திங்கள், 30 செப்டம்பர், 2019

அரபி மொழி கற்போம் 1/10

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

திங்கள், 23 செப்டம்பர், 2019

ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

குறுக்கு வழியில் பொருளீட்டாதே!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

பொருளாதாரம் என்பது மனித வாழ்வியலுக்கான அடிப்படையாகும். அதைச் சரியான முறையில் ஈட்டுவது ஒவ்வோர் ஆணின் கடமையும் பொறுப்புமாகும். இருந்தாலும் பொருளாதாரத்தை ஈட்டுவதற்குமுன் இறைக்கடமைகளை நிறைவேற்றிவிட வேண்டும். அதுதான் ஒவ்வொரு மனிதனுக்கும் முதற்கடமை. இறைவன் மீது நம்பிக்கையில்லாமல் பொருளாதாரத்தின்மீதே தன் முழு நம்பிக்கையையும் குவித்துவிடுவதால்தான் அவன் எவ்வளவு பொருளீட்டினாலும் அது பற்றாக்குறையாகவே இருக்கிறது. அல்லது அவனுக்கு அது ஒரு பிரச்சனையாகவே இருந்துவருகிறது.

நன்றாகச் சம்பாதிக்கிற ஒருவன், தன் இறைவனை மறந்துவிட்டு, இறைக்கடமைகளையும் மறந்துவிட்டு, பொருளாதாரத்தைச் சேர்த்துக் குவிப்பதிலேயே கவனம் செலுத்துகிறான். இறுதியில், அவன் பாடுபட்டு ஈட்டிய பொருளாதாரம் அவனுக்கு எந்த மகிழ்ச்சியையும் மனஅமைதியையும் தரவில்லை என்பதை உணர்கிறான். இதைத் தொடக்கத்திலேயே உணர்ந்திருந்தால், அவன் மறுமைக்கான நன்மைகளைச் சேர்த்துக் கொண்டிருந்திருப்பான். அந்தோ பரிதாபம்! கடைசியில்தான் ஞானம் பிறக்கிறது.

இறைக்கடமைகளை முறைப்படி நிறைவேற்றிவிட்டுப் பொருளாதாரத்தை ஈட்ட முனைவதே புத்திசாலித்தனம். அதுவே இலாபகரமான வணிகத்தை மேற்கொள்ள நினைப்பவரின் செயலாகும். தொழுகை நேரம் வந்துவிட்டால் கடையைப் பூட்டிவிட்டு, பள்ளியை நோக்கி ஓடு; இறைவனை நாடு; அந்த நேரத்திலும் எதையாவது சம்பாதித்து விடலாமென உன் குயுக்தியால் எண்ணாதே. உனக்குத் தேவையான வாழ்வாதாரத்தை வாழ்நாளெல்லாம் தருபவன் வல்லோன் அல்லாஹ் அல்லவா? நீ சிறுவனாக இருந்ததிலிருந்து இன்று வரை அவன்தானே உனக்கான வாழ்வாதாரத்தைக் குறைவின்றி நிறைவாக வழங்கி வருகிறான். அவனுக்குத் தெரியாதா உனக்கு எவ்வளவு கொடுக்க வேண்டுமென்று? நீ அவனை மறந்து அதிக நேரம் உழைப்பதால் அவன் உனக்கு நிர்ணயித்ததைவிட மிகுதியாகச் சேர்த்துவிடலாமென எண்ணுகிறாயா? அது ஒருக்காலும் முடியாது.

நீ பொருளாதாரத்தை ஈட்டும்போது அளவு நிறுவையில் முறையாகக் கவனம் செலுத்து; மக்களை ஏமாற்றிப் பிழைக்காதே. நீ மக்களை ஏமாற்றவில்லை; உன்னை நீயே ஏமாற்றிக்கொள்கிறாய். ஆம்! ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு என்பதை நீ அறிந்தவன்தானே? நீ பிறரை ஏமாற்றினால் நீ ஒரு நாள் ஏமாந்துவிடுவாய் அல்லவா? ஏமாற்றுவதும் ஒரு வகையில் இறைநம்பிக்கைக்கு எதிரானதுதான். ஏனென்றால் பிறரை ஏமாற்றிக் குறுக்கு வழியில் சேர்த்துவிடலாம் என்றுதானே நீ எண்ணுகிறாய். ஏமாற்றி ஏமாற்றி ஏராளமாய்ச் சேர்த்தாலும் ஏகன் இறைவன் உனக்கென நிர்ணயித்ததைவிட எதையும் நீ சேர்த்துவிட முடியுமா? ஒருக்காலும் முடியாது.

மேலும் வானத்தை உயர்த்தி, தராசை (நீதியை)யும் வைத்தான். நீங்கள் தராசில் (நிறுப்பதில்) வரம்பு மீறாதிருப்பதற்காக. மேலும் நீங்கள் எடையை நீதியுடன் நிறுங்கள். தராசில் (அளவையில்) குறைத்துவிடாதீர்கள். (55: 7-9) என்று அல்லாஹ் கூறுகின்றான். தராசைப் படைத்த இறைவன், அளவையையும் நிறுவையையும் நீதியோடும் நேர்மையோடும் மேற்கொள்ளுமாறு கட்டளையிடுகின்றான். நீ நிறுக்கும் தராசு மக்களுக்கு எதிராகச் சாய்ந்தால், அது உன் வாழ்க்கையையே சாய்த்துவிடும். எனவே நீ நிறுக்கும்போது கவனம் தேவை. அது எப்போதும் நேராக நிற்க வேண்டும். அது மக்களுக்குச் சாதகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் உன் வாழ்க்கை நேராகவும் நிலையாகவும் இருக்கும்.

உண்ணும் பொருள்களிலும் உண்ணாப் பொருள்களிலும் கலப்படம் செய்கிறாயா? கலப்படம் செய்வது மிகப்பெரும் பாவம். அது மனித உயிர்களோடு விளையாடுவதாகும். குறுக்கு வழியில் பொருளீட்டுவதற்கான ஓர் உத்திதான் இது. ஆனால் மற்றவர்கள் செய்துவிட்டுப் போகட்டும். இறைநம்பிக்கைகொண்ட நீ செய்யலாமா? நீ செய்த கலப்படம் உனக்கே ஒரு நாள் வினையாக வந்துசேரும் என்பதை மறவாதே.

மக்களின் நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தி, குறுக்கு வழியில் பொருளீட்டிவிடலாமென எண்ணுகிறாயா? முடிகயிறு, தாயத்து, தகடு எனப் பல்வேறு வகைகளில் மக்களின் நம்பிக்கையை வளர்த்து, அவற்றில் நம்பிக்கையை ஊட்டி, நீ பொருளீட்டிக்கொண்டிருக்கிறாய். வேறு சிலரோ கைரேகை, ஆரூடம், வாஸ்து, நல்லநேரம், கெட்ட நேரம், சகுனம் உள்ளிட்டவற்றில் மக்களின் நம்பிக்கையைத் திசைதிருப்பி, சம்பாதிக்கிறார்கள். ஆனால் அந்தப் பொருளாதாரமெல்லாம் நிலைக்கின்றதா? மரத்தடியில் கிளிஜோசியம் சொல்பவன், தன் வாழ்நாள் முழுக்க அதையேதான் செய்துகொண்டிருக்கிறான். அப்படியே இறந்தும் போகிறான். அவன் தன் வாழ்வில் ஏற்றம் பெற்றதும் இல்லை. பிறரின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் வந்ததில்லை.

பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்ள எத்தனையெத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் சீரான, நேரான வழியில் ஈட்டிய பொருளாதாரம் மட்டுமே நிலைக்கும். குறுக்கு வழியில் ஈட்டிய செல்வம் நிலைக்காமல் சென்றுவிடும். குறுக்கு வழியில் ஈட்டிய பணம் மலைபோல் குவிந்தாலும் பனிபோல் உருகி உருக்குலைந்துபோய்விடும். ஒரு புறம் வருவதுபோல் தோன்றும்; மறுபுறம் அது கரைந்துகொண்டே இருக்கும். அது இறைவனின் அருள்நிறைந்த பொருளல்ல; இருள்நிறைந்த பொருள்; மாசடைந்த பொருள். ஆகவே அது தங்காது. பிள்ளைகளுக்கு நோய், மனைவிக்குத் தீராப்பிணி, வீண்செலவு எனக் கரைந்து போய்விடும். இறுதியில் ஒன்றும் மிஞ்சாது. எனவே குறுக்கு வழியில் பொருளீட்ட முனையாதே!


வியாபாரத்தில் பொய் சொல்வது தவிர்க்க முடியாததாக உள்ளதெனப் பெரும்பாலோர் கூறுவர். ஆனால் இறைநம்பிக்கை கொண்டுள்ள உனக்கு அது அறவே ஆகாது. ஏனெனில் இறைநம்பிக்கையும் பொய்யும் ஒன்று சேராதுஎன நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஒரு பொருளை விற்பனை செய்யும்போது இலாபம் வைத்துதான் எல்லோரும் விற்பார்கள். வாடிக்கையாளர்கள் அப்பொருளின் விலையைக் குறைத்துக் கேட்கும்போது, “இல்லைம்மா, அடக்க விலையே அவ்வளவுதான்என்றோ, “இல்லைம்மா, இத வித்தா எனக்கு அஞ்சு ரூபாய்தான் கிடைக்கும்என்றோ பொய் சொல்வது கூடாது. மாறாக, “இல்லைம்மா நீங்க கேக்குற விலைக்குக் கட்டாது; வராதுஎன்று சொல்லிவிடுவது நல்லது. ஆக, பொய் சொல்லி விற்பனை செய்து குறுக்கு வழியில் பொருளீட்ட முனையக் கூடாது. யார் நம்மை ஏமாற்றினாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை நினைவில்கொள்.

நீ பாடுபட்டு உழைத்துச் சேர்த்த பொருள் உனக்கு மட்டும் சொந்தமானதல்ல என்பதை உன் மனதில் நிறுத்து. உன் பொருளை ஏழைகளுக்கும் இயலாதோருக்கும் கொடுத்துதவு. அதுதான் உனக்கு மறுமைக்கான கதவு. அது மட்டுமல்ல நீ இறைவனின் உவப்பை நாடி ஒரு பக்கம் செலவு செய்யச் செய்ய மறுபக்கம் அல்லாஹ் உனக்குக் கொடுத்துக்கொண்டே இருப்பான் என்பது திண்ணம்.

எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தபோதிலும் அதற்குப் பகரமானதை அவன் அளிக்கிறான். அவன் வாழ்வாதாரங்களை நல்குவோருள் மிகச் சிறந்தவன்” (34: 39) என்று அல்லாஹ் கூறியுள்ளதை அசைபோட்டுப் பார். பின்னர் சற்றும் யோசிக்காமல் உன் செல்வத்தை ஏழைகளுக்கு வழங்கத் தொடங்கு. அதற்கான பிரதிபலன் நிச்சயம் உனக்குண்டு.

ஒவ்வொரு மாதமும் உன் வருவாயிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையைத் தானமாக வழங்குவதை வழக்கமாக ஆக்கிக்கொள். நிச்சயம் நீ வறுமையைப் பார்க்க மாட்டாய். ஆம்! நீ வழங்குகின்ற ஒரு பங்கை இன்முகத்தோடு இறைவன் ஏற்றுக்கொண்டு, உனக்குப் பத்து மடங்கு தருகிறான். அதனால் உன் செல்வம் பெருகுமே தவிர வறுமை வராது. அதேநேரத்தில் ஷைத்தானோ செலவழிக்கவிடாமல் உன்னைத் தடுப்பான்; மறுமைக்கான நன்மைகள் உனக்குக் கிடைக்கவிடாமல் கெடுப்பான்; வறுமை எண்ணத்தை அவன் உன் உள்ளத்தில் விதைத்து, உன்னைச் செலவு செய்யவிடாமல் தடுக்கவே முயல்வான். அவனை வென்றுதான் நீ தர்மம் செய்ய வேண்டும்.

யார் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்கிறாரோ அவருக்கு (ஒவ்வொரு சங்கடங்களிலிருந்தும்) வெளியேறும் வழியை ஆக்குவான். மேலும் அவர் எண்ணியிராத விதத்தில் அவருக்கு அவன் வாழ்வாதாரங்களை வழங்குவான்” (65: 2-3) என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே நீ வியாபாரம் செய்யும்போது இறையச்சத்தோடு செய்தால் இறைவன் உனக்கு எல்லா வழிகளிலும் உதவிசெய்வான். குறைவான இலாபமாக இருந்தாலும் அது அபிவிருத்திமிக்கதாக இருக்கும். வீண் செலவு ஏற்படாது; திடீர் அழிவு ஏற்படாது; வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவும் அமைதிசூழ்ந்ததாகவும் திகழும். மாறாக முறைகேடாகச் சம்பாதிக்க நினைத்தால் ஒரு பக்கம் வருவதுபோல் தோன்றி, மறுபக்கம் அழிந்துகொண்டே செல்லும்; அல்லாஹ்வின் திருப்தியோ அபிவிருத்தியோ அதில் இருக்காது என்பதை நினைவில்கொள்.

ஆக, குறுக்கு வழியில் பொருளீட்டுவதை விட்டுவிட்டு, நேரிய, சீரான பாதையில் பொருளீட்டத் தொடங்கு. அத்தோடு இறைவனை வணங்கு. அதுவே உன் ஈருலக வாழ்வின் உய்வுக்கு உகந்த வழியாகும்.
========================================









அரபி மொழி கற்போம் (1/8)

அல்லாஹ்வைச் சார்ந்திரு

சனி, 21 செப்டம்பர், 2019

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

அரபி மொழி கற்போம் (1/7)

ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

இன்னுமா உறக்கம்?




-
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இந்திய அளவில் முஸ்லிம்கள் ஆங்காங்கே துன்புறுத்தப்படுவதும் நொண்டிக் காரணங்கள் சொல்லிக் கொல்லப்படுவதும் பொய்க் காரணங்களைக் கூறி சிறைப்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதை நாம் ஊடகங்கள்மூலம் அறிந்துவருகிறோம். முஸ்லிம் சமுதாயத்தை மட்டும் குறி வைத்து, புதிய புதிய சட்டங்கள் இயற்றப்படுகின்றன; அவர்களுக்கான உரிமைகள் பறிக்கப்படுகின்றன; பொருளாதார ரீதியில் நசுக்கப்படுகிறார்கள்; நிமிர்ந்து வாழ முடியாதபடி ஒடுக்கப்படுகின்றார்கள்.

ஒருபுறம் அகண்ட பாரதம் என்ற முழக்கத்தோடு வலுக்கட்டாயமாக இந்திய எல்லை விரிவுபடுத்தப்படுகின்றது. மறுபக்கம் இந்தியக் குடிமக்களாக இதுவரை வாழ்ந்தோரை, நீங்களெல்லாம் இந்தியக் குடிமக்கள் பட்டியலில் இடம்பெறவில்லையெனக் கூறி நாடோடிகளாக்கத் திட்டமிடப்படுகிறது. இருபக்கமும் முஸ்லிம்களே பாதிக்கப்படுகிறார்கள். இன்று 19 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த நாட்டில் இந்தியக் குடிமக்கள் என்ற உரிமையை இழந்துவாடுகின்றார்கள். ஒவ்வொரு நாளும் தம்மை இந்தியக் குடிமகன் என்று நிரூபிக்கப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். உணவோ உறக்கமோ இல்லை. இந்திய நாட்டின் குடியரசு முன்னாள் தலைவர் ஃபக்ருத்தீன் அலீ அஹ்மது அவர்களின் குடும்பத்தார் இந்தியக் குடிமக்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள் என்றால் இது அநியாயத்தின் உச்சக்கட்டம் இல்லாமல் வேறென்ன?

தேசியப் புலனாய்வு முகமை என்ற பெயரில் ஒரு பாதுகாப்பு அமைப்பு. முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்வதுதான் அதன் பிரதானப் பணி. ஆங்காங்கே எதையாவது பொய்க் காரணத்தைக் கூறி கைது செய்து சிறையிலடைக்கிறார்கள். முஸ்லிம்களின் பொருளாதாரம் நசுக்கப்படுகிறது. நம் சகோதரிகள் வன்புணர்வு செய்யப்படுகின்றார்கள். நாள்தோறும் இந்திய நாட்டின் ஏதாவது ஒரு மூலையிலிருந்து முஸ்லிம்களுக்கான அநீதி அரங்கேறிக்கொண்டே இருக்கிறது. இவ்வளவு செய்திகளைப் பார்த்தும் கேட்டும் நம் உள்ளம் கசிந்திருக்கிறதா? நம் சகோதர சகோதரிகளுக்காக நாம் நம்மைப் படைத்த இறைவனிடம் மனமுருகிக் கையேந்தி இருக்கின்றோமா? அதிகாலைத் தூக்கத்திலிருந்து எழுந்து வந்து, அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்திருக்கின்றோமா?

முஸ்லிம் இளைஞர்கள் கழுத்தறுக்கப்பட்டுக் கொல்லப்படுவதை எதிரிகளே படம் பிடித்து அனுப்புகின்றார்கள். அதை நாம் பிறருக்குப் பகிர்ந்துகொண்டும் பரப்பிக்கொண்டும் இருக்கின்றோம். இதுதான் நாம் அவர்களுக்குச் செய்யும் கைம்மாறா? இதுதான் நம் சகோதர உணர்வா? நாம் நம்முடைய வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டாமா?

ஆயிரம் பேர் ஆயுதங்களோடும் கொலைவெறியோடும் தாக்க வந்த நேரத்தில், முந்நூற்றுப் பதிமூன்றுபேர் கொண்ட சிறுபடையினர் அல்லாஹ்வின் உதவியோடு எதிரிகளை வெற்றிகொண்டார்கள் அல்லவா? அல்லாஹ்வின் உதவி அவர்களுக்குக் கிடைத்ததற்கான காரணமென்ன? அவர்களின் அசைக்க முடியாத இறைநம்பிக்கைதானே? அத்தகைய இறைநம்பிக்கை தற்போது நம் உள்ளத்தில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அல்லாஹ்வின் உதவி யாருக்குக் கிடைக்கும்? அவனை நம்பியோருக்குக் கிடைக்கும். அவனை நம்பியோர் யார்? அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கைகொண்டு, அவர்களின் கட்டளைகளை அன்றாடம் பின்பற்றி நடப்பதுதான் இறைநம்பிக்கை. அத்தகைய இறைநம்பிக்கையாளர்களே உயர்வானவர்கள் என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
நீங்கள் தளர்ந்து விடாதீர்கள். கவலைப்படாதீர்கள். நீங்கள் (உண்மையில்) இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் நீங்களே மேலானவர்கள். (3: 139)

இறைநம்பிக்கையாளர்களே மேலானவர்கள் என்று அல்லாஹ் கூறுவது உண்மையானால் நாம் இன்று நெருக்கடியான வாழ்க்கையை எதிர்கொள்வதேன்? ஏனென்றால் நாம் முஸ்லிம்களாக இருக்கின்றோமே தவிர, முஃமின்களாக இல்லை. ஆம், இறைக்கட்டளைகளைச் செவ்வனே நிறைவேற்றினால்-ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றினால், செல்வர்கள் ஒவ்வோராண்டும் உரிய முறையில் கணக்கிட்டு ஜகாத்தைக் கொடுத்தால்-வாழ்வியல் நெருக்கடியும் பொருளாதார நெருக்கடியும் அகன்றுவிடும் என்பதில் ஐயமுண்டோ?

அல்லாஹ்வுக்குப் பிடித்தவாறு அவனுக்குப் பணிந்து வாழத் தொடங்கிவிட்டால், அவனுக்கு மட்டும் அஞ்சி வாழத் தொடங்கிவிட்டால், வேறு யாருக்கும் நாம் அஞ்சத் தேவையில்லை. அத்தகையோருக்கு நிம்மதியான வாழ்க்கையை இவ்வுலகிலும் மறுமையிலும் தருவதாக வாக்களித்துள்ளான். இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்!

ஆணாயினும், பெண்ணாயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல்களை எவர் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இம்மையில்) நல்ல வாழ்க்கையாக வாழச் செய்வோம். மேலும் (மறுமையிலோ) அவர்கள் செய்து கொண்டிருந்ததைவிட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம். (16: 97)

நம்பிக்கை கொள்வதோடு நல்லறங்களும் செய்து வர வேண்டுமென்பதே இறைக்கட்டளை. அதை நாம் செவ்வனே செய்யத் தொடங்கிவிட்டால் நம் நிலை மாறி, இதைவிட மேன்மையடையும். நம் அனைவரின் கைகளும் அதிகாலை நேரத்தில் அல்லாஹ்வின் சமூகத்தில் உயர்ந்தால், அநியாயக்காரர்களுக்கெதிராகக் கோரிக்கை வைத்தால், கருணையாளன் அல்லாஹ் அதை ஏற்காமல் இருப்பானா?

நாம் அனைவரும் ஐவேளை தொழுகத் தொடங்கிவிட்டால், அதற்கடுத்த நிலையைப் பற்றி யோசிக்கலாம். ஒவ்வொரு மஹல்லாவிலும் இமாம்-முத்தவல்லி இருவர் கூட்டணியில் அந்தந்த மஹல்லா மக்களின் குறைகளைக் களைந்து அவர்களின் நல்வாழ்வுக்கு உதவ வேண்டும். 5 முதல் 10 மஹல்லாக்கள் ஒருங்கிணைந்து ஷரீஅத் தீர்ப்பாயம் உருவாக்கி அதன்மூலம் திருமணம், தலாக் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கான தீர்வை நமக்குள்ளே தேடிக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். இவையெல்லாம் சீராக நடைபெற வேண்டுமெனில் நாம் ஒவ்வொரு வேளை தொழுகைக்கும் பள்ளியில் ஒன்றுகூட வேண்டும். குறிப்பாக பஜ்ர் நேரத்தில் மஹல்லா பள்ளிவாசலில் நடைபெறும் ஜமாஅத் தொழுகையில் கலந்துகொள்ள வேண்டும்.
அநியாயக்கார ஆட்சி தொடராமல் முடங்க வேண்டுமென்றால் நம் கைகள் ஒவ்வொரு நாளும் அதிகாலை நேரத்தில் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் உயர வேண்டும். தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் இத்தருணத்திலும் அல்லாஹ்வை அஞ்சியவாறே அவனை வழிபடச் செல்லாமல் போய்விட்டால் எதிரிகளுக்கு அஞ்சி அஞ்சியே வாழ வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டுவிடும். இந்நிலையிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும். அச்சமும் பயமுமின்றி நிம்மதியாய் இந்நிலத்தில் வாழ இறைவன் கட்டளைகளை இனிதே, இன்றே பின்பற்றி, ஒவ்வொருவரும் பள்ளிவாசலை நோக்கி விரைவோம். இதோ! இறைவன் நம் அருகில் இருக்கிறான். தொல்லைகளையும் துன்பங்களையும் நம்மீது சாட்டிய இறைவன் அவற்றை நீக்கக் காத்திருக்கிறான். அவற்றை நீக்குமாறு நாம் அவனிடம் கேட்கத் தயாரா என்பதுதான் இன்று நம்முன் உள்ள ஒரே கேள்வி.
============================




இஸ்லாம் வரையறுத்த பொருளாதாரம்

அரபி மொழி கற்போம் (1/6)

சனி, 14 செப்டம்பர், 2019

புதன், 11 செப்டம்பர், 2019

அரபி மொழி 5

திங்கள், 9 செப்டம்பர், 2019

அரபிமொழி கற்போம் (1/4)

சனி, 7 செப்டம்பர், 2019

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019