வெள்ளி, 30 டிசம்பர், 2022
காலத்தை எவ்வாறு கழித்தாய்? How did you spend your time?
வெள்ளி, 23 டிசம்பர், 2022
ஈஸா நபியை எவ்வாறு நம்ப வேண்டும்? How should we believe the Prophet Eas...
How should we believe the Prophet Easaa Alaihis salaam?
-முனைவர் மௌலவி
நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! மர்யமின் புதல்வர் (ஈஸா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்புச் சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை உடைப்பார்! பன்றியைக் கொல்வார்! காப்புவரியை (-ஜிஸ்யா) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும். (புகாரீ: 2222, முஸ்லிம்: 155)
இமாம்
மதீனா மஸ்ஜித்
பட்டினப்பாக்கம்
சென்னை-28
23/ 12 / 2022
28/ 05 / 1444
வெள்ளி, 16 டிசம்பர், 2022
வெள்ளி, 9 டிசம்பர், 2022
அன்பளிப்புகளைப் பரிமாறிக்கொள்வோம் Let’s share g...
வெள்ளி, 25 நவம்பர், 2022
எக்ஸ் –முஸ்லிம்கள் யார்? Who are the Ex-Muslims?
வெள்ளி, 18 நவம்பர், 2022
நபித்துவ முத்திரையைப் பாதுகாப்போம் Let’s protect the seal of the proph...
புதன், 16 நவம்பர், 2022
வெள்ளி, 11 நவம்பர், 2022
பெண்கள் நினைத்தால்... (கட்டுரை)
பெண்கள் நினைத்தால்...
மனாருல் ஹுதா
நவம்பர்
2022 மாத இதழில்
இடம்பெற்ற கட்டுரை
காட்சி வடிவில்...
செவ்வாய், 1 நவம்பர், 2022
சோம்பல் தவிர்ப்போம்! (கட்டுரை)
சனி, 29 அக்டோபர், 2022
விளிம்புநிலைப் பெண்களுக்குக் கைகொடுப்போம் (கட்டுரை) இனிய திசைகள் 29 10...
ஞாயிறு, 23 அக்டோபர், 2022
உணவு வழங்குவோம்!
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
பிஎச்.டி
உலகிலுள்ள மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் உணவு
இன்றியமையாத் தேவையாகும். உணவின்றி யாரும் உயிர் வாழ முடியாது. அத்தகைய உணவைப்
பாதுகாப்பதும் உரிய முறையில் பிறருக்கு அதைப் பகிர்ந்தளிப்பதும் நம் கடமையாகும்.
உரிய முறையில் அதை எளிதாக வாங்குவதற்கேற்ற சூழலை உண்டாக்குவது அரசின் கடமையாகும்.
அதேநேரத்தில் பணம் கொடுத்து உணவுப் பொருளை வாங்க முடியாத ஏழைகளுக்கு அதை இலவசமாக
வழங்குவதும் அரசின் கடமையே ஆகும்.
உலகிலுள்ள அனைவருக்கும் உணவு தயாராகவே உள்ளது.
அதைப் பெறும் வழிகளை ஆட்சியாளர்கள் முறையாகச் செய்வதில்லை என்பதே பலருக்கு உணவு
கிடைக்காமைக்கான பெருங்காரணமாகும். விவசாயிகள் நெல்லையும் கோதுமையையும் மக்களின்
தேவைக்கு மிகுதியாகவே உற்பத்தி செய்து, கொண்டு
வந்து சேர்க்கின்றார்கள். ஆனால் அரசு அவற்றை உரிய முறையில் கிடங்குகளில் பாதுகாப்பதில்லை.
இடப்பற்றாக்குறையால் அவை கிடங்குகளுக்கு வெளியே கிடந்து, மழையாலும்
வெள்ளத்தாலும் சீரழிகின்றன. ஏழைகளுக்குக் கிடைக்க வேண்டிய உணவுப்பொருள்
ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கால் கிடைக்காமல் போய்விடுகின்றது. இறுதியில்
அவர்கள் இரவில் பசியோடு உறங்கச் செல்கின்றார்கள்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை
அமைப்பு நிறுவப்பட்ட தினத்தை நினைவுகூரும் விதத்தில் ஒவ்வோராண்டும் உலக உணவு
தினம் அக்டோபர் 16ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
இதன் நோக்கம் உணவு குறித்தும் அதனைப் பாதுகாப்பது குறித்தும் மக்கள் மத்தியில்
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆகும். அந்த வகையில் நாம் உண்கின்ற
உணவுபோக எஞ்சியதைப் பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும். உணவை வீணாக்கக்கூடாது.
உணவகங்களிலும் திருமண நிகழ்வுகளிலும்
பல்வேறு வகையான உணவுகள் பரிமாறப்படுவதால், அங்கெல்லாம்
பெரும்பாலான உணவுப் பொருள்கள் வீணடிக்கப்படுகின்றன. அவையெல்லாம் ஏழைகளுக்குச்
சேரவேண்டியவை என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
கலப்படமற்ற, தூய்மையான
உணவு உலகில் பெரும்பாலோருக்குக் கிடைப்பதில்லை. உலக மக்கள்தொகையின் மூன்றில் ஒரு
பகுதியினருக்கு உணவே கிடைப்பதில்லை. இத்தகைய சூழ்நிலையில் உணவுப் பாதுகாப்பு நாள்
மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. பட்டினிச் சாவு இன்றி மக்களை வாழச் செய்வதற்கான
முயற்சியை உலகின் பெரும்பாலான ஆட்சியாளர்கள் இதுவரை எடுக்க முயலவில்லை. இந்த
உணவுப் பாதுகாப்பு நாளிலேனும் அதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டு செயல்பட்டால்
உணவு எல்லோருக்கும் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.
படைத்தோன் அல்லாஹ் இப்புவிவாழ் மக்களுக்கு
உணவு வழங்குவதோடு, ஏழைகளுக்கு
உணவு வழங்குமாறு உலகப் பொதுமறையான திருக்குர்ஆனின் பல்வேறு இடங்களில் வலியுறுத்திக்
கூறுகின்றான். செல்வர்கள் தம்மிடமுள்ள மிகையான செல்வத்தைத் தமக்குரியவையாக மட்டும்
கருதாமல் அதிலிருந்து ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று கட்டளையிடுகின்றான். ஒருபுறம்
அரசு ஏழைகளுக்கு உணவிற்கான உதவி செய்வதோடு, மறுபுறம்
செல்வர்கள் தம் செல்வத்தைத் தாராளமாக ஏழைகளுக்குச் செலவு செய்யத் தொடங்கிவிட்டால்
ஏழ்மையும் உணவுப் பற்றாக்குறையும் தீர்ந்துவிடும்.
படைத்த இறைவன் ஏழைகளுக்கு உணவு வழங்குமாறு
மக்களுக்குக் கட்டளையிடுவதோடு சில குற்றவியல் தண்டனைகளுக்குப் பரிகாரமாக உணவு
வழங்குவதை அமைத்துள்ளான் என்பது கவனிக்கத்தக்கது.
எவரேனும் தம் மனைவியைத் தம் தாய்க்கு
ஒப்பிட்டுக் கூறிய பின்னர், மீண்டும்
அவளோடு சேர்ந்துவாழ விரும்பினால், அவ்விருவரும்
ஒருவரை ஒருவர் தீண்டிக்கொள்வதற்கு முன்னதாகவே அதற்கான பரிகாரத்தைச் செய்ய
வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அந்தப் பரிகாரம் மூவிதங்களுள் ஏதேனும்
ஒன்றாக அமையலாம். 1. ஓர் அடிமையை விடுதலை செய்தல், 2.
இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்றல், 3.
அறுபது ஏழைகளுக்கு உணவளித்தல். இது
குறித்துப் பின்வருமாறு திருக்குர்ஆன் பேசுகிறது.
(மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டுக் கூறிய
குற்றத்திற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்... (விடுதலை
செய்யக்கூடிய அடிமை) கிடைக்கப்பெறாவிட்டால், அவ்விருவரும்
ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னதாகவே, (அவர்)
இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்கட்டும். (இவ்வாறு நோன்பு நோற்க)
ஆற்றல் பெறாதவர் அறுபது ஏழைகளுக்கு (நடுநிலையான) உணவளிக்கட்டும். (58: 3-4)
அடுத்து, ஒருவர் தாம் செய்த சத்தியத்தை நிறைவேற்ற முடியாமல் போனால், அல்லது செய்த சத்தியத்தை முறித்துவிட்டால் அவர் மூவிதங்களுள் ஏதேனும் ஒருவிதத்தில் அதற்கான பரிகாரத்தைச் செய்ய வேண்டும். 1. பத்து ஏழைகளுக்கு உணவளித்தல், 2. பத்து ஏழைகளுக்கு உடை வழங்குதல், 3. ஓர் அடிமையை விடுதலை செய்தல். இம்மூன்றில் ஏதேனும் ஒன்றைச் செய்ய வசதி இல்லாவிட்டால் அவர் மூன்று நாள்கள் நோன்பு நோற்க வேண்டும். ஆக இதில் இறைவன் ஏழைகளுக்கு உணவு வழங்குவதையே முன்னிலைப்படுத்தியுள்ளான். இது குறித்துப் பின்வருமாறு திருக்குர்ஆன் பேசுகிறது.
அதற்குப் பரிகாரமாவது: நீங்கள் உங்கள்
குடும்பத்தினருக்குக் கொடுத்துவரும் உணவில் நடுநிலையான உணவைப் பத்து ஏழைகளுக்கு அளிக்க
வேண்டும்; அல்லது (அவ்வாறே)
அவர்களுக்கு ஆடையளிக்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.
(பரிகாரமாகக் கொடுக்கக்கூடிய இவற்றுள் எதனையும்) அவர் பெற்றுக்கொள்ளவில்லையெனில்
அவர் மூன்று நாள்கள் நோன்பு நோற்க வேண்டும். (உங்கள் சத்தியத்தை நிறைவேற்ற
முடியாவிட்டால்) நீங்கள் செய்த சத்தியத்திற்குரிய பரிகாரம் இதுதான். (5: 89)
இதுபோலவே ஹஜ்ஜில் இஹ்ராம் அணிந்தவர் வேட்டையாடினால் அவர் அதற்கான பரிகாரம் செய்தாக வேண்டும். அதிலும் ஏழைகளுக்கு உணவளித்தலை (5: 95) இறைவன் கூறியுள்ளான். மேலும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்க இயலாதவர் அதற்கான பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளித்தலையே (2: 184)
கூறியுள்ளான். இவ்வாறு பல்வேறு குற்றச் செயல்களுக்கான பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளித்தலை இறைவன் முன்னிலைப்படுத்தியுள்ளான். இதிலிருந்து ஏழைகளின் உணவிற்கு இறைவன் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளான் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 என்பது
உணவுக்கான உரிமைச் சட்டமாகும். நாட்டின்
மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்களை
வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்திய நாடாளுமன்றச் சட்டமாகும். இச்சட்டம்
செயல்பாட்டில் இருந்தும் உரிய முறையில் ஏழைகளுக்கு உணவுப் பொருள்கள் கிடைக்கின்றனவா
என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இன்றும் பலர் உரிய முறையில் உணவுப் பொருள்கள்
கிடைக்கப் பெறாமல் மிகவும் சிரமப்படுகின்றார்கள். அதற்காகப்
போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.
இப்புவியில் வாழும் ஏழைகளுக்கு உணவு கொடுத்து
உதவி செய்கின்ற நல்லவர்களை இறைவன் விரும்புகின்றான். அவர்களைப் பாராட்டிப்
பேசியுள்ளான். திருக்குர்ஆனைப் புரட்டுகின்றபோது
அதில் 76ஆம் அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள இந்த வசனத்தைக் காணலாம். அவர்கள்
அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும்,
கைதிகளுக்கும்
உணவளித்து வந்தனர். (தம்மிடம் பெறுபவர்களை நோக்கி) "நாம் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம்
அல்லாஹ்வின் முகத்தை நாடியேயன்றி, உங்களிடம்
நாம் யாதொரு கூலியையோ (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதையோ நாடவில்லை''
(என்றும் கூறிவந்தனர்). (76: 8-9)
இந்த வசனத்தின் அடிப்படையில்தான் இறைவன்மீது
நம்பிக்கைகொண்ட முஸ்லிம் இளைஞர்கள் மழை, வெள்ளம்,
புயல்
போன்ற இயற்கைச் சீற்றங்களின் காரணத்தால் மக்கள் உணவின்றித் தவித்தபோது சாதி,
மத
வேறுபாடின்றி அனைவருக்கும் உணவு வழங்கினார்கள். இதைக் கடந்த காலங்களில் பல்வேறு
சமயத்தைச் சார்ந்தோர் நேரடியாகக் கண்டு அனுபவித்தார்கள். இத்தகைய சமூகத் தொண்டையும்
மனிதநேயத்தையுமே இஸ்லாம் போதிக்கின்றது.
ஆக "தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்''
என்று
சொல்வார்கள். அந்த அடிப்படையில் ஏழைகளுக்கு உணவு வழங்குவதை இஸ்லாம் மிகவும் வலியுறுத்திக்
கூறியுள்ளது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளதாவது: மக்களே!
ஸலாமைப் பரப்புங்கள்; (பசித்தோருக்கு)
உணவளியுங்கள்; மக்கள் உறங்கும்
(வைகறை) நேரத்தில் தொழுங்கள்; நல்லவிதமாகச்
சொர்க்கத்தில் நுழையுங்கள். (திர்மிதீ: 2485)
இந்த நபிமொழியின் அடிப்படையில் நாம்
ஏழைகளுக்கும் இயலாதோருக்கும் உணவளித்து அல்லாஹ்வின் அன்பைப் பெற்றுச்
சொர்க்கத்தில் நுழைவோம்.
சனி, 22 அக்டோபர், 2022
இரண்டுக்கு மேல் கூடாதா? (கட்டுரை)
வியாழன், 20 அக்டோபர், 2022
இரண்டுக்கு மேல் கூடாதா?
-டாக்டர் நூ. அப்துல் ஹாதி
பாகவி பிஎச்.டி
இமாம் மதீனா பள்ளிவாசல்,
பட்டினம்பாக்கம்,
சென்னை-28
தினமணி நாளிதழில் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம்
தேதி ஒரு செய்தியைப் படித்து வியந்துபோனேன். அதாவது இரஷ்யாவில் சரிந்துவரும்
மக்கள் தொகையை மீண்டும் அதிகரிக்க 10
குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு 10
இலட்சம் ரூபிள் (ரூ. 13.30
இலட்சம்) வெகுமதியுடன் “அன்னை
நாயகி” என்ற விருதை
அளிக்கவிருப்பதாக அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார் என்பதுதான் அந்தச்
செய்தி.
உணவு
முறையும் வாழ்க்கை முறையும் முற்றிலும் மாறிவிட்ட இந்தக் காலத்தில் ஒரு பெண்
பத்துக் குழந்தைகளைப் பெற்றெடுப்பது சாத்தியமா என்று எண்ணத் தோன்றியது. கடந்த
காலங்களில் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொண்டார்கள்; அதனால்
பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை இயல்பாகவே ஈன்றெடுத்தார்கள்;
அவர்களை
நன்முறையில் வளர்த்து ஆளாக்கினார்கள்; நன்றாகக்
கவனித்துக்கொண்டார்கள். ஆனால் நவீனக் காலத்தில் எல்லோரும் அவசர அவசரமாக
ஓடிக்கொண்டிருக்கிற வேளையில் பிள்ளைகள் தம் பெற்றோரிடமும் பெற்றோர்கள் தம்
பிள்ளைகளிடமும் பேசவே நேரமில்லை. பெற்றெடுத்த ஒற்றைப் பிள்ளையை அல்லது இரண்டு
பிள்ளைகளைச் சீராக வளர்க்கவோ பராமரிக்கவோ பேசவோ நேரமில்லாத பலர் நகரங்களில்
வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
ஏனெனில் இன்று ஆணும் பெண்ணும் அலுவலகங்களிலும்
பெரும் பெரும் நிறுவனங்களிலும் வேறு பல இடங்களிலும்
பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு இருக்கும்போது ஈன்றெடுத்த
பிள்ளைகளுக்கு அவர்களால் எவ்வாறு நேரம் ஒதுக்க முடியும்? ஓரிரு
பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதே மிகுந்த சிரமமாக இருக்கும்போது பத்துக்
குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது சாத்தியமா? தற்காலத்தில்
அதற்கு எந்தப் பெண்ணாவது முன்வருவாளா?
அதிபரின் அறிவிப்பு, நமக்கு
மற்றொரு செய்தியை நினைவூட்டுகிறது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் அறிவுரையைப் புறக்கணிக்கிற சமுதாயம் தோல்வியடைந்தே தீரும் என்பது
நிதர்சன உண்மை. ஆம்! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: “(கணவன்மீது)
மிகுந்த அன்பானவளான அதிகம் பெற்றெடுப்பவளான பெண்ணையே மணந்துகொள்ளுங்கள்.
ஏனென்றால் நான் (மறுமை நாளில் மற்ற இறைத்தூதர்கள் மத்தியில் மிகுதியான)
உங்களைக்கொண்டு பெருமிதமடைவேன்.” (அபூதாவூத்:
1754) அதாவது எந்தத் தடையுமின்றி
மிகுதியாகப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே நபியவர்களின் நயமான
அறிவுரை. அதைப் புறக்கணித்ததால் இன்று ஆட்சியாளர்கள் தோல்வியை
எதிர்கொள்கின்றனர்.
மக்கள் தொகையைக் குறைக்க வேண்டும் என்று
உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஒவ்வொரு நாட்டினரும் குழந்தைகள்
பெற்றுக்கொள்வதைக் கட்டுக்குள் கொண்டுவர நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
காலப்போக்கில் மக்கள் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக்கொண்டார்கள்.
பிள்ளைகளைப் பராமரிக்கத் தெரியாதவர்கள் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதையே
தொல்லையாகக் கருதத் தொடங்கினார்கள். எனவே மக்கள்தொகை குறைந்துவிட்டதால் அதைப்
பெருக்குமுகமாக இன்று பத்துப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்குப் பரிசை
அறிவிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
இன்றும் ‘குடும்பக்
கட்டுப்பாட்டுத் திட்டம்’ மக்கள்
மனங்களில் ஆழமாக ஊடுருவியுள்ளதால், இரண்டுக்குமேல்
மூன்று, நான்கு என யாராவது
பெற்றுக்கொண்டால் அவர்களை ‘நாகரிகம்
தெரியாதவர்கள்’ என்று வசைபாடக்கூடிய
பரிதாப நிலை உருவாகிவிட்டது. இக்காலத்தில் ஒரு பெண் நான்கு,
ஐந்து
எனப் பெற்றுக்கொண்டதைக் கேள்விப்பட்டால், ‘பெண்
என்பவள் குழந்தை பெற்றுத்தரும் எந்திரமா?’ என்று
வினாத் தொடுக்கின்ற வினோத மனிதர்களும் இருக்கின்றார்கள்.
குழந்தைகள் பிறப்பைக் கட்டுப்படுத்தி ‘குடும்பக்
கட்டுப்பாடு’ எனும் திட்டத்தை
அறிமுகப்படுத்தியவர்களைப் பொறுப்பைத் தட்டிக் கழிப்பவர்கள் என்றும் சரியாகத்
திட்டமிடத்தெரியாதவர்கள் என்றும் கூறலாம். ஏனெனில் குடும்பக் கட்டுப்பாட்டுத்
திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்கள், பிறப்பைக்
கட்டுப்படுத்துவதால் உணவுப் பற்றாக்குறையைப் போக்கிவிடலாம் என்று கூறினார்கள்;
மக்கள்தொகை
பெருகினால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்று வாதம் செய்தார்கள். ஆனால் அவர்களின்
வாதம் பொய்த்துப்போய்விட்டது.
கடந்த காலங்களில் எவ்வாறு உணவுப் பற்றாக்குறை
இருந்ததோ அதே நிலைதான் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்திவருகிற
முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் இருக்கிறது. இன்று உலகில் இரவு உணவு கிடைக்காமல்
பத்துக் கோடிக்கும் மேற்பட்டோர் தூங்கச் செல்கிறார்கள் என்று ஆய்வறிக்கை
கூறுகிறது. உணவுப் பற்றாக்குறை அடுத்த உலகளாவிய சுகாதார நெருக்கடியாக இருக்கலாம்
என உலகளாவிய சுகாதார இயக்குநர் பீட்டர்
சாண்ட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்கள் தொகையைக் குறைத்ததால் ஒரு
நாட்டிற்குத் தேவையான மனித ஆற்றலை இழந்தோம்; மிகுந்த
உற்பத்தி செய்யும் மக்கள்திறனை இழந்தோம்; மனித
உழைப்பை இழந்தோம். இழந்ததைத் தவிர வேறென்ன இத்திட்டத்தில் இருக்கிறது?
சரியான திட்டமிடல் இல்லாததே உணவுப்
பற்றாக்குறைக்குக் காரணம். பெரு வணிகர்களின் போட்டி, பொறாமை, பேராசை இவையே உணவுப்
பற்றாக்குறைக்கு மிக முக்கியக் காரணங்களாகும். கடந்த காலத்தைவிடத்
தற்காலத்தில் பல மடங்கு மகசூல்
கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. மனிதர்களின் தேவைக்கேற்ப உணவுப் பொருள்கள்
விளைந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவற்றை உரிய முறையில் பாதுகாத்துப் பங்கீடு
செய்யாமல், ஏழைகளுக்கு வழங்க
வேண்டியதை அவர்களுக்கு வழங்காமல் இருப்பதுதான் உணவுப் பற்றாக்குறையாகக் கணக்கு
காட்டப்படுகிறது. மேலும் உபரியாக விளைந்த பொருள்களை ஏழைகளுக்குக் கொடுக்காமல்
கடலில் கொட்டுகின்றார்கள். நன்றாக விளைந்த கோதுமையையும் நெல்லையும் உரிய
முறையில் கிடங்குகளில் பாதுகாக்க இடமின்றி, வெளியே
வைக்கப்பட்டு மழையாலும் வெள்ளத்தாலும் அழிந்து வீணாவதை நாளிதழ்களில் படித்து
வருகிறோம். விவசாயிகளின் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையைக்கூட அரசு
வழங்காமல் அவர்களை அலைக்கழிப்பதும் அவர்களின் விளைச்சலைப் புறக்கணிப்பதும்
தொடர்கிறது. இப்படி ஏராளமான காரணங்கள் உள்ளன.
கடந்த காலங்களில் விளைவித்த அளவைவிடத்
தற்காலத்தில் பயிர்கள் வேகமாக வளரவும் மிகுதியான மகசூல் கொடுக்கவும்
அறிவியல்பூர்வமான உத்திகள் கையாளப்படுகின்றன. அத்தோடு முற்காலத்தில் குறிப்பிட்ட
நிலத்தின் பெரும்பகுதி முறையாகப் பயன்படுத்தப்படாமல் இருந்துவந்தது. தற்போது
விவசாய நிலத்தின் ஒவ்வொரு பகுதியையும் துல்லியமாகப் பயன்படுத்திச் சாகுபடி
செய்கின்றார்கள்; மிகுதியாக
அறுவடை செய்கின்றார்கள். பற்றாக்குறையின்றி மக்களுக்கு விளைபொருள்களை
வழங்கிக்கொண்டிருக்கின்றார்கள் விவசாயிகள். ஆக கடந்த காலங்களில் விளைந்த
உணவுப்பொருள்களைவிடத் தற்காலத்தில் விளைகின்ற உணவுப் பொருள்கள் மிகவும் அதிகம்.
இருப்பினும் உணவுப் பற்றாக்குறை தொடர்ந்து நீடிக்கிறதெனில் அவற்றைப்
பாதுகாப்பதிலும் பங்கீடு செய்வதிலும் முறையான திட்டமிடல் இல்லை என்றே சொல்ல
வேண்டும்.
ஒரு தம்பதியருக்குப் பத்துக் குழந்தைகள் உள்ளன
என்றால் அவர்களுக்கான உணவை அல்லாஹ்வே தருவதாகக் கூறுகின்றான்: “வறுமையின்
காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே
உணவளிக்கிறோம்.” (6: 151)
“மிகப்பெரும் பாவம் எது?”
என்று
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு நபியவர்களிடம் கேட்டபோது... “உன்
குழந்தை உன்னுடன் (அமர்ந்து) உன் உணவை(ப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ
கொலை செய்வது” என்று கூறினார்கள்.
(புகாரீ: 4761)
ஆக இப்புவியில் பிறக்கின்ற அனைத்து
உயிர்களுக்கும் உணவளிப்பவன் இறைவன் ஒருவனே. அவனையன்றி யாரும் யாருக்கும் உணவளிக்க
முடியாது. அப்படியிருக்கும்போது இறைவன்மீது முழுமையான நம்பிக்கையற்றவர்கள்தாம்
நிறையக் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாது என்று அவநம்பிக்கை கொள்கின்றார்கள்.
வறுமை ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுகின்றார்கள். அதனால்தான் ஓரிரு குழந்தைகளோடு
நிறுத்திக்கொள்கின்றார்கள்.
குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம்
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, மற்ற
மாநிலங்களைவிடத் தமிழ்நாட்டில்தான் அது தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டது. அதிலும்
குறிப்பாக, இந்தத் திட்டமே
முஸ்லிம்களுக்காகத்தான் கொண்டுவரப்பட்டது என்பதைப் போல் முஸ்லிம் பெண்கள் அரசு
மருத்துவமனைக்குப் பிரசவத்திற்காகச் சென்றால், அவர்களுக்கு
இயல்பாகப் பிரசவிக்கின்ற வாய்ப்பை உருவாக்காமல் உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்து
குழந்தையை வெளியே எடுத்துவிடுவார்கள். இது முதலாவது குழந்தையா,
இரண்டாவது
குழந்தையா என்று கேட்டுவிட்டு, இரண்டாவது
என்றால் உடனடியாகக் குடும்பக் கட்டுப்பாடு செய்துவிடுவார்கள்.
இரண்டுக்கு மேல் அறுவைச் சிகிச்சை (ஆபரேஷன்)
செய்தால் உடம்பு கெட்டுப்போகும் என்றோ, கர்ப்பப்பை
மிகவும் பலவீனமாக இருக்கிறது; மற்றொரு
குழந்தை பிறந்தால் தாயின் உயிருக்கே ஆபத்து என்றோ கூறிப் பயமுறுத்துவார்கள். வேறு
வழியின்றி நாம் அதற்கு ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இப்படித்தான் முஸ்லிம் குடும்பங்களில் குழந்தைப் பிறப்பைக்
கட்டுப்படுத்தி முஸ்லிம்களின் மக்கள் தொகையைக் குறைத்தார்கள். சிறுபான்மையினருள்
பெரும்பான்மையாக வாழ்கின்ற முஸ்லிம்களின் மக்கள்தொகை பெருகினால் ஆட்சி அதிகாரத்தை
இழக்க நேரிடும் என்ற அச்சம் ஆட்சியாளர்களுக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது.
விசுவ இந்து பரிஷத் அமைப்பின் பெண்கள் பிரிவான
‘துர்கா வாகினி’யை
நிறுவியவர் பெண் சாமியாரான சாத்வி ரிதம்பரா. இவர் உத்தரப்பிரதேச மாநிலம்
கான்பூரில் நான்கு மாதங்களுக்குமுன் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் பேசியதாவது: “இந்துப்
பெண்கள், ‘நாம் இருவர் நமக்கு
இருவர்’ என்ற கொள்கையைப்
பின்பற்றி வருகிறார்கள். ஆனால், இந்துத்
தம்பதியர் அனைவரும் தலா 4
குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அவற்றில்,
2 குழந்தைகளைத் தங்களுக்கென வைத்துக்கொண்டு,
மீதி
2 குழந்தைகளை நாட்டுக்கு
அர்ப்பணிக்க வேண்டும்...” ‘‘இரண்டு
குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ்.சுக்கு அர்ப்பணிக்கச் சொல்கிறீர்களா?’’
என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,
‘‘ஆம். ஆர்.எஸ்.எஸ்.சுக்கு அர்ப்பணிக்க வேண்டும். அவர்களை
விசுவ இந்து பரிஷத் தொண்டர்களாக்க வேண்டும்’’ என்று
பதிலளித்தார்.
பல்வேறு மாகாணங்களாக இருந்த ஒருங்கிணைந்த
இந்தியா, இந்தியா என்றும்
பாகிஸ்தான் என்றும் இரண்டாகப் பிரிந்ததற்கான மிக முக்கியக் காரணம் ஆர்எஸ்எஸ்
இயக்கத்தின் காழ்ப்புணர்வுதான். முஸ்லிம்கள் மிகுதியாக உள்ளதால் இந்நாட்டின் ஆட்சி
அதிகாரம் அவர்களின் கைக்குப் போய்விடுமோ என்ற அச்சத்தால்தான் இந்தியாவைவிட்டு முஸ்லிம்களைப் பிரிக்கும்
வேலையைச் செய்தார்கள். அதற்காக எல்லாவிதச் சூழ்ச்சிகளையும் செய்துமுடித்தார்கள்.
இறுதியில் அந்தப் பழியை முஹம்மது அலீ ஜின்னாமீது போட்டுவிட்டார்கள். சுதந்திர
இந்தியாவில் அன்று முதல் இன்று வரை ஒரு முஸ்லிம் பிரதமராக வரமுடியாமைக்கு என்ன
காரணம் என்பதை ஊகித்துக்கொள்ளுங்கள்.
இக்காலத்திலும் இரண்டுக்கு மேல் குழந்தைகளைப்
பெற்றெடுக்கிற பெண்கள் இருக்கவே செய்கின்றார்கள்.
அதனால் அவர்கள் தம் ஆரோக்கியத்தை இழந்துவிடவும் இல்லை;
ஈன்றெடுத்த
பிள்ளைகளுக்கு உணவு கொடுக்காமல் வீதியில் விட்டுவிடவுமில்லை. என்னுடைய
ஆசிரியருக்கு ஆண் பிள்ளைகள் ஐவர், பெண்
பிள்ளைகள் அறுவர் எனப் பதினோரு பிள்ளைகள். அவர்கள் அனைவரும் நலமாகவே உள்ளனர்.
அந்தப் பிள்ளைகளைப் பெற்றெடுத்த தாயும் நலமாகவே வாழ்ந்து வருகிறார். என்
அண்ணனுக்கு எட்டுப் பிள்ளைகள்; என்னுடைய
வகுப்புத் தோழருக்கு ஆறாவதாக ஒரு பெண்குழந்தை அண்மையில் பிறந்துள்ளது. அவருடைய
அண்ணனுக்குப் பத்துப் பிள்ளைகள். இவர்களுள் யாரும் தம் பிள்ளைகளை வளர்க்காமல்,
உணவளிக்காமல்
வீதியில் விட்டுவிடவில்லை.
“பதினாறும் பெற்றுப்
பெருவாழ்வு வாழ்க” என்று
அன்றைய திருமணங்களில் வாழ்த்துவார்கள். அந்தப் பதினாறு என்பது பிள்ளைகள் இல்லை;
மாறாக
பதினாறு நற்பேறுகள் ஆகும். ஆனால் எனக்குத் தெரிந்த ஆலிம்கள் சிலர் வாழ்த்தும்போது,
“பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க”
என்று
கூறி, அந்தப் பதினாறு
நற்பேறுகளையும் விரிவாக எடுத்துரைத்து,
“குழந்தைகளோ அதைவிட அதிகமாகப் பெறுக”
என்று
வாழ்த்தியுள்ளார்கள். அத்தகைய வாழ்த்தை
இந்தக் காலத்தில் எந்த ஆலிமும் தெரிவிப்பதில்லை. ஒருக்கால் யாரேனும் துணிந்து
கூறினால், “இன்னும் இவர்
பழங்காலத்திலேயே இருக்கிறார்” என்று
மக்கள் வசைபாடுவார்கள்; எள்ளிநகையாடுவார்கள்.
முஸ்லிம்களுள் பெரும்பாலோருக்கு இரண்டுக்கு மேல் பெறுவது அநாகரிகம் என்ற எண்ணம்
அவர்கள்தம் மனங்களில் ஆழமாகப் பதிந்துபோய்விட்டது. அதனால் அவர்களுக்கு
அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது எனலாம்.
140 கோடி மக்கள்
தொகையைக்கொண்டு முதலிடம் வகிக்கின்ற சீனாவும் முற்காலத்தில் குடும்பக்
கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்தியது. அங்கு 1979-2016
வரை ஒற்றைக் குழந்தைதான் பெற்றெடுக்க வேண்டுமென்ற கட்டுப்பாடு இருந்தது. ஒரு
குழந்தைக்கு மேல் பெற்றெடுத்தால் அபராதம், கட்டாயக்
கருக்கலைப்பு, வேலைவாய்ப்பு
வழங்கப்படாது உள்ளிட்ட கடுமையான விதிகள் இருந்தன. இதனால் சீனாவின் மக்கள்தொகை
பெரிய அளவில் சரிந்துபோனது. இதையடுத்து 2016ஆம்
ஆண்டு இவ்விதி தளர்த்தப்பட்டு, 2
குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டது. 2020இல்
எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்குப்பின் இராணுவத்திற்கு இளைஞர்களின்
பற்றாக்குறையை உணர்ந்த அரசு இனி மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்துக்கொள்ளலாம் என
அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் ஒற்றைக் குழந்தையே பெற்றெடுத்துப் பழக்கப்பட்டவர்கள்
திடீரென இத்திட்டத்தைச் செயல்படுத்துவார்களா என்பது கேள்விக்குறிதான். ஆக
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவுரையைப் புறக்கணிக்கிற
சமுதாயம் தோல்வியடைந்தே தீரும் என்பது நிரூபணமாகிவிட்டது.
கல்வி வியாபாரம் ஆகிவிட்டது. அதுவே நம்
பெண்கள் இரண்டுக்கு மேல் பெற்றுக்கொள்ளத் தடையாக உள்ளது. எல்கேஜி முதல் பட்டப்
படிப்பு வரை பணம் கட்டிப் படிக்க வைக்க வேண்டியுள்ளது. இந்தச் செலவு குறித்தே
பெற்றோர்கள் அஞ்சுகின்றார்கள். அரசுப் பள்ளிக்கூடங்கள் இலவசமாக இயங்கி வந்தாலும்
அவற்றில் பெற்றோர்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே பெற்றோர்கள் தம் பிள்ளைகளைத்
தனியார் பள்ளிக்கூடங்களில்தான்
சேர்க்கின்றார்கள். அங்கு நிறையப் பணம் செலவாவதால் இரண்டுக்கு மேல்
பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை. இந்த மனோநிலையைக் குறித்துத்தான் அல்லாஹ்
கூறுகின்றான்: வறுமையை அஞ்சி உங்கள் பிள்ளைகளைக் கொலை செய்யாதீர்கள். நாமே
உங்களுக்கும் அவர்களுக்கும் உணவளிக்கிறோம்.
(6: 151)
சமூக மக்களிடம் உள்ள பழக்க வழக்கத்தாலும்
இரண்டுக்கு மேல் பெற்றுக்கொள்வதில்லை. உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என்று
யாரேனும் கேட்கின்றபோது இரண்டுக்குமேல் மூன்று, நான்கு
என்று சொல்ல வெட்கப்படுகின்றார்கள். ஏனென்றால் தம்மைச் சுற்றியுள்ள எல்லோரும்
இரண்டு பிள்ளைகளைத்தாம் பெற்றுள்ளார்கள். அந்தச் சமூகச் சூழல்தான் பெற்றோரின்
ஆசைகளைக் கட்டிப்போட்டுவிட்டது. இரண்டுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் ஆசை
இருந்தாலும் சமூகச் சூழலைக் கருதி இரண்டோடு சுருக்கிக்கொண்டு விடுகின்றார்கள்.
இரண்டுக்கு மேல் பெற்றவர்கள் எதிர்கொள்ளும்
சிரமங்களையும் மக்கள் பார்க்கின்றார்கள். அதனால் மக்கள் இரண்டோடு
நிறுத்திக்கொள்கின்றார்கள். அதாவது குடும்ப அட்டை பெறுவதற்காக அலுவலகம் சென்றால்
அங்கு ஒரு விண்ணப்பப்படிவம் கொடுக்கப்படுகிறது. அதில் ‘குடும்ப
உறுப்பினர்கள் விவரம்’ என்று
குறிப்பிட்டு இரண்டு கோடுகள்தாம் உள்ளன. அவற்றில்தான் குடும்ப உறுப்பினர்கள்
குறித்த விவரத்தை எழுத வேண்டும். இரண்டுக்கு மேற்பட்ட பிள்ளைகளின் விவரத்தை எங்கு
எழுதுவது? குடும்ப அட்டை
பெறுவதில் மட்டுமல்ல வேறு பல
திட்டங்களிலும் இதே நிலைதான். இதையெல்லாம் மனதில்கொண்டுதான் பெற்றோர்கள்
இரண்டோடு நிறுத்திக்கொள்கின்றார்கள்.
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில்
தீவிரமாகச் செயல்பட்ட நாடுகளெல்லாம் இன்று பல்வேறு பிரச்சனைகளையும் சிக்கல்களையும்
சந்திக்கின்றன. இளைஞர்களின் எண்ணிக்கை குறைவு, முதியோர்
எண்ணிக்கை அதிகமாகுதல், ஆண்-பெண்
பிறப்பு விகிதத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, ஆண்கள்
அதிகமாகவும் பெண்கள் குறைவாகவும் இருத்தல், உழைப்போர்
விகிதம் குறைதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள். அதனால் பொருளாதாரச் சரிவும் ஏற்படுவதைத் தவிர்க்க
முடியவில்லை. ஆக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் தீவிரமாகச் செயல்பட்ட
நாடுகள் அத்திட்டத்தில் தோல்வி கண்டு, மீண்டும்
மக்கள் தொகையை அதிகரிக்கத் திட்டம் தீட்டுகின்றன என்பதே நிதர்சன உண்மையாகும்.
அதற்கான சான்றே இரஷ்ய அதிபரின் அறிவிப்பும் சீன நாட்டின் தளர்வும் ஆகும்.
இரஷ்ய அதிபரின் செய்தியைப் படித்தபின்,
அண்மையில்
ஒரு செய்தியைப் படித்தேன். அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில்
வசித்துவருகின்ற கார்லோஸ் (Carlos)
-பேட்டி ஹெர்னாண்டஸ் (Patty Hernandez)
தம்பதியினர் 14 வருடங்களில் 16
குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர். தற்போது 17ஆவது
குழந்தை வயிற்றில் இருப்பதாகச் செய்தியைப் படித்ததும் முந்தைய செய்தி ஏற்படுத்திய
வியப்பு குறைந்துபோய்விட்டது. அது மட்டுமல்ல
இன்னும் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்து இருபதாக நிறைவுசெய்ய விரும்புவதாக
பேட்டி ஹெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். எவ்வளவு மனத்துணிவு அப்பெண்ணுக்கு!
மேலும் தற்காலத்தில்கூட இருபது குழந்தைகளை
ஈன்றெடுக்கின்ற மனத்துணிவு ஒரு பெண்ணுக்கு இருக்கிறதென்றால்,
நிச்சயமாகப்
பெண்கள் நினைத்தால் பற்பல குழந்தைகளை ஈன்றெடுப்பது அசாத்தியமன்று என்பதைப்
புரிந்துகொள்ள முடிகிறது. ஆகவே நம் பெண்களுக்கு மார்க்க அறிவும் மார்க்கப்
பற்றும் இருந்து அல்லாஹ்மீதான நம்பிக்கை வலுவாக இருந்தால் அவர்கள் இரண்டுக்கும்
மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றெடுப்பதில் எந்தச் சிரமமும் இருக்காது. ஆகவே இனிவரும்
காலங்களிலாவது நம் பெண்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின்மீது பற்றையும் வலுவான
இறைநம்பிக்கையையும் இறைத்தூதரின் அறிவுரையை ஏற்று நடக்கும் ஆர்வத்தையும் உண்டாக்க
நம்மால் இயன்ற வரை முனைவோம். பின்னர் அவர்களே இரண்டுக்கு மேற்பட்ட பிள்ளைகளை
ஈன்றெடுக்க மனதளவில் தயாராகிவிடுவார்கள்.
௦௦௦==============௦௦௦