திங்கள், 25 மே, 2026

கழுதைகள் கூறும் பாடம்

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. 


ஒவ்வோராண்டும் மே 8ஆம் நாள் உலக கழுதைகள் நாள் அனுசரிக்கப்படுகிறது. டாக்டர் அப்துல் ராஸிக் என்பவரின் முயற்சியால்தான் இந்நாள் நடைமுறைக்கு வந்தது. 2018ஆம் ஆண்டு இது தொடங்கியது. இவர் பாலைவன விலங்குகள் குறித்து ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மனிதர்களுக்குப் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உதவியாளராக இருந்து வரும் கழுதைகளின் கடின உழைப்பை அங்கீகரிக்கவும், அவற்றின் பாதுகாப்பை வலியுறுத்தவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.


பொதுவாக மனிதன் கழுதையைப் பயணம் செய்வதற்கும் பொதிகளைச் சுமந்து செல்வதற்கும் பயன்படுத்தினான்; இன்றும் கிராமங்களில் மக்கள் அவற்றைப் பயன்படுத்திவருகின்றார்கள். அது அவனோடு ஒன்றி இருக்கக்கூடிய சாதுவான பிராணியாகும். கழுதை குறித்துப் பேசும்போது அதை இகழ்ச்சிக்கான குறியீடாகத்தான் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். கழுதை போல் கத்தாதே, கழுதை கெட்டால் குட்டிச் சுவர், கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசம், கழுதை தேய்ந்து கட்டெறும்பானது, வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம் உள்ளிட்ட ஏராளமான பழமொழிகள் சொல்லப்படுகின்றன. அந்த வகையில் திருக்குர்ஆனில் அல்லாஹ்வும் அதை இகழ்ச்சிக்கான குறியீடாகவே உதாரணம் காட்டுகிறான்.


வேதம் கொடுக்கப்பட்ட யூதர்கள் அதை உரிய முறையில் பின்பற்றாமல் வழிதவறிச் சென்றார்கள். அத்தகையோரைப் பொதி சுமக்கும் கழுதையைப் போன்றவர்கள் என்று சொல்கின்றான். இதோ அந்த வசனம்: ‘தவ்றாத்’ என்னும் வேதத்தைச் சுமந்து கொண்டு, அதிலுள்ளபடி நடக்காதவர்களின் உதாரணம், புத்தகங்களைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கும் மக்களின் இவ்வுதாரணம் மகா கெட்டது. அல்லாஹ் இத்தகைய அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்தமாட்டான். (62: 5) சிந்திக்காத மனிதர்களை எதைப் பற்றியும் சிந்திக்காத கழுதையைப் போலத்தான் என்கிறான். 


இறைமறுப்பாளர்கள் இறைவசனங்களையும் நல்லுரைகளையும் செவியுறுகின்றபோது அதைக் கேட்டுவிடாதவாறு ஓடுகின்றார்கள். அதை ஓர் உதாரணத்தின் மூலம் அல்லாஹ் ஒப்பிட்டுக் கூறுகின்றான்.  அவர்களுக்கு என்ன நேர்ந்தது? இந்நல்லுபதேசத்தை (இவ்வாறு) புறக்கணிக்கின்றனர். சிங்கத்தைக் கண்டு வெருண்டோடும் (காட்டுக்) கழுதையைப் போல் அவர்கள் இருக்கின்றனர்!  (74: 49-51)


கழுதையின் சத்தம்: பொதுவாக மிகுந்த சத்தத்தோடு பேசுவோரை, ‘கழுதை மாதிரி கத்தாதே’ என்று சொல்வார்கள். அதுபோலவே லுக்மான் அலைஹிஸ் ஸலாம் தம் மகனுக்கு அறிவுரை கூறியபோது, “உன் சத்தத்தை-குரலைத் தாழ்த்திக்கொள்; திண்ணமாகச் சத்தங்களில் மிகவும் வெறுக்கத்தக்கது கழுதையின் சத்தமாகும்” (31: 19) என்றார்கள். 


பொதுவாக மனிதனுடைய பார்வைக்குப் புலப்படாதவை மற்ற உயிரினங்களுக்கும் விலங்கினங்களுக்கும் புலப்படுகின்றன. அந்த வகையில் கழுதையின் பார்வைக்கு ஷைத்தான் புலப்படுகின்றான் என்பதை நபியவர்கள் கூறுவதோடு, நல்லதொரு செய்தியையும் அத்தோடு கூறுகின்றார்கள்: 


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: நீங்கள் சேவல்கள் கூவுகின்ற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்தி ருக்கின்றன. (அதனால்தான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சத்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கின்றது. (அதனால்தான் கத்துகின்றது.) (புகாரீ:  3303)


ஆகவே கழுதையின் கண்களுக்கு ஷைத்தான் புலப்படுகிறான். அவனைப் பார்த்ததும் அது கத்துகிறது. எனவே அந்த நேரத்தில் நாம் ஷைத்தானிடமிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதேநேரத்தில் சேவலின் கண்களுக்கு வானவர் தென்படுகிறார். அவரைப் பார்த்ததும் அது கூவுகிறது. அந்த நேரத்தில் அல்லாஹ்வின் அருளைக் கேட்டுப் பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும். 


இறந்த கழுதையை உயிர்ப்பித்தல்: உஸைர் நபி ஒரு நாள் தமது தோட்டத்தைக் கவனிக்கப் புறப்பட்டுச் சென்றார். நண்பகல் வேளையில் வெப்பம் கடுமையாகத் தாக்கியதால் வழியில் ஓரிடத்தில் பாழடைந்து கிடந்த வீட்டுக்குள் நுழைந்தார். அவர்தம் கழுதையுடனே அவ்வீட்டுக்குள் நுழைந்து, அந்தக் கழுதையிலிருந்து இறங்கினார். அவர் தம்முடன் ஒரு கூடையில் அத்திப்பழமும் மற்றொரு கூடையில் திராட்சையும் வைத்திருந்தார். பாழடைந்த அந்த வீட்டின் நிழலில் இருந்துகொண்டு தம்முடன் வைத்திருந்த ஒரு தட்டை எடுத்து, கூடையிலிருந்த திராட்சையை எடுத்துச் சாறுபிழிந்தார்.

 

அவர் வைத்திருந்த காய்ந்த ரொட்டியை எடுத்து, சாப்பிடுவதற்கு எளிதாக இருப்பதற்காக,  பிழிந்து வைத்திருந்த திராட்சைச் சாற்றினுள் அதைப் போட்டார். அவர்தம் பிடரியைக் கீழே வைத்தவராகத் தரையில் படுத்தார்; தம் இரண்டு கால்களையும் சுவரில் முட்டுக்கொடுத்த நிலையில், முகட்டைப் பார்த்தார். அவை அடியோடு வீழ்ந்து கிடந்தன. அதன் ஊர்வாசிகளோ அழிந்துபோய்விட்டனர். 


மக்கிப்போன எலும்புகளைக் கண்டார். அப்போது அவர், “(மடிந்துவிட்ட இந்த ஊரை) அது மடிந்தபின் எவ்வாறு அல்லாஹ் உயிர்ப்பிக்கப்போகிறான்?” என்று கூறினார். (2: 259) அல்லாஹ் அதை உயிர்ப்பிப்பான் என்பதில் அவர் சந்தேகம் கொள்ளவில்லை. எனினும் அவர் ஆச்சரியமாகவே அவ்வாறு கூறினார். எனவே அல்லாஹ், உயிரைக் கைப்பற்றும் வானவரை அனுப்பினான். அவர் அவருடைய உயிரைக் கைப்பற்றினார். அவ்வாறே அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை மரணிக்கச் செய்தான். 


நூறாண்டுகள் கடந்தபோது, இஸ்ரவேலர்களிடம் பல்வேறு மாற்றங்களும் நடந்தேறிவிட்டன.  அச்சமயத்தில் அல்லாஹ் உஸைரிடம் ஒரு வானவரை அனுப்பி, அவருடைய உள்ளத்தைப் படைத்தான். அதன் மூலம் அவரது உள்ளம் அறிந்துகொள்ளும்; இறந்தவர்களை அல்லாஹ் எவ்வாறு உயிர்ப்பிக்கிறான் என்பதை அவருடைய இரண்டு கண்களும் பார்ப்பதற்காக அவற்றையும் படைத்தான்.


பின்னர், அவர் பார்க்கும் நிலையிலேயே அவரது உடலை இணைத்தான். அதன்பின், அவருடைய எலும்புகளைச் சதையாலும் முடியாலும் தோலாலும் போர்த்தினான். பின்னர், அதனுள் உயிரை ஊதினான். அவை அனைத்தையும் அவர் பார்த்து விளங்கிக்கொண்டார்; அதன்பின் எழுந்து அமர்ந்துகொண்டார்.

அப்போது அந்த வானவர் அவரிடம், “எவ்வளவு காலம் (இங்கே) தங்கியிருந்தீர்?” என்று வினவினார். “ஒரு நாள், அல்லது ஒரு நாளில் சிறு பகுதி நான் தங்கியிருந்தேன்” என்று கூறினார். ஏனென்றால், அவர் நண்பகலில்தான் அங்கு வந்து படுத்தார். பிற்பகல் வேளையில் எழுப்பப்பட்டார்; அப்போது சூரியன் மறையவில்லை. அப்போது அந்த வானவர், “மாறாக, நூறாண்டுகள் நீர் தங்கியுள்ளீர்; இதோ உம் உணவையும் பானத்தையும் பாரீர்!” என்று கூறினார். 


அவ்விரண்டும் அதே நிலையிலேயே இருந்தன. பழச்சாறு மாற்றமடையவில்லை; காய்ந்த ரொட்டியும் அப்படியே இருந்தது. அதைத்தான் அல்லாஹ், “அவை கெட்டுப்போகவில்லை” என்று குறிப்பிடுகின்றான். அதேபோல் அத்திப்பழமும் திராட்சையும் அப்படியே  இருந்தன. அவற்றின் நிலை சற்றும் மாறவில்லை.

அவர் மறுப்பதைப் போன்று காணப்பட்டார். அப்போது அவ்வானவர், “நான் சொல்வதை நீர் மறுக்கின்றீரா? அப்படியானால், நீர் உம்முடைய கழுதையைப் பாரீர்!” என்று கூறினார்.  அவர் கூறியதும், கழுதையைப் பார்த்தார். அதன் எலும்புகள் மக்கிப்போய் எலும்புக்கூடாகக் காட்சியளித்தது. அப்போது அந்த வானவர், அக்கழுதையின் எலும்பை அழைத்தார்; அது பதிலளித்தது; எல்லாப் புறமும் எழுந்து அவரை முன்னோக்கின. அந்த வானவர், அதை இணைத்தார்; அதை அவர் பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர், அதற்குத் தசைகளையும் நரம்புகளையும் அளித்து, தோலால் அதைப் போர்த்தினார். 


பின்னர், அதனுள் உயிரை ஊதினார்; உடனே அக்கழுதை தன் தலையை உயர்த்தியவாறும், காதுகளை வானத்தை நோக்கிய நிலையிலும் மறுமைநாள் நிகழ்ந்துவிட்டதோ என்று  கனைத்துக் கத்திக்கொண்டே எழுந்தது. அதைத்தான் அல்லாஹ் கூறுகிறான்: (செத்துப்போன) உமது கழுதையையும் காண்பீராக! மக்களுக்கு உம்மை ஒரு சான்றாக நாம் ஆக்குவதற்காகவே (இவ்வாறு செய்தோம்.) இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளை நாம் எவ்வாறு இணைத்து, பின்னர் அவற்றில் சதையை அளிக்கிறோம் என்பதைக் கவனிப்பீராக! (2: 259)


அவருக்கு இது தெளிவானபோது, “அல்லாஹ் அனைத்துப் பொருள்கள்மீதும் ஆற்றலுடையவன் என்பதை நான் அறிகிறேன்” என்று கூறினார். (2: 259) அதாவது ‘மரணித்ததை உயிர்ப்பிப்பது உள்ளிட்ட விஷயங்களை நான் அறிந்துகொண்டேன்’ என்று கூறினார். ஆக இறந்துபோன கழுதையை உயிர்ப்பிப்பதைப் போலத்தான் இறந்துவிட்ட மனிதர்களை அவன் உயிர்ப்பிப்பான் என்பதை நேரடிச் சான்றாக அல்லாஹ் உஸைர் நபிக்குக் காட்டினான். 


கழுதையைப் போல்: எதிர்மறையான, கீழ்த்தரமானவற்றிற்கு உதாரணம் கூறினாலும், அதனிடம் பற்பல பாடங்கள் மனிதனுக்கு உண்டு. வண்ணான் ஒருவன் அழுக்கு மூட்டைகளை கழுதையின் முதுகில் வைத்துக்கொண்டு ஆற்றங்கரை சென்று அவற்றைத் துவைத்துத் தூய்மையாக்கி, காயவைத்து மாலையில் அவற்றைக் கட்டி, அதே கழுதையின் முதுகில் வைத்தவாறு தன் வீடு வந்து சேர்கிறான். 


காலையில் வைக்கப்பட்ட அழுக்கு மூட்டையாக இருந்தாலும் மாலையில் வைக்கப்பட்ட சுத்தமான மூட்டையாக இருந்தாலும் அது எந்த உணர்ச்சியையும் காட்டுவதில்லை. அழுக்கு மூட்டையை வைத்துவிட்டானே என்று சங்கடப்படுவதுமில்லை; தூய்மையான மூட்டையை வைத்துவிட்டானே என்று நினைத்து மகிழ்ச்சி அடைவதுமில்லை. அதனைப் பொருத்த வரை இரண்டுமே சுமைதான். அந்த வகையில் பார்க்கும்போது, மனிதன் அதனிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். துன்பம் வரும்போது துவண்டுவிடுவதோ இன்பம் வரும்போது மகிழ்ச்சியில் துள்ளுவதோ கூடாது. இரண்டும் இறைவன் கொடுத்தவை. இரு நிலைகளையும் சமமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். அவன்தான் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

======================











திங்கள், 18 மே, 2026

தோல்வியை ஏற்கும் மனம் வேண்டும்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம், சென்னை-28

 

 

வாழ்க்கையில் வெற்றி-தோல்வி மாறி மாறி வரும். அதுதான் இயற்கை நியதி. வெற்றிபெறும்போது மகிழ்ச்சியடைகின்ற நாம் தோல்வியடைகின்றபோது அதை ஏற்றுக்கொள்ளும் மனத்திட்பம் நமக்கு இருப்பதில்லை. இன்று தோற்றவன் நாளை வெற்றிபெறலாம்; இன்று வென்றவன் நாளை தோற்கலாம். ஆக இது ஒரு சுழற்சி முறையாகும். மனிதர்கள் சிலர் வெற்றியைப் பார்த்துப் புளகாங்கிதம் அடைகின்றார்கள்; தோல்வியைக் கண்டால் துவண்டுபோய் விடுகின்றார்கள். அதன்பின் அடுத்த தடவை போட்டியிலிருந்து விலகிவிடுகின்றார்கள். தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவர்களிடம் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

 

 

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் "அள்பா' என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவரும் அதை முந்த முடியாத(அளவுக்கு விரைவாக ஓடக் கூடிய)தாக இருந்தது. அப்போது கிராமவாசி ஒருவர் ஆறு வயதுக்குட்பட்ட ஒட்டகம் ஒன்றின்மீது வந்தார். அது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒட்டகத்தை முந்திவிட்டது. இது முஸ்லிம்களுக்கு மனவேதனையை அளித்தது. இதையறிந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “உலகில் உயர்ந்து விடுகின்ற பொருள் எதுவாயினும் (ஒரு நாள்) அதைக் கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் நியதியாகும்'' என்று கூறினார்கள். (புகாரீ: 2872) தாம் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் தம்முடைய ஒட்டகத்தை மற்றோர் ஒட்டகம் முந்திவிட்டதை மதிப்புக் குறைவாக எடுத்துக்கொள்ளாமல், ‘இதுதான் அல்லாஹ்வின் நியதி’ என்று கூறி, மனித மனங்களைச் செம்மைப்படுத்தினார்கள். தோல்வியை ஏற்க எப்போதும் தயாராகவே இருந்தார்கள்.

 

 

உலக அதிவேக மனிதராக அறியப்படுகிற உசேன் போல்ட், இலண்டனில் 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்றபோது ஜஸ்டின் கேட்லின் (Justin Gatlin) என்பவரிடம் தோற்றுப்போனார். 2008 முதல் 2016 வரை மூன்று தடவை ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவர்; 100மீ, 200மீ, பந்தயங்களில் பல உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர்; இறுதியில் ஒருவரிடம் தோற்க நேரிட்டபோது அந்தத் தோல்வியை மனதார ஏற்றுக்கொண்டார். இதுவே பக்குவப்பட்ட மனிதர்களின் நிலைப்பாடு.

 

 

மின்சாரத்தின் மூலம் எரிகின்ற மின்விளக்கைக் கண்டறிந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். ஆனால் அவர் அதைக் கண்டறியுமுன் ஆயிரக்கணக்கான தடவை தோல்வி கண்டார். அந்தத் தோல்விகள் அவரை முடக்கிவிடவில்லை.  மாறாக ஒவ்வொரு தடவை தோல்விக்குப் பின்னரும், ‘இந்த முறைப்படி எரிய வைக்க முடியாது என்பதைக் கண்டறிந்தேன்’ என்று கூறினார். அதைத் தோல்வியாக எடுத்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து முயன்று இறுதியில் மின்விளக்கைக் கண்டுபிடித்துப் பொதுமக்களுக்குப் பயன்படும்படி செய்தார்.

 

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் ஒரு தடவை ஓட்டப்போட்டி வைத்தார்கள். அதில் தம் மனைவியிடம் தோற்றுவிட்டார்கள்.  (இருப்பினும் அத்தோல்வியை ஏற்றுக்கொண்டார்கள்.) பின்னர் ஒரு தடவை ஓட்டப்போட்டி நடத்தினார்கள். அப்போது ஆயிஷாவின் உடல் பருமனாகிவிட்ட காரணத்தால், அவரைவிட முந்தி, வென்றுவிட்டார்கள். (அச்சமயத்தில் அவர் தம் மனம் வருத்தமடையக் கூடாது என்பதற்காக) ‘இது ஏற்கெனவே உள்ள உனது வெற்றிக்குச் சமமாக ஆகிவிட்டது’ என்று கூறித் தேற்றினார்கள். (தாருகுத்னீ: 3819)

 

 

ஆக நபியவர்கள் தோற்றபோது, தாம் ஓர் இறைத்தூதராக இருப்பதால் தோல்வியை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றெல்லாம் சொல்லவில்லை. மாறாக இயல்பாகத் தம் தோல்வியை ஏற்றுக்கொண்டார்கள். இதுதான் வாழ்க்கையின் எதார்த்தம். இருப்பினும் இதில் மற்றொரு செய்தியும் உள்ளது. நபியவர்கள் தம் மனைவி ஆயிஷாவுக்காக வேண்டுமென்றே தோற்றார்கள். வெற்றிபெற்ற ஆயிஷா மகிழ்ச்சியடைந்தார்கள். எனவே நாம் விட்டுக்கொடுப்பது மற்றவருக்கு மகிழ்ச்சியளிக்கும் என்றிருந்தால், விட்டுக்கொடுப்பதே சிறந்தது. அதிலும் குறிப்பாக மனைவிக்காக விட்டுக்கொடுப்பது சாலச் சிறந்தது.

 

 

வெற்றி, தோல்வி இரண்டும் ஒருவரது வாழ்க்கையில் மாறி மாறி வரக்கூடியதுதான். ஒவ்வொன்றையும் அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் வெற்றியடையும்போது, ‘மற்றவர் யாரும் நம்மைத் தோற்கடிக்க முடியாது’ என்ற எண்ணம் நம் மனத்தில் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் ‘வல்லவனுக்கு மேல் வல்லவன் ஒருவன் இருப்பான்’ என்பதுதான் உலக இயல்பு. இன்று வெற்றி பெற்றுள்ள நாம், நாளை யாரிடமாவது தோல்வியைத் தழுவலாம். அத்தகைய உணர்வோடு உள்ள நம்மை யாரும் மனத்தளவில் சோர்வடையச் செய்துவிட முடியாது. ஏனெனில் வெற்றி பெறுகிறபோது உவகைகொள்கிற நாம், தோல்வியைத் தழுவும்போது அதை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் பெற்றிருக்க வேண்டும்.

 

 

பள்ளி மாணவ-மாணவியர் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர். நிறைய மதிப்பெண்கள் வரும் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு, அவரவரின் தேர்வு எண் வெளியிடப்பட்டதும் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். தோல்வியடைந்தோர்  சிலர் தம் தோல்வியை ஏற்றுக்கொள்ள இயலாமல் தம்மை மாய்த்துக் கொள்கின்றனர். அல்லது அத்தோடு பள்ளிப் படிப்பை நிறுத்திவிடுகின்றனர். இப்போதெல்லாம் தேர்ச்சி பெறாதோர் தற்கொலை செய்துகொள்வதைவிட, எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவான மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றோர்தாம் தம்மை மாய்த்துக் கொள்கின்றனர். இத்தகையோரைக் கண்டறிந்து அவர்களுக்கு மனநல ஆலோசனை (கவுன்சிலிங்) வழங்க வேண்டும்.

 

 

எதிர்பார்த்த இலாபம் கிடைக்காவிட்டாலோ, வியாபாரத்தில் இழப்பு ஏற்பட்டுவிட்டாலோ தாங்க முடியாத துயரத்தை அடைகின்றார்கள். மனதளவில் துவண்டுபோய்விடுகின்றார்கள். இத்தகையோர் இத்தருணத்தில் தம்மைத் தாமே திடப்படுத்திக்கொண்டு, தமக்குத்தாமே ஆறுதல் கூறிக்கொண்டு, ‘படைத்தோன் இறைவன் நிச்சயம் இந்நிலையை மாற்றியமைப்பான்’ என்ற நேர்மறை எண்ணத்தை வளர்த்துக்கொண்டு, தொடர்ந்து அவ்வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதுதான் பெரும்பாலான வியாபாரிகளுக்கு இன்றையத் தேவை. ஒன்றில் தோற்று, மற்றொன்றைத் தொடங்குவது, அதிலும் தோற்று மற்றொன்றைத் தொடங்குவது எதிலும் ஆழ்ந்த அனுபவத்தைத்  தராது. எனவே தோல்விக்கு என்ன காரணம் எனக் கண்டறிந்து அதைச் சரிசெய்து, மீண்டும் புத்துணர்வோடு வியாபாரத்தைத் தொடர வேண்டும்.

 

 

பதவி உயர்வு கிடைத்தால் மகிழ்ச்சியடைகின்ற நாம் பதவி இறக்கப்பட்டால், அல்லது உயர் பதவியிலிருந்து இரண்டுபடி கீழ்நிலைப் பதவியில் போடப்பட்டால் அதிர்ந்துவிடுகின்றோம். ஆனால் பதவி என்பது இறைவன் தருவது, அவன் நாடினால் உயர்த்துவான்; அவன் நாடினால் கீழே தாழ்த்துவான் என்ற உறுதியோடு நடைபோட வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே! பிரார்த்தனை செய்து) நீங்கள் கூறுங்கள்: “எங்கள் அல்லாஹ்வே! எல்லா தேசங்களுக்கும் அதிபதியே! நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகின்றாய். நீ விரும்பியவர்களைக் கண்ணியப்படுத்துகின்றாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன். (3: 26)

 

 

இவ்வசனத்தின் கருத்தை மனத்தில் பதிய வைத்துக்கொண்டு, இறைநம்பிக்கையோடு பதவியில் இருப்போர் எதிர்பாராவிதமாகப் பதவிநீக்கம் செய்யப்பட்டாலோ, உயர் பதவியிலிருந்து கீழிறக்கப்பட்டாலோ தளர்ந்துபோய்விட மாட்டார்கள். மாறாக இயல்பாகச் செயல்படுவார்கள்.

 

 

இஸ்லாமிய வரலாற்றில் அத்தகைய ஒருவரை நாம் காணலாம். அவர்தாம் சஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட அவர் தொடர்ந்து அல்லாஹ்வின் பாதையில் போராடி வெற்றிக்கு மேல் வெற்றியைக் குவித்தார். பின்னர் உமர் இப்னு அல்-கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களால் கூஃபா நகரத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

 

 

நல்லவிதமாகத் தம் ஆளுநர் பொறுப்பை நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது, ஏதோ ஒரு வகையில் அம்மக்களுக்கு அவர் செய்த செயல் பிடிக்கவில்லை. அதனால் கூஃபாவின் மக்கள், ஸஅத் பின் அபீவக்காஸைப் பற்றி உமர் பின் அல்-கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் முறையிட்டனர். அதனால், முஹம்மது பின் மஸ்லமா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை ஸஅதிடம், “உமர் ரளியல்லாஹு அன்ஹு உங்களைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, உங்களுக்குப் பதிலாக வேறொருவரை நியமித்துவிட்டார்கள்” என்ற செய்தியைச் சொல்லி, அவரை "என்னிடம் வரச்சொல்லுங்கள்’ என்று கூறி அனுப்பினார்கள். 

 

ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அங்கு வந்து, உமர் பின் அல்-கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்தபோது, உமர் ரளியல்லாஹு அன்ஹு,  “அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் உம்மைத் திறமையின்மை அல்லது துரோகத்தின் காரணமாகப் பதவியிலிருந்து நீக்கவில்லை; மாறாக, மக்கள் உம்மைப் பற்றித் தவறாகப் பேசிக்கொண்டிருந்தார்கள் என்பதாலும், அவர்களுக்கு என் நியாயத்தைக் கூற விரும்பியதாலும்தான்” என்று கூறினார்கள். (தாரீகுத் தபரீ)

 

அச்செய்தியைக் கேட்டதும், எவ்வித ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் இன்றி, உடனடியாக ஆளுநர் பொறுப்பிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு, சாதாரண குடிமக்களுள் ஒருவராக வாழத் தொடங்கினார். இதுதான் பக்குவம் என்பது. தோல்வியை-பதவி இறக்கத்தை மனதார ஏற்றுக்கொண்டு அல்லாஹ்விற்காகவே போராடுவோர் எந்த நிலையிலும் அப்பதவியை இழக்கவும் தோல்வியை ஏற்கவும் தயாராகவே இருப்பார்கள். ஏனெனில் அப்பதவி அவர்களின் உள்ளத்தில் எவ்வித உயர்வையோ பெருமையையோ ஏற்படுத்தியிருக்காது.

 

உல்லாசப் பயணம் செல்வதாக முதல் நாள் திட்டமிடுகின்றோம்; பயணத்திற்கான எல்லாவித ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன; பிள்ளைகள் எல்லோரும் ஆவலோடு இருக்கின்றார்கள். மறுநாள் புறப்படுவதற்குமுன், கணவனுக்கோ மனைவிக்கோ அவசர வேலை வந்துவிட்டது. அல்லது உறவினர்கள் யாரோ ஒருவர் இறந்துவிட்டார்; அல்லது நோய்வாய்ப்பட்டுவிட்டார். அவரைச் சந்திக்கச் செல்ல வேண்டும். அல்லது ஏதோ ஒரு தடங்கல் ஏற்பட்டு, அந்தப் பயணம் தடைபட்டுவிட்டது. இந்த நேரத்தில் கணவனோ மனைவியோ ஒருவரையொருவர் திட்டிக்கொள்வதோ கடுமையான வார்த்தைகளால் வசைபாடுவதோ கூடாது. “சரி, பரவாயில்லை. இன்னொரு நாள் நாம் செல்வோம்” என்று கூறி, தவிர்க்க முடியாக் காரணத்தால் தடைபட்ட அச்சூழ்நிலையைச் சமாளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் தோல்வியைக் கண்டு மனந்தளராத மனத்திட்பம் உடையோர்க்கு அழகு.

 

 

உறவினர்கள் சிலர் நம் வீட்டிற்குக் குறிப்பிட்ட நாளில் வருவதாகச் சொல்கிறார்கள். நாமும் அந்நாளில் உற்சாகமாக எழுந்து அவர்களுக்காகவே சிறப்பான விருந்து ஏற்பாடு செய்கிறோம். திடீரெனச் செல்பேசியில் ஓர் அழைப்பு வருகிறது. “அண்ணி, எங்களால் இன்று உங்கள் வீட்டிற்கு வர இயலவில்லை; நாங்கள் இன்னார் வீட்டிற்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. அங்கு நாங்கள் சாப்பிட்டுக்கொள்கிறோம். இன்னொரு நாள் உங்கள் வீட்டிற்கு வருகிறோம்” என்று கூறித் தம் வருத்தத்தைத் தெரிவிக்கின்றார்கள்.

 

 

அதைக் கேட்ட நாம், மிகுந்த சினம்கொண்டு, “உங்களுக்காகவே கறியெல்லாம் வாங்கி, பிரியாணி சமைத்து வைத்திருக்கிறோம். நீங்கள் வராவிட்டால் எப்படி, நாங்கள் அந்த உணவையெல்லாம் என்ன செய்வது” என்று சொல்லாமல், “சரி, பரவாயில்லை. இன்னொரு நாள் கண்டிப்பாக வாருங்கள்” என்று கூறி அவர்களுக்கு எதிர்பாரா விதமாக ஏற்பட்ட சூழ்நிலையை நாம் புரிந்து, அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்; நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டும். மாறாக “நீங்கள் எங்களை மதிப்பதே இல்லை; நீங்கள் ஏன் முன்னரே சொல்லவில்லை; நாங்கள் உங்களுக்காகவே சமைத்துவிட்டோமே; நாங்கள் இப்படிச் செய்திருந்தால் நீங்கள் பொறுத்துக்கொள்வீர்களா; இனி உங்களோடு நான் பேசவே மாட்டேன்” என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்கக்கூடாது.

 

 

ஆக இது போன்று எதிர்பாரா நிகழ்வுகள் அவ்வப்போது நம் வாழ்வில் நடைபெற்றுக்கொண்டே இருக்கும். நாம் எதிர்பார்ப்பதுபோல் வாழ்க்கை அமையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சூழ்நிலைகள் மாறிக்கொண்டே இருக்கும். அதையெல்லாம் புரிந்துகொண்டால் நாம் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக வாழலாம். மாறாக சின்னச் சின்ன விஷயங்களுக்காக நம் நண்பர்களையும் உறவினர்களையும் கோபித்துக்கொண்டு, அவர்கள் எதிர்பாராவிதமாகச் செய்ததை வேண்டுமென்றே செய்ததாக, எதிர்மறையாக எண்ணிக்கொண்டு, அதையே நம் மனத்தில், மாடு அசைபோடுவதுபோல் மீண்டும் மீண்டும் அதை நினைவுகூர்ந்து நம்முடைய மகிழ்ச்சியைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது.

 

 

பாத்திரத்திற்கேற்பத் தண்ணீர் தன்னை மாற்றிக்கொள்வதைப்போல் சூழ்நிலைக்குத் தக்கவாறு நம்மை நாம் மாற்றிக்கொண்டால்-தகவமைத்துக்கொண்டால் நாம் நம் வாழ்வில் ஒருபோதும் தோல்வியடைய மாட்டோம். மாறாக என்றென்றும் மகிழ்ச்சியாகவே வாழ்வோம். அத்தகைய மனநிலையை உயர்ந்தோன் அல்லாஹ் நமக்கு வழங்குவானாக.

=============================

திங்கள், 4 மே, 2026

தமிழ்நாடு இளம் உலமா முன்னேற்றப் பேரவையின் மருத்துவ விழிப்புணர்வு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..


கண்ணியத்திற்குரிய உலமாக்களே! சமுதாயச் சொந்தங்களே!


தமிழ்நாடு இளம் உலமா முன்னேற்றப் பேரவையின் மருத்துவ விழிப்புணர்வு


உறுப்பு மாற்றுச் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் சிகிச்சைக்காகப் பொருளாதார உதவி நாடி ஒவ்வொரு நாளும் நம் சமுதாய மக்கள் பள்ளிவாசலை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொரு பள்ளிவாசலாகச் சென்று எந்நாள் வசூல் செய்து, எப்போது சிகிச்சை செய்வது? அதற்குத் தீர்வு காணும் விதத்தில் மிலாப் பவுண்டேஷன்  (Milaap)  உள்ளது. அது ஓர் உலகளாவிய உதவி மையம். அதற்கென ஓர் இணையதளம் உள்ளது. அதில் பதிவுசெய்தால் அவர்களுடைய சிகிச்சைக்குத் தேவையான பணத்தை அந்த நிறுவனம் குறிப்பிட்ட மருத்துவமனைக்குச் செலுத்திவிடும். 


சான்றாக, சென்னை- குரோம்பேட்டையிலுள்ள ரெலா மருத்துவமனைக்குச் சென்று ஒருவர் தமக்கான நோய் விவரத்தைக் கூறினால் அங்குள்ள மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்துவிட்டு, முதற்கட்டச் செலவுத்தொகையை மட்டும் பெற்றுக்கொண்டு, உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கான செலவு எவ்வளவு ஆகும் உள்ளிட்ட விவரங்களை அந்த இணையதளத்தில் பதிவு செய்துவிடுவார்கள். பின்னர் அந்த மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பலாம். அதற்கான தொகையை அந்த நிறுவனம் நேரடியாக அந்த மருத்துவனையின் வங்கிக் கணக்கில் செலுத்திவிடும். இந்த விவரத்தை ஆலிம்களும் சமுதாயப் பிரமுகர்களும் தெரிந்து வைத்துக்கொண்டு நம் சமுதாயச் சகோதர சகோதரிகளுக்குத் தெரிவித்தால் அவர்கள் பயன்பெறுவார்கள்.


ரெலா மருத்துவமனை தொடர்பு எண்: 

044 6666 7777 / 

044 6666 7732 


அன்புடன்:

முனைவர் மௌலவி நூ அப்துல் ஹாதி பாகவி

அமைப்புச் செயலாளர்

தமிழ்நாடு இளம் உலமா முன்னேற்றப் பேரவை 

சனி, 25 ஏப்ரல், 2026

அன்பு அல்லாஹ்வின் அருட்கொடை!

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

இவ்வுலகில் தோன்றிய ஒவ்வோர் உயிரினமும் தத்தம் இனத்தின்மீது அன்பு காட்டுகிறது. ஆனால் மனிதர்கள் ஒருவருக்கொருவர் காட்டுகிற அன்பு மகத்தானது. அன்பு எனும் ஒற்றை நூலில்தான் ஒவ்வோர் உள்ளமும் இணைக்கப்பட்டுள்ளது. அந்த அன்பெனும் நூல் வழியாகத்தான் நாம் பிறரின் உள்ளத்தில் இடம் பிடிக்க முடிகிறது. அன்பு மட்டும் இல்லையென்றால் இவ்வுலகில் எந்தவித ஈர்ப்பும் இல்லாமல் போயிருக்கும். இது அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடையாகும்.

 

 

அன்பு அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடையாக இருப்பதால் அதனை யாரும் பணம் கொடுத்துப் பெற முடியாது. அது அல்லாஹ்வே அவரவர் உள்ளத்தில் விதைப்பதாகும். அல்லாஹ் நாடியோருக்கே அத்தகைய அன்புள்ளம் வாய்க்கிறது. மற்றோர் அன்பற்றவர்களாகவும் கல்நெஞ்சினராகவும் வாழ்ந்து மடிகின்றனர். அன்புள்ளோர் மட்டுமே அல்லாஹ்வின் அருளால் மிக்க மகிழ்ச்சியோடு வாழ்கின்றார்கள். அன்பெனும் அருட்கொடையை அல்லாஹ்வே வழங்குவதாகப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்:

புவியிலுள்ள அனைத்தையும் நீங்கள் செலவு செய்தபோதிலும் அவர்களுடைய உள்ளங்களில் அன்பையூட்ட உங்களால் முடியாது. எனினும், அல்லாஹ்தான் அவர்களை அன்பின் மூலம் ஒன்று சேர்த்தான். (8: 63)

 

 

ஆம்! எவ்வளவுதான் பணத்தைச் செலவு செய்தாலும் ஒருவரின் உண்மையான அன்பைப் பெற்றுவிட முடியாது. நாம் செலவழிக்கின்றபோது அன்பு கொண்டவனைப்போல் பாசாங்கு காட்டுவதும் செலவழித்து முடித்தபின் அன்பே இல்லாதவர்களைப்போல் அகன்றுவிடுவதும் நாளுக்கு நாள் நாம் காணும் காட்சிகளாகும்.

 

 

அன்புக்கு நிபந்தனை கிடையாது: உண்மையான அன்புக்கு எந்த நிபந்தனையும் கிடையாது. பெற்றோரின் அன்பு இதில் முதலிடம் வகிக்கிறது. பின்னர் கணவன்-மனைவியின் அன்பு. பிறகு அடுத்தடுத்த அன்பு இடம் வகிக்கிறது. பெற்றெடுத்த பிள்ளைமீது பெற்றோர் காட்டுகின்ற அன்பு நிபந்தனையற்றதாகும். எதிர்காலத்தில் பிள்ளைகள் ஏராளமான செல்வத்தைச் சம்பாதித்துத் தருவார்கள் என்ற அற்பமான எந்த எதிர்பார்ப்புமின்றி அவர்கள் தம் பிள்ளைகள்மீது அன்பு செலுத்துகின்றனர். பெற்றெடுத்த பிள்ளைகளைப் பராமரித்து வளர்ப்பதும், கல்வியறிவைப் புகட்டுவதும், ஒழுக்கமிக்கோராக உருவாக்குவதும் பெற்றோர் தம்முடைய பிள்ளைகள்மீது செலுத்தும் அன்பின் வெளிப்பாடுதான் என்றால் மிகையில்லை.

 

 

ஒருவர் பிறர்மீது செலுத்தும் அன்பானது அல்லாஹ் வழங்கிய அருட்கொடையாகும். அவனது அருட்கொடை மட்டும் இல்லையென்றால் யாரும் யார்மீதும் அன்பு செலுத்தியிருக்க மாட்டார்.  அதற்கான சான்றாக அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் அவர்களிடம் மென்மையானவராக நடந்து கொண்டீர்கள். (3: 159) ஆகவே ஒருவர் அதீத அன்பு கொண்டவராக நடந்துகொள்வதும் ஒருவர் கல்நெஞ்சம் கொண்டவராக நடந்துகொள்வதும் அல்லாஹ் அவரவர் இயல்பிலேயே படைத்த குணமாகும். அது அவனது அருளும் கருணையுமாகும். எனவே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சமுதாய மக்கள்மீது மிகுந்த அன்புடையோராக நடந்துகொண்டார்களென்றால் அது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடையாகும். அவர்கள்மீது அல்லாஹ் காட்டிய கருணையாகும். அதுபோன்றே இவ்வுலகில் ஒவ்வொருவரும் மற்றவர் மீது காட்டும் அன்புக்கும் கருணைக்கும் அல்லாஹ்வே காரணமாவான். அவனுடைய அருட்கொடையாலேயே நாம் அன்புடையோராக வாழ்ந்து வருகிறோம். நம்மிடம் அன்பு குறைந்து வருகிறபோதெல்லாம், அதை மிகுதியாக வழங்குமாறு அல்லாஹ்விடமே நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

 

 

தம்பதியர் அன்பு: கணவன் தன் மனைவி மீதும் மனைவி தன் கணவன்மீதும் காட்டுகிற அன்பு காதல் எனப்படுகிறது. அந்த அன்பின் நூலில்தான் கணவன்-மனைவி இருவரின் அன்பு இணைக்கப்பட்டுள்ளது. அந்த அன்புதான் இரவு பகலாக உழைத்து, தன் மனைவியைக் காக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வைக் கணவருக்கு ஊட்டுகிறது; அந்த அன்புதான் மற்றவரைவிடத் தன் கணவனை மட்டுமே நேசிக்க வேண்டும் என்ற உள்ளுணர்வைத் தூண்டுகிறது; இல்வாழ்வில் நேரிடுகிற துன்பம், சிரமம், வறுமை அனைத்தையும் பொறுத்துக்கொண்டு வாழ வேண்டும் என்ற ஒழுக்க நெறியைப் போதிக்கிறது.

 

 

அன்புக்கு அன்பே பரிசு: நாம் பிறர்மீது காட்டுகிற நிபந்தனையற்ற அன்பானது நமக்கே திரும்பக் கிடைக்கிறது. வகுப்புத் தோழர்கள், நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுவோர் என அனைவரிடமும் நாம் அன்பு காட்டும்போது அவர்களும் நம்மீது அன்பு காட்டத் தொடங்குவார்கள். யார் முதலில் தொடங்குவது என்பதிலேயே காலம் கடந்துவிடுகிறது. எனவே முதலில் நாம் அன்பாகப் பழகத் தொடங்கினால் அவர்கள் தாமாக நம்மீது அன்பு காட்டத் தொடங்கிவிடுவார்கள். ஒருவரைக் கடந்து செல்கிறபோது அவரைப் பார்த்து நாம் வெளிப்படுத்துகிற ஒரு புன்னகை நாளடைவில் அவரின் உள்ளத்தில் நாம் இடம்பெற்றுவிடக் காரணமாக அமைந்துவிடுகிறது.

 

 

முகமன் அன்பை வளர்க்கிறது: மனிதர்கள் மத்தியில் அன்பு ஏற்படுவதற்கான ஓர் அழகிய வழிமுறையை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். அதை நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கத் தொடங்கினால், அனைவரும் நம்மீது அன்பு செலுத்தத் தொடங்கிவிடுவார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: நீங்கள் இறைநம்பிக்கை (ஈமான்) கொள்ளாத வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளர்களாக ஆக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள். (முஸ்லிம்: 93)

 

 

ஒருவரைக் கடந்து செல்லும்போதெல்லாம் அவரைப் பார்த்து புன்முறுவலோடு ஸலாம் உரைத்தால், இயல்பாகவே நாம் அவருடைய மனத்தில் இடம்பிடித்துவிடுவோம். பின்னர் அவர் முந்திக்கொண்டு நமக்கு முகமன் கூறத் தொடங்கிவிடுவார். அதுவே காலப்போக்கில் நமக்கும் அவருக்குமிடையே அன்பு வளரக் காரணமாகிவிடும். இத்தகைய எளிய நடைமுறையை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்குக் கற்றுத் தந்திருக்க, நாம் அதைக் கைவிட்டுவிட்டு, ‘என்மீது அன்பு காட்ட யாருமில்லையே’ என ஏங்கிக்கொண்டிருக்கிறோம்.

 

 

அன்பு கோபம் கொள்ளும்: நம்மீது அன்புள்ளவருக்குத்தான் நம்மீது கோபம் வரும். நம்மீது ஒருவர் கோபம் கொள்கிறார் என்றால் அவர் நம்மீது அன்புகொண்டுள்ளார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சான்றாக, நம் பிள்ளைகள் தொடர்வண்டியிலோ பேருந்திலோ படிக்கட்டில் நின்றுகொண்டு பயணம் செய்தால், “உள்ளே வா, கீழே விழுந்துவிடுவாய்” என்று கோபத்தோடு சொல்வோம் அல்லவா? அது நாம் அவர்கள்மீது கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடுதானே? ஆக அன்பும் அக்கறையும் உள்ளவர்தாம் நம்மீது கோபம் கொள்வார் என்பதை நாம் உணர வேண்டும். நம்மீது அன்புள்ளவர், நாம் வெளியே செல்லும்போது, “பார்த்து, கவனமாகச் சென்றுவா” என்பார். நமக்காகப் பிரார்த்தனை செய்வார். “மழை வருவதுபோல் தெரிகிறது. குடை எடுத்துச் செல்; மழைக் கவசம் (ரெயின் கோட்) எடுத்துச் செல்; நிதானமாகச் செல்” என்றெல்லாம் கூறுவார். நம் வீட்டிலுள்ள முதியோர் அவ்வாறு கூறினால், அவர்கள்மீது நாம் எரிந்துவிழாமல், அவர்களின் வார்த்தைகளை அன்போடு ஆமோதிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

 

 

அன்பு எதையும் பிறருக்குக் கொடுக்கும்: அன்புள்ளம் கொண்டோர் நாம் நேசிக்கும் அன்பருக்காக எதையும் கொடுக்க முன்வருவர். தமக்கு இல்லையென்றாலும் தம் அன்பருக்குக் கொடுக்க நினைப்பர்.  சான்றாக, அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், தம் அன்புக்குரிய கணவரான அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீது கொண்டிருந்த அதீத அன்பின் காரணமாகத் தம்மிடமிருந்த செல்வத்தையெல்லாம் ஏழை எளியோருக்குச் செலவு செய்ய அவர்களுக்கு வழங்கினார்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட நேரத்தில் தம் செல்வத்தை எந்தவித நிபந்தனையுமின்றி நபியவர்களுக்கு வழங்கினார்கள். இதுதான் அன்பின் வெளிப்பாடு; அன்பின் அடையாளம்.

 

 

ஆக அன்பு எனும் அருட்கொடை அல்லாஹ்வால் அருளப்பட்டதாகும். அதை அவன் யாருக்கு விரும்புகிறானோ அவருக்கே வழங்குகின்றான். எனவே நாம் அவனது அன்பு எனும் அருட்கொடையை  மிகுதியாக அவனிடமே கேட்டுப் பெற்று, நம்மைச் சுற்றியுள்ள அனைவரிடமும் அன்பு செலுத்தி வாழ்வோம். குறிப்பாகப் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், அண்டைவீட்டார் அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்.

=============================