வெள்ளி, 24 டிசம்பர், 2021

இறைநேசர்களின் பண்புகள்

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இறைநேசர்கள் என்றாலே முற்காலத்தில் வாழ்ந்து மறைந்தவர்களையே உதாரணம் காட்டுகிறோம். அண்மையில் வாழ்ந்து மறைந்தோரை நாம் உதாரணம் காட்டுவதில்லை. அப்படியெனில் இறைநேசர்கள் ஆகுதல் எனும் கதவு  அடைக்கப்பட்டுவிட்டதா? நம் காலத்தில் யாரும் இறைநேசர் ஆகமுடியாதா? என்ற வினாக்கள் எழுகின்றன. இல்லை. அது அடைக்கப்படவில்லை என்பதே அதற்கான விடையாகும்.

அப்படியெனில் நாம் எவ்வாறு இறைநேசர் ஆவது? நாம் இறைநேசர் ஆக வேண்டுமெனில் அல்லாஹ்வின் கட்டளைகளை அப்படியே ஏற்று நடக்க வேண்டும். அவன் எவற்றையெல்லாம் தடைசெய்திருக்கின்றானோ அவற்றிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். நல்லறங்கள் செய்வதோடு, நற்பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒருவர் இறைநேசர் ஆவதற்கு என்னென்ன நற்பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

இறைநேசர்கள் என்றால், அவர்கள் அல்லாஹ்வை நேசிப்பார்கள். அல்லாஹ்வும் அவர்களை நேசிப்பான். அவர்கள்தாம் இறைநேசர்கள். அல்லாஹ் நம்மை நேசிக்க வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்? அல்லாஹ்வை மட்டுமே அஞ்ச வேண்டும்; எதிர்காலத்தைப் பற்றிய கவலை இருக்கக்கூடாது. அது குறித்து அல்லாஹ் கூறுகின்றான்: அறிந்துகொள்க! நிச்சயமாக அல்லாஹ்வின் நல்லடியார்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவுமாட்டார்கள்.” (10: 62)

இறைநேசர்களுக்கு எதனால் எந்த அச்சமும் இருப்பதில்லை. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வை மட்டுமே அஞ்சுபவர்கள் ஆவர். அல்லாஹ்வை மட்டுமே அஞ்சுவோருக்கு வேறு எந்த அச்சமும் இருப்பதில்லை. எந்த அச்சமும் இல்லையெனில் எதிர்காலத்தைப் பற்றிய எந்தக் கவலையும் இருக்காது. கடந்த காலத்தைப் பற்றிய துக்கமோ எதிர்காலத்தைப் பற்றிய கவலையோ அவர்களின் மனத்தில் அறவே இருக்காது. 

மதீனாவில் ஒரு நாள் இரவு நேரத்தில் மக்கள் மத்தியில் ஒரு பேரச்சம் நிலவியது. அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு குதிரைமீதேறி, தன்னந்தனியாகச் சென்று திரும்பி வந்து, எந்த அச்சமும் வேண்டாம் என்று மக்களைத் தேற்றினார்கள். அது குறித்த நபிமொழி புகாரீ நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.  

(எதிரிகள் படையெடுத்து வருவதாக) மதீனா நகரில் பீதி நிலவியது. உடனே, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் குதிரையில் ஏறி (விவரமறிந்து வர)ப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள், “(பீதி ஏற்படுத்தும்) எதனையும் நாம் காணவில்லை.  தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகவே நாம் இந்த குதிரையைக் கண்டோம்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 2968) அல்லாஹ்வின் மீதான அச்சம் மட்டுமே உள்ளோருக்கு வேறு எந்த அச்சமும் இருப்பதில்லை என்பதற்கான சான்றாக இந்த நபிமொழி திகழ்கிறது.

இறைநேசர்களின் நற்பண்புகளுள் ஒன்று அல்லாஹ்விற்காகவே எதையும் செய்தல் ஆகும். அவர்கள் எதையும் விரும்பினாலும், எதையேனும் வெறுத்தாலும், எதையேனும் யாருக்கேனும் கொடுத்தாலும், கொடுக்காமல் தடுத்து வைத்துக்கொண்டாலும் எல்லாமே அல்லாஹ்வுக்காகவே இருக்கும். அவனது திருப்தியைப் பெற வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கி இருக்கும். உலகாதாய நோக்கமோ, உலகாதாயப் பயன்களைப் பெறுவதாகவோ இருக்காது.

இது குறித்து ஒரு நபிமொழி இவ்வாறு கூறுகின்றது: யார் அல்லாஹ்வுக்காகவே நேசித்தாரோ, அல்லாஹ்வுக்காகவே (ஒருவனை) வெறுத்தாரோ, அல்லாஹ்வுக்காகவே கொடுத்து, அல்லாஹ்வுக்காகவே தடுத்துக்கொண்டாரோ அவர் ஈமானை (இறைநம்பிக்கையை) முழுமைப்படுத்திக்கொண்டுவிட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அபூதாவூத்: 4681)

எதைச் செய்தாலும் அல்லாஹ்வுக்காகச் செய்வதே ஒருவர் தம் இறைநம்பிக்கையை முழுமைப்படுத்திக்கொள்வதற்கான வழியாகும். அதை ஒருவர் செய்தால் அவர் இறைநேசர்களுள் ஒருவர் எனத் தம்மைக் கருதிக்கொள்ளலாம். அதாவது ஒருவர் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செவ்வனே நிறைவேற்றுகிறார்; அன்றாடம் ஐவேளைத் தொழுகைகளைத் தொழுகிறார்; உரிய முறையில் ஸகாத்தை வழங்கிவருகிறார்; உபரியான தான தர்மங்களைச் செய்து வருகிறார்; தீன்பற்று மிக்கவராகத் திகழ்கிறார்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுவதில் முன்னிற்கிறார். இத்தகைய ஒருவரை நாம் நேசிப்பதே அல்லாஹ்வுக்காக நேசித்தல் ஆகும்.

அதேநேரத்தில் ஒருவர் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்கிறார்; வட்டி வாங்குகிறார்; தடை செய்யப்பட்ட தொழில்களைச் செய்கின்றார். இத்தகையோரை நாம் வெறுக்க வேண்டும். இத்தகையோர்மீது நமக்கு இயல்பாகவே வெறுப்பு ஏற்பட்டால் அதுதான் அல்லாஹ்வுக்காகவே ஒருவரை வெறுத்தல் ஆகும். ஆக அல்லாஹ்விற்காகவே விரும்புதலும் அல்லாஹ்வுக்காகவே வெறுத்தலும் இறைநேசர்களின் பண்பாகும். இப்பண்பை நாம் கொண்டிருந்தால் நாமும் இறைநேசர்களுள் ஒருவராக ஆகிவிடலாம்.

அடுத்து, அல்லாஹ் கடமையாக்கியுள்ள கடமையான வழிபாடுகளைச் செவ்வனே நிறைவேற்றுவதோடு  உபரியான (நஃபிலான) வழிபாடுகளையும் நிறைவேற்ற வேண்டும். இவற்றைப் பார்க்கின்ற அல்லாஹ் அந்த அடியானை விரும்புகின்றான். இது குறித்து நபியவர்கள் கூறியுள்ள ஒரு செய்தி புகாரீ எனும் நபிமொழித் தொகுப்பு நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: ...எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கியதைவிட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன்... (புகாரீ: 6502)

ஆக கடமையான வழிபாடுகள் என்பதில் ஐவேளைத் தொழுகை, ரமளான் மாத நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகியவை அடங்கும். ஸகாத்தும் ஹஜ்ஜும் வசதியுள்ளோருக்கு மட்டுமே பொருந்தும். அதன்பின் உபரியான தொழுகை என்பதில் கடமையான ஐவேளைத் தொழுகைக்கு முன்-பின் உள்ள சுன்னத்துகள், நஃபில்கள், இஷ்ராக், லுஹா, அவ்வாபீன், தஹஜ்ஜுத் உள்ளிட்டவை அடங்கும். உபரியான நோன்புகள், அவ்வப்போது ஏழைகளுக்குத் தர்மங்கள், தனிமையில் அமர்ந்து இறைவனைப் புகழ்ந்து திக்ர் செய்தல் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும். அவரே இறைநேசராகத் திகழ முடியும்.

அல்லாஹ்வின் வழியில் செலவு செய்தாலோ ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் பொருளாதார உதவிகள் செய்தாலோ பொருட்செல்வம் குறைந்துவிடும் என்ற எண்ணம் ஏற்படக்கூடாது. அவர்களே இறைநேசர்கள்  ஆவர். இறைநேசர்கள் பொய் பேச மாட்டார்கள்; வீண் விளையாட்டுகளில் ஈடுபட மாட்டார்கள்; வீண் வேடிக்கைகளைப் பார்க்க மாட்டார்கள்; அறிவிலிகள் ஏதாவது அரட்டையடிக்கும் விதமாகவோ வம்பிழுக்கும் விதமாகவோ பேசினால் ஸலாம் எனக் கூறி ஒதுங்கிவிடுவார்கள். இவ்வாறு பற்பல நற்பண்புகள் அவர்களிடம் இருக்கும்.

இறைநேசர்கள் தம்மைப் படைத்துப் பரிபாலிக்கின்ற பேரிறைவன் அல்லாஹ்வுக்கு அதிகமாக நன்றி செலுத்துவார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வுக்கு மிக அதிகமாக நன்றி செலுத்தி வந்தார்கள் என்பதை நாம் அறிவோம். அது குறித்து முஃகீரா பின் ஷுஅபா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ள ஒரு நபிமொழியைப் பார்க்கலாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் "தமது பாதங்கள்' அல்லது "கணைக்கால்கள்' வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இது குறித்து அவர்களிடம் கேட்கப்படும்போது நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?'' என்று கேட்பார்கள்.  (புகாரீ: 1130)

இறைத்தூதர்கள், இறைநேசர்கள் ஆகியோர் குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் எங்கெல்லாம் கூறுகின்றானோ அங்கெல்லாம் நன்றி செலுத்துதல் குறித்துக் கூறுகின்றான். அதாவது அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு மிகுந்த நன்றி செலுத்துபவர்களாக இருந்தனர் என்று தெரிவிக்கின்றான்.

சுலைமான் அலைஹிஸ்ஸலாம் சொன்ன செய்தி: ...இது நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா இல்லையா என்று என்னைச் சோதிப்பதற்காக என் இறைவன் எனக்குப் புரிந்த பேரருளாகும். எவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான்... (27: 40)

லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் குறித்த ஒரு செய்தி: லுக்மானுக்கு நாம் ஞானத்தைக் கொடுத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும்படி கூறினோம். ஏனென்றால், எவர் நன்றி செலுத்துகிறாரோ அவர் தம் நன்மைக்காகவே நன்றி செலுத்துகிறார். எவன் (அதனை) நிராகரிக்கிறானோ (அவன் தனக்குத் தீங்கைத் தேடிக்கொள்கிறான். அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நட்டமில்லை. ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவனும் புகழுக்குரியோனும் ஆவான்.  (31: 12)

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் குறித்த ஒரு செய்தி: இறைவனின் அருட்கொடைகளுக்கு (எந்நேரமும்) நன்றி செலுத்துபவராக இருந்தார்.” (16: 121)

 

இவ்வாறு இறைநேசர்களும் இறைத்தூதர்களும் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோராக இருந்தார்கள். எனவே நாம் அல்லாஹ்வுக்கு நன்றிக்குரியோராக இருந்தால் அவனுடைய அடியார்களாக, இறைநேசர்களாக உருவாகலாம்.

படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிற அதேநேரத்தில் நம்மைச் சார்ந்த எத்தனையோ பேர் நமக்கு உதவி செய்கின்றார்கள். அவர்கள் செய்கின்ற சின்னச்சின்ன உதவிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டே இருக்க வேண்டும். நம்மால் இயன்ற கைம்மாறையும் செய்துவர வேண்டும். அதுதான் இறைவனுக்கு நன்றி செலுத்தத் தூண்டுகோலாக அமையும். ஆக இத்தனை நற்பண்புகளையும் நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் கடைப்பிடித்தால் நாமும் இறைவன் விரும்பும்  இறையடியார்களாக-இறைநேசர்களாக ஆகிவிடலாம். அதற்காக நாம் நாள்தோறும் முயன்றுகொண்டே இருப்போம்.

==========================









வியாழன், 16 டிசம்பர், 2021

வார்த்தைகளை வடிகட்டுவோம்!

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

மனிதர்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்கு அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளே முக்கியப் பங்கு வகிக்கின்றன. வாகனத்தில் செல்லும்போது அடுத்தவர் வாகனத்தில் இலேசாக உராய்வை ஏற்படுத்திவிட்டபோது எதிராளி கோபப்பட்டுப் பேசுவான். இடித்தவனும் கோபப்பட்டுப் பேசுவான். அதனால் அங்கு ஒரு மிகப்பெரும் சண்டையே உருவாகிவிடும். "சாரி சார்' என்று இடித்தவன் அன்பாக, மெதுவாகக் கூறியிருந்தால் அவ்வளவு பெரிய சண்டையே தேவையில்லை. சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, சினத்தைத் தூண்டுகின்ற வார்த்தைகளைக் கூறாமல் மனதுக்கு இதமளிக்கின்றமனதைச் சாந்தப்படுத்தி, மகிழ்ச்சியைத் தூண்டும் வார்த்தைகளையே கூற வேண்டும்.

 

இதுபோலவே நல்ல நல்ல வார்த்தைகளை நம் பிள்ளைகளுக்குத் தொடக்கத்திலிருந்தே கற்பிக்க வேண்டும். தக்க தருணத்தில் வெளிப்படுத்துகின்ற அன்பான வார்த்தைகள் பிறரின் மனக்கவலைகளை மாற்றி மகிழ்ச்சியைக் கொண்டுவரும். துக்கத்தில் இருப்பவருக்கு நம்முடைய ஆறுதலான வார்த்தைகள்தாம் அருமருந்து. அதை விட்டுவிட்டு, துக்கத்தில் இருப்பவர் முன்னால் நாம் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் போடுவதோ, அவரைக் கேலி செய்யும் விதமாக நடந்துகொள்வதோ, "உனக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்'' என்று எகத்தாளமாகப் பேசுவதோ கூடாது.

 

மரியாதையற்ற வார்த்தைகளைக் கூறாமல் மதிப்புமிக்க வார்த்தைகளையே கூற வேண்டும். அதையே நம் பிள்ளைகளுக்கும் கற்பிக்க வேண்டும். மரியாதையற்ற வார்த்தைகளைப் பேசியதாலேயே பலரின் குடும்ப வாழ்வு சிதைந்திருக்கிறது. பள்ளிவாசலில் குர்ஆன் வகுப்பு நடத்தி வருகின்ற என்னிடம் பல்வேறு சூழலில் வளர்ந்த பிள்ளைகள் வருகை தருகின்றார்கள். அவர்களிடம் எப்போதும் ஒரு பிரச்சனை இருந்து வந்தது. "இவனைவிட நான் வயதில் மூத்தவன்; இவன் என்னை "டா' என அழைக்கிறான்'' என்று ஒருவருக்கொருவர் முறையீடு செய்துகொண்டே இருந்தனர். அதனால் நான், இனி அனைவரும் அவரவர் பெயரோடு "ஜீ' என்பதைச் சேர்த்து, ஆரிப்ஜீ, நூருல்லாஹ்ஜீ என்றுதான் அழைக்க வேண்டும்'' என்றொரு கட்டளை பிறப்பித்தேன். பிரச்சனை ஓய்ந்தது மட்டுமல்ல ஒருவருக்கொருவர் மரியாதையாக அழைக்கத் தொடங்கிவிட்டனர்.

 

குடும்ப உறவுகளைச் சிதைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது மரியாதையற்ற பேச்சுதான். ஆசிரியர்-மாணவர்களிடையே இருக்க வேண்டிய மரியாதையான உறவு சிதைந்துபோய்க் கிடப்பதற்கான காரணம் மரியாதையற்ற பேச்சுதான். கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதற்கான காரணம் மரியாதையற்ற போங்குதான். ஆக, எல்லா இடங்களிலும் மரியாதையற்ற பேச்சு உறவுகளையும் அன்னியோன்யத்தையும் சிதைக்கிறது. அதேநேரத்தில் மரியாதையான பேச்சுக்கு உள்ளத்தைக் கவரும் ஆற்றல் உண்டு. வார்த்தைகளைக் கோர்த்துக் கோர்த்துப் பேசுவதைவிடப் பார்த்துப் பார்த்துப் பக்குவமாகப் பேசுவதே சிறந்தது.

 

இன்றைக்கு ஆசிரியர்-மாணவர் இடையே இருக்க வேண்டிய மரியாதையான உறவு சிதைந்து போனதற்குக் காரணம், மாணவர்களின் மனதில் தம் ஆசிரியர்களைப் பற்றிய மரியாதையான எண்ணம் இல்லை. பட்டப் பெயர் சூட்டி அழைப்பது, கேலி கிண்டல் செய்வது மிகுந்து காணப்படுகிறது. ஆசிரியரைப் பற்றிய கண்ணியமான எண்ணமும் மரியாதையான பார்வையும் இல்லாதபோது அவர் நடத்துகின்ற பாடத்தை எவ்வாறு அந்த மாணவன் முக்கியத்துவம் கொடுத்துக் கவனிப்பான்?

 

ஒருவன் தன் தாய்-தந்தையை மதிப்பதில்லை என்றால் அதன் அடிப்படைக் காரணம் தன் பெற்றோரைப் பற்றிய மரியாதை அவனுடைய மனதில் இல்லை என்பதே. அதன் மூலவேர் அவர்களை மரியாதையாக அழைப்பதிலிருந்து தொடங்குகிறது. ஒருவன் தன் தாய்-தந்தையை வாங்க, போங்க என்று மரியாதையாக அழைக்கத் தொடங்கினாலே அவர்கள் இட்ட கட்டளைக்குப் பணிந்து நடக்கத் தொடங்கிவிடுவான். வா, போ என்று மரியாதைக் குறைவாக அழைப்பவன் அவர்களின் கட்டளைக்குப் பணிய மறுப்பான். இதுதான் அடிப்படை. ஆக, குடும்ப உறவுகள் மேம்பட, தாய்-தந்தைக்குப் பிள்ளைகள் பணிந்து நடக்க வார்த்தைகள் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதை ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும் தம் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.

 

இவ்வாறு மரியாதையான வார்த்தைகள் சிதைந்துபோனதில் திரைப்படங்களுக்கு முக்கியப் பங்குண்டு. நகைச்சுவைக் காட்சிகளுக்காக அப்பாவை பிள்ளை வாடா, போடா என்று அழைப்பதும் அப்பாவிடம் மரியாதையின்றி நடந்துகொள்வதும், தன் தாயைக் காலால் எட்டி உதைப்பதும் காட்சிப்படுத்தப்படுகின்றன. அதைக் காணும் பிள்ளைகள் அதை அப்படியே தம் பெற்றோரிடம் பிரதிபலிக்கின்றனர். நிழலுக்கும் நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் தம் வாழ்க்கையைச் சிதைத்துக்கொள்கின்றனர்.

 

அதேகோணத்தில் அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் அதைரியப்படுத்துகின்ற வார்த்தைகள் ஏராளம். பிள்ளைகளோ மற்றவர்களோ நம்மிடம் ஒரு போட்டி குறித்தோ, ஒரு தேர்வு குறித்தோ கூறும்போது, நாம் அவர்களை வாழ்த்தி ஓரிரு வார்த்தைகள் கூறினால் அது அவர்களுக்குப் புத்துணர்வூட்டும். அதற்கு முரணாக, "போ, போ நீ உருப்புட்ட மாதிரிதான்'', "நீயெல்லாம் தேறமாட்டாய்'' என்ற அமங்கலமான, எதிர்மறையான வார்த்தைகளைக் கூறினால் அது அவர்களின் மனதைக் காயப்படுத்துவதோடு, எடுத்த முயற்சியையும் கைவிட்டுவிடுவார்கள். எனவே நாம் பேசுகின்ற வார்த்தைகள் மிக முக்கியமானவை. அவை பிறரின் வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் காரணமாக இருக்க வேண்டுமே தவிர அவர்களின் தோல்விக்கும் பின்னடைவுக்கும் ஒருபோதும் காரணமாக ஆகிவிடக்கூடாது.

 

அதுபோல், நம்முடைய அன்றாட வாழ்க்கைப் பயன்பாட்டில் உள்ள கொச்சை வார்த்தைகள், வன்முறை வார்த்தைகள் பல உள்ளன. அவற்றைக் களைந்து அவற்றின் இடத்தில் வேறு நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அதைச் செவியுறுகின்ற நம் பிள்ளைகள் தாமாகவே அவற்றை நம்மிடமிருந்து கற்றுக்கொள்வார்கள். "நான் இதை வெற்றிகொள்ள வேண்டும் என வெறி கொண்டிருந்தேன். அதனால்தான் என்னால் வெற்றிகொள்ள முடிந்தது'' என்று சொல்கின்ற வாக்கியத்தில், "வெறி' என்ற வார்த்தைக்குப் பதிலாக "வைராக்கியம்' கொண்டிருந்தேன் என்று பயன்படுத்தலாம். "அவன்மீது எனக்குக் கொலைவெறி'' என்று சொல்வதற்குப் பதிலாக "அவன்மீது எனக்கு மிகுந்த சினம்'' என்று கூறலாம். இப்படி வார்த்தைகளில் வன்முறை கலப்பதைத் தவிர்க்கத்தான் வேண்டும். இல்லையேல் அதுவே நம்மை மீளாத் துயருக்குள் ஆழ்த்திவிடும்.     

 

நாம் பேசுகின்ற வார்த்தைகள் பிறரின் மனத்தைப் பண்படுத்த வேண்டுமே தவிர புண்படுத்திவிடலாகாது. எனவே வார்த்தைகளை வடிகட்டிப் பேசுவோம். பிறர் மகிழப் பேசுவோம். "நல்ல வார்த்தைகளைப் பேசுவது தர்மமாகும்'' (புகாரீ) என்ற நபிமொழியை நினைவில் கொள்வோம்.

 ===================






வியாழன், 18 நவம்பர், 2021

அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுப்படுவோம்!

  

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

-------------------------------------------

இறைநம்பிக்கை கொண்டோரே, அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள். அவனுடைய தூதருக்கும் உங்களுள் அதிகாரமுடையோருக்கும் கட்டுப்படுங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். (4: 59)

இத்தூதருக்குக் கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டுவிட்டார். (4: 80)

அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டவர் மகத்தான வெற்றியைப் பெற்றுவிட்டார். (33: 7)

மேற்கண்ட இறைவசனங்கள், மக்கள் எல்லோரும் இறைத்தூதருக்குக் கட்டுப்பட வேண்டுமென வலியுறுத்துகின்றன. அவ்வாறு கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர் என்றும் அவர் மகத்தான வெற்றியைப் பெற்றுவிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இறைநம்பிக்கை கொண்ட ஒருவர் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எதையெல்லாம் கட்டளையிட்டுள்ளனரோ அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். அதில்தான் வெற்றி உள்ளது என்பதை மனதார நம்பிக்கை கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நாம் ஒவ்வொருவரும் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஏவல்களை ஏற்று நடப்பதும் அவர்கள் தடை செய்தவற்றைவிட்டுத் தவிர்ந்துகொள்வதும் ஈமானின் வெளிப்பாடாகும்; அன்பின் அடையாளமாகும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ள எத்தனையோ  வழிமுறைகளை இன்று நம்முள் பலர் கைவிட்டுவிட்டனர். மிகச் சிலரே அவற்றைத் தம் அன்றாட வாழ்க்கையில் பின்பற்றி வருகின்றார்கள்.

பல்துலக்குவது வாய்க்குச் சுத்தமாகும். இறைவனுக்கு விருப்பமானதாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா: 289) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  மிஸ்வாக் குச்சியைப் பயன்படுத்தியே பல்துலக்கியுள்ளார்கள் என்பதை பல்வேறு நபிமொழிகளின் மூலம் அறிகிறோம். ஆனால் நம்முள் எத்தனை பேர் அதனைப் பயன்படுத்துகின்றனர்? மிஸ்வாக் குச்சியைப் பயன்படுத்துவது தப்லீஃக்காரர்களுக்கு மட்டும் சொந்தமான சுன்னத்தா? நபியவர்களின் வழிமுறை அனைவருக்கும்தானே?

ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்று கூறுவார்கள். தமிழர்கள் இரண்டு விதமான குச்சிகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர். அவை ஆலங்குச்சி, வேப்ப மரக்குச்சி ஆகியவை ஆகும். அவற்றால் நாம் பல் துலக்கினால் நம் பற்கள் பாதுகாக்கப்படும். அவற்றின் ஆரோக்கியம் மேம்படும். அதேநேரத்தில் நபியவர்கள் அராக் எனும் மரக்குச்சியைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதை அறிகிறோம்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் மரணத்தறுவாயில் மிஸ்வாக் குச்சியைப் பயன்படுத்தி, பல் துலக்கியுள்ளதை நபிமொழித் தொகுப்பு நூல்களில் காணலாம். நபியவர்களின் இறுதித் தருணத்தில் அவர்களைக் காண, அப்துர் ரஹ்மான் வருகிறார். அவர் தம் கையில் மிஸ்வாக் குச்சி வைத்திருந்தார். அதைப் பார்த்துத் தம் கண்களால் சைகை செய்த நபியவர்களின் இறுதி விருப்பத்தை அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா நிறைவேற்றினார்கள். அவரிடமிருந்து அந்தக் குச்சியை வாங்கித் தம் பற்களால் கடித்து மிருதுவாக்கி, நபியவர்களிடம்  கொடுக்க, அதைப் பெற்றுக்கொண்ட நபியவர்கள், தம் பற்களைத் தேய்த்துக்கொண்டார்கள். தம் வாழ்வின் கடைசி நேரம் வரை பல் துலக்குவதன் முக்கியத்துவத்தை இந்தச் சமுதாயத்துக்குக் கற்பித்துச் சென்றுள்ளார்கள். அதை நாம் இன்று மறந்துபோய்விட்டோம்.

 இன்று பல்வேறு வகையான பற்பசை (பேஸ்ட்)களும் பல்துலக்கிகளும் (பிரஷ்) சந்தைக்கு வந்துவிட்டன. அந்தப் பற்பசைகளில் மனித ஆரோக்கியத்திற்கு ஒவ்வாத, பற்களைக் கெடுத்துவிடுகிற எத்தனையோ வேதிப் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. அதனால் இன்று பலர் பல்வலியால் அவதிப்படுவதைக் காண்கிறோம். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய வழிமுறையைக் கைவிட்டதாலேயே பல்வேறு இன்னல்களுக்கும் இடுக்கண்களுக்கும் ஆளாக நேரிடுகிறது என்பதை உணர மறுக்கிறோம்.

தொப்பி என்பது ஒவ்வொரு முஸ்லிம் ஆணும் தானாகவே விரும்பி அணிந்துகொள்கிற ஒரு காலம் இருந்தது. இன்றும் பலர் தொப்பி அணிந்துகொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் இன்றைய நவீன இளைஞர்கள் தொப்பி அணிய வெட்கப்படுகின்றனர். பிற சமுதாய மக்கள் மத்தியில் தான் ஒரு முஸ்லிம் என்று காட்டிக்கொள்ள வெட்கப்படுகின்றனர். தொப்பி போடாமல் தொழுவதையே விரும்புகின்றார்கள். அதையே எளிய வழியாகக் கருதுகின்றார்கள். முஸ்லிம் என்றால் தாடியும் தொப்பியும் வெளிப்படையான அடையாளங்கள் என்பதையும்  அடிப்படையான சுன்னத்துகள் என்பதையும் அவர்கள் மறந்துவிட்டார்கள்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்கா வெற்றி நாளில் தலையில் கருப்புத் தலைப்பாகை அணிந்துகொண்டு (மக்காவினுள்) நுழைந்தார்கள். (முஸ்லிம்: 2638) 

அம்ர் பின் ஹுரைஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (மக்கா வெற்றி நாளில்) தலையில் கருப்புத் தலைப்பாகை கட்டி, அதன் இரு ஓரங்களையும் தம் தோள்களுக்குமிடையே தொங்கவிட்டவர்களாகச் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீதிருந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. (முஸ்லிம்: 2640) 

ஆக தலையை மறைப்பதையே நபியவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் என்பதை மேற்கண்ட நபிமொழிகள் மூலம் அறிய முடிகிறது. ஆதலால் தொப்பியோ தலைப்பாகையோ அணிந்து தலையை மறைப்பது சுன்னத்தாகும். அதனால்தான் ஹஜ்ஜின்போது தலை திறக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையே இடப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்வோம்.

தொப்பி போடாவிட்டால் தொழுகை கூடாதா என்று கேட்கின்றனர். தொப்பி போடாமல் தொழுதால் தொழுகை கூடும் என்றாலும் பள்ளிவாசலில் எல்லோருடனும் சேர்ந்து தொழும்போது ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுகூடவா அவர்களுக்குத் தெரியாது? சட்டை போடாமல் தொழுதாலும் தொழுகை கூடும். அதற்காக அவர் சட்டை அணியாமல் வருவாரா? பனியன் அணியாமல் தொழுதாலும் தொழுகை கூடும் என்பதற்காக யாரேனும் வெற்று உடம்போடு வருவாரா? பனியனோ, மேல்சட்டையோ அணியாவிட்டாலும் தொழுகை கூடும் என்பது உறுதியான செய்தியாகும். இருப்பினும் யாராவது அவ்வாறு வருவாரா?

பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள், பொது இடங்கள் முதலான இடங்களில் இந்து சமயச் சகோதரர்கள் தம் நெற்றியில் பட்டை தீட்டுதல், திருநீறு இட்டுக்கொள்ளுதல், பொட்டு வைத்தல் மூலம் தம் மத அடையாளங்களை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். கிறிஸ்தவச் சகோதரர்கள் தம் கழுத்தில் சிலுவையை அணிந்துகொண்டு மத அடையாளத்தை வெளிப்படுத்துகின்றார்கள். ஆனால் முஸ்லிம்கள் தம் அடையாளத்தை வெளிப்படுத்தும் பொருட்டு தலையில் தொப்பி அணிந்துகொள்வதில்லையே ஏன்?

பள்ளிக்கூடங்களுக்குச் செல்லக்கூடிய பிள்ளைகள் பிற சமயப் பிள்ளைகளைப் போல் முஸ்லிம்கள் தொப்பி அணிந்துசெல்லவும் முஸ்லிம் பெண்கள் முழுமையாக மறைத்தவாறு செல்லவும் எந்தத் தடையும் இல்லை என அண்மையில் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டீஐ) மூலம் கேட்ட கேள்விக்கு, தகவல் வந்திருந்தது. அரசாங்கமே அனுமதித்தும் நாம் நம் பிள்ளைகளுக்குத் தொப்பி அணியச் செய்து, பள்ளிக்கு அனுப்பினோமா?

உங்கள் மத்தியில் ஸலாமைப் பரப்புங்கள் என்றும் நீங்கள் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுங்கள் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருப்பதை அறிவோம். ஆனால் முஸ்லிம்கள் தொப்பி அணியாமல் சென்றால், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் எப்படி நாம் முகமன் கூற முடியும்? புற அடையாளம் எதுவுமே இல்லாதபோது அவர் முஸ்லிம் என்று எப்படிக் கண்டறிய முடியும்

புற அடையாளங்கள் ஒருவன் தவறான செயல்களைச் செய்யவிடாமல் தடுக்கும் என்பதே உண்மை. தொப்பி போட்டுக்கொண்டு ஒருவன் தன் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு தவறான பழக்கங்களில் ஈடுபடமாட்டான்.  தவறு  செய்வோரோடு  சேரமாட்டான். அவன் தானாகவே விலகிச்செல்ல அவனுடைய புற அடையாளங்கள் காரணமாக அமைகின்றன. எனவே அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுப்படும்பொருட்டு ஒவ்வொருவரும் தாடியை வளர்ப்பதோடு தொப்பியும் அணிந்துகொள்ள வேண்டும்.

ஏன் நாம் அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற வினாவிற்கு விடையாக, “நிச்சயமாக நீர் அவர்களை நேரிய பாதை நோக்கி அழைக்கின்றீர். (23: 73) என்று அல்லாஹ் கூறுகின்றான். மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக நீர் நேரிய பாதையை நோக்கி வழிகாட்டுகிறீர். (42: 52) ஆகவே நேரிய பாதையை நோக்கி வழிகாட்டுகிற இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றி நடப்பது நமது கடமையாகும்.

அதே வேளையில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தால் நம் நிலை என்னவாகும் என்பது குறித்து அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகின்றான். யார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவர் தெளிவான வழிகேட்டில் சென்றுவிட்டார். (33: 36)

மேலும் நபியவர்கள் கூறுவதைப் பாருங்கள். அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர'' என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஏற்க மறுத்தவர் யார்?'' என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறுசெய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்'' என்று பதிலளித்தார்கள். (புகாரீ: 7280)

ஆக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு சுன்னத்தை மறுத்தாலும் அவரும் நபிவழியை மறுத்தவராகவே கருதப்படுவார். எனவே நபிவழியை மனமுவந்து ஏற்றுப் பின்பற்ற வேண்டும். அதற்கு இன்றைய இளைஞர்கள் முன்வர வேண்டும்.

==================================

   







 

 

 

 

 

 

புதன், 17 நவம்பர், 2021

தூண்டுகோலாக இருங்கள்!

 

-மௌலவி முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

(இமாம், மதீனா மஸ்ஜித்-பட்டினப்பாக்கம், சென்னை)

 

சிறு விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும் என்ற பழமொழியை நாம் அறிந்துள்ளோம்.  விளக்கு நன்றாக எரிய வேண்டும் என்பதற்காகத் தூண்டுகோலால் அதை உயர்த்தி விடுவது வழக்கம்.  சுடர் மங்கும்போது அதைத் தூண்டிவிடுவதால் அது நன்றாகச் சுடர்விட்டு எரியும். அக்கால அரிக்கன் விளக்கு எனும் ஹரிக்கேன் விளக்கைப் பார்த்தவர்களுக்கும் பயன்படுத்தியவர்களுக்கும் இது எளிதில் விளங்கும். ஒரு விளக்கு நன்றாகச் சுடர்விட்டு எரிவதற்கே ஒரு தூண்டுகோல் வேண்டும் எனும்போது பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ள மனிதனுக்குத் தூண்டுகோல் தேவைப்படாதா?

 

ஒருவர் தொடர்ந்து நாளிதழ், வார இதழ், மாத இதழ் ஆகியவற்றிற்குக் கட்டுரைகள் எழுதிக்கொண்டே இருக்கிறார். ஆனால் அவரை யாரும் பாராட்டுவதில்லை. வாழ்த்துவதில்லை.  அதனால் அவர் சோர்ந்து போகிறார். என்னத்த எழுதி, என்ன செய்ய?” என்று எண்ணுகிறார். எழுதுவதில் ஒரு சடைவும் சோம்பலும் ஏற்படுகிறது. அதனால் எழுதுவதைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கிறார். இந்த நேரத்தில் அவரைச் சந்திக்கிற நாம், “என்ன ஐயா, இப்போதெல்லாம் உங்கள் கட்டுரைகளைப் பத்திரிகைகளில் காணமுடியவில்லையே. ஏன் எழுதுவதை நிறுத்திவிட்டீர்கள்? நன்றாகத் தானே எழுதி வந்தீர்கள்? நான் உங்களுடைய கட்டுரைகளைத் தவறாமல் வாசித்துவிடுவேன். மிகச் சிறந்த கருத்துகளை உங்கள் கட்டுரைகளில் எழுதி வருகின்றீர்கள். ஆகவே தொடர்ந்து எழுதுங்கள் ஐயா” என்று சொன்னால், சோர்ந்து போய்க்கிடந்த அவரது உள்ளம் துள்ளிக் குதித்து எழுந்து எழுதத் தொடங்கிவிடும்.

 

ஒருவர் பிறருக்கு உதவிகளைச் செய்துகொண்டே இருப்பார். திடீரென அதை நிறுத்திவிடுவார்.  ஏதாவது கசப்பான அனுபவம் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம். அவரிடம் உதவிகளைப் பெற்றவனே அவருக்கு உபத்திரவம் செய்திருக்கலாம். அதனால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் அவர் உதவி  செய்வதைத் தற்காலிகமாக நிறுத்தியிருக்கலாம். அவரைச் சந்திக்கிற நாம், “என்ன ஐயா, இப்போதெல்லாம் உங்கள் வீட்டிற்கு உதவி தேடி யாரும் வருவதில்லையே? யாரையும் உங்கள் வீட்டுக்குமுன் பார்க்க முடியவில்லையே? என்னாயிற்று? என்று கேட்டால் அவரது கசப்பான அனுபவங்களை நம்மிடம் கூறுவார்.

 

அதைக் கேட்கும் நாம், “அட விடுங்க ஐயா! மனிதர்களே அப்படித்தான். நாம் இவர்களிடம் நன்றியையோ பிரதிபலனையோ எதிர்பார்க்கக்கூடாது. நாம் செய்ய வேண்டியதை செய்துகொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ் அதற்கான நற்கூலியை ஈருலகிலும் உங்களுக்குத் தருவான். நீங்க கவலைப்படாதீங்க. நீங்க தொடர்ந்து செய்ய வேண்டிய உதவிகளைச் செய்துகொண்டே இருங்க” என்று சொல்லிவிட்டு வந்தால் அவரது மனம் மாறும். புத்தெழுச்சி பெறும். அடுத்தடுத்து அவர் உதவிகளைச் செய்யத் தொடங்கிவிடுவார்.

 

ஒருவர், தம் வீட்டிற்கு யார் வந்தாலும் உணவுண்ணச் செய்யாமல் அனுப்பமாட்டார். இதனால் ஏழைகள் பலர் பயன்பெற்று வந்தனர். திடீரெனச் சில நாள்களாக அதைச் செய்யாமல் விட்டுவிட்டார்.  என்ன காரணம் தெரியவில்லை. அவரைச் சந்திக்கின்ற நாம் அவரது சேவையின் தேவையையும் அதனால் ஏற்படுகின்ற பயன்களையும் அவரிடம் எடுத்துக் கூறி, “தொடர்ந்து செய்யுங்கள் ஐயா” என்று ஆர்வமூட்டும்போது அவரும் ஆவலோடு செய்யத் தொடங்குவார்.

 

ஓர் இளைஞர் போட்டித் தேர்வுகளுக்காகத் தொடர்ந்து போராடி வருபவர். அவர் எழுதிய தேர்வுகளில் தோற்றுப் போய்விட்டார். சோகத்தில் உள்ளார். அடுத்து எழுதலாமா, வேண்டாமா என்ற இருநிலையில் உள்ளார். இந்நேரத்தில் அவரைச் சந்திக்கிற நாம், அந்த இளைஞரை உற்சாகப்படுத்தி, “தோல்விதான் வெற்றியின் முதற்படி. இந்தத் தடவை தோற்றால் என்ன, அடுத்த தடவை வெற்றிபெறுவதற்கான நல்வாய்ப்பு உனக்கு இருக்கிறது. தொடர்ந்து படி. அடுத்த தடவை கூடுதல் கவனத்துடன் எழுது” என்று ஆர்வமூட்டினால், நிச்சயமாக நம் வார்த்தைகள் அந்த இளைஞருக்கு ஒரு புதுத்தெம்பூட்டும். நம்பிக்கையை ஏற்படுத்தும். 

 

இப்படிப் பல்வேறு மனிதர்கள் பற்பல கோணங்களில் சோர்ந்து போயிருக்கலாம். அவர்களைச் சந்திக்கிற நாம் அவர்களின் உள்ளுணர்வுகளைத் தூண்டி, தட்டியெழுப்பிவிட்டால் அவர்கள் தம் பாதையில் தொடர்ந்து பயணிக்க உதவியாக இருக்கும். அதுவே நாம் செய்யும் நல்லறமாகும்.

 

சிலர் எழுதுவதைக் கைவிட்டிருக்கலாம். சிலர் கவிதை எழுதுவதைக் கைவிட்டிருக்கலாம். சிலர் பிறருக்கு உதவி செய்வதை நிறுத்தியிருக்கலாம். சிலர் ஏழைகளுக்கு உணவளிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தியிருக்கலாம். சிலர் சமூகச் சேவைகள் செய்வதை நிறுத்தியிருக்கலாம். சிலர் போட்டித் தேர்வுகள் எழுதுவதில் சோர்ந்து போயிருக்கலாம். சிலர் படிப்பில் தேக்கமடைந்து துவண்டு போயிருக்கலாம். இப்படி எத்தனையோ பேர் எத்தனையோ விதமாக இருக்கலாம். அவர்களை நம்முடைய நல்வார்த்தைகள் மூலமும் நல்வாழ்த்துகள் மூலமும் தூண்டிவிட்டால் அவர்கள் உற்சாகமடைந்து, தம் பணிகளைச் செய்யத் தொடங்கிவிடுவார்கள். அதனால் அவர்களுக்கும் நன்மை. செய்யத் தூண்டிய நமக்கும் நன்மை.

சிலர் தாமும் நன்மை செய்வதில்லை. பிறரையும் நன்மை செய்யத் தூண்டுவதில்லை. வெறுமனே வெட்டியாய் இருப்பார்கள். இதுபோன்ற மனிதர்களை முன்வைத்தே இறைவன் இவ்வாறு கூறுகிறான்:  ஏழைகளுக்கு உணவளிக்குமாறு தூண்டவுமாட்டான். (107: 3)

ஏழைகளுக்கு உணவளிக்கத் தூண்டுதல் என்பது ஒரு குறியீடுதான். அதுபோன்று எத்தனையோ  நற்செயல்கள் இருக்கின்றன. அவற்றைச் செய்யுமாறு உரியோரை நாம் தூண்ட வேண்டும். தூண்டிக்கொண்டே இருக்க வேண்டும். அச்செயல்களைச் செய்யுமாறு அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அதனால் அவர்கள் அவற்றைச் செய்யத் தொடங்குவார்கள். அதன் காரணமாக அவர்களுக்கு நன்மை கிடைப்பதோடு சமுதாய மக்களுக்கும் மிகப்பெரும் பயன்கள் உண்டாகும். தூண்டிய நமக்கும் நன்மை உண்டு என்பதில் ஐயமில்லை.  

=======================






வியாழன், 4 நவம்பர், 2021

பிரார்த்தனையின் பலன்கள்-3

 

-மௌலவி முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி


(இமாம், மதீனா மஸ்ஜித்-பட்டினப்பாக்கம், சென்னை)

------------------


ஆடை அணிதல்: ஆடை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் முற்றிலும் அவசியம். ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்ற பழமொழி நமக்குத் தெரியும். ஆள் பாதி ஆடை பாதி என்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.  இந்த ஆடை மூலம்தான் மக்கள் மத்தியில் மனிதனின் மதிப்பும் உயர்வும் நிர்ணயிக்கப்படுகின்றன. எனவே இந்த ஆடையைத் தேர்ந்தெடுப்பதிலும் அதை அணிவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.


உனக்காக உண், பிறருக்காக உடுத்து என்று கூறுவார்கள். அதாவது தனக்குப் பிடித்தவற்றை மட்டுமே உண்ண வேண்டும். பிறரின் விருப்பத்திற்காக உண்ணக்கூடாது. அதேநேரத்தில் பிறர் விரும்பும் வகையில் நம் ஆடை அமைந்திருக்க வேண்டும். இது அன்றாட வாழ்க்கையில் மனிதர்கள் பின்பற்றும் நடைமுறையாகும்.



இந்த ஆடை மூலமே மனிதன் தன் மானத்தை மறைத்துக்கொள்கிறான். பிறரின் பார்வையிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்கிறான். பிறரைக் கவர்வதும் ஈர்ப்பதும் இந்த ஆடையின் மூலமேயாகும்.  ஒரு செல்வர் எவ்வளவுதான் கவர்ச்சியாக ஆடை அணிந்தாலும் ஓர் ஏழை எவ்வளவு தரமற்றதாக ஆடை அணிந்தாலும் அல்லாஹ்வின் பார்வையில் லிபாசுத்தக்வா எனும் இறையச்ச ஆடையைத் தமதாகக் கொண்டிருப்பவரே மேலானவர். உடலை மறைக்கின்ற வெளிப்புற ஆடைகளை வைத்து அல்லாஹ்விடம் மேன்மையடைந்துவிட முடியாது என்பதை நாம் ஆடை அணிகின்றபோது கவனத்தில் கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த ஆடை மூலம் பெருமையோ செருக்கோ கொள்ளாமல் நம் மனம் அமைதியாகவும் அடக்கத்துடனும் இருக்கும். பிறரின் ஆடையைக் கண்டு மட்டமாக மதிக்கும் போக்கு மாறும்.



ஆடை அணியும்போது: நாம் அணிகின்ற ஆடை இறைவன் நமக்குக் கொடுத்த ஓர் அருட்கொடையாகும். மாற்று ஆடையின்றி எத்தனையோ பேர் இத்தரணியில் வசிக்கின்றார்கள். அவர்களைவிட நம்மை அல்லாஹ் மேன்மைப்படுத்தியிருப்பதையும் கண்ணியப்படுத்தியிருப்பதையும் நாம் உணர்ந்து அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அதனால்தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்,


 “யார் ஆடை அணிகின்றபோது 

اَلْحَمْدُ لِلَّهِ الَّذِيْ كَسَانِيْ هَذَا الثَّوْبَ وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّيْ، وَلَا قُوَّةٍ.

அல்ஹம்து லில்லாஹில்லதீ கசானீ ஹாதஸ் ஸவ்ப வ ரஸகனீஹி மின் ஃகைரி ஹவ்லிம் மின்னீ வலா குவ்வஹ் (பொருள்: இந்த ஆடையை எனக்கு அணிவித்த, என்னிலிருந்து எந்த ஆற்றலும் சக்தியுமின்றி எனக்கு இதை வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகட்டும்!)

என்று ஓதினாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன எனக் கூறினார்கள். (நூல்: அபூதாவூத்: 4023)


துணிக்கடையில் விற்கப்படுகின்ற ஆடைகளை நாம் பணம் கொடுத்து வாங்கிக்கொள்கிறோம். ஆனால் அதை வாங்குவதற்குரிய வருமானத்தையும் செல்வத்தையும் தந்தவன் இறைவன்தானே? அதனால்தான் அவனுக்கு நன்றிசெலுத்துகிறோம். ஓர் ஆடையை நெய்வதற்கோ செய்வதற்கோ நாம் எந்த முயற்சியையும் செய்வதில்லை. நமக்கு நாமே ஆடை செய்துகொள்ள எந்த ஆற்றலும் இல்லை. எந்தத் திறமையும் இல்லை. ஆடை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதை நாம் வாங்கி அணிந்துகொள்கிறோம். ஆக, அதைச் செய்பவனும் நெய்பவனும் யாரோ ஒருவன். 


ஆனால் நாம் அதை வாங்கி, நம்முடைய உடலமைப்புக்குத் தோதுவாக, அழகாக அணிந்துகொள்கிறோம். அத்தகைய நிலையில் நம்மை உயர்வாக வைத்துள்ள அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டுமல்லவா? அதனால்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்தப் பிரார்த்தனையைக் கற்றுத் தந்துள்ளார்கள். இருப்பினும் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அல்லாஹ்வின் அருளை நினைத்துப் பார்த்து அவனுக்கு நன்றி செலுத்துவோர் நம்முள் எத்தனை பேர்?


புத்தாடை அணியும்போது : நாம் பண்டிகைக் காலங்களில் புத்தாடை அணிகின்றோம். அல்லது ஏதேனும் விசேஷ நாள்களில் புத்தாடை அணிகின்றோம். புத்தாடை அணியும்போது அதை வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி சொல்ல முயன்றிருக்கின்றோமா? புத்தாடை அணியும்போது அல்லாஹ்வை நினைத்துப் பார்த்திருக்கின்றோமா? அதை அவன் நமக்கு வழங்கியதற்காக அவனைப் புகழ்ந்திருக்கின்றோமா?



அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புத்தாடை அணியும்போது அதன் பெயரைக் குறிப்பிட்டு-சட்டை அல்லது தலைப்பாகை-பின்னர் இந்தப் பிரார்த்தனையைச் செய்வார்கள்.

اَللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيْهِ أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهِ، وَشَرِّ مَا صُنِعَ لَهُ,

அல்லாஹும்ம லகல் ஹம்து, அன்த்த கசவ்த்தனீஹி அஸ்அலுக மின் கைரிஹி வ கைரி மா ஸுனிஅ லஹு வஅஊது பிக மின் ஷர்ரிஹி வஷர்ரி மா ஸுனிஅ லஹு.  (பொருள்: இறைவா! உனக்கே எல்லாப் புகழும். நீதான் எனக்கு இதை அணிவித்தாய். அதன் நன்மையையும் அது எதற்காகத் தயாரிக்கப்பட்டதோ அதன் நன்மையையும் நான் உன்னிடம் கேட்கிறேன். அதன் தீமையிலிருந்தும் அது எதற்காகத் தயாரிக்கப்பட்டதோ அதன் தீமையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.)  (நூல்: அபூதாவூத்: 4020)



பொதுவாக ஆடைகளில் பற்பல விதங்களும் வண்ணங்களும் உள்ளன. பருத்தி, கம்பளி, நைலான், பட்டு எனப் பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணத்தில் இருக்கும். ஆடைகளுள் சில கோடைக்காலத்திற்காகவும் சில குளிர்காலத்திற்காகவும் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படுகின்றன. ஆடைகளுள் சில எல்லாக் காலத்திற்கும் உகந்ததாகத் தயாரிக்கப்படுகின்றன. அவற்றுள் சில சிலருக்கு இதமாக இருக்கும். வேறு சிலருக்கு எரிச்சலாக இருக்கும். சிலரின் உடல்தோல் அதை ஏற்றுக்கொள்ளும். சிலரின் உடல்தோல் அதை ஏற்றுக்கொள்ளாது. அந்த ஆடைகளே சிலருக்கு உபாதைகளை ஏற்படுத்தலாம். இப்படிப் பல்வேறு விஷயங்கள் நாம் அணிகின்ற ஆடையில் உள்ளன. எனவே இவற்றிலிருந்து நன்மையைத் தேடுவதும் தீமையிலிருந்து பாதுகாப்புத் தேடுவதும் கடமையாகின்றது.


 எனவேதான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்படி ஒரு வழிமுறையைக் கற்றுத் தந்துள்ளார்கள்.

சிலருடைய புத்தாடையின் அளவிலா அழகைக் கண்டு, பார்ப்போர் வியப்பதும் உண்டு. வேறு சிலர் பொறாமைக் கண்கொண்டு பார்ப்பதும் உண்டு. சிலர் உற்றுநோக்கிப் பார்ப்பதால் அதை அணிந்திருப்பவருக்குக் கண்ணேறு ஏற்பட்டு அதன்மூலம் தீமை விளைவதும் உண்டு. எனவே அதை அணிபவர் இந்தப் பிரார்த்தனையைச் செய்துகொண்டால் இதுபோன்ற பல்வேறு தீங்குகளிலிருந்தும் தீமைகளிலிருந்தும் அவர் பாதுகாப்புப் பெறலாம். எனவே புத்தாடையைக் கொடுத்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதோடு அவனிடமே நாம் அதன் மூலம் நன்மையையும் தீமையிலிருந்து பாதுகாப்பையும் கேட்க வேண்டும்.



ஆடை களையும்போது: ஆடையைக் களைகின்றபோது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். நம்முடைய அந்தரங்க உறுப்புகளைப் பிறர் பார்வையிலிருந்து மறைப்பதற்காகவே நாம் ஆடை அணிகின்றோம். ஆதலால் ஆடை அணிகின்றபோதும் அதைக் களைகின்றபோதும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். பொது இடங்களில் ஆடையைத் தூக்கிக்கொண்டு சிறுநீர் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், பின்பகுதி தெரியாவண்ணம் மறைத்துக்கொண்டு அமர்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும். நம்முடைய அந்தரங்க உறுப்புகளைப் பிறருக்குக் காட்டி மகிழ்வதில் ஷைத்தான் ஈடுபடுகின்றான். எனவே அவனை விரட்டுவதற்காக நாம் ஆடையைக் களையும்போதும் தூக்கிக்கொண்டு சிறுநீர் கழிக்க நேரிடும்போதும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுத் தந்தபடி, ‘பிஸ்மில்லாஹ் என்று கூற மறந்துவிடக் கூடாது.



ஆக, நாம் ஆடை அணிகின்றபோது அல்லாஹ்வின் புகழ்கூறி, அதைக் களைகின்றபோது அவனை நினைத்து அவன் பெயர்கூறி அவனுடைய திருப்தியை நாம் எப்போதும் பெற்றிட அவனே நமக்கு அருள்வானாக!                         

(தொடரும்)

==============