வியாழன், 25 ஆகஸ்ட், 2022

பிரார்த்தனையின் பலன்கள்-11

  

பிரார்த்தனையின் பலன்கள்-11

-மௌலவி முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி (இமாம், மதீனா மஸ்ஜித்-பட்டினப்பாக்கம், சென்னை)

---------------------

தொழுகைக்குப்பின்

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் பல்வேறு பிரார்த்தனைகளைச் செய்துள்ளார்கள். ஆனால் இன்றைய மக்களுள் பெரும்பாலோர் தொழுது முடித்ததும் அவசர அவசரமாகப் பள்ளியைவிட்டுப் புறப்பட்டுச் செல்கின்றார்கள். அவர்கள் தொழுத தொழுகையில் முழுமையான அமைதி கிடைத்ததா என்றுகூட அவர்களுக்குத் தெரியாது. தம்முடைய நாட்டங்களையும் தேவைகளையும் நிறைவேற்றித் தருமாறு படைத்த அல்லாஹ்விடம் கெஞ்சிக் கேட்க வேண்டும் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை; அதற்காக அவர்கள் நேரம் ஒதுக்குவதே இல்லை. 

 

கடமையான தொழுகையை முடித்தபின் பல்வேறு பிரார்த்தனைகளையும் திக்ருகளையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டுள்ளார்கள்; ஓதியுள்ளார்கள். அவற்றை நாம் மனனம் செய்துவைத்துக்கொண்டு நம்மால் இயன்ற அளவு நாள்தோறும் ஓதிவர வேண்டும். அதைத் தெரிவிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.    

 

முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எனது கையைப் பிடித்து, “முஆதே அல்லாஹ்வின் மீதாணையாக நான் உன்னை நேசிக்கின்றேன். அல்லாஹ்வின் மீதாணையாக நான் உன்னை நேசிக்கின்றேன். முஆதே ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும்

اَللَّهُمَّ أَعِنِّيْ عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ

 

அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரிக வஷுக்ரிக வஹுஸ்னி இபாததிக (இறைவா உன்னை நினைப்பதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் அழகிய முறையில் உன்னை வணங்குவதற்கும் எனக்கு உதவிபுரிவாயாக) என்று கூறுவதை நீ விட்டுவிடாதே என உனக்கு நான் வலியுறுத்துகிறேன்என்று கூறினார்கள். (அபூதாவூத்: 1301)

 

அல்லாஹ்வை நினைவுகூர்தல், அவனுக்கு நன்றி செலுத்துதல், அவனை நல்ல முறையில் வழிபடுதல் ஆகியவற்றை நபியவர்கள் கேட்டுள்ளார்கள். நம்முடைய ஒவ்வொரு கணமும் பொழுதும் நம்மைப் பரிபாலித்துப் பாதுகாக்கின்ற இறைவனுக்கு நாம் நன்றி செலுத்துபவர்களாக இருக்க வேண்டும். அந்த நன்றியுணர்வைத்தான் இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறான். நாம் அவனுக்கு நன்றி செலுத்துவோராக இருந்தால் அவன் நமக்கு மேன்மேலும் வழங்குவதாகக் கூறியுள்ளான்: நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் நிச்சயமாக நான் உங்களுக்கு (என் அருட்கொடைகளை) அதிகப்படுத்துவேன்.” (14: 7)

 

அவ்வாறு நன்றியுடையோராக இருப்பதும் இறைவனிடமிருந்தே நமக்குக் கிடைக்க வேண்டிய பெரும்பாக்கியமாகும். எனவேதான் தொழுது முடித்ததும் அவனிடமே அத்தகைய பாக்கியத்தைக் கேட்கிறோம். மேலும் நல்ல முறையில் அவனை வழிபடுவதையும் அவனிடமே கேட்கிறோம். அவனை நல்ல முறையில் வழிபடுகின்ற பாக்கியத்தையும் அவனே நமக்கு வழங்க வேண்டும். அவனுடைய கருணையின்றி அவனை நாம் நல்ல முறையில் வணங்கிவிட முடியாது.

 

ஸவ்பான் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகையை முடித்துவிட்டால், மூன்று தடவை அஸ்த்தஃக்ஃபிருல்லாஹ் (அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்புத் தேடுகிறேன்) என்று கூறுவார்கள். பின்னர்,

اَللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

அல்லாஹும்ம அன்த்தஸ் ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த்த யாதல் ஜலாலி வல்இக்ராம் (பொருள்: (இறைவா, நீ சாந்தியளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது. வலிமையும் மேன்மையும் உடையவனே! நீ சுபிட்சமிக்கவன்) என்று கூறுவார்கள். (இப்னுமாஜா: 918)

 

அல்லாஹ்தான் மக்களுக்கு அமைதியையும் நிம்மதியையும் வழங்குகிறான். அவனிடமிருந்தே அவை கிடைக்கப்பெறுகின்றன. எனவே அவனிடமே நாம் மனஅமைதியையும் நிம்மதியையும் கேட்க வேண்டும். அதையே ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் கேட்பதால் நமக்கு மனஅமைதி கிடைக்கிறது. அந்த மனஅமைதிக்காகத்தான் நாம் அவனை ஒவ்வொரு நாளும் ஐவேளை தொழுது வணங்குகிறோம். எனவே இந்தக் கீர்த்தனையை (திக்ரை) நாம் மனனம் செய்துகொண்டு ஓதி வரவேண்டும்.

 

உம்முஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்துள்ளார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதிகாலைத் தொழுகையை முடித்துவிட்டு, ஸலாம் கூறியபின்,

اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا

 

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க இல்மன் நாஃபிஅவ் வரிஸ்கன் தய்யிபவ் வஅமலம் முத்தகப்பலா (பொருள்: இறைவா! நான் உன்னிடம் பயனுள்ள கல்வியையும், தூய்மையான வாழ்வாதாரத்தையும், ஏற்றுக்கொள்ளத்தக்க செயல்பாடுகளையும் கேட்கிறேன்) என்று கூறுபவர்களாக இருந்தார்கள். (இப்னுமாஜா: 915)

 

இதில் மிக முக்கியமான மூன்று விஷயங்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டுள்ளார்கள். பயனுள்ள கல்வி, தூய்மையான வாழ்வாதாரம், ஏற்றுக்கொள்ளத்தக்க செயல்பாடு ஆகியவையே அவை. இம்மூன்றும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதவை ஆகும். ஒவ்வொருவரும் கேட்க வேண்டியவை ஆகும்.

 

பயனுள்ள கல்வியைக் கற்பதன்மூலம் நன்மை; அதனைக் கற்பிப்பதன் மூலம் நன்மை; அதை மக்கள் மத்தியில் பரப்புவதன்மூலம் நன்மை. இப்படிப் பலவிதமான நன்மைகளை உள்ளடக்கிய பயன்மிகு கல்வியை நபியவர்கள் கேட்டுள்ளார்கள். எனவே நாமும் பயனுள்ள கல்வியை இறைவனிடம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். 

 

இரண்டாவது தூய்மையான வாழ்வாதாரம்மிக முக்கியமானது. எப்படி வேண்டுமானாலும் சம்பாதித்து எதை வேண்டுமானாலும் சாப்பிடுதல் எனும் தீய பழக்கத்திலிருந்து விலகி, நியாயமாகச் சம்பாதித்து, தூய்மையான உணவை மட்டுமே உண்ண வேண்டும் என்ற நல்லெண்ணத்தை மனத்தில் பதிய வைத்துக்கொள்ளும் பொருட்டு தூய்மையான வாழ்வாதாரத்தை அல்லாஹ்விடம் கேட்டுள்ளார்கள். அதை நமக்கான பாடமாக விட்டுச் சென்றுள்ளார்கள். நாமும் அத்தகைய தூய்மையான வாழ்வாதாரத்தை அல்லாஹ்விடம் கேட்கும்போது நமக்கு அவன் தூய்மையான வாழ்வாதாரத்தை வழங்குவான். தூய்மையான உணவை உண்பதால் நற்சிந்தனைகளும் நல்லெண்ணங்களும் நமக்குள் ஏற்படுவதோடு இறையச்சமும் பெருகும். 

 

 

ஏற்றுக்கொள்ளத்தக்க செயல்பாடுமுற்றிலும் முக்கியமானதாகும். ஏனெனில் நாம் பல்வேறு முயற்சிகள் செய்து ஏராளமான நல்லறங்களைச் செய்கிறோம். அவை அல்லாஹ்விற்காகவே செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும். அவற்றை அவன் ஏற்றுக்கொண்டு நமக்கு அவற்றிற்கான நற்கூலியை மறுமையில் முழுமையாகத் தரவேண்டும். மாறாக நம்முடைய செயல்பாடுகள் அல்லாஹ்விடம் ஏற்கப்படாமல் போய்விட்டால் நாளை மறுமையில் நாம் நன்மை ஏதும் இல்லாதவர்களாக நிற்கவேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுவிடும். எனவே அல்லாஹ்வே எங்களின் நல்லறங்களை ஏற்றுக்கொள்வாயாகஎன்று நாம் ஒவ்வொரு நாளும் அவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.  

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது: இரண்டு நற்குணங்கள் உள்ளன. அவ்விரண்டையும் பின்பற்றி நடப்பவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருக்கமாட்டார். அவ்விரண்டும் எளிதானது.  (ஆனால்) அவற்றைச் செயல்படுத்துபவர் குறைவு. ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும், பத்துத் தடவை ஸுப்ஹானல்லாஹ், பத்துத் தடவை அல்லாஹு அக்பர், பத்துத் தடவை அல்ஹம்து லில்லாஹ் என்று கூறவேண்டும். (அதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் கைவிரலில் அதை எண்ணிக்காட்டியதை நான் பார்த்தேன். ஆக, அவற்றை நாவில் சொல்ல (ஐந்து தொழுகைகளுக்கும் சேர்த்து) நூற்றைம்பது தடவையாகும். தராசிலோ ஆயிரத்து ஐந்நூறு தடவையாகும்... (நூல்: இப்னுமாஜா: 916)

 

இந்த நபிமொழியின் அடிப்படையில் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் பத்துப் பத்துத் தடவை ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர் கூற வேண்டும் என்பதை நாம் அறிகிறோம். மற்றொரு நபிமொழியின் அடிப்படையில் மேற்கண்ட திக்ருகள் ஒவ்வொன்றையும் முப்பத்து மூன்று தடவை கூற வேண்டுமெனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆக இந்த நபிமொழியையும் நம்முள் பெரும்பாலோர் ஒவ்வொரு நாளும் செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் பின்வரும் பிரார்த்தனையைச் செய்துள்ளார்கள்.

முஃகீரா பின் ஷுஅபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் முன்னாள் அடிமை வர்ராத் ரஹிமஹுல்லாஹ் அறிவித்துள்ளார்கள்: முஃகீரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முஆவியா பின் அபீசுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (தொழுகையை முடித்து) ஸலாம் உரைத்தால் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும்,

لاَ إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْـمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ، اَللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الجَدُّ.

லாஇலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஉதைத்த வலா முஉத்திய லிமா மனஅத்த வலா யன்ஃபஉ தல் ஜத்தி மின்கல் ஜத்து.

 

(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு யாதோர் இணையுமில்லை; அவனுக்கே அரசாட்சி; அவனுக்கே புகழ் யாவும்; அவன் எல்லாப் பொருளின்மீதும் ஆற்றல்மிக்கவன். இறைவா! நீ கொடுக்க நினைத்ததைத் தடுப்போர் யாருமில்லை; நீ தடுக்க நினைத்ததைக் கொடுப்போர் யாருமில்லை; முயற்சியுடையோரின் எந்த முயற்சியும் உன்னையன்றி எப்பயனுமளிக்காது) என்று ஓதுபவர்களாக இருந்தார்கள். (நூல்: புகாரீ: 844)

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடமையான தொழுகையை முடித்ததும் மேற்கண்ட பிரார்த்தனைகளை ஓதக் கற்றுக்கொடுத்துள்ளதன் மூலம், ஒவ்வொருவரும் தத்தம் இறைநம்பிக்கையைப் புதுப்பித்துக்கொள்வதோடு, அல்லாஹ்வின் ஆற்றலை மீறி எதுவும் நடந்துவிடாது என்ற நம்பிக்கையையும் மனதில் பதியவைத்துக்கொள்ள வழிகாட்டியுள்ளார்கள். எனவே நம்முள் ஒருவர் இந்தப் பிரார்த்தனையைச் செய்கின்றபோது அவரின் இறைநம்பிக்கை மேன்மேலும் வலுப்படுகிறது; அது மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. அத்தகைய இறைநம்பிக்கை தொழுகின்ற ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஆணித்தரமாகப் பதிய வேண்டும்.

 

மேற்கண்ட பிரார்த்தனையின் உட்கருத்து அல்குர்ஆனில் காணப்படுகிறது. அல்லாஹ் மக்களுக்குத் திறக்கின்ற எந்த அருளையும், அதைத் தடுத்து நிறுத்துகின்றவர் யாருமில்லை. அவன் தடுத்து நிறுத்துவதை அதன் பிறகு அனுப்புபவன் யாருமில்லை. (35: 2)

 

ஆக இவ்வாறு பல்வேறு திக்ருகளை நபியவர்கள் ஓதியுள்ளார்கள். நாமும் அவற்றை ஓதி நம்முடைய இறைநம்பிக்கையை வலுப்படுத்திக்கொள்வோமாக.

=================






சனி, 20 ஆகஸ்ட், 2022

உடலுறுப்புகளைத் தானம் செய்யலாமா?

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

-----------------------------

மனித உடலின் உறுப்புகள் ஒவ்வொன்றும் மிக மிக முக்கியமானவை. அவை நமக்கு இறைவனால்  அடைக்கலப்பொருள்களாக வழங்கப்பட்டுள்ளன. எனவே அவற்றைப் பேணி காப்பது நம் கடமை.  நம் உடலில் உள்ள ஓர் உறுப்பு பாதிக்கப்பட்டாலும் அதைச் சரிசெய்வது அவ்வளவு எளிதானதன்று.  இன்று இருசக்கர வாகனங்களிலும் மகிழுந்துகளிலும் பயணம் செய்யும் இளைஞர்கள் மிக வேகமாக அவற்றைச் செலுத்துவதால் அவை அவர்களின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகின்றார்கள். அதனால் உயிரிழப்புகளும் உடலுறுப்புகள் இழப்புகளும் எதிர்பாராவிதமாக ஏற்படுகின்றன. உயிரிழப்பு அடைந்தோரின் வாழ்க்கை அத்தோடு முடிந்துபோய்விடுகிறது. ஆனால் உடலுறுப்புகளை இழந்து எஞ்சிய வாழ்க்கையைக் கழிக்க மிகவும் சிரமப்படுவோரைக் காணும்போதுதான் பரிதாபமாக இருக்கிறது. அவர்கள் அடையும் வேதனையும் அனுபவிக்கும் இன்னல்களும் சொல்லி மாளாது. 

 

மற்றொரு புறம் தவறான உணவுப் பழக்கம், போதைப் பழக்கம் ஆகியவற்றால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, அறுவைச் சிகிச்சை செய்ய நேரிடுகிறது. சர்க்கரை-நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு காலை எடுக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டு விடுகிறது. அதன்பின் அவர்கள் தம் எஞ்சிய வாழ்க்கையை மிகவும் சிரமப்பட்டே கழிக்க வேண்டியுள்ளது. மது, புகையிலை, சிகரெட், பீடி, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு அடிமையாகி, அவற்றைத் தொடர்ந்து உட்கொண்டு அதனால் உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டு, கருகி, அழுகி விடுவதுண்டு. அவற்றை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி அப்புறப்படுத்திவிட்டுப் புதிய உறுப்புகள் பொருத்த வேண்டிய நிலை ஏற்படும். கணையம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடலுறுப்புகள் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுவதில்லை. அவை கிடைத்து, உரிய முறையில் பொருத்தப்பட்டாலும் மீண்டும் பழையபடி இயல்பாக வாழ முடியுமா என்பது கேள்விக்குறியே ஆகும்.

 

உடலுறுப்புகள் தானம் செய்யப்படுவதை இஸ்லாமிய மார்க்கம் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில் மனிதன் கண்ணியமானவன். அவனுடைய உடலுறுப்புகளை அவனுடைய பயன்பாட்டிற்காகவே இறைவன் படைத்துள்ளான். அவற்றை அவன் உரிய முறையில் பயன்படுத்துவதும் பாதுகாப்பதும் அவனுடைய கடமையாகும். அவற்றைப் பிறருக்கு வழங்க அவனுக்கு அனுமதி இல்லை; எந்த உரிமையும் இல்லை.

 

இந்த வகையில் ஒருவரின் சிறுநீரகம் பழுதடைந்துவிட்டால் மற்றொருவரின் சிறுநீரகத்தை அவருக்குப் பொருத்தலாம் என்பது இன்றைய மருத்துவ அறிவியல் வளர்ச்சியாகும். ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்கள் இருப்பதால் அவற்றுள் ஒன்றைத் தானமாகக் கொடுத்தாலும் அவரால் நல்லபடியாக வாழ முடியும் என்பது இன்றைய மருத்துவர்களின் வாதம். இதனால் சிறுநீரகத் தானம்  மக்கள் மத்தியில் ஊக்குவிக்கப்படுகிறது; விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொண்டோருள் பெரும்பாலோர் சில ஆண்டுகளுக்கு மேல் வாழ முடிவதில்லை என்பதே உண்மை வரலாறு.

மாற்றுச் சிறுநீரகங்களைப் பெறுவதற்காகக் காத்திருப்போர் பலர் பல தில்லுமுல்லுகளைச் செய்துபிறருக்கு முதலில் கிடைக்க வேண்டியதைத் தமக்கு வழங்கிடுமாறு கோரி, அதற்காக மருத்துவர்களிடம் பேரம் பேசுகிறார்கள். பல இலட்சங்கள் அதற்காகக் கைமாறுகின்றன. சிலரின் ஏழ்மையைப் பயன்படுத்தி, பணத்தாசை காட்டி அவர்களிடமிருந்து சிறுநீரகங்கள் பெறப்படுகின்றன. சிலரின் உடல்களிலிருந்து சிறுநீரகங்கள் திருடப்படுகின்றன. இதன் பின்னணியில் ஒரு கள்ளச் சந்தையே நடைபெற்று வருகிறது.

 

சிறுநீரகங்களைத் தாண்டி, இன்று பல்வேறு உறுப்புகள் மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்படுகின்றன. ஆனால் அந்த உடலுறுப்புகள் இறந்தோரின் உடலிலிருந்து தானமாகப் பெறப்படுகின்றன. இறந்தோரின் உடலிலிருந்து மருத்துவத் துறைக்குத் தேவையான உடலுறுப்புகள்  எடுத்துக் கொள்ளப்பட்டு எஞ்சிய பாகங்களைத் தைத்துக் கொடுத்துவிடுவார்கள். உறவினர்கள் அதை வாங்கிச் சென்று, இறுதிச் சடங்குகளெல்லாம் செய்தபின் எரிப்பார்கள் அல்லது புதைப்பார்கள். இது கடந்த கால நிகழ்வு. ஆனால் இன்று உடல் முழுவதுமே மருத்துவத் துறையால் பயன்படுத்தப்படுகிறது. கை, கால், தோல், முடி உள்ளிட்ட அனைத்தும் மாற்று உறுப்புகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

 

இறந்துபோகின்ற எல்லோரின் உடலும் மருத்துவத் துறைக்குத் தானமாகக் கிடைத்துவிடுவதில்லை; அதுபோலவே எல்லா உறுப்புகளும் தானமாகக் கிடைத்துவிடுவதில்லை. எனவே மனித உறுப்புகளைப் பெற, அவற்றின்மூலம் பணம் சம்பாதிக்க, மனித விரோதிகளால் மனிதர்கள் கடத்தப்படுகிறார்கள்; அவர்களிடமிருந்து உறுப்புகள் திருடப்படுகின்றன. மேலும் கொலையுண்ட அனைத்து உடல்களும் உடற்கூறாய்வு (போஸ்ட் மார்ட்டம்) மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றிலிருந்து உடலுறுப்புகள் எந்த அனுமதியுமின்றி எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவையெல்லாம் சந்தையில் கள்ளத்தனமாக விற்கப்படுகின்றன.

 

இன்று மனித உறுப்புகளைப் பெறுவதற்காகப் பல்வேறு சதிவேலைகளும் அரங்கேற்றப்படுகின்றன.  விபத்தில் சிக்குண்டு, தலையில் அடிபட்டு நிரந்தர மயக்கநிலைக்குச் (கோமா) சென்றுவிட்டால் அவ்வளவுதான். "மூளைச்சாவு' என்ற வார்த்தையை இன்றைய மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.  அந்த ஒரு வார்த்தையை வைத்தே அவரின் உறவினர்களைப் பயமுறுத்திவிடுகின்றனர். இனி இவரால் எழுந்து நடக்கவோ சுயமாக இயங்கவோ முடியாது. இவரை நீங்களே வீட்டில் வைத்துப் பார்த்துக்கொள்கின்றீர்களா என்று கேட்பார்கள். உணர்வற்ற ஓர் உடலை நாள்தோறும் சுத்தப்படுத்தி, தேவையான மருத்துவ உதவிகளைச் செய்து கவனித்துக்கொள்ள இன்றைய அவசர உலகில் யார் முன்வருவார்

 

அவர்களின் தயக்கத்தைக் காணும் மருத்துவர்கள் அவர்களிடம், "மூளைச்சாவு அடைந்துள்ள உங்கள் மகன் இனி எழுந்து நடக்கப்போவதில்லை. அவனுடைய உடலுறுப்புகளைத் தானமாகக் கொடுத்தால் அதன்மூலம் பலருக்கு மறுவாழ்வு கொடுக்கலாம். உங்களுக்குப் பொருளாதார  உதவியும் கிடைக்கும்'' என்று கூறி அவர்களின் மனதை மாற்றுவார்கள். கடைசியில் மருத்துவர்கள் தம் பேச்சில் வெற்றிபெறுவார்கள். அவனைக் கருணைக்கொலை செய்ய, பெற்றோர் ஒத்துக்கொள்வார்கள். பின்னர் அவனுடைய உடலுறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக எடுக்கப்பட்டு, உரியவர்களுக்குப் பொருத்தப்படும்.

 

இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்த வரை, கருணைக் கொலை என்பது அறவே கூடாது; முற்றிலும் தடை செய்யப்பட்டதாகும். ஒருவேளை அவர் இறந்துவிட்டாலும் அவருடைய உடலுறுப்புகள் வெட்டியெடுக்கப்படுவதை-அங்ககீனப்படுத்தப்படுவதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

 

இதற்கு மாற்று வழியை இஸ்லாம் கூறுகிறது. அதாவது மனித உடலில் ஏதேனும் உறுப்பு சிதைவடைந்துவிட்டால் அவ்வுறுப்பைச் செயற்கையாகச் செய்து பொருத்திக்கொள்ளலாம். மூக்கு, பல் உள்ளிட்ட உடலின் பாகங்கள் பாதிக்கப்பட்ட தோழர்கள் நபியவர்களிடம் இது குறித்துக் கேட்டபோது, தங்கத்தால் அல்லது வெள்ளியால் அவ்வுறுப்புகளைச் செய்து, பொருத்திக் கொள்ளலாம் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுமதியளித்தார்கள்.

 

அப்துர் ரஹ்மான் பின் தரஃபா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது: அறியாமைக் காலத்தில் நடந்த குலாப் போரில் என் பாட்டனார் அர்ஃபஜா பின் அஸ்அத் அவர் களது மூக்கு துண்டிக்கப்பட்டது. எனவே அவர்கள் வெள்ளியால் ஆன (செயற்கை) மூக்கு ஒன்றைச் செய்து) பொருத்திக்கொண்டார்கள். (ஆனால்) அதிலிருந்து அவர்களுக்குத் துர்நாற்றம் வீசியது. எனவே நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், (தங்க மூக்கு செய்துகொள்ள) பணித்தார்கள். அவ்வாறே, அவர்கள் தங்க மூக்கு செய்து (பொருத்திக்) கொண்டார்கள். (அபூதாவூத்: 3696)

 

இறந்தவரின் எலும்புகளை ஒடிப்பது அவர் உயிருடன் இருக்கும்போது உடைப்பதைப் போன்றதாகும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (இப்னுமாஜா: 1605) இறந்த பின்னும் ஒருவரின் உடலிலிருந்து உறுப்புகளை எடுக்கக்கூடாது என்பதற்கு இதனை அறிஞர்கள் ஆதாரமாக முன்வைக்கின்றார்கள். மார்க்க அறிஞர்கள் மத்தியில் கருத்துவேறுபாடு உள்ள மிக நீண்ட விவாதத்தை உடையது இச்சட்டம்.

 

தற்காலத்தில் மருத்துவத்துறை மிகுந்த வளர்ச்சி கண்டுள்ளது. அதனடிப்படையில் சென்னை, கோவை ஆகிய நகரங்களில் செயற்கை உறுப்புகள் அரசு சார்பாகத் தயாரிக்கப்பட்டு, ஏழைகள் உள்ளிட்ட அனைவருக்கும் பொருத்தப்படுகின்றன.

 

மேலும் பிரிட்டன்-அமெரிக்கா ஆகிய இருநாட்டு விஞ்ஞானிகள் கூட்டாகச் சேர்ந்து மனிதத் திசுக்களைச் செயற்கையான முறையில் உருவாக்கியுள்ளனர். இதனால் எதிர்காலத்தில் மனித உடல் உறுப்புகளைப் புதிதாக உருவாக்க முடியும். உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்காக இனிச் செயற்கை உறுப்புகளை நம்பி இருக்கவோ மாற்று உறுப்புகளுக்காகக் காத்திருக்கவோ தேவையில்லை. மாறாக இந்தத் திசுக்களைக்கொண்டு புதிய உறுப்புகளை உருவாக்கிவிடலாம் என்கின்றனர்.

 

ஈரலைச் செயற்கையாக உருவாக்குவது குறித்து 2011ஆம் ஆண்டு சங்கீதா பாட்டியா என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் ஆய்வு செய்தனர். அதனை அடிப்படையாகக்கொண்டே தற்போது  ஆய்வுக் கூடத்தில் செயற்கைக் கல்லீரல், செயற்கை இதயம் உருவாக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு 3டி பிரிண்ட் செய்யப்பட்ட காதுகள், கண்கள் செயற்கையாகத் தயாரிக்கப்படுகின்றன. அதாவது பாதிக்கப்பட்ட மனிதரின் உடலிலிருந்து செல்களைப் பிரித்தெடுத்து, அதைக்கொண்டே செயற்கையான முறையில் இயற்கையான உடலுறுப்புகளைப் போன்று உருவாக்குகிறார்கள். 


ஆக இத்தனை மாற்று வழிகள் இருக்கின்றபோது இவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர மனித உறுப்புகளைத் தானம் செய்யக்கூடாது. மனித உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்குத் தடைவிதித்தால்தான் உடலுறுப்புகளுக்காகக் குழந்தைகள், சிறுவர்-சிறுமியர், பெண்கள் உள்ளிட்டோர் கடத்தப்படுவதும் மூளைச் சாவு எனும் பெயரில் கருணைக்கொலை செய்யப்படுவதும் குறையும்.

===============






வியாழன், 18 ஆகஸ்ட், 2022

வாய்ப்புக் கிடைத்தால்...

 


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

ஒவ்வொரு மனிதனும் பாவம் செய்யும் இயல்பிலேயே படைக்கப்பட்டுள்ளான். எனவே பாவம் செய்வது மனித இயல்பு. அதேநேரத்தில் இறைத்தூதர்கள் பாவம் செய்வதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் ஆவர். பாவம் செய்துவிட்டவன் அதை உணர்ந்து வருந்தி, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவதே அதற்கான பரிகாரமாகும்.  அத்தோடு மீண்டும் அப்பாவத்தைச் செய்யாமல் தவிர்ந்துகொள்ள வேண்டும். ஒருவேளை மீண்டும் அவன் அதே பாவத்தை அல்லது வேறு பாவத்தைச் செய்துவிட்டால், அதற்காக மீண்டும் அவன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. அதற்காக அல்லாஹ் அவனை வெறுத்து ஒதுக்கிவிடுவதில்லை. மீண்டும் மீண்டும் அவன் தன் அடியாரை மன்னிக்கத் தயாராக இருக்கின்றான்.

 

தவறு செய்பவரைக் கண்டால் அவரைச் சமுதாயம் கேவலமாகப் பார்ப்பதும் வெறுத்தொதுக்குவதும் இயல்பு.  ஆனால் வாய்ப்புக் கிடைத்தால் ஒவ்வொருவரும் பாவம் செய்பவரே. இறையச்சமுடையோருக்கு இதில் விதிவிலக்குண்டு. வாய்ப்புக் கிடைக்காத வரை எல்லோரும் நல்லவர்கள்தாம். வாய்ப்புக் கிடைத்துவிட்டால் மனிதன் பாவம் செய்யத் தலைப்பட்டுவிடுகின்றான். அதுவரை அவன் தன் ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டிருக்கின்றான். ஆனால் மிகுந்த இறையச்சமுடையோருக்கு வாய்ப்புக் கிடைத்தாலும், ‘இறைவன் பார்த்துக்கொண்டிருக்கின்றான்; அவன் நம்மோடு இருக்கின்றான்என்ற அச்ச உணர்வின் மிகுதியால் பாவம் செய்வதிலிருந்து தவிர்ந்துகொள்கின்றார்கள்; ஷைத்தானின் தூண்டிலில் சிக்காமல் தப்பித்துக்கொள்கின்றார்கள்.

 

இறைத்தூதர் யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அமைச்சரின் மனைவி தவறான எண்ணத்தோடு அவரைப் பிடித்து இழுத்தபோது அந்தத் தவறிலிருந்து தப்பியோடினார்கள். அவ்வாறு ஓடியபோது பின்புறத்திலிருந்து அவர்தம் சட்டையைப் பிடித்து இழுத்தார். அதில் அவரின் சட்டை கிழிந்துவிட்டது. பின்னர் அதுவே அவர் நிரபராதி என்பதற்கான ஆதாரமாக அமைந்தது. ஆக இறையச்சமுடையோர் பாவங்களிலிருந்து தப்பித்து ஓடிவிடுகின்றார்கள். மற்றவர்களோ வாய்ப்புக் கிடைத்தால் பாவத்தைச் செய்துவிடுகின்றார்கள். சராசரி மனிதனின் நிலை இதுதான்.

 

ஷைத்தானின் தூண்டலால் உந்தப்படுகின்ற மனிதன் பாவம் செய்துவிட்டாலும், அவன் அதனை உணர்ந்து வருந்தி, தன்னிடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும் என்பதே இறைவனின் நாட்டம். அவ்வாறு பாவமன்னிப்புக் கோருவதையே இறைவன் விரும்புகின்றான். ஏனெனில் ஷைத்தான் மனிதனின் பகிரங்க விரோதி. பாவம் செய்யுமாறு மனிதர்களைத் தூண்டிக்கொண்டே இருப்பதுதான் அவனுடைய வேலை. இறையச்சமுள்ளோர் அவனுடைய தூண்டலுக்கு ஆட்பட்டுவிடாமல் பாவம் செய்வதைவிட்டுத் தவிர்ந்துகொள்கின்றார்கள். சராசரி மனிதர்கள் அவனுடைய தூண்டலுக்கு இரையாகி, பாவம் செய்துவிடுகின்றார்கள். அவர்களுக்கான பரிகாரம்தான் பாவமன்னிப்புக் கோரிக்கை. இதைப் புரிந்துகொண்டால் பாவம் செய்தவரைப் பரிகாசம் செய்யும் போக்கிலிருந்து நாம் விலகிவிடுவோம்.

 

பாவம் செய்துவிட்டு அதற்கான தண்டனையைப் பெற்றுக்கொண்டவர் அப்பாவத்திலிருந்து தூய்மையடைந்துவிடுகிறார் என்பதற்கான சான்றாகப் பின்வரும் நபிமொழி அமைந்துள்ளது.

இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த ஒரு பெண், தாம் விபச்சாரம் புரிந்துவிட்டதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர். 'நான் கர்ப்பிணிஎன்று கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்பெண்ணின் காப்பாளரை அழைத்து(வரச் செய்து) இவரை நல்ல முறையில் கவனித்துவாருங்கள். இவர் குழந்தை பெற்றெடுத்ததும் எனக்குத் தெரிவியுங்கள்என்று கூறினார்கள். காப்பாளர் அவ்வாறே செய்தார்.

பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உத்தரவிட, அப்பெண்ணின் மீது அவருடைய துணிகள் கட்டப்பட்டன. பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை வழங்குமாறு உத்தரவிட, அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. பின்னர் அவருக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (ஜனாஸா) இறுதித் தொழுகை நடத்தினார்கள்.

 

அப்போது உமர் ரளியல்லாஹு அன்ஹு, “அல்லாஹ்வின் தூதரே! நீங்களே அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கி(டச் செய்து)விட்டு, பின்னர் நீங்களே அவருக்காகத் தொழவைக்கிறீர்களே?” என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புத் தேடிவிட்டார். மதீனாவாசிகளில் எழுபது பேர்களுக்கு அது பங்கிடப்பட அவர்கள் அனைவருக்கும் அது போதுமானதாக அமையும். அல்லாஹ்வுக்குத் தன் உயிரையே அர்ப்பணித்த (இப்பெண்ணின் அர்ப்பணத்)தைவிடச் சிறந்த ஒன்றை நீர் பார்த்திருக்கிறீரா?” என்று கேட்டார்கள். (திர்மிதீ: 1355)

 

ஒருவன் பாவம் செய்துவிட்டு, உரிய முறையில் பாவமன்னிப்புக் கோரிவிட்டால் இறைவன் அவனது பாவமன்னிப்பை ஏற்றுக்கொண்டு அவனைத் தூய்மைப்படுத்திவிடுகின்றான். அதாவது அவனது பாவங்களை முற்றிலுமாக அழித்துவிடுகின்றான் என்பதை இதன் மூலம் அறிகிறோம்.  இது இருபாலருக்கும் பொதுவானதாகும்.

 

அலுவலகத்தில் இலஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டவரை நாம் கேவலமாகப் பார்க்கலாம்; பரிகாசம் செய்யலாம்கீழ்த்தரமானவன் எனக் கருதலாம். ஆனால் அவனுடைய இடத்தில் நாம் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். நாமும் ஒருவேளை அதே தவறைச் செய்திருக்கலாம் அல்லவா? அத்தகைய வாய்ப்பும் சூழ்நிலையும் நமக்கு அமையவில்லை. எனவே நாம் அந்தத் தவறைச் செய்யவில்லை.

விபச்சாரம் செய்துவிட்டுக் காவல்துறையால் பிடிக்கப்பட்ட பெண்ணைக் கேவலமாகப் பார்க்கிறோம். ஆனால் அவளுடைய சூழ்நிலை என்ன, எதற்காக அந்தச் செயலில் ஈடுபட்டாள் எனச் சிந்திப்பதில்லை. அவளுக்கு ஏற்பட்ட வறுமைநிலையோ, சிரமமோ, நிர்ப்பந்தமோ நமக்கு ஏற்பட்டிருந்தால் நம் நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்று யோசிக்க வேண்டும்.

 

ஒருவன் பணத்தைத் திருடிவிட்டுக் காவல்துறையில் மாட்டிக்கொள்கிறான்; சிறையில் அடைக்கப்படுகின்றான். நாளிதழில் அவனுடைய நிழற்படத்தோடு செய்தி வருகிறது. அதைப் படிக்கின்ற நாம் அவனைக் கேவலமாகத் திட்டுகிறோம்; அசிங்கமாகப் பார்க்கிறோம். ஆனால் அவன் திருடியதற்கான காரணம் என்ன, ஏன் இந்தச் செயலைச் செய்தான் என்றெல்லாம் சிந்தித்தால், அவனது நிலை குறித்து விசாரித்தால் அவனுடைய உண்மை நிலை புரியும்; அவனுடைய சூழ்நிலையும் விளங்கும். எத்தனையோ பேர் சூழ்நிலைக் கைதிகளாய் மாட்டிக்கொண்டு தவறு செய்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

 

திருடுமாறும் பிச்சையெடுக்குமாறும் விபச்சாரம் செய்யுமாறும் அநியாயக்காரர்களால் பலர் தூண்டப்படுகின்றார்கள்; நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். அவர்களின் நிர்ப்பந்தத்தின் காரணமாகவே பலவீனர்கள் அந்தத் தவறைச் செய்துவருகின்றார்கள். ஓர் அதிகாரி நேர்மையாகச் செயல்படவில்லை என அவர்மீது நாம் கோபம் கொள்கின்றோம். ஆனால் நேர்மையாகச் செயல்படவிடாமல் அவரை அவர்தம் மேலதிகாரி நிர்ப்பந்தம் செய்யலாம். அதனால் அவரால் நேர்மையாகச் செயல்பட முடியாமல் போயிருக்கலாம் என்று நாம் யோசிப்பதில்லை.

 

ஒரு நீதிபதி நியாயமாகத் தீர்ப்புக் கூறவில்லை என அவர்மீது நாம் கோபம்கொள்கிறோம். ஆனால் அவர் நீதியோடும் நேர்மையோடும் தீர்ப்பளித்தால் அவருடைய குடும்பத்தைச் சிதைத்துவிடுவதாக ஓர் அநியாயக்கார அரசியல்வாதி மிரட்டுகிறான். எனவே அவரால் நேர்மையாகவும் நீதியாகவும் தீர்ப்பளிக்க இயலாமல் போகலாம். அந்த நிர்ப்பந்தத்தையும் மீறி ஒருவர் நீதியோடும் நேர்மையோடும் வழக்கை விசாரிக்கத் தொடங்கினால் அவர் அந்த அநியாயக்காரனால் கொல்லப்படுவார் என்பது உறுதி. கடந்த காலங்களில் இதைத்தான் நாம் கண்டிருக்கிறோம்.

 

ஆக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நிர்ப்பந்தம் இருக்கலாம். அரசியல் ரீதியான அழுத்தம், மேலதிகாரியின் நிர்ப்பந்தம், அநியாயக்காரர்களின் அடக்குமுறை என ஏதோ ஒரு வகையில் அழுத்தமோ நிர்ப்பந்தமோ நெருக்கடியோ இருக்கலாம். அதுவே அவர்கள் தவறு செய்யக் காரணமாக அமைந்துவிடுகின்றது; அல்லது நியாயமாக நடந்துகொள்ள முடியாமல் போய்விடுகிறது. ஆகவே அத்தகையோர்மீது நாம் கோபம்கொள்ளாமல் மேலாதிக்கம் செய்வோர்மீதுதான் நாம் கோபம் கொள்ள வேண்டும். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் பேருதவியாகும்.

 

ஆக ஷைத்தானின் தூண்டலாலும் அநியாயக்காரர்களின் வற்புறுத்தலாலும் பலர் தவறு செய்துகொண்டிருக்கின்றார்கள்; வாய்ப்புக் கிடைத்தால் பலர் தவறு செய்யத் துணிந்துவிடுகின்றார்கள்; பலர் வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில் இறையச்சம் மிகுந்தோரே வாய்ப்புக் கிடைத்தாலும் இறைவனை அஞ்சி, தவறு செய்வதைவிட்டுத் தவிர்ந்துகொள்கின்றார்கள். அத்தகைய இறையச்சம் மிகுந்தோராகவும் இறைவன் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கின்றான்என்ற எண்ணத்தோடும் நம் கடமைகளைச் செய்ய முயல்வோம்.

=================================








சனி, 13 ஆகஸ்ட், 2022

உளூ செய்த பின் ஓத வேண்டிய துஆ



أشهد أن لا إله إلا الله وحده لا شريكَ له، وأشهد أنَّ محمدًا عبده ورسوله، اللهم اجعلني من التَّوابين، واجعلني من المتطهرين"

அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு  வரஸூலுஹு. 

அல்லாஹும்மஜ் அல்னீ மினத் தவ்வாபீன் வஜ் அல்னீ மினல் முத்ததஹ்ஹிரீன்.

பொருள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். அவன் தனித்தவன்; அவனுக்கு இணை யாருமில்லை. 

நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாராகவும் திருத்தூதராகவும் இருக்கின்றார்கள் என்றும்  நான் சாட்சி கூறுகிறேன்.

இறைவா! பாவமன்னிப்புத் தேடுவோருள் ஒருவராகவும் தூய்மையாளர்களுள் ஒருவராகவும் என்னை ஆக்குவாயாக.

என்று ஓதினால் அவருக்காகச் சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படுகின்றன. அவர் விரும்பும் வாசல் வழியாக அதில் நுழைந்து கொள்ளலாம் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

(நூல் : திர்மிதீ)
_________________