ஞாயிறு, 19 ஜூலை, 2026

“மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா - பாகம் 2” நபிமொழித் தொகுப்பு நூல் குறித்து எழுத்தாளர் சேயன் இப்ராகிம் எழுதிய மதிப்புரை

 “மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா - பாகம் 2” நபிமொழித் தொகுப்பு நூல் குறித்து எழுத்தாளர் சேயன் இப்ராகிம் எழுதிய மதிப்புரை. (ஜூலை 2௦26, இனிய திசைகள் மாத இதழ்)

----------------------------------

‘மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா’ என்ற நபிமொழித் தொகுப்பின் இரண்டாம் பாகத்தைப் படித்துப் பார்க்கின்ற அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

இமாம் புகாரீ (ரஹி), இமாம் முஸ்லிம் (ரஹி), இமாம் திர்மிதீ (ரஹி), இமாம் அபூதாவூத் (ரஹி), இமாம் அஹ்மத் பின் ஷுஐப் அந்நஸாயீ (ரஹி), இமாம் அபூஅப்துல்லாஹ் முஹம்மது பின் யஸீத் (ரஹி) ஆகிய இமாம்கள் தொகுத்தளித்துத் தந்துள்ள மொத்த ஹதீஸ்களின் எண்ணிக்கை 1,14,194 ஆகும். இவற்றில் மீண்டும் மீண்டும் வருகின்ற (அதாவது கூறியதை மீண்டும் கூறும்) ஹதீஸ்களை நீக்கி விட்டு 28,430 ஹதீஸ்களை இந்த நூலாசிரியர் தொகுத்து இறுதியில் அதன் எண்ணிக்கையை 3921க்குள் சுருக்கித் தந்துள்ளார். இதன் முதல் பாகம் இரண்டாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது. அதில் 523 ஹதீஸ்கள் இடம் பெற்றிருந்தன. இந்த இரண்டாவது பாகத்தில் 524 முதல் 1316 வரை மொத்தம் 793 ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. மீதமுள்ள ஹதீஸ்கள் அடுத்தடுத்த பாகங்களில் இடம்பெறும் என நம்புகிறேன்.

இந்த ஹதீஸ் களஞ்சியத்தின் மூல நூலாசிரியர் ஹழ்ரத் ஸாலிஹ் பின் அஹ்மத் அஷ்ஷாமீ என்ற அறிஞராவார். இதனை மௌலவி முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி ஃபாஸில் காஸிமி ஹழ்ரத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இதனை மயிலாடுதுறையிலுள்ள அப்துல்லாஹ் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்த ஹதீஸ் களஞ்சியத்தின் சிறப்பு அம்சங்களாகக் கீழ்க்கண்ட செய்திகளைக் குறிப்பிடலாம்.

1. ஹதீஸ்களை தொகுத்தளித்துத் தந்துள்ள அனைத்து இமாம்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாறும், மூல ஆசிரியரின் வாழ்க்கை வரலாறும் தரப்பட்டுள்ளன. 2. கிட்டத்தட்ட 206 அரபிக் கலைச் சொற்களுக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் களஞ்சியத்தைப் படிக்கின்ற முஸ்லிம்கள் மட்டுமின்றிச் சகோதர சமுதாய அன்பர்களுக்கும் இவை பயனுள்ளதாக இருக்கும். 3. பலவீனமான ஹதீஸ்களும், நபிமொழி என்ற பெயரில் கற்பனையாகப் புகுத்தப்பட்டவையும் இந்தத் தொகுப்பில் இடம் பெறவில்லை என மொழியெர்ப்பாளர் உறுதிபடத் தெரிவிக்கின்றார்.


4. நபிமொழிகள் (ஹதீஸ்) அனைத்தையும் ஒரு சேரத் தெரிந்து கொள்ள வேண்டுமென விரும்புகின்றவர்களுக்கு இந்தக் களஞ்சியம் பேருதவியாக இருக்கும். 5. இந்த இரண்டாம் பாகத்தில் திருக்குர்ஆனிலுள்ள சில அத்தியாயங்களின் சிறப்புகள், திருக்குர்ஆன் ஓதும் போது சஜ்தா செய்ய வேண்டிய இடங்கள், தூய்மை, குளியல், பாங்கு, தொழுகை நேரங்கள், மஸ்ஜிதுகள், தொழுகை இடங்கள், தொழுகையின் சிறப்புகள் உள்ளிட்ட தலைப்புகளின்கீழ் 793 ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன.


இந்தக் களஞ்சியத்திற்கு நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியின் முதல்வர் மௌலானா ஏ. முஹம்மது இஸ்மாயில் பாகவி, லால்பேட்டை மன்பவுல் உலூம் அரபிக் கல்லூரியின் முதல்வர் மௌலானா முஃப்தி அ.நூருல் அமீன் மன்பஈ, வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பேராசிரியர் மௌலானா S.M. ரஹ்மத்துல்லாஹ் பாகவி, திருச்சிராப்பள்ளி மௌலவி P.M. அல்தாபி ஆகியோர் அணிந்துரை வழங்கியுள்ளனர். அரபியில் தொகுக்கப்பட்டுள்ள இந்த நூலை முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி அவர்கள் மிகச் சிறப்பான முறையில் தமிழாக்கம் செய்துள்ளார். பாமரர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் அவரது மொழிநடை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

என்னைப்போன்ற பாமரர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பல ஹதீஸ்கள் இந்தக் களஞ்சியத்தில் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக 954வது ஹதீஸைக் குறிப்பிடலாம். இந்த ஹதீஸில் ஆட்டு இறைச்சியைச் சாப்பிட்டு விட்டு விரும்பினால் அங்கத் தூய்மை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒட்டக இறைச்சி சாப்பிட்ட பின் அங்கத்தூய்மை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டுத் தொழுவத்தில் தொழலாம் என்றும், ஆனால் ஒட்டகத் தொழுவத்தில் தொழுவது கூடாது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமைத்த உணவைச் சாப்பிட்ட பின்பு அங்கத் தூய்மை செய்ய வேண்டியதில்லை என 955வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. ஒருவர் தம் மனைவியுடன் பாலுறவு கொண்டுவிட்டு மீண்டும் ஒரு முறை அதனைச் செய்ய விரும்பினால் அவர் அங்கத் தூய்மை செய்துகொள்ள வேண்டுமென 980வது ஹதீஸ் தெரிவிக்கின்றது.

ஆகவே ஹதீஸ் தொகுப்பாளர்களின் களஞ்சியங்கள் அனைத்தையும் வாசிக்காமல் இந்த ஒரு களஞ்சியத்தை மட்டும் வாசித்தால் போதும். நம்பகத்தன்மை கொண்ட அனைத்து ஹதீஸ்களையும் வாசித்த முழுமையுணர்வு ஏற்படும். பள்ளிவாசல்களிலும், அரபிக் கல்லூரிகளிலும், நூலகங்களிலும் வாங்கி மக்களின் பயன்பாட்டிற்காக வைக்கத்தக்க களஞ்சியம் இது. இந்தக் களஞ்சியத்தைக் கொண்டு வருவதற்குப் பாடுபட்ட அனைத்துப் பெருமக்களுக்கும் இறைவன் எல்லா நலன்களையும் அளிக்கத் துஆ செய்வோம். தமிழக முஸ்லிம் சமூகம் இந்தக் களஞ்சியத்தைக் காசு கொடுத்து வாங்கி, வாசித்துப் பயன் பெற வேண்டுகிறேன்.

நூலைப் பெறத் தொடர்புகொள்ள வேண்டிய கைப்பேசி எண்: 93447 42844/ 9171846184/ 96001 25000
===================





சனி, 18 ஜூலை, 2026

மஆலிமுஸ் ஸுன்னா நூல் வெளியீட்டு விழா

 


மஆலிமுஸ் ஸுன்னத்திந் நபவிய்யா 2ஆம் பாகம் நூல் வெளியீட்டு விழா 17.07.2026 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பின் மௌலவி K.M. இல்யாஸ் ரியாஜி அவர்களின் தலைமையில் சென்னை பட்டினப்பாக்கம் மதீனா மஸ்ஜிதில் நடைபெற்றது. மஸ்ஜிதின் தலைவர் அல்ஹாஜ் M. முஹம்மது இர்பான் சேட், மஸ்ஜிதின் பொருளாளர் A. அய்யூப் சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மௌலவி ஹாஃபிழ் S.M. முஹம்மது இஸ்மாயீல் மன்பஈ கிராஅத் ஓதி நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.


மஸ்ஜிதின் செயலாளர் A.K. ரூக் அலி வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து டாக்டர் A.P. முஹம்மது அலி IPS (Rtrd), மௌலவி B.M. கலீலுர் ரஹ்மான் மன்பஈ, மௌலவி ஜுனைதுல் பக்தாதி ஹஸனி, மௌலவி ஐ. உமர் சித்தீக் பாகவி, மௌலவி ஹாஃபிழ் S. அபுல் ஹஸன் ஷாதலி பாகவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


பின்னர் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை துணைப் பொதுச் செயலாளர் மௌலவி K.M. இல்யாஸ் ரியாஜி நூலை வெளியிட, அல்ஹாஜ் M.M. அப்துல் கபூர் முதல் பிரதியையும், ஜாமிஆ அல்-பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரிப் பேராசிரியர் மௌலவி ஹாஃபிழ் S.M. ரஹ்மத்துல்லாஹ் பாகவி வெளியிட, அல்ஹாஜ் M. அப்துல் அஜீஸ் இரண்டாம் பிரதியையும், இனிய திசைகள் மாத இதழ் ஆசிரியர் பேராசிரியர் டாக்டர் சேமுமு. முகமதலி வெளியிட, A. சித்திக் கனி மூன்றாம் பிரதியையும், மஸ்ஜிதின் தலைவர் அல்ஹாஜ் M. முஹம்மது இர்பான் சேட் வெளியிட, M. இம்ரான் கான் நான்காம் பிரதியையும் பெற்றுக்கொண்டனர்.


பிறகு பேராசிரியர் மௌலவி ஹாஃபிழ் S.M. ரஹ்மத்துல்லாஹ் பாகவி நூலாய்வுரை நிகழ்த்த, பேராசிரியர் டாக்டர் சேமுமு. முகமதலி சிறப்புரை நிகழ்த்தினார். இறுதியில் மௌலவி K.M. இல்யாஸ் ரியாஸி தலைமையுரை நிகழ்த்தினார். இந்த மஸ்ஜிதின் இமாமும் இந்நூல் மொழிபெயர்ப்பாளருமான மௌலவி டாக்டர் நூ. அப்துல் ஹாதி பாகவி ஏற்புரையாற்றினார். மஸ்ஜிதின் துணைச் செயலாளர் M. முஹம்மது ஸஹீர் நன்றியுரை நவின்றார். துஆவுடன் விழா இனிதே நிறைவுற்றது.

– தகவல்: நூ. அப்துல் ஹாதி பாகவி






சனி, 11 ஜூலை, 2026

 நூல் வெளியீட்டு விழா

 

மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா 2ஆம் பாகம் (ஹதீஸ் ஆய்வு நூல்)

 

நாள்: 17.07.2026 வெள்ளி  நேரம்: மாலை 6: 30 மணியளவில் இன் ஷாஅல்லாஹ்

 

இடம்: மதீனா மஸ்ஜித், 6, ஜோனகன் சந்து, பட்டினம்பாக்கம், (சாந்தோம்), சென்னை-28

 

முன்னிலை:

ஜனாப் M.முஹம்மது இர்பான் சேட் B.Com..  ஜனாப் A.K. ஜரூக் அலி    

தலைவர்: மதீனா மஸ்ஜித்     செயலாளர்: மதீனா மஸ்ஜித்

 

ஜனாப்  A. அய்யூப் சேட் B.Com.. - பொருளாளர்: மதீனா மஸ்ஜித் மற்றும் மதீனா மஸ்ஜித் நிர்வாகிகள்

 

தலைமை: மௌலவி K.M. இல்யாஸ் ரியாஜி M.A.

துணைப் பொதுச் செயலாளர், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை,

தலைமை இமாம்: ஈத்கா மஸ்ஜித், மந்தைவெளி, சென்னை-28

 

நூலாய்வு: மௌலவி ஹாஃபிழ் S.M. ரஹ்மத்துல்லாஹ் பாகவி M.A.

பேராசிரியர்: ஜாமிஆ அல்பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் அரபுக் கல்லூரி, வேலூர்.

 

சிறப்புரை: பேராசிரியர் டாக்டர் சேமுமு. முகமதலி, Ph.D.

பொதுச் செயலாளர் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், துணைத் தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

------------       

கிராஅத்: மௌலவி ஹாஃபிழ் S.M. முஹம்மது இஸ்மாயீல் மன்பயீ

துணை இமாம்: ஈத்கா மஸ்ஜித் மந்தைவெளி, சென்னை-28

 

வாழ்த்துரை வழங்குவோர்:  

டாக்டர் A.P. முஹம்மது அலி IPS (Rtrd)

 

மௌலவி B.M. கலீலுர் ரஹ்மான் மன்பஈ M.A., M.Phil.,

திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர், இமாம்: மஸ்ஜிதே பிலால், டூமிங் குப்பம், சாந்தோம், சென்னை-4

 

மௌலவி ஜுனைதுல் பக்தாதி ஹஸனி M.A., M.Phil.,

இமாம்: இராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28

 

மௌலவி ஹாஃபிழ் M. சையது மஸ்வூத் ஜமாலி M.A., M.Phil.,

அரசு காஜி, காஞ்சிபுரம் மாவட்டம்.  

 

மௌலவி ஐ. உமர் சித்தீக் பாகவி

இமாம்: மஸ்ஜிதே நூர், பட்டினம்பாக்கம், சென்னை-28

 

மௌலவி ஹாஃபிழ் எஸ். அபுல் ஹஸன் ஷாதலி பாகவி

இமாம்: அல்ஹுதா மஸ்ஜித், லஸ், மயிலாப்பூர், சென்னை-4

 

ஏற்புரை: மௌலவி Dr. நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.,Ph.D.

மொழிபெயர்ப்பாளர், இமாம்: மதீனா மஸ்ஜித், பட்டினம்பாக்கம், (சாந்தோம்), சென்னை-28

 

 

பிரதிகள் பெறுவோர்:

எம். இம்ரான் கான் M.B.A. (UK) -Managing Director Perfectware Building products pvt Ltd

அல்ஹாஜ் எம்.எம்.அப்துல் கபூர் -M A Textiles

ஏ. சித்திக் கனி B.Sc., (Hons) (UK)- Shahnaz Commodities International pvt Ltd

எம். அப்துல் அஜீஸ் - பார்டர் தோட்டம் முத்து இராவுத்தர் Scrap Dealer and JCB Hirer  

 

நன்றியுரை: M. முஹம்மது ஸஹீர், துணைச் செயலாளர், மதீனா மஸ்ஜித்

 

-----------------------

மட்டற்ற மகிழ்ச்சியோடு அழைப்பது: மதீனா மஸ்ஜித் நிர்வாகம் & அப்துல்லாஹ் பப்ளிகேஷன்ஸ் மயிலாடுதுறை.

 

அண்ணல் நபியின் அமுதமொழி பருக அனைவரும் வருக!

 

பெண்களுக்குத் தனியிட வசதி உண்டு.

-------------------------






புதன், 8 ஜூலை, 2026

அன்பளிப்புகளைப் பரிமாறிக்கொள்வோம்

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம், சென்னை-28

 

இஸ்லாம் அன்பளிப்புகள் (பரிசுகள்) வழங்குவதையும் பெற்றுக்கொள்வதையும் ஊக்குவிக்கிறது. அன்பளிப்புகள் மனிதர்களுக்கிடையேயான அன்பையும், ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் வளர்க்கும் ஒரு சிறந்த வழியாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார் மற்றும் சமூக உறுப்பினர்களுடன் நல்லுறவைப் பேணுவதற்குப் ‘பரிசளித்தல்’ முக்கிய இணைப்புப் பாலமாக அமைகிறது.

 

 

அல்லாஹ் கூறுகிறான்: “நன்மையிலும் இறையச்சத்திலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுங்கள்.”  (5:2) அன்பளிப்புகள் வழங்குவதும் நன்மையில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதன் ஒரு வடிவமாகும். எனவே நாம் பிறருக்கு நன்மை செய்ய நாடினால், முதலில் அவர்களுக்கு அன்பளிப்பு வழங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் எத்தனையோ பேரைப் பார்க்கிறோம். அத்தனைப் பேரையும் நினைவில் வைத்துக்கொள்வது கிடையாது. அதுபோலவே நம்மை எத்தனையோ பேர் பார்க்கின்றார்கள். நம்மை எத்தனைப் பேர் நினைவில் வைத்திருப்பார்கள் என்று நமக்குத் தெரியாது. ஆனால் ஒருவரின் மனத்தில் நம்மைப் பற்றிய நினைவு ஆழமாகப் பதிய வேண்டுமெனில், நாம் அவர்களுக்கு அன்பளிப்பு வழங்க வேண்டும்.

 

  

பரிசுகளைப் பரிமாறிக்கொள்ளுங்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: “நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள்; நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பீர்கள்.” (அதபுல் முஃப்ரத்: 594) நாம் ஒருவருக்குப் பரிசோ அன்பளிப்போ வழங்கும்போது அவரின் மனத்தில் நம்மைப் பற்றிய நன்மதிப்பும் மரியாதையும் கூடுவதோடு, அன்பும் அதிகரிக்கிறது. ஆகவே அன்பளிப்புகளைப் பரிமாறிக்கொள்வதால்  அன்பு வளர்கிறது என்பதை உணர்வோம்.

 

 

நபியவர்கள் பரிசுகளை ஏற்றுக்கொள்ளுதல்: எவ்வியத்திலும் நபியவர்களையே நாம் பின்பற்றி வருகிறோம். அந்த வகையில் நபியவர்கள் மக்கள் மனமுவந்து வழங்கும் பரிசுகளை, அன்பளிப்புகளை ஏற்றுக்கொண்டார்கள்.  எனவே பிறர் நமக்கு வழங்கும் பரிசுகளை-அன்பளிப்புகளை நாம் ஏற்றுக்கொள்ளலாம். “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்பளிப்பை ஏற்றுக்கொள்வார்கள்; அதற்குப் பதிலாக (ஏதாவது) வழங்குவார்கள்.” (புகாரீ) இந்த ஹதீஸ் பரிசு கொடுப்பதும் பெறுவதும் நபிவழி (சுன்னத்) என்பதை எடுத்துக்காட்டுகிறது.

 

 

சிறிய பரிசையும் அலட்சியப்படுத்தாதீர்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: “முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டுப் பெண் தனது அண்டை வீட்டுப் பெண்ணுக்குக் கொடுக்கும் பரிசு ஆட்டின் (கால்) குளம்பாக இருந்தாலும் அதை அற்பமாகக் கருத வேண்டாம்.” (புகாரீ, முஸ்லிம்) இதன் மூலம் பரிசின் மதிப்பு அல்ல, அதன் பின்னுள்ள அன்பும் நல்லெண்ணமும்தான் முக்கியம் என்பதை அறியலாம். பிறர் நமக்கு வழங்கும் அன்பளிப்பின் மதிப்பை எடைபோட எத்தனிக்கக் கூடாது. மாறாக அவர்கள் மனமுவந்து வழங்குகிற  அன்பைத்தான் நாம் பார்க்க வேண்டும். அந்த வகையில் தம் வீட்டில் சமைத்த ஏதோ ஒரு பண்டத்தை நமக்கு வழங்கும்போது அதை அற்பமாகக் கருதாமல், முகமலர்ச்சியோடு அதைப் பெற்றுக்கொண்டு நன்றி கூற வேண்டும்.  நம்மிடம் ஏதாவது இருந்தால் அவர்களின் பாத்திரத்தை வெறுமனே கொடுக்காமல் அதில் அதை வைத்துக் கொடுக்கலாம். இதனால் அவர்களுக்கும் நமக்கும் இடையே அன்பு வளரும்; மனப்பகை மறையும்.  

 

 

அன்பளிப்புகள் வழங்குவதன் நன்மைகள்: இதயங்களில் அன்பை வளர்க்கும்; பகைமை, பொறாமை போன்றவற்றைக் குறைக்கும்; உறவுகளை வலுப்படுத்தும்; சமூக ஒற்றுமையை மேம்படுத்தும்; அல்லாஹ்வின் அருளையும் நற்கூலியையும் பெற்றுத்தரும். மேலும் அன்பளிப்பு வழங்குவதும் பெற்றுக்கொள்வதும் நபியவர்களின்  சுன்னத்தாக (வழிமுறை) இருப்பதால் சுன்னத்தைக் கடைப்பிடித்ததற்கான நன்மையும் கிடைக்கும்.  

 

 

நம்முள் ஒருவருக்கொருவர் அன்பளிப்பு வழங்கிக்கொள்வது நம்மிடையே நல்லுறவை வளர்க்கும் ஒரு சிறந்த வழியாகும். “பரிசுகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள்; நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பீர்கள்” என்ற நபிமொழி, அன்பளிப்புகளின் சமூக மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்தை அழகாக எடுத்துரைக்கிறது. எனவே, சிறிதாக இருந்தாலும் மனமார்ந்த அன்பளிப்புகளை வழங்கும் பழக்கத்தை முஸ்லிம்களாகிய நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அது நம்மிடையே அன்பை வளர்க்கும் ஓர் ஊடகமாகும் என்பதை நாம் உணர வேண்டும்.

 

 

மனைவிக்கு அன்பளிப்பு வழங்குதல்: வீட்டில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து வேலை செய்துகொண்டிருக்கும் மனைவிக்குக் கணவன் ஏதேனும் அன்புப் பரிசை மனமுவந்து வழங்கும்போது அத்தனை நாள்கள் வேலை செய்த சோர்வெல்லாம் மறந்துபோய், புத்துணர்வோடு செயல்பட வழிவகுக்கும். கணவன்-மனைவிக்கிடையே அன்பு வளரும். இஸ்லாம் கணவன்-மனைவி உறவை அன்பு, கருணை, பரிவு ஆகியவற்றின் மீது அமைத்துள்ளது. மனைவிக்கு அன்பளிப்பு (பரிசு) வழங்குவது கணவன் தன் அன்பை வெளிப்படுத்தும் அழகிய வழிகளில் ஒன்றாகும். இது வெறுமனே பொருள் கொடுப்பது மட்டுமன்று; மனைவியின் மனதை மகிழ்விப்பதும், குடும்பப் பிணைப்பை வலுப்படுத்துவதும் ஆகும். "நீ உனது குடும்பத்திற்காகச் செலவிடும் தீனாருக்கே மிக அதிக நன்மை உண்டு" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்: 995)

 

 

பிள்ளைகளுக்கு அன்பளிப்பு வழங்குதல்: படிப்பில் பிள்ளைகளை ஊக்குவிக்கும் முகமாக, நீ முதல் மதிப்பெண் வாங்கினால், உனக்கு ‘இன்ன பரிசு’ வாங்கித் தருவேன் என்று சொன்னால் போதும். உற்சாகத்தோடு அப்பிள்ளைகள் படிப்பைத் தொடர்வார்கள். பின்னர் அப்பிள்ளைகள் முதல் மதிப்பெண் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் வாக்களித்த பரிசுப் பொருளை வாங்கிக்கொடுக்கும்போது அப்பிள்ளைகள் நெகிழ்ந்துபோவார்கள். மேலும் பிள்ளைகளுக்கு அன்பளிப்பு வழங்குதல், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே பாசப்பிணைப்பை வளர்க்கும் ஓர் ஊடகமாகும்.  

 

 

அன்பளிப்பு வழங்குவதில் நீதியைப் பேணுதல்: பிள்ளைகளுக்கு அன்பளிப்பு வழங்குவதில்  அவர்களிடையே நீதியைப் பேண வேண்டும். அது குறித்த ஒரு செய்தியைப் பார்க்கலாம். நுஅமான் பின் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: என்னுடைய தந்தை எனக்கு ஓர் அன்பளிப்பை வழங்கி, அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சாட்சியாக்க விரும்பினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “உமது எல்லாப் பிள்ளைகளுக்கும் இதுபோல் வழங்கியுள்ளீரா?” என்று  கேட்டார்கள்.  அவர் “இல்லை” என்றார். அப்போது நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “அல்லாஹ்வை அஞ்சுங்கள்; உங்கள் பிள்ளைகளிடையே நீதியோடு நடந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

 

ஆக ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றவர்கள், தம்முடைய ஒரு பிள்ளைக்கு மட்டும் பரிசு கொடுத்துவிட்டு, மற்றவர்களுக்குக் கொடுக்காமல் விட்டுவிடக் கூடாது. ஏனெனில் அது பிள்ளைகள் மத்தியில் ஏற்றத்தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடும். மேலும் அவர்களுக்கிடையே பொறாமை உணர்வையும் ஏற்படுத்த வாய்ப்புண்டு. எனவேதான் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்க, ஒருவருக்கு மட்டும் கொடுப்பதை நபியவர்கள் தடைசெய்தார்கள்.

உறவினர்களுக்கு அன்பளிப்பு வழங்குதல்: "ஏழைக்கு வழங்கப்படும் உதவி ஒரு தர்மமாகும்; ஆனால் உறவினருக்கு வழங்கப்படும் உதவி இரண்டு நன்மைகளை உடையது: அது தர்மமாகவும், உறவைப் பேணுவதாகவும் அமைகிறது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (திர்மிதீ: 658)

 

உறவினர்களுக்கு அன்பளிப்பு வழங்குவது உறவுகளை வலுப்படுத்துகிறது; அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கிறது; தர்மத்தின் நன்மையையும் உறவைப் பேணிய நன்மையையும் ஒருசேரப் பெற்றுத் தருகிறது; குடும்பங்களில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குகிறது. எனவே, பெற்றோர், சகோதரர்கள், சகோதரிகள், மாமா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமி உள்ளிட்ட உறவினர்களுக்கு அவ்வப்போது அன்பளிப்புகளை வழங்குவது இஸ்லாம் ஊக்குவிக்கும் உயர்ந்த நற்குணங்களில் ஒன்றாகும்.

 

 

நபியவர்களுக்குத் தோழர்கள் அன்பளிப்பு வழங்குதல்:  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களான ஸஹாபாக்கள், நபியவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கியுள்ளனர். நபியவர்களும் அவற்றை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால், அவர்கள் ஸதகா (தர்மம்) வழங்கியதை ஏற்றுக்கொள்ளவில்லை. அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்பளிப்பை ஏற்றுக்கொள்வார்கள்; ஆனால் தர்மத்தை உண்ணமாட்டார்கள்.” (புகாரீ: 2576)

 

அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: “கிராமப்புற மக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வரும்போது, அவர்களுக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வருவார்கள்.”

 

அது குறித்த செய்தி முஸ்னது அஹ்மத் ஹதீஸ் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது: ஸாஹிர் என்ற பெயருடைய ஒரு கிராமவாசி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கிராமத்திலிருந்து அன்பளிப்புகளைக் கொண்டு வருவார். அவர் புறப்பட விரும்பும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவருக்குத் தேவையானவற்றை வழங்குவார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ஸாஹிர் எங்களின் கிராமவாசி; நாங்கள் அவரின் நகரவாசிகள்” என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மத்: 12648)

 

ஸஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கியது, அவர்கள்மீது கொண்டிருந்த அன்பின் காரணமாகவும், அல்லாஹ்வின் தூதரைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களோடு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதற்காகவும், அவர்களின் அன்பையும் துஆவையும் பெற வேண்டுமென்பதற்காகவும் ஆகும். நபியவர்கள் அவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதோடு, பல சந்தர்ப்பங்களில் அதற்குப் பதிலாக அன்பளிப்புகளையும் வழங்கினார்கள். இதனால், அன்பளிப்புகளைப் பரிமாறிக் கொள்வது இஸ்லாமிய மார்க்கத்தில் அன்பையும் சகோதரத்துவத்தையும் வளர்க்கும் ஒரு சிறந்த ‘சுன்னத்’ என்பதை அறியலாம்.

 

 

ஆக நாம் ஒருவருக்கொருவர் வழங்கும் அன்பளிப்பு நமக்கு மத்தியில் அன்பை வளர்ப்பவை; உற்சாகத்தைத் தூண்டுபவை. நாம் நம் அண்டை வீட்டாருக்கு, உறவினர்களுக்கு, பிள்ளைகளுக்கு, தோழர்களுக்கு, கணவன் மனைவிக்கு, மனைவி கணவருக்கு வழங்கும் அன்பளிப்பு நம் உறவையும் பாசத்தையும் தோழமையையும் நட்பையும் காதலையும் வளர்க்கும். எனவே நாம் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளை வழங்கி, அன்பைப் பரிமாறிக்கொள்வோம். நபியவர்களின் வழிமுறையை (சுன்னத்தை)க் கடைப்பிடிப்போம்.  

===================



செவ்வாய், 23 ஜூன், 2026

தண்ணீர் ஓர் அருட்கொடை


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

அல்லாஹ் மனிதகுலத்திற்கு வழங்கிய எண்ணற்ற அருட்கொடைகளில் மிக முக்கியமானது தண்ணீராகும். மனிதன், விலங்குகள், தாவரங்கள் என அனைத்து உயிரினங்களின் வாழ்வும் தண்ணீரைச் சார்ந்தே உள்ளது. மனிதன் சில நாள்கள் உணவின்றி வாழ முடியும்; ஆனால் தண்ணீரின்றி வாழ முடியாது. எனவே, தண்ணீர் என்பது இயற்கை வளம் மட்டுமில்லை; அது அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடையும், மனிதன் பாதுகாக்க வேண்டிய அடைக்கலப் பொருளும் (அமானிதம்) ஆகும்.

 

இஸ்லாம் தண்ணீரை ஓர் அருளாகக் கருதுவதோடு, அதை வீணாக்குவதையும் மாசுபடுத்துவதையும் கண்டிக்கிறது. குர்ஆனிலும் நபிமொழிகளிலும் தண்ணீரின் முக்கியத்துவம் பல இடங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடையாகும். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்: “வானத்திலிருந்து நாம் தூய்மையான நீரை இறக்கினோம்.” (அல்குர்ஆன் 25:48) இந்த வசனம் தண்ணீர் மனிதனால் உருவாக்கப்பட்டதன்று; அல்லாஹ்வால் அருளப்பட்ட ஒரு பேரருளாகும் என்பதை உணர்த்துகிறது. மேலும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்: “உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் நீரிலிருந்து நாம் உருவாக்கினோம்.” (அல்குர்ஆன் 21:30)

 

இந்த வசனம் உயிரின் தோற்றமும் தொடர்ச்சியும் தண்ணீருடன் தொடர்புடையது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. நவீன அறிவியலும் உயிரணுக்களின் பெரும்பகுதி நீரால் ஆனது என்பதை உறுதிப்படுத்துகிறது. அந்த வகையில் மனிதன் தொடங்கி பிற உயிரினங்கள் வரை அனைத்தின் மூலப் பொருளும் தண்ணீர்தான் என்பதை நாம் உணரலாம்.  

 

தண்ணீர் வாழ்க்கையின் அடிப்படை: அல்லாஹ் கூறுகிறான்: “அவனே வானத்திலிருந்து நீரை இறக்குகிறான்; அதிலிருந்து நீங்கள் குடிக்கிறீர்கள்; அதிலிருந்தே மரங்கள் வளர்கின்றன; அவற்றில் நீங்கள் கால்நடைகளை மேய்க்கிறீர்கள்.” (அல்குர்ஆன் 16:10 ) இந்த வசனம் தண்ணீர் மனிதனின் குடிநீராக மட்டுமன்றி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, உணவு உற்பத்தியின் ஆதாரமாகவும் இருப்பதை விளக்குகிறது. மனிதனுக்கு எவ்வாறு தாகம் ஏற்படுகிறதோ, அதுபோலவே பிற உயிரினங்களுக்கும் தாகம் ஏற்படுகிறது. மனிதனைப் போலவே அவையும் தண்ணீர் அருந்துகின்றன. ஆக அனைத்து உயிரினங்களும் தம் உயிரைத் தக்க வைத்துக்கொள்ளத் தண்ணீர் தேவைப்படுகிறது.

 

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: “நீங்கள் குடிக்கும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? அதை மேகங்களிலிருந்து நீங்கள் இறக்கினீர்களா அல்லது நாம் இறக்குகிறோமா?” (அல்குர்ஆன் 56:68-69) இவ்வசனம் மனிதனைச் சிந்திக்க அழைக்கிறது. நாம் நாள்தோறும் பயன்படுத்தும் தண்ணீரின் உண்மையான உரிமையாளன் அல்லாஹ்வே என்பதை இது நினைவூட்டுகிறது.

 

தண்ணீரின் மூலம் அல்லாஹ்வின் வல்லமை வெளிப்படுகிறது. அது வானிலிருந்து எவ்வளவு இறங்க வேண்டும். எவ்வளவு இப்புவியில் தங்க வேண்டும் என்ற கணக்கெல்லாம் அவன் கையில்தான் உள்ளது.  உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்:  இந்த வசனம் தண்ணீர் எப்போதும் கிடைத்துக்கொண்டே இருக்கும் என்ற மனிதனின் எண்ணத்தை மாற்றுகிறது. அல்லாஹ் விரும்பினால் நீரை வற்றச் செய்யவும் முடியும். எனவே நாம் நாள்தோறும் பயன்படுத்தி வருகிற தண்ணீரை வழங்குகிற அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்துவது அவசியமாகும்.

 

தண்ணீரும் தூய்மையும்: இஸ்லாமிய மார்க்கத்தில் தொழுகை உள்ளிட்ட பல வணக்க வழிபாடுகளுக்குத் உடல் தூய்மை மிகவும் அவசியமாகும். அதாவது ஒவ்வொரு தொழுகைக்கும் ஒரு முஸ்லிம் உளூ-அங்கத்தூய்மை செய்ய வேண்டும். அதற்கான நீர் எங்கிருந்து வருகிறது. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்: “வானத்திலிருந்து தூய்மைப்படுத்தும் நீரை இறக்கினோம்.” (அல்குர்ஆன் 8:11) உளூ, குளியல் போன்ற இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகள் தண்ணீரை அடிப்படையாகக் கொண்டவை. இதன் மூலம் தண்ணீர் உடல் சுத்தத்திற்கும் ஆன்மிகச் சுத்தத்திற்கும் ஒரு கருவியாக அமைகிறது. ஆக வணக்க வழிபாடுகளுக்கு அடிப்படைத் தேவை தண்ணீர்தான்.

 

தண்ணீரை வீணாக்கலாமா?: தண்ணீரை வீணாக்குவதை இஸ்லாமிய மார்க்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இன்று உலகின் பல பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதனை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் உணர்த்தியுள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு முறை ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு உளூச் செய்தபோது அதிகத் தண்ணீர் பயன்படுத்தியதைப் பார்த்து, “ஏன் நீரை வீணடிக்கிறாய்?” என்று வினவினார்கள்.  

 

அதற்கு ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு, “உளூவிலும் வீணடித்தல் உண்டா?” என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “ஆம், ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றங்கரையில் இருந்தாலும் கூட(வீணடிக்கக் கூடாது)” என்று கூறினார்கள். (இப்னுமாஜா: 425) இந்த ஹதீஸ், தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கும்போது மட்டுமன்றித் தண்ணீர் மிகுதியாக இருந்தாலும் அதை வீணாக்கக் கூடாது என்பதைக் கற்பிக்கிறது.

 

தண்ணீர் வழங்குதல் சிறந்த தர்மம்: எவ்வளவோ உணவையும் உணவுப் பொருள்களையும் பணத்தையும் நாம் தர்மமாக வழங்குகிறோம். ஆனால் தண்ணீர் வழங்குவதை மிக உயர்ந்த தர்மங்களில் ஒன்றாக நபியவர்கள் கற்பித்துள்ளார்கள்.

 

உயிரினங்களுக்குத் தண்ணீர் கொடுப்பதன் நன்மை: இஸ்லாம் மனிதர்களுக்கு மட்டுமன்றி, உயிரினங்களுக்கும் கருணை காட்டச் சொல்கிறது. நம்மோடு வாழும் எல்லா உயிரினங்களையும் நாம் மதிக்க வேண்டும். அந்த வகையில் ஆடு, மாடு, நாய், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் தாகத்தால் வாடுகின்றபோது அவற்றுக்கு நாம் தண்ணீர் கொடுத்து உதவினால் அது மிகப் பெரும் நன்மையாக நாளை மறுமையில் நமக்குக் கிடைக்கும்.

 

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: ஒரு மனிதர் (ஒரு பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தபோது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) “எனக்கு ஏற்பட்டதைப் போன்ற(அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும்” என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தமது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார்.  அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

 

இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகள் (மற்ற பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?” என்று வினவினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்” என்று விடையளித்தார்கள். (புகாரீ: 2363) இந்த ஹதீஸ் உயிர்ப்பிராணிகளுக்குத் தண்ணீர் வழங்குவது அவற்றுக்குக் கருணை காட்டும் ஓர் உயர்ந்த செயலாகும் என்பதை எடுத்துரைக்கிறது.

 

தண்ணீரை மாசுபடுத்தக் கூடாது: தண்ணீரை மாடுபடுத்துவதை இஸ்லாம் தடுக்கிறது. இன்று குளங்கள், ஆறுகள், ஓடைகள் உள்ளிட்ட  நீர் நிலைகளை மிகச் சாதாரணமாகக் கருதக்கூடிய நிலையும் அவற்றை மாசுபடுத்தக்கூடிய நிலையும் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. ஆனால் மனித உயிர்கள் வாழ அவை மிக முக்கியமானவை என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றார்கள். இதனால் மனிதர்கள் மட்டுமின்றிப் பிற உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: “உங்களில் எவரும் ஓடாத (தேங்கியுள்ள) நீரில் சிறுநீர் கழித்துவிட்டு, பின்னர் அதிலேயே குளிக்க வேண்டாம்.” (புகாரீ: 239) இது பொது நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு சுகாதார வழிகாட்டுதலாகும். இன்றைய சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கைகளுக்கு நபியவர்களின் வழிகாட்டுதல் ஏற்றதாக அமைந்துள்ளது.

 

வெயிலில் தெரியும் தண்ணீரின் அருமை: மற்ற காலங்களைவிடக் கோடைக்காலத்தில்தான் தண்ணீரின் தேவையையும் அதன் முக்கியத்துவத்தையும் நாம் மிகுதியாக அறிவோம். இவ்வாண்டு ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்றுவிட்டு மாலியிலிருந்து நைஜர் திரும்பிக் கொண்டிருந்த முஸ்லிம் சகோதர, சகோதரிகள் 49 பேர், சஹாரா பாலைவனத்தில் வாகனம் பழுதடைந்ததால் சிக்கிக்கொண்டனர். நான்கைந்து நாள்கள் ஆகியும் அவ்வாகனத்தைச் சரிசெய்ய முடியவில்லை. எனவே கைவசம் இருந்த தண்ணீர் தீர்ந்துபோனபின், கடுமையான வெப்பம் காரணமாக அவர்கள் உயிரிழந்துவிட்டனர். நாம் அன்றாடம் எளிதாகப் பெறும் தண்ணீர் எவ்வளவு பெரிய அருட்கொடை என்பதை இந்நிகழ்வு நமக்கு நினைவூட்டுகிறது. எத்தனையோ பேர் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் சிரமப்படும் வேளையில் நமக்கு அல்லாஹ் தண்ணீரைத் தாராளமாகத் தந்துள்ளமைக்கு நாம் அவனுக்கு எவ்வளவு நன்றி செலுத்தினாலும் போதாது.

  

அறிவியல் பார்வையில்...: அறிவியல் ஆய்வுகளின்படி, மனித உடலின் சுமார் 60 சதவிகிதம் நீரால் ஆனது. மூளையின் பெரும்பகுதி நீரால் ஆனது. இரத்த ஓட்டம், செரிமானம், உடல் வெப்பநிலை கட்டுப்பாடு ஆகியவை தண்ணீரைச் சார்ந்துள்ளன. விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியின் அடிப்படைத் தேவையாக தண்ணீர் உள்ளது. இந்த அறிவியல் உண்மைகள் குர்ஆன் கூறும் “ஒவ்வோர் உயிரையும் நீரிலிருந்து படைத்தோம்” என்ற உண்மையை மேலும் வலுப்படுத்துகின்றன.

 

தண்ணீரின் மதிப்பை உணர்வோம்: தண்ணீர் என்பது ஒரு சாதாரண இயற்கை வளமன்று; அது அல்லாஹ்வின் மிகப்பெரிய அருட்கொடையாகும். உயிர்களின் வாழ்வாதாரம், உடல் மற்றும் ஆன்மிகத் தூய்மை, விவசாய வளம், சமூக நலன் ஆகிய அனைத்தும் தண்ணீருடன் தொடர்புடையவை. எனவே ஒரு முஸ்லிம் தண்ணீரைப் பயன்படுத்தும்போது அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும்; அதை வீணாக்காமல் பாதுகாக்க வேண்டும்; தேவையுடையோருக்கு வழங்க வேண்டும்; நீர்நிலைகளை மாசுபடுத்தாமல் காக்க வேண்டும். “தண்ணீரின் மதிப்பை உணர்வது, அல்லாஹ்வின் அருட்கொடைகளின் மதிப்பை உணர்வதாகும்.” இதுவே இஸ்லாம் கற்பிக்கும் உயர்ந்த பாடமாகும்.

==================








புதன், 10 ஜூன், 2026

மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா ஹதீஸ் நூலின் 2ஆம் பாகம் - தமிழாக்கம் தந்தோன் உரை

 நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா ஹதீஸ் நூலின் 2ஆம் பாகம் இப்போது வெளிவந்துவிட்டது. 


அந்நூலில் நான் எழுதிய 'மொழிபெயர்ப்பாளர் உரை' உங்கள் பார்வைக்கு...



தமிழாக்கம் தந்தோன் உரை

----------------------------------


அகில மக்கள் அனைவருக்கும் வழிகாட்டும் வகையில் இறைமறைக் குர்ஆன் எனும் பொதுமறையை அகிலத்தாருக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். இறைமறைப்படியும் இறைக்கட்டளைப்படியும் வாழ்ந்து வழிகாட்டிய இறுதி இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீதும் அவர்கள்தம் குடும்பத்தார். உற்ற தோழர்கள் ஆகியோர்மீதும் அல்லாஹ்வின் கருணையும் அருளும் என்றென்றும் பொழிவதாக


அல்லாஹ்வின் பெருங்கருணையால் இதோ இப்போது மஆலிமுஸ் ஸுன்னா நூலின் இரண்டாம் பாகம் உங்கள் கைகளில் தவழ்கிறது. அல்ஹம்து லில்லாஹ். நான் தமிழாக்கம் செய்த ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் இன்னும் அச்சுக்குச் செல்லாமல் உள்ளன. அந்த வரிசையில் இதுவும் சேர்ந்துவிடக் கூடாது என்று அவ்வப்போது அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தேன். அதன் பயனாக முதல் பாகம் வெளியிடப்பட்டு ஈராண்டுகளுக்குப்பின் இந்த இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது. இது தாமதம்தான் என்றாலும் இப்போதேனும் வெளிவந்ததில் மிக்க மகிழ்ச்சி.


கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நான் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டி ருந்தாலும், இறுதிப் பத்தாண்டுகளாக நபிமொழித் தொகுப்பு நூல்களைத் தமிழாக்கம் செய்வதில் ஈடுபட்டுவருவது அல்லாஹ் எனக்கு அருளிய நற்பேறாகக் கருதுகிறேன். ஒவ்வொரு பள்ளிவாசலுக்கும் சென்று தொழும்போது, அங்கு அலமாரியில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள அறுபெரும் நூல்களுள் நான் தமிழாக்கம் செய்த சுனனுன் நஸாயீ சுனன் இப்னுமாஜா ஆகிய நூல்களைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியடைவேன்.


ஒரே தொகுப்பில் திருக்குர்ஆன் இருப்பதைப்போலவே. ஒரே தொகுப்பில் நபிமொழி களும் இருந்தால் பயனுள்ளதாக இருக்குமே என்று நான் நீண்ட காலமாகவே எண்ணியதுண்டு. அதற்கொரு தீர்வாகத்தான் இந்த மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா நூல் திகழ்கிறது. பதினான்கு நூல்களில் உள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நபிமொழிகளை நுணுகி ஆராய்ந்து. கூறியது கூறல் வகை நபிமொழிகளை ஒதுக்கி வைத்துவிட்டு சான்றுமிக்க நபிமொழிகளை மட்டும் தேர்வுசெய்து. கூடுதல் செய்தி அடங்கிய வரிகளை அதன் கீழே கொண்டுவந்து முழுமையான நபிமொழிக் கோவையாக நமக்குத் தந்திருக்கிறார் இதன் மூலநூலாசிரியர். இதனால் ஹதீஸ்கள் அனைத்தையும் ஒருசேர, ஒரே நூலில் படிக்கக்கூடிய நல்வாய்ப்பு வாசகர்களுக்குக் கிடைத்துள்ளது.


திருக்குர் ஆனை ஒரே தொகுப்பாக வாசிப்பதைப் போன்று நபிமொழிகள் அனைத்தையும் ஒரே தொகுப்பாகப் படித்துத் தெரிந்துகொள்ள நாடுவோருக்கு உகந்த நூல்தான் இது பள்ளிவாசல்தோறும் அதிகாலை அல்லது அந்தி மாலையில் வாசிக்கப்பட வேண்டிய நூலிது வீட்டில் பிள்ளைகள் முன்னிலையில் வாசித்துக்காட்டப்பட வேண்டிய நூலிது சொற்பொழிவாளர்கள் தம்முடைய சொற்பொழிவுக்கான குறிப்புகளைத் தலைப்புவாரியாக மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் வகையில் இந்நூல் அமைக்கப்பெற்றுள்ளது. ஒரு தலைப்பின்கீழ் உள்ள அத்தனைச் செய்திகளையும் ஒரே இடத்தில் எடுத்துக்கொள்ளலாம்.


இந்த இரண்டாம் பாகத்தில் திருக்குர்ஆனிலுள்ள சில அத்தியாயங்களின் சிறப்புகள். திருக்குர்ஆன் ஓதலின்போது சஜ்தா செய்ய வேண்டிய இடங்கள். திருக்குர்ஆன் விரிவுரை. வழிபாடுகள் எனும் பகுதியில் தூய்மை, குளியல், பாங்கு. தொழுகை நேரங்கள், மஸ்ஜிதுகள். தொழுகைக்கான இடங்கள். தொழுகையின் சிறப்புகள் உள்ளிட்ட தலைப்புகளின்கீழ் 793 நபிமொழிகள் இடம்பெற்றுள்ளன. திருக்குர்ஆன் வசனங்களுக்கான விரிவுரையைக் காண, பல்வேறு நூல்களைப் புரட்ட வேண்டிய தேவையைக் குறைத்து. இந்நூல் நம் நேரத்தை மிச்சப்படுத்துகிறது.


அதேநேரத்தில் பலவீனமான ஹதீஸ்களும் நபிமொழி எனும் பெயரில் கற்பனையாகப் புகுத்தப்பட்டவையும் இதில் இடம்பெறவில்லை என்பதை நாம் உறுதியாகக் கூறலாம். அத்தகைய நபிமொழிகளை இந்நூலில் தேடுவோருக்கு ஏமாற்றமே மிஞ்சும். அந்த வகையில்

இந்த நூலின் நம்பகத்தன்மை மிகுதியாகிறது. ஹதீஸ்களுக்கு ஏற்பத் தம் வாழ்வியலை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றெண்ணும் இளம் தலைமுறையினருக்கு ஏற்ற நூலிது. எனவே இதிலுள்ள ஹதீஸ்களைப் படித்து, உங்கள் அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்த முயலுங்கள்.


உங்கள் மஹல்லா பள்ளிவாசல்களில் இதனை வாங்கி வையுங்கள். உங்கள் நண்பர்களுக்கு இதனை அறிமுகப்படுத்துங்கள். உங்கள் உறவினர்களுக்கும் பள்ளிவாசல் இமாமுக்கும் வாங்கிப் பரிசளியுங்கள்.


இந்நூலின் தமிழாக்கத்தைப் படித்து. மிகச் சிறந்த முறையில் அணிந்துரை வழங்கிய அரபுக் கல்லூரி முதல்வர்கள். பேராசிரியர்கள், பதிப்பகத்தார். வடிவமைப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.


இப்பணியில் ஈடுபட்ட எங்களுக்கும் எங்களுக்கு முன்னர் ஈடுபட்டோருக்கும் உயர்ந்தோன் அல்லாஹ் பாவமன்னிப்பை வழங்கி, ஈருலக நற்பேறுகளைத் தருவானாக.


அன்புடன்


மௌலவி நூ.அப்துல் ஹாதி பாகவி


பட்டினம்பாக்கம், சென்னை 28.

------------------------------------------


இந்நூல் 

கிடைக்குமிடம்: 

அப்துல்லாஹ் பப்ளிகேஷன்ஸ் 

மயிலாடுதுறை. 

தொடர்புக்கு: 93447 42844 / 99522 31434


ரஹ்மத் புக் ஹவுஸ்

மண்ணடி, சென்னை-1

தொடர்புக்கு: 91718 46184 / 96001 25000


ஆயிஷா டிரேடர்ஸ்

லால்பேட்டை. 

தொடர்புக்கு: 99440 08712/ 89407 91234


விலை: ரூ. 600 + (கூரியர் செலவு) 




திங்கள், 25 மே, 2026

கழுதைகள் கூறும் பாடம்

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. 


ஒவ்வோராண்டும் மே 8ஆம் நாள் உலக கழுதைகள் நாள் அனுசரிக்கப்படுகிறது. டாக்டர் அப்துல் ராஸிக் என்பவரின் முயற்சியால்தான் இந்நாள் நடைமுறைக்கு வந்தது. 2018ஆம் ஆண்டு இது தொடங்கியது. இவர் பாலைவன விலங்குகள் குறித்து ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மனிதர்களுக்குப் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உதவியாளராக இருந்து வரும் கழுதைகளின் கடின உழைப்பை அங்கீகரிக்கவும், அவற்றின் பாதுகாப்பை வலியுறுத்தவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.


பொதுவாக மனிதன் கழுதையைப் பயணம் செய்வதற்கும் பொதிகளைச் சுமந்து செல்வதற்கும் பயன்படுத்தினான்; இன்றும் கிராமங்களில் மக்கள் அவற்றைப் பயன்படுத்திவருகின்றார்கள். அது அவனோடு ஒன்றி இருக்கக்கூடிய சாதுவான பிராணியாகும். கழுதை குறித்துப் பேசும்போது அதை இகழ்ச்சிக்கான குறியீடாகத்தான் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். கழுதை போல் கத்தாதே, கழுதை கெட்டால் குட்டிச் சுவர், கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசம், கழுதை தேய்ந்து கட்டெறும்பானது, வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம் உள்ளிட்ட ஏராளமான பழமொழிகள் சொல்லப்படுகின்றன. அந்த வகையில் திருக்குர்ஆனில் அல்லாஹ்வும் அதை இகழ்ச்சிக்கான குறியீடாகவே உதாரணம் காட்டுகிறான்.


வேதம் கொடுக்கப்பட்ட யூதர்கள் அதை உரிய முறையில் பின்பற்றாமல் வழிதவறிச் சென்றார்கள். அத்தகையோரைப் பொதி சுமக்கும் கழுதையைப் போன்றவர்கள் என்று சொல்கின்றான். இதோ அந்த வசனம்: ‘தவ்றாத்’ என்னும் வேதத்தைச் சுமந்து கொண்டு, அதிலுள்ளபடி நடக்காதவர்களின் உதாரணம், புத்தகங்களைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கும் மக்களின் இவ்வுதாரணம் மகா கெட்டது. அல்லாஹ் இத்தகைய அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்தமாட்டான். (62: 5) சிந்திக்காத மனிதர்களை எதைப் பற்றியும் சிந்திக்காத கழுதையைப் போலத்தான் என்கிறான். 


இறைமறுப்பாளர்கள் இறைவசனங்களையும் நல்லுரைகளையும் செவியுறுகின்றபோது அதைக் கேட்டுவிடாதவாறு ஓடுகின்றார்கள். அதை ஓர் உதாரணத்தின் மூலம் அல்லாஹ் ஒப்பிட்டுக் கூறுகின்றான்.  அவர்களுக்கு என்ன நேர்ந்தது? இந்நல்லுபதேசத்தை (இவ்வாறு) புறக்கணிக்கின்றனர். சிங்கத்தைக் கண்டு வெருண்டோடும் (காட்டுக்) கழுதையைப் போல் அவர்கள் இருக்கின்றனர்!  (74: 49-51)


கழுதையின் சத்தம்: பொதுவாக மிகுந்த சத்தத்தோடு பேசுவோரை, ‘கழுதை மாதிரி கத்தாதே’ என்று சொல்வார்கள். அதுபோலவே லுக்மான் அலைஹிஸ் ஸலாம் தம் மகனுக்கு அறிவுரை கூறியபோது, “உன் சத்தத்தை-குரலைத் தாழ்த்திக்கொள்; திண்ணமாகச் சத்தங்களில் மிகவும் வெறுக்கத்தக்கது கழுதையின் சத்தமாகும்” (31: 19) என்றார்கள். 


பொதுவாக மனிதனுடைய பார்வைக்குப் புலப்படாதவை மற்ற உயிரினங்களுக்கும் விலங்கினங்களுக்கும் புலப்படுகின்றன. அந்த வகையில் கழுதையின் பார்வைக்கு ஷைத்தான் புலப்படுகின்றான் என்பதை நபியவர்கள் கூறுவதோடு, நல்லதொரு செய்தியையும் அத்தோடு கூறுகின்றார்கள்: 


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: நீங்கள் சேவல்கள் கூவுகின்ற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்தி ருக்கின்றன. (அதனால்தான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சத்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கின்றது. (அதனால்தான் கத்துகின்றது.) (புகாரீ:  3303)


ஆகவே கழுதையின் கண்களுக்கு ஷைத்தான் புலப்படுகிறான். அவனைப் பார்த்ததும் அது கத்துகிறது. எனவே அந்த நேரத்தில் நாம் ஷைத்தானிடமிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதேநேரத்தில் சேவலின் கண்களுக்கு வானவர் தென்படுகிறார். அவரைப் பார்த்ததும் அது கூவுகிறது. அந்த நேரத்தில் அல்லாஹ்வின் அருளைக் கேட்டுப் பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும். 


இறந்த கழுதையை உயிர்ப்பித்தல்: உஸைர் நபி ஒரு நாள் தமது தோட்டத்தைக் கவனிக்கப் புறப்பட்டுச் சென்றார். நண்பகல் வேளையில் வெப்பம் கடுமையாகத் தாக்கியதால் வழியில் ஓரிடத்தில் பாழடைந்து கிடந்த வீட்டுக்குள் நுழைந்தார். அவர்தம் கழுதையுடனே அவ்வீட்டுக்குள் நுழைந்து, அந்தக் கழுதையிலிருந்து இறங்கினார். அவர் தம்முடன் ஒரு கூடையில் அத்திப்பழமும் மற்றொரு கூடையில் திராட்சையும் வைத்திருந்தார். பாழடைந்த அந்த வீட்டின் நிழலில் இருந்துகொண்டு தம்முடன் வைத்திருந்த ஒரு தட்டை எடுத்து, கூடையிலிருந்த திராட்சையை எடுத்துச் சாறுபிழிந்தார்.

 

அவர் வைத்திருந்த காய்ந்த ரொட்டியை எடுத்து, சாப்பிடுவதற்கு எளிதாக இருப்பதற்காக,  பிழிந்து வைத்திருந்த திராட்சைச் சாற்றினுள் அதைப் போட்டார். அவர்தம் பிடரியைக் கீழே வைத்தவராகத் தரையில் படுத்தார்; தம் இரண்டு கால்களையும் சுவரில் முட்டுக்கொடுத்த நிலையில், முகட்டைப் பார்த்தார். அவை அடியோடு வீழ்ந்து கிடந்தன. அதன் ஊர்வாசிகளோ அழிந்துபோய்விட்டனர். 


மக்கிப்போன எலும்புகளைக் கண்டார். அப்போது அவர், “(மடிந்துவிட்ட இந்த ஊரை) அது மடிந்தபின் எவ்வாறு அல்லாஹ் உயிர்ப்பிக்கப்போகிறான்?” என்று கூறினார். (2: 259) அல்லாஹ் அதை உயிர்ப்பிப்பான் என்பதில் அவர் சந்தேகம் கொள்ளவில்லை. எனினும் அவர் ஆச்சரியமாகவே அவ்வாறு கூறினார். எனவே அல்லாஹ், உயிரைக் கைப்பற்றும் வானவரை அனுப்பினான். அவர் அவருடைய உயிரைக் கைப்பற்றினார். அவ்வாறே அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை மரணிக்கச் செய்தான். 


நூறாண்டுகள் கடந்தபோது, இஸ்ரவேலர்களிடம் பல்வேறு மாற்றங்களும் நடந்தேறிவிட்டன.  அச்சமயத்தில் அல்லாஹ் உஸைரிடம் ஒரு வானவரை அனுப்பி, அவருடைய உள்ளத்தைப் படைத்தான். அதன் மூலம் அவரது உள்ளம் அறிந்துகொள்ளும்; இறந்தவர்களை அல்லாஹ் எவ்வாறு உயிர்ப்பிக்கிறான் என்பதை அவருடைய இரண்டு கண்களும் பார்ப்பதற்காக அவற்றையும் படைத்தான்.


பின்னர், அவர் பார்க்கும் நிலையிலேயே அவரது உடலை இணைத்தான். அதன்பின், அவருடைய எலும்புகளைச் சதையாலும் முடியாலும் தோலாலும் போர்த்தினான். பின்னர், அதனுள் உயிரை ஊதினான். அவை அனைத்தையும் அவர் பார்த்து விளங்கிக்கொண்டார்; அதன்பின் எழுந்து அமர்ந்துகொண்டார்.

அப்போது அந்த வானவர் அவரிடம், “எவ்வளவு காலம் (இங்கே) தங்கியிருந்தீர்?” என்று வினவினார். “ஒரு நாள், அல்லது ஒரு நாளில் சிறு பகுதி நான் தங்கியிருந்தேன்” என்று கூறினார். ஏனென்றால், அவர் நண்பகலில்தான் அங்கு வந்து படுத்தார். பிற்பகல் வேளையில் எழுப்பப்பட்டார்; அப்போது சூரியன் மறையவில்லை. அப்போது அந்த வானவர், “மாறாக, நூறாண்டுகள் நீர் தங்கியுள்ளீர்; இதோ உம் உணவையும் பானத்தையும் பாரீர்!” என்று கூறினார். 


அவ்விரண்டும் அதே நிலையிலேயே இருந்தன. பழச்சாறு மாற்றமடையவில்லை; காய்ந்த ரொட்டியும் அப்படியே இருந்தது. அதைத்தான் அல்லாஹ், “அவை கெட்டுப்போகவில்லை” என்று குறிப்பிடுகின்றான். அதேபோல் அத்திப்பழமும் திராட்சையும் அப்படியே  இருந்தன. அவற்றின் நிலை சற்றும் மாறவில்லை.

அவர் மறுப்பதைப் போன்று காணப்பட்டார். அப்போது அவ்வானவர், “நான் சொல்வதை நீர் மறுக்கின்றீரா? அப்படியானால், நீர் உம்முடைய கழுதையைப் பாரீர்!” என்று கூறினார்.  அவர் கூறியதும், கழுதையைப் பார்த்தார். அதன் எலும்புகள் மக்கிப்போய் எலும்புக்கூடாகக் காட்சியளித்தது. அப்போது அந்த வானவர், அக்கழுதையின் எலும்பை அழைத்தார்; அது பதிலளித்தது; எல்லாப் புறமும் எழுந்து அவரை முன்னோக்கின. அந்த வானவர், அதை இணைத்தார்; அதை அவர் பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர், அதற்குத் தசைகளையும் நரம்புகளையும் அளித்து, தோலால் அதைப் போர்த்தினார். 


பின்னர், அதனுள் உயிரை ஊதினார்; உடனே அக்கழுதை தன் தலையை உயர்த்தியவாறும், காதுகளை வானத்தை நோக்கிய நிலையிலும் மறுமைநாள் நிகழ்ந்துவிட்டதோ என்று  கனைத்துக் கத்திக்கொண்டே எழுந்தது. அதைத்தான் அல்லாஹ் கூறுகிறான்: (செத்துப்போன) உமது கழுதையையும் காண்பீராக! மக்களுக்கு உம்மை ஒரு சான்றாக நாம் ஆக்குவதற்காகவே (இவ்வாறு செய்தோம்.) இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளை நாம் எவ்வாறு இணைத்து, பின்னர் அவற்றில் சதையை அளிக்கிறோம் என்பதைக் கவனிப்பீராக! (2: 259)


அவருக்கு இது தெளிவானபோது, “அல்லாஹ் அனைத்துப் பொருள்கள்மீதும் ஆற்றலுடையவன் என்பதை நான் அறிகிறேன்” என்று கூறினார். (2: 259) அதாவது ‘மரணித்ததை உயிர்ப்பிப்பது உள்ளிட்ட விஷயங்களை நான் அறிந்துகொண்டேன்’ என்று கூறினார். ஆக இறந்துபோன கழுதையை உயிர்ப்பிப்பதைப் போலத்தான் இறந்துவிட்ட மனிதர்களை அவன் உயிர்ப்பிப்பான் என்பதை நேரடிச் சான்றாக அல்லாஹ் உஸைர் நபிக்குக் காட்டினான். 


கழுதையைப் போல்: எதிர்மறையான, கீழ்த்தரமானவற்றிற்கு உதாரணம் கூறினாலும், அதனிடம் பற்பல பாடங்கள் மனிதனுக்கு உண்டு. வண்ணான் ஒருவன் அழுக்கு மூட்டைகளை கழுதையின் முதுகில் வைத்துக்கொண்டு ஆற்றங்கரை சென்று அவற்றைத் துவைத்துத் தூய்மையாக்கி, காயவைத்து மாலையில் அவற்றைக் கட்டி, அதே கழுதையின் முதுகில் வைத்தவாறு தன் வீடு வந்து சேர்கிறான். 


காலையில் வைக்கப்பட்ட அழுக்கு மூட்டையாக இருந்தாலும் மாலையில் வைக்கப்பட்ட சுத்தமான மூட்டையாக இருந்தாலும் அது எந்த உணர்ச்சியையும் காட்டுவதில்லை. அழுக்கு மூட்டையை வைத்துவிட்டானே என்று சங்கடப்படுவதுமில்லை; தூய்மையான மூட்டையை வைத்துவிட்டானே என்று நினைத்து மகிழ்ச்சி அடைவதுமில்லை. அதனைப் பொருத்த வரை இரண்டுமே சுமைதான். அந்த வகையில் பார்க்கும்போது, மனிதன் அதனிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். துன்பம் வரும்போது துவண்டுவிடுவதோ இன்பம் வரும்போது மகிழ்ச்சியில் துள்ளுவதோ கூடாது. இரண்டும் இறைவன் கொடுத்தவை. இரு நிலைகளையும் சமமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். அவன்தான் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

======================