வெள்ளி, 15 ஜனவரி, 2021

விவசாயம் ஓர் அறச்செயல்




-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

(துணை ஆசிரியர், ‘இனிய திசைகள்’ மாத இதழ்) 

. __________

முதல் மனிதரைப் படைத்த அல்லாஹ் அவருக்குத் துணையாக ஹவ்வாவைப் படைத்தான். விதியின் விளைவால் பூமிக்கு வந்தார்கள். சொர்க்கத்தில் இருந்த வரை எண்ணியது எண்ணியவுடன் கிட்டியது; உழைப்பின்றிக் கிட்டியது. நிலத்திற்கு வந்தபின் நினைத்தவுடன் கிடைத்திடுமோ உணவு? நினைத்ததை உண்ண வேண்டுமெனில் நித்தமும் உழைக்க வேண்டும். 
தொடக்கக் காலத்தில், முதல் நாள் பயிரிட்டால் மறு நாள் அறுவடை செய்யலாம் எனக் காலத்தைச் சுருக்கி வைத்திருந்தான் இறைவன். காலம் செல்லச் செல்ல காலம் விரிந்தது. மூன்று முதல் நான்கு மாதங்கள் அறுவடை செய்யக் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது.  ஆக முதல் மனிதரே ஒரு விவசாயிதான். அன்று தொடங்கிய   விவசாயத் தொழில் இறுதி  நாள் வரை தொடரும் என்பதில் ஐயமில்லை. அது அல்லாஹ்வின் அடிப்படை நியதி. 


மனிதன் நிலத்தில் பயிரிட்டு, அது வளர்ந்து முதிர்ந்தபின் அறுவடை செய்கிறான்; புசிக்கிறான்; பிறருக்கு விற்பனை செய்கிறான்; ஏழைக்குக் கொடுக்கிறான். எனவே இது ஓர் அறச் செயல் ஆகும். 


இது குறித்து நபியவர்கள் கூறிய செய்தியைப் பார்க்கலாம்.  
“முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ,  ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.  (நூல்: புகாரீ: 2320) 

இந்த நபிமொழியின் அடிப்படையில் ஒரு விவசாயியின் விவசாயத் தொழில் ஓர் அறச் செயல் என்பதை விளங்கலாம்.

இந்திய விவசாயிகள் தம் வேளாண்மைப் பொருள்கள்மூலம் சம்பாதிக்கின்ற பணத்திற்கு வரி கட்டத் தேவையில்லை என்பது சட்டம். இருப்பினும் இந்திய விவசாயிகள் பலர் ஏன் ஏழ்மை நிலையிலேயே இருக்கிறார்கள்? ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?

பெரும்பாலோர் சொந்த முதலீடு இல்லாமல் பிறரிடம் அல்லது வங்கியில் கடன் வாங்கியே விவசாயம் செய்து வருகின்றனர். மகசூல் நல்ல முறையில் வந்தால், அதை விற்றுக் கடனைச் செலுத்தியதுபோக, எஞ்சிய கொஞ்சத்தைத் தமக்காக வைத்துக்கொள்வர். அதேநேரத்தில் வானம் பொய்த்துவிட்டால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் போய்விடும்; மீண்டும் கடன் வாங்குவர். ஒரு பக்கம் வட்டி வளர்ந்துகொண்டிருக்கும். இந்தத் துர்பாக்கிய நிலைதான் அவர்களை வாட்டிக்கொண்டிருக்கிறது.  

மீண்டும் அவன் தனது நிலத்தை உழுது, பக்குவப்படுத்தி, விதை தூவி, விவசாயம் செய்து, தேவையான பருவத்தில் பயிருக்கு உரமிட்டு, தேவையற்ற களைகளை அகற்றி, முதிர்ந்தவுடன் அறுவடை செய்து, பாதுகாத்து,  தேவையுடையோருக்கு விற்று, அதன்பின் போட்ட முதலை எடுப்பதற்குள் நீண்ட போராட்டத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது. 

பின்னர் அதில் இலாபம் என்பது சிலருக்கு வாய்க்கிறது; பலருக்கு வாய்ப்பதில்லை. 
இந்த விவசாயப் போட்டியில் கவனமாக ஓடியவருக்குப் பரிசு; கவனம் சிதறியவருக்கு, அவர் தம் வாழ்க்கையே  தரிசு என்றுதான் சொல்ல வேண்டும். மற்றொரு கோணத்தில் இறைவனின் கருணைப்பார்வை பட்டோர் வெற்றி பெறுகின்றனர்; இறைவனின் கருணைப்பார்வை கிட்டாதோர் தோல்வியடைகின்றனர். 
அதைத்தான் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: நீங்கள் விதைக்கின்ற இந்த விதையைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? இதன் மூலம் பயிர்களை நீங்கள் விளைவிக்கின்றீர்களா? அல்லது நாம் விளைவிக்கின்றோமா? நாம் நாடினால் இவற்றைப் பதர்களாய் ஆக்கிவிட்டிருப்போம்.  (56: 63-65)


வட்டிக்குக் கடன் வாங்கி விவசாயம் செய்வோர் அக்கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால், நெக்குருகி, துணிவிழந்து, இறுதியில் தம் உயிரையே மாயத்துக் கொள்கின்றனர். நெஞ்சின் ஒரு பகுதியில் எஞ்சியிருக்கிற நம்பிக்கையோடு அடுத்த தடவை வரும் மகசூலை விற்று, வாங்கிய கடனை அடைத்துவிடலாம் என்றெண்ணி மீண்டும் உழுது, பயிரிட்டு விவசாயத்தைத் தொடங்குகின்றான். இரண்டாவது தடவை நாடிய சாகுபடி கிடைத்தால் அவன் வாங்கிய கடனை அடைப்பான். இல்லையேல் அவன் சாகும்படி ஆகிவிடும்; சிலர் விதிவிலக்காக வெற்றிபெறலாம். இதுவே இந்திய விவசாயிகளின் நிலை. 

இஸ்லாமிய மார்க்கத்தில் விவசாயிகள் சுதந்திரமான வாழ்க்கையையும் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் மேற்கொள்கின்றார்கள். அவர்கள் விளைவிக்கும் மகசூலை விரும்பியவாறு விற்பனை செய்து கொள்ளலாம்.  அரசுக்கு ஐந்து முதல் பத்து சதவிகிதம் வரை வரி செலுத்தினால் போதுமானது. விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். திருப்பிச் செலுத்த அவகாசம் வழங்கப்படும். எனவே இஸ்லாமிய நாடுகளில்  எந்த விவசாயியும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக எந்த வரலாறும் இல்லை.

ஒரு விவசாயி, தன் நிலத்தில் தானே உழுது பயிரிடலாம். அல்லது தனக்கு இயலவில்லையெனில், அந்நிலத்தை, தான் விரும்பியவருக்கு, குறிப்பிட்ட நிபந்தனைகளோடு குத்தகைக்கு விடலாம். குத்தகை என்பது நில உரிமையாளர் தம் நிலத்தை ஒரு விவசாயியிடம், மகசூலில் கால் பங்கு என்றோ, பாதி என்றோ நிபந்தனையிட்டு வழங்குவதாகும். 

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலும், அபூபக்ர், உமர், உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹும் ஆகியோரின் ஆட்சிக் காலத்திலும், முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு தம் நிலங்களைக் குத்தகைக்கு விட்டு வந்தார்” என்று நாஃபிஉ ரஹிமஹுல்லாஹ் கூறினார். (நூல்: புகாரீ: 2343) 

இதன் அடிப்படையிலும் நபியவர்கள் கைபரில் இருந்த நிலங்களை யூதர்களிடம் குத்தகைக்கு விட்டிருந்தார்கள் என்ற செய்தியின் அடிப்படையிலும் நிலத்தைக் குத்தகைக்கு விடுவது கூடும் என்பது மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும். 
 
அந்த விவசாயி, நிலத்தை உழுது, பயிரிட்டு, மகசூல் செய்து, கிடைத்த மகசூலில் நில உரிமையாளருக்கு அவர் நிபந்தனைவிதித்த கால் அல்லது அரைப் பங்கைக் கொடுத்துவிட்டு எஞ்சியதைத் தனக்காக  வைத்துக்கொள்வான். இது இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில் குறிப்பிட்ட ஒரு நிலத்தைக் குத்தகைக்கு விடும்போது மகசூலில் 50 மூட்டை என்றோ 100 மூட்டை என்றோ நிபந்தனை விதிக்க முடியாது. அந்த நிபந்தனை செல்லாது. ஏனெனில் நிலத்தில் எவ்வளவு விளையும் என்பது யாருக்கும் தெரியாது.  அப்படி இருக்கும்போது இத்தனை மூட்டை விளைச்சலைத் தந்தே ஆக வேண்டுமென ஒரு விவசாயியை எவ்வாறு நிர்ப்பந்திக்க முடியும்? 

ஆக இஸ்லாமிய மார்க்கம் விவசாயிகளுக்கு எந்தச் சிரமத்தையும் கொடுக்கவில்லை. மேலும் குத்தகை நிலத்தில் அவர் பயிரிட்டு வளர்த்து வருகிறபோது, திடீரென இயற்கைச் சீற்றத்தால் அழிந்து போனால் அதற்கு அந்த விவசாயி எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டான். அதாவது குத்தகைதாரருக்கு எந்தப் பங்கும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இதனால் விவசாயிகள் மனஅழுத்தம் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். இதுதான் இஸ்லாமியச் சட்டம். 

இனி இந்திய நிலவரம் என்னவென்பதைப் பார்ப்போம். சொந்தப் பணத்தை முதலீடு செய்து விவசாயம் செய்வோர் மிகக் குறைவு. பெரும்பாலான விவசாயிகள் வட்டிக்குக் கடன் வாங்கியே விவசாயம் செய்கிறார்கள்.  அவர்களுடைய மகசூல் நல்லவிதமாகக் கிடைக்கின்றபோது வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச் செலுத்துகிறார்கள். அதேநேரத்தில் மழை பெய்யாமல் பயிர்கள் கருகிப் போனாலோ இயற்கைச் சீற்றத்தால் அழிந்து போனாலோ அந்த விவசாயி வாங்கிய கடன் தள்ளுபடி ஆகாது. அதைத் திரும்பச் செலுத்தித்தான் ஆகவேண்டும். இல்லையேல் வாங்கிய கடனுக்கு வட்டி ஏறிக்கொண்டிருக்கும். இதனால்தான் விவசாயிகள் பலர் ஏழைகளாகவே உள்ளனர்; சிலர் தம்மை மாய்த்துக்கொள்கின்றனர். இந்நிலை மாற வேண்டுமெனில் வட்டிக்குக் கடன் கொடுப்பதை நிறுத்த வேண்டும்; விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும். மேலும் இயற்கைச் சீற்றத்தால் பயிர்கள் அழிந்துவிட்டால், அப்போது வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்துவிட வேண்டும். இதுதான் இந்திய அரசு விவசாயிகளுக்குச் செய்ய வேண்டிய முதற்கடமையாகும். நாட்டு நலனில் அக்கறைகொண்ட ஆட்சியாளர் இதைத்தான் முதலில் செய்வார். 

ஆனால் இன்று நடுவண் அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகளை மேன்மேலும் அடிமையாக்கவே முனைகின்றன.  அந்த மூன்று சட்டங்களின் முக்கிய விஷயங்கள்: 1. ஆதார விலையை நிர்ணயிக்கும் பொறுப்பிலிருந்து நடுவண் அரசு விலகிக்கொள்கிறது. அதாவது விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்யாது. இதனால் ஒரு விவசாயி அறுவடைக்குப்பின் கிடைத்த மகசூலை எங்கு விற்பனை செய்வான்? உடனடியாகக் கிடைக்க வேண்டிய பணத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. 2. பன்னாட்டு நிதி அனுமதிக்கப்படுகிறது. இதன் காரணமாக பெருமுதலாளிகள் விவசாயிகளிடம் ஒப்பந்தச் சாகுபடி முறையில் விளைநிலங்களை அபகரித்துக் கொள்வார்கள். 
3. நீர்நிலை மேம்பாடு என்ற பெயரில் தண்ணீரைத் தனியார் நிர்வாகம் நிர்வகிக்கும். இதனால் தண்ணீர் வணிகமயமாக்கப்படும். வெளிநாடுகளில் உள்ளதைப்போல் ‘தண்ணீர் மீட்டர்’ பொருத்தப்பட்டு அதற்கெனத் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலை உருவாகலாம். மேலும் இலவச மின்சாரமும் நிறுத்தப்படும். 
 
4. விவசாயிகள் தம் விளைபொருள்களைச் சுதந்திரமாக உழவர் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். அந்த உழவர் சந்தைகள் முடக்கப்படும். 5. பெருமுதலாளிகள் வழங்குகிற மரபணு மாற்று விதைகளைத்தான்  விவசாயிகள் தம் நிலங்களில் பயிரிட வேண்டும். இதனால் காலப்போக்கில் நிலம் பாழ்பட்டு, மலட்டுத்தன்மை அடைந்துவிடும். 6. விவசாயம் செய்ய பத்து சதவிகிதப் பணத்தை முன்பணமாக வழங்குவார்கள். மீதித் தொகையை விவசாயிகள்தாம் போட வேண்டும். விளைச்சல் சரியாக அமையவில்லையானால், அடுத்த தடவையும் பணம் கொடுப்பார்கள். காலப்போக்கில் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல்போகின்றபோது அந்நிலம் பெருமுதலாளிகளுக்கே சொந்தமாகிவிடும்.  

7. குளிர் சாதனக் கிடங்குகள் தனியார் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் மிகை உற்பத்தி ஏற்படும்போது அவற்றை அடிமாட்டு விலைக்கு வாங்கி, இருப்பு வைத்துக்கொள்வார்கள். தட்டுப்பாடு ஏற்படும்போது மிகுதியான விலைக்கு விற்று, கொள்ளை இலாபம் சம்பாதிப்பார்கள். 
அதனைச் செவ்வனே செய்துகொள்ளுமுகமாக, வெங்காயம், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியமான பொருள்களை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது என்பதை அறிக. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருள்களைப் பதுக்கி வைத்துக்கொண்டு, செயற்கைத் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு, பின்னர்  மிகுதியான விலைக்கு விற்கப்படுவது சட்டப்படி அனுமதிக்கப்படுகிறது. 8. தற்போது வரை மாநில அதிகாரப் பட்டியலில் உள்ள விவசாயத் துறை அதிலிருந்து நீக்கப்படும். ஆக இந்த மூன்று சட்டங்களும் வெளியில் தேன் தடவி, விவசாயிகளுக்குச் சாதகமானவையாக ஊடகங்கள்மூலம் காட்டப்பட்டு, உள்ளே அவர்களுக்கு விஷம் வைக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். 
இம்மூன்று சட்டங்கள்மூலம் பெருமுதலாளிகளுக்கு விவசாயத்தைத் தாரை வார்க்கப் பார்க்கிறது மத்திய அரசு. அதைத் தடுத்து நிறுத்தவே நாட்டின் தலைநகரில் விவசாயிகள் அனைவரும் போர்க்கொடி தூக்கிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் மட்டுமின்றி, இந்திய நாட்டு நலனில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் கலந்துகொள்ள வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாகும். 
===================

செவ்வாய், 12 ஜனவரி, 2021

இன்பமும் துன்பமும் சமமே

இன்பமும் துன்பமும் சமமே!   
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் இரவு பகலைப்போல் ஒன்றன்பின் ஒன்றாக மாறி மாறி வருகின்றன. இது இயற்கையின் அமைப்பு; இறைவனின் நியதி. இந்த இயற்கை அமைப்பை யாராலும் மாற்ற முடியாது. அதாவது எப்போதும் இன்பமே அனுபவிக்குமாறு அல்லது எப்போதும் துன்பமே அனுபவிக்குமாறு செய்ய முடியாது. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி இன்பம்-துன்பம் மாறி மாறி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வரவே செய்யும். ஆனால் எதுவும் நீடித்து நிலைத்திருக்காது. இன்று மகிழ்ச்சியாக உள்ளவன் நாளை கவலைகொண்டவனாக இருக்கலாம்; இன்று கவலையாக உள்ளவன் நாளை மகிழ்ச்சியை அனுபவிக்கலாம். 


மகிழ்ச்சி வருகின்றபோது அதை அனுபவிக்கின்ற மனிதன், துன்பம் வருகின்றபோது அதை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் தத்தளிக்கிறான்; திண்டாடுகிறான்; சோர்ந்து போகிறான்; வாழ்க்கையே முடிந்து போனதைப்போல் உணர்கின்றான். நெருக்கடி வந்து நெருக்குகின்றபோது நெக்குருகிப் போகின்றான். துணிவை இழந்து கோழையாகிவிடுகிறான்; நம்பிக்கையை இழந்து அவநம்பிக்கைக்குள்ளாகிறான். சிலவேளை தன்னையே மாய்த்துக்கொள்ளும் கெடுமுடிவெடுக்கிறான். இதுவே இன்று நாம் காணும் மிகுந்துவிட்ட தற்கொலை மரணங்களுக்கான காரணம்.


சாதாரண மனநிலைகொண்டவர்கள், நடுநிலையான மனநிலை கொண்டவர்கள், உறுதியான திடநம்பிக்கை கொண்டவர்கள் ஆகிய மூவகை மனிதர்கள் இருக்கின்றார்கள். சாதாரண மனநிலை உடையோர்தாம் சின்னச் சின்னத் துன்பங்களையும் சங்கடங்களையும் மலைபோல் கருதி, அதிலிருந்து மீளவே முடியாது என்றெண்ணித் தம்மையே மாய்த்துக் கொள்கின்றனர். நடுநிலையான மனநிலையுடையோர் இன்பம் வரும்போது அனுபவிக்கவும் துன்பம் வரும்போது சோர்ந்துபோகவும் செய்வார்கள். பின்னர் மீண்டும் இன்பம் வரும்போது அத்துன்பத்திலிருந்து மீண்டு வருவார்கள். 


ஆனால் இறைவன்மீது திடநம்பிக்கை உடையவர்களை இன்பமோ துன்பமோ இலாபமோ நட்டமோ வெற்றியோ தோல்வியோ எதுவும் அவர்களின் உள்ளத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. அவர்களுக்கு இரண்டும் ஒன்றாகவே தோன்றும். ஏனென்றால் அவர்கள் தம் இறைவன்மீது திடநம்பிக்கை கொண்டவர்கள். துன்பத்தைக் கொடுத்த இறைவன் அதை நீக்கவும் ஆற்றலுடையவன் என்பதைத் தெளிவாக அறிந்தவர்கள். 


“தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்பதைத் திடமாக நம்பியிருக்கின்றார்கள். இரண்டுமே இறைவன் புறத்திலிருந்துதான் வரமுடியும் என்பதைத் தெளிவாக அறிந்திருக்கிறார்கள். எனவே இன்பத்தைக் கொடுத்தவனே துன்பத்தையும் கொடுத்தான். அதனால் இன்பத்தை மகிழ்ச்சியோடு அனுபவித்ததைப்போலவே துன்பத்தையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வதுதான் அவன் அல்லாஹ்வின் அடிமை என்பதற்கான அடையாளமாகும். ஓர் அடிமைக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று அவனுடைய உரிமையாளனுக்கு நன்றாகவே தெரியும் என்றெல்லாம் விளங்கியவர்கள். ஆகவே இரண்டு நிலைகளிலும் சமமாகவே காட்சியளிப்பார்கள் திடநம்பிக்கையுடையோர்.

 இன்பம் வரும்போது மகிழ்ச்சியால் துள்ளிக் குதிக்க மாட்டார்கள்; துன்பம் வாட்டும்போது கூனிக் குறுகி, துவண்டுபோய் மூலையில் உட்கார்ந்துவிடவும் மாட்டார்கள்.
(நபியே!) அல்லாஹ் உங்களுக்கு யாதொரு தீங்கிழைத்தால், அதனை நீக்குபவர் அவனையன்றி வேறெவருமில்லை. உங்களுக்கு யாதொரு நன்மையை அவன் கொடுத்தாலும் (அதைத் தடுத்துவிடக்கூடியவன் எவனும் இல்லை.) அவன் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். (6: 17) 


அல்லாஹ் கூறியுள்ள இந்த இறைவசனத்தின்மீது அவர்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். எனவே எந்தத் துன்பமும் அவர்களை நிலைகுலையச் செய்துவிட முடியாது. அதேபோல் எந்த இன்பமும் அவர்களைத் துள்ளிக் குதிக்கச் செய்துவிட முடியாது. ஏனெனில், “திண்ணமாகத் துன்பத்திற்குப்பின் இன்பம்; திண்ணமாகத் துன்பத்திற்குப் பின் இன்பம்” (94: 5-6) என்று அல்லாஹ் கூறியுள்ளதை நினைவில் கொண்டவர்கள் அவர்கள். 

 
இறைநேசர் அப்துல் காதிர் ஜீலானீ ரஹிமஹுல்லாஹ் மிகப்பெரிய வணிகர் ஆவார். இறைதியானத்திலும் இறைவழிபாட்டிலும் மிகுதியாக ஈடுபட்ட அதேநேரத்தில் வணிகத்திற்கும் சிறிதளவு நேரம் ஒதுக்கிச் சிறப்பாக அதைக் கவனித்து வந்தார். அப்போது கப்பலில் சரக்குகளை ஏற்றுவதும் உரியவர்களுக்கு அனுப்புவதுமான ஏற்றுமதி இறக்குமதியும் செய்துவந்தார். அப்போது ஒரு தடவை இவர் ஏற்றி அனுப்பிய கப்பல் வணிகச் சரக்குகளுடன் கடலில் மூழ்கிவிட்டதாக இவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அச்செய்தி கேட்டு எந்தக் கலக்கமும் பதற்றமுமின்றி அமைதியாக இருந்தார். சற்றுநேரம் கழித்து, “மூழ்கியது உங்களது கப்பல் இல்லை. உங்கள் கப்பல் பாதுகாப்பாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது. அச்செய்தி கேட்ட அவர் எந்த ஆரவாரமோ குதூகலமோ இன்றி அமைதியாகக் காணப்பட்டார். இரண்டு செய்திகள் இரண்டு விதமாகக் கூறப்பட்டபோதும் தம் மனத்தில் எவ்வித மாற்றமுமின்றி இயல்பாக, நடுநிலையாக இருந்ததைக் கண்டு மக்கள் வியப்புற்றனர். 


“உங்கள் கப்பல் மூழ்கிவிட்டது என்று கூறப்பட்டபோதும் அமைதியாக இருந்தீர்; பாதுகாப்பாக உள்ளது என்று கூறப்பட்டபோதும் அமைதியாக இருந்தீரே? அது எப்படி?” என்று மக்கள் வினவினார்கள். “அது எவ்வாறெனில், அப்பொருளின் மதிப்பு என் உள்ளத்திற்குள் சென்றுவிடாமல் என் உள்ளத்தைப் பக்குவப்படுத்தி வைத்துள்ளேன்” என்றார்களாம். 


அதாவது உலகில் நடைபெறும் மாற்றங்களுக்கேற்ப நம் உள்ளத்தை மாற்றிக் கொள்ளாமல் அல்லாஹ்வின் மீதான வலுவான நம்பிக்கையால் நம் உள்ளத்தைத் திடமாக வைத்துக்கொண்டால் எந்தத் துன்பமோ இன்பமோ நம் உள்ளத்தில் எவ்வித மாற்றத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. அவ்வாறு உள்ளத்தைத் திடமாக வைத்துக்கொண்டால் நாம் பல்வேறு தோல்விகளையும் துன்பங்களையும் மிக எளிதாகக் கடந்து சென்றுவிடலாம். 


இன்றைய இளைஞர்கள் சின்னச் சின்னச் சங்கடங்களையும் தோல்விகளையும் சகித்துக்கொள்ள முடியாமல் தம்மையே மாய்த்துக்கொள்ளும் பரிதாப நிலையைக் காண முடிகிறது. அதேநேரத்தில் மகிழ்ச்சியான தருணங்களில் அதை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்று தெரியாமல் கண்மூடித்தனமாகக் கொண்டாடுகிறார்கள். அவர்களின் கண்மூடித்தனமான கொண்டாட்டங்கள் இறுதியில் ஏதாவது விபத்தில் முடிகின்றன.

 
நண்பர் ஒருவருக்குப் பிறந்த நாள் கொண்டாட்டம், திருமணக் கொண்டாட்டம், புத்தாண்டுக் கொண்டாட்டம், காதலர் தினக் கொண்டாட்டம், நண்பர்கள் தினக் கொண்டாட்டம் முதலான கொண்டாட்டங்களில் கண்மூடித்தனமாக ஈடுபடுகின்றார்கள். திருமணக் கொண்டாட்டத்தில், நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி, அந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடுகிறார்கள். கேக்கை வெட்டி, அதன்மீதுள்ள கிரீமை மாப்பிள்ளையின் முகத்தில் அப்பி விளையாடுகிறார்கள்; கேக் துண்டுகளை மாப்பிள்ளைமீது வீசுகின்றார்கள்; வண்ண வண்ண அலங்காரத் துகள்களை அவன்மீது தெறிக்க விடுகின்றார்கள்; ஒரே கூச்சலும் கூப்பாடுமாய், பார்ப்போரை ‘சீ’ என முகம் சுழிக்கச் செய்கிறார்கள். சில இடங்களில் அதுவே தள்ளுமுள்ளு ஏற்படவும் கைகலப்பு ஏற்படவும் வழிவகுத்துவிடுகிறது. இப்படித்தான் அவர்களின் கொண்டாட்டங்கள் இருக்கின்றன. 


புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு அதில் என்ன இருக்கிறது? யாராவது ஏதாவது சாதனை படைத்துவிட்டாரா? புத்தாண்டு அன்று வழமைக்கு மாறாக 25 மணி நேரம் வருகிறதா? ஒன்றும் இல்லாததற்கு ஒரு கொண்டாட்டம் தேவையா? ஆனால் அந்தக் கொண்டாட்டத்தை மற்றவர்கள் பார்த்து மகிழுமாறு செய்யலாமே? அதுவும் இல்லை. கண்மூடித்தனமான கொண்டாட்டம். பைக்கில் அசுர வேகத்தில் பாய்வது என்ன வகை கொண்டாட்டம்? சாலையில் செல்வோருக்கு இடைஞ்சல் செய்வது என்ன வகை கொண்டாட்டம்? கூச்சலும் கூப்பாடும் போடுவது என்ன வகை கொண்டாட்டம்? அளவுக்கு மீறி மது அருந்திவிட்டு, சாலையில் அலம்பல் செய்வதும் வாகனங்களைக் கொண்டு மோதுவதும் என்ன வகை கொண்டாட்டம்? இவர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் யாருக்கு என்ன இலாபம்? வணிகர்களுக்கு வேண்டுமானால் இலாபம் இருக்கலாம். மக்களுக்கு எந்த இலாபமும் இல்லை. மகிழ்ச்சியும் இல்லை. 

  
தறிகெட்ட இளைஞர்களின் கண்மூடித்தனமான கொண்டாட்டங்களால் எதிர்பாராவிதமாக உண்டாகிற விபத்தால் உயிரிழப்பு ஏற்பட்டு, அதனால் அவர்களின் பெற்றோர் அடையும் வேதனைதான் மிச்சம். அவர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தால் யாருக்கும் எப்பயனும் இல்லை. ஆக இதுபோன்றே இளைஞர்களின் ஒவ்வொரு கொண்டாட்டமும் சோகத்திலும் துக்கத்திலும் முடிகிறது. மகிழ்ச்சியை எவ்வாறு பகிர்ந்துகொள்வது, எவ்வாறு வெளிப்படுத்துவது என்றெல்லாம் அவர்களுக்கு வழிகாட்ட யாருமில்லை. இத்தகைய இளைஞர்களுக்கு ஏதேனும் துன்பம் வந்தால் அதை எப்படி எதிர்கொள்வதெனத் தெரியாமல் விழிபிதுங்கி மூலையில் அமர்ந்துவிடுவார்கள். ஆக இன்பமும் துன்பமும் அவர்களின் உள்ளத்தில் சொல்லமுடியாத பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிடுகின்றன.


ஏழைகளைச் சந்தித்து அவர்களின் பசிதீர உதவுதல், அநாதை இல்லங்களுக்குச் சென்று அங்குள்ள பிள்ளைகளுக்கு உணவளித்தல், சாலையோர முதியவர்களுக்கு உதவுதல், பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அமைத்துக் கொடுத்தல், ஆடையற்றோருக்கு ஆடை வாங்கிக் கொடுத்தல், மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறுதல், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தல், புத்தாண்டை முன்னிட்டு அன்னதானம் செய்தல், இரத்த தான முகாம் நடத்துதல், ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உதவுதல் உள்ளிட்ட எத்தனையெத்தனையோ நல்லறங்கள் செய்வதற்கான வழிகள் இருந்தும் அவற்றையெல்லாம் பெரும்பாலோர் செய்வதில்லை. ஏனென்றால் அத்தகைய நல்லற வழிகளை ஊடகங்கள் அவ்வளவாகக் காட்டுவதில்லை. 

   
மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்த வேண்டும், எது மகிழ்ச்சி என்று தெரியவில்லை. பார்ப்போரை முகம் சுழிக்க வைக்கும் விதத்திலும் பலவீனமான இதயமுடையோர் பயந்துபோகிற விதத்திலும்தான் அவர்களின் கொண்டாட்டங்கள் உள்ளன. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் திரைப்படக் காட்சிகள் என்றால் மிகையில்லை. அவைதாம் அவர்களின் முன்மாதிரி. அதில் காணும் காட்சிகள் அவர்களின் மனதுக்குள் ஊடுருவிவிட்டதால், அவற்றை அப்படியே அவர்கள் செய்து காட்டுகிறார்கள்.

 
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்/ துன்பம் உறுதல் இலன். (629) “இன்பம் வரும்போது மகிழ்ச்சியால் கூத்தாடாத ஒருவன் தனக்கு வரும் துன்பத்தைப் பொருட்படுத்த மாட்டான்” என்று தமிழ்ப் புலவர் கூறுகிறார். 

 
ஆக இன்பம் வந்தால் ஆடுவதும் இல்லை; துன்பம் வந்தால் சோர்ந்து விடுவதும் இல்லை. இரண்டும் வாழ்க்கையின் நியதிகள் என்ற இயல்பு நிலைக்கு வந்துவிடுகின்றான் சமநிலை மனதுடைய மனிதன். அத்தகையவன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் அனுபவித்து வாழ்கிறான். எனவே நாமும் இரண்டையும் சமமாகவே கருதி இரு நிலைகளிலும் எல்லை மீறாமல் மனநிலை மாறாமல் வாழப் பழகுவோம். 


-மனாருல் ஹுதா ஜனவரி: 2021
====================