திங்கள், 10 ஆகஸ்ட், 2026

மாற்றப்பட்ட சட்டங்கள்

   

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம், சென்னை-28

 

இன்றையக் காலத்தில் நபிமொழிகள் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அதை வாங்கிப் படிப்போர் பலர், வெறுமனே மொழிபெயர்க்கப்பட்ட ஹதீஸ்களை வாசித்துவிட்டு, அதை அப்படியே செயல்படுத்த முனைகின்றனர். அவர்கள் அவ்வாறு செயல்படுவதற்கு முன், ஹதீஸ்துறையில் உள்ள நாசிக், மன்சூக் குறித்து அறிந்துகொள்வது அவசியமாகும். இல்லையேல் தவறாகச் செயல்பட்ட குற்றத்திற்கு ஆளாக நேரிடும். எனவே அவர்கள் புதிதாக ஒன்றைச் செயல்படுத்துமுன்னர் அது குறித்து ஆலிம்களிடம் கேட்டறிந்து செயல்பட வேண்டும்.    

 

திருக்குர்ஆனுக்குப் பிறகு, இஸ்லாமியச் சட்டவிதிகளின் (ஷரீஅத்) இரண்டாவது அடிப்படை ஆதாரமாக நபிவழி (ஸுன்னா) திகழ்கிறது. அது குர்ஆனின் சட்டங்களைத் தெளிவுபட விளக்கிச் சொல்கிறது; சுருக்கமாகக் கூறப்பட்டவற்றை விரிவாக எடுத்துரைக்கிறது; பொதுவான சட்டங்களைச் சிறப்பித்துக் காட்டுகிறது; முழுமையாகக் கூறப்பட்டவற்றை வரையறுக்கிறது.

 

நபிமொழிகளில் “நாசிக், மன்சூக்” (புதிய சட்டம், நீக்கப்பட்ட பழைய சட்டம்) பற்றிய கலையை அறிதல் கட்டாயமாகும். இது, பின்னர் கூறப்பட்ட செய்தியின் (ஹதீஸ்) மூலம் அதன் முந்தைய சட்டம் நீக்கப்பட்டுள்ளதா என்பதை ஆராயும் கலையாகும். இந்தக் கலையின் முக்கியத்துவம் என்னவெனில், ஹதீஸ்களுக்கிடையே வெளிப்படையாகத் தோன்றும் முரண்பாடுகளை நீக்குவது, இஸ்லாமியச் சட்டத்தின் படிப்படியான வளர்ச்சியைப் புரிந்துகொள்வது, மேலும் இறுதியாக நிலைபெற்ற ஷரீஅத் சட்டங்களை அறிந்து கொள்வது ஆகியனவாகும். எனவே, ஒரு ஃபகீஹ் (மார்க்கச் சட்ட அறிஞர்), முஹத்திஸ் (ஹதீஸ் அறிஞர்), முஃப்தி (மார்க்கத் தீர்ப்பு வழங்குபவர்) ஆகியோருக்கு இன்றியமையாத கலைகளுள் இதுவும் ஒன்றாகும் என அறிஞர்கள் கருதுகின்றனர்.

 

நாசிக், மன்சூக்: ‘நஸ்க்' என்ற அரபுச் சொல்லுக்கு, நீக்குதல், மாற்றுதல் அல்லது இடம்பெயர்த்தல் முதலான பொருள்கள் உள்ளன. அல்லாஹ் கூறுகிறான்: “நாம் எந்த வசனத்தை நீக்கினாலும் அல்லது அதை மறக்கச் செய்தாலும், அதைவிடச் சிறந்ததை அல்லது அதற்கு ஒப்பானதைக் கொண்டு வருகிறோம்.” (அல்குர்ஆன் 2: 106) பின்னர் கூறப்பட்ட ஓர் ஆதாரத்தின் மூலம், அதற்குமுன் இருந்த ஷரீஅத்தின் பழைய சட்டத்தை நீக்கக்கூடிய புதிய சட்டமே ‘நாசிக்’ எனப்படும். பின்னர் கூறப்பட்ட ஓர் ஆதாரத்தின் காரணமாக, இதுவரை செயல்படுத்தப்பட்டுவந்த நீக்கப்பட்ட பழைய சட்டமே ‘மன்சூக்’ என அழைக்கப்படுகிறது. ஹதீஸ்கலையில் இது தொடர்பாகக் கூறும்போது, பின்னர் வந்த ஹதீஸ் ‘நாசிக்’ (நீக்கும் ஹதீஸ்) என்றும், அதற்கு முன் இருந்து வந்த ஹதீஸ் ‘மன்சூக்’ (நீக்கப்பட்ட ஹதீஸ்) என்றும் அழைக்கப்படுகிறது.

 

இந்தக் கலையின் முக்கியத்துவம்: ஹதீஸ்களுக்கு இடையே வெளிப்படையாகத் தோன்றும் முரண்பாடுகளை நீக்குதல், ஷரீஅத்தின் இறுதியான சட்டத் தீர்ப்பை அறிதல், இஸ்லாமியச் சட்டம் படிப்படியாக அருளப்பட்ட முறையைப் புரிந்துகொள்ளுதல், நபிவழியை (ஸுன்னாவை)த் தவறாகப் புரிந்துகொள்வதிலிருந்து பாதுகாத்தல், சரியான சட்டத் தீர்ப்புகளைப் பெறுவதில் இஜ்திஹாத் செய்யும் அறிஞருக்கு உதவுதல், ஸுன்னாவைப் பற்றிச் சிலர் எழுப்பும் சந்தேகங்களுக்குத் தக்க பதிலளித்தல் முதலானவை இந்தக் கலையின் முக்கியத்துவங்கள் ஆகும்.

 

 

“நாசிக், மன்சூக் பற்றிய அறிவைப் பெறாமல் ஒருவர் மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) வழங்கக் கூடாது” என்று இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள்.  அலீ பின் அபீதாலிப் ரளியல்லாஹு அன்ஹு ஒரு நீதிபதியிடம், “நாசிக், மன்சூக் ஆகியவற்றை நீர் அறிந்திருக்கின்றீரா?” என்று  கேட்டார்கள். அவர், “இல்லை” என்று கூறினார். அதற்கு அலீ ரளியல்லாஹு அன்ஹு, “நீரும் அழிந்துவிட்டீர்; மற்றவர்களையும் அழிவுக்குள்ளாக்கிவிட்டீர்” என்று கூறினார்கள்.

 

மன்சூக் என்பதற்கான நிபந்தனைகள்: இரண்டு ஹதீஸ்களும் சான்றுமிக்கதாக (ஸஹீஹ் அல்லது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக) நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும். அவற்றுக்கிடையே உண்மையான முரண்பாடு இருக்க வேண்டும். இரண்டு ஹதீஸ்களுக்கும் இடையில் ‘ஒருமித்த கருத்தை’ (தத்பீக்) ஏற்படுத்த இயலாத நிலை இருக்க வேண்டும். எது முற்பட்டது, எது பிற்பட்டது என்பது தெளிவாக அறியப்பட்டிருக்க வேண்டும். ஆக மேற்கண்ட நிபந்தனைகள் உறுதியாக நிறைவேறிய பிறகே ஒரு ஹதீஸ் ‘மன்சூக்’ (நீக்கப்பட்ட பழைய சட்டம்) என்று கூற அனுமதிக்கப்படுகிறது.

 

ஒரு ஹதீஸ் குறிப்பிட்ட சட்டமாகவும், மற்றொன்று பொதுவான சட்டமாகவும், அல்லது ஒன்று பொதுவான (முத்லக்) சட்டமாகவும் மற்றொன்று வரையறுக்கப்பட்ட (முகய்யத்) சட்டமாகவும் இருக்கக் கூடாது. ஏனெனில், இத்தகைய நிலை நஸ்க் (நீக்குதல்) இல்லை; மாறாக இரண்டு ஆதாரங்களையும் ஒன்றிணைத்து விளங்கிக் கொள்வதற்கான (ம்உ) வழிமுறையாகும். இதனால்தான் அறிஞர்கள் கூறியுள்ளனர்: இரண்டு ஆதாரங்களுக்கும் இடையில் ‘ஒருமித்த கருத்தை’ ஏற்படுத்துவது (தத்பீக்) தர்ஜீஹ் - முன்னிலைப்படுத்துவதைவிடச் சிறந்தது; முன்னிலைப்படுத்துதல், நஸ்க் (நீக்குதல்) என்று தீர்ப்பளிப்பதைவிடச் சிறந்தது.

நஸ்கை எவ்வாறு அறிவது: பின்வரும் வழிகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் ஒரு சட்டம் நாசிக், மன்சூக் என்பதைக் கண்டறியலாம்:

 

1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நேரடியாக அறிவித்திருப்பது. சான்றாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “நான் உங்களுக்கு கப்ருகளை (அடக்கத்தலங்களை)த் தரிசிப்பதைத் தடை செய்திருந்தேன். இப்போது அவற்றைத் தரிசியுங்கள்; ஏனெனில் அவை மறுமையை நினைவூட்டுகின்றன” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்) இது, முந்தைய தடையைப் பின்னர் வந்த கட்டளை நீக்கியுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டும் வெளிப்படையான ஆதாரமாகும். இவ்விடத்தில் மற்றொரு ஹதீஸையும் சான்றாகக் காட்டுவது மக்கள் மத்தியில் உள்ள குழப்பத்தை நீக்கும். அதாவது பெண்கள் கப்ருகளைச் சந்திக்கச் செல்லலாமா என்ற வினாவிற்கு விடையாக அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்துள்ள செய்தி உள்ளது.

 

அப்துல்லாஹ் பின் அபீமுலைகா ரஹிமஹுல்லாஹ் அறிவித்துள்ளதாவது: ஒரு நாள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா மக்பரா (பொதுஅடக்கவிடம்) பகுதியிலிருந்து வந்தார்கள். அப்போது நான் அவரிடம், “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! எங்கிருந்து வருகிறீர்?” என்று வினவினேன். “என் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் ரளியல்லாஹு அன்ஹு உடைய மண்ணறைக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து வருகிறேன்” என்றார்கள். “(பெண்கள்) மண்ணறைக்குச் செல்வதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்திருக்கவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம், (தொடக்கத்தில்) தடுத்திருந்தார்கள்; பிறகு அவற்றைச் சந்திக்கச் செல்லுமாறு ஏவினார்கள்” என்று விடையளித்தார்கள். (பைஹகீ: 7207)

 

அதேநேரத்தில் பின்வரும் செய்தி பழைய சட்டம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதற்காகச் சண்டை போட்டுக்கொண்டோ வாதம் செய்துகொண்டோ இருக்கக் கூடாது. இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மண்ணறையைத் தரிசனம் (ஸியாரத்) செய்யும் பெண்களைச் சபித்தார்கள். (திர்மிதீ: 1056, இப்னுமாஜா:1576/ 1564)  இஸ்லாத்தின் தொடக்கக் காலத்தில், மக்கள் அறியாமைக் காலப் பழக்கவழக்கங்களுடன் மீண்டும் தொடர்பு கொள்ளக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக கப்ருகளைத் தரிசிப்பது தடைசெய்யப்பட்டது. பின்னர் இஸ்லாமிய நம்பிக்கை உறுதியாக நிலைபெற்றபோது, அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

 

2. நபித்தோழர்கள் நேரடியாக அறிவித்திருப்பது: சான்றாக, ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு கூறியுள்ளார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து இறுதியாக நிலைபெற்ற நடைமுறை, நெருப்பில் சமைக்கப்பட்ட உணவை உண்டதற்காக உளூச் செய்வதை விட்டுவிடுவதாகும்.” (அபூதாவூத், திர்மிதீ) அதாவது சமைத்த உணவைச் சாப்பிட்டால் அதற்காக உளூச் செய்யத் தேவையில்லை.

 

3. கால வரிசையை (வரலாற்றை) அறிதல்: இரண்டு ஹதீஸ்களில் எது முன்னர் கூறப்பட்டது, எது பின்னர் கூறப்பட்டது என்பதை வரலாற்று ஆதாரங்களின் மூலம் அறிந்துகொள்வதன் வழியாகவும் நஸ்க் (நீக்கம்) உறுதிப்படுத்தப்படுகிறது. 4. அறிஞர்களின் ஒருமித்த கருத்து (இஜ்மாஉ): இரண்டு ஹதீஸ்களில் ஒன்று மற்றொன்றை நீக்கிவிட்டதாக அறிஞர்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டால், அதுவும் நஸ்கை அறியும் ஒரு வழியாகும்.

 

நபியவர்கள்மூலமே சட்டங்கள் மாற்றப்பட்டதற்கு வேறு சில சான்றுகளையும் பார்க்கலாம். குர்பானி இறைச்சியை மூன்று நாள்களுக்கு மேல் சேமித்து வைத்தல் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: “குர்பானி இறைச்சியை மூன்று நாள்களுக்கு மேல் சேமித்து வைப்பதை நான் உங்களுக்குத் தடை செய்திருந்தேன்.” பின்னர் அவர்கள் கூறினார்கள்: “இப்போது நீங்கள் விரும்பிய அளவு சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்) நஸ்க் (நீக்கம்) ஏற்பட்ட காரணம், ஆரம்பத்தில் ஏழை, எளிய மக்கள் அதிகமாக இருந்ததால், அனைவருக்கும் இறைச்சி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் அந்தத் தேவை நீங்கியபோது, இறைச்சியைச் சேமித்து வைக்க அனுமதி வழங்கப்பட்டது.

 

மற்றொரு சான்று, குறிப்பிட்ட பாத்திரங்களில் பழங்களை ஊறவைத்தல் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: “தோல் பையைத் தவிர மற்ற பாத்திரங்களில் பழங்களை ஊறவைக்க வேண்டாம் என்று நான் தடை செய்திருந்தேன். இப்போது எந்தப் பாத்திரத்திலும் ஊறவைத்துக்கொள்ளுங்கள்; ஆனால் போதை தரும் எதையும் அருந்தாதீர்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்) எனவே, குறிப்பிட்ட சில பாத்திரங்களில் ஊறவைக்கக் கூடாது என்ற தடை நீக்கப்பட்டது. ஆனால் ‘போதை தரும் பானங்களை அருந்துதல்’ எனும் தடை நீக்கப்படவில்லை; அது நிலையான சட்டமாகவே உள்ளது.

மற்றொரு சான்று, தொடக்கத்தில் ஆஷூரா நோன்பு கட்டாயமாக இருந்தது. பின்னர் ரமளான் நோன்பு கட்டாயமாக்கப்பட்டபோது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: “விரும்புபவர் அதை நோற்கலாம்; விரும்பாதவர் அதை விட்டுவிடலாம்.” (புகாரீ, முஸ்லிம்) இதன் மூலம் ஆஷூரா நோன்பு கட்டாய நிலையிலிருந்து விரும்பத்தக்க (ஸுன்னத்தான) வழிபாடாக மாற்றப்பட்டது.

 

மற்றொரு சான்று, ஹதீஸ்களை எழுதுதல் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: “என்னிடமிருந்து (குர்ஆனைத் தவிர வேறு எதையும்) எழுதாதீர்கள். யார் குர்ஆனைத் தவிர வேறு எதையாவது என்னிடமிருந்து எழுதியிருந்தாரோ, அவர் அதை அழித்துவிடட்டும்.” (ஸஹீஹ் முஸ்லிம்) பின்னர், அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ் தன் தூதருக்கு மக்காவை வெற்றியளித்தபோது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்களிடையே எழுந்து அல்லாஹ்வைப் புகழ்ந்து உரையாற்றினார்கள்... அப்போது யமன் நாட்டைச் சேர்ந்த அபூஷாஹ் என்பவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! இதை எனக்காக எழுதித் தாருங்கள்” என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “அபூஷாஹுக்காக எழுதிக் கொடுங்கள்” என்று கூறினார்கள். (புகாரீ: 112, ஸஹீஹ் முஸ்லிம்: 1355) இந்த ஹதீஸ், தொடக்கத்தில் ஹதீஸ்களை எழுத வேண்டாம் என்ற தடை, பின்னர் அனுமதிக்கப்பட்டது என்பதற்கு அறிஞர்கள் எடுத்துக்காட்டும் முக்கிய ஆதாரங்களுள் ஒன்றாகும்.

 

மேலும், அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் ஹதீஸ்களை எழுதுவதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுமதி வழங்கினார்கள். பெரும்பாலான அறிஞர்களின் கருத்துப்படி, ஆரம்பத்தில் ஹதீஸ்களை எழுதத் தடை விதிக்கப்பட்டதற்குக் காரணம், ஹதீஸ்களும் குர்ஆனும் ஒன்றோடொன்று கலந்துவிடக்கூடும் என்ற அச்சமாகும். பின்னர் அந்த அச்சம் நீங்கியபோது, ஹதீஸ்களை எழுதுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. எனவே, ஆரம்பத் தடை பின்னர் வந்த அனுமதியால் நீக்கப்பட்டது.

 

மற்றொரு சான்று, ‘முத்ஆ (தற்காலிகத்) திருமணம்’ ஆகும். சில போர்களின்போது ஏற்பட்ட அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முத்ஆ திருமணத்திற்குத் தற்காலிகமாக அனுமதி வழங்கினார்கள். பின்னர் அவர்கள் கூறினார்கள்: "நான் உங்களுக்குப் பெண்களை முத்ஆ திருமணம் செய்ய அனுமதி வழங்கியிருந்தேன். ஆனால் அல்லாஹ் அதை மறுமை நாள் வரை நிரந்தரமாகத் தடைசெய்துவிட்டான்.” (ஸஹீஹ் முஸ்லிம்) எனவே, முத்ஆ திருமணம் நிரந்தரமாகத் தடைசெய்யப்பட்டதாக இஸ்லாமியச் சட்டம் நிலைபெற்றது.

 

எது நாசிக், எது மன்சூக்: பொதுவான சட்டத்தைச் சிறப்பித்துக் கூறுதல் (தக்ஸீஸ்), வரையறையற்ற சட்டத்தை வரையறுத்துக் கூறுதல் (தக்யீத்), சூழ்நிலைகளின் வேறுபாடு, சம்பந்தப்பட்ட நபர்களின் வேறுபாடு, காலம் மற்றும் இடத்தின் வேறுபாடு  முதலான காரணங்களுக்காக இரண்டு ஹதீஸ்களுக்கு இடையே காணப்படும் வேறுபாடு நஸ்க் (நீக்கப்பட்டது) என்பதைக் குறிக்காது. எனவே, இரண்டு ஹதீஸ்களையும் ஒன்றிணைத்து விளக்குவது (ஜம்உ) இயலாதபோதுதான் நஸ்க் என்று கூறப்பட வேண்டும். இதனால்தான் இமாம் ஷாஃபிஈ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: "இரண்டு ஹதீஸ்களையும் செயல்படுத்துவதற்கு ஏதேனும் வழி இருக்குமானால், அவற்றில் ஒன்றை விட்டுவிடுவது அனுமதிக்கப்படாது.”

 

அதற்கான சான்றுகள்: 1. நோன்பாளி முத்தமிடுதல்: (அ) அனுமதித்த ஹதீஸ்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோன்பு நோற்றிருந்தபோதும் மனைவியை முத்தமிடுவார்கள்; அணைத்துக் கொள்வார்கள். ஆனால், உங்களில் தமது உணர்ச்சியை மிக அதிகமாகக் கட்டுப்படுத்தக்கூடியவராக அவர்கள் இருந்தார்கள். (புகாரீ: 1927, முஸ்லிம்: 1106)

 

(ஆ) தடை செய்த ஹதீஸ்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: ஓர் இளைஞர் “நோன்பு நோற்றுள்ளவர் (தம் மனைவியை) முத்தமிடலாமா?” என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “கூடாது” என்றார்கள். பின்னர் ஒரு முதியவர் கேட்டபோது,  அனுமதி அளித்தார்கள். (அபூதாவூத்: 2387) இது சூழ்நிலை மற்றும் வினாத் தொடுப்பவரின் வேறுபாடு காரணமாகக் கூறப்பட்ட பதிலாகும். உணர்ச்சியைக் கட்டுப்படுத்தக்கூடிய முதியவருக்கு அனுமதி; இளைஞருக்குத் தடை.

 

2. பெற்றோருக்குக் கீழ்ப்படிதல்- ஜிஹாத்: ஒருவர் ஜிஹாதுக்குச் செல்ல அனுமதி கேட்டார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “உன் பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா?” என்று  கேட்டார்கள். அவர், “ஆம்” என்றார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “அப்படியானால், அவர்களுக்குச் சேவை செய்வதிலேயே நீ  ஜிஹாத் செய்” என்று கூறினார்கள். (புகாரீ: 3004; முஸ்லிம்: 2549) ஆனால், வேறு சிலருக்கு  ஜிஹாதில் கலந்து கொள்ள அனுமதி வழங்கினார்கள். ஆகவே இது வினாத் தொடுப்பவரின் குடும்பச் சூழ்நிலையைப் பொருத்து வழங்கப்பட்ட மாறுபட்ட தீர்ப்பாகும். எனவே இது நாசிக், மன்சூக் சட்டத்தில் வராது. இது போன்று பல்வேறு சான்றுகள் உள்ளன.

 

நாசிக், மன்சூக் அறிவைப் பெறுவதன் பயன்கள்: ஷரீஅத்தின் இறுதியான சட்டத்தை அறிந்துகொள்ள முடியும்; இஸ்லாமியச் சட்டத்தின் படிப்படியான வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும்; ஹதீஸ்களுக்கு இடையே தோன்றும் வெளிப்படையான முரண்பாடுகளை நீக்க முடியும்; சரியான சட்ட முடிவுகளைப் பெறும் திறன் (இஸ்தின்பாத்) மேம்படும்; ஃபத்வாக்கள் சரியானவையாக அமையும்; ஸுன்னாவைப் பற்றிய சந்தேகங்களுக்கு உரிய பதிலளிக்க முடியும்; இஸ்லாமிய ஷரீஅத்தின் துல்லியத் தன்மையின் மீது நம்பிக்கை அதிகரிக்கும்.

 

அறிஞர்களின் கருத்துகள்: இமாம் அஸ்-ஸுஹ்ரீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களில் நாசிக், எது, மன்சூக் எது என்பதை அறிந்துகொள்வதே ஃபிக்ஹ் அறிஞர்களுக்கு மிகவும் கடினமான செயலாக இருந்தது.” இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: “நாசிக், மன்சூக் பற்றிய அறிவு, ஹதீஸ் கலையில் மிகவும் உயர்ந்த அறிவுகளுள் ஒன்றாகும்.” இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: “இரண்டு ஆதாரங்களையும் ஒன்றிணைக்க இயலாத நிலை ஏற்பட்டால், அல்லது அவற்றின் காலவரிசை உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே நஸ்க் (நீக்கம்) என்று கூறப்பட வேண்டும்.” ஆகவே எல்லாவற்றையும பொத்தாம் பொதுவாக ‘நாசிக்’ என்ற வகைப்பாட்டில் கொண்டுவந்துவிடக்கூடாது.

 

நிறைவுரை: ஆக இந்தக் கலை குறித்து நீண்ட விளக்கங்கள் உள்ளன. அவை அனைத்தையும் சிறியதொரு கட்டுரையில் சொல்லிவிட இயலாது. எனவே மொழிபெயர்ப்புகளை மட்டும் வாசித்துவிட்டு, ‘நான் ஹதீஸின்படி செயல்படுகிறேன்’ என்று தனி மனிதர் ஒருவர் முடிவெடுக்கக்கூடாது. அதற்குமுன் ஆலிம்களிடம் விளக்கம் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்ள வேண்டும். ஆலிம்களுள் சிலர்கூட இது குறித்த போதிய ஞானமின்றிச் சட்டங்களை மாற்றிச் சொல்லக்கூடிய நிலை உள்ளது. எனவே ஒவ்வொருவரும் இது குறித்து அறிந்துகொண்டு செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அத்தகைய நல்வாய்ப்பை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்குவானாக.

===========================

செவ்வாய், 28 ஜூலை, 2026

‘இலக்கை அடையும் வரை போராடு’ நூல் வெளியீட்டு விழா


------------------------------------

‘இலக்கை அடையும் வரை போராடு’ நூல் வெளியீட்டு விழா 25.07.2026 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப்பின் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜனாப் G.M. அக்பர் அலி அவர்களின் தலைமையில் மண்ணடியிலுள்ள ‘சென்னை பேலஸ்’ ஹோட்டலில் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மருத்துவ அணிச் செயலாளர் மௌலவி அப்துர் ரஹ்மான் ஸஆதி கிராஅத் ஓதி இந்நிகழ்வைத் தொடங்கிவைத்தார்.  

 

இனிய திசைகள் மாத இதழ் பொறுப்பாசிரியரும் பட்டினம்பாக்கம் மதீனா மஸ்ஜிதின் இமாமும் இந்நூலின் மேலாய்வாளருமான மௌலவி டாக்டர் நூ. அப்துல் ஹாதி பாகவி வரவேற்புரை, நூல் அறிமுக உரை ஆற்றியதோடு, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பாட்ரீஷியன் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் இரா. இளையராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதல் பெண் மாநகராட்சி கவுன்சிலர் திருமதி ஃபாத்திமா முஸஃப்பர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

 

மாண்புமிகு நீதிபதி ஜனாப் G.M. அக்பர் அலி நூலை வெளியிட, மூத்த வழக்கறிஞரும் மாமன்ற முன்னாள் உறுப்பினருமான வேலன் முதல் பிரதியையும் ஜனாப் எம். தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ. நூலை வெளியிட, ஷிஃபா மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் அஜ்மல் இரண்டாம் பிரதியையும், நூலாசிரியர் Dr. A.P.முஹம்மது அலி IPS நூலை வெளியிட, மூத்த வழக்கறிஞர் பாரிவேந்தன் மூன்றாம் பிரதியையும் பெற்றுக்கொண்டனர். பிறகு மனிதநேய ஜனநாயகக் கட்சி நிறுவனர் ஜனாப் எம். தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ. சிறப்புரை நிகழ்த்தியதைத் தொடர்ந்து, மாண்புமிகு நீதிபதி ஜனாப் G.M. அக்பர் அலி தலைமையுரையாற்றினார். இறுதியில் நூலாசிரியர்  Dr. A.P. முஹம்மது அலி IPS ஏற்புரையாற்ற, சாஜிதா புக் சென்டர், எம். முஹம்மது யஹ்யா நன்றியுரை நவின்றார்.

 

மண்ணடிப் பகுதியிலுள்ள பல்வேறு மஹல்லாக்களைச் சார்ந்த முஸ்லிம்களும் முக்கியப் பிரமுகர்களும் பெண்களும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். துஆவுடன் விழா இனிதே நிறைவுற்றது.

-தகவல்: நூ. அப்துல் ஹாதி பாகவி




புதன், 22 ஜூலை, 2026

குன்றிவரும் சகிப்புத்தன்மை


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

எண்ம உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிற இன்றைய இளம் தலைமுறையினருக்குப் பொறுமை, சகிப்புத்தன்மை,  அன்பை பரிமாறிக் கொள்ளும் தன்மை முதலானவை குன்றி வருகின்றன. குழந்தைகளை அன்போடு கவனித்துக் கொள்ளுதல், அவர்களோடு நேரம் செலவழித்தல், நீதிக் கதைகளைச் சொல்லுதல், ஒழுக்கங்களைப் போதித்தல் முதலியவற்றைச் செய்ய அவர்களுக்கு நேரமில்லை. துரித உலகில் துரித உணவைச் சாப்பிட்டுவிட்டு, மிகத் துரிதமாக அலுவலகம் சென்று, அங்கிருந்து வீட்டுக்குத் திரும்பியதும் மிகத் தாமதமாகச் சாப்பிட்டுவிட்டு, நடுநிசியில் தூங்கப்போகும் தலைமுறை இது.

 

கடந்த காலங்களில் நம் உறவினர்களுள் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லையென்றால், நோய்வாய்ப்பட்டால் மற்ற உறவினர்கள் அனைவரும் அவரை நலம் விசாரிக்க ஓடோடி வந்துவிடுவார்கள். அவர்களுள் சிலர் இரண்டு மூன்று நாள்கள் அங்குத் தங்கியிருந்து, வேண்டிய உதவிகளையெல்லாம் செய்துவிட்டுத் திரும்பிச் செல்வார்கள்;  அவரை அக்கறையோடு கவனித்துக்கொள்வார்கள். ஆனால் தற்காலத்தில் அத்தகைய அனுசரணையான நிலையைப் பார்க்க முடியவில்லை. ஒவ்வொருவரும் தத்தம் வேலையைக் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலையில் சிக்குண்டு இருப்பதால் யாரும் யாரையும் கவனிக்க இயலவில்லை; அன்போடும் ஆதரவோடும் விசாரிக்க முடியவில்லை.

  

பெற்றெடுத்த பிள்ளையின் அழுகையை அமர்த்தத் தெரியவில்லை; அதற்கான பொறுமையும் அவர்களுக்கு இல்லை. எனவே செல்பேசியைக் குழந்தையின் கையில் கொடுத்துவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கத்  தொடங்கிவிடுகின்றார்கள் இன்றைய அம்மாக்கள். அப்படியிருக்கும்போது பிள்ளைகள் வளர்ந்து வரும்போது அவர்களின் அந்தப் பருவத்திற்கேற்பக் கதைகளைச் சொல்லி, நல்லொழுக்கத்தைப் போதிப்பதற்கு எங்கே நேரம் இருக்கிறது? தொடக்கத்திலிருந்தே செல்பேசியைக் கொடுத்துப் பழக்கிவிடுவதால், பெற்றோரின் பேச்சைப் பிள்ளைகள் கேட்பதில்லை.

 

புகுந்த வீட்டில் மாமனார், மாமியார் ஆகியோரைச் சமாளித்து, அவர்களுக்கேற்றார்போல் சமைத்துக் கொடுத்து,  அவர்களுக்கு முழுமையாகப் பணிவிடைகள் செய்து, அவர்களின் அன்பைப் பெற்று, அதன்மூலம் கணவனின் அன்பைப் பெறப் போராடிய காலம் கடந்துசென்று விட்டது. திருமணப் பேச்சு நடைபெறுகிறபோதே, ‘மாப்பிள்ளை தனிக்குடித்தனம் வந்துவிட வேண்டும்’ என்ற நிபந்தனையை விதித்துத்தான் மாப்பிள்ளையையே முடிவுசெய்கின்றார்கள்; திருமணம் செய்கின்றார்கள். தப்பித் தவறி கணவன் வீட்டில் மாமியார்-மாமனார் இருந்தால் சில நாள்களிலேயே அவர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிட்டுத்தான் மறுவேளை பார்க்கின்றார்கள்; அல்லது தனிக்குடித்தனம் சென்றுவிடுகின்றார்கள்.  அன்பு, கருணை, பாசம், பிணைப்பு முதலானவை முற்றிலும் தேய்ந்து மனிதாபிமானமும் மறைந்துபோய்விட்டது.

 

விபத்தொன்றில் உறவினர் ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதென்றால் அவர் குணமடைகின்ற வரை வீட்டில் வைத்து அவருக்கான பணிவிடைகளைச் செய்து, மருந்து மாத்திரைகளைக் கொடுத்து அவரை அன்போடு கவனித்து வருவார்கள். கடந்த காலங்களில் இவ்வாறு கோமா-தீரா மயக்கநிலைக்கு ஆட்பட்டு, பல்லாண்டுகள் கழித்து நினைவுதிரும்பியோர் இருக்கின்றனர். ஆனால் இன்றைய காலத்தில், ‘இவருக்குச் சுயநினைவு திரும்புவது சாத்தியமில்லை’ என்று மருத்துவர்கள் கூறிவிட்டால், அவருடைய உறவினர்கள் உடனடியாக அவரது உடலின் பாகங்களை மருத்துவமனையிலேயே விற்றுவிட்டு, உடலை வாங்கி வந்து, புதைத்துவிடுகின்றார்கள்.

 

ஆக இன்றைய அவசர யுகத்தில் யாரும் யாரையும் கவனிக்க நேரமில்லை. அதை இன்னொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் யார்மீதும் யாருக்கும் அன்பு இல்லை; அக்கறை இல்லை. நாம் மட்டும் நல்லா இருந்தால் போதும்; பிறர் எப்படிப் போனால் எனக்கென்ன என்ற சுயநலச் சிந்தனைக்குள் சிக்குண்டு கிடக்கின்றார்கள்.

 

இதற்கான தீர்வு என்ன?: அன்பும் கருணையும் நம் உள்ளத்தில் பிறக்க வேண்டும்; யாரைக் கண்டாலும் அவர்கள் மீது நமக்கு அன்பு ஏற்பட வேண்டும்; பிற மனிதர்கள்மீது நமக்கு நேயம் ஏற்பட வேண்டும். எனவே  அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுத்தந்த இந்தப் பிரார்த்தனையை நாம் அனைவரும்  நாள்தோறும் வேண்டுவதுதான் அதற்கான தீர்வாகும். “அல்லாஹும்ம  இன்னீ அஸ்அலுக்க ஹுப்பக்க வஹுப்ப மய் யுஹிப்புக்க வல் அமலல்லதீ யுபல்லிஃகுனீ ஹுப்பக்க. அல்லாஹும்மஜ்அல் ஹுப்பக்க அஹப்ப இலய்ய மின் நஃப்ஸீ வஅஹ்லீ வமினல் மாயில் பாரித்” என்று கூறி தாவூத் அலைஹிஸ்ஸலாம் பிரார்த்தனை செய்து வந்தார்கள் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

 

பொருள்: அல்லாஹ்வே! உனது நேசத்தையும், உன்னை நேசிப்போரின் நேசத்தையும், உனது நேசத்தை எனக்குப் பெற்றுத் தரக்கூடிய (நற்) செயலையும் உன்னிடம் வேண்டுகின்றேன். என் உயிரையும், என் குடும்பத்தாரையும், குளிர்ந்த நீரையும்விட உன் நேசத்தையே எனக்கு மிகுந்த நேசம் நிறைந்ததாக ஆக்குவாயாக! (திர்மிதீ: 3490/ 3402)

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுத்தந்த இந்தப் பிரார்த்தனைக்குள் பற்பல பொருள்கள் உள்ளன. ‘அல்லாஹ்வின் அன்பை அடையச் செய்யும் செயல்கள்’ என்னென்ன என்று பார்த்து அவற்றைச் செய்துவந்தால் அல்லாஹ்வின் அன்பை நாம் பெறுவதோடு, நமக்குள்ளும் அன்பு வந்துவிடும். அந்த அன்புமிக்க மனத்தால்தான் நாமும் அன்போடு வாழ்ந்து பிறரையும் அன்போடு கவனித்துக்கொள்ள முடியும்.  ஆக நமக்குத் தேவை அன்பு நிறைந்த மனம்தான். அது இருந்தால் பிறர்மீது நாம் அன்பு செலுத்தத் தொடங்கிவிடுவோம்.

 

அல்லாஹ்வின் அன்பைப் பெற என்ன வழி?: உறவினர்களுக்கு, ஏழைகளுக்கு, அநாதைகளுக்கு உதவி செய்தல், பெற்றோரை மதித்தல், மாமியார்-மாமனார் ஆகியோருக்குப் பணிவிடை செய்தல், உறவினர்களோடு சேர்ந்து வாழ்தல், சகோதர-சகோதரிகளுக்கு இடையே இணக்கத்தைக் கடைப்பிடித்தல், தனக்கு விருப்பமானதையே தம் சகோதரருக்கும் விரும்புதல், பிரிந்து கிடக்கும் குடும்பங்களுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்துதல் முதலான நற்செயல்களையெல்லாம் அல்லாஹ் விரும்புகிறான். எனவே அத்தகைய நற்செயல்களை நாம் செய்வதன்மூலம் அல்லாஹ்வின் அன்பைப் பெறலாம். அதைத்தான் மேற்கண்ட பிரார்த்தனையில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுத்தந்துள்ளார்கள்.

 

சகிப்புத்தன்மை என்றால் என்ன?: சகிப்புத்தன்மை என்பது தவறுகளை அங்கீகரிப்பது அன்று. மாறாக, பிறரின் குறைகளையும், கருத்து வேறுபாடுகளையும், அவர்களால் ஏற்படும் சிரமங்களையும் அறிவுடனும் பொறுமையுடனும் கையாளும் உயர்ந்த பண்பாகும். பிறர் நம்மீது கோபப்படுகின்றபோது நாமும் அவர்கள்மீது கோபப்படாமல் அதைத் துணிவோடு எதிர்கொண்டு, சகித்துக்கொள்ளும் தன்மையே ஆகும்.  

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: “பலசாலி என்பவர் பிறரை மல்யுத்தத்தில் வீழ்த்துபவர் அல்லர். கோபம் ஏற்படும் நேரத்தில் தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்பவரே உண்மையான பலசாலி.” (புகாரீ, முஸ்லிம்) அல்லாஹ் கூறுகின்றான்: “நன்மையும் தீமையும் சமமாகாது. தீமையை நன்மையால் தடுத்து விடுவீராக! அப்போது உமக்கும் அவருக்கும் இடையே பகையுணர்வு இருந்தவர்கூட நெருங்கிய நண்பரைப் போல் ஆகிவிடுவார்.” (அல்குர்ஆன் 41: 34) ஒரு தீமைக்கு மற்றொரு தீமையால் பதிலளிப்பது எளிது. ஆனால், தீமையை நன்மையால் வெல்வதே இறைநம்பிக்கையாளரின் உயர்ந்த பண்பாகும். மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: “கோபத்தை அடக்கிக் கொள்வோரும், மக்களை மன்னிப்போரும் (இறையச்சமுடையோர் ஆவர்). அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கிறான்.” (அல்குர்ஆன் 3:134)

 

கூட்டுக் குடும்பத்தில் வாழும்போது அவ்வீட்டின் உறுப்பினர்கள் பலரோடு சேர்ந்து, இணங்கி வாழ வேண்டிய நிர்ப்பந்த நிலை உள்ளது. அப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசுவார்கள்; ஒவ்வொரு விதமாக நடந்துகொள்வார்கள்; ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ‘சுவை’ இருக்கும். அவர்கள் அனைவரையும் சமாளித்து, சகித்து வாழ்வதே மிகப்பெரிய போராட்டம்தான். ஆனால் தனிக்குடும்பமாக வாழ்வதைவிடக்  கூட்டுக் குடும்பத்தில் பலரின் தொல்லைகளையும் சகித்துக்கொண்டு வாழும் மருமகள்தான் அல்லாஹ்விடம் அதிகமான நன்மையைப் பெறுபவர் என்று சொன்னால் நம்புவீர்களா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: “மக்களோடு கலந்து வாழ்ந்து, அவர்கள் தரும் தொந்தரவுகளைப் பொறுத்துக் கொள்ளும் இறைநம்பிக்கையாளர், மக்களோடு கலந்து வாழாமல், அவர்களின் தொந்தரவுகளைப் பொறுத்துக்கொள்ளாத இறைநம்பிக்கையாளரைவிட அதிகமான நன்மையைப் பெறுபவராவார்.” (இப்னுமாஜா: 4032/ 4022)

 

ஆகவே ஒரு குடும்பம் என்றால் பலர் இருக்கத்தான் செய்வார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத்தான் இருப்பார்கள். அவர்கள் அனைவரையும் எதிர்கொண்டு, அவரவர் இயல்புக்கேற்ப இணங்கி வாழ்வதே சகிப்புத்தன்மை கொண்ட வாழ்க்கை. குடும்ப உறுப்பினர்களோடு இணக்கமாகப் பழகத் தெரிந்துகொண்டால் சமுதாய மக்களிடமும் இணக்கமாக வாழப் பழகிக்கொண்டுவிடலாம். பிறர்மீது அன்புகாட்டி, இனிமையாகப் பழகும் இயல்பையும் சகிப்புத்தன்மைகொண்ட மனத்தையும் நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள்வானாக.

============






செவ்வாய், 21 ஜூலை, 2026

நூல் வெளியீட்டு விழா

 


--------------------------------- 

இலக்கை அடையும் வரை போராடு

நாள்: 25.07.2026 சனி  

நேரம்: மாலை 6: 30 மணியளவில் இன் ஷாஅல்லாஹ்

இடம்: சென்னை பேலஸ், எரபாலு செட்டித் தெரு, மண்ணடி, சென்னை-600001.

 

வரவேற்புரை & நெறியாளுகை: மௌலவி Dr.  நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.,Ph.D.


தலைமை: னாப் G.M.அக்பர் அலி -  ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்.


சிறப்புரை: னாப் எம். தமீம் அன்சாரி M.A., M.L.A.  - மனிதநேய னநாயகக் கட்சி


வாழ்த்துரை: திருமதி பாத்திமா முஸஃப்பர் B.Com.,, B.A. 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதல் பெண் மாநகராட்சி கவுன்சிலர்  


ஏற்புரை: Dr. A.P. முஹம்மது அலி IPS (Rtrd), Ph.D. 

 

நன்றியுரை: எம். முஹம்மது யஹ்யா B.Com.,,

சாஜிதா புக் சென்டர், மண்ணடி

 

அன்புடன் அழைப்பது

Dr. A.P. முஹம்மது அலி IPS (Rtrd), Ph.D.

அறிவமுது பருக, அனைவரும் வருக!

----------------------------






ஞாயிறு, 19 ஜூலை, 2026

“மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா - பாகம் 2” நபிமொழித் தொகுப்பு நூல் குறித்து எழுத்தாளர் சேயன் இப்ராகிம் எழுதிய மதிப்புரை

 “மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா - பாகம் 2” நபிமொழித் தொகுப்பு நூல் குறித்து எழுத்தாளர் சேயன் இப்ராகிம் எழுதிய மதிப்புரை. (ஜூலை 2௦26, இனிய திசைகள் மாத இதழ்)

----------------------------------

‘மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா’ என்ற நபிமொழித் தொகுப்பின் இரண்டாம் பாகத்தைப் படித்துப் பார்க்கின்ற அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

இமாம் புகாரீ (ரஹி), இமாம் முஸ்லிம் (ரஹி), இமாம் திர்மிதீ (ரஹி), இமாம் அபூதாவூத் (ரஹி), இமாம் அஹ்மத் பின் ஷுஐப் அந்நஸாயீ (ரஹி), இமாம் அபூஅப்துல்லாஹ் முஹம்மது பின் யஸீத் (ரஹி) ஆகிய இமாம்கள் தொகுத்தளித்துத் தந்துள்ள மொத்த ஹதீஸ்களின் எண்ணிக்கை 1,14,194 ஆகும். இவற்றில் மீண்டும் மீண்டும் வருகின்ற (அதாவது கூறியதை மீண்டும் கூறும்) ஹதீஸ்களை நீக்கி விட்டு 28,430 ஹதீஸ்களை இந்த நூலாசிரியர் தொகுத்து இறுதியில் அதன் எண்ணிக்கையை 3921க்குள் சுருக்கித் தந்துள்ளார். இதன் முதல் பாகம் இரண்டாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது. அதில் 523 ஹதீஸ்கள் இடம் பெற்றிருந்தன. இந்த இரண்டாவது பாகத்தில் 524 முதல் 1316 வரை மொத்தம் 793 ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. மீதமுள்ள ஹதீஸ்கள் அடுத்தடுத்த பாகங்களில் இடம்பெறும் என நம்புகிறேன்.

இந்த ஹதீஸ் களஞ்சியத்தின் மூல நூலாசிரியர் ஹழ்ரத் ஸாலிஹ் பின் அஹ்மத் அஷ்ஷாமீ என்ற அறிஞராவார். இதனை மௌலவி முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி ஃபாஸில் காஸிமி ஹழ்ரத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இதனை மயிலாடுதுறையிலுள்ள அப்துல்லாஹ் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்த ஹதீஸ் களஞ்சியத்தின் சிறப்பு அம்சங்களாகக் கீழ்க்கண்ட செய்திகளைக் குறிப்பிடலாம்.

1. ஹதீஸ்களை தொகுத்தளித்துத் தந்துள்ள அனைத்து இமாம்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாறும், மூல ஆசிரியரின் வாழ்க்கை வரலாறும் தரப்பட்டுள்ளன. 2. கிட்டத்தட்ட 206 அரபிக் கலைச் சொற்களுக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் களஞ்சியத்தைப் படிக்கின்ற முஸ்லிம்கள் மட்டுமின்றிச் சகோதர சமுதாய அன்பர்களுக்கும் இவை பயனுள்ளதாக இருக்கும். 3. பலவீனமான ஹதீஸ்களும், நபிமொழி என்ற பெயரில் கற்பனையாகப் புகுத்தப்பட்டவையும் இந்தத் தொகுப்பில் இடம் பெறவில்லை என மொழியெர்ப்பாளர் உறுதிபடத் தெரிவிக்கின்றார்.


4. நபிமொழிகள் (ஹதீஸ்) அனைத்தையும் ஒரு சேரத் தெரிந்து கொள்ள வேண்டுமென விரும்புகின்றவர்களுக்கு இந்தக் களஞ்சியம் பேருதவியாக இருக்கும். 5. இந்த இரண்டாம் பாகத்தில் திருக்குர்ஆனிலுள்ள சில அத்தியாயங்களின் சிறப்புகள், திருக்குர்ஆன் ஓதும் போது சஜ்தா செய்ய வேண்டிய இடங்கள், தூய்மை, குளியல், பாங்கு, தொழுகை நேரங்கள், மஸ்ஜிதுகள், தொழுகை இடங்கள், தொழுகையின் சிறப்புகள் உள்ளிட்ட தலைப்புகளின்கீழ் 793 ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன.


இந்தக் களஞ்சியத்திற்கு நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியின் முதல்வர் மௌலானா ஏ. முஹம்மது இஸ்மாயில் பாகவி, லால்பேட்டை மன்பவுல் உலூம் அரபிக் கல்லூரியின் முதல்வர் மௌலானா முஃப்தி அ.நூருல் அமீன் மன்பஈ, வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பேராசிரியர் மௌலானா S.M. ரஹ்மத்துல்லாஹ் பாகவி, திருச்சிராப்பள்ளி மௌலவி P.M. அல்தாபி ஆகியோர் அணிந்துரை வழங்கியுள்ளனர். அரபியில் தொகுக்கப்பட்டுள்ள இந்த நூலை முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி அவர்கள் மிகச் சிறப்பான முறையில் தமிழாக்கம் செய்துள்ளார். பாமரர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் அவரது மொழிநடை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

என்னைப்போன்ற பாமரர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பல ஹதீஸ்கள் இந்தக் களஞ்சியத்தில் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக 954வது ஹதீஸைக் குறிப்பிடலாம். இந்த ஹதீஸில் ஆட்டு இறைச்சியைச் சாப்பிட்டு விட்டு விரும்பினால் அங்கத் தூய்மை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒட்டக இறைச்சி சாப்பிட்ட பின் அங்கத்தூய்மை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டுத் தொழுவத்தில் தொழலாம் என்றும், ஆனால் ஒட்டகத் தொழுவத்தில் தொழுவது கூடாது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமைத்த உணவைச் சாப்பிட்ட பின்பு அங்கத் தூய்மை செய்ய வேண்டியதில்லை என 955வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. ஒருவர் தம் மனைவியுடன் பாலுறவு கொண்டுவிட்டு மீண்டும் ஒரு முறை அதனைச் செய்ய விரும்பினால் அவர் அங்கத் தூய்மை செய்துகொள்ள வேண்டுமென 980வது ஹதீஸ் தெரிவிக்கின்றது.

ஆகவே ஹதீஸ் தொகுப்பாளர்களின் களஞ்சியங்கள் அனைத்தையும் வாசிக்காமல் இந்த ஒரு களஞ்சியத்தை மட்டும் வாசித்தால் போதும். நம்பகத்தன்மை கொண்ட அனைத்து ஹதீஸ்களையும் வாசித்த முழுமையுணர்வு ஏற்படும். பள்ளிவாசல்களிலும், அரபிக் கல்லூரிகளிலும், நூலகங்களிலும் வாங்கி மக்களின் பயன்பாட்டிற்காக வைக்கத்தக்க களஞ்சியம் இது. இந்தக் களஞ்சியத்தைக் கொண்டு வருவதற்குப் பாடுபட்ட அனைத்துப் பெருமக்களுக்கும் இறைவன் எல்லா நலன்களையும் அளிக்கத் துஆ செய்வோம். தமிழக முஸ்லிம் சமூகம் இந்தக் களஞ்சியத்தைக் காசு கொடுத்து வாங்கி, வாசித்துப் பயன் பெற வேண்டுகிறேன்.

நூலைப் பெறத் தொடர்புகொள்ள வேண்டிய கைப்பேசி எண்: 93447 42844/ 9171846184/ 96001 25000
===================





சனி, 18 ஜூலை, 2026

மஆலிமுஸ் ஸுன்னா நூல் வெளியீட்டு விழா

 


மஆலிமுஸ் ஸுன்னத்திந் நபவிய்யா 2ஆம் பாகம் நூல் வெளியீட்டு விழா 17.07.2026 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பின் மௌலவி K.M. இல்யாஸ் ரியாஜி அவர்களின் தலைமையில் சென்னை பட்டினப்பாக்கம் மதீனா மஸ்ஜிதில் நடைபெற்றது. மஸ்ஜிதின் தலைவர் அல்ஹாஜ் M. முஹம்மது இர்பான் சேட், மஸ்ஜிதின் பொருளாளர் A. அய்யூப் சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மௌலவி ஹாஃபிழ் S.M. முஹம்மது இஸ்மாயீல் மன்பஈ கிராஅத் ஓதி நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.


மஸ்ஜிதின் செயலாளர் A.K. ரூக் அலி வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து டாக்டர் A.P. முஹம்மது அலி IPS (Rtrd), மௌலவி B.M. கலீலுர் ரஹ்மான் மன்பஈ, மௌலவி ஜுனைதுல் பக்தாதி ஹஸனி, மௌலவி ஐ. உமர் சித்தீக் பாகவி, மௌலவி ஹாஃபிழ் S. அபுல் ஹஸன் ஷாதலி பாகவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


பின்னர் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை துணைப் பொதுச் செயலாளர் மௌலவி K.M. இல்யாஸ் ரியாஜி நூலை வெளியிட, அல்ஹாஜ் M.M. அப்துல் கபூர் முதல் பிரதியையும், ஜாமிஆ அல்-பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரிப் பேராசிரியர் மௌலவி ஹாஃபிழ் S.M. ரஹ்மத்துல்லாஹ் பாகவி வெளியிட, அல்ஹாஜ் M. அப்துல் அஜீஸ் இரண்டாம் பிரதியையும், இனிய திசைகள் மாத இதழ் ஆசிரியர் பேராசிரியர் டாக்டர் சேமுமு. முகமதலி வெளியிட, A. சித்திக் கனி மூன்றாம் பிரதியையும், மஸ்ஜிதின் தலைவர் அல்ஹாஜ் M. முஹம்மது இர்பான் சேட் வெளியிட, M. இம்ரான் கான் நான்காம் பிரதியையும் பெற்றுக்கொண்டனர்.


பிறகு பேராசிரியர் மௌலவி ஹாஃபிழ் S.M. ரஹ்மத்துல்லாஹ் பாகவி நூலாய்வுரை நிகழ்த்த, பேராசிரியர் டாக்டர் சேமுமு. முகமதலி சிறப்புரை நிகழ்த்தினார். இறுதியில் மௌலவி K.M. இல்யாஸ் ரியாஸி தலைமையுரை நிகழ்த்தினார். இந்த மஸ்ஜிதின் இமாமும் இந்நூல் மொழிபெயர்ப்பாளருமான மௌலவி டாக்டர் நூ. அப்துல் ஹாதி பாகவி ஏற்புரையாற்றினார். மஸ்ஜிதின் துணைச் செயலாளர் M. முஹம்மது ஸஹீர் நன்றியுரை நவின்றார். துஆவுடன் விழா இனிதே நிறைவுற்றது.

– தகவல்: நூ. அப்துல் ஹாதி பாகவி






சனி, 11 ஜூலை, 2026

 நூல் வெளியீட்டு விழா

 

மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா 2ஆம் பாகம் (ஹதீஸ் ஆய்வு நூல்)

 

நாள்: 17.07.2026 வெள்ளி  நேரம்: மாலை 6: 30 மணியளவில் இன் ஷாஅல்லாஹ்

 

இடம்: மதீனா மஸ்ஜித், 6, ஜோனகன் சந்து, பட்டினம்பாக்கம், (சாந்தோம்), சென்னை-28

 

முன்னிலை:

ஜனாப் M.முஹம்மது இர்பான் சேட் B.Com..  ஜனாப் A.K. ஜரூக் அலி    

தலைவர்: மதீனா மஸ்ஜித்     செயலாளர்: மதீனா மஸ்ஜித்

 

ஜனாப்  A. அய்யூப் சேட் B.Com.. - பொருளாளர்: மதீனா மஸ்ஜித் மற்றும் மதீனா மஸ்ஜித் நிர்வாகிகள்

 

தலைமை: மௌலவி K.M. இல்யாஸ் ரியாஜி M.A.

துணைப் பொதுச் செயலாளர், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை,

தலைமை இமாம்: ஈத்கா மஸ்ஜித், மந்தைவெளி, சென்னை-28

 

நூலாய்வு: மௌலவி ஹாஃபிழ் S.M. ரஹ்மத்துல்லாஹ் பாகவி M.A.

பேராசிரியர்: ஜாமிஆ அல்பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் அரபுக் கல்லூரி, வேலூர்.

 

சிறப்புரை: பேராசிரியர் டாக்டர் சேமுமு. முகமதலி, Ph.D.

பொதுச் செயலாளர் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், துணைத் தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

------------       

கிராஅத்: மௌலவி ஹாஃபிழ் S.M. முஹம்மது இஸ்மாயீல் மன்பயீ

துணை இமாம்: ஈத்கா மஸ்ஜித் மந்தைவெளி, சென்னை-28

 

வாழ்த்துரை வழங்குவோர்:  

டாக்டர் A.P. முஹம்மது அலி IPS (Rtrd)

 

மௌலவி B.M. கலீலுர் ரஹ்மான் மன்பஈ M.A., M.Phil.,

திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர், இமாம்: மஸ்ஜிதே பிலால், டூமிங் குப்பம், சாந்தோம், சென்னை-4

 

மௌலவி ஜுனைதுல் பக்தாதி ஹஸனி M.A., M.Phil.,

இமாம்: இராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28

 

மௌலவி ஹாஃபிழ் M. சையது மஸ்வூத் ஜமாலி M.A., M.Phil.,

அரசு காஜி, காஞ்சிபுரம் மாவட்டம்.  

 

மௌலவி ஐ. உமர் சித்தீக் பாகவி

இமாம்: மஸ்ஜிதே நூர், பட்டினம்பாக்கம், சென்னை-28

 

மௌலவி ஹாஃபிழ் எஸ். அபுல் ஹஸன் ஷாதலி பாகவி

இமாம்: அல்ஹுதா மஸ்ஜித், லஸ், மயிலாப்பூர், சென்னை-4

 

ஏற்புரை: மௌலவி Dr. நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.,Ph.D.

மொழிபெயர்ப்பாளர், இமாம்: மதீனா மஸ்ஜித், பட்டினம்பாக்கம், (சாந்தோம்), சென்னை-28

 

 

பிரதிகள் பெறுவோர்:

எம். இம்ரான் கான் M.B.A. (UK) -Managing Director Perfectware Building products pvt Ltd

அல்ஹாஜ் எம்.எம்.அப்துல் கபூர் -M A Textiles

ஏ. சித்திக் கனி B.Sc., (Hons) (UK)- Shahnaz Commodities International pvt Ltd

எம். அப்துல் அஜீஸ் - பார்டர் தோட்டம் முத்து இராவுத்தர் Scrap Dealer and JCB Hirer  

 

நன்றியுரை: M. முஹம்மது ஸஹீர், துணைச் செயலாளர், மதீனா மஸ்ஜித்

 

-----------------------

மட்டற்ற மகிழ்ச்சியோடு அழைப்பது: மதீனா மஸ்ஜித் நிர்வாகம் & அப்துல்லாஹ் பப்ளிகேஷன்ஸ் மயிலாடுதுறை.

 

அண்ணல் நபியின் அமுதமொழி பருக அனைவரும் வருக!

 

பெண்களுக்குத் தனியிட வசதி உண்டு.

-------------------------