வியாழன், 21 செப்டம்பர், 2017

சாத்தியமா? இது சாத்தியமா?



03 10 2017 அன்று நடைபெறவுள்ள  ஜமாஅத்துல் உலமா நிர்வாகிகள் தேர்தலை முன்னிட்டு, சுயேச்சை வேட்பாளர்களாகப் பலர் அறிக்கைகளையும் வாக்குறுதிகளையும் தாராளமாக அள்ளிவீசிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவற்றுள் பல சாத்தியமில்லாதவை. அதற்கான காரணம் உண்டு. ஏனென்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பில் இருக்கின்றார்கள். அவரவர்க்கு அவரவர் பொறுப்பு முக்கியமானது. இமாம், உஸ்தாத் உள்ளிட்ட பணிகளில் இருப்பவர்களுக்கு அதைச் செவ்வனே நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. அதில்தான் அவர்களுடைய வாழ்வாதாரம் அமைந்துள்ளது. அப்படியிருக்கும்போது எப்படி இவ்வளவு பெரிய வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்ற முடியும்?

வாக்குறுதியை அள்ளி வீசுவது எளிது. அவற்றை நிறைவேற்ற முடியுமா என்பதை  அவர்களே யோசிக்க வேண்டாமா? நிச்சயமாக முடியாது. அவர்கள் தத்தம் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டே   ஜமாஅத்துல் உலமா பொறுப்பை ஏற்கும் வரை இது இயலாது.

இதற்கான தீர்வு ஒன்று உண்டு. ஜமாஅத்துல் உலமா மாநிலத் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர், துணைச் செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு  ஜமாஅத்துல் உலமா மாநிலத் தலைமையக அலுவலகமே சம்பளம் கொடுத்து அவர்களை முழுநேரச் சமுதாயத் தொண்டர்களாக ஆக்கினால்தான் அவர்கள் தம் பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்ற முடியும்.

எனவே  ஜமாஅத்துல் உலமா தலைமைப் பொறுப்பு உள்ளிட்ட பிற பதவிகளுக்குப் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் வெற்றிபெற்ற பின் தத்தம் பொறுப்பை இராஜினாமா செய்துவிடுவோம் என்ற நிபந்தனையை ஏற்றுக்கொள்வோர் மட்டுமே இத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்தால்தான்  ஜமாஅத்துல் உலமாவின் பொறுப்பாளர்கள் மக்களுக்குப் பயனுள்ள ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள முடியும். இல்லையேல் எவ்வளவு பெரிய தலைவராலும் ஜமாஅத்துல் உலமா வீரியமாகச் செயல்படச் சாத்தியமே இல்லை.

- முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, மணலி, சென்னை.
 21 09 2017

புதன், 20 செப்டம்பர், 2017

பாவம் பலவீனப்படுத்தும்!

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

மனித இனத்தைப் படைத்த இறைவன் அவன் இப்பரந்த நிலத்தில் வாழ்வதற்கெனச் சட்டதிட்டங்களை வகுத்தான்; கடமைகளையும் உரிமைகளையும் கட்டமைத்தான்; எல்லைகளை நிர்ணயித்தான்; குறிப்பிட்ட எல்லையை அவன் தாண்டக்கூடாதெனக் கட்டளையிட்டான். இத்தனையும் ஏன் செய்தான்? அவன் இந்நிலத்தில் சுயமரியாதையோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான். பிறர் மத்தியில் செல்கின்றபோது அவனுடைய மானத்திற்கும் மரியாதைக்கும் இழுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே சட்டவரையறைகளை நிர்ணயித்தான். அவனுடைய மரியாதைக்குக் களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அவன் செய்துவருகின்ற சின்னச் சின்னப் பாவங்களையும் தவறுகளையும் மறைத்துவிடுகின்றான்.

இறைவன் மனிதனுக்கு விதித்த எல்லைகளை மீறாத வரை அவன் தலைநிமிர்ந்து கம்பீரமாக நடைபோடுகிறான். இறைவன் விதித்த எல்லைகளை அவன் மீறத் தொடங்கிவிட்டால் மனதளவில் தளர்வடைந்துவிடுகிறான். மனத்தில் தளர்வு ஏற்பட்டுவிட்டால் நடையில் கம்பீரம் காணாமல் போய்விடும்.

மனிதன் பாவம் செய்யத் தொடங்கிவிட்டால் அவன் தனது மனத்துணிவை இழந்துவிடுவான்.  எப்போதும் பயமும் அச்சமும் அவனைக் கவ்விக் கொள்ளும். எதையும் தீர்மானமாகப் பேசவோ செய்யவோ துணிவு ஏற்படாது. பிறர்மீது கொண்டுள்ள நம்பிக்கையை இழந்துவிடுவான்; யாரையும் எளிதில் நம்பமாட்டான். காரணம் தன்னைப் போலவேதான் பிறரும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும்.

எனவேதான் படைத்தோன் இறைவன் உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக்கொள்ளுமாறு பகர்கின்றான். மனித உள்ளத்தில் நன்மையைச் செய்யத் தூண்டும் ஓர் உந்துதல் உள்ளதைப் போலவே தீமை செய்யத் தூண்டுவதற்கான ஓர் உந்துதலும் உள்ளது. அது அவனைத் தீமை செய்யத் தூண்டிக்கொண்டே இருக்கும். அதை அடக்கித் தன் கட்டுப்பாட்டில் வைத்தால்தான் நன்மையைச் செய்ய முடியும்; அதன்மூலம் தன் உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள முடியும்.

இக் கருப்பொருளைப் பொதிந்துள்ள திருவசனத்தை உயர்ந்தோன் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: நன்மை தீமைகளை அந்த ஆன்மாவுக்கு அறிவித்தவன்மீது சத்தியமாக! யார் (பாவங்களி-ருந்து தன் ஆன்மாவைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டானோ அவன், நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டான். (91: 8-9) நன்மை எது, தீமை எதுவெனப் படைத்தோன் இறைவன் தெளிவுபடத் திருக்குர்ஆனில் கூறி, சீரான வழியைக் காட்டிவிட்டான். அதன்பின்னர் சீரான பாதையில் நடைபோடுவது ஒவ்வொரு தனிமனிதனின் கடமையாகும்.

"ஷைத்தான் மனிதனின் பகிரங்க எதிரி'' என்று படைத்தோன் இறைவன் திருக்குர்ஆனில் தெளிவாக எடுத்துரைத்துள்ளான். ஆகவே அவன் மனிதனை வீழ்த்துவதற்கான எல்லாச் சூழ்ச்சிகளையும் முயற்சிகளையும் செவ்வனே செய்துகொண்டே இருப்பான். அவனுடைய மிகப்பெரும் வேலை மனிதனைப் பாவம் செய்யத் தூண்டுவதுதான்.
மனிதன் பலவீனனாகவே படைக்கப்பட்டுள்ளான். அந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தி மிக எளிதில் ஷைத்தான் தன் வலையில் அவனைச் சிக்க வைத்து மேன்மேலும் அவனைப் பலவீனனாக ஆக்கிவிடுகின்றான். தவறு செய்த மனிதன் அது வெளியே தெரிந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே இருந்துகொண்டிருக்கிறான். அதன் காரணமாக அவனால் துணிச்சலாக எதையும் செயலாற்ற முடியாது; கம்பீரமாக நடைபோட முடியாது.

அதே உத்தியை இன்றைய யூதர்கள் கையாளுகின்றார்கள். உலகம் முழுவதும் தம்முடைய ஆட்சியே ஓங்கி இருக்க வேண்டுமென்ற நப்பாசையில் அவர்கள் இருந்துகொண்டிருப்பதால் ஆங்காங்கே தவறு செய்யக்கூடியவர்களைக் கண்காணித்து வருகின்றார்கள். அரசுப் பதவியில் உள்ளோர் செய்கின்ற பஞ்சமாபாதகச் செயல்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, தக்க தருணம் வரும்போது  அவர்கள் செய்த மாபாதகத் தவறுகளை மக்களுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டிவிடுவதாகக் கூறி  மிரட்டி அவர்களைத் தமக்கு அடிமையாக்கிக்கொள்கின்றார்கள். பின்னர் தம்முடைய திட்டங்களையெல்லாம் அவர்களை வைத்தே நிறைவேற்றிக்கொள்கின்றார்கள்.

அந்தக் கண்ணோட்டத்தோடு இன்றைய தமிழகத்தை ஒரு கணம் திரும்பிப் பார்த்தால் உண்மை புலப்படும். ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒரே திசையில்தான் பயணிக்கின்றார்கள். ஆளும் கட்சியினர் மத்திய அரசை எதிர்த்து எதுவும் செய்யத் திராணியற்றவர்களாக உள்ளனர். தமிழக ஆளும் கட்சியினர் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்துப் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகளுக்குத் துணிவில்லை. ஏனென்றால் எதிர்ப்போர் அனைவரும் கடந்த காலங்களில் மாபாதகச் செயல்களைச் செய்தவர்கள்தாம். ஆளும் கட்சியின் கொள்கை முடிவுகளைத் துணிவோடு எதிர்க்கத் தயாராகிவிட்டால் சிறைக்கூடம் தயாராக இருக்கிறது என்பது அவர்களுக்கே நன்றாகத் தெரியும். அதனால்தான் வீரியமாக யாரும் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. மக்களின் மனத்தைச் சமாதானப்படுத்தும் விதமாக மேலோட்டமான எதிர்ப்பு வார்த்தைகளை மட்டும் அவ்வப்போது உதட்டளவில் உதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று இந்த உத்தியை உலக அளவில் யூதர்கள் பரவலாகக் கையாண்டு வருகின்றார்கள். ஒரு நாட்டில் அவர்கள் தம் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டுமென்றால், அந்நாட்டின் ஜனாதிபதி,  பிரதமர், முதல்வர் போன்றோர் செய்கின்ற தவறுகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அவர்கள்மூலம் அந்நாட்டிற்குள் நுழைந்துவிடுகின்றார்கள். அல்லது அந்நாட்டின் முக்கியப்புள்ளிகளை விலைகொடுத்து வாங்கிவிடுகின்றார்கள். பின்னர் அவர்கள் தம் விருப்பம்போல்  அதில் செயல்படுகின்றார்கள்.  ஆக, ஆள்வதோ அந்தந்த நாட்டின் குடிப்பிறந்தவர்கள். ஆனால் அவர்கள் தம் விருப்பப்படி ஆட்சி செய்ய முடியாது; குடிமக்களுக்கு நன்மை செய்ய நினைத்தாலும் முடியாது. அவர்களின் ஆட்சியும் காட்சியும் யூதர்களின் கட்டளைப்படியே இருக்கும்.

நேர்மையான அலுவலர்களும் அதிகாரிகளும் எதிரிகளின் திட்டங்களுக்குத் தடையாக இருப்பார்கள். அவர்களை எப்படியாவது தவறு செய்யவைத்து, அதைப் பதிவுசெய்து வைத்துக்கொண்டு மிரட்டத் தொடங்குவார்கள். பின்னர் அவர்களின் தடை உடைபட்டு புதிய மடை திறந்துவிடும். அதன்பின்னர் அவர்கள் தம் விருப்பம்போல் திட்டங்களைச் செயல்படுத்துவார்கள். இதுவே இன்றைய நடைமுறை.

இறைவன் விதித்த கட்டளைகளையோ அரசு விதித்துள்ள சட்டங்களையோ மீறும்போது மனது படபடக்கிறது; துடிதுடிக்கிறது; துணிவை இழக்கிறது. இதனால்தான் அல்லாஹ் ஷைத்தான் குறித்து எச்சரித்துக்கொண்டே இருக்கிறான். அவனுடைய வலையில் மாட்டிக்கொள்ளாமல் இறைவன் விதித்த கட்டளைகளை நிறைவேற்றி, தடுத்தவற்றை அறவே செய்யாமல் முற்றிலும் தவிர்ந்துகொண்டு வாழ்வதே மன உறுதியையும் மன நிம்மதியையும் பெற்றுத் தரும். ஆகவே ஷைத்தானுடைய மாய வலையில் விழாமல் நம்மைத் தற்காத்துக்கொள்ள கடுமுயற்சி செய்வதைப்போலவே அரசு விதித்துள்ள சட்டங்களை மீறாமல் நடைபோட்டால் நம்முடைய நன்மையான செயலுக்கு யாரும் தடைபோட முடியாது. அத்தகைய முயற்சியிலேயே தொடர்ந்து ஈடுபட்டு வெற்றிவாகை சூட வல்லோன் அல்லாஹ் நல்வாய்ப்பை நல்குவானாக.      
 =======================


வியாழன், 7 செப்டம்பர், 2017

நடைப்பயிற்சி மேற்கொள்வோம்!

   -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

உயர்ந்தோன் அல்லாஹ் வழங்கியுள்ள உடலுறுப்புகளைப் பயன்படுத்தி அதனதன் வேலைகளைச் செவ்வனே செய்யாமல் அவற்றைச் சோம்பேறியாக்குகின்றோம். பற்களால் உணவை நன்றாக மென்று உண்பதில்லை; நாவால் உணவைச் சுவைத்து விழுங்குவதில்லை; காதால் நல்ல அறிவுரைகளைக் கேட்பதில்லை; கண்களால் நல்லவற்றைப் பார்ப்பதில்லை; கைகளால் முறையாக உழைப்பதில்லை; கால்களால் நடந்துசெல்ல வேண்டிய இடங்களுக்கு நடப்பதில்லை.

இவ்வாறு நம் உடலுறுப்புகளை அதனதன் பணியில் ஈடுபடுத்தாமல் அவற்றைச் சோம்பேறியாக்குகின்றோம். அதன்மூலம் நாம் சோம்பேறி ஆகின்றோம். அந்த அடிப்படையில்தான் அல்லாஹ் நமக்கு வழங்கிய காலை நாம் நடப்பதற்குப் பயன்படுத்தாமல் வாகனங்களில் செல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளோம். அதற்குப் பிராயச்சித்தமாக அதிகாலை எழுந்து, அருகிலுள்ள மைதானத்திற்குச் சென்று, அதைப் பத்துத் தடவை சுற்றி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் இன்றைய நவநாகரிக மனிதர்கள்.

நடக்க வேண்டியதற்கு நடக்காமல் வாகனங்களில் மட்டுமே பயணம் செய்துகொண்டிருப்பதால் நடையையே ஒரு பயிற்சியாக மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அன்றாடம் நாம் இயல்பாக நடந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு நடந்தே செல்ல வேண்டும். இப்பழக்கத்தை நாம் மேற்கொண்டால் நம் உடலிலுள்ள கொழுப்பு முறையாக எரிக்கப்பட்டு, நமக்குத் தேவையான ஆற்றலாக மாறும்.

குளிரூட்டப்பட்ட அறையில் நீண்ட நேரம் இருத்தல், குறைந்தபட்ச அளவிற்குக்கூட நடக்காமல் இருத்தல், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருத்தல் உள்ளிட்ட காரணங்களால் வியர்வைமூலம் வெளியேற வேண்டிய கழிவுகள் வெளியேறாமல் உடலினுள் தங்கிவிடுகின்றன. கொழுப்பு எரிக்கப்பட்டு, ஆற்றலாக மாற வழியில்லாமல் உடலினுள் தங்கி, கெட்ட கொழுப்பாக மாறிவிடுகின்றது. நாளடைவில் பல்வேறு நோய்கள் ஏற்பட அதுவே காரணமாக அமைகிறது.

இஸ்லாமிய மார்க்கத்தில் நடைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தொழுகைக்காகப் பள்ளிவாசலை நோக்கி நடந்து வருவது நன்மைக்குரிய செயல் என்று வலியுறுத்தி, நடப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு மனிதர் அங்கத்தூய்மை (உளூ) செய்து, அதைச் செம்மையாகச் செய்து தொழுகையைத் தவிர வேறு நோக்கத்துடன் வெளியேறாமல் தொழுகைக்குப் புறப்பட்டு வந்தால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வோர் எட்டுக்காகவும் அவருக்கு ஒரு தகுதியை அல்லாஹ் உயர்த்துகிறான். அவருடைய தவறுகளில் ஒன்றை அவரிடமிருந்து மன்னித்துவிடுகின்றான்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 548)

தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் தொழுகைக்கு நீங்கள் ஓடிச் செல்லாதீர்கள். நடந்தே செல்லுங்கள்...என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 301)

தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்கு நடந்து வருவதும் தொழுகையில் நின்று வணங்குவதும் கால்களுக்கான உடற்பயிற்சியாகும். மக்கள் அனைவரும் பள்ளிவாசலில் ஒன்றிணைந்து கூட்டாகத் தொழுவதன்மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்வதுடன் கால்களுக்கான பயிற்சியையும் மேற்கொள்வதாகவே அமைகிறது கூட்டுத்தொழுகை. ஆகவே கூட்டுத்தொழுகையில் கலந்துகொள்வதன்மூலம் இறைவனை வணங்குவதோடு கால்களுக்கான பயிற்சியும் கிடைத்துவிடுகின்றது.

சிறு பிராயத்திலேயே நடைப்பயிற்சியை நாம் பிள்ளைகளுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். பள்ளிக்கூடம், பள்ளிவாசல், மருத்துவமனை, கடைவீதி, சந்தை உள்ளிட்ட இடங்களுக்கு நடக்க வைத்து அழைத்துச் செல்ல  வேண்டும். இவ்வாறு வளரும் பருவத்திலேயே அவர்களுக்கு நடைப்பயிற்சியைக் கொடுத்துவிட்டால் அருகருகே உள்ள இடங்களுக்கு அவர்கள் நடந்துசெல்லப் பழகிக்கொள்வார்கள். பின்னர் நடப்பது அவர்களுக்குச் சிரமமாக இருக்காது. அத்தோடு பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதால் ஒவ்வோர் எட்டுக்கும் ஒரு நன்மை வழங்கப்பட்டு, ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது என்ற தகவலையும் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். இதனால் அவர்கள் பள்ளிவாசலுக்கு ஆர்வத்துடன் நடந்து செல்லத்  தொடங்கிவிடுவார்கள். அதன் காரணமாக அவர்களின் ஆரோக்கியம் காக்கப்படுவதோடு தொழுகையைப் பேணக்கூடியவர்களாகவும் மாறிவிடுவார்கள்.

மக்கா நகரில் அமைந்துள்ள கஅபாவை நோக்கி உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் ஹஜ்ஜுக்காகச் சென்று கொண்டிருக்கின்றார்கள். ஹஜ்ஜும் உம்ராவும் செய்யப் பொருளாதார வசதி இருப்பதோடு உடலில் சக்தியும் ஆற்றலும் இருக்க வேண்டும். அப்போதுதான் அவ்விரண்டு வணக்கங்களையும் செவ்வனே செய்ய முடியும். ஹஜ் ஓர் இறுதிக் கடமையே தவிர இறுதிக் காலத்தில் செய்ய வேண்டிய கடமை இல்லை. எனவே ஆரோக்கியமாக இருக்கின்றபோதே ஹஜ்ஜுக்குச் சென்று வந்துவிட வேண்டும். ஹஜ், உம்ரா ஆகிய இரண்டு வழிபாடுகளிலும் நடத்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது. இன்றைய காலத்தில் அதுதான் மிகப் பெரிய பிரச்சனையே. இயல்பாகவே நம்முள் பலர் நடந்து பழக்கமில்லாததால் சின்னச் சின்னத் தூரங்களைக்கூடக் கால்நடையாகக் கடக்கமுடிவதில்லை. வெகுதூரம் என்றால் அறவே முடிவதில்லை. ஹஜ்ஜுக்குச் சென்று திரும்புகின்ற பலர் இதனால் பாதிக்கப்படுகின்றார்கள்; சிரமப்படுகின்றார்கள். ஆகவே இளவயதிலேயே ஹஜ் செய்வதோடு, நடைப்பயிற்சியை மேற்கொள்வது ஹஜ், உம்ரா போன்ற வழிபாடுகளை எளிமையாகவும் சோர்வில்லாமலும் செய்ய உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பொதுவாக நடைப்பயிற்சி இல்லாததால் வெளியே செல்வதற்கே இயலாமல் போய்விடுகிறது. அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அடிக்கடி செல்ல மனம் நாடுவதில்லை. அவ்வளவு தூரம் நடக்க வேண்டுமா? என்ற கேள்வி நம்முள் பலருக்கு முன்னால் வந்து நிற்கிறது. ஓர் ஆட்டோ பிடித்துச் செல்ல வேண்டுமென்றால் அதற்கொரு செலவு செய்ய வேண்டுமே, பிறகு போய்க்கொள்ளலாம் என்று மனம் ஒத்திப்போட்டு விடுகிறது. இதனால் பக்கத்துத் தெருவிலுள்ள அல்லது இரண்டு தெருக்களுக்கு அப்பாலுள்ள உறவினர் வீட்டிற்குச் செல்ல முடிவதில்லை. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் நடக்க இயலாமைதான். எனவே நடைப்பயிற்சி மிகவும் இன்றியமையாதது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

அதேநேரத்தில் இன்று பலர் மூட்டுவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கால்களை முறையாகப் பராமரிக்காததால்தான் பலர் மூட்டுவலியால் பாதிக்கப்படுகின்றனர். வேறு சிலர் ஆணிக்கால், வெரிகோஸ் எனும் நரம்பு முடிச்சு நோய் உள்ளிட்ட நோய்களுக்கு ஆட்பட்டுள்ளனர். ஒரே இடத்தில் நீண்ட நேரம் நின்றுகொண்டே இருப்பதால் நரம்புகளில் முடிச்சுகள் ஏற்பட்டுவிடுகின்றன. அதன்பின் இரத்த ஓட்டம் சீராக அமையாது. அதனால் அது ஒரு நோயாக மாறிவிடுகின்றது. எனவே நடப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இதன்மூலமும் தெரிந்துகொள்ளலாம்.

எனவே உயர்ந்தோன் அல்லாஹ் வழங்கியுள்ள உடலுறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அவ்வுறுப்புகளை அந்தந்த பணிக்கு முறையாகப் பயன்படுத்த வேண்டும். ஆகவே நாம் அனைவரும் நடைப்பயிற்சியை மேற்கொண்டு நம் கால்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முயல்வோமாக.     

======================================




புதன், 6 செப்டம்பர், 2017

“கலாம் சாட்” உருவாக்கிய இளைஞருக்குத் தமிழக அரசு 10 இலட்சம் பரிசு!


கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த 18 வயது இளைஞரான ரிபாத் சாருக் தலைமையிலான ஆறு மாணவர்கள் கொண்ட குழு உருவாக்கிய 64 கிராம் எடை கொண்ட மிகச் சிறிய செயற்கைக்கோள் சமீபத்தில், அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான “நாசா” நடத்திய போட்டியில் கலந்துகொண்டு, உலகத்தின் 57 நாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 80,000 மாதிரிகளில் முதல் பரிசு பெற்றது.

இந்தச் செயற்கைக்கோள் கடந்த 22.6.2017 அன்று விண்ணில் “கலாம் சாட்” என்ற பெயரில் “நாசா” ஏவு தளத்திலிருந்து ஏவப்பட்டது. முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்தச் செயற்கைக்கோள் வானிலை, வான்வெளியில் உள்ள கதிர்வீச்சு, வெப்பம் ஆகியவற்றை ஆராயும் திறன் கொண்டது.

சென்னையிலிருந்து செயல்படும் “ஸ்பேஸ்கிட்ஸ்” என்ற அமைப்பு இந்த மாணவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து உதவியது. இந்தச் சாதனையை நிகழ்த்திய மாணவர்கள் ரிபாத் சாருக், யக்னா சாய், வினய் பரத்வாஜ், தனிஷ்க் திவேதி, கோபிநாத், முகம்மது அப்துல் காசிப் ஆகியோருக்கும், குறிப்பாக அந்தக் குழுவின் தலைமை விஞ்ஞானியாகச் செயல்பட்ட ரிபாத் சாருக்கிற்கும் தமிழகச் சட்டசபையில் 110-ஆவது விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளைத் தெரிவித்து அறிக்கை வாசித்தார்.

மேலும் இந்தச் சாதனையைப் படைத்து, இந்தியாவிற்கு, குறிப்பாகத் தமிழகத்திற்குப் பெருமை தேடித் தந்த மாணவர் ரிபாத் சாருக் தலைமையிலான மாணவர் குழுவினை மேலும் இதுபோன்ற பல சாதனைகள் செய்ய ஊக்கப்படுத்தும் விதமாகத் தமிழக அரசின் சார்பில் 10 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் தமது அறிக்கையில் தெரிவித்தார்.

-தகவல்: நூ. அப்துல் ஹாதி பாகவி-துணைஆசிரியர்


ஈந்து மகிழ்வதால் ‘ஈகைத் திருநாள்’


உலகில் வாழுகின்ற ஒவ்வொரு சமயத்தாருக்கும் ஒவ்வொரு பண்டிகை உண்டு. அந்நாளில் அவர்கள் உற்சாகத் துள்ளலோடு மகிழ்ச்சி பொங்க அதைக் கொண்டாடுவர்; ஆடிப்பாடி மகிழ்வர்; இன்னபிற மகிழ்ச்சிக்குரிய செயல்பாடுகளை மேற்கொள்வர். ஆனால் முஸ்லிம்கள் கொண்டாடுகின்ற பண்டிகை சற்றே வித்தியாசமானது. ஒவ்வோர் ஆண்டும் ரமளான் மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பு நோற்று அது செவ்வனே முடிந்ததும் அதற்கு நன்றி செலுத்தும் முகமாக மறுநாள் காலை ஏழை, எளியோருக்கு ஈகை குணத்தோடு ஒரு குறிப்பிட்ட பணஉதவியைச் செய்து அவர்களும் அந்நன்னாளில் மகிழ்ச்சியோடு இருப்பதற்காக வழிவகையைச் செய்துவிட்டுத்தான் பள்ளிவாசலுக்குத் தொழுகச் செல்வார்கள். அங்கு தம்மைப் படைத்த இறைவனை வழிபட்டு, அவனிடம் பிரார்த்தனை செய்வார்கள். அதன் பின்னர் பகல் வேளையில் பிரியாணி உள்ளிட்ட சிறப்பான உணவுகளைத் தயாரித்துத் தம்மைச் சுற்றியுள்ளோர் அல்லது தமக்குப் பழக்கமானோருக்கு வழங்கி, தாமும் உண்பார்கள். இதுதான் அவர்களின் பெருநாள் பண்டிகை.

மேலும் தற்போது செப்டம்பர் மாதம் 2ஆம் நாள் கொண்டாட இருக்கின்ற பெருநாளும் அவ்வாறுதான். அன்றைய நாள் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் முஸ்லிம்கள் அனைவரும் பள்ளிவாசலில்  ஒன்றுகூடி ஏக இறைவனான அல்லாஹ்வைத் தொழுதுவிட்டு, அவர்களுள் வசதியுடையவர்கள் தம்மால் இயன்ற வசதிக்கேற்ப ஆட்டையோ மாட்டையோ அறுத்து இறைவனுக்காகப் பலியிடுகின்றார்கள். அதன் இறைச்சியை மூன்று பங்காகப் பிரித்து, தமக்கொரு பங்கை வைத்துக்கொண்டு ஒரு பங்கை தம் உறவினர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் வழங்குகின்றார்கள். ஏழைகளுக்கு வழங்கும்போது அவர்கள் சாதி, மதம் பார்ப்பதில்லை. மனிதர்கள் அனைவரையும் சமமாக மதிக்கின்றார்கள். சிலர் பிரியாணியாகவே தயாரித்து அண்டைவீட்டாருக்கும் நண்பர்களுக்கும் பரிமாறுவது வழக்கம்.  

அவர்கள் தம் பண்டிகைகளில் வெடிபொருள்களை வெடிப்பதோ பிறருக்குத் துன்பம் தரும் விதத்தில் செயல்படுவதோ அவர்களின் மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும்  அவர்கள் தம் பொருளையும் பணத்தையும் வீணாகச் செலவழிப்பதும் விரையம் செய்வதும் அறவே கூடாது. அவற்றையெல்லாம் அவர்கள் அப்படியே ஏற்று நடக்கின்றார்கள்.

அனைவருக்கும் ஈந்து மகிழ்வதால் ‘ஈகைத் திருநாள்’ என்றும் பலிப்பிராணிகளை அறுத்துப் பலியிடுவதால் ‘தியாகத் திருநாள்’ என்றும் அவர்களின் பண்டிகைகள்  அழைக்கப்படுகின்றன. முஸ்லிம்களோடு நெருங்கிய தொடர்புகொண்டவர்கள் அவர்களின் தயாளத்தையும், ஈகைக் குணத்தையும் நன்கு அறிவார்கள். ஓடோடி உதவி செய்யும் மனப்பான்மையையும் நேரடியாகக் கண்டிருப்பார்கள்.

எனவே ஊடகங்களின் தவறான பிம்பத்தால் ‘தீவிரவாதிகள்’ என்று சித்திரிக்கப்பட்டுள்ள அவர்களைக் கண்டு ஒதுங்காமல் அவர்களோடு இணக்கமாக வாழ்ந்து, ‘அனைவரும் தமிழர்கள்’ என்ற எண்ணத்தில் நிலைத்து, வளமாக வாழ வழிகாணுவோம் என்று இந்த நன்னாளில் உறுதி ஏற்போமாக‏.