செவ்வாய், 31 மார்ச், 2020

கருந்தலைப் பறவை

-----------------------------
இப்படத்திலுள்ள பறவையின் பெயர் கருந்தலைப் பறவை. இது ஒரு நாளில் 900 தடவை தன் கூட்டைவிட்டு வெளியே சென்று, கூட்டில் வாழும் குஞ்சுகளுக்கு இரையைத் தன் அலகில் கவ்விக் கொண்டுவரும் பழக்கமுடையது. இப்பறவைபோல் ஏழைகள் பல கோடிப்பேர் நம் நாட்டில் உள்ளனர். அவர்கள் தம் வீட்டிலிருந்து அன்றாடம் வெளியில் சென்று சம்பாதித்தால்தான் தம் குடும்பத்தாருக்கு உணவு வழங்க முடியும். அவர்களின் உணவுக்கான எந்த முன்னேற்பாடும் செய்யாமல் திடீர் ஊரடங்கு உத்தரவு விதித்தது சரியா எழுத்தாளர்கள் பலர் வினாத் தொடுக்கின்றனர்.

சீனாவில் கொரோனா நுண்கிருமி பரவிய நேரத்தில் இங்கு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையைக் கோலாகலமாகக் கொண்டாடுவதிலும் தில்லியில் முஸ்லிம்களை இனப் படுகொலை செய்யத் திட்டமிடுவதிலும் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்துவிட்டு, திடீர் ஊரங்கு விதித்தது சரியா என்று பலரும் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

டெல்லியில் நடந்த தப்லீஃக் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டோர் மூலம் கொரோனா நாடு முழுவதும் பரவுவதைப்போன்ற மாயத்தோற்றத்தைக் காட்டி, இதில்கூட முஸ்லிம்களை வஞ்சம்தீர்க்க நெஞ்சுறுதி கொள்வதேனோ? சுய ஊரடங்கு உத்தரவு வருவதற்குமுன், பல மாதங்களாகத் திட்டமிட்ட ஆலோசனைக் கூட்டம் குறிப்பிட்ட தேதியில் நடந்தது. அப்போதுதான் ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவு வந்தவுடனேயே அக்கூட்டம் இடையில் நிறுத்தப்பட்டது. பின்னர் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் அக்கூட்டத்தில் கலந்துகொண்ட இந்தியர்கள், வெளிநாட்டினர் யாரும் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, நிர்ப்பந்த நிலையில் அங்கேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவர்கள் திரும்பிச் செல்வதற்கான எந்த வாய்ப்பும் கொடுக்கப்படாமல், அவர்களைக் குற்றவாளிகளாக்குவது எவ்வகை நியாயம்? அவர்களை வைத்து, முஸ்லிம் சமுதாயத்தையே ஒட்டுமொத்தமாகக் குற்றவாளியாக்குவது எவ்வகை தர்மம்?

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
31 03 2020 / 05 08 1441
==============================


திங்கள், 30 மார்ச், 2020

தனிமை சுகமா? சாபமா?



-------------------------------------
மக்களோடு எப்போதும் நேரடித் தொடர்பில் இருப்பவர்களைத் திடீரென வீட்டில் அடைத்துப் போட்டால் அது அவர்களுக்கு மிகப்பெரும் மனஉளைச்சலையே ஏற்படுத்தும். அன்றாடம் மக்களோடு நேரடித் தொடர்பில் இருந்து அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லியே பழகிப்போனவர்களைத் திடீரெனத் தனியறைக்குள் அடங்கி இரு என்றால் அது அவர்களுக்கு மிகப்பெரும் துயரமாகவும் சுமையாகவும் இருக்கும். மனஇறுக்கத்தையும் ஏற்படுத்தும்.

அதேநேரத்தில் மக்கள் தொடர்பே இல்லாமல், எப்போதும் தனி அறைக்குள்ளேயே பணி செய்து பழகியவர்களுக்குத் தற்போதைய ஊரடங்கு உத்தரவு ஒரு சுமையாகத் தெரியாது.

அதுபோலவே தனியறைக்குள் இருந்துகொண்டு எழுதிக்கொண்டிருக்கிற எழுத்தாளர்களுக்கும் எப்போதும் தனியாக அமர்ந்து நூல்களை வாசித்துக்கொண்டே இருக்கிற புத்தகப் பிரியர்களுக்கும் தனிமை ஒரு சுமையல்ல.

தனிமை ஒரு சுமையா அல்லது சுகமா என்றால் அது அவரவர் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ள பணியைப் பொறுத்தது. ஓர் ஆய்வாளரும் அல்லது கண்டுபிடிப்பாளர் தனியாக இருந்து, சுதந்திரமாகச் செயல்பட்டால்தான் அவர் தமது ஆய்வின் முடிவைக் கண்டறிய முடியும். கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர் உள்ளிட்ட படைப்பாளர்கள் தனியே அமர்ந்தால்தான் தம் படைப்புகளை நிறைவு செய்ய முடியும். இத்தகையோரிடம் தனிமை குறித்துக் கேட்டால், அது ஒரு சுகம் என்றே சொல்வார்கள்.

மேடைப் பேச்சாளர்கள், நடிகர்கள், மக்கள் தொடர்பாளர்கள், செய்தி சேகரிப்பாளர்கள் உள்ளிட்டோரிடம் கேட்டால் தனிமை ஒரு சுமை என்று சொல்வார்கள். ஆக அவரவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட பணியைப் பொறுத்து அது மாறுகிறது. அன்பான மனைவியைப் பிரிந்து தனிமையில் இருப்பது சுமை. கோபக்கார மனைவியோடு இத்தனை நாள்களை ஒன்றாகக் கழிக்க வேண்டும் என்பது ஆண்களுக்குச் சுமை. இப்படிச் சுமையும் சுகமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

வயதில் மூத்தவர்களுக்குத் தனிமை ஒரு சுமை. தம்முடைய கடந்த கால வாழ்க்கையையும் நிகழ்கால நிகழ்வுகளையும் பேசித் தீர்க்க ஆள் இல்லையே என்ற கவலை அவர்களை வாட்டும். யாரேனும் ஆள் கிடைத்துவிட்டால் அவர்களின் மனம் மகிழும். அவரிடம் தம் மனக்கிடக்கைகளையெல்லாம் கொட்டித் தீர்த்துவிடுவார்கள். அது அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி.

ஆகவே ஏப்ரல் 14 வரை கிடைத்துள்ள ஓய்வையும் தனிமையையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள, பயனுள்ள நூல்களை வாசிக்கலாம்; திருக்குர்ஆனைக் கற்றுக்கொள்ளலாம்; கற்றுக்கொடுக்கலாம். படிக்கத் தெரியாதவர்கள் இறைத்துதியில் (திக்ரில்) ஈடுபடலாம். முதியோரிடம் அன்பாக உரையாடலாம்.
ஆக தனிமையை வெறுமையாகவும் வீணாகவும் கழித்துவிடாமல் நன்மையாக மாற்ற முயல்வோம்.

அன்புடன்
-
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
30 03
2020 / 04 08 1441

======================================


ஞாயிறு, 29 மார்ச், 2020

இஸ்லாமில் சொத்துரிமை சட்டங்கள் (நூல் அறிமுகம்)



---------------------------------------------------
இஸ்லாமில் சொத்துரிமை சட்டங்கள்எனும் நூலை
சென்னை தாருல் ஹுதாவில் பணியாற்றுகின்ற சகோதரர் மௌலவி அப்துல் பாரீ ஸதகீ என்னிடம் வழங்கினார். நூலைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ந்தேன். ஏனெனில் இத்துறையில் தமிழில் வெளிவரும் முதல்நூல் இதுவே.

நூலைக் குறித்து எனது பார்வை...

நீங்கள் ஃபராயிள்-சொத்துரிமைச் சட்டங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதனைக் கற்றுக் கொடுங்கள். ஏனெனில் அது அறிவின் பாதியாகும். அது மறந்துபோகக் கூடியதாகும். எனது சமுதாயத்திலிருந்து முதன்முதலாக அகற்றப்படக்கூடியதுமாகும்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா: 2719)

சொத்துரிமைச் சட்டங்களைக் கற்றுக்கொள்ளுதல், கற்றுக்கொடுத்தல் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளதோடு அது அறிவின் பாதியாகும்; முதன் முதலில் அகற்றப்படும் கல்வியும் அதுவேயாகும் என்று கூறியுள்ளமை கவனிக்கத்தக்கது.

எனது சமுதாயத்திலிருந்து முதன் முதலாக அகற்றப்படும் கல்விஎன்பதன் பொருள், திருக்குர்ஆனின் சட்டங்களுக்கு மக்கள் முதன்முதலாக மாறுசெய்வது இதில்தான். அதாவது திருக்குர்ஆனின் கட்டளைப்படிச் சொத்தைப் பங்கிட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்ற முன்னறிவிப்பு இதனுள் உள்ளது.

ஆம்! தற்காலத்தில் மக்கள் மத்தியில் நிலவும் மிகப்பெரும் பிரச்சனையே சொத்துத் தகராறுதான். குறிப்பாக, ஆண்கள் தம் உடன்பிறந்த சகோதரி, தாய், பாட்டி உள்ளிட்டோருக்குச் சட்டப்படியான பங்கைப் பிரித்துக் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அத்தகையோருக்குக் கடுமையான தண்டனை உண்டு என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

தற்காலத்தில் ஒருவர் சொத்துரிமைச் சட்டங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமாயின், மாநிலத் தலைமை காஜி, மாவட்டத் தலைமை காஜி, முஃப்தி ஆகியோரைத்தான் அணுக வேண்டும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்குமுகமாக, தமிழ் தெரிந்த அனைவரும் எளிய முறையில் இஸ்லாமியச் சொத்துரிமைச் சட்டங்களைத் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளார் இலங்கையைச் சேர்ந்த மௌலவி. எம்.ஜே.எம். அரபாத் கரீம் நளீமி அவர்கள். அதனை நல்ல முறையில் மேற்பார்வையிட்டு, சில பிற்சேர்க்கைகளையும் இணைத்துள்ளார் முஃப்தி உமர் ஷரீஃப் அவர்கள்.

தமிழறிந்த எல்லோரும் இஸ்லாமியச் சொத்துரிமைச் சட்டங்களைப் படித்துத் தெரிந்துகொள்ள ஒரு பொன்னான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள். எத்தனையோ பேர் ஷரீஅத் முறைப்படி சொத்துக்களைப் பங்கிட்டு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார்கள் என்பதை நான் அறிவேன். அவர்கள் அனைவரும் தவறாமல் படிக்க வேண்டிய நூலிது. இந்நூலை வாங்கிப் படியுங்கள்; பயனடையுங்கள். உங்கள் நண்பர்களையும் படிக்கத் தூண்டுங்கள்.

நூலைப் பெற தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி எண்: 98401 74121/ 044-25247866
விலை: ரூ. 100/-
பக்கங்கள்: 200

அன்புடன்
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

29 03 2020 / 03 08 1441
=====================================


நூ. அப்துல் ஹாதி பாகவி
நூ. அப்துல் ஹாதி பாகவி 2


வெள்ளி, 20 மார்ச், 2020

கொரோனா - அச்சம் தவிர்

திங்கள், 16 மார்ச், 2020

ஞாயிறு, 15 மார்ச், 2020



அல்லாமா பீ.எஸ்.பீ. ஜைனுல் ஆபிதீன் பாகவி ஹள்ரத் அவர்களின் சுயவரலாற்று நூல் 14 03 2020 அன்று மண்ணடி லஜ்னத்துல் முஹ்ஸினீன் ட்ரஸ்ட் பள்ளிவாசலில் வெளியிடப்பட்டது. அவர்களுடைய மாணவர்கள், மாணவர்களின் மாணவர்கள் என ஆலிம்கள் பலர் கலந்து கொண்டார்கள். அந்நூலில் எனது வாழ்த்துரையும் இடம்பெற்றுள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.

இதோ...


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
(இமாம், மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார் மணலி, சென்னை

துணையாசிரியர்-இனிய திசைகள் மாதஇதழ்)

படி என்று கூறி கல்விக்கு முன்னுரிமை கொடுத்த படைப்பாளன் அல்லாஹ்வுக்கே புகழ் யாவும் உரித்தாகட்டும். அறியாமை இருளில் மூழ்கியிருந்தோரைக் கல்வி என்னும் அறிவொளியால் வெளிச்சம் காட்டி நேரிய பாதைக்கு வழிகாட்டிய அண்ணல் நபி (ஸல்) அவர்கள்மீதும் அவர்கள்தம் உற்ற தோழர்கள்மீதும் அவர்கள்தம் குடும்பத்தார்மீதும் அல்லாஹ்வின் பேரருளும் பெருங்கருணையும் என்றென்றும் பொழிவதாக.
மௌலானா மௌலவி பி.எம். கலீலுர் ரஹ்மான் மன்பஈ அவர்கள் என்னிடம் இந்நூலைக் கொடுத்து, பிழைகள் களைந்து நூலைச் செப்பனிட்டுத் தருவதோடு ஓர் அணிந்துரையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கேற்ப நான் இந்நூலை வாசிக்கத் தொடங்கினேன். ஹள்ரத் அவர்களின் வாழ்க்கை எவ்வளவு எளிய முறையில் இருந்துள்ளது; எவ்வளவு சிரமங்களையும் தொல்லைகளையும் இளவயதில் சந்தித்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. அவர்கள் நடத்திய பாடம் ஒருபுறமிருக்க, அவர்களின் வாழ்க்கையே ஒரு பாடமாகத் திகழ்வதைக் கண்டு மகிழ்ச்சி கொள்ளாமல் இருக்க முடியவில்லை. ஹள்ரத் அவர்களோடு எனக்குள்ள தொடர்பையும் சில நிகழ்வுகளையும் நான் இவ்விடத்தில் சொல்லியே ஆக வேண்டும்.

மார்க்கக் கல்வியைத் தேடிய பயணத்தில் மிகுந்த ஆர்வத்துடனும் ஆசையோடும் வீட்டிலிருந்து புறப்பட்டு, நான் தன்னந்தனியாக அல்பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் பல்கலைக் கழகத்தில் முதன்முதலாக நுழைந்து, அதன் முதல்வரைச் சந்தித்தேன். நான் சென்ற ஆண்டில்தான், கண்ணியத்திற்குரிய ஆசிரியத் தந்தை பீ.எஸ்.பீ. ஜைனுல் ஆபிதீன் ஹள்ரத் அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்றிருந்தார்கள். அந்த ஆண்டுதான் (1993) ‘அரபுக் கல்லூரி’ (குல்லிய்யா) என்பது பல்கலைக் கழகம்’ (ஜாமிஆ) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

யாருமில்லாமத் தனியாக வந்திருக்கிறாயே, உன்னை எப்படிச் சேர்த்துக்கொள்வது? போய், உன்னோட அத்தாவ கூட்டிட்டு வா!என்று கூற, முதல்வரின் அருகில் அமர்ந்திருந்த கண்ணியத்திற்குரிய ஆசிரியத் தந்தை மர்ஹூம் ஹெச். கமாலுத்தீன் ஹள்ரத் அவர்கள், “ஓதணும்னு ஆர்வத்தோட வந்திருக்கான். சேத்துக்கங்க ஹஸ்ரத்என்று கூறியதை ஏற்றுக்கொண்டு, கல்லூரியின் சட்ட விதிமுறைகளை என்னிடம் கூறியதையடுத்து, நான் சென்று தலைமுடி மழித்து, குளித்து, லுங்கி-ஜுப்பா அணிந்துகொண்டு, ஹள்ரத் அவர்களின் முன்னிலையில் போய் நின்றபோது, “இப்பதான்டா ஓதுற புள்ள மாதிரி இருக்கெஎன்று கூறினார்கள்.

பின்னர் அங்கேயே 1993 முதல் 2000ஆம் ஆண்டு வரை எட்டாண்டுகள் பயின்று பட்டம் பெற்று வெளியே வந்தேன். அந்த எட்டாண்டுகளில் கற்றுக்கொண்ட பாடங்களும் கலைகளும் ஏராளம். ஒன்பதாம் வகுப்பைப் பாதியில் நிறுத்தியிருந்த நான், மேல்வகுப்பு நண்பர்களின் வழிகாட்டுதலோடு, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதினேன். சென்னைப் பல்கலைக் கழகம் நடத்துகின்ற அஃப்ஸலுல் உலமா தேர்வை எழுதினேன். கடைசியில் இன்று நான் அரபியில் முனைவர் (பிஎச்.டி.) பட்டம் பெற்றுள்ளேன். எல்லாவற்றையும் நம் ஹள்ரத் அவர்கள் கூர்ந்து பார்த்துக்கொண்டே வந்துள்ளார்கள். பிறரிடமும் என்னைப் பற்றி விசாரித்துக்கொள்வார்கள்.

பாக்கியாத்தில் என்னைச் சேர்க்கத் தயங்கிய பீ.எஸ்.பீ. ஹள்ரத் அவர்களைச் சந்திக்க நேரிடும்போதெல்லாம், அங்கே நான் சேர்த்துக்கொள்ளப்பட்டதைப் பற்றி என்னிடமே நெகிழ்ச்சியுடன் கூறுவார்கள். நான் எழுதிய அல்லது தமிழாக்கம் செய்த நூல்களைப் பார்க்கும்போதெல்லாம், “அல்லாஹ் உன்னைக் கொண்டு வேலை வாங்குறான் அப்துல் ஹாதி; ரொம்ப சந்தோஷமா இருக்குஎன்று மகிழ்ச்சியுடன் கூறுவார்கள். நான் அண்மையில் நபிவழி மருத்துவம் எனும் அரபு-தமிழாக்க நூலைக் காட்டி, அணிந்துரை பெற்றபோதும், அதையே நெகிழ்ச்சியுடன் கூறிக் காட்டினார்கள். தயக்கத்தோடு என்னைச் சேர்த்த ஹள்ரத் அவர்களின் மனங்குளிரும் விதமாக நான் உருவானதேஅவர்களுக்குச் செய்யும் கைம்மாறாகக் கருதுகிறேன்.

ஒரு தடவை பாக்கியாத் மஸ்ஜிதில் ஃபஜ்ர் தொழுகையின்போது முன்சுன்னத் தொழுதுவிட்டு, இகாமத் வரை எஞ்சிய நேரத்தில் குர்ஆன் ஓதுவதற்காக, அதை என் இடக்கையால் எடுத்தபோது, அதைப் பின்னால் இருந்து பார்த்த ஹள்ரத் அவர்கள், ஒரு மாணவர் மூலம் என்னை அழைத்து, “குர்ஆனை எடுக்கும்போது வலக்கையால்தான் எடுக்க வேண்டும். அதுக்கு இஸ்ஸத் (மரியாதை) கொடுக்குறதில்லையா?” என்று கண்டிப்புடன் கூறி அனுப்பினார்கள். அன்று முதல் அப்பழக்கத்தை மாற்றிக்கொண்டேன். நான் இடக்கைப் பழக்கமுடையவன் என்பதால் என்னையறியாமல் இடக்கை முந்தும்போதெல்லாம் ஹள்ரத் அவர்களின் கண்டிப்பான முகம் என்முன் வந்து என்னை எச்சரித்துச் செல்லும்.


இந்நூலில் நம் ஹள்ரத் அவர்கள் தம் அனுபவங்களைப் பின்வரும் சந்ததியினருக்கும் மாணவர்களுக்கும் பாடமாகக் கூறியுள்ளார்கள் என்பதை நினைக்கும்போது ஹள்ரத் அவர்கள் எப்போதும் பாடம் நடத்திக்கொண்டே இருக்க விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. மக்களிடம் எப்படிப் பழக வேண்டும்; எப்படிப் பேச வேண்டும்; எப்படி அவர்களுக்காக துஆச் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இந்த நூலில் அவர்கள் கூறியுள்ளார்கள். இவையெல்லாம் கிடைக்கப்பெறாத அரிய தகவல்கள் என்பதில் ஐயமில்லை. தம் வாழ்க்கையின் உயர்வுக்கு உதவிய, வழிகாட்டிய உள்ளங்களை எவ்வாறு நினைத்துப் பார்க்க வேண்டுமென்பதையும் இந்நூல்மூலம் சொல்லித் தருகின்றார்கள்.  பல்வேறு நூல்களைப் புரட்டி, பல மணிநேரங்களை ஒதுக்கிப் பெற வேண்டிய அரிய தகவல்கள் பலவற்றை இந்நூலில் சேர்த்திருப்பது இதன் சிறப்பாகும்.

ஹள்ரத் அவர்களின் நேரடி மாணவர்கள் பலர் இருக்கும்போது, அவர்களுக்கு ஏற்படாத சிந்தனை, ஹள்ரத் அவர்களின் மாணவர் மௌலவி ஓ.எம். அப்துல் காதிர் பாகவி அவர்களின் மாணவராகிய மௌலவி கலீலுர் ரஹ்மானுக்கு வாய்த்திருப்பது மிக அரிய நற்பேறு ஆகும். ஹள்ரத் அவர்களின் சுயவரலாற்று நூலைப் படிக்கின்ற ஒவ்வொரு பாகவியும் ஹள்ரத் அவர்களுக்கும் இந்நூலைத் தொகுத்தவருக்கும் கண்டிப்பாக துஆச் செய்வார்கள் என்பது திண்ணம்.

ஆக, இந்நூல் பல்வேறு கோணங்களில் சிறந்துவிளங்குகிறது என்பதை எண்ணும்போது மனத்துக்குள் மகிழ்ச்சி பொங்கி எழுகிறது. இந்நூலைப் படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இது ஒரு பாடமாக அமைய 
வேண்டுமென்றும் இதைத் தொகுத்தவருக்கும் இதைப் படிக்கின்ற அனைவருக்கும் இதன்மூலம் நன்மை கிடைக்க வேண்டுமென்றும் அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன்.

அன்புடன்
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
===================================







செவ்வாய், 10 மார்ச், 2020

பணத்தை எடுத்து எங்கு பாதுகாப்பது?
--------------------------------------------------------

அண்மைக்காலமாக ஒரு செய்தி அதிகமாகப் பகிரப்படுகிறது. அதாவது “முஸ்லிம்கள் தம் சேமிப்புப் பணத்தை வங்கிகளிலிருந்து எடுத்து, அதன்மூலம் அரசுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்த வேண்டும். இது ஒரு வகையில் சாத்தியம் என்றாலும், மக்கள் மனதில் உள்ள ஒரே கேள்வி, அவசியத் தேவைக்காக இலட்சக்கணக்கில் பணம் வைத்திருப்போர் தம் பணத்தை எடுத்து எங்கு பாதுகாப்பது என்பதுதான். அதற்கான தீர்வைச் சொல்லாமலே, “பணத்தை எடுத்துவிடுங்கள் என்று கூறுவது சரியாகாது.

வட்டியின் அடிப்படையில் இயங்குகின்ற பொது வங்கிகள் பெரு நிறுவனங்களுக்கு வழங்கிய கடன் தொகை திரும்ப வராவிட்டால் திடீரெனத் திவாலாகிவிடும். திவாலானால் மக்களின் சேமிப்புப் பணம் முழுமையாக அவர்களுக்குத் திரும்பக் கிடைக்காது. அதில் ஒரு பகுதிதான் கிடைக்கும். அண்மையில் எஸ் பேங்க் திவாலானதாக அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம். இன்னும் சில வங்கிகள் திவாலாகும் நிலையில் உள்ளதாக மேல்மட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே மக்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

வட்டியிலிருந்து விடுதலை பெறவும் நம் பணத்திற்கான உரிய மதிப்பைப் பெறவும் மாற்றுத் திட்டத்தைக் கையாள வேண்டும். நாம் நம் சேமிப்புப் பணத்தின் மூலம் தங்க நாணயங்களை வாங்கி வைத்துக்கொள்ளலாம். அதன்மூலம் தங்கத்தின் விலை ஏற ஏற நம்முடைய பணமதிப்பும் கூடிக்கொண்டே போகும். இதனால்தான் விவரமறிந்த சிலர் தம் பணத்தின்மூலம் தங்க நகைகளையும் நாணயங்களையும் வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். பணத் தேவை ஏற்படும்போது தங்க நகைகளை விற்று, பணத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் முஸ்லிம்கள் வங்கி வட்டியிலிருந்து தவிர்ந்துகொள்வதோடு இலாபத்தையும் பெறுகின்றார்கள்.

மற்றொரு மாற்று ஏற்பாடும் உள்ளது. அதுதான் இஸ்லாமியக் கூட்டுறவு வங்கி. கூட்டுறவு வங்கிச் சட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் அது அனுமதிக்கப்பட்டு, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கியில் நாம் நம் பணத்தைச் சேமித்தால் நம் சேமிப்புப் பணத்திற்கு வட்டி கிடையாது. ஆனால் அதேநேரத்தில் இலாபப் பங்கு கிடைக்கும். அதாவது நாம் சேமிக்கின்ற பணம், பெரும் பெரும் தொழில்களில் முதலீடு செய்யப்பட்டு, அவற்றில் கிடைக்கின்ற இலாபத்தின் ஒரு பங்கு நமக்கு வழங்கப்படுகிறது. இதுதான் இஸ்லாமிய வங்கி செயல்படுகின்ற முறையாகும். வேறொரு வார்த்தையில் சொல்வதானால், நாம் அனைவரும் அந்த வங்கியின் பங்குதாரர். அந்த வங்கியே நேரடியாக ஈடுபடுகின்ற அல்லது தொழில்களில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கின்ற இலாபத்தின் ஒரு பகுதியை நமக்கு வழங்குகின்றனர்.

இஸ்லாமிய எதிரிகள் திட்டமிட்டு முஸ்லிம்களின் பொருளாதாரத்தைச் சிதைக்க எண்ணுகின்ற இவ்வேளையில் நாம் நம் பொருளாதாரத்தை வலுப்படுத்திக்கொள்வது மிக மிக அவசியமாகும். இஸ்லாமிய வங்கிகளில் சிறுசேமிப்புக் கணக்கைத் தொடங்கி நமக்கு நாமே தோள்கொடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.

வங்கி தொடர்பு எண்: ௦44 2855 5256

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி 


10 03 2020/ 14 07 1441
====================================================

சனி, 7 மார்ச், 2020

பொருளாதார வீழ்ச்சியின் பின்னணி என்ன?



-
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
--------------------------------------------
ஒரு நாட்டுக்கும் வீட்டுக்கும் பொருளாதாரப் பலம்தான் அடிப்படை. பொருளாதாரத்தை வீழ்த்திவிட்டால் சீரான நிர்வாகத்தைச் சிதைத்துவிடலாம். சீரான நிர்வாகம் சிதைந்துவிட்டால் சட்ட ஒழுங்கு கெட்டுவிடும். அதன்பின் குற்றங்கள் மலிந்துவிடும். பின்னர் மனிதனை மனிதன் அடித்து அல்லது பறித்துச் சாப்பிடுகிற அவல நிலை உருவாகும். பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த சிலபல நாடுகளின் இன்றைய நிலை இதுதான். இதுவெல்லாம் எதற்கு? குறிப்பிட்ட ஓரினத்தை அழிப்பதற்காகத்தான்.

ஆம்! எத்தனையோ விஷயங்களைத் திட்டமிட்டுச் செய்கிற அரசுக்கு, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழியா தெரியாது? பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக இருக்கின்ற வரை ஓரினத்தை அவ்வளவு எளிதாக அழித்துவிட முடியாது. பொருளாதாரம் என்பது மனிதனின் இரண்டு கால்கள் போன்றது. இரண்டு கால்கள் இருக்கின்ற வரை ஒருவன் தான் நாடிய இடத்திற்குச் சென்று கொண்டிருப்பான். ஒரு காலை உடைத்துப்போட்டுவிட்டால் ஒரே இடத்தில் முடங்கிப் போய்விடுவான். அதுபோலவே முஸ்லிம் இனத்தை அழிப்பதற்கு நாடு தழுவிய பொருளாதார நெருக்கடி வலிந்து உருவாக்கப்படுகிறது. பிறகு நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பதற்காக மக்களின் சேமிப்புப் பணத்தில் கைவைக்கப்படும். இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாகக் கைவைத்து, தனி மனிதப் பொருளாதாரம் கேள்விக்குறியாக்கப்படும். தனி மனிதப் பொருளாதாரமே சிதைந்து கொண்டிருக்கும்போது, அரசு யாரை அழிக்கிறது; யாருக்குத் துரோகம் செய்கிறது என்பது பற்றி யாருமே கவலைகொள்ள மாட்டார். அவரவர் தம்மைப் பற்றியும் தம் பசியைப் பற்றியுமே சிந்தித்துக்கொண்டிருப்பார்.

பொருளாதாரச் சிதைவை ஏற்படுத்த, புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்தது; ஜிஎஸ்டி வரி விதிப்பைச் செயல்படுத்தியது; சிறிய வங்கிகளைப் பெரிய வங்கிகளுடன் இணைத்தது ஆகிய மூன்று திட்டங்களைச் செயல்படுத்தியது மதவாத அரசு. புழக்கத்திலிருந்த ரூபாய் நோட்டுகளைத் திடீரென மதிப்பிழக்கச் செய்து அதன்மூலம் வங்கிக்குத் திரும்ப வராத பணத்தை அப்படியே மூட்டையாகக் கட்டிக்கொண்டது மத்திய அரசு. அது குறித்த கணக்கு எதுவும் வெளிவரவில்லை. கடைசியில், 97 சதவிகிதப் பணம் திரும்ப வந்துவிட்டது என்று அரசு அறிவித்தது. இது ஒரு தோல்வியான திட்டம் என்பது நிரூபணமாகிவிட்டதோடு, இதில் அரசுக்கு மிகப் பெரிய இழப்பும் ஏற்பட்டுள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறினார்கள். ஆனால் மதவாத அரசின் திட்டம் இதன்மூலம் வெற்றி பெற்றுள்ளது என்பதுதான் மற்றொரு கோணத்தின் பார்வை.

ஜிஎஸ்டி வரியை 28 சதவிகிதம் வரை உயர்த்தி, மிகப் பெரும் வரிச்சுமையை மக்கள்மீதும் நிறுவனங்கள்மீதும் சுமத்தியதால் பல்வேறு முதலாளிகள் தம் நிறுவனங்களை இழுத்துமூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சிறு குறு வியாபாரிகள் தம் தொழிலில் நலிவடைந்தனர். விறுவிறுப்பான வியாபாரம் இல்லாததால் பலர் சோர்ந்துபோயினர். பலர் தாம் செய்த தொழிலை நிறுத்திவிட்டு, மாதச் சம்பள வேலைக்குச் சென்றுவிட்டனர். மிகுந்த வரிச்சுமையால் மக்களின் கொடுக்கல் வாங்கலில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதிகப்பட்ச வரியால் செல்வர்கள் தம் பணத்தை அவ்வளவாகச் செலவழிக்க அஞ்சுகிறார்கள். இதுதான் இன்றைய பொருளாதார நிலை. இதெல்லாம் மதவாத அரசு எதிர்பார்த்ததுதான். மதவாதக் கூட்டத்தின் திட்டம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

தற்போது ஓர் அறிவிப்பு வந்துள்ளது. அதாவது வங்கிகள் திவாலானால் முதலீட்டாளர்களுக்கும் சிறுசேமிப்பாளர்களுக்கும் அதிகப்பட்சமாக ஐந்து இலட்சம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தற்போது எல்லா மக்களிடையேயும் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டிச் சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தை நஷ்டம்என்ற பெயரில் அரசே எடுத்துக்கொள்ளப்போகிறதே என்ற கவலை வங்கியில் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு, நிரந்தர வைப்புக் கணக்கு தொடங்கியுள்ள ஒவ்வொருவரையும் கலக்கமடையச் செய்துள்ளது. இந்த அறிவிப்பு பரவலானால் வங்கியில் பணம் போட்டவர்கள் தம் பணத்தை எடுக்கத் தொடங்குவார்கள். அதனால் உண்மையிலேயே வங்கியில் பண இருப்பு குறையத் தொடங்கிவிடும். அதன் பொருளாதாரப் பரிவர்த்தனைகளில் சுணக்கமும் முடக்கமும் ஏற்படும். அதன்பிறகுதான் உண்மையிலேயே வங்கி திவாலாகும் நிலை உண்டாகும். இதுவும் மதவாத அரசின் திட்டமே.

திவாலான பின்னர், வங்கியில் தம் பணத்தைச் சேமிப்பில் வைத்திருந்தவர்களுக்கு அவர்களின் தொகைக்கேற்ப ஒரு சிறுதொகையை வழங்கத் தொடங்குவார்கள். கோடிக்கணக்கில் வைத்திருந்தவர்களுக்குச் சில இலட்சங்களும், இலட்சக்கணக்கில் வைத்திருந்தவர்களுக்குச் சில ஆயிரங்களும், ஆயிரக்கணக்கில் வைத்திருந்தவர்களுக்கு சில நூறுகளும் திருப்பி வழங்கப்படும். இப்போது ஒரு கேள்வி எழலாம். ஐந்து இலட்சம் அல்லவா சொன்னார்கள். நீங்கள் சில இலட்சங்கள் என்கிறீர்களே? ஆம். அதிகப்பட்சமாக ஐந்து இலட்சம்என்றுதான் சொல்லியுள்ளார்கள். எனவே அவர்கள் குறைந்தபட்சமாக எவ்வளவு தந்தாலும் அதை வாங்கிக்கொண்டு வாய்மூடி இருந்துவிட வேண்டியதுதான். எதிர்த்துப் பேசினால் தேசத் துரோகியாகச் சித்திரிக்கப்படுவீர்கள்.

இதெல்லாம் எதற்காக? நாட்டு மக்கள் யாவரும் தத்தம் வேலையைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்துவிட வேண்டுமென்பதற்காகத்தான். பிறர் தாக்கப்படும்போது, அழிக்கப்படும்போது என் இனம், என் சாதி என்று யாரும் முன்வரமாட்டார். ஒவ்வொருவரும் தத்தம் பசியையே முக்கியமாகக் கருதுவார்களே தவிர பிறரைப் பற்றிய சிந்தனையோ பொதுநலனோ அறவே இருக்காது. இப்போதே நகரங்களில் மக்கள் பலர் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். இப்போது சிலருக்காவது பொதுநலன் குறித்த அக்கறை உள்ளது. நாட்டில் மிகுந்த வறுமை வாட்டுகின்றபோது, யாரும் யாரைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். அத்தகைய சூழலை உருவாக்குவதுதான் ஆளும் பி.ஜே.பி. அரசின் கனவுத்திட்டம். அத்தகைய சூழல் உருவாகிவிட்டால், குறிப்பிட்ட இனத்தை அழிப்பது மிக எளிது.

முஸ்லிம்களுக்குப் பிரச்சனை என்றால் பிற சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் குரல் கொடுக்கின்றார்கள். இது இன்றைய நிலை. ஆனால் இன்னும் சில ஆண்டுகள் கடந்தபின், பொருளாதாரம் அதல பாதாளத்திற்குச் சென்று எங்கும் வறுமை தாண்டவமாடும்போது அவரவர் தத்தம் வேலையைப் பார்த்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். நமக்காகக் குரல் கொடுக்க யாரும் இருக்க மாட்டார். இதை நீங்கள் கற்பனை என்று நினைக்கலாம். இதை நாம் புரிந்துகொள்ள, இருபத்தைந்து வருடங்களுக்கு முந்தைய நிலையைச் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். முஸ்லிம்என்ற இனவேறுபாடு அன்று இருந்ததா? சமயக் காழ்ப்புணர்வு இருந்ததா? முஸ்லிம்களுக்கு வீடு வாடகைக்கு விடமாட்டோம் என்று யாராவது சொன்னாரா? முஸ்லிம்களை தீவிரவாதிஎன்ற கண்ணோட்டத்தோடு யாராவது பார்த்தாரா? ‘முஸ்லிம்என்ற கண்ணியமும் மரியாதையும்தானே அன்று இருந்தது? இன்று அப்படியே தலைகீழாக எல்லாம் நடக்கிறதா, இல்லையா? இன்னும் சில ஆண்டுகளுக்குப்பின் சூழ்நிலை இதைவிட மோசமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. பாய்என்ற மரியாதை இன்று ஓரளவுக்கேனும் உள்ளது. இருக்கின்ற கொஞ்ச மரியாதையையும் அழிப்பதற்கான வெறுப்புப் பிரச்சாரமே இன்று தீவிரமாகச் செய்யப்படுகிறது. மீண்டும் மீண்டும் முஸ்லிம்களுக்கெதிரான காட்சிகள் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட எல்லாவித ஊடகங்களிலும் பரப்பப்படுகின்றன. அதன் விளைவை நாம் இன்று அனுபவிக்கிறோமா இல்லையா?

பொருளாதாரச் சீரழிவின் மற்றொரு பக்கம், பலருக்கு வேலை இல்லை என்பதே. அதாவது ஏற்கெனவே அவர்கள் வேலை செய்துகொண்டிருந்தவர்கள். அதுபோக ஏற்கெனவே வேலை இல்லாப் பட்டதாரிகள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மட்டும் பல இலட்சங்கள் ஆகும். அவர்களோடு இவர்களும் சேர்ந்துகொண்டால் நாட்டின் நிலைமை என்னவாகும்? திருட்டு, கொலை, கொள்ளை இவையே மிகைக்கும். அது குறித்து ஆட்சியாளர்களுக்கு அக்கறை உண்டா? ஏன் இருக்கப்போகிறது? எல்லாவற்றையும் அவர்கள் திட்டமிட்டுத்தானே செய்துகொண்டிருக்கிறார்கள்?


மேலும் விவசாயிகளை எந்தளவுக்கு நசுக்க முடியுமோ அந்த அளவிற்கு நசுக்கிக்கொண்டே இருக்கிறார்கள். விவசாய நிலங்களில் பெட்ரோல் குழாய்களை அமைத்தல், ஈத்தேன், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் முதலானவற்றை எடுப்பதற்காக விவசாய நிலங்களை அழித்தல் உள்ளிட்ட வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களின் திட்டம் என்ன? உணவுப் பஞ்சத்தை வலிந்து ஏற்படுத்துவதுதான். உற்பத்தியைக் குறைத்தால் உணவுப் பஞ்சம் தானாக ஏற்படப் போகிறது. பின்னர் அரிசி, கோதுமை, பருப்பு முதலானவற்றை அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து ரேஷன் அடிப்படையில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப வழங்குவார்கள். மக்கள் முண்டியடித்துக்கொண்டு வரிசையில் நின்று வாங்குவார்கள்.
ஆகவே இந்தியப் பொருளாதாரம் மீண்டும் நல்ல நிலைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு வீணானதாகும். ஏனென்றால் இந்த நிலையை அவர்கள் திட்டமிட்டுத்தான் உருவாக்கியுள்ளார்கள். ஒரு குறிப்பிட்ட இன மக்களை அழிப்பதற்கான அடிப்படைகளுள் மிக முக்கியமானதுதான் பொருளாதாரச் சீரழிவு. இந்தச் சீரழிவு இன்னும் அதிகமாகுமே தவிர குறையாது. அதனால் இனிவரும் காலங்களில் மனிதர்கள் சமய நல்லிணக்கத்தோடு வாழ்வது அரிதாகும். இன்றைய நிலையில் முஸ்லிம்கள்மீது பிற சமுதாய மக்களின் வெறுப்பு ஆங்காங்கே காணப்படுவதை நாம் உணர்கிறோம். இது இன்னும் ஐந்தாண்டுகள் கழித்து, மேலும் அதிகமாகுமே தவிர குறையாது.

மனிதன் அமைதியாக வாழ்வதற்கான எல்லாவித வழிகளையும் இஸ்லாம் சொல்லித்தருகிறது. இஸ்லாமிய மார்க்கம் சொன்ன முறைப்படி பொருளாதாரத் திட்டங்களை அமைத்தால் நம் நாடு மட்டுமல்ல, உலகப் பொருளாதாரமே முன்னேற்றம் காணும். அதனை ஏற்றுக்கொள்ளும் விசாலமான மனப்பான்மை பெரும்பாலான மனிதர்களுக்கு இல்லாததால் இன்று எல்லோருமே சிரமப்படுகின்றார்கள்; பல்வேறு நாடுகள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறாத நிலை உருவாகியுள்ளது; வட்டிப் பொருளாதாரத்தில் சிக்கித் தவிக்கிறது; அதிலிருந்து மீள வழி தெரியாமல் திணறுகிறது. உலக வங்கியில் கடன்பட்ட நாடுகளாகப் பல்வேறு நாடுகள் உள்ளன. அதில் இந்தியாவின் கடன் மட்டும் பல இலட்சம் கோடிகள் உள்ளன. இதற்கான தீர்வுகளையெல்லாம் இந்த மதவாத அரசு தேடாது. மாறாக மக்களை எப்படியெல்லாம் நெருக்கடிக்குள்ளாக்கலாம்; அதன்பின்னர் முஸ்லிம்களை எப்படியெல்லாம் அழிக்கலாம் என்று திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது.

ஆனால் மதவாத அரசின் திட்டங்களெல்லாம் தவிடு பொடியாக வேண்டுமானால் நாம் அனைவரும் ஒரே எண்ணம்கொண்டவர்களாக மாறவேண்டும். நிம்மதியான வாழ்க்கையை அல்லாஹ் நமக்கு மீண்டும் தருவான். நாம் எப்போதும் இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழ்வோம்என்ற எண்ணம் மனதில் எப்போதும் இருக்க வேண்டும். ஏனென்றால் எண்ணம்போல் வாழ்வுஎன்பதை நாம் அறிவோம். மேலும் நாம் ஒவ்வொருவரும் மனஉறுதியுடன் அல்லாஹ்விடம், “இறைவா! இந்த மதவாத அரசை ஆட்சியிலிருந்து அகற்றி, எங்களுக்கு நிம்மதியான வாழ்வைத் தா!என்று கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் பிரார்த்தனை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மிக விரைவிலேயே இந்த அநீதியாளர்களின் ஆட்சி அகலும் என்பது திண்ணம்.
=========================================











இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே