சனி, 14 அக்டோபர், 2017

நஸாயீ நூல்கள் வெளியீட்டு விழா!


12.08.2017 சனிக்கிழமை மாலை ஆறு மணிக்குக் கவிக்கோ மன்றத்தில் நஸாயீ தமிழாக்கம் உட்பட ஆறு நூல்களின் வெளியீட்டு விழா நடந்தது.
நீங்கள் எத்தனையோ நூல் வெளியீட்டு விழாக்களுக்குச் சென்றிருப்பீர்கள். விழாத் தலைவர், நூல்களை வெளியிடுவோர், முதல்படி பெறுவோர், வாழ்த்துரை வழங்குவோர், பாராட்டுரை வழங்குவோர், தொகுப்புரை வழங்குபவர், நன்றியுரை வழங்குபவர் என்று மேடை நிறைந்திருக்கும். ஆனால் எந்த நூல் வெளியிடப்பட இருக்கிறதோ அந்த நூல் கண்ணிலேயே தென்படாது. அட்டைகூடத் தெரியாத அளவுக்கு வண்ணத்தாளில் சுற்றப்பட்டு, அது போதாதென்று அதன்மீது வண்ண ரிப்பனையும் இறுக்கமாகக் கட்டி, ஏதோ கைதி மாதிரி, மேடையில் உள்ள சிறிய மேசையில் வைக்கப்பட்டிருக்கும். வெளியீட்டின்போதுதான் அந்த நூல் மீண்டும் விடுதலை பெற்று நம் கைகளில் குழந்தையைப் போல் சிரிக்கும்.

புத்தகம் என்பது உயிருடன் வாழ்ந்த, வாழ்கின்ற மனிதனின் படைப்பாக்கம்தானே? அந்த உயிருள்ள மனிதனின் இதயம்தானே அந்த நூலினுள்ளும் துடித்துக்கொண்டிருக்கிறது? இன்னும் சொல்லப்போனால் அந்த நூலின் ஆசிரியர் இறந்துபோயிருக்கலாம். ஆனால் அவருடைய உயிரின், உணர்ச்சியின் துடிப்புகள்தாமே அந்த நூல்?  இதை முஸ்தபா அண்ணன் உணர்ந்திருப்பார் போல. நஸாயீ நூல் வெளியீட்டு விழாவில் மேடை நாயகர்கள் யார் தெரியுமா? நம்புங்கள், வெளியீடு கண்ட ஆறு புத்தகங்களும் மன்னர்கள் போல் ஆறு நாற்காலிகளில் கம்பீரமாய் அமர்ந்திருந்தன.

விழா விருந்தினர்களான முனைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், கவிஞர் மு. மேத்தா, பழ.கருப்பையா, பேராசிரியர் அ. மார்க்ஸ், முனைவர் சதக்கத்துல்லாஹ், ஆளூர் ஷா நவாஸ், ராணி இதழின் முன்னாள் ஆசிரியர் அ.மா. சாமி, அருட்தந்தை சேவியர், மௌலவி கம்பம் பீர்முஹம்மது பாகவி, இளம்முனைவர் மௌலவி சதீதுத்தீன் பாகவி, நஸாயீ நூலின் மேற்பார்வையாளர் மௌலவி யூசுஃப் மிஸ்பாஹி, நூலின் மொழிபெயர்ப்பாளர் முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி ஆகிய அனைவருமே மேடையில் அல்லாமல் அரங்கில்தான் அமர்ந்திருந்தனர். பேசும்போது மட்டும்தான் மேடை. உண்மையிலேயே இதுதான் வித்தியாசமான விழா.

நூல்கள் வெளியீட்டு விழா என்றால் இனி நூல்கள்தாம் மேடை நாற்காலிகளை அலங்கரிக்க வேண்டிய நாயகர்கள் என்பதை தமிழ் இலக்கிய உலகிற்கு ரஹ்மத் பதிப்பகமும் அண்ணன் முஸ்தபா அவர்களும் உணர்த்திவிட்டார்கள். இந்த வித்தியாசமான சிந்தனையையும் ஏற்பாட்டையும் வாழ்த்துவதற்குச் சொற்கள் இல்லை. உண்மையிலேயே புத்தகங்கள் மகிழ்ந்த புதிய திருநாள்!

மௌலவி மஸ்தான் அலீ பாகவி உமரி, மௌலவி பஸ்லுர் ரஹ்மான் உமரி, மௌலவி அப்துர் ரஹ்மான் மன்பயீ, மௌலவி வி.எஸ். முஹம்மது காசிம் பாகவி, மௌலவி அப்துல் ஸமது பாகவி, மௌலவி சைஃபுர் ரஹ்மான் பிலாலி, மௌலவி ஜீலானி மிஸ்பாஹி, மௌலவி அப்துர் ரஸ்ஸாக் பிலாலி, டாக்டர் ஜாகிர் ஹுசைன் பாகவி உள்ளிட்ட ஆலிம்கள், பிறதுறை அறிஞர்கள், பதிப்பாளர்கள் உள்ளிட்டோர் திரளாக வருகை புரிந்திருந்து வெளியீட்டு விழாவைச் சிறப்பித்தனர்.

-சிராஜுல் ஹஸன்


நூலின் பெயர்: சுனனுந் நஸாயீ (நபிமொழித் தொகுப்பு)
மூலநூலாசிரியர்: அஹ்மத் பின் ஷுஐப் அந்நஸாயீ (ரஹ்- 215-303 ஹிஜ்ரீ)
தமிழாக்கம்: முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
விலை: ரூ. 400/-
வெளியீடு: ரஹ்மத் பதிப்பகம், 6, இரண்டாவது பிரதானச் சாலை, சிஐடி காலனி, மயிலாப்பூர், சென்னை-4  
 தொடர்புக்கு: 94440 25000 
===================================



முனைவர் பட்டம் பெற்ற ஆலிம்கள்!


தற்காலத்தில் ஆலிம்கள் பலர் அரபிக் கல்லூரிகளில் மார்க்கக் கல்வியை முடித்ததோடு நின்றுவிடாமல் அரசுக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் சென்று அரபித்துறையில் பட்ட மேற்படிப்பைத் தொடரவும் செய்கின்றார்கள். அவர்களுள் பலர் இளம் முனைவர் (எம்.ஃபில்) பட்டமும் பலர் முனைவர் (பிஎச்.டி.) பட்டமும் பெற்று இன்றைய இளம் ஆலிம்களுக்கும் இஸ்லாமியச் சமுதாயத்திற்கும் ஒரு முன்னோடியாகத் திகழ்கின்றார்கள். அவர்கள் பிஎச்.டி. வரை சென்று முனைவர் பட்டம் பெற்றிருப்பது கல்விக்கு எல்லையில்லை என்பதைக் காட்டுவதோடு அவர்களின் விடாமுயற்சியையும் பறைசாற்றுகிறது. நம் சமுதாய மக்களுக்குக் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டும், பட்டம் பெற்ற ஆலிம்களை மனதாரப் பாராட்டும் பொருட்டும் ஆலிம் பட்டம் பெற்றுமுனைவர் பட்டம் பெற்றவர்களின் பட்டியலை மட்டும் கீழே தருகின்றோம். அவர்களின் பெயர், முனைவர் பட்டம் பெற்ற ஆண்டு, அவர்கள் ஆய்வுமேற்கொண்ட தலைப்பு, தற்போதைய பணியிடம், தொடர்பு எண் ஆகியவை மட்டும் சுருக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.        
1. பெயர்: முனைவர் மௌலவி பி.எஸ். சையது மஸ்வூத் ஜமாலி
பட்டம் பெற்ற ஆண்டு: 2006
ஆய்வுத் தலைப்பு: இஸ்லாமிய மார்க்கச் சட்டத்தின் பரிணாம வளர்ச்சி
பணி: தலைவர் இஸ்லாமியியல் துறை, பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசண்ட் பல்கலைக் கழகம், வண்டலூர் சென்னை. 
செல்பேசி: 94442 22875

2. பெயர்: முனைவர் மௌலவி அப்துஸ் ஸமத் நத்வி
பட்டம் பெற்ற ஆண்டு: 2017
ஆய்வுத் தலைப்பு: சங்கைமிகு குர்ஆனின் அழகிய இலக்கிய உரைநடை
பணி: பேராசிரியர் இஸ்லாமியியல் துறை, பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசண்ட் பல்கலைக் கழகம், வண்டலூர் சென்னை.
செல்பேசி: 98406 99131

3. பெயர்: முனைவர் மௌலவி அ. ஜாகிர் ஹுஸைன் பாகவி
பட்டம் பெற்ற ஆண்டு: 2005
ஆய்வுத் தலைப்பு: முதல் மூன்று நூற்றாண்டுகளில் ஹதீஸ் கலையின் வளர்ச்சி
பணி: அரபுத் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.  
செல்பேசி: 94444 27086 

4. பெயர்: முனைவர் மௌலவி  அல்ஹாஃபிழ் அன்வர் பாஷா உலவி
பட்டம் பெற்ற ஆண்டு: 2008
ஆய்வுத் தலைப்பு: இந்தியாவில் ஹதீஸ் கலை அறிஞர்களும் அவர்களின் சேவைகளும்
பணி: கௌரவப் பேராசிரியர் சென்னைப் பல்கலைக் கழகம், இமாம் ரஹ்மானிய்யா மஸ்ஜித் பெரம்பூர், சென்னை. 
செல்பேசி: 73588 88768

5. பெயர்: முனைவர் மௌலவி நூ.  அப்துல் ஹாதி பாகவி, ஃபாஸில் தேவ்பந்தி
பட்டம் பெற்ற ஆண்டு: 2015
ஆய்வுத் தலைப்பு: முஹம்மது பின் இஸ்ஹாக் பின் குஸைமா (ரஹ்) அவர்களின் ஹதீஸ் பணிகள்
பணி:  இமாம், மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார் மணலி, துணையாசிரியர் இனிய திசைகள் மாதஇதழ்
செல்பேசி: 94443 54429

6. பெயர்: முனைவர் மௌலவி அல்ஹாஃபிழ் ஷம்சுத்தீன் ஜமாலி
பட்டம் பெற்ற ஆண்டு: 2008
ஆய்வுத் தலைப்பு: ஷாஃபிகளின் அரபு இலக்கியம் 
பணி:  இமாம், மஸ்ஜிதுல் ஹிதாயா, வியாசர்பாடி, சென்னை.
செல்பேசி: 98842 13220

7. பெயர்: முனைவர் மௌலவி எம். ஹபீபுல்லாஹ் ஜமாலி
பட்டம் பெற்ற ஆண்டு: 2012
ஆய்வுத் தலைப்பு: இந்திய நாட்டின் ஹதீஸ் கலை அறிஞர்கள்
பணி: பேராசிரியர், அரபுத்துறை, புதுக்கல்லூரி. இமாம்-ஷாஃபிய்யா மஸ்ஜித், இராயபுரம், சென்னை
செல்பேசி: 97898 81988

8. பெயர்: முனைவர் மௌலவி முஜீபுர் ரஹ்மான் உமரி
பணி:  பேராசிரியர் இஸ்லாமியியல் துறை, பிரிஸ்டன் கல்லூரி, ஆழ்வார்பேட்டை, சென்னை.  

9. பெயர்: முனைவர் மௌலவி அல்ஹாஃபிழ் எஸ். முஹிப்புல்லாஹ் பாகவி
பட்டம் பெற்ற ஆண்டு: 2017
ஆய்வுத் தலைப்பு: அரபுமொழியின் அடிப்படை இலக்கணத்தைப் பயிற்றுவிக்கின்ற குர்ஆனிய எளிமையான உதாரணங்கள் 
பணி: அரபு ஆசிரியர், சதக் மெட்ரிக்குலேஷன் பள்ளி, அரும்பாக்கம். இமாம்-மஸ்ஜித் நூர்  பள்ளிவாசல், சாந்தி காலனி அண்ணா நகர், சென்னை.
செல்பேசி: 98847 79094 

10. பெயர்: முனைவர் மௌலவி  முஹம்மது ரஃபீக் ஹஸனி
பட்டம் பெற்ற ஆண்டு: 2013
ஆய்வுத் தலைப்பு: தமிழ்நாட்டில் அரபுமொழியின் வளர்ச்சியும் அரபியர்களின் கலாச்சாரத் தாக்கமும்
பணி: அரபுப் பேராசிரியர், கருத்த ராவுத்தர் கல்லூரி, திருநெல்வேலி.
செல்பேசி: 99525 99678

11. பெயர்: முனைவர் மௌலவி சையது ஃபஸ்லுல்லாஹ் பக்தியாரி உமரி நத்வி,
பட்டம் பெற்ற ஆண்டு: 2016
ஆய்வுத் தலைப்பு: நபிமார்களின் வரலாறு சார்ந்த இலக்கியத்தில் இந்திய உலமாக்களின் பங்கு
பணி:  உதவிப் பேராசிரியர், அரபுத்துறை, புதுக்கல்லூரி, சென்னை. 
செல்பேசி: 98940 83097 

12. பெயர்: முனைவர் மௌலவி அல்ஹாஃபிழ் சயீதுத்தீன் ஜமாலி
பட்டம் பெற்ற ஆண்டு: 2016
பணி:  இமாம், தலைமை காஜி அலுவலக மஸ்ஜித், இராயப்பேட்டை, சென்னை.  

13. பெயர்: முனைவர் மௌலவி முஹம்மது யூசுஃப் ஜமாலி
பணி:  பேராசிரியர் இஸ்லாமியியல் துறை, பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசண்ட் பல்கலைக் கழகம், வண்டலூர் சென்னை.
செல்பேசி: 72994 79842

14. பெயர்: முனைவர் மௌலவி ஏ. அப்துல் ரஷீத் ஹஸனி
பட்டம் பெற்ற ஆண்டு: 2014
ஆய்வுத் தலைப்பு: தஃப்சீர் கலையைப் பரப்பியதில் தற்காலச் சிறப்பு விரிவுரையாளர்களின் பங்கு
பணி: உதவிப் பேராசிரியர், ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி.  
செல்பேசி: 97866 03663

15. பெயர்: முனைவர் மௌலவி அப்துர் ரஹீம் ஹஸனி
பட்டம் பெற்ற ஆண்டு: 2016
ஆய்வுத் தலைப்பு: தமிழ்நாட்டில் அரசு-அரசுசாரா நிறுவனங்களில் அரபுமொழிச் சட்டங்களைப் பயிற்றுவிக்கும் முறைகளில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகள் 
பணி: பேராசிரியர்இன்ஸ்டிட்யூட் ஆஃப் அரபிக் அன்ட் கல்ச்சர், ஹைதராபாத்.  
செல்பேசி: 99520 43773

16. பெயர்: முனைவர் மௌலவி ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப்
பணி: தலைமை காஜி, இராயப்பேட்டை, சென்னை.  

17. பெயர்: முனைவர் மௌலவி அல்ஹாஃபிழ் ஸஃபியுல்லாஹ் அன்வாரி
பட்டம் பெற்ற ஆண்டு: 2013
ஆய்வுத் தலைப்பு: யமன் நாட்டு ஹதீஸ்கலை, இஸ்லாமியச் சட்டத்துறை அறிஞர்களும் அவர்களின் சேவைகளும்
பணி: இமாம், அரபு ஆசிரியர்-ஆயிஷா மகளிர் அரபுக்கல்லூரி, செங்குன்றம், சென்னை. 
செல்பேசி: 99403 78783

18. பெயர்: முனைவர் மௌலவி ஷேக் இப்ராஹீம் ஹஸனி
பட்டம் பெற்ற ஆண்டு: 2012
ஆய்வுத் தலைப்பு: கவிதை, இலக்கியத்தைப் பரப்பியதில் ஷேக் அப்துல் அஸீஸ் சுவூத் பாப்தீன் அவர்களின் பங்களிப்பு
பணி: அரபிக் சீனியர் எக்ஸிக்யூட்டிவ், ஃபார்மாசெட்டிகல் கம்பெனி, சென்னை.  
செல்பேசி: 99860 53553

19. பெயர்: முனைவர் மௌலவி அபூசுலைம் முஹம்மது அஸ்லம் ஹஸனி
பட்டம் பெற்ற ஆண்டு: 2017
ஆய்வுத் தலைப்பு: இஸ்லாமிக் பாலியோகிராஃபி அன்ட் கோடிகாலஜி
பணி: அகாடமிக் எடிட்டர், இன்டர்நேஷனல் இஸ்லாமிக் யூனிவர்சிட்டி, மலேசியா.
செல்பேசி: 60 16 2244923

20. பெயர்: முனைவர் மௌலவி முஹம்மது சுலைமான் உமரி
பணி: பேராசிரியர் இஸ்லாமியியல் துறை, பிரிஸ்டன் கல்லூரி, ஆழ்வார்பேட்டை, சென்னை.

21. பெயர்: முனைவர் மௌலவி சையது கமாலுல்லாஹ் பக்தியாரி நத்வி
பட்டம் பெற்ற ஆண்டு: 2011
பணி: உதவிப் பேராசிரியர், அரபுத்துறை, புதுக்கல்லூரி, சென்னை.

                                                                    -தொகுப்பு:  நூ.  அப்துல் ஹாதி பாகவி

==========================================




ஞாயிறு, 8 அக்டோபர், 2017

அறியாமை ஆட்டம் போடுகிறது!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

உலகில் விஞ்ஞானம் வளர்ந்துகொண்டே சென்றாலும் மனிதன் விண்ணை நோக்கிப் பயணம் மேற்கொள்ளும் அளவிற்கு அறிவுப் புரட்சி செய்தாலும் விண்ணுலகிலேயே வீடு கட்டிக் குடியேற முயலும் நிலைக்கு உயர்ந்தாலும் உலகை வியக்க வைக்கும் அரிய சாதனைகள் பலவற்றைச் செய்தாலும் பற்பல புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தினாலும் அறியாமை எனும் நோய் மனித சமுதாயத்தில் ஆட்டம் போட்டுக்கொண்டேதான் இருக்கிறது. காலம் செல்லச் செல்ல, அறிவுப் புரட்சி பெருகப் பெருக, மனிதன் மாபெரும் சிந்தனையாற்றலும் செயல்திறனும் பகுத்தறிவும் பெற்றுத் திகழ்வான் எனும் எண்ணம் தோன்றுவதற்குப் பதிலாக அவனிடம் அறியாமை  தனது காலை அகல விரிக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

இருண்ட காலம் எனும் அறியாமைக் காலத்தில் வாழ்ந்த நாகரிகமற்ற மனிதர்களைப்போல் மனிதன் மாறிக்கொண்டிருக்கிறான். காட்டு விலங்குகளைப் போல் ஒருவனை ஒருவன் அடித்துக்கொண்டும் அழித்துக்கொண்டும் இருக்கின்றான். தானே உயர்ந்தவன் எனக் கருதி, தனக்குப் போட்டியாக யாரும் வந்துவிடக் கூடாது எனும் எண்ணத்தில் எந்தவித ஈவிரக்கமும் இன்றிக் கொலை செய்கிறான். இது அவனுடைய அறியாமையன்றி வேறென்ன?

மார்க்கம் பற்றிய அறியாமை, மனித ஆற்றல் பற்றிய அறியாமை, தன்னைப் பற்றிய அறியாமை, கல்வியைப் பற்றிய அறியாமை, இறைவனைப் பற்றிய அறியாமை, இறைத்தூதர் போதனைகள் குறித்த அறியாமை, ஏகத்துவம் குறித்த அறியாமை உள்ளிட்ட பலவகை அறியாமைகள் பாரினில் உண்டு. ஒரு மனிதன் தனது அறியாமையால் அவன் மட்டும் துன்பப்படவில்லை. பிறரையும் துன்பப்படுத்திக்கொண்டிருக்கிறான்.

பள்ளிவாசல்களில் இமாம்களாகப் பணியாற்றுவோர் மேற்கொள்கின்ற சட்ட நடைமுறைகளில் சாதாரண மனிதர்கள் குறுக்கிட்டுப் பிரச்சனையை ஏற்படுத்துகின்றனர். மார்க்கத்தைக் கற்பிப்பதற்காகவே படித்துப் பட்டம் பெற்று வருகின்ற ஆலிம்களின் செயல்பாடுகளைச் சாதாரண மக்கள் எந்த முன்யோசனையுமின்றி எதிர்ப்பது அவர்களின் அறியாமையை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. சிலர் தமக்குத் தெரியாதுஎன்பதையே தெரியாமல் இருப்பதால்தான் பிரச்சனையே உருவாகிறது. பெரும்பாலான இடங்களில் இதுதான் பிரச்சனையின் மூலவேர் ஆகும்.

வணக்க வழிபாடுகளில் மக்களிடம் மிகப்பெரும் அளவில் அறியாமை தாண்டவமாடுகிறது. ஏக இறைவனை வணங்கி அவனிடமே தம் தேவையைக் கேட்டுப் பெற வேண்டிய முஸ்லிம்கள், குறிப்பிட்ட தர்ஹாக்களுக்குச் சென்று அங்கு துயில்கொள்கின்ற இறைநேசர்களிடம் தம் தேவைகளைக் கேட்பது அல்லது அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யுமாறு அவர்களிடம் கேட்பது முஸ்லிம்களின் அறியாமையாகும். இறைநேசர்களாக இருந்து இறந்துபோனவர்களிடம் சென்று தமது தேவைகளுக்காகப் பரிந்துரை தேடுமாறுஎந்த இறைக்கட்டளையும் நபிக்கட்டளையும் இல்லாதபோது அவ்வாறு செய்வது அறியாமையன்றி வேறென்ன?

தர்ஹா உள்ளதால் இவன் அங்கு சென்று, அங்கு துயில்கொள்கிற இறைநேசரிடம் தனக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யுமாறு கேட்டு, அவரும் அல்லாஹ்விடம் அவனுக்காகப் பரிந்துரை செய்து, அதன் காரணமாக அவனது தேவையை அல்லது வேண்டுகோளை அல்லாஹ் நிறைவேற்றிவிட்டான் என்றால், தனது ஊரிலோ, நாட்டிலோ தர்ஹா இல்லாதவன் என்ன செய்வான்? அவன் எப்படித் தனது தேவையை நிறைவேற்றிக்கொள்வான்.  யாரிடம் சென்று பரிந்துரை செய்யுமாறு வேண்டுகோள் விடுப்பான்? ஆக, உலகின் எல்லா இடங்களிலும்  வாழுகின்ற மானிடர்க்கு அவரவரின் தேவையை அறிந்து நிறைவேற்றுபவன் அல்லாஹ்வைத் தவிர யாருமுண்டோ?

அத்தோடு ஆண்டுக்கொரு முறை உரூஸ்என்ற பெயரில் ஒரு கோலாகலமான கண்கவர் விழா நடத்தப்படுகிறது.  இஸ்லாமிய மார்க்கத்திற்கெதிரான எல்லாச் செயல்களும் அரங்கேற்றப்படுகின்றன. ஆடல், பாடல், மேளம், வானவேடிக்கை உள்ளிட்ட எல்லாம் உண்டு. ஆணும் பெண்ணும் ஒருவடோருவர் கலந்து, கலைந்து செல்லும் விழாக்கோலம் அறியாமையின் உச்சம்தானே?

ஆந்திர மாநிலத்தில் ஓர் ஊரில் இறைநேசர் என்ற போர்வையில் ஒருவர் உள்ளார். மக்களை முட்டாளாக்கித் தமது பேச்சுக்கு இணங்க வைத்து, ஐம்பதாயிரம் செலுத்தித் தம்மிடம் சொர்க்கத்திற்கான நுழைவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்புச் செய்தார். அவர்மீது கொண்டுள்ள கண்மூடித்தனமான நம்பிக்கையால் சுற்றியுள்ள ஊர்மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு சொர்க்கத்திற்கான நுழைவுச்சீட்டைவாங்கிச் செல்கின்றார்கள். இது தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட செய்தி. அதை வாங்கிச் சென்றவர் இறந்துவிடும்போது, அவருடைய பிரேதத்தோடு (ஜனாஸா) அந்த நுழைவுச் சீட்டையும் சேர்த்துவைத்துப் புதைத்துவிட வேண்டும்.  அதைப் பார்க்கும் மலக்கு-வானவர் அவரைச் சொர்க்கத்தில் நுழைய அனுமதித்துவிடுவார் என்று போதித்து வருகிறார். பகுத்தறிவை இழந்த மக்கள் அதையும் பணம் செலுத்தி வாங்கிச் செல்கின்றனர். இது அவர்களுடைய அறியாமையின் உச்சம் அல்லவா?

சிறப்பிற்குரிய முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து நாள்களில் மக்கள் மத்தியில் பரவியுள்ள மூடநம்பிக்கைகளும் அறியாமையும் வேறுவிதமானவை. பஞ்சா தூக்குதல், தீ மிதித்தல் உள்ளிட்ட மூடப்பழக்கங்களைக் கடைப்பிடிக்கின்றார்கள். ஷீஆ பிரிவினர் தம்மைத்தாமே வருத்திக்கொள்ளும்பொருட்டு தம் உடலைக் கத்தியால் குத்திக் காயப்படுத்திக்கொள்கின்றார்கள். தம் முன்னோர் ஹுஸைன் (ரளி) அவர்களுக்குக் கர்பலா களத்தில் செய்த நம்பிக்கைத் துரோகத்திற்குப் பாவமன்னிப்பாக அதைக் கருதுகின்றார்கள். மற்றொரு விதத்தில், ஹுஸைன்  (ரளி) அவர்கள்மீது கொண்டுள்ள அன்பின்மிகுதியால் அவர்கள் பட்ட துன்பத்தைப்போன்று தாமும் அனுபவித்து துக்கம் மேற்கொள்கின்றார்கள். இவையெல்லாம் அறியாமையின் ஆட்டம் இல்லையா?

ஸஃபர் ஒரு பீடை மாதம் என முஸ்லிம்கள் சிலர் கருதி வருகின்றார்கள். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் அம்மாதத்தில்தான் நோய்வாய்ப்பட்டார்கள். அதன்பின் அந்நோயின் காரணமாகவே அவர்கள் மரணத்தைத் தழுவினார்கள். எனவே அம்மாதம் பீடை என்ற மூடப்பழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றார்கள். அம்மாதத்தில் திருமணம் உள்ளிட்ட மங்கலமான நிகழ்வுகளை நடத்த மாட்டார்கள். இது ஒரு வகை அறியாமைதானே?

ரஜப் மாதத்தில் முஸ்லிம்கள் சிலர் சில சடங்குகளைப் பின்பற்றுகின்றார்கள். இமாம் ஜஅஃபர் ஸாதிக் (ரளி) அவர்களின் நினைவாக கீர்-பூரி ஃபாத்திஹா ஓதப்படுகிறது. ஃபாத்திஹா மட்டும் ஓதினாலும் பரவாயில்லை. ஆனால் விறகு வெட்டியின் கதைபடிக்கப்படுவதுதான் அதில் முக்கியமானது. மண் சட்டிகளுக்குச் சந்தனம் தடவி அதில் கீர் எனும் இனிப்புப் பானத்தை ஊற்றி வைத்து, பயபக்தியோடும் புனிதமாகவும் மேற்கொள்ளப்படுகிறது. வீட்டிற்கு வந்துதான் அதை உண்ண வேண்டும். வெளியில் யாருக்கும் அதைக் கொடுத்தனுப்பக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளும் அதில் உண்டு. இதுவும் ஒரு வகை அறியாமைதானே?

நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்துச் செயலைத் தொடங்குதல், கைரேகை பார்த்து எதிர்காலத்தைக் கணித்தல், பிறந்த நேரத்தையும் நட்சத்திரத்தையும் குறித்து வைத்துக்கொண்டு திருமணப் பொருத்தம் பார்த்தல் உள்ளிட்ட ஏராளமான மூடப்பழக்கங்களும் அறியாமைகளும் முஸ்லிம்களிடமும் மண்டிக் கிடக்கின்றன. ஏக இறைவனை ஏற்றுக்கொண்டுள்ள இஸ்லாமியச் சமுதாயத்தில் சடங்கு சம்பிரதாயங்களும் மூடநம்பிக்கைகளும் கோலோச்சி நிற்பது அவர்களின் அறியாமையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. அவர்கள் திருக்குர்ஆனையும் நபிமொழிகளையும் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை என்று தெரிகிறது.

பிற மதச் சகோதரர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய முஸ்லிம் சமுதாயத்தினர், அவர்களே முஸ்லிம்களைக் கேலி செய்யும் விதத்திலான மூடநம்பிக்கைகளைப் பின்பற்றிச் செல்வது எவ்வளவு பெரிய அறியாமை! நம்முடைய நடைமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் இறைவழிபாட்டு முறையையும் பார்த்து, மூடப்பழக்கங்களையும் தவறான கடவுள் கொள்கைகளையும் பின்பற்றி வாழ்வோர் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிலைமை தலைகீழாக உள்ளது. பிற சமுதாய மக்களை மிஞ்சும் அளவிற்கு நம் சமுதாய மக்களிடம் மூடப்பழக்கங்களும் அறியாமைகளும் மேலோங்கி இருப்பதால் பிற சமுதாய மக்கள் நம்மால் ஈர்க்கப்படவில்லை.

ஏகத்துவச் சிந்தனையை முறியடிக்கும்விதமாக ஷைத்தானின் சூழ்ச்சி வலையில் சிக்குண்டு கிடக்கின்ற முஸ்லிம்களை மீட்பதும் அவர்களைச் சொர்க்கப் பாதையை நோக்கி அழைத்துச் செல்வதும் மார்க்க அறிஞர்களின்  தலையாய கடமையாகும். ஆனால் அது குறித்து வருத்தப்படாத அறிஞர்கள் சிலர் முஸ்லிம்களின் அறியாமைச் செயல்களுக்குச் சில வியாக்கியானங்களையும் விளக்கங்களையும் கூறி, அவற்றைச் சரியென வாதிக்கின்றனர். ஆதலால் அறியாமை எல்லா இடங்களிலும் ஆட்டம் போட்டுக்கொண்டே இருக்கிறது.
=======================================    








வெள்ளி, 6 அக்டோபர், 2017

இஸ்லாமிய இலக்கியக் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பெற்ற ஆலிம்கள்!


 30.09.2017 சனிக்கிழமை காலை 11 மணிக்குச் சென்னை கவிக்கோ மன்றத்தில் இஸ்லாமிய இலக்கியக் கழகப் பொதுக்குழு கூடியது. தமிழகமெங்கிலுமிருந்தும் ஏறக்குறைய 130 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  மூத்த ஊடகவியலாளர் அல்ஹாஜ் நூருல்லாஹ் தேர்தல் அதிகாரியாக இருந்து புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்துவாரென்று சேமுமு. அறிவிக்க நூருல்லாஹ் தேர்தலை நடத்தினார்.

பேராசிரியர் டாக்டர் சேமுமு. முகமதலி பெயரைத் தலைவர் பதவிக்குப் பேராசிரியர் ஹாஜா கனி, கவிஞர் இ. பதுருத்தீன் உள்ளிட்ட பலரும் முன்மொழிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான நிஜாமுத்தீன், கவிஞர் ஷேக்மதார் உள்ளிட்ட பலரும் வழிமொழிந்தனர். வேறு எவரது பெயரும் குறிப்பிடப்படாததால் சேமுமு. முகமதலி ஏகமனதாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தேர்தல் அதிகாரி அறிவித்தார். பொதுச் செயலாளர் பதவிக்குப் பேராசிரியர் அப்துல் சமது பெயரை முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்ஹாஜ் அலாவுதீன் உள்படப் பலரும் முன்மொழிய, பேராசிரியர் ஹாஜாகனி உள்படப் பலரும் வழிமொழிய ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளூர் ஷாநவாஸ் உள்படப் பலரும் முன்மொழிய, சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் உள்படப் பலரும் வழிமொழிய எஸ்.எஸ். ஷாஜஹான் பொருளாளராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்பின்னர் நெறியாளர்கள், புரவலர்கள், துணைத் தலைவர்கள், செயலாளர், துணைச் செயலாளர்கள், ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர்கள், சட்ட ஆலோசகர், செயற்குழு உறுப்பினர்கள் முதலியோரது பெயர்களைக் கழகத் தலைவர் எடுத்துரைக்கப் பொதுக் குழு உறுப்பினர்கள் ஏகமனதாக அனைவரையும் ஏற்று அங்கீகரித்துத் தேர்ந்தெடுத்தார்கள். பின்னர் அயலக ஒருங்கிணைப்பாளர்களும் அறிவிக்கப்பெற்றார்கள்.

அவர்களுள் தேர்ந்தெடுக்கப்பெற்ற ஆலிம்களின் விவரம் தங்களின் பார்வைக்கு:

துணைத் தலைவர்கள் வரிசையில்.... 
-----------------------
மௌலவி அ. முஹம்மது கான் பாகவி
மௌலவி தேங்கை ஷரபுத்தீன்

துணைச் செயலாளர்கள்  வரிசையில்.... 
 --- --- --- --- --- ---
மௌலவி எஸ்.என். ஜாபர் சாதிக் பாகவி

அயலக ஒருங்கிணைப்பாளர்கள் வரிசையில்.... 
 --- --- --- --- --- --- --- ---
குவைத்: மௌலவி அ.பா. கலீல் அஹமது பாகவி

செயற்குழு உறுப்பினர்கள் வரிசையில்.... 
 --- --- --- --- --- --- ---
டாக்டர் பி.எஸ். சையது மஸ்வூது ஜமாலி
மௌலவி பீர் முஹம்மது பாகவி
மௌலவி முஹம்மது இல்யாஸ் ரியாஜி
பேராசிரியர் டாக்டர் அ. ஜாஹிர் ஹுஸைன் பாகவி (சென்னைப் பல்கலைக் கழகம்)
டாக்டர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி (துணையாசிரியர் இனிய திசைகள்)
மௌலவி அ.அப்துல் அஜீஸ் பாகவி (கோவை)
மௌலவி காஞ்சி அப்துர் ரவூஃப் பாகவி
மௌலவி பி.எம். கலீலுர் ரஹ்மான் மன்பயீ
மௌலவி பஹாவுத்தீன் காஸிமி

ஆலிம்களுக்குத் தமிழ் தெரியாது என்பது மறைந்து இஸ்லாமிய இலக்கியக் கழகத்தில் இடம்பெறுகின்ற அளவிற்கு அவர்கள் உயர்ந்துள்ளார்கள் என்பதை நினைக்கும்போது எல்லா ஆலிம்களுக்கும் இது பெருமிதம்தானே?

=================================