-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
ஒவ்வோராண்டும் செப்டம்பர் 30 அன்று சர்வதேச மொழிபெயர்ப்பு நாள் (International Translation Day) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாள், மொழிபெயர்ப்பாளர்கள், உரைபெயர்ப்பாளர்கள், மொழி வல்லுநர்கள் உலக மக்களுக்கிடையே ஏற்படுத்தும் புரிந்துணர்வு மற்றும் பண்பாட்டுத் தொடர்பை நினைவுகூரும் நாளாகும்.
மனிதன் தன்னுடைய செய்தியைப் பிறருக்குத் தெரிவிக்கப் பயன்படும் ஊடகமே மொழி. உலகில் பல்வேறு மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழிக்கும் பல்வேறு வார்த்தைகள்; ஒவ்வொரு வார்த்தைக்கும் தனித்தனி பொருள்; அவற்றை எண்ணிப் பார்க்கும்போது வியப்பே மேலிடுகிறது. மொழி குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்களுடைய மொழிகளும் நிறங்களும் வெவ்வேறாக இருப்பதும் அவனுடைய சான்றுகளுள் உள்ளவையாகும். இதில் கல்வியாளர்களுக்கு நிச்சயமாகப் பல சான்றுகள் இருக்கின்றன. (30: 22)
நபியவர்களின் மொழிபெயர்ப்பாளர்: நம்முடைய மொழியை அறியாதவருக்கு அவருடைய மொழியில் தெரிவிக்க உதவுவதே மொழிபெயர்ப்பு. இது பன்னூறு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இஸ்லாத்தின் பார்வையில் மொழிபெயர்ப்பு குறித்து ஆய்வு செய்தபோது ஸைத் பின் ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டிய தேவை உள்ளது. ஏனெனில் இவர் ஹீப்ரு மொழி, சிரிய மொழி ஆகியவற்றைக் கற்றுக்கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்துள்ளார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வரும் கடிதங்களைப் படித்துக்காட்டுதல், யூதர்கள் தம் வேதத்தில் ஹீப்ரு மொழியிலுள்ள சட்டத்தைத் தவறாகப் படித்துக் காட்டும்போது அல்லது மறைக்கும்போது அதை வாசித்து, நபியவர்களுக்கு அரபியில் மொழிபெயர்த்துச் சொல்பவராக இருந்துள்ளார் என்பதை அறிய முடிகிறது.
வரலாற்று ரீதியாக ஆய்வு செய்யும்போது, மன்னர் ஹாரூன் ரஷீத் (763-809) அவர்களின் காலத்தில்தான் அரபு நூல்களெல்லாம் ஐரோப்பிய மொழிகளில் பெயர்க்கப்பட்டன என்ற செய்தியை அறிகிறோம். அரபியர்கள் அறிவியலிலும் மருத்துவத்துறையிலும் சிறந்து விளங்கினர். அது குறித்துப் பற்பல நூல்களை எழுதி வைத்திருந்தனர். அந்த அரபு நூல்கள்தாம் பிற்காலத்தில் ஐரோப்பிய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டன என்பதற்கு அவற்றிலுள்ள மூலவார்த்தைகளே சாட்சியாக உள்ளன. அதாவது அரபு வார்த்தைகள் ஆங்கில உச்சரிப்பில் எழுதப்பட்டுள்ளன.
மொழிபெயர்ப்பாளர் கவனிக்க வேண்டியவை: மொழிபெயர்ப்பில் மூலமொழி என்றும் இலக்கு மொழி என்றும் இரண்டு வார்த்தைகள் உள்ளன. ஒரு நூல் எம்மொழியில் உள்ளதோ அதுவே மூலமொழி ஆகும். ஒரு நூல் எம்மொழியில் மொழியாக்கம் செய்யப்படுகிறதோ அதுவே இலக்குமொழி. ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலமொழியையும் இலக்கு மொழியையும் நன்றாக அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர் மூலமொழியை நன்கு விளங்கி, இலக்குமொழியில் மொழியாக்கம் செய்ய முடியும்.
மொழிபெயர்ப்பு என்பது வெறும் ஒரு மொழிச் சொல்லுக்கு இன்னொரு மொழிச் சொல்லை மாற்றுவது மட்டுமல்ல; மூலத்தின் பொருள், நோக்கம், உணர்வு, நடை, சூழல் ஆகியவற்றை இலக்கு மொழியில் இயல்பாகக் கொண்டு சேர்ப்பதே அதன் நோக்கம். மூல நூலில் உள்ள சொற்களின் நேரடிப் பொருள் மட்டுமல்லாமல், அதன் இலக்கணம், மரபுத் தொடர்கள், உவமைகள், சொற்பிரயோகங்கள் ஆகியவற்றையும் அறிந்திருக்க வேண்டும். மொழிபெயர்ப்பு செய்யப்படும் மொழியில் தெளிவாகவும் இயல்பாகவும் எழுதும் திறன் வேண்டும்.
முதலில் முழுப் பொருளையும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு சொல்லை மட்டும் பார்த்து மொழிபெயர்க்காமல், முழு வாக்கியம் மற்றும் பத்தியின் கருத்தை அறிய வேண்டும். சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பைத் தவிர்க்க வேண்டும். ஒரே சொல்லுக்குப் பல பொருள்கள் இருக்கலாம். அது பயன்படுத்தப்பட்டுள்ள சூழலே சரியான பொருளைத் தீர்மானிக்கும். எனவே மூல நூலாசிரியர் அச்சொல்லை என்னோக்கத்தில் பயன்படுத்தியுள்ளார் என்பதை ஆய்ந்து, ஆசிரியரின் நோக்கத்தைப் பாதுகாக்க வேண்டும். மொழிபெயர்ப்பாளரின் சொந்தக் கருத்தை மூல ஆசிரியரின் கருத்தாகக் கலந்து விடக்கூடாது. மூலத்தின் உணர்வும் நடையும் காக்கப்பட வேண்டும்.
கவிதையின் அழகு, உரையின் தீவிரம், நகைச்சுவை, அறிவுறுத்தல் போன்றவை இயன்ற வரை மொழிபெயர்ப்பிலும் வெளிப்பட வேண்டும். குறிப்பாக குர்ஆன், ஹதீஸ் போன்ற நூல்களில் சொற்களின் பொருள், சூழல், அறிஞர்களின் விளக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். சந்தேகம் ஏற்பட்டால் ஊகிக்கக் கூடாது. அகராதி, நம்பகமான நூல்கள், துறை வல்லுநர்கள் போன்றோரின் உதவியுடன் பொருளை உறுதிப்படுத்த வேண்டும். செய்துமுடித்த மொழிபெயர்ப்பை மீண்டும் சரிபார்க்க வேண்டும். இப்படி நிறைய இருக்கின்றன.
இயந்திர மொழிபெயர்ப்பு: மொழிபெயர்ப்புப் பணியைச் செய்யத்தான் கூகுள் உள்ளதே? நாம் ஏன் செய்ய வேண்டும்? என்று கேட்போர் உண்டு. இயந்திரம் மனிதனைப் போல் உணர்வுகளைப் புரிந்து, இடத்திற்கேற்றார்போல் செய்வதில்லை. ஏற்கெனவே உருவாக்கப்பட்ட நிரல் அடிப்படையில்தான் அது மொழிபெயர்க்கும். மனிதர்கள் அவ்வாறில்லை. எதை மொழிபெயர்க்க வேண்டும்; எதைச் செய்யக்கூடாது என்று புரிந்து செய்வதோடு, மனித உணர்வுகளை உணர்ந்து செய்வர். இயந்திரம் செய்வது மொழிபெயர்ப்பு; சிறந்த மொழிபெயர்ப்பாளர் செய்வதோ மொழியாக்கம் ஆகும். இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்றால், வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தல் இயந்திரம் செய்யக்கூடியது. வார்த்தைகளை விளங்கி அதன் கருத்தை அந்த மொழிக்கேற்ற இலக்கண விதிகளுடன் கொண்டு வருவது மொழியாக்கம் ஆகும்.
எந்தெந்தத் துறைகளில் வாய்ப்புகள்: மொழிபெயர்ப்பாளருக்கு இன்று பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளும் சுயதொழில் வாய்ப்புகளும் உள்ளன. குறிப்பாக தமிழ்-ஆங்கிலம், தமிழ்-அரபி, அரபி-தமிழ் போன்ற மொழித்திறன் உள்ளவர்களுக்குச் சிறப்பான வாய்ப்புகள் இருக்கின்றன. இலக்கியத் துறையின்கீழ் வருகிற புதினங்கள் (நாவல்கள்), சிறுகதைகள், கவிதைகள், வாழ்க்கை வரலாறுகள், வரலாற்று நூல்கள் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்கலாம்.
பதிப்பகங்கள் மற்றும் நூல் வெளியீட்டுத் துறை, செய்தித்தாள்கள், இதழ்கள், தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட ஊடகத்துறை, திரைப்படம்-பொழுதுபோக்குத் துறையின்கீழ் வருகிற திரைப்பட வசன மொழிபெயர்ப்பு, ஆவணப்பட மொழிபெயர்ப்பு, இணையத் தொடர்களுக்கான மொழிபெயர்ப்பு, கல்வித் துறையின்கீழ் வருகிற பாடநூல்கள் மொழிபெயர்ப்பு, ஆய்வுக் கட்டுரைகள், மின்னணுக் கற்றல் பாடங்கள், பயிற்சிக் கையேடுகள் உள்ளிட்டவை, சட்டத் துறையின்கீழ் வருகிற ஒப்பந்தங்கள், சட்ட ஆவணங்கள், நீதிமன்றத் தொடர்புடைய ஆவணங்கள், அரசு அறிவிப்புகள், நிறுவனக் கொள்கை ஆவணங்கள் உள்ளிட்டவை, மருத்துவத் துறையின்கீழ் வருகிற மருத்துவ அறிக்கைகள், நோயாளிகளுக்கான தகவல் நூல்கள், மருந்து வழிகாட்டிகள், மருத்துவ ஆய்வுக் கட்டுரைகள், சுகாதார விழிப்புணர்வு மடக்கோலைகள் உள்ளிட்ட ஏராளமான துறைகளில் மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுகின்றனர்.
குறிப்பாக அரபி-தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் மற்றும் பண்பாட்டுத் துறையில் நல்ல வாய்ப்புகள் உள்ளன. திருக்குர்ஆன் விளக்க நூல்கள், ஹதீஸ் நூல்கள், இஸ்லாமிய வரலாற்று நூல்கள், மார்க்கச் சட்ட நூல்கள். மார்க்கக் கட்டுரைகள், சொற்பொழிவுகளின் மொழிபெயர்ப்பு, அகராதிகள் என நிறைய உள்ளன. குறிப்பாகப் பள்ளிவாசல்களில் இமாம்களாகப் பணியாற்றுவோர் இத்திறன்மூலம் தம் இருப்பிடத்திலிருந்தே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தம் பொருளாதாரநிலையை உயர்த்திக்கொள்ளலாம் என்பதோடு, இது ஒரு சமுதாயச் சேவையாகவும் திகழும்.
யூடியூப் சேனல்கள்: காட்சி ஊடகம் வளர்ந்து வரும் இக்காலக் கட்டத்தில், யூடியூபில் பல்வேறு காணொலிக் காட்சிகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அவற்றுள் பொதுப்பயன்பாட்டு உரிமை வழங்கப்பட்டுள்ள (சிசி) காணொலிகளும் உள்ளன. அவற்றை மொழிபெயர்த்து-அதாவது சப்டைட்டில் இட்டு வெளியிடலாம். அரபியிலும் ஆங்கிலத்திலும் பயனுள்ள பல்வேறு காணொலிகள் வெளியிடப்படுகின்றன. அவற்றை மொழிபெயர்க்க வேண்டிய தேவை உள்ளது.
மொழிபெயர்ப்பு நிறுவனங்கள்: மொழிபெயர்ப்புச் செய்வதற்கென்றே பல்வேறு நிறுவனங்கள் பெரும் பெரு நகரங்களில் செயல்பட்டுவருகின்றன. அந்நிறுவனங்கள் அயல்நாடுகளிலிருந்து திட்டப்பணிகளைப் பெற்று, இங்குள்ள மொழிபெயர்ப்பாளர்களிடம் கொடுத்து, மொழிபெயர்ப்புச் செய்து ஒப்படைக்கின்றன. இதுபோன்ற நிறுவனங்களுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுகின்றனர்.
இஸ்லாமிய மொழிபெயர்ப்பு நிறுவனங்கள்: இஸ்லாமிய மூலாதார நூல்களை மொழிபெயர்ப்பதற்காகத் தமிழ்நாட்டில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட நிறுவனம் ரஹ்மத் பதிப்பகம் ஆகும். இது புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸாயீ, இப்னுமாஜா ஆகிய அறுபெரும் நபிமொழித் தொகுப்பு நூல்களையும், உலகப் புகழ்பெற்ற திருக்குர்ஆன் விரிவுரையான தஃப்சீர் இப்னு கஸீரையும் (பத்துப் பாகங்கள்) வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பார்த்து, தாமும் நன்மையைப் பெற வேண்டுமென்ற நன்னோக்கத்தில் பல்வேறு நிறுவனங்கள் உருவாகின. அவையும் தம் பங்கிற்கு இஸ்லாமிய நூல்களை வெளியிடத் தொடங்கின. ஆயிஷா பதிப்பகத்தின் மூலம் அல்பிதாயா வந்நிஹாயா எனும் வரலாற்று நூல் தமிழில் வெளிவந்தது. ஆலிம் பப்ளிகேஷன்ஸ் முஸ்னது அஹ்மத் நூலைத் தமிழில் வெளியிட்டு வருகிறது. கலாம் பதிப்பகம் ஜாமிஉஸ் ஸுன்னா எனும் நபிமொழித் தொகுப்பு நூலை வெளியிட்டது. அப்துல்லாஹ் பப்ளிகேஷன்ஸ் மஆலிமுஸ் ஸுன்னா எனும் நபிமொழித் தொகுப்பு நூலை வெளியிட்டு வருகிறது. ஒரு முஸ்லிம் இவற்றைப் படிக்கத் தொடங்கினால் தம் வாழ்நாள் முழுவதும் படித்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு நூல்களை இப்பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன.
மிக வேகமாக வளர்ந்து வரும் மொழிபெயர்ப்புத் துறை, தலைசிறந்த முஸ்லிம் மொழிபெயர்ப்பாளர்கள் இன்றித் தேங்கி நிற்கிறது. வேலைவாய்ப்பு விசாலமாக இருந்தும், இத்துறையில் ஆர்வம் செலுத்துவோர் மிகக் குறைவாகவே உள்ளனர். எனவே “எதிர்காலத்தில் முஸ்லிம் மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறையை நீக்க, அரபுக் கல்லூரிகள் மொழிபெயர்ப்புக்கென்றே தனித் துறையை ஏற்படுத்தி, அதில் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்து மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்க வேண்டும்” என்று பேராசிரியரும் தலைமை மொழிபெயர்ப்பாளருமான மௌலவி அ. முஹம்மது கான் பாகவி கூறுகிறார். அதையே நானும் வழிமொழிகிறேன். மொழிபெயர்ப்புத் துறை வளர்ந்து வரும் இக்காலத்தில் அரபுக் கல்லூரிகள் அதைச் செய்வது காலத்தின் கட்டாயமாகும்.
=========================





.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)




