திங்கள், 23 நவம்பர், 2020

இறைத்தூதருக்கு இச்சமுதாயம் செய்ய வேண்டிய கடமைகள்

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தாம் அனுப்பப்பட்ட சமுதாய மக்கள் நலனுக்காகத் தம்  வாழ்க்கையையே அர்ப்பணித்தார்கள். இச்சமுதாய மக்களுள் யாரும் நரகத்திற்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகப் பெருமுயற்சி செய்தார்கள். எல்லோரும் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று, ஏகத்துவ உறுதிமொழியை மனதாரச் சொல்லிவிட வேண்டுமென்பதற்காக அல்லும் பகலும் பெருமுயற்சி செய்தார்கள். அதை ஏற்காதவர்களை எண்ணியெண்ணிக் கவலையடைந்தார்கள். அவர்களின் பெருங்கவலையைக் கண்ட அல்லாஹ், “(நபியே!) இவ்வேதத்தை அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால் அவர்களின் போக்கிற்காகக் கடும் துக்கப்பட்டு உம்மைநீரே மாய்த்துக் கொள்வீர் போலும்!” (18: 6) என்று திருக்குர்ஆனில் பதிவு செய்துள்ளான்.

எல்லா இறைத்தூதர்களுக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு சிறப்புப் பிரார்த்தனையைக் கொடுப்பது அல்லாஹ்வின் வழக்கம். அவ்வாறு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சிறப்புப் பிரார்த்தனையைப் பயன்படுத்தித் தம் தேவையை நிறைவேற்றிக்கொள்ளாமல், அதைத் தமது சமுதாய மக்களின் மறுமை நலனுக்காகப் பத்திரப்படுத்தி வைத்துள்ளார்கள்.

இந்த அளவிற்குத் தம் சமுதாய மக்கள்மீது பேரன்பு கொண்டுள்ள இறைத்தூதருக்கு இச்சமுதாய மக்களாகிய நாம் செய்ய வேண்டிய கடமைகள் யாவை என்ற வினா நம்முன் நிற்கிறது. அத்தகைய கடமைகளுள் மிக முக்கியமானவை மூன்று உள்ளன. 1. அவர்களை நம் உயிரைவிட மேலாக நேசித்தல், 2. அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றுதல், 3. அவர்கள்மீது அதிகமாக ஸலவாத் ஓதுதல் ஆகியவையாகும்.

நம் உயிரைவிட மேலாக நாம் ஏன் அவர்களை நேசிக்க வேண்டும் என்று கேட்கலாம். அவ்வாறு  நேசித்தால்தான் நம்முடைய இறைநம்பிக்கையே- ஈமானே- முழுமையடையும்.

அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட (நமது தூதரான) நபிதான் மிக்க மேலானவர். (33: 6)

உங்களுள் ஒருவருக்கு அவருடைய  தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும்விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாத வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆகமாட்டார்என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  கூறினார்கள். (நூல்: புகாரீ: 15)

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனமும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழியும் சான்றுக்காக ஒவ்வொன்று மட்டும் கூறப்பட்டுள்ளது. இதுபோல் திருக்குர்ஆனின் பல வசனங்களில் இந்த இறைத்தூதரை நேசித்தல், கண்ணியப்படுத்துதல், உதவி செய்தல், குரலைத் தாழ்த்திப் பேசுதல், முந்திக்கொண்டு கருத்துச் சொல்லாதிருத்தல் உள்ளிட்ட பலவற்றையும் அல்லாஹ் கூறியுள்ளான். மேலும் தம்மை மக்கள் நேசிக்க வேண்டும் என்பது குறித்து இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் பல்வேறு தருணங்களில் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். 

அல்லாஹ்வின் தூதர்மீது அவர்கள்தம் தோழர்கள் எந்த அளவிற்கு அன்பும் நேசமும் கொண்டிருந்தார்கள் என்பதை வரலாற்றில் காண்கிறோம். ஹுதைபிய்யா ஒப்பந்தத்தின்போது உர்வா பின் மஸ்ஊத் என்பவர் குரைஷிகள் சார்பாகப் பேச்சுவார்த்தை நடத்த இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்திருந்தார். அப்போது பல விஷயங்களைப் பேசியபின், “இந்த முகங்களையெல்லாம் பார்த்தால், உமக்கு ஒரு துன்பம் ஏற்படும்போது உம்மை விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள் என்றுதான் தெரிகிறது” என்றார். அதைக் கேட்ட அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு, “லாத் உடைய அந்தரங்க உறுப்பைச் சப்புடா. நாங்கள் எங்களுடைய இறைத்தூதரை விட்டுவிட்டு ஓடிவிடுவோம் என்றா சொல்கிறாய்?” என மிகுந்த சினத்துடன் கேட்டார்கள். அவர்கள் இதற்கு முன்பும் இதற்குப் பின்பும் இதுபோன்று சினம் கொண்டதில்லை. அந்த அளவிற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீது  நேசம் கொண்டிருந்தார்கள்.

உர்வா பின் மஸ்ஊத் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அவர் நபியவர்களின் தாடியைப் பிடித்துத் தடவினார். பாதுகாப்பிற்காக நபியவர்களின் அருகில் நின்றுகொண்டிருந்த முஃகீரா பின் ஷுஅபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவருடைய கையைத் தமது வாளால் தட்டிவிட்டார்கள். இரண்டாவது முறையும் அவர் நபியவர்களின் தாடியைப் பிடித்துத் தடவியபோது தமது வாளால் தட்டிவிட்டார்கள். மூன்றாம் முறை பிடித்தபோது, உடனே அவர்கள் தமது வாளால் அவரது கையைத் தட்டிவிட்டு, “கையை எடுத்துவிடு. இல்லையேல் உன் கை உன்னிடம் திரும்பாதுஎன்று கடும் சினத்தோடு கூறினார்கள். இந்த அளவிற்கு   இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீது நேசம் கொண்டிருந்தார்கள். விரும்புவோர் புகாரீ எனும் நபிமொழித் தொகுப்பு நூலில் விரிவாகப் படித்துக்கொள்ளலாம். (2731)

உஹுதுப் போர் மிகக் கடினமான போர். முஸ்லிம்கள் பல்வேறு துன்பங்களைச் சந்தித்தார்கள். முஸ்லிம்கள் பலர் ஷஹீதாக்கப்பட்டார்கள். அந்தப் போரின் இடையே எதிரிகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் முஸ்லிம்கள் அங்குமிங்கும் ஓடினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில் யாருமில்லாத நிலை ஏற்பட்டது. அதையறிந்த தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு நபியவர்கள்மீது எதிரிகள் எய்த அம்புகளையெல்லாம் தம் உடலைக் கேடயமாக்கி, அவர்களைப் பாதுகாத்தார்கள்.  பற்பல அம்புகள் அவர்களின் உடலைத் துளைத்தன. தம் உயிரையே பணயம் வைத்து நபியவர்களைக் காத்தார்கள். இதுதான் அன்பின் வெளிப்பாடு; நேசத்தின் அடையாளம்.

நபிவழியை-சுன்னத்தை-ப் பின்பற்றுதல்: இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீது நேசம் கொண்டோர் அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகளை-வாழ்க்கை நெறிமுறைகளை அப்படியே பின்பற்ற வேண்டும். அதுதான் அவர் நபியவர்கள்மீது நேசம் கொண்டிருப்பதற்கான அடையாளமாகும். வெறுமனே வாயளவில் சொன்னால் மட்டும் போதாது. நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுடைய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.  

ஒருவர் நம்மைப் பார்த்ததும் இவர் ஒரு முஸ்லிம்என்று தெரிகின்ற விதத்தில் நம் தோற்றத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் நாம் வழியில் காணும் ஒவ்வொரு  முஸ்லிமுக்கும் ஸலாம்-முகமன் கூற வேண்டும். நாம் தும்மினால் அல்ஹம்து லில்லாஹ் கூறுதல், பிறர் தும்மி அல்ஹம்து லில்லாஹ் கூறினால் அதற்குப் பதிலளிக்குமுகமாக யர்ஹமுகல்லாஹ் கூறுதல், கொட்டாவி விட்டால் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் கூறுதல், சாப்பிடுமுன்-சாப்பிட்டபின்-தூங்குமுன்-தூங்கி எழுந்தபின்-கழிவறைக்குள் நுழையுமுன்-அங்கிருந்து வெளியே வந்தபின்- முதலான தருணங்களில் துஆ ஓதுதல்- இவை யாவும் நபிவழிகளாகும்.

மஸ்ஜிதுக்குள் நுழையும்போது நபியவர்களுக்கு ஸலாம் கூறி, பின்னர் அல்லாஹும்ம ஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மத்திக என்று துஆ ஓதுவதும், பாங்கு சொல்லப்படும்போது அவ்வார்த்தைகளையே பதிலாகக் கூறுவதும், அதன்பின் நபியவர்கள்மீது ஸலவாத் ஓதி, அவர்களுக்காக வசீலாஎனும் உயர்பதவியை அல்லாஹ்விடம் கேட்டு துஆ செய்வதும், மனைவியிடம் நல்ல முறையில் நடந்துகொள்வதும், பிள்ளைகளிடம் அன்போடு நடந்து கொள்வதும், உறவினர்களைப் பேணி வாழ்வதும், அண்டை வீட்டாரை அரவணைத்து வாழ்வதும், துன்பங்களைச் சகித்துக்கொள்வதும், பிறரைப் பார்க்கும்போது முகமலர்ச்சியோடு சந்திப்பதும், கடமையான தொழுகைகளை நிறைவேற்றியபின் சுன்னத்தான தொழுகைகளைத் தொழுவதும், வியாபாரத்தை நேர்மையாகச் செய்வதும், கடன் வாங்கினால் குறிப்பிட்ட தவணைக்காலத்தில் உரிய முறையில் நிறைவேற்றுவதும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதும், பெற்றோருக்குப் பணிவிடை செய்வதும் நபிவழிகளாகும்.

பெண்கள் தம் கணவருக்குக் கட்டுப்பட்டு நடப்பதும், அவரை முகமலர்ச்சியோடு வரவேற்பதும், மகிழ்ச்சிப்படுத்துவதும், அவருடைய கட்டளைகளுக்குப் பணிவதும், அவருக்குப் பணிவிடைகள் செய்வதும், அவருடைய பொருள்களைப் பாதுகாப்பதும், பிள்ளைகளைப் பேணி வளர்ப்பதும் அவர்கள் நபியவர்கள்மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துவதற்கான அடையாளங்களாகும்.

ஸலவாத் கூறுதல்: நபியவர்கள்மீது நாம் ஒவ்வொரு நாளும் ஸலவாத் கூறுமுகமாகவே அல்லாஹ் ஆக்கியுள்ளான். அவர்களின் பெயர் கூறாமல் அவர்கள்மீது ஸலவாத் ஓதாமல் தொழுகை என்பதே கிடையாது.  அவர்களின் பெயர் கூறப்படாமல் பாங்கும் இகாமத்தும் கிடையாது; கலிமாவும் இல்லை.

அல்லாஹ் கூறுகின்றான்: திண்ணமாக அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நபிமீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஆகவே, இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவர்கள்மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள். (33: 56) இந்த இறைவசனத்தின்படி அவர்களுக்கு முகமன் கூறுவதும் அவர்கள்மீது ஸலவாத் ஓதுவதும் நம் கடமையாகும். அஸ்ஸலாமு அலைக்கும் யா ரசூலல்லாஹ்என்று நாம் கூறினால் அதை எடுத்துச் சென்று அவர்களிடம் சமர்ப்பிக்கும் வானவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.  அவர்கள் அதை எடுத்துச் சென்று இன்னார் உங்களுக்கு ஸலாம் சொன்னார் என்று தெரிவித்துவிடுவார்கள்.  இதனால்தான் நாம் பள்ளிவாசலுக்குள் நுழைகின்றபோது அவர்களுக்கு ஸலாம்-முகமன் கூற வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள்.

ஆகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நம் உயிரைவிட மேலாக நேசிப்பதும் நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் வழிமுறையைப் பேணி நடப்பதும், அவர்கள்மீது ஸலவாத் ஓதுவதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும். உயர்ந்தோன் அல்லாஹ் நம் அனைவருக்கும் அத்தகைய நற்பேற்றை நல்குவானாக.

=========================







பெண்மையைப் போற்றிய பெருமான் நபி!

 


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

--------------------------------------------------

பெண் குழந்தை பிறந்தவுடன் அதை உயிருடன் புதைக்கும் பழக்கம் அரபியர்களிடம் பரவலாகக் காணப்பட்டது. பெண் குழந்தை பிறந்துவிட்டால் அக்குழந்தையை இழிநிலையோடு வைத்துக்கொள்ளலாமா? அல்லது புதைத்துவிடலாமா? என்று நினைப்பான். மக்கள் கேலி செய்வதையும் ஏளனம் செய்வதையும் எண்ணிப் பார்த்து, அக்குழந்தையை உயிருடன் புதைத்துவிடுவான். அத்தகைய கல்நெஞ்சினர்களாக இருந்த அரபியர்கள் மத்தியில் இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்தார்கள்.

அன்றைய மக்களின் மனோநிலையை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: அவர்களுள் ஒருவனுக்குப் பெண் குழந்தை பிறந்ததாக நற்செய்தி கூறப்பட்டால் அவனுடைய முகம் (துக்கத்தால்) கறுத்து, கோபத்தை விழுங்குகிறான். (பெண் குழந்தை பிறந்ததென) அவனுக்குக் கூறப்பட்ட இந்தக் கெட்ட செய்தியைப் பற்றி (வெறுப்படைந்து) இழிவுடன் "அதை வைத்திருப்பதா? அல்லது (உயிருடன்) மண்ணில் புதைத்து விடுவதா?'' என்று கவலைப்பட்டு மக்கள்முன் வராது மறைந்துகொண்டு அலைகிறான். (16: 58-59)

அவ்வாறு உயிருடன் புதைக்கின்ற மனிதாபிமானமற்ற செயலைக் கண்டிக்கும் விதமாக அல்லாஹ் மற்றோர் இடத்தில் இவ்வாறு சொல்கிறான்: (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தைகளை நோக்கி, "எந்தக் குற்றத்திற்காக நீங்கள் (உயிருடன் புதைக்கப்பட்டுக்) கொலை செய்யப்பட்டீர்கள்?'' என்று கேட்கப்படும். (81: 8-9)

இத்தகைய தருணத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்கள் மத்தியில் ஏகத்துவப் பிரச்சாரம் மேற்கொண்டார்கள். அத்தோடு பெண் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் என்ற இறைவசனங்களையும் எடுத்துரைத்தார்கள். மேலும் இவ்வாறு கூறினார்கள்: "யார் மூன்று மகள்களைப் பேணி வளர்த்து, அவர்களுக்கு ஒழுக்கம் கற்பித்து, அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்து, அவர்களிடம் நல்லமுறையில் நடந்துகொண்டாரோ அவருக்குச் சொர்க்கம் உண்டு.'' (நூல்: அபூதாவூத்: 5147) 

"யார் இரண்டு பெண்பிள்ளைகளைப் பேணி வளர்த்தாரோ அவரும் நானும் இவ்வாறு சொர்க்கத்தில் நுழைவோம்'' என்று கூறித் தம் இரண்டு விரல்களைக் காட்டினார்கள். (நூல்: திர்மிதீ: 1914)

பெண் பிள்ளைகளை மட்டுமின்றி, ஒரு பெண் திருமணத்திற்குப் பின் குழந்தையை ஈன்றெடுத்தால் தாய் எனும் உயரிய மதிப்பைப் பெறுகிறாள். எனவே அவள் ஈன்றெடுத்த பிள்ளைகள் அவளை மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில், "தாயின் காலடியில் சொர்க்கம் உண்டு'' என்று கூறிப் பெண்ணை மேன்மைப்படுத்தினார்கள். இதன் மூலம், ஓர் ஆண் சொர்க்கத்தை அடைய, தாய் எனும் பெண்ணைப் போற்றி மதித்து அவருக்குப் பணிவிடைகள் செய்ய வேண்டுமென்ற நிபந்தனையை விதித்தார்கள் நபிகள் நாயகம்.

மேலும் பெற்றெடுத்த தாயைப் பற்றித் திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறியுள்ள செய்தியையும் மக்கள் மத்தியில் எடுத்தோதினார்கள்: உங்களிடம் இருக்கும் அவர்களுள் ஒருவரோ இருவருமோ முதுமையை அடைந்துவிட்டபோதிலும் அவர்களை விரட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) "சீ' என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள். (17: 23)

பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பல்வேறு தருணங்களில் ஆர்வமூட்டிக் கூறியுள்ளார்கள். கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம் (ஆண்-பெண்) மீதும் கடமையாகும். (நூல்: இப்னுமாஜா: 224)

பெண்களைப் போகப்பொருளாக மட்டுமே அக்கால மக்கள் கருதிவந்த நேரத்தில், அவர்களை நிர்ப்பந்தப்படுத்தி அடையக்கூடாது; அவர்களை விபச்சாரத்திற்காக நிர்ப்பந்தப்படுத்தக்கூடாது என்றெல்லாம் திருக்குர்ஆன் கூறியது. அவர்களின் கற்பை அடைய வேண்டுமெனில், அவர்களுக்குரிய மஹ்ரை (மணக்கொடையை) உரிய முறையில் வழங்கி, முறைப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற திருக்குர்ஆனின் கட்டளையை எடுத்துரைத்து அம்மக்களைச் சீர்படுத்தினார்கள்.    

திருக்குர்ஆன் கூறுகிறது: நீங்கள் (திருமணம் செய்துகொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய "மஹரை' (மணக்கொடையை)க் கண்ணியமான முறையில் கொடுத்துவிடுங்கள். (4: 4)

மணப்பெண் வீட்டாரிடமிருந்து இயன்றதைக் கறந்துவிடுவோர் இன்றும் உள்ளனர். சகோதரச் சமுதாயத்தைச் சார்ந்த பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாத காலக் கட்டத்தில் உருவானதுதான் வரதட்சணை எனும் பெண்களுக்கு எதிரான பழக்கம். அப்பழக்கம் பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு என்று சட்டமியற்றப்பட்ட பிறகும் தொடர்வது கவலைக்குரியதாகும். சகோதரச் சமுதாயத்தோடு சேர்ந்து வாழ்கின்ற முஸ்லிம்களுக்கும் அப்பழக்கம் தொற்றிக்கொண்டது. இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை அறியாத முஸ்லிம்கள் பெண்வீட்டாரிடமிருந்து வரதட்சணை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதேவேளையில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை அறிந்த முஸ்லிம்கள் மணப்பெண்ணுக்கு உரிய மணக்கொடையைக் கொடுத்தே திருமணம் செய்துவருகின்றனர். இன்று இப்பழக்கம் பரவலாக அறியப்பட்டுள்ளதால் பெரும்பாலோர் மணக்கொடை கொடுத்தே மணம்புரிகின்றனர். இது இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உயர்வும் மேன்மையும் ஆகும்.

பிறப்புரிமை, சொத்துரிமை, கல்வி கற்கும் உரிமை, வாக்குரிமை, நடமாடும் உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. இவை அனைத்தும் இன்று நேற்றல்ல, பதினைந்து நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகின்றன.

யூதர்களும் கிறிஸ்தவர்களும் பெண்களை அவர்கள்தம் மாதவிடாய்க் காலத்தில் ஒதுக்கி வைத்தனர். அது அவர்களுக்கு மனத்தளவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. இன்றும் அப்பழக்கம் அவர்களிடம் இருந்து வருகின்றது. ஆனால் மாதவிடாய்க் காலத்தில் கணவன்-மனைவி உடலுறவு கொள்வதைத் தவிர மற்றெல்லாவற்றிலும் அவர்கள் இருவரும் சேர்ந்து இருப்பதில் தவறில்லை என்று திருக்குர்ஆன் சட்டமியற்றியது. அதற்கேற்ப அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் மனைவியரோடு இணைந்து இணக்கமாகவே வாழ்ந்துள்ளார்கள் என்பதை இஸ்லாமிய வரலாற்றில் காண்கிறோம்.

இது குறித்து அவர்கள்தம் அன்பு மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா இவ்வாறு கூறுகிறார்: எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நான் (ஏதேனும் பானத்தைப்) பருகிவிட்டு அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் ஏற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்துவிட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள். (நூல்: முஸ்லிம்: 505)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (பள்ளிவாசலில் இஃதிகாஃபில் இருக்கும்போது) அறையிலிருக்கும் என் பக்கம் தமது தலையை நீட்டுவார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள நிலையிலும் நான் அவர்களுக்குத் தலை வாரிவிடுவேன் என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 500) எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டு குர்ஆன் ஓதுவார்கள் என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 506)

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்து கொண்டிருந்தபோது (தம் துணைவியாரிடம்), "ஆயிஷா! அந்தத் துணியை எடுத்துத் தா!'' என்றார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, "எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே!'' என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், "மாதவிடாய் உனது கையிலில்லை'' என்று சொன்னார்கள். அதையடுத்து அந்தத் துணியை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா எடுத்துக் கொடுத்தார்கள். (நூல்: முஸ்லிம்: 504)

இவ்வாறு பல்வேறு நபிமொழிகள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் பெண்களின் மாதவிடாய்க் காலத்தில் அவர்களை ஒதுக்காமலும் அந்நியப்படுத்தாமலும் அவர்களோடு அண்மித்து வாழ வேண்டும் என்று உணர்த்துகின்றன. இவற்றைப் படிக்கின்ற யாரும் நபியவர்கள் பெண்களுக்குக் கொடுத்திருந்த முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ளலாம்.

பெண்களுக்கான ஆடை அணியும் பழக்கம் முறைகேடாக இருந்த அக்காலத்தில் பெண்கள் ஆண்களுக்குக் காட்சிப்பொருளாகக் காணப்பட்டனர். ஆகவே அவர்களின் ஆடை அணியும் முறையைச் சீர்படுத்தி, அவர்கள் கண்ணியமான முறையில் ஆடை அணியும் பழக்கத்தை ஏற்படுத்தியது இஸ்லாம். அன்று முதல் இன்று வரை இஸ்லாமியப் பெண்களின் ஆடை குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் அதேவேளையில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் இன்று மலிந்து காணப்படுவது கண்கூடு. அதற்கு முக்கியக் காரணங்களுள் ஒன்று அவர்களின் உடலுறுப்புகள் கவர்ச்சியாக வெளியே தெரியும்வண்ணம் அணிகின்ற ஆடைதான் என்பதைப் பலரும் ஒத்துக்கொள்கிறார்கள். ஆகவே நபியவர்கள் பெண்களுக்கான ஆடைச் சீர்திருத்தத்தை மேற்கொண்டதன்மூலம் அவர்களுக்குப் பாதுகாப்பைபே வழங்கியுள்ளார்கள்; அதில் அடிமைத்தனம் அறவே இல்லை என்பதை நடுநிலையாளர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். 

ஆக இவ்வாறு பல்வேறு உரிமைகளையும் உயர்வுகளையும் இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. இம்மார்க்கத்தின் வழிகாட்டியாக இறுதியாக வந்த இறைத்தூதர் முஹம்மது  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பெண்களுக்குரிய உரிமைகளை வழங்கி, அவர்களை மேன்மைப்படுத்தியுள்ளார்கள் என்பதை இன்றைய கணினி உலகில் வாழும் பெரும்பாலோர் விளங்கியுள்ளார்கள் என்பதை அறிந்து, இம்மார்க்கத்தைத் தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டுள்ள நாம் அனைவரும் பெருமகிழ்ச்சியடைகிறோம்.  

===================================