Saturday, April 10, 2021
பலதரப்பட்ட நோன்புகள்
Wednesday, March 24, 2021
பெரிதாக ஆசைப்படு
Saturday, March 13, 2021
கடன் வாங்காதீர்
Monday, February 22, 2021
மனைவியோடு காதல் செய்வீர்!
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
பிஎச்.டி.
பருவமடைந்த ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் சந்திக்கின்றபோது
இருவரின் மனங்களிலும் பாலுணர்வு தூண்டப்படுகிறது. காந்தம் இரும்பை ஈர்ப்பதைப்போல்
ஒருவரையொருவர் ஈர்த்துக்கொள்கின்றனர். எனவேதான் இஸ்லாம் தேவையற்ற பார்வைக்குத் தடைவிதிக்கிறது.
ஓர் இளைஞன் ஏதோ ஓர் இளைஞியை வழியில் எதேச்சையாகப் பார்ப்பதைத் தவறு எனச் சொல்லவில்லை.
மீண்டும் அவளைப் பார்ப்பதையே தவறு என்கிறது. மீண்டும் மீண்டும் பார்ப்பதுதான் அவ்விருவருக்கிடையே
தவறான உறவு ஏற்பட வழிவகுக்கிறது. எனவேதான் இஸ்லாம் அதை முளையிலேயே கிள்ளிவிடுகிறது.
பருவப்பெண்ணுக்கும் ஆணுக்கும் மனதில் காதல் அரும்புகிறது.
அதன்பின் மனம் ஒருவரையொருவர் விரும்புகிறது. நம் நாட்டைப் பொருத்த வரை பயில்வது முதல்
பணியாற்றுவது வரை ஆண்-பெண் இணைந்தே செய்துவருகின்றனர். ஒழுக்கத்தோடு இருப்போர் ஒழுக்கமாக
இருந்தாலும் கட்டுப்பாடுகளை மீறித் தவறுகள் அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கின்றன.
அதனால்தான் இஸ்லாமிய மார்க்கம் நிரந்தரமாகவே ஒரு தடையைப் போட்டுவிடுகிறது. அதாவது
அந்நியப் பெண்ணை அந்நிய ஆண் பார்க்கக்கூடாது என்றும் அந்நியப் பெண் அந்நிய ஆணைச் சந்திக்கக்கூடாது
என்றும் தடைபோட்டுவிடுகிறது. அதனால் “உன்மீது நான் காதல் கொண்டுள்ளேன்” என்று கடிதம்
நீட்டவோ, காதலை முன்னுரைக்கவோ எந்த
வாய்ப்பும் கொடுப்பதில்லை. இத்தகைய இஸ்லாமியச் சட்டத்தால் பெண்கள் தம் பணிகளைப் பாதுகாப்பான
முறையில் மேற்கொள்ள இயலுகிறது.
‘காதலர் தினம்' என்று இன்றைய இளைஞர்-இளைஞிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக அறியப்பட்டு வருகிறது.
இது உலக இளைஞர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதை இந்த அளவிற்கு முக்கியத்துவப்படுத்தியதில்
ஊடகங்களின் பங்களிப்பு அதிகம். பெரு வணிகர்களுக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடத்துவோருக்கும்
வேண்டுமானால் இது இலாபமாக இருக்கலாம். வேறு யாருக்கும் இதில் இலாபமோ பயனோ கிடையாது.
மாறாக இளைஞர்களும் இளைஞிகளும் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். தனக்கொரு பாய்ஃபிரண்ட்
இல்லையே என்று ஏங்கும் இளைஞிகளும், தனக்கொரு கேர்ள்ஃபிரண்ட் இல்லையே என இளைஞர்களும்
உள்ளனர். இதுவெல்லாம் இன்றைய ஊடகங்களின் விளைவுகள் எனலாம்.
கடந்த காலத் திரைப்படங்கள் பொழுதுபோக்குகளாக இருந்தாலும்
அதில் சில நல்ல அறிவுரைகளையும் இலக்கியங்களையும் பண்பாடுகளையும் போதிக்க முற்பட்டார்கள்.
ஆனால் இன்றைய திரைப்படங்கள் முற்றிலும் சீர்கேடானவை. வக்கிரம், வன்மம், கவர்ச்சி, பாலியல் புணர்ச்சி,
மது நுகர்ச்சி, போதை நுகர்ச்சி, புகைப் பழக்கம் உள்ளிட்ட
தீய பழக்கங்களையே போதிக்கின்றன. இளைய தலைமுறையினர்
உள்ளங்களில் தவறான சிந்தனைகளைத் திணிக்கின்றன.
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?
கையோடு கைசேர்த்துக் கொள்ளலாமா? என்ற பாடல் 35 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது.
அதாவது ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் கைகோர்த்துக்கொள்ள வேண்டுமெனில் கல்யாணம்-திருமணம்
செய்து கொண்டுதான் அதைச் செய்ய வேண்டும். அதற்குமுன் அது கூடாது. எனவே திருமண நாளை
முடிவு செய்யுமாறு பெற்றோரிடம் சொல்லலாமா என்று தலைவனும் தலைவியும் பேசிக்கொள்வதாக
அமைந்துள்ளது இப்பாடல். இது கடந்த காலப் பாடல்களுள் ஒன்று.
ஆனால் காலம் செல்லச் செல்ல இளைஞர்களின் மனநிலையும் மாறியது.
அதற்கேற்பக் கவிஞரின் மனநிலையும் மாறியது.
கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா-இல்ல
ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா
தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா-இல்ல
புள்ளகுட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா? என்று ஒரு கவிஞர் எழுதியுள்ளார்.
பெற்றோரின் சம்மதமின்றித் திருமணம் செய்துகொண்டு ஓடிப்போய்விடலாமா? அல்லது தம் ஊரைவிட்டு எங்கேனும்
ஓடிப்போய்த் திருமணம் செய்துகொள்ளலாமா? என்று இன்றைய இளைஞர்கள்-இளைஞிகளின் மனோநிலையையும் அவசரத்தையும் பெற்றோருக்குக்
கட்டுப்படாமையையும் படம் பிடித்துக் காட்டுகிறது இப்பாடல். அதையும் தாண்டி,
தாலி எனும் திருமணச் சடங்கை முடித்துவிட்டு, பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளலாமா? அல்லது பிள்ளைகளையெல்லாம் பெற்றுக்கொண்டு
பிறகு தாலி எனும் திருமணச் சடங்கை வைத்துக் கொள்ளலாமா? என்று ஒரு பெண் கேட்பதாக அமைந்துள்ள பாடல், இன்றைய பெண்களின் அவசரப்புத்தியைப் பிரதிபலிக்கிறது.
இன்னும் ஒரு படி மேலே சென்று இன்றைய யுவன்-யுவதிகளின்
மனோநிலையைக் கவிஞர் இவ்வாறு எழுதியுள்ளார்:
டாடி மம்மி வீட்டிலில்லை
தடைபோட யாருமில்லை
விளையாடலாமா உள்ளே
பின்லேடா? - என்று ஓர் ஆணைப் பார்த்து
பெண் கேட்பதாக அமைந்துள்ள பாடல், முதலில் ஆண்-பெண் இருவரும் இணைந்து வாழ்க்கையை விளையாடி முடித்து விடுவதிலேயே குறியாக
இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளது. நம் விளையாட்டிற்குத் தடைபோட தாயோ
தந்தையோ வீட்டில் இல்லை. உள்ளேபோய் விளையாட்டைத் தொடங்கலாம் வா என்று ஒரு பெண் அழைக்கிறாள்.
இத்தகைய சிந்தனைப் போக்குதான் தற்காலத்தில் ஆங்காங்கே காணப்படுகிறது.
“ஓர் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் ஒத்த மனநிலையில்
இணைந்து வாழ்ந்தால் அது தவறில்லை” என்று உச்ச நீதிமன்றமும் இன்றைய இளைஞர்கள்-இளைஞிகளின்
மனோநிலைக்கேற்பச் சட்டங்களை வகுத்துள்ளது. இது காலத்தின் கோலம் என்றும் கலிகாலத்தின்
உச்சம் என்றும் அறிஞர்கள் பலர் குறிப்பிடுகின்றார்கள்.
பெண்ணிடத்தில் இன்பம் உள்ளது. அதை அடைந்துகொள்வதற்கான
வழிமுறையை எல்லாச் சமயங்களும் வகுத்துள்ளன. இஸ்லாமிய மார்க்கம் மிக எளிதாக அதை நடைமுறைப்படுத்தி
வருகிறது. அந்த வகையில் ஒரு பெண்ணை, அவளுடைய பெற்றோரின் சம்மதத்துடன் உரிய முறையில் மணக்கொடை கொடுத்து, மனைவியாக்கிக்கொண்டு பின்னர்
அவளைக் காதலிக்க வேண்டியதுதான். மனைவியைக்
காதலிப்பதுதான் உண்மையான காதல். அதையே இஸ்லாமிய மார்க்கம் ஊக்கப்படுத்துகிறது.
"இவ்வுலகம் (முழுவதும்)
பயனளிக்கும் இன்பப் பொருள்களே; பயனளிக்கும் இவ்வுலக இன்பங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே ஆவாள்''
என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 2911) எல்லா இன்பங்களையும் தன்னகத்தே வைத்திருப்பவள் பெண் என்பதையும்
அவளைவிடப் பேரின்பம் தரும் எப்பொருளும் புவியில் இல்லை என்பதையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் உள்ளூர உணர்த்துவதை நாம் காணலாம்.
இதே கருத்தை வலியுறுத்துமுகமாக தமிழ்ப்புலவர் வள்ளுவர்
இவ்வாறு கூறியுள்ளார்:
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்கொடி கண்ணே உள (1101) - விழியில் பார்த்து, செவியில் கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என ஐம்பொறிகளாலும்
அனுபவிக்கும்படியான இன்பம்,
ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு என்று பேராசிரியர் சாலமன்
பாப்பையா உரை எழுதியுள்ளார். புணர்ச்சி மகிழ்தல் எனும் இந்த அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள
பத்துக் குறட்பாக்களும் மனைவியிடம் கணவன் பெறுகின்ற ஒவ்வொரு சுகத்தை எடுத்துரைக்கின்றன.
ஆக கணவன்-மனைவி இல்லறத்தில் எவ்வாறு நெருக்கமாக வாழ வேண்டும் என்பதற்கான வழிகாட்டலும்
நெறிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. ஆதலால் இன்பம் அனுபவித்தல் என்பது திருமணத்திற்குப்பின்
தன் மனைவியோடுதான் என்பதை வள்ளுவர் போதிக்கிறார். திருமணத்திற்கு முன்பே வாழத் துடிக்கும்
இன்றைய இளைய தலைமுறையினர்க்குப் பாடம் கற்பிக்கிறார்.
அதாவது இதை இன்னும் சற்று விரிவாகச் சொல்ல வேண்டுமெனில், பெண்ணைக் காண்பதும் சுகம்.
அவள் பேச்சைக் கேட்பதும் சுகம். அப்படியிருக்கும்போது மனைவியாக ஆக்காமல் அந்நியப்
பெண்ணாகவே வைத்துக்கொண்டு எப்படி இந்தச் சுகங்களை அனுபவிப்பது தகும்?
எனவேதான் இஸ்லாமிய மார்க்கம் அந்நியப் பெண்ணைப் பார்ப்பதையும் அந்நியப் பெண்ணிடம்
பேசுவதையும் தடை செய்கிறது. அதாவது திருமணம்
செய்யாமல் காதலிப்பதைத் தடைசெய்கிறது.
"ஒருவருக்கொருவர் அன்புகொள்ளுதல் திருமணத்தைப் போன்று
(வேறொன்றில்) காணப்படுவதில்லை'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா: 1837) பருவப் பெண்ணை மணந்துகொண்டவன் தன் மனைவியைக் காதலிப்பதும்
அவள் தன் கணவனைக் காதலிப்பதும் இனிய தம்பதியருக்கு அழகாகும். அவள் தன்னை முழுமையாகத்
தன் கணவனிடம் ஒப்படைப்பதும் அவன் தன்னை முழுமையாகத் தன் மனைவியிடம் ஒப்படைப்பதும் மனமொப்பி
மணந்துகொண்ட தம்பதியருக்கே சாத்தியம். இத்தகைய அன்பு கணவன்-மனைவியரிடையே தவிர வேறெங்கும்
ஊற்றெடுக்காது. தம்பதியர் இருவரிடையே மட்டுமே இத்தகைய அன்பைக் காண முடியும் என்பதை
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
நன்னெறியும் நற்பண்புகளும் கொண்ட ஒரு மனைவி தன் கணவனின்
முகக்குறிப்பை அறிந்து அவனது தேவையை நிறைவேற்றுவாள்; அவன் இட்ட கட்டளைக்குப் பணிந்து நடப்பாள்; கணவனிடம் அன்பாகப் பேசுவாள்; தன் வசீகரப் பேச்சாலும் அன்பாலும் அவனை ஈர்ப்பாள்; கணவனிடம் நெருக்கமாகவும் அணுக்கமாகவும் இருப்பாள்; தொட்டுத் தொட்டுப் பேசுவாள். ஆக எல்லா வகையான இன்பங்களையும் சுகங்களையும் கொடுப்பவள்தான்
ஸாலிஹான-நல்ல பெண்மணி.
கணவன்-மனைவி என்றாலே சண்டைதான் நம் நினைவுக்கு வரும்.
அத்தகைய கருத்தோட்டத்தை மக்கள் மனங்களில் விதைத்துள்ளன இன்றைய ஊடகங்கள். காதலைக் காமமாகவும்
அசிங்கமாகவும் சித்திரித்துள்ளன நவீனத் திரைப்படங்கள்.
ஆனால் எல்லா வகையான அன்பும் கணவன்-மனைவிக்கிடையே மட்டுமே இருக்க முடியும். காதலர்களுக்கென
ஒரு நாளைக் குறிப்பிட்டு,
அந்நாளில் காதலர்கள் தம் காதலைத் தத்தம் காதலியிடம் சொல்லும் நாளே காதலர் தினமாகக்
கொண்டாடுகின்றார்கள். ஆனால் ஒவ்வோர் ஆணும் பெண்ணும் தன் காதலைச் சொல்ல வேண்டியது திருமணம் செய்துகொண்ட தத்தம்
ஜோடியிடம்தான். அதுதான் உண்மையான காதல். மணந்துகொண்ட அவளை அவனும் மணந்துகொண்ட அவனை
அவளும் மனதாரக் காதலிப்பதுதான் உண்மையிலேயே அங்கீகரிக்கப்பட்ட காதல் என்பதை இன்றைய
இளம் தலைமுறையினர் உணரட்டும்.
==================
Wednesday, February 10, 2021
காதல் ஓர் அருட்கொடை
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
மனிதர்கள் பல்வேறு உணர்வுகளுடன் படைக்கப்பட்டுள்ளனர். அந்த உணர்வுகள் சிலருக்கு
மிகையாகவும் சிலருக்குக் குறைவாகவும் வழங்கப்பட்டுள்ளன. பசி, தாகம், கோபம், காதல், காமம், பாசம், நேசம், அன்பு, மகிழ்ச்சி, கவலை முதலான உணர்வுகள்
மனித வாழ்க்கையில் அடிக்கடி வந்துபோகக் கூடியவை. அவற்றுள் சில, மனிதர்கள் சிலருக்கு மிகையாகவும்
வேறு சிலருக்குக் குறைவாகவும் வழங்கப்பட்டுள்ளன.
நம் உணர்வுகளுள் சிலவற்றை எல்லோரிடமும் தெரிவிக்கலாம்; எல்லா இடங்களிலும் வெளிப்படுத்தலாம்.
சிலவற்றைக் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வெளிப்படுத்த முடியும். சிலவற்றை யாரிடமும்
வெளிப்படுத்தாமல் இருப்பதே நலம். சில உணர்வுகளால் உந்தப்பட்ட மனிதன் அவற்றைக் கட்டுப்படுத்த
இயலாமல் தவிக்கிறான். அதே நேரத்தில் அந்த உணர்வு
மிகையாக வழங்கப்பட்டிருந்தால் அதுவே அவனது தீங்கிற்குக் காரணமாகிவிடுகின்றது. அவற்றுள்
கோபமும் காமமும் முன்னிலை வகிக்கின்றன. கோப உணர்வை நாம் குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே
வெளிப்படுத்த முடியும். மேலும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வெளிப்படுத்த முடியும்.
இல்லையேல் அது நமக்குத் தீங்காகவே முடியும்.
அதுபோல் காமம் என்பது ஓர் உணர்வு. அது மனைவியிடம் மட்டுமே வெளிப்படுத்த வேண்டிய
உணர்வு. அவளிடம் மட்டுமே அது வெளிப்படுத்தத் தகுதியானது. அதை வேறெங்கும் வெளிப்படுத்தக்கூடாது
என்று இஸ்லாம் தடைவிதிக்கிறது. இந்த உணர்வு நடுநிலையாக இருந்தால் பிரச்சனை இல்லை. மிகையாக
இருந்தால் அதைக் கட்டுப்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும். மிகக் குறைவாக இருந்தாலும்
பிரச்சனைதான். தன்னை நம்பி வருகிற பெண்ணைத் திருப்திப்படுத்த இயலாமல் போய்விடும்.
அது அவளுக்கு ஏமாற்றத்தையே கொடுக்கும். பெண்ணுக்கும் இது பொருந்தும். அவளுக்கு அது
மிகையாக இருந்தால் அதைக் கட்டுப்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும். கணவனிடம் மட்டுமே
அத்தேவையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். குறைவாக இருந்தால் தன் கணவன் திருப்தியுறும்
வகையில் ஒத்துழைக்க முடியாமல் போகலாம்.
காதல் என்ற அன்புணர்வு மனைவியிடம் காமமாக வெளிப்படுகிறது. காதல் என்ற உணர்வு பருவ
வயது தொடங்கியதும் அரும்பத் தொடங்கிவிடுகிறது. அந்த உணர்வு அரும்பத் தொடங்கும்போதே
எதிர்பாலினத்தை ஈர்க்கத் தொடங்கிவிடுகின்றது. அப்போது அரும்புகிற காதல் உணர்வைக்
கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டுமென இஸ்லாம் கூறுகிறது. திருமணம் வரை அந்த உணர்வைக்
கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். திருமணத்திற்குப்பின்
அந்த உணர்வைத் தன் மனைவியிடம் மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். அதுவரை அதைத் தன் கட்டுப்பாட்டிற்குள்
வைத்திருக்க வேண்டும். இது இஸ்லாம் காட்டும் வாழ்வியல் நெறிமுறை.
ஆனால் இன்றைய ஊடகங்கள் காதல் உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கிற இளைஞர்களையும்
இளைஞிகளையும் உசுப்பேற்றி,
அனுமதிக்கப்பட்ட காலம் கனிவதற்கு முன்னரே அதை வெளிப்படுத்தத் தூண்டுகின்றன. காதல்
உணர்வை வெளிப்படுத்தத் திருமணம் வரை காத்திருக்கத் தேவையில்லை. அது இருபாலருக்கும்
இயல்பாக வருகின்ற உணர்வுதான். இருபாலரும் இசைந்துவிட்டால் கூடி மகிழலாம்; ஒருவருக்கொருவர் காதலைப்
பரிமாறிக்கொண்டு ஒன்றாக வாழலாம்; தவறில்லை என்று உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது.
ஊடகங்களின் மாயப் பேச்சை மண்டைக்குள் பதிவுசெய்துகொண்ட இன்றைய இளைஞர்களும் இளைஞிகளும் ஒருவருக்கொருவர் காதல் வயப்படுகின்றனர்; நெருங்கிப் பழகுகின்றனர்; கூடி வாழவும் செய்கின்றனர்.
பெற்றோரின் சம்மதமோ அனுமதியோ தேவையில்லை எனக் கருதுகின்றனர். பிடித்திருந்தால் தொடர்கின்றனர்; இல்லையேல் உனக்கும் எனக்கும்
ஒத்துவராது எனக் கூறிப் பிரிந்துவிடுகின்றனர். பின்னர் இருவரும் தமக்குத் தோதுவான
வேறு துணையைத் தேடிக் கண்டுபிடிப்பதில் ஈடுபடுகின்றனர்.
இளைஞிகள் சிலர் திருமணத்திற்கு முன்னரே காதல் உணர்வுகளுக்கு ஆட்பட்டு, தகாத இளைஞனோடு நெருங்கிப்
பழகி, கூடி வாழ்ந்துவிட்டு, வயிற்றில் கருவைச் சுமந்துகொண்டு, அந்த இளைஞனால் கைவிடப்பட்டு,
குழந்தையோடு அலைகிறாள். அல்லது அக்குழந்தையைப் பெற்றெடுக்காமல் கருவிலேயே சிதைத்துவிடுகிறாள். இந்தக் காதல் உணர்வு சாதி, மதம், இனம் பார்த்து வருவதில்லை.
இந்த உணர்வு எல்லாச் சமயத்தவர்க்கும் பொதுவானது. எனவே இந்த உணர்வைக் கட்டுப்படுத்த
முடியாமல், வெளிப்படுத்தும் நேரமும்
காலமும் கனிந்து வருவதற்குமுன்னரே அவசரப்பட்டு வெளிப்படுத்த முனைவதால் நிறையப் பேர்
பாதிக்கப்படுகின்றனர்.
திருமணத்திற்குப்பின் வெளிப்படுத்த வேண்டிய காதலுணர்வைத் திருமணத்திற்குமுன்னரே
வெளிப்படுத்தி வாழ்ந்தும் விடுகின்றனர். பிறகுதான் திருமணம் நடைபெறுகிறது. அல்லது அவ்விருவரிடையே
மனமாற்றம் ஏற்பட்டு, அவன் வேறொரு பெண்ணையும், அவள் வேறோர் ஆணையும் மணந்துகொண்டு
வாழத் தொடங்குகின்றனர். இதுவே இன்றைய நிலவரம்.
இத்தகைய காதலை இஸ்லாம் விரும்பவில்லை. இதை முற்றிலும் தடைசெய்கிறது.
அதேநேரத்தில் ஓர் இளைஞன் ஓர் இளைஞியைப் பார்த்து, அவளால் ஈர்க்கப்பட்டானென்றால் அந்தத் தகவலைத் தன் பெற்றோரிடம் தெரிவித்து, அவனுடைய பெற்றோர் அப்பெண்ணின்
பெற்றோரிடம் சென்று கூறி, அவர்கள்தாம் அவ்விருவருக்கும் இடையே திருமண ஒப்பந்தம் பேச வேண்டும். அப்பெண்ணின்
பெற்றோர் விரும்பினால் அந்த இளைஞனுக்குத் தம் மகளை மணமுடித்துக்கொடுக்கலாம்; இல்லையேல் மறுத்துவிடலாம்.
மாறாக அவனாகவே அவளைப் பின்தொடர்ந்து செல்வதற்கோ, கடிதம் கொடுப்பதற்கோ,
தன் காதலை வெளிப்படுத்துவதற்கோ அனுமதியில்லை.
ஒருவன் வந்து ஒரு பெண்ணிடம் காதலைக் கூறினாலும் அதைத் தான் ஏற்றுக்கொள்வதாக அப்பெண்
கூற அவளுக்கு அனுமதியில்லை. இருவரும் தத்தம் பெற்றோரிடம்தான் அக்காதல் உணர்வை எடுத்துச்
சொல்ல வேண்டும். தாமே சுயமாக முடிவெடுக்கக் கூடாது. ஒரு பெண் தானாகவே ஒருவனின் காதலை
ஏற்றுக்கொள்ள அனுமதியில்லை.
“எந்தப் பெண் தன் பொறுப்பாளரின்
அனுமதியின்றித் திருமணம் செய்துகொண்டாளோ அவளுடைய திருமணம் செல்லாது” என்று அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: அபூதாவூத்: 2083)
மேலும் தம் பிள்ளைகள் காதல் உணர்வுகள் அரும்பப்பெற்றவர்களாகவும் பருவ வயதை அடைந்தவர்களாகவும்
ஆகிவிட்டால் அவர்களுக்கு உரிய பருவத்தில் உரிய துணையைத் தேடிப்பிடித்துத் திருமணம்
செய்துவைப்பது பெற்றோரின் கடமையாகும். பருவ வயதை அடைந்தும் அவர்களுக்குத் திருமணம்
செய்து வைக்காததால் அப்பிள்ளைகள் தவறுசெய்தால் அக்குற்றத்திற்குப் பெற்றோரும் ஒரு
வகையில் காரணமாவர்.
சுஃப்யான் அஸ்ஸவ்ரீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்: பெற்றோர் தம் பிள்ளைக்குச் செய்ய வேண்டிய
கடமை, அப்பிள்ளைக்கு நல்ல பெயரைச் சூட்டுவது, அவனுக்கு நல்லொழுக்கத்தைப் போதிப்பது, அவன் பருவ வயதை அடைந்தால் அவனுக்குத் திருமணம் செய்து வைப்பது ஆகியவை ஆகும். (நூல்:
அல்பிர்ரு வஸ்ஸிலா: 155)
சரி, இந்தக் காதலுணர்வு திருமணத்தோடு
கட்டுப்பட்டுவிடுகிறதா? காதல் உணர்வுக்கான வடிகால்
கிடைத்துவிட்டதால் பெரும்பாலானோர் தமக்குரிய எல்லைக்குள் இருந்துகொள்கின்றனர். உரிய
இடத்தில் மட்டும் தம் உணர்வை வெளிப்படுத்த வேண்டுமென்ற தெளிவைப்பெற்றுவிடுகின்றனர்.
ஆனால் சிலர் திருமணத்திற்குப் பின்னும் குறிப்பிட்ட எல்லைக்குள் நிற்காமல் வேலி தாண்ட
முயல்கின்றனர். ஆண்கள் தம் மனைவியைத் தாண்டி பிற மங்கையர்மீது மோகம் கொள்வதும், பெண்கள் தம் கணவரைத் தாண்டி
பிற ஆடவர்கள்மீது மோகம் கொள்வதும் நிகழ்கிறது. அத்தகைய தருணத்தில் தத்தம் உணர்வுகளைக்
கட்டுப்படுத்திக்கொண்டு படைத்த இறைவனின் சட்டத்திற்குக் கட்டுப்படுவோரே ஈருலகிலும்
வெற்றி பெற முடியும்.
இன்றைய ஊடகங்கள், பாலுணர்வை யாரிடமும் வெளிப்படுத்த
எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளன. திருமணத்திற்குமுன் தவறான உறவுகொண்டால்
சமுதாயத்திற்குத் தெரிந்துவிடும் வாய்ப்புண்டு. ஆனால் திருமணத்திற்குப்பின் தவறான உறவுகொண்டால்
எந்தச் சந்தேகமும் ஏற்படாது என்ற சூழ்நிலை உள்ளது. ஆகவே திருமணத்திற்குப்பின் தகாத
உறவு கொள்ளும் துணிவு பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது என ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
ஆக, காதலுணர்வு மிகைத்து உந்தும்போது
அதைக் கட்டுப்படுத்தத் தெரியாதவர்கள் திருமணத்திற்குப்பின்னும் தவறு செய்கிறார்கள்.
கட்டுப்படுத்தத் தெரிந்தவர்கள் அதற்குரிய இடத்தில் மட்டும் அதை வெளிப்படுத்தி, அதற்கான நன்மையை அடைந்துகொள்கின்றனர்.
திருமணத்திற்குப்பின்னர்தான் ஆணும் பெண்ணும் தத்தம் காதலுணர்வை தமக்கிடையே பரிமாறிக்கொள்ள
வேண்டும் என்று சொன்னோம். ஆனால் ஆண்-பெண் இடையே ஏற்படுகிற அன்பும் காதலும் இறைவனால் வழங்கப்படுகிற ஓர் அருட்கொடை ஆகும். இவ்வுணர்வு
எல்லாத் தம்பதியருக்கும் வாய்க்காது. இறைவன் யாருக்கு அருள்புரிந்துள்ளானோ அத்தம்பதியருக்கு
மட்டுமே வாய்க்கும். காசு,
பணம் கொடுத்து அன்பையும் காதலையும் இதயங்களுக்குள் உண்டுபண்ண முடியாது. தற்காலிகமாக
வேண்டுமானால் உண்டாக்கலாம். வாழ்நாள் முழுவதும் அவ்வுணர்வைப் பணத்தால் உண்டாக்க முடியாது.
இறைவனின் கருணையால் இயல்பாகவே மனைவிமீது கணவனுக்கும் கணவன்மீது மனைவிக்கும் ஏற்பட வேண்டும்.
அவ்வாறு ஏற்பட்டால் அது இறைவனின் அருட்கொடையே ஆகும்.
இது குறித்து அன்பாளன் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான்: அந்த நம்பிக்கையாளர்களுடைய
உள்ளங்களில் (இஸ்லாத்தின் மூலம்) அன்பை ஊட்டி (சிதறிக்கிடந்த அவர்களை) ஒன்று சேர்த்தான்.
பூமியிலுள்ள அனைத்தையும் நீங்கள் செலவு செய்தபோதிலும் அவர்களுடைய உள்ளங்களில் அன்பையூட்ட
உங்களால் முடியாது... (8: 63)
திருமணத்திற்குப்பின் ஒரு பெண்மீது ஆணுக்கும் ஓர் ஆண்மீது பெண்ணுக்கும் அன்பை ஏற்படுத்துவதும்
காதலுணர்வைக் கிளர்ந்தெழச் செய்வதும் அல்லாஹ்வின் கையில் உள்ளது. அவனது கருணைப் பார்வை
அத்தம்பதியர்மீது பட வேண்டும். அதற்காகத்தான் திருமணத்திற்குப்பின் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
யாரேனும் நல்லவர் ஒருவருடைய பிரார்த்தனையின் பொருட்டால் அத்தம்பதியரிடையே அன்புணர்வும்
காதலுணர்வும் மலர்ந்துவிட்டால் அத்தம்பதியர் இன்பத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ்வாங்கு
வாழ்வார்கள்.
அல்லாஹ்வின் அருட்கொடையான அந்தக் காதலுணர்வு தம்பதியரிடையே இல்லாதுபோய்விட்டால், ஓர் ஆண் தன் மனைவி விரும்பியதையெல்லாம்
வாங்கிக் கொடுத்தாலும் அவளுடைய உள்ளத்தில் இடம்பிடிக்க முடியாது. அதுபோல் ஒரு பெண், எவ்வளவுதான் நல்ல முறையில்
கணவனுக்காகச் சமைத்துப்போட்டாலும் அவனது உள்ளத்தில் இடம்பிடிக்க முடியாது. கணவன்மீது
மனைவியோ மனைவிமீது கணவனோ எவ்வித ஈர்ப்பையும் உண்டுபண்ணிவிட முடியாது. அது அல்லாஹ்வின்
கையிலுள்ளது. அதை அவன், தான் நாடியோருக்கே ஏற்படுத்துகிறான்.
காதலுணர்வு மட்டுமின்றி,
அன்பு, பாசம், நட்பு முதலான ஈரிதயங்கள்
தொடர்பான எந்த ஈர்ப்பையும் இறைவன், தான் நாடியோருக்கே கொடுக்கின்றான்.
பணம் கொடுத்து நட்பை வாங்க முடியாது; பணம் கொடுத்துப் பாசத்தை வாங்க முடியாது; அதுபோலவே பணம் கொடுத்துக் காதலை வாங்க முடியாது. அது இறைவனின் கருணையால் தானாகவே
முகிழ்க்க வேண்டும். அதனால்தான் இலட்சக்கணக்கில் செலவு செய்து நடத்தி வைக்கப்பட்ட திருமணம், தம்பதியரிடையே இதயங்கள்
ஒன்றாமல் சில வாரங்களில்,
சில மாதங்களில், சில ஆண்டுகளில் முறிந்துபோய்விடுகிறது.
சிலபல ஆண்டுகள் ஒரே கட்டிலில் படுத்துறங்கிய தம்பதியர்கூட, பின்னர் பிரிந்துவிடுகின்றனரே ஏன்? அத்தம்பதியரிடையே முகிழ்க்க வேண்டிய உல்ஃபத்
எனும் அன்பும் இணக்கமும் முகிழ்க்கவில்லை என்பதே காரணமாகும். எனவே ஈரிதயங்கள் ஒன்றுபடுகிற
அன்பையும் இணக்கத்தையும் பிணைப்பையும் அன்பாளன் அல்லாஹ் நமக்கும் நம் சந்ததிகளுக்கும்
அருள வேண்டுமென நாம் அவனிடமே பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இறைநம்பிக்கைகொண்ட இளைஞர்களே, இளைஞிகளே! ‘காதலர் தினம்’ எனும் கற்பு வேட்டையாடப்படும்
நாள் ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்படும் ஒரு நாள். அதில் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுவோருக்கு
எந்தத் தொடர்பும் இருக்கக்கூடாது. உங்களுடைய காதலுணர்வை உங்கள் பெற்றோரிடமே சொல்லுங்கள்.
அவர்கள் உங்களுக்குரிய தகுந்த துணையைத் தேடி, மணமுடித்து வைப்பார்கள். அது அவர்களின் தலையாயக் கடமையாகும். அதை அவர்கள் செவ்வனே
முடித்துவைக்கத் தயாராகவே இருக்கின்றார்கள் என்பதை உணருங்கள்.
***********************************