வெள்ளி, 19 மே, 2017

கோடைக்கால தீனிய்யாத் நிறைவு விழா

கோடைக்கால தீனிய்யாத் நிறைவு விழா  24 05 2017 புதன்

நிருபர் ஆக விருப்பமா?

நிருபர் ஆக விருப்பமா?
Referred by முனைவர் மௌலவி நூ அப்துல் ஹாதி பாகவி M.A.,M.Phil.,Ph.D.


வியாழன், 18 மே, 2017

தலாக் சிக்கலுக்குள் சிக்கியதேன் ?


தலாக் சிக்கலுக்குள் சிக்கியதேன் ?
-இனிய திசைகள் மாத இதழ் மே 2017









திங்கள், 15 மே, 2017

ஜெர்னலிஸ்ட் வாய்ஸ் - மாத இதழுக்குத் துணை ஆசிரியராக...

நண்பர்களே, 
அஸ்ஸலாமு அலைக்கும் 

ஜெர்னலிஸ்ட் வாய்ஸ் எனும் மாத இதழுக்குத் துணை ஆசிரியராக நியமிக்கப்பெற்றுள்ளேன். நல்ல முறையில் சேவை செய்ய வாழ்த்தி, துஆச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

அன்புடன்

முனைவர் மௌலவி நூ அப்துல் ஹாதி பாகவி Ph.D.




வியாழன், 11 மே, 2017

சமச்சீர்க் கல்வி சாத்தியமே!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.


கற்றலும் கற்பித்தலும் ஆதி காலந்தொட்டு வாழையடி வாழையாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு காலத்திலும் கற்றல்-கற்பித்தல் முறைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. தொடக்கக் காலத்தில் குருவுக்கும் சீடனுக்கும் நூல்களோ எழுதுகோல்களோ எதுவும் இருந்ததில்லை. சீடர்கள் வந்து தம் குருமுன் பணிவோடு அமர்வார்கள். குருவோ தமக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லிக் கொடுப்பார். எழுத்துகளைக் கற்பிக்க அவர்களின் முதுகில் எழுதும் பழக்கம் இருந்தது. பின்னர் மண்ணில் எழுதினார்கள். அடுத்தக் காலக்கட்டத்தில் குரு கற்பிப்பதை மாணவர்கள் எழுதுகோல்களால் எழுதிக்கொண்டார்கள். அவர்கள் தம்மிடருந்த எழுத்தாணிகளால் பனையோலைகளிலும் காய்ந்த தோல்களிலும் எழுதிக்கொண்டார்கள். அடுத்தக் காலக்கட்டத்தில் மையைத் தொட்டு இறகுகளாலும் மூங்கில் குச்சிகளாலும் எழுதிக்கொண்டார்கள். இப்படியே வளர்ச்சியடைந்து காகிதத்தில் கரிக்கோல்களால் (பென்சில்) எழுதும் நிலைக்கு உயர்ந்தான். பேனாவில் மை ஊற்றி எழுதும் நிலையை அடைந்து, எழுதுவதற்கென ஆயத்த நிலையில் உள்ள பந்துமுனைப் பேனாவைப் பயன்படுத்தும் காலத்தை எய்தினான். அத்தோடு தட்டச்சு எந்திரத்தின்மூலம் எழுதத் தொடங்கி, அதுவும் பழையதாகிவிட்டதால் கணினித் தட்டச்சுக்கு இப்போது மனிதன் மாறிவிட்டான். அதையும் தாண்டி வார்த்தையைச் சொல்லச் சொல்லத் தானாகவே எழுதிக்கொள்ளும் தொழில்நுட்பத்தையும் கண்டுபிடித்துவிட்டான். இவ்வாறு ஒன்றுக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல், படிப்படியாக நகர்ந்து அடுத்தடுத்தக் கட்டத்தை அடைவதுதான் வளர்ச்சி. 


ஆசிரியர் கற்பிப்பதை நேரடியாகக் கேட்டு, மாணவர்கள் தம் ஐயங்களை உடனுக்குடன் தீர்த்துக்கொள்ளும் கற்பித்தல் முறைக்கு இணையே கிடையாது. தம் பாடத்தில் நன்கு தேர்ச்சிபெற்ற ஆசிரியர்கள்தாம் அந்தப் பாடத்தை எளியமுறையில் மாணவர்களுக்குக் கற்பிக்கவும் விளக்கிக் கூறவும் முடியும். அத்தகைய ஆசிரியர்கள் எல்லா மாணவர்களுக்கும் கிடைப்பது அரிது. 


தமிழ், ஆங்கிலம், கணிதம், புவியியல், வரலாறு ஆகிய ஐந்து பாடங்களைக் கற்கின்ற மாணவனிடம், உனக்கு எந்தப் பாடம் மிகவும் பிடிக்கும்? என்று கேட்டால், எந்தப் பாடத்தை நன்றாகப் புரிந்துகொள்ளும்படி ஆசிரியர் நடத்தினாரோ அந்தப் பாடத்தைத்தான் கூறுவான். மற்ற பாடங்கள் அவ்வளவாகப் பிடிக்காமல் போனதற்குக் காரணம் அந்தப் பாடங்களை அவன் விளங்கிக்கொள்ளுமாறு செவ்வனே நடத்துகின்ற ஆசிரியர்கள் அவனுக்குக் கிடைக்கவில்லை என்பதே பொருள். ஒரு பள்ளியில் +2 கணிதவியலில் மிகுதியான மதிப்பெண்கள் பெறுகின்ற மாணவர்கள் மற்றொரு பள்ளியில் அதே கணிதவியல் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் பெறுகின்றார்கள். ஏன்? அவர்களுக்கு அப்பாடத்தை அவர்களின் மனதில் பதியுமாறு திறம்பட நடத்துகின்ற ஆசிரியர் கிடைத்தார்; இவர்களுக்குக் கிடைக்கவில்லை. இதுதான் மாணவர்களுக்கு மத்தியில் மதிப்பெண் வேறுபாடு ஏற்பட முக்கியக் காரணம். 
அப்படியென்றால் திறன்மிகு ஆசிரியர்கள் சிலர்தாம் இருப்பார்கள்; அவர்கள் எல்லா இடங்களுக்கும் சென்று பாடம் நடத்துவது சாத்தியமா? ஆனால் தற்காலக் கணினி யுகத்தில் அனைவருக்கும் ஓர் ஆசிரியர் பாடம் நடத்துவது சாத்தியமாகியுள்ளது. அத்தகைய அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த யுகத்தில் நாம் வாழ்கிறோம். அதற்கான வாய்ப்பு எளிதாக இருந்தும் அதைப் பயன்படுத்திக்கொள்ளும் திட்டம்தான் நம்மிடம் இல்லை. 


இன்று ஸ்மார்ட் கிளாஸ் என்று சிலபல பள்ளிக்கூடங்களில் அதிகமான கல்விக் கட்டணத்துடன் நடைபெறுகின்ற கணினிவழிக் கல்வியின் இன்னொரு கோணம்தான் காணொலிக் குறுவட்டுத் திட்டம் (டிவிடி). இத்திட்டத்தின்படி ஒவ்வொரு பாடத்திலும் நன்கு தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களைத் தேர்வுசெய்து, அவர்களை அந்தந்த வகுப்புப் பாடத்தை நடத்தச் செய்து, அதை அப்படியே காணொலியாகப் பதிவு செய்துவிட வேண்டும். பின்னர் அதைக் காணொலிக் குறுவட்டுகளாக உருவாக்கி ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் வழங்கி அந்தந்த வகுப்பில் அந்தப் பாடத்தைக் கணினியின்மூலம் வெண்திரையில் காண்பிக்க வேண்டும். இதனால் குறிப்பிட்ட அளவே உள்ள திறன்மிக்க ஆசிரியர்களின் அறிவு எல்லாப் பள்ளி மாணவர்களுக்கும் சமச்சீரான வகையில் கிடைக்கும். 


ஓர் ஆசிரியர் தம் மாணவர்கள் முன்னிலையில் நேரடியாக நடத்துவதைவிட, அப்பாடத்தையே அவர்கள் திரையில் காணும்போது இன்னும் சற்று ஆவலாகப் பாடத்தைக் கவனிப்பார்கள். அது மட்டுமின்றிக் காட்சிவடிவில் பாடத்தைக் காணும்போது அது அவர்களின் உள்ளத்தில் எளிதாகப் பதியும் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு செய்வதால் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாணவ, மாணவியர்க்கும் சமச்சீரான கல்வி சென்றடையும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. 


அப்படியானால் அங்கங்குள்ள மற்ற ஆசிரியர்கள் என்ன செய்வார்கள்? மாணவர்கள் தம் பாடத்தைக் குறிப்பெடுக்கின்றார்களா என்று கவனிப்பதும், அவர்களை வீட்டுப்பாடம் செய்துவருமாறு கூறி, அதை மறுநாள் திருத்திக்கொடுப்பதும் அப்பாடம் தொடர்பான அவர்களின் ஐயங்களைக் கேட்டு, அவற்றைத் தீர்த்து வைப்பதும், அவ்வப்போது சின்னச்சின்ன சோதனை (டெஸ்ட்) செய்து மாணாக்கர்களின் பாடத்திறனை அறிந்துகொள்வதும் அவர்களின் அன்றாடப் பணிகளாகும்.  அந்தந்தப் பாடத்தில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களால்தாம் அந்தப் பணியைச் செவ்வனே நிறைவேற்ற முடியும். ஆதலால் அவர்கள் அங்கு இருப்பது இன்றியமையாததாகும். 


இதன் நீட்சியாக, தமிழக அரசு நடத்துகின்ற போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை, அதில் நன்கு தேர்ச்சிபெற்ற பேராசிரியர்கள்மூலம் அப்படியே காணொலிக் குறுவட்டில் பதிவுசெய்து, தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தேர்வருக்கும் வழங்கிவிட்டால் எல்லோரும் சமவாய்ப்பைப் பெறுவார்கள். தற்போதைய சூழலில் போட்டித் தேர்வுகள் பலவற்றில் நகரத்தில் உள்ளவர்களைப் போன்று கிராமங்களில் உள்ளவர்களால் தேர்ச்சிபெற முடியவில்லை என்றொரு குறை உண்டு. அதற்கான முக்கியக் காரணம், படிப்பகங்களும் பயிற்சி நிலையங்களும் நகரத்தில் உள்ள அளவிற்குக் கிராமத்தில் இல்லை என்பதுதான். இதை முற்றிலும் துடைத்தெறிந்து அனைவருக்கும் சமவாய்ப்பை வழங்கும் திட்டம்தான் காணொலிக் குறுவட்டுத் திட்டம். 


ஏழை, செல்வர், உயர்சாதி, கீழ்ச்சாதி என்ற எந்தப் பாகுபாடுமின்றி அனைவருக்கும் சமச்சீரான கல்வியை வழங்கி, வேலைவாய்ப்பிலும் சமவாய்ப்பை ஏற்படுத்தும் தொழில்நுட்பமும் அதற்கான வழியும் இருக்கும்போது இன்னும் ஏன் அதற்கான தீர்வை நோக்கி நகராமல் பழைய ஓலைச்சுவடிக் காலத்திலேயே நாம் முடங்கிக் கிடக்க வேண்டும்?============




புதன், 3 மே, 2017

மலரும் நினைவுகள்


நான் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியில் பயின்ற காலத்தில் என்னுடைய பேராசிரியர் மௌலவி நூர்முஹம்மது ஹைதர் அலீ பாகவி குறிப்பிடத்தக்கவர். எங்களுக்கு மிகச் சிறப்பாகப் பாடம் நடத்தக்கூடியவர். தொடக்க வகுப்பு முதல் ஆறாம் ஆண்டு வரை மொத்தம் ஏழு ஆண்டுகள் அவரிடம் பயின்றுள்ளேன். நான் அங்கு பயின்ற காலத்திலேயே அண்ணாமலை திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தில் (தொலைநிலை) இளநிலை வரலாறு (பி.ஏ.) பயின்று வந்தேன். அதனை அவர் ஊக்கப்படுத்தியதோடு கல்விக் கட்டணம் செலுத்துவதற்காகக் கடனுதவி கொடுத்து உதவியதையும் இந்நேரத்தில் நன்றியுணர்வோடு நான் நினைத்துப் பார்க்கிறேன்.

அவர் எங்களுக்குப் பாடம் நடத்தியதோடு தன்மான உணர்வையும் சுய மரியாதைச் சிந்தனையையும் அவ்வப்போது ஊட்டியவர். ஆலிம்கள் மிகவும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்; பிறர் கையை எதிர்பார்க்கக்கூடாது; பிறர் தரும் உணவுக்காகக் காத்திருக்கக்கூடாது உள்ளிட்ட அறிவுரைகள் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன.

சுயமரியாதையையும் தன்மான உணர்வையும் ஊட்டும்விதமாக அவர் போதித்த ஒளவைப் பாடல் ஒன்று. அதன் பெயர் நாலு கோடிப் பாடல். இப்பாடலில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு விஷயமும்  ஒரு கோடிக்குச் சமமாகும். இதோ அந்தப் பாடல்:

மதியாதார் முற்றம் மதித்தொருகால் சென்று
மிதியாமை கோடி யுறும்.

உண்ணீர் உண்ணீரென் றூட்டாதார் தம்மனையில்
உண்ணாமை கோடி யுறும்.

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுவதே கோடி யுறும்.

கோடானு கோடிகொடுப்பினும் தன்னுடையநாக்
கோடாமை கோடி யுறும்.

(பொருள்: தம்மை மதிக்காதவர்களின் வீட்டு வாயிலில் அவரையும் ஒரு பொருட்டாகக் கருதிச் சென்று மிதியாதிருத்தல் கோடிபெறும்.

“உண்ணுங்கள் உண்ணுங்கள்” என்று உபசரிக்காதோரின் வீட்டில் உண்ணாதிருத்தல் கோடி பெறும்.

கோடிப் பொன் கொடுத்தாயினும் நல்ல குடிப்பிறப்பு உடையவர்களோடு. தோழமைகொள்வது கோடி பெறும்.

எத்தனை கோடி தந்தாலும் தன்னுடைய வாக்குத் தவறாமல் இருப்பது
(உண்மையே பேசுவது) கோடி பெறும்.)

இப்பாடலை நான் ஏழாம் வகுப்பில் படித்திருந்தாலும் இதன் பொருளெல்லாம் என் மனதில் இல்லை. இவர் போதித்த பிறகே இப்பாடலும் இதன் பொருளும் என் மனதில் நீங்கா இடம்பெற்றன.

(பின்குறிப்பு: பேராசிரியர் மௌலவி நூர்முஹம்மது ஹைதர் அலீ பாகவி தற்போது அதிராம்பட்டினத்திலுள்ள மகளிர் கல்லூரியில் முதல்வராகப் பணி மேற்கொள்கின்றார். தொடர்புக்கு: 99 44 78 33 03)

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
=================

திங்கள், 1 மே, 2017

திருக்குர்ஆனை மட்டுமல்ல திருக்குறளையும்...

பாக்கியாத் அரபுக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு ஓதிய காலத்தில் ஆசிரியப் பெருந்தகை மௌலவி ஸதக்கத்துல்லாஹ் பாகவி அவர்களிடம் திருக்குர்ஆன் தர்ஜமா வகுப்பு. அவர்கள் திருக்குர்ஆன் தமிழாக்கம் குறித்த பாடத்தில் தமிழ் இலக்கணங்களையும் தமிழாக்கம் செய்யும் முறைகளையும் விளக்குவார்கள். அடைப்புக் குறிக்குள் வார்த்தைகளை இட்டாலும் படிக்கும்போது எந்த நெருடலும் ஏற்படக் கூடாது. அந்த வகையில் தமிழாக்கம் செய்ய வேண்டும் என்று சொல்லித் தந்தார்கள். அத்தோடு திருக்குறளையும் எங்களுக்குச் சொல்லித் தந்துள்ளார்கள்.
அவற்றுள் ஒன்று:

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

முகர்ந்து பார்த்தாலே அனிச்சம் மலர் வாடிப்போய்விடும். அதுபோலவே  விருந்து கொடுப்பவர் விருந்தாளியைப் புன்னகையோடு பார்க்காமல் ஒருவிதமாகப் பார்த்தாலே அவர் மனம் வாடிவிடும். அவர் ஒழுங்காக உண்ணமாட்டார்.

பாக்கியாத் ஆசிரியர்கள் யாரும் உலகக் கல்வி, மார்க்கக் கல்வி என்று பிரித்துப் பார்க்காமல் கல்வி என்ற அடிப்படையில் எல்லாவற்றையும் சேர்த்தே சொல்லிக்கொடுத்தார்கள். அவர்களிடம் நாங்கள் திருக்குர்ஆனை மட்டும் படிக்கவில்லை. திருக்குறளையும் சேர்த்தேதான் படித்தோம்.

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி