திங்கள், 27 நவம்பர், 2023

அல்லாஹ்வின் உதவி எப்போது?

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

கடுமையான சோதனையில் சிக்கி, பல்வேறு சிரமங்களுக்கு ஆளானோர் கேட்கின்ற கேள்வி, அல்லாஹ்வின் உதவி எப்போது கிடைக்கும் என்பதுதான். அல்லாஹ் தன் அடியார்களைச் சோதித்துப் பார்க்கின்றான். அந்தச் சோதனைக் காலத்தில் மனிதர்கள் எவ்வாறு நடந்துகொள்கின்றார்கள்; சோதனைக் காலத்தில் ஈமான் (இறைநம்பிக்கை) கூடுகிறதா, குறைகிறதா அல்லது நடுநிலை வகிக்கிறதா என்பதைத் தெளிவுபடத் தெரிந்துகொள்வதற்காகவே அல்லாஹ் சோதிக்கிறான். அந்தச் சோதனையைப் பொறுமையோடு தாங்கிக்கொண்டு சகித்துக்கொண்டால் அல்லாஹ் தன் உதவியை அவனுக்கு வழங்குவான்.

அல்லாஹ் கூறுகின்றான்: (இறைநம்பிக்கை கொண்டோரே!) சிறிதளவு பயத்தாலும், பசியாலும்செல்வங்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் சேதத்தாலும் நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் சிரமங்களைச்) சகித்துக் கொண்டிருக்கிற பொறுமையாளர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள். (2: 155)

 

சோதனைகளைச் சகித்துக்கொண்டு பொறுமையோடு இருப்பவர்களுக்கு அல்லாஹ் நற்செய்தி கூறச் சொல்கிறான். ஆம்! பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி நற்கூலி வழங்கப்படும் (39: 10) என்ற இறைவசனம் இதனை உறுதிப்படுத்துகிறது.

 

அல்லாஹ் தன் அடியார்களுக்குச் சோதனையை ஏற்படுத்துவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன.  அதாவது பல்வேறு சோதனைகளைத் தாங்கிக்கொண்டு அவன் இந்த மார்க்கத்திலேயே நீடித்திருக்கின்றானா, அல்லது இம்மார்க்கத்தைப் புறக்கணித்துவிடுகின்றானா என்பதைச் சோதித்தறிகின்றான்.

 

 

மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்: பொய்யர்கள் யார், உண்மையாளர்கள் யார் என்று சோதிப்பதற்காகவே அல்லாஹ் சோதனையைக் கொடுக்கின்றான். லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறி ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்டுவிட்டால் சோதனை செய்யப்படாமல் விட்டுவிடப் படுவார்கள் என்று எண்ணிக்கொண்டார்களா? எனக் கேட்கின்றான். (29: 2-3) இந்த ஏகத்துவக் கலிமாவைச் சொல்லிவிட்டாலே சொர்க்கம் கிடைத்துவிடும் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது.

 

கப்பாப் பின் அல்அரத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கஅபாவின் நிழலில் தமது சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்தபோது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, “எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின்மீது நம்பிக்கைகொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழிதோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, இரம்பம் கொண்டு வரப்பட்டு அவரது தலைமீது வைக்கப்பட்டு அது இரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அ(ந்தக் கொடுமை யான)து அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை.

 

(பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரது இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்துவிடும். அ(ந்தக் கொடூரமான சித்திரவதையும் தீ)தும்கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) ஸன்ஆவிலிருந்து ஹளர மவ்த்வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தம் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்சமாட்டார். ஆயினும், நீங்கள்தாம் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகிறீர்கள்என்று சொன்னார்கள். (புகாரீ: 3612)

 

பிலால், கப்பாப் பின் அரத், அபூதர் ஃகிஃபாரீ ரளியல்லாஹு அன்ஹும் உள்ளிட்ட நபித்தோழர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டதற்காகப் பல்வேறு முறைகளில் மிகக் கடுமையாகச் சோதிக்கப்பட்டார்கள்; அவர்களுடைய உரிமையாளர்களால் தண்டிக்கப்பட்டார்கள். அவற்றையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து முறையிட்டார்கள். அப்போதுதான் நபியவர்கள், அவர்களுக்குமுன் வாழ்ந்தவர்கள் எப்படியெல்லாம் சோதனைக்கும் வேதனைக்கும் உள்ளாக்கப்பட்டார்கள் என்பதை விளக்கிக் கூறினார்கள்.

 

ஆக ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்ட யாரும் சோதனைக்கு உள்ளாக்கப்படாமல் இல்லை.  அவர்கள் காலத்தில் அவர்களுடைய இறைநம்பிக்கைக்கு ஏற்ப அவர்கள் சோதிக்கப்பட்டார்கள். நாம் நம்முடைய இறைநம்பிக்கைக்கு ஏற்பத் தற்காலத்தில் சோதிக்கப்படுகிறோம். அளவு வேண்டுமானால் கூடுதல் குறைவாக இருக்கலாம். ஆனால் சோதனை ஒன்றுதான். முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று ஊடகங்களால் முத்திரை குத்தப்பட்டு வஞ்சிக்கப்படுகிறோம்; சோதிக்கப்படுகிறோம். அதனால்  முஸ்லிம்களுக்குப் பிற சமய மக்கள் வாடகைக்கு வீடு கொடுப்பதில்லை; அல்லது தயங்கித் தயங்கி வாடகைக்கு விடுகின்றார்கள். எளிதான முறையில் தொழில் செய்ய முடிவதில்லை; உரிய நீதியைப் பெற முடியவில்லை. எல்லாத் தளங்களிலும் அநியாயம் செய்யப்படுகின்றோம். இதுபோன்ற சோதனைகளைத் தாங்கிக்கொண்டு பொறுமையோடு நாம் நம் ஈமானைக் காத்துக்கொண்டு இருந்தால் நிச்சயம் நமக்கான மாற்றுவழி பிறக்கும்.

 

அல்லாஹ் கூறுகின்றான்: இறுதியில் இறைத்தூதர்கள் (மக்கள்மீது) நம்பிக்கை இழந்து அவர்க(ளின் ஆதரவாளர்க)ளும் தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டதோ என்று எண்ணத்தொடங்கியபோது, அவர்களுக்கு நம் உதவி வந்தடைந்தது. நாம் நாடியவர்கள் பாதுகாக்கப்பட்டனர். குற்றம் செய்யும் மக்களைவிட்டு நம் வேதனையை எவராலும் நீக்கிவிட முடியாது. (12: 110)

 

இறைத்தூதர்களை நம்பிக்கைகொண்டவர்கள் நிராசையாகிவிட்ட நேரத்தில் திடீரென இறைவனின் உதவி வந்தது. இறைநம்பிக்கையாளர்கள் காப்பாற்றப்பட்டார்கள்; இறைமறுப்பாளர்கள் அழிக்கப்பட்டார்கள். இந்த  நிகழ்வு ஒவ்வோர் இறைத்தூதரின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. நபி நூஹ் அலைஹிஸ் ஸலாம் தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்து களைப்படைந்துவிட்ட நிலையில்இறுதியாக இறைவனின் ஆணைக்கேற்பக் கப்பல் செய்து அதில் இறைநம்பிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டபோது, மிகக் கடுமையான வெள்ளப் பிரளயம் ஏற்பட்டு, இறைமறுப்பாளர்கள் அனைவரும் அழிக்கப்பட்டார்கள் என்பது குர்ஆன் கூறும் வரலாறு.

 

அதுபோலவே நீண்ட காலப் பிரச்சாரத்திற்குப் பின்னும் இறைத்தூதர் லூத் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் போதனையை ஏற்றுக்கொள்ளாத இறைமறுப்பாளர்கள் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். இறுதியில், “நீங்கள் இவ்வூரைவிட்டுப் புறப்பட்டுவிடுங்கள்  என்ற அல்லாஹ்வின் கட்டளைக்கேற்பத் தம்மை நம்பிக்கைகொண்டவர்களை மட்டும் தம்மோடு அழைத்துக்கொண்டு அவ்வூரை விட்டுப் புறப்பட்டார்கள். அதன்பின் அவர்களுடைய மனைவி உள்பட அனைவரும் அழிக்கப்பட்டார்கள் என்பது வரலாறு. இவ்வாறே ஒவ்வோர் இறைத்தூதரும் சோதனைக்கு ஆளாக்கப்பட்டு, கடைசியில் இறையுதவியைப் பெற்றார்கள்; காப்பாற்றப்பட்டார்கள் என்றே குர்ஆன் கூறுகிறது.

 

 

இன்று உலக அளவில் முஸ்லிம்கள் பின்தங்கியவர்களாகவும் வலிமை குன்றியவர்களாகவும் இருக்கின்றார்கள். மிக விரைவில் இந்நிலை மாறும் என்ற நம்பிக்கையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யூதர்கள் ஃபலஸ்தீனில் முஸ்லிம்களைக் கொன்று குவிக்கின்றார்கள். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்படப் பலர் கொல்லப்படுகின்றார்கள். மருத்துவமனைகளையும் குறிவைத்துத் தாக்குகின்றார்கள்; போர் மரபையே யூதர்கள் மீறுகின்றார்கள். போரை நிறுத்துங்கள்என்று ஐ.நா. சபை கேட்டுக்கொண்டபின்னும் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கொன்று குவிக்கின்றார்கள். இத்தகைய கடினமான நேரத்திலும் அசைக்க முடியாத இறைநம்பிக்கையோடு ஃபலஸ்தீனர்கள் அங்கு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

 

அவர்களுடைய ஈமானின் உறுதியைக் கண்டு, விரைவில் அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்வான்; அக்கிரமக்காரர்களான இஸ்ரேலிய யூதர்களிடமிருந்து ஃபலஸ்தீன் மக்களுக்கு விடுதலை கொடுப்பான். அதுவரை அவர்கள் அமைதி காக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள ஃபலஸ்தீன் மக்களுக்காகவும் நமக்காகவும் நாம் அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதுதான் நம்முடைய ஒரே ஆயுதம். ஏந்திய கைகளை வெறும் கைகளாக அல்லாஹ் திருப்பிவிட மாட்டான் என்று உறுதியாக நம்புவோம்.

0000000000000000







வியாழன், 9 நவம்பர், 2023

ஏற்றத் தாழ்வுகள் களைந்த ஏந்தல் நபி

  

    

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28

--------------------------------------------

இந்தியாவில் தொழில்ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்படுவதும், மனிதர்களை அவர்கள் செய்யும் தொழிலை வைத்து மதிப்பதும் இகழ்வதும் காலங்காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. நாவிதர் ஒருவரின் பிள்ளை தன் தந்தையின் தொழிலையே செய்ய வேண்டும்; குயவர் ஒருவரின் பிள்ளை தன் தந்தையின் தொழிலான குயத்தொழிலையே செய்துவர வேண்டும். வாழையடி வாழையாகத் தொடர்கிற இப்பழக்கம் மக்கள் மத்தியில்  அவர்கள் செய்யும் தொழிலை வைத்து இழிவாகவும் கேவலமாகவும் நடத்தப்படுகிற நிலையை உண்டாக்கிவிட்டது.  பானை வனைதல், தலைமுடி சிரைத்தல், புதைகுழி தோண்டுதல், துணிதுவைத்தல் உள்ளிட்ட தொழில்களைக் குறிப்பிட்ட சாரார் மட்டுமே செய்ய வேண்டும் என்று சொல்லப்படாத விதி இருந்துவருகிறது.

 

பெரியார் உள்ளிட்ட சமூகச் சீர்திருத்தவாதிகள் தோன்றி, மக்கள் மத்தியில் புரையோடிப்போய்க் கிடந்த மூடப் பழக்கங்களையும், தீண்டாமைகளையும் ஒழிக்கப் பாடுபட்டார்கள். அப்படியிருந்தும் இன்று வரை மக்கள் மத்தியில் தீண்டாமையோ சாதிக்கொடுமைகளோ ஒழிந்த பாடில்லை; சாதிப் படுகொலைகள் இன்று வரை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன; தீண்டாமைக் கொடுமைகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.

  

அந்தந்தத் தொழிலை அவரவர்தாம் செய்ய வேண்டும் என்ற சமூகக் கட்டுப்பாடும் இருந்து வருகிறது. எல்லோரின் தலைமுடிகளையும் களைந்து, சிகையலங்காரம் செய்கிற தொழிலாளி, ‘நாவிதன்என்ற பெயரால்  சிறுமைப்படுத்தப்படுகின்றான். புதைகுழி தோண்டி, ஒருவரின் இறுதிச் சடங்கை நிறைவேற்றுகிற தொழிலாளி வெட்டியான்என்ற பெயரால் சிறுமைப்படுத்தப்படுகின்றான். உணவு உள்ளிட்ட பொருள்களைச் சமைக்கப் பயன்படுத்துகிற பானைகளைச் செய்துகொடுக்கிற தொழிலாளி, ‘குயவன்என்ற பெயரால்  சிறுமைப்படுத்தப்படுகின்றான். இவ்வாறு ஒவ்வொரு தொழிலாளியும் அவரவர் செய்கிற தொழிலை முன்னிலைப்படுத்திச் சிறுமைப்படுத்தப்படும் நிலை இன்று வரை தொடர்கிறது. அதனால் மக்கள் மத்தியில் உயர்வு தாழ்வு நீடிக்கிறது.

 

அண்மையில் நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி விஸ்வகர்மா யோஜனா எனும் திட்டத்தை அறிவித்தார்.  நாடு முழுவதும் உள்ள பாரம்பரியக் கைவினைஞர்களுக்கு உதவுமுகமாக செப்டம்பர் 17, 2023 அன்று இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இவர்கள் எந்தவிதப் பிணையமும் இல்லாமல் ஒரு இலட்சம் வரை நிதியுதவி பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். இத்திட்டத்தைச் சிலர் வரவேற்றாலும் பலர் இதனை விமர்சனம் செய்துள்ளார்கள். மக்களுள் சில பிரிவினர் செய்துவந்த குலத்தொழிலை ஊக்கப்படுத்துவதும், அவர்களைத் தொழில்ரீதியாக இழிவடையச் செய்வதும்தான் அரசின் நோக்கம் என்கின்றனர்.

இந்தத் திட்டத்தின் அடிப்படையில் செருப்பு தைப்பவரின் பிள்ளை செருப்புத் தைக்கும் தொழிலையும் பானை செய்யும் குயவரின் பிள்ளை பானை செய்யும் தொழிலையும், பறையடிப்பவரின் பிள்ளை பறையடிக்கும் தொழிலையும், துணிவெளுக்கும் வண்ணான் பிள்ளை துணி வெளுக்கும் தொழிலையும் அந்தந்தத் தொழில் செய்வோரின் பிள்ளைகள் தத்தம் தந்தையின் குலத்தொழிலையும் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு அரசு நிதியுதவி செய்ய முன்வருகிறது. இது சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமா? அல்லது மனிதர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்குமா?


இஸ்லாமிய மார்க்கத்தில் எந்தத் தொழிலையும் யாரும் செய்யலாம். குறிப்பிட்ட இனத்தவர்தாம் இந்தத் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடோ நிபந்தனையோ கிடையாது. யாரும் எந்தத் தொழிலையும் செய்யலாம். செய்யும் தொழிலை வைத்து ஒருவரை மதிப்பதோ இழிவாகக் கருதுவதோ இங்கு கிடையாது.  அதாவது வண்ணான், குயவர், வெட்டியான் என்ற அடைமொழிப் பெயர்கள் இங்கு கிடையாது. எல்லோரும் முஸ்லிம் என்றே அறியப்படுகின்றார்கள். ஒருவர் அடக்கத்தலத்தில் புதைகுழி (கப்ர்) தோண்டுபவராக இருந்தாலும் சமூகத்தில் அவர் செய்யும் தொழிலைவைத்து அழைக்கப்பட மாட்டார். இதுதான் இஸ்லாம் மனித சமுதாயத்திற்குத் தந்த மிகப்பெரும் அருட்கொடை எனலாம்.


மேலும் ஒருவர் செய்யும் தொழிலை வைத்து ஏற்றத்தாழ்வு ஏற்படாத வகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழிகாட்டியுள்ளார்கள். ஒவ்வொரு செயலையும் நன்மைக்குரிய அறச் செயல் என்ற வட்டத்திற்குள் கொண்டுவந்துள்ளார்கள். ஒவ்வொரு நற்செயலும் தர்மம் ஆகும் (புகாரீ: 6021) என்ற நபிமொழியின் அடிப்படையில் இறந்துவிட்ட சகோதரரின் பிரேதத்தை நல்லடக்கம் செய்வதற்காகப் புதைகுழி தோண்டுவதும் தர்மமே ஆகும். எனவே இறந்தவர் யாராக இருந்தாலும் அவர்தம் உறவினரோ மற்றவர்களோ புதைகுழி தோண்டத் தயாராகிவிடுவார்கள். அதற்கெனத் தனியாக ஓர் ஆள் நியமிக்கப்பட வேண்டிய கட்டாயம் முஸ்லிம்களுக்கு ஏற்படவில்லை. மேற்கண்ட நபிமொழியின் அடிப்படையில் முஸ்லிம்கள் செயல்படுவதால் யார் வேண்டுமானாலும் குழி தோண்டி, அந்த நன்மையை அடைந்துகொள்ளலாம். எனவே சில ஊர்களில் முஸ்லிம் இளைஞர்கள் பலர் புதைகுழி தோண்டப் போட்டிபோடுவர்.

 

அதுபோலவே இறந்துவிட்ட ஒருவரின் இறுதிக் கடமையை நிறைவேற்றுவதற்கு, பிற சமயங்களில் புரோகிதர் ஒருவர் தேவைப்படுவதைப் போலத் தனிப்பட்ட முறையில் ஆலிம் ஒருவர் தேவையில்லை.


இறந்துவிட்டவரின் மகன்களே அக்கடமையை நிறைவேற்றிவிடலாம். இறந்துவிட்ட தந்தைக்கு இறுதித் தொழுகையான பிரேதத் தொழுகை (ஜனாஸா) நடத்த மகனுக்கே முன்னுரிமை வழங்கப்படும். மகன் தொழுகை முறை குறித்து அறிந்திருக்கவில்லையானால் அவருடைய நெருங்கிய உறவினர்களுள் ஒருவர் தொழுகை நடத்தலாம். ஆக இஸ்லாமிய மார்க்கம் எல்லாவற்றையும் எளிமைப்படுத்தி, ஏற்றத்தாழ்வுகளை அகற்றிவிட்டது.

 

பிற சமயத்தவர் ஒருவர் இறந்துவிட்டால், அவர் ஏழையாக இருந்தால் வெகுசிலரே இடுகாடு வரை செல்வார்கள்.  செல்வாக்கு உள்ளவராக இருந்தால் ஒரு பெருங்கூட்டத்தினர் செல்வார்கள். ஆனால் முஸ்லிம் ஒருவர் இறந்துவிட்டால்-அவர் ஏழையாக இருந்தாலும் அந்த மஹல்லாவில் உள்ள பலர் அவரின் இறுதித் தொழுகையில் பங்கேற்பார்கள். குறிப்பிடத்தக்க தொகையினர் கப்ரஸ்தான்-அடக்கத்தலம் வரை சென்று, அடக்கம் செய்யப்பட்டபின், இறந்தவருக்காகப் பிரார்த்தனை செய்துவிட்டுத் திரும்புவார்கள். காரணம், இச்செயலையும் நன்மைக்குரியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆக்கிவிட்டார்கள்.


 ஏனென்றால் நம் உறவினர் அல்லாத முஸ்லிம் ஒருவர் இறந்துவிட்டதற்காக நாம் ஏன் அவரின் இறுதித் தொழுகையில் கலந்துகொள்ள வேண்டும்; நாம் ஏன்  அடக்கத்தலம் வரை சென்று கால்கடுக்க நிற்க வேண்டும்; நாம் ஏன் நம் நேரத்தை வீணடிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றலாம். அந்த எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாகவே மறுமையின் நன்மையைக் கூறியுள்ளார்கள். அந்த நபிமொழி இதோ: 



யார் ஜனாஸா தொழுகையில் பங்கேற்கின்றாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு; அடக்கம் செய்யப்படும் வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு''  என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  கூறினார்கள். அப்போது இரண்டு கீராத்கள் என்றால் என்ன?'' என வினவப்பட்டது. அதற்கவர்கள், “இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)'' என்றார்கள். (புகாரீ: 1325)

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே அடிமைத்தளையை உடைத்து, மனிதர்களுக்கு மத்தியில் இருந்த ஏற்றத்தாழ்வுகளையெல்லாம் களைந்துவிட்டார்கள். எஞ்சியிருந்த சின்னச்சின்ன  ஏற்றத்தாழ்வுகளையும் தம் இறுதி உபதேசத்தின்மூலம் நிர்மூலமாக்கிவிட்டார்கள். அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின்போது ஆற்றிய உரையின் ஒரு பகுதி இதோ:

 

மக்களே! அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் இறைவன் ஒருவனே; உங்கள் தந்தையும் ஒருவரே; அறிந்து கொள்ளுங்கள்! எந்த அரபியருக்கும் அரபியர் அல்லாதவரை விடவோ, அரபியர் அல்லாதவர் எவருக்கும் அரபியரைவிடவோ எந்தச் சிறப்பும் இல்லை. எந்த  வெள்ளையருக்கும் கருப்பரை விடவோ, எந்தக் கருப்பருக்கும் வெள்ளையரை விடவோ எந்தச் சிறப்பும் இல்லை. இறையச்சத்தைக் கொண்டே தவிர (யாரும் மற்றவரைவிடச் சிறப்பை அடைய முடியாது)... (முஸ்னது அஹ்மத்: 23489)

 

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். (49: 13) இவ்வுலகில் பிறந்த எல்லோரும் ஒரே பெற்றோரின் மூலமே பிறந்துள்ளோம். ஆகவே மனிதர்கள் மத்தியில் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை என்பதையே இந்த இறைவசனம் பறைசாற்றுகிறது. உன் தாய் உன்னைப் பெற்றாள்; என் தாய் என்னைப் பெற்றாள். இதில் உனக்கும் எனக்கும் என்ன ஏற்றத்தாழ்வு? “இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்கள்தாம் (49: 10) என்ற இறைவசனத்தின் அடிப்படையில் அனைவரும் சமம்தான். 

 

ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கைலாகு (முஸாஃபஹா) செய்தார். மரம் வெட்டியதால் அவருடைய கை காய்ச்சிப் போயிருந்தது. அந்த உழைப்பாளியின் கையில் நபியவர்கள் முத்தமிட்டார்கள். ஆக தொழில்ரீதியாக யாரையும் ஏற்றத்தாழ்வாக நபியவர்கள் நடத்தியதில்லை. எனவே நபியவர்களைப் பின்பற்றி வருகின்ற இந்தச் சமுதாயத்தில் எல்லோரும் சமமே. எத்தொழில் செய்வோரும் பள்ளிவாசலில் ஓரணியில் நின்று தோளோடு தோள் சேர்த்து ஒன்றாகத் தொழுவதைக் காணலாம்.

 

ஏற்றத்தாழ்வைக் களைய நபியவர்கள் கையாண்ட மற்றொரு வழிமுறை, ஒருவர் மற்றொருவரைச் சந்திக்கும்போது முகமன் கூறுதல் என்பதாகும். இதில் நான் ஏன் அவருக்கு முதலில் முகமன் கூற வேண்டும்; அவர் எனக்கு முதலில் முகமன் கூறட்டும் என்ற இறுமாப்பும் பெருமையும் ஏற்படும். வசதியானவன் ஏழையைப் பார்த்து, முதலில்  முகமன் கூற யோசிப்பான். நான் இந்தச் சாதாரண மனிதனுக்கு முதலில் முகமன் கூற வேண்டுமா, அவனே சொல்லட்டுமே என்று நினைப்பான். மாணவரைப் பார்த்த ஆசிரியர், அவன் நமக்கு முதலில் சொல்லட்டும் என நினைப்பார். இப்படி ஒவ்வோர் உயர்நிலையில் உள்ளோரும் தம் கீழ் நிலையில் உள்ளோரிடம் எதிர்பார்க்கலாம். இதையெல்லாம் முறியடிக்கும் வண்ணம், “அல்லாஹ்விடம், மக்களுள் மிகவும் சிறந்தவர் முதலில் முகமன் கூறுபவர் ஆவார் (அபூதாவூத்: 4522) என்று மொழிந்தார்கள்.

 

ஒவ்வொருவரும் தாமே அல்லாஹ்விடம் சிறந்தவராகவும் நெருக்கமானவராகவும் இருக்க விரும்புவார். ஆகவே முஸ்லிம்கள் யாரும் முதலில் முகமன் கூற யோசிப்பதில்லை. எதிரே வருபவர் முஸ்லிம் என்று தெரிந்துவிட்டால், இவர் அவருக்கு இயல்பாகவே முந்திக்கொண்டு முகமன் கூறிவிடுவார். ஆகவே இங்கு இவ்விஷயத்திலும் ஏற்றத்தாழ்வு முறியடிக்கப்படுகிறது என்பதை உணரலாம்.  

 

ஆகவே ஒருவர் செய்யும் தொழிலை வைத்தோ, பிறந்த குலத்தை வைத்தோ, நாட்டை வைத்தோ ஏற்றத்தாழ்வுகள் இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லை. மக்களின் பழக்கவழக்கங்களில், நடைமுறைகளில் சிற்சில வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் இருக்கலாம். அவற்றையெல்லாம் இஸ்லாமிய மார்க்கத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடாது. எனவே எந்த முஸ்லிமும் பிறப்பால், மொழியால், குலத்தால், தொழிலால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் இல்லை என்பதை மனத்தில் பதிய வைத்து, வாழ்க்கைப் பாதையில் நடைபோடுவோம்.

================================