அறவுரைகள் மூலமும் தெரிந்து வைத்துள்ளோம். அதே நேரத்தில் கைம்மாறு கருதாமல் பிறருக்கு உதவி செய்ய வேண்டுமென்பதைத் தமிழ் மூதாட்டி ஔவையார் தம் மூதுரைப் பாடல் மூலம் எடுத்துரைக்கிறார்.    

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல்?' என வேண்டா-நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.

ஒருவருக்கு உபகாரம் செய்யும்போதே அதற்கான பிரதிபலனையோ கைம்மாறையோ எதிர்பார்த்துச் செய்யலாகாது. ஒரு தென்னை மரம் தன் வேர்களால் நிலத்திலிருந்து உறிஞ்சுகின்ற நீரை இளநீர் மூலம் திருப்பித் தருவதைப்போல் ஒருவர் பிறருக்குக் கைம்மாறு கருதாமல் உதவி செய்தால் அதற்கான  பிரதிபலன் பிற்காலத்தில் திண்ணமாக அவருக்குக் கிடைத்தே தீரும் என அறிவுறுத்துகிறார்.

நல்லவர்களோடு நட்பு கொள்ளுதல்

ஒவ்வொருவரும் தத்தம் இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு நட்பு தேவை. அந்த நட்பு நல்ல நட்பாக, பயனுள்ள நட்பாக, நல்வழியில் செலுத்தும் நட்பாக, நற்குணங்களைப் போதிக்கும் நட்பாக இருக்க வேண்டும். பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவரும் நட்பைக் குறித்து ஓர் அதிகாரத்தையே அமைத்துள்ளார். அதில் அவர் ஆழமான கருத்துகளை முன்வைத்துள்ளார். அதுபோலவே தமிழ் மூதாட்டி ஔவையார் மூதுரைப் பாடலில் நட்பின் இலக்கணத்தை வரையறுக்கிறார்:
நல்லாரைக் காண்பதுவும் நன்றேஎனத் தொடங்கும் பாடலில், நல்லவரைக் காண்பதும், அவர்தம் அறிவுரைகளைக் கேட்டு அதன்படி நடப்பதும் அவர் சொன்ன அறிவுரைகளைப் பிறருக்கு எடுத்துரைப்பதும் நல்லவரோடு இணங்கி இருப்பதும் தோழமையுடன் பழகுவதும் நன்மைக்குரிய செயலாகும் என அறிவுரை பகர்கின்றார்.

வாய்மையாளர்களோடு இருங்கள்எனும் திருக்குர்ஆனின் கூற்று இங்கு நினைவுகூரத்தக்கது.

அதே நேரத்தில் தீயவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்பதையும், “தீயாரைக் காண்பதுவும் தீதேஎனும் அதற்கடுத்த பாடலின்மூலம் விளக்குகிறார். தீயாரைக் காண்பதும், தீயார் சொல் கேட்பதும், தீயாரோடு இணக்கமாக இருப்பதும் அவர் கூறுவதைப் பிறருக்கு எடுத்துச் சொல்வதும் தீது என்றுரைக்கிறார்.
தீயாரோடு சேர்ந்து அமர்வதைவிடத் தனிமையில் இருப்பது மேலானதுஎனும் நபிகள் நாயகத்தின் பொன்மொழி இவ்விடத்தில் நினைவுகூரத்தக்கது.

இல்லார்க்கு ஈதல்

தமிழ் மூதாட்டி ஆத்திசூடியில் பல இடங்களில் ஈதல் குறித்துப் பாடியுள்ளார். அறம் செய விரும்பு, ஈவது விலக்கேல், ஐயம் இட்டு உண், தானமது விரும்பு உள்ளிட்ட பல அறிவுரைகள் மூலம் ஈதல் குறித்து வலியுறுத்துகிறார். கொன்றை வேந்தனில், ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர், சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண் என்று ஈதலின் அவசியத்தை எடுத்துரைக்கிறார்.

நல்வழியில், “சாதி இரண்டொழிய வேறில்லைஎனத் தொடங்குகின்ற பாடலில், “இட்டார் பெரியோர்; இடாதார்இழி குலத்தோர்என்றும், “ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டாலும்எனத் தொடங்கும் பாடலில், “இட்டு உண்டு இரும்எனவும் கூறி ஈதலின் மேன்மையை எடுத்துரைக்கிறார். பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துஎனத் தொடங்கும் பாடலில், பணத்தைப் பிறருக்கு ஈயாமல் சேர்த்து வைத்துக் கொள்ளும் மானிடரைப் பழிக்கின்றார்; மனிதன் இறந்த பின் யாரோ அனுபவிக்கப்போகின்ற அந்தப் பணத்தைச் சேர்த்துச் சேர்த்து வைத்துக்கொள்வதால் யாருக்கு என்ன பயன் என்று கேட்டு, ஈயாதோரை இடித்துரைக்கிறார்.

மேலும் மரம் பழுத்தால்எனத் தொடங்கும் பாடலில், “கரவாது அளிப்பரேல் உற்றார் உலகத் தவர்எனும் வரியின் மூலம், தேவையுடையோர் தம்மிடம் கேட்காத போதிலும், தேவையுடையோர் யாரெனத் தாமே கண்டறிந்து ஈதல் வேண்டும் என வலியுறுத்துகிறார்.

உழைத்துண்ணல்

ஒருவர் தமக்கான வாழ்வாதாரத்தை ஈட்டிக்கொள்ள உழைத்தல் அவசியமாகும். உழைப்பின்மூலமே ஒருவர் தம் வாழ்வில் உயர்வடைய முடியும். உழைப்பால் உய்யும் இவ்வையகம் எனும் முதுமொழிக்கேற்ப தமிழ் மூதாட்டி தம் பல்வேறு பாடல்கள்மூலம் உழைப்பின் முக்கியத்துவத்தை உலகோர்க்கு உணர்த்துகிறார். ஆத்தி சூடியில், கைவினை கரவேல், நெற்பயிர் விளைவு செய், பூமி திருத்தி உண், பொருள்தனைப் போற்றி வாழ் உள்ளிட்ட பாடல்கள் உழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றன. கொன்றை வேந்தனில், அஃகமும் காசும் சிக்கெனத் தேடு, சீரைத் தேடின் ஏரைத் தேடு, திரைகடல் ஓடியும் திரவியம் தேடு, தேடாது அழிக்கின் பாடாய் முடியும் முதலிய அறநெறிப் பாடல்கள்மூலம் உழைப்பின் உயர்வையும் பொருளாதாரத்தைத் தேடுவதன் அவசியத்தையும் எடுத்துரைத்து உழைத்துண்ண வழிகாட்டுகிறார்.

ஆகுமானவற்றை உழைத்துப் பெறுவது கட்டாயக் கடமைகளுக்குப் பிறகுள்ள கடமையாகும்எனும் நபிகள் நாயகத்தின் பொய்யாமொழி இங்கு நினைவுகூரத்தக்கது.

மேலும் நல்வழியில், “கல்லானே ஆனாலும்எனத் தொடங்கும் பாடலில், ஒருவன் கல்லாதவனாக இருந்தாலும் அவனிடம் பணமிருந்தால் எல்லாரும் அவனைக் கொண்டாடுவர். பணமில்லாதவனை அவனுடைய மனைவியோ தாயோகூட மதிக்கமாட்டார்கள்; அவனுடைய எந்தக் கருத்தும் சபை ஏறாது எனக் கூறிப் பொருளாதாரத்தைத் தேடவேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்.

மணம் புரிந்து வாழ்தல்

ஓர் ஆண்மகன் தனக்கொரு பெண்ணைத் தேர்வுசெய்து, அவளை மணந்துகொண்டு அவளோடு இல்லறம் நடத்துவதே குடும்ப வாழ்க்கையாகும். தன் இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான இனிய தோழியாக அவள் விளங்குவாள். இல்லறத்தை நல்லறமாய் நடத்த ஒவ்வோர் ஆணுக்கும் ஒரு மங்கை நல்லாள் துணையாக இருக்க வேண்டும் என்பதைத் தமிழ் மூதாட்டி தம் பாடல்கள் மூலம் வலியுறுத்துகிறார். இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லைஎனும் மூதுரைப் பாடலில், இல்லாள் ஒருத்தி வீட்டிலிருந்தால் அவனுக்கு இல்லை என்று சொல்ல எதுவுமில்லை; எல்லா வளங்களையும் பெற்றவனைப் போன்றவனாகின்றான் என்ற கருத்தின்மூலம் இல்லற வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்.

மேலும், “நீறில்லா நெற்றி பாழ்எனத் தொடங்கும் நல்வழிப் பாடலில், “பாழே மடக்கொடி இல்லா மனைஎனும் வரியின்மூலம், பெண் இல்லாத வீடு பாழாகிவிடும் எனக் கூறி, இல்வாழ்க்கையின் முக்கியத்துவத்தை எடுத்தியம்புகிறார்.

மெல்லி நல்லாள் தோள்சேர்என ஆத்தி சூடியிலும் இல்லறம் அல்லது நல்லறம் அன்றுஎனக் கொன்றை வேந்தனிலும் எடுத்தியம்பி இல்லறம் ஏற்று நல்லறம் நடத்த வலியுறுத்துகிறார். திருமணம் எனது வழிமுறைஎனும் நபிகள் நாயகத்தின் பொன்மொழி இவ்விடத்தில் நினைவுகூரத்தக்கது.

இல்லாளை நல்லவளாய்த் தேர்ந்தெடுத்தல்

மணம் புரிந்து வாழ வேண்டும் என்று கூறுகின்ற எவரும் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்எனும் முதுமொழியையும் கூற மறப்பதில்லை. ஒருவனுக்கு மனைவி சரியாக அமைந்துவிட்டால் அவ்வீட்டில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது என்பது யாவரும் ஒத்துக்கொள்ளும் உண்மையாகும். அதற்கேற்பவே தமிழ் மூதாட்டி, மணம் புரிந்து வாழ வேண்டியதன் முக்கியத்துவத்தைத் தம் பாடல்களில் எடுத்தியம்பியதோடு நின்றுவிடாமல், இல்லாள் எப்படி இருக்கக் கூடாது என்பதையும் தெரிவிக்கிறார்.

கணவனின் சொற்படி நடக்காத பெண்ணாக இருந்தால் அவளோடு வாழ்வது கானகத்தில் வாழும் காட்டுப் புலியோடு குடும்பம் நடத்துவதற்கு ஒக்கும் என்ற கருத்தை, “இல்லாள் வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல் புலி கிடந்த தூறாய் விடும்எனும் பாடல் வரிகளின்மூலம் எடுத்துரைக்கிறார்.

மேலும் கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்எனத் தொடங்கும் பாடலில், “கூற்றமே இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்”-கணவனுக்குக் கட்டுப்பட்டு நடக்காதவள் தன் கணவனுக்கு இயமனைப் போன்றவள் எனக் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, “இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்றுஎனத் தொடங்கும் பாடலில், “பழிக்கஞ்சாத் தாரத்தின் நன்று தனி”- பழிக்கஞ்சாத பெண்ணை மனைவியாக ஏற்று இல்லறம் நடத்துவதைவிடத் தனியாக வாழ்ந்துவிடுவதே மேல் எனத் தெளிவுபட உரைக்கிறார்.

பெண்கள் நான்கு நோக்கங்களுக்காக மணமுடிக்கப்படுகிறார்கள். 1. அவளது செல்வத்திற்காக, 2. அவளுடைய குலத்திற்காக, 3. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடைய பெண்ணை மணந்துகொள்! (இல்லையேல்) உன்னிரு கைகளும் மண்ணாகட்டும்எனும் நபிகள் நாயகத்தின் அறவுரை நினைவுகூரத்தக்கது. (நூல்: நஸாயீ: 3178)

விதியை நம்புதல்

நடப்பவை யாவும் விதிப்படியேஎனும் முதுமொழிக்கேற்ப இவ்வுலகில் நடப்பவை யாவும் இறைவனின் விதிப்படியே நடக்கின்றன. எனவே வாழ்க்கையில் வெற்றி கிடைத்தாலும் தோல்வி ஏற்பட்டாலும் அவை இறைவனின் நியதிப்படிதான் நடக்கின்றன என்ற பக்குவம் வேண்டும். இல்லையேல் வீண் கவலை ஏற்பட்டு வாழ்க்கை சோகமானதாக மாறிவிடும். எனவே இறைவனின் விதியை நம்புவதே அனைவருக்கும் சாலச் சிறந்ததாகும்.

இது குறித்து தமிழ் மூதாட்டி தம் பாடல்களில் தெளிவாகவே எடுத்துரைக்கிறார். அடுத்து முயன்றாலும்எனத் தொடங்கும் மூதுரைப் பாடலில் ஒருவர் ஒரு செயலைச் சீக்கிரம் செய்து முடிக்க வேண்டுமென்பதற்காகத் தம்மை வருத்திக்கொண்டு அல்லும் பகலும் முயன்றாலும் அது நடக்க வேண்டிய நேரத்தில்தான் நடந்தேறும். உயர்ந்த மரங்களெல்லாம் உரிய பருவத்தில்தான் கனிகளைத் தருகின்றன. அதுபோலவே மனித முயற்சிக்குரிய பலன் அதற்குரிய நேரத்தில் திண்ணமாகக் கிட்டும். கிடைக்கவில்லையே என ஏங்கித் தவிக்கவோ தம்முயிரை மாய்த்துக்கொள்ளவோ கூடாது என்ற கருத்தை உள்ளடக்கித் தெளிவுபட உரைக்கிறார்.

மேலும் இல்வாழ்வில் ஈடுபட்டுள்ள பெண்கள் தம் இல்வாழ்க்கையை எண்ணியெண்ணிக் கவலைப்படுவதுண்டு. கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுக்கும் நல்லதொரு கணவன் கிடைத்தும் வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லையே எனத் துக்கப்படுவோர் உண்டு. சிலருக்கு நல்ல கணவன் அமைந்து, மிகக் குறுகிய காலத்திலேயே அவன் இறந்துவிடுவதும் உண்டு. அத்தகைய பெண்களுக்கு ஆறுதல் கூறுமுகமாக, “ஆழ அமுக்கி முகக்கினும்எனும் மூதுரைப் பாடலில், ஒரு வாளியைக் கடலுக்குள் எவ்வளவுதான் ஆழமாக அமுக்கி எடுத்தாலும் அதன் கொள்ளளவு எவ்வளவோ அவ்வளவுதான் அதனுள் நீர் இருக்கும். அதுபோலவே ஒரு பெண்ணுக்குப் பணக்காரக் கணவன் கிடைத்துவிட்டாலும், கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கும் கணவனே அமையப்பெற்றாலும் அவளது விதியில் எவ்வாறு எழுதப்பட்டுள்ளதோ அதன்படிதான் அவளின் வாழ்க்கை அமையும் என்று அறிவுரை பகர்கின்றார்; பெண்களின் மனதைத் தேற்றுகிறார். 

மேலும் எழுதியவாறேதான்எனும் மூதுரைப் பாடலில், எது விதியில் எழுதப்பட்டுள்ளதோ அதுதான் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடைபெறும். நாம் மனதில் எண்ணியதெல்லாம் நடைபெறாது எனக் கூறிக் கற்பனையில் சஞ்சரிக்கும் மாந்தர்களைத் தட்டியெழுப்புகிறார்.

இவ்வாறு சமுதாய மக்களுக்குத் தேவையான பல்வேறு அறநெறிக் கருத்துகளைத் தம் பாடல்கள்மூலம் சாறெடுத்துத் தமிழுலகிற்குத் தந்துள்ளார் தமிழ் மூதாட்டி. அவற்றின்மூலம் அவர் என்றென்றும் மக்கள் மனங்களில் நீடித்து வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.

=(())=====(())======(())=