வியாழன், 24 பிப்ரவரி, 2011

யாருக்கு உங்கள் வாக்கு?

இலட்சியத்தூது மாத இதழில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரையின் கருத்து இன்றும் பொருந்துகிறது. எனவே நான் அதை இங்கு வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.







புதன், 23 பிப்ரவரி, 2011

வெளிவந்துவிட்டது


முஹம்மது முஸ்தபா அல்ஜிபாலீ ஆங்கிலத்தில் எழுதிய முஸ்லிம் பேமிலி எனும் நூலை   இஸ்லாமிய இல்லறம் எனும் தலைப்பில் நான் (நூ அப்துல் ஹாதி பாகவி) 
 தமிழாக்கம் செய்துள்ளேன். படிக்கப் படிக்கச் சுவையான தமிழ் நூல்.

 சென்னையில் உள்ள சாஜிதா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.  இந்நூலில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகள், திருமணம் தொடர்பான அனைத்துத் தகவல்களும் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரங்களோடு அ முதல் ஃ வரை கூறப்பட்டுள்ளன. தம்பதிகள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய அரிய நூல். 
 பக்கங்கள்:  448  விலை:  ரூ. 170/-   நூலைப்பெற தொடர்புகொள்ள வேண்டிய செல்பேசி எண்:  9840977758




திங்கள், 14 பிப்ரவரி, 2011

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 17)

இஸ்ஹாக் நபியின் பிறப்பு

அல்லாஹ் கூறுகின்றான்: நல்லோர்களிலுள்ள நபியாக இஸ்ஹாக்கை அவருக்கு (மகனாகத் தருவதாக) நாம் நற்செய்தி கூறினோம். இன்னும் நாம் அவர்மீதும், இஸ்ஹாக்மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம். மேலும், அவ்விருவருடைய சந்ததியருள் நன்மை செய்பவர்களும் இருக்கின்றார்கள். மேலும், தமக்குத்தாமே பகிரங்கமாக அநியாயம் செய்துகொள்வோரும் இருக்கின்றனர். (37: 112-113)

வானவர்கள், லூத் (அலை) அவர்களுடைய சமுதாய மக்களின் இறைமறுப்பாலும் வரம்பு மீறிய பாவத்தாலும் அவர்களை அழிப்பதற்காக இப்ராஹீம் மற்றும் சார்ரா அம்மையாரைக் கடந்துசென்ற வேளையில், அவர்கள் அவ்விருவரையும் சந்தித்து மேற்கண்ட நற்செய்தியைத் தெரிவித்தனர். லூத் (அலை) அவர்களுடைய சமுதாயத்தினர் பற்றி-இன்ஷா அல்லாஹ்-வரும் பக்கங்களில் காணலாம்.

* அல்லாஹ் கூறுகின்றான்: நம் தூதர்கள், (இறைத்தூதர்) இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டுவந்து, (உம்மீது) சாந்தி நிலவட்டுமாக! என்று கூறினார்கள். அவரும் (பதிலுக்கு) (உங்கள்மீதும்) சாந்தி உண்டாவதாக! என்று கூறினார். பின்னர் சற்று நேரத்திற்குள், பொரித்த (இளம்) கன்று ஒன்றை அவர் கொண்டுவந்(து அவர்களுக்கு விருந்தளித்)தார்.

அவர்களின் கைகள் அதை நோக்கி நீளாததை அவர் கண்டபோது, அவர்களைப் புதிராகப் பார்த்தார். மனத்துக்குள் அவர்களைப் பற்றி அவர் அஞ்சினார். அப்போது அவர்கள், நீர் அஞ்சாதீர்; நிச்சயமாக நாங்கள் லூத்தின் சமூகத்தாரிடம் அனுப்பப்பட்டுள்ளோம் என்று கூறினார்கள். (அங்கு) அவருடைய துணைவியும் நின்றிருந்தார். அவர் (இதைக் கேட்டதும்) சிரித்தார். நாம் அவருக்கு இஸ்ஹாக் (பிறக்கப்போவது) குறித்தும், இஸ்ஹாக்குக்குப் பின்னர் (பேரர்) யஅகூப் குறித்தும் நற்செய்தி கூறினோம்.

அதற்கு அவர் (துணைவி), அந்தோ! துயரமே! நானும் முதியவளாகி, இதோ என் கணவரும் மூப்படைந்துவிட்ட நிலையில் எனக்குக் குழந்தை பிறக்குமா? நிச்சயமாக இது வியப்பான விஷயம்தான்! என்று கூறினார். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் முடிவு குறித்தா நீர் வியப்படைகிறீர்? (நபியின்) குடும்பத்தாரே! இறையருளும் அவன் வளங்களும் உங்களுக்குக் கிடைக்கட்டும்! நிச்சயமாக அவன் புகழுக்குரியோனும் மகத்துவமிக்கோனும் ஆவான் என்று கூறினார்கள்.(11: 69-73)

* (நபியே!) இப்ராஹீமின் விருந்தினர்கள் பற்றி அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவர்கள் அவரிடம் வந்ததும், சாந்தி உண்டாகட்டும்! என்று (முகமன்) கூறினார்கள். (அதற்கு) அவர், உங்களைக் குறித்து நாம் அச்சமடைகிறோம் என்று கூறினார். நீர் அஞ்சாதீர்! நிச்சயமாக நாங்கள், உமக்கு அறிவார்ந்த ஆண் குழந்தை (பிறக்கப்போவது) குறித்து நற்செய்தி கூறுகிறோம் என்று அவர்கள் கூறினர். என்னை முதுமை வந்தடைந்துவிட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகின்றீர்களா? எந்த அடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்? என்று (இப்ராஹீம்) வினவினார்.

உண்மையாகவே, உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம். எனவே, அவநம்பிக்கை கொள்வோருள் ஒருவராக நீர் ஆகிவிடாதீர்! என்று அவர்கள் கூறினர். (அதற்கு இப்ராஹீம்), வழிதவறியோர் தவிர வேறு யார் தம் இறைவனின் அருள்மீது அவநம்பிக்கை கொள்வார்? என்று கூறினார். (15: 51-56)
* இப்ராஹீமின் கண்ணியமான விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள், அவரிடம் நுழைந்தபோது, (அவரை நோக்கி, உங்கள் மீது) சாந்தி உண்டாவதாக! என்று கூறினார்கள். (அதற்கவர், உங்கள் மீது) சாந்தி உண்டாவதாக! என்று (பதில்) கூறினார். இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக இருக்கின்றார்களே (என்று எண்ணிக்கொண்டார்). எனினும், அவர் தம் குடும்பத்தாரிடம் விரைந்து சென்று, ஒரு கொழுத்த காளைக் கன்றை(ப் பொரித்து)க் கொண்டுவந்தார்.

அதை அவர்கள் முன்வைத்து, நீங்கள் உண்ணமாட்டீர்களா? என்று கேட்டார். (அவர்கள் அதை உண்ணாததால்) அவர்களைப் பற்றிய பயத்தை உணர்ந்தார். (இதனை அறிந்த) அவர்கள் `பயப்படாதீர்! எனக் கூறினர். மேலும், அவருக்கு அறிவுமிக்க குழந்தை (பிறக்கப்போகிறது) என்ற நற்செய்தியைக் கூறினர். பின்னர், இதைக் கேட்ட அவருடைய மனைவி சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக்கொண்டு நான் குழந்தைப்பேறற்ற முதியவளாயிற்றே! என்று கூறினார். அதற்கு அவர்கள், இவ்வாறே, உம் இறைவன் கூறினான். திண்ணமாக அவன் ஞானம் மிக்கோனும், (யாவற்றையும்) நன்கறிந்தோனும் ஆவான் என்று கூறினார்கள். (51: 24-30)
அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் கூறியுள்ள வானவர்கள் மூவர் என்று அறிஞர்கள் பலர் கூறியுள்ளனர். அவர்கள், ஜிப்ரீல், மீகாயீல், இஸ்ராஃபீல் ஆகியோர் ஆவர். இம்மூவரும் இப்ராஹீம் நபியிடம் வந்தபோது, அவர்களை விருந்தினர்கள் என்றே முதலில் அவர் நினைத்தார். எனவே, விருந்தினர்களைக் கவனிப்பதைப் போன்றே அவர் அவர்களைக் கவனித்தார். அவருடைய மாடுகளுள் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதை அவர்களுக்காகப் பொரித்தார். அதைக் கொண்டுவந்து அவர்கள் முன்னிலையில் வைத்தார்.

அவர்கள் அதைச் சாப்பிடத் தம் கைகளை நீட்டாதபோது, அவர்களிடம், நீங்கள் சாப்பிடமாட்டீர்களா? என்று வினவினார். முற்றிலும் சாப்பிடத் தயங்குபவர்களாக அவர்களைக் கண்டார். ஏனென்றால், வானவர்களுக்கு உண்கின்ற ஆசையோ தேவையோ இல்லை. வந்தவர்கள் சாப்பிடாமல் இருந்ததைக் கண்ட இப்ராஹீம் (அலை) அதிருப்தியடைந்தார். அதன் பின்னர், அவர்களைப் பற்றிய பயத்தையும் அவர் (தம்) மனதில் உணர்ந்தார். (ஆனால்) அவர்களோ (அவரைப் பார்த்து) பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத் சமுதாயத்தாரிடம் அனுப்பப்பட்டுள்ளோம் என்று கூறினார்கள். (11: 70)

அந்நேரத்தில் அல்லாஹ் கோபம் கொண்டுள்ள அவர்களை நினைத்து சார்ரா அம்மையார் மகிழ்ந்தார். அரபியர்கள் மற்றும் மற்றவர்களின் பழக்கத்தைப் போன்றே அவர் திண்ணையில் உறங்கிக்கொண்டிருந்தார். அந்த நற்செய்தியைக் கேட்டவுடன் அவர் சிரித்தார். அப்போது அல்லாஹ் கூறுகின்றான்: அவருக்கு நாம் இஸ்ஹாக்கைக் குறித்தும் இஸ்ஹாக்குக்குப்பின் யஅகூபையும் நற்செய்தி கூறினோம். (11: 71) அதாவது வந்திருந்த வானவர்கள் அவருக்கு அந்த நற்செய்தியைக் கூறினார்கள்.

இதைக் கேட்ட அவருடைய துணைவி சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக்கொண்டார். (51: 29) அதாவது ஆச்சரியமான செய்தியைக் கேட்டு, பெண்கள் செய்வதைப் போன்று செய்தார். அந்தோ! துயரமே! நானும் முதியவளாகி, இதோ என் கணவரும் மூப்படைந்துவிட்ட நிலையில் எனக்குக் குழந்தை பிறக்குமா? என்று கேட்டார்.(11: 72) அதாவது முதியவளாகவும் குழந்தை பெறமுடியாத மலடியாகவும் இருக்கின்ற என்னைப் போன்றவர் எப்படிக் குழந்தை பெற முடியும் என வினவினார். இவர் என்னுடைய கணவர்; இவர் முதியவர். இந்நிலையில் குழந்தை பிறக்குமா என்று அவர் ஆச்சரியப்பட்டார். இதனால்தான் அவர், ‘நிச்சயமாக இது வியப்பான விஷயம்தான்!’ என்று கூறினார். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் முடிவு குறித்தா நீர் வியப்படைகிறீர்? (நபியின்) குடும்பத்தாரே! இறையருளும் அவன் வளங்களும் உங்களுக்குக் கிடைக்கட்டும்! நிச்சயமாக, அவன் புகழுக்குரியோனும் மகத்துவமிக்கோனும் ஆவான் என்று கூறினார்கள். (11: 72-73)

இப்ராஹீம் (அலை) அவர்களின் ஆச்சரியம்

அதேபோலவே, இப்ராஹீம் நபியும் இந்த நற்செய்தியைக் கேட்டு, அதை உறுதிப்படுத்திக்கொண்டு, அதன் மூலம் ஆச்சரியப்பட்டார்; அவர் மகிழ்ந்தார். என்னை முதுமை வந்தடைந்துவிட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகின்றீர்களா? எந்த அடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்? என்று (இப்ராஹீம்) வினவினார்.

உண்மையாகவே, உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம். எனவே, அவநம்பிக்கை கொள்வோருள் ஒருவராக நீர் ஆகிவிடாதீர்! என்று அவர்கள் கூறினர். (15: 54-55) இந்த நற்செய்தி மூலம் அவர்கள் அச்செய்தியை உறுதிப்படுத்தினார்கள். அவ்விருவருக்கும் அவர்கள் அறிவுமிக்க ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என்ற நற்செய்தியைக் கூறினர். அவர்தாம் இஸ்மாயீலின் சகோதரர் இஸ்ஹாக் ஆவார். அவர் அறிவுமிக்க குழந்தை ஆவார்; அவர் உயர்வுக்கும் பொறுமைக்கும் உகந்தவர். அவர் தம் வாக்குறுதியை உண்மைப்படுத்துவதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பதிலும் இவ்வாறுதான் அல்லாஹ் அவரை வர்ணிக்கின்றான். அல்லாஹ் மற்றொரு வசனத்தில் கூறுகின்றான்: அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும் இஸ்ஹாக்குக்குப்பின் யஅகூபைப் பற்றியும் நற்செய்தி கூறினோம். (11: 71)


அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.





இளைஞர்களே எங்கு செல்கிறீர்?





திங்கள், 7 பிப்ரவரி, 2011

மாநபியும் மருத்துவமும்- மருத்துவ நூல்


இப்போது வெளிவந்து விட்டது `மாநபியும் மருத்துவமும்' அழகிய மருத்துவ நூல்.

அடையாள அட்டை இல்லாதோர் கவனிக்க!

கண்ணியத்திற்குரிய உலமாக்களே!
தமிழக அரசின் இலவச மிதிவண்டித் திட்டத்தின்கீழ் உலமாக்கள் மற்றும் மஸ்ஜித் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு மிக விரைவில் மிதிவண்டி வழங்கப்பட உள்ளதால் அடையாள அட்டை இல்லாதோர் அதைப் பெற முயற்சி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
சமுதாயச் சேவையில் உங்கள்
நூ. அப்துல் ஹாதி பாகவி