சனி, 29 பிப்ரவரி, 2020

திங்கள், 24 பிப்ரவரி, 2020

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

சனி, 22 பிப்ரவரி, 2020

திரும்பப் பெறப்படுமா தேசியக் குடியுரிமைப் பதிவேடு?




-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இந்திய நாட்டில் இது வரை வாழ்ந்து வருகின்ற ஒவ்வொருவரும், "நான் இந்தியன்தான்' என்பதை உரிய ஆவணங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்ற வினோதமான ஒரு சட்டத்தை இந்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் (2019) இயற்றியுள்ளது. அன்று முதல் மக்கள் அந்தக் கருப்புச் சட்டத்திற்கெதிராக நாடு முழுவதும் போராடி வருகின்றார்கள். இந்திய நாடு முழுவதும் மட்டுமல்ல, பிற நாடுகளில் இந்தியர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் போராட்டத்தின்மூலம் அவர்கள் தம் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றார்கள். இந்தியர்கள் மட்டுமின்றி, பிற நாட்டு அதிபர்களும் இச்சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்கள்; தம் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

மக்களின் தொடர் போராட்டங்களைக் கண்டு அரசு அசைந்து கொடுத்ததாகத் தெரியவில்லை. அதேநேரத்தில் இந்தப் போராட்டத்தை வீரியமிழக்கச் செய்வதற்கான உள்ளடி வேலைகளையும் தில்லுமுல்லுகளையும் செய்து கொண்டிருக்கிறது அரசு. அத்தோடு போராட்டக்காரர்களை வெளிப்படையாகவே சுட்டுக் கொல்கிறது; அமைச்சர்கள் சிலரை ஏவி நாயைச் சுட்டுக் கொல்வதைப் போல் சுட்டுக் கொல்வோம் என்கிறது; போராட்டக்காரர்களைப் பகிரங்கமாகவே அச்சுறுத்தி வருகிறது.

மேலும் இது இந்திய மக்களைப் பாதிக்காது; இந்திய முஸ்லிம்களை அறவே பாதிக்காது என்றெல்லாம் பொய்யான வாக்குறுதிகளை அவ்வப்போது பிரதமர் மோடி தெரிவித்துக்கொண்டிருக்கிறார். உள்துறை இணையமைச்சர் மூலம், "என்ஆர்சி-யை நாடு முழுக்கச் செயல்படுத்துவது குறித்து இன்னும் நாங்கள் முடிவெடுக்கவே இல்லை'' என்று அறிக்கைவிடச் செய்கிறார். ஆனால் சட்டத்தை முன்மொழிந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா இதுவரை இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அப்படியானால் எப்படியும் இச்சட்டத்தைச் செயல்படுத்தியே தீருவோம் என்பதுதானே அரசின் நோக்கம்?

இதற்கிடையே இந்தக் கருப்புச் சட்டத்தின் வீரியத்தையும் பாதிப்புகளையும் அறியாத அப்பாவி முஸ்லிம்கள் சரியான முறையில் ஆதாரங்களைச் சமர்ப்பித்துவிட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லைதானே? என்று அப்பாவித்தனமாகக் கேட்கிறார்கள். ஆதாரங்களைச் சமர்ப்பிக்க இயலாதவாறுதான் இந்தக் கருப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தற்போது நம்மிடம் உள்ள எந்த ஆதாரமும் இந்தியக் குடியுரிமையை நிரூபிக்கத் தகுதியான சான்றாக ஆகாது. நம்முடைய பெற்றோரும் தாத்தாவும் இங்கேதான் பிறந்தார்கள் என்பதற்கான பிறப்புச் சான்றிதழ் ஆதாரத்தை நாம் நிரூபிக்க வேண்டும். சொத்துப் பத்திரம் உள்ளவர்கள் இதை நிரூபித்துவிடுவார்கள். மற்றவர்களெல்லாம் நிரூபிக்க முடியாமல் தடுப்பு முகாம்களுக்குச் செல்ல வேண்டியதுதான். இச்சட்டமும் சில ஆண்டுகளுக்குத்தான். பின்னர் வேறு ஒரு சட்டம் இயற்றப்படும். தப்பித்துக்கொண்டவர்களெல்லாம் பிடிக்கப்படுவார்கள். இதுதான் இந்த ஃபாசிச அரசின் சதித்திட்டம்.

"முஸ்லிம்கள் அனைவரும் இந்திய நாட்டை விட்டே வெளியேற வேண்டும்'' என்று பகிரங்கமாக அறிவிக்க முடியாது என்பதால்தான் இந்தக் கிடுக்கிப்பிடிச் சட்டம். இதிலிருந்து முஸ்லிம்கள் யாரும் தப்ப முடியாது. தொடக்கத்தில் சில இலட்சம் முஸ்லிம்களை மட்டும் குடியுரிமை இல்லாதவர்கள் என அறிவித்து, அவர்களை மட்டும் தடுப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்வார்கள். பின்னர் உங்கள் குடும்பத்தில் யாராவது தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்களா? என்றொரு வினாவைத் தொடுத்து, ஆம் என்றால் உங்களைக் கைது செய்கிறோம் என்று கூறி அழைத்துச் செல்வார்கள். அவருக்குக் குடியுரிமை இல்லாதபோது உங்களுக்கு மட்டும் எப்படி வரும்? என்று கேட்டு அவர்களையும் தடுப்பு முகாம்களில் அடைப்பார்கள். இதுதான் அவர்களின் படிப்படியான திட்டம்.

சிலர் உரிய ஆவணங்களைக் கொடுத்தால் விட்டுவிடுவார்கள் அல்லவா? என்று யோசித்து, தம் ஆவணங்களைச் சரிசெய்யத் தொடங்கிவிட்டார்கள். அந்தோ பரிதாபம்! அவர்கள் இன்னும் அஸ்ஸாம் மக்களின் ஆவணங்களைப் பார்க்கவில்லை போலும்! அவர்களிடம் எல்லா ஆதாரங்களும் இருக்கின்றன. அப்படி இருந்துமே பத்தொன்பது இலட்சம் பேர் குடியுரிமை அற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாகத் தடுப்பு முகாம்களுக்கு ஏற்றிச் செல்லத் தொடங்கிவிட்டார்கள். முப்பது ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றிய ஸனாவுல்லா என்பவருக்குக் குடியுரிமை இல்லை. முன்னாள் ஜனாதிபதி ஃபக்ருத்தீன் அலீ அஹ்மதுவின் தம்பி மகன் குடும்பத்தினருக்குக் குடியுரிமை இல்லை. அஸ்ஸாம் மாநில முன்னாள் துணை முதல்வர் சையது அன்வாரா என்பவருக்குக் குடியுரிமை இல்லை. இவர்களிடமும் தக்க ஆதாரம் இல்லையா? அதனால்தான் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளதா? ஆவணங்களைத் தயார் செய்வோர் சிந்திக்க வேண்டாமா?

இதற்கிடையில் தடுப்பு முகாம் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். "நடந்தால் இரண்டடி, இருந்தால் நான்கடி, படுத்தால் ஆறடி போதும்'' எனும் பாடல் வரிகளுக்கேற்ப, படுக்க ஆறடிகூடக் கிடையாதாம். படுக்க நான்கடிதானாம். கால் நீட்டிப் படுக்க இயலாதாம். இதுதான் தடுப்புக் காவல் மையத்தின் நிலை என அங்கு தொல்லையை அனுபவித்து, தற்போது விடுதலையாகியுள்ள பெண் கூறுகிறார்.

இச்சட்டத்தின் விளைவுகள் தெரியாமலா, அமெரிக்காவிலுள்ள சியாட்டில் நகர் மன்றத்தில் இந்தியாவின் இச்சட்டத்தை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது? இச்சட்டத்தின் விளைவுகள் தெரியாமலா, மலேசியப் பிரதமர் மஹாதிர் முஹம்மது கண்டனம் தெரிவித்துள்ளார்? இச்சட்டத்தின் விளைவுகள் தெரியாமலா, ஐரோப்பிய யூனியன் கவுன்சில் நாடாளுமன்றத்தில் இச்சட்டத்தை எதிர்த்துத் தீர்மானம் கொண்டு வந்தது? ஆனால் கடைசி நேரத்தில் இந்தியாவின் அதீத தலையீட்டால் அத்தீர்மானம் நிறைவேற்றாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் விளைவுகளும் கோரமுகமும் தெரியாமலா ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது? இச்சட்டத்தின் விளைவுகள் தெரியாமலா, வக்கீல்களும் ஓய்வுபெற்ற நீதிபதிகளும் சேர்ந்து போராட்டம் செய்கிறார்கள்? இச்சட்டத்தின் ஆழம் புரியாமலா பல்வேறு நாடுகளிலுள்ள படித்த அறிஞர்களும் இளைஞர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்? இச்சட்டத்தின் கொடுமை புரியாமலா, டெல்லியின் ஷாஹீன்பாக் எனுமிடத்தில் இரண்டு மாதங்களாக முகாமிட்டு பெண்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்?

ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக்கொள்வதற்காகத்தான் இத்தகைய இனச் சுத்திகரிப்பு வேலையைச் செய்யத் துணிகிறார்கள் இந்த அக்கிரமக்காரர்கள். இலங்கையில் புத்த பிக்குகள் முஸ்லிம்களைக் கொன்றொழித்த நிகழ்வை மறக்க முடியுமா? சீன அரசு உய்கூர் முஸ்லிம்களைத் தடுப்புக் காவல் மையத்தில் வதை செய்வதை மறக்க முடியுமா? இஸ்ரேல் ஃகாஸா முஸ்லிம்களை இலட்சக் கணக்கில் கொன்றதையும், தொடர்ந்து அக்கிரமங்கள் செய்து வருவதையும் மறக்க முடியுமா? பர்மாவில் புத்த பிக்குகள் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு இழைத்த கொடுமையை மறக்க முடியுமா? இப்படி உலகின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் அநாதைகளாக, நாடோடிகளாக ஆக்கப்படுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. யாரெல்லாம் முஸ்லிம்களை அழிக்கின்றார்களோ அவர்களைத் தம் நாட்டிற்கு அழைத்து விருந்து கொடுப்பதும் அவர்களை அவர்களின் நாட்டிற்கே சென்று சந்திப்பதும்தான் நம் பிரதமரின் தலையாய பணி.

குடியுரிமைப் பதிவேட்டில் நம் பெயர் இடம்பெறவில்லையானால் நமக்கு எந்த உரிமையும் கிடைக்காதா? பாஸ்போர்ட்கூடக் கிடைக்காதா? என்று சிலர் அப்பாவித்தனமாகக் கேட்கிறார்கள். பாஸ்போர்ட் கிடைத்தால் வேறு ஏதேனும் நாட்டிற்காவது சென்றுவிடலாமே என்பது அவர்களின் எண்ணம். ஆம். எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்டுவிடும். முதன்முதலில் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படும். பின்னர் ஒவ்வொன்றாக மறுக்கப்படும். தற்போதே பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில்தான் முஸ்லிம்களாகிய நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படியிருக்கும்போது நாட்டின் குடியுரிமையை இழந்தபின் எந்த உரிமைதான் கிடைக்கும். உரிமைகள் மறுக்கப்பட்டு மனதளவில் சிதைக்கப்பட்டு, கடைநிலை மக்களாக நடத்தப்பட்டு, வாழும் சடலங்களாகத் திரிய விடுவார்கள். அப்போது முஸ்லிம்கள் தம் இறைநம்பிக்கை (ஈமான்) உடைய ஆற்றலையும் இழந்து நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அத்தகைய வேளையில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதை மனிதன் சொல்லத் தொடங்குவான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒரு மனிதர் (மற்றொரு மனிதரின்) மண்ணறையை (கப்ரை)க் கடந்து செல்லும்போது, அதன்மீது அவர் படுத்துப் புரண்டவாறு "அந்தோ! நான் இந்த மண்ணறையில் இருப்பவரது இடத்தில் இருக்கக் கூடாதா'' என்று கூறாத வரை உலகம் அழியாது. இ(வ்வாறு அவர் செய்வ)தற்கு, அவர் (வாழ்க்கையில்) சந்திக்கும் சோதனையே காரணமாக இருக்குமே தவிர, மார்க்கம் காரணமாக இருக்காது. (இப்னுமாஜா: 4027) வதை முகாமின் கொடுமையை அனுபவிப்போரின் வாயிலிருந்து இத்தகைய வார்த்தைகளே வெளிப்படும்.

ஆட்சியாளர்கள் குடியுரிமைப் பதிவேடு எனும் சட்டத்தைத் திரும்பப் பெற மாட்டார்கள். முன்னுக்குப்பின் முரணாக மட்டுமே பேசிக்கொண்டிருப்பார்கள். எப்படியாகிலும் அதைச் செயல்படுத்தவே எத்தனிப்பார்கள். இவர்களின் நெஞ்சங்களில் மறைத்து வைத்துள்ள வஞ்சங்களைச் செயல்படுத்தவே முயல்வார்கள். "இறைவா! இவர்களின் ஆட்சியை அடியோடு அழித்தொழிப்பாயாக!'' என்று பிரார்த்தனை செய்வதே நம் கையில் எஞ்சியுள்ளது.
==================================================






அல்லாஹ்வுக்காக அழகிய கடன்

சனி, 15 பிப்ரவரி, 2020

திங்கள், 10 பிப்ரவரி, 2020

இஸ்லாத்தின் தூண்...


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
-------------------------------------------------------------

இன்றைய அநியாயக்கார ஆட்சிக்கு எதிராக ஆங்காங்கே மக்கள் கண்டனப் பேரணி, கண்டனப் போராட்டம், அமைதிப் பேரணி, மனித சங்கிலிப் போராட்டம் முதலானவற்றை நடத்துகின்றார்கள். அத்தோடு துஆ மஜ்லிஸ், ஸலவாத் மஜ்லிஸ், புர்தா மஜ்லிஸ், நோன்பு நோற்றல், குனூத் ஓதுதல் உள்ளிட்ட ஆன்மிகச் செயல்பாடுகளிலும் ஈடுபடுகின்றார்கள். இதையெல்லாம் குறிப்பிட்ட நாள்களில் செய்து முடித்துவிட்டுக் கலைந்துவிடுவார்கள். ஆனால் அல்லாஹ் அடியார்களிடம் எதிர்பார்ப்பதென்ன? எதற்காக மனிதன் படைக்கப்பட்டுள்ளதாக இறைவன் திருக்குர்ஆனில் கூறுகின்றான்? அந்த வழியை நோக்கி நாம் அவர்களை அழைக்க வேண்டாமா? அந்த வழிபாட்டை நோக்கி மக்கள் சுயமாக விரைந்து வர வேண்டாமா?

ஒவ்வோர் ஆணும் பெண்ணும் தன்னைப் படைத்த இறைவனை ஒவ்வொரு நாளும் ஐவேளை தொழுக வேண்டுமல்லவா? அதற்காகத்தானே அல்லாஹ் இந்த மனித இனத்தைப் படைத்துள்ளான்? அதை ஏன் நாம் மறந்தோம்? தொழுகை எனும் வழிபாட்டில் நாம் குறையுடையோராக இருக்கும் காலம் வரை சோதனைகள் நம்மை ஒன்றன்பின் ஒன்றாகத் தொடரவே செய்யும். ஐவேளைத் தொழுகைதானே ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர்மூச்சாக இருக்க வேண்டும்?

ஒருவன் பிற வேலைகளைச் செய்கிறானோ இல்லையோ ஐவேளை தொழுதுதானே ஆக வேண்டும்? ஒவ்வொரு நாளும் மனிதன் தன் இறைவனுக்கு மாறு செய்துவிட்டு, சோதனைக் காலத்தில் இறைவா! என்னைக் காப்பாற்று!என்று பிரார்த்தனை செய்தால் அவன் ஏற்றுக்கொள்வானா? சோதனைதான் நீங்கிவிடுமா?

ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர்மூச்சான தொழுகையைத் தவறவிடலாமா? அதிகாலை நேரத்தில் ஃபஜ்ர் தொழுகாமல் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருக்கின்றார்கள். லுஹர், அஸர், மஃக்ரிப், இஷா ஆகிய தொழுகை நேரங்கள் உலக அலுவல்களிலும் பொருளீட்டுவதிலும் கழிந்துவிடுகின்றன. வாரம் ஒரு தடவை வெள்ளிக்கிழமை மட்டும் தொழுதால் போதும் என்ற எண்ணமே பலரின் உள்ளத்தில் பதிந்துகிடக்கிறது. தொழுகையைக் குறித்து அறிந்தோரும் நேரம் தவறித் தொழுவதையும், அசட்டையாகத் தொழுவதையும் உரிய முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதையும் காண முடிகின்றது. கூட்டுத் தொழுகையில் (ஷமாஅத்) பங்கு கொள்ளாமல் தாமதமாக வந்து, தனித்துத் தொழுவோர் பலருண்டு. இவ்வளவு அசட்டையாகவும் கவனக் குறைவாகவும் இருந்தால் அல்லாஹ்வின் கோபமும் சினமும் அத்தகையோர்மீது ஏற்படாமல் எவ்வாறு தவிர்த்துக்கொள்ள முடியும்?

மனிதன் ஒவ்வொரு நாளும் தான் செய்ய வேண்டிய எச்செயலையும் தவற விடுவதில்லை. எல்லாவற்றையும் செவ்வனே செய்துகொள்கிறான். எல்லாவற்றிற்கும் நேரம் ஒதுக்க முடிகின்ற அவனுக்கு, தன்னைப் படைத்த இறைவனை வணங்க நேரம் ஒதுக்க முடியவில்லை என்பது வியப்பாக உள்ளது. அப்படியானால் அவனுக்கு அதன் முக்கியத்துவம் இன்னும் விளங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜுனைதுல் பஃக்தாதி (ரஹ்) அவர்கள் மிகப்பெரும் இறைநேசர். அவர்தம் பாசறையில் பற்பல சீடர்கள். அவர்தம் கண்ணியத்தையும் உயர்வையும் கேள்விப்பட்டு புதிதாக ஒரு சீடர் அங்கே வருகிறார். பத்தாண்டுகளாகத் தங்கியிருக்கிறார். தம் ஆன்மிக ஆசானின் செயல்பாடுகளை உற்று நோக்குகிறார். அவர்தம் செயல்பாடுகளில் ஆச்சரியமோ அற்புதமோ ஏதாவது வெளிப்படுகிறதா என்று எதிர்பார்த்துச் சோர்ந்துபோன அவர் தம் ஊருக்குத் திரும்ப முற்படுகிறார். அதைத் தம் ஆன்மிக ஆசானிடம் தெரிவிக்கிறார். இவ்வளவு காலம் தங்கியிருந்த நீ, எதற்காகத் திடீரென ஊருக்குப் புறப்படுகிறாய்?” என்று வினவ, “நான் தங்களின் உயர்வையும் சிறப்பையும் கேள்விப்பட்டு, தங்களின் செயல்களில் அற்புதம் எதையாவது காணலாம் என்றுதான் இங்கு வந்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தங்களிடமிருந்து அற்புதம் எதையுமே நான் காணவில்லை. அதனால்தான் ஊர் திரும்ப முடிவு செய்துள்ளேன்என்று அவர் கூறினார். ஓர் அற்புதத்தைக்கூடவா நீ என்னிடம் காணவில்லை?” என்று கேட்க, “ஆம்! ஓர் அற்புதத்தைக்கூட நான் தங்களிடம் காணவில்லைஎன்று சீடர் பதிலுரைத்தார். நான் எப்போதாவது கூட்டுத் தொழுகையின் முதல் தக்பீரைத் தவறவிட்டதை நீ பார்த்துள்ளாயா?” என்று கேட்க, “இல்லை. ஒருபோதும் தவறவிட்டதில்லைஎன்று சீடர் பதிலளித்தார். அதுதான் அற்புதம்என்று ஆன்மிக ஆசான் விடையளித்தார். அப்போதுதான் அச்சீடர் அற்புதம் என்றால் என்ன என்பதையே உணர்கிறார்.

ஆம்! ஐவேளை தொழுகையைப் பேணித் தொழுவதுதான் அற்புதங்களிலெல்லாம் அற்புதமாகும். இறைநேசர் என்று போற்றப்படுவோரெல்லாம் ஐவேளை தொழுகையைப் பேணித் தொழுதவர்களே. ஐவேளை தொழுகையைப் பேணித் தொழாத யாரும் இறைநேசராக ஆக முடியாது. ஒருவர் ஐவேளை தொழுகையைப் பேணித் தொழுகத் தொடங்கிவிட்டால் அவரின் மற்ற செயல்பாடுகள் சிறப்பாகவும் உயர்வாகவும் இருக்கும். ஐவேளை தொழுகை நமக்குப் பல்வேறு பாடங்களைக் கற்றுத் தருகிறது. குறிப்பிட்ட நேரத்தில் தொழுது பழகிவிடுவதால் அவரது மற்ற செயல்பாடுகளும் குறிப்பிட்ட நேரத்தில் அமையும். கொடுத்த வாக்குறுதியைச் சரியாக நிறைவேற்றுபவராக இருப்பார். நேர மேலாண்மையைப் பேணுவார். கொடுக்கப்பட்ட பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றுவார். இவ்வாறு பல்வேறு நற்பண்புகளை அவரிடம் காணலாம். இதுதான் தொழுகையைப் பேணுவோரின் தனித்தன்மையாகும்.

அல்லும் பகலும் வியாபாரத்தில் மூழ்கிக் கிடப்போரே, விளையாட்டிலும் கேளிக்கையிலும் இன்பம் காண்போரே, வெற்றுப் பேச்சுகளில் நேரத்தை வீணாக்குவோரே, தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் நேரத்தைக் கழிப்போரே, இணையதளத்தில் இளமையைத் தொலைப்போரே நீங்கள் அனைவரும் சிந்திப்பீர். தொழுகையை விட்டோருக்கும் இறைமறுப்பாளருக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. இறைநம்பிக்கையாளருக்கும் இறைமறுப்பாளருக்கும் இடையே உள்ள வித்தியாசமே தொழுகைதான். அதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்துள்ளோம்?

நயவஞ்சகர்கள் குறித்து இறைவன் பேசுகின்றபோது, “அவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால் சோம்பல் பட்டுக்கொண்டே நிற்கின்றார்கள்” (4: 142) என்று கூறுகின்றான். சோம்பல்பட்டுக்கொண்டு தொழுகையில் நிற்பதே நயவஞ்சகத்தின் அடையாளம் என்றால் தொழுகையில் அசட்டையாக இருப்பதும் நேரம் கிடைக்கும்போது தொழுவதும் வாரம் ஒரு முறை தொழுவதும் எதன் அடையாளம்? வாரம் ஒரு முறை தொழுபவர்கள் எப்படி அல்லாஹ்வின் அருளையோ அன்பையோ எதிர்பார்க்க முடியும்? அவனது கோபம் அவர்கள்மீது இறங்காதா?
நயவஞ்சகர்களுக்கு மிகவும் சிரமமான தொழுகை இஷாவும் ஃபஜ்ரும் ஆகும். அவர்கள் அவ்விரு தொழுகைகளிலுள்ள சிறப்பை அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள்...என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 1041)

இஷா, ஃபஜ்ர் ஆகிய இரண்டு தொழுகைகளும் நயவஞ்சகர்களுக்கு மிகவும் சிரமமான தொழுகை என்று கூறியுள்ளார்கள். ஆனால் அவ்விரண்டும் நம்முள் பலருக்கும் கடினமாகத்தானே உள்ளது? அப்படியானால் நயவஞ்சகம் நம் மனதிலும் படிந்து கிடக்கிறது என்றுதானே பொருள்? அப்படியிருக்கும்போது எப்படி அல்லாஹ்வின் உதவி நமக்குக் கிடைக்கும்?

நாம் ஒவ்வொரு பள்ளியிலும் காணும் தொழுகையாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு? ஆயிரக்கணக்கானோர் தொழுகும் விதத்திலான மிக விசாலமான பள்ளிகளில் மிகக் குறைந்த நபர்களே ஐவேளை தொழுகையை நிறைவேற்றுகின்றனர். பிறரெல்லாம் தத்தம் அலுவல்களைத்தான் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். பள்ளியின் அருகில் உள்ளோர்கூடத் தொழுக வருவதில்லை. இந்த அளவிற்குத்தான் நாம் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இறைவா! என் சமுதாயத்தாருக்கு அதிகாலை நேரத்தில் அருள்புரிவாயாக” (அபூதாவூத்: 2239) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்காகப் பிரார்த்தனை செய்துள்ளார்கள். அந்நேரத்தில்தான் நம்முள் பலர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஏன் ஃபஜ்ர் தொழுகைக்கு வருவதில்லைஎன்று கேட்டால், “ஷுகர் மாத்திரை போட்டுக்கொள்வதால் அதிகாலை ஏழு மணிக்குத்தான் எழ முடிகிறது இமாம் ஸாப்என்று பதிலளிக்கிறார்கள்.

ஆதமின் மகனே! (மனிதா!) என் வழிபாட்டிற்காக நீ நேரத்தை ஒதுக்கு! உனது நெஞ்சத்தை நான் தன்னிறைவால் நிரப்புவேன். உனது வறுமையை அடைத்துவிடுவேன். அவ்வாறு நீ செய்யாவிட்டால் உன் கைகளை வேலைகளால் நிரப்பிவிடுவேன். உனது வறுமையை அடைக்க மாட்டேன்என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 2390)

ஐவேளை தொழுகையை முறையாக நிறைவேற்றாத பலர் சொல்லும் ஒரே காரணம் நேரமின்மை. அதனால்தான் அல்லாஹ், “என் வழிபாட்டிற்காக நேரம் ஒதுக்குஎன்கிறான். நேரம் ஓடிக்கொண்டே இருக்கும்; காலம் கரைந்துகொண்டேதான் இருக்கும். நாம்தாம் ஒவ்வொரு செயலுக்கும் உரிய நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். நேரம் ஒதுக்காமல் நாம் எதையும் செய்ய முடியாது. அல்லும் பகலும் அயராது உழைத்தும் வறுமை தீரவில்லை; வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்று புலம்புவோர் பலருண்டு. அதேநேரத்தில் அவர்கள் தொழுவதும் இல்லை. அவர்களின் புலம்பலுக்கு ஒரே தீர்வு ஐவேளை தொழுகைதான். இறைவழிபாட்டிற்காக நாம் நேரம் ஒதுக்கும்போது நம்முடைய வறுமையை நீக்குவதாக அல்லாஹ் சொல்கிறான். நிச்சயமாக நம் வறுமை தீரும்; வாழ்க்கையில் திருப்தியும் நிம்மதியும் கிடைக்கும். இறைவழிபாட்டிற்காக நேரம் ஒதுக்கவில்லையானால் நாம் எவ்வளவுதான் உழைத்தாலும் நம் வறுமையும் தீராது; வேலையும் முடியாது. அந்த வேலையிலேயே உழன்று கொண்டிருக்குமாறு அல்லாஹ் நம்மை விட்டுவிடுவான்.


ஆக, தொழுகைக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து அதைச் சீராக நிறைவேற்றாத வரை இறைவனின் உதவி நமக்குக் கிட்டாது என்பது திண்ணம். முஸ்லிம்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படும் துன்பத்திற்கும் சோதனைகளுக்கும் காரணம் ஐவேளை தொழுகையில் அலட்சியம் செய்வதுதான். ஐவேளை தொழுகையைச் சீராக நிறைவேற்றினால் நிம்மதியான வாழ்க்கையும் ஈருலக வெற்றியும் நிச்சயம் உண்டு என்பதை உணர்ந்து இன்றே அதற்கான உறுதிமொழி ஏற்போம். ஐவேளை தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றாமல் நான் ஒரு நாளும் துயில்கொள்ள மாட்டேன். இது இறைவன்மீது ஆணை!
========================================







கிராஅத் ஓதியபோது ....

கவிஞர் ஏம்பல் தஜம்முல் முகம்மது அவர்கள் எழுதிய சமய நல்லிணக்க நூல்கள் வெளியீட்டு விழாவில் (07 02 2020) கிராஅத் ஓதியபோது ....


திங்கள், 3 பிப்ரவரி, 2020

சனி, 1 பிப்ரவரி, 2020