சனி, 25 மார்ச், 2017

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்)

தாருல் உலூம் அஷ்ரபிய்யா அரபுக்கல்லூரி வெளியிட்ட பல்சுவை இதழில் எனது கட்டுரை. இதோ உங்கள் பார்வைக்கு ...

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்)

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
துணை ஆசிரியர்: இனிய திசைகள் மாதஇதழ்
இமாம், மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார், மணலி, சென்னை-68

ஜூன் திங்கள் ஐந்தாம் நாள் (1896) கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயீல்  (ரஹ்) திருநெல்வேலியில் உள்ள பேட்டையில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் மியாகான் இராவுத்தர். திருவாங்கூர் அரசக் குடும்பத்தினருக்குத் துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முஸ்லிம் சமயத் தலைவர் (மவ்லவி) ஆகவும் இருந்தார். காயிதே மில்லத் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். அவரின் தாயாரே அரபு மொழியையும், திருக்குர்ஆனையும்  அவருக்குக் கற்றுக்கொடுத்தார். இவர் மனைவியின் பெயர் ஜமால் கமீதாபீவி. இவரின் ஒரே மகன் ஜமால் முகம்மது மியாகான் ஆவார். 

ஒரு தமிழனாக, ஒரு முஸ்லிமாக, ஓர் இந்தியனாக, ஒரு தலைவனாக, மனிதநேயம் உள்ள மாந்தராக எப்படி வாழ வேண்டும் என்ற இலக்கணங்களைத் தமக்குத் தாமே வகுத்துக்கொண்டு, அந்த இலக்கணங்களை விட்டு விலகாத இலக்கியமாகத் தாமே வாழ்ந்துகாட்டிய சிறப்பிற்குரியவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள்.

பிரிட்டிஷ் இந்தியா

தமது பி.ஏ. பொதுத்தேர்வை எழுதாமல் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் பங்கு கொண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினார். இந்தியாவில் முஸ்லிம்களுக்காக 1906-இல் நவாப் சலீம் முல்லாகான் அகில இந்திய முஸ்லிம் லீக் என்ற கட்சியைத் தொடங்கினார். அவருக்குப் பின்னர் முகமது அலீ ஜின்னா, அதனை நடத்தி வந்தார், ஜின்னாவுக்கும் இந்தியப் பிரிவினைக்கும் முஸ்லிம் லீகின் பெரும் தலைவர்களுள் ஒன்றாக இருந்த இவர், ஆற்றிய உதவி அளப்பரிது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

சுதந்திர இந்தியா

1947இல் பாகிஸ்தான் உருவானபோது அங்கு புலம் பெயராமல் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இந்தியாவில் தங்கிவிட்டதால், அவர்களுக்காகக் கட்சிப் பெயரில் இருந்த அகிலஎன்பதை நீக்கிவிட்டு 1949இல் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்என்று மாற்றினார் காயிதே மில்லத். இதன் முதல் மாநாடு சென்னையில் உள்ள இராஜாஜி மண்டபத்தில் நடந்தது. காயிதே மில்லத் நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சித் தலைவராக இருந்தார்.

வகித்த பொறுப்புகள்

தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக, 1948ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராகபழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக, டெல்லி மேல் சபை உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக இப்படிப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

இந்தியர்களைக் காத்த காவலர்

1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாள்களில், பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் அகில இந்திய முஸ்லிம் லீக் கவுன்சிலின் கடைசிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுத்த முடிவுகளின்படி கட்சி இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு ஒரு பொறுப்பாளரும், இந்தியாவுக்கு ஒரு பொறுப்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இரண்டு பொறுப்பாளர்களும் அவரவர் நாட்டில் மூன்று மாதங்களுக்குள்ளாகக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்மானித்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. பாகிஸ்தான் பொறுப்பாளராக லியாகத் அலீகான் அவர்களும், இந்தியாவுக்கான பொறுப்பாளராக  கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இந்தியாவில் உள்ள நான்கு கோடி முஸ்லிம்களைப் பாதுகாக்கின்ற பெரும் பொறுப்பு ஒரு தமிழரின் தோள்களில், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் தோள்களில் அன்று கராச்சியில் சுமத்தப்பட்டது. காயிதே மில்லத் இந்திய முஸ்லிம்களைக் காப்பாற்றும் பணியை, அன்று, கராச்சியிலேயே தொடங்கிவிட்டார்.
ஆம், கூட்டம் முடிந்ததும் பாகிஸ்தான் பிரதமர் அனைவருக்கும் ஒரு விருந்தளித்தார். விருந்தின் முடிவில் லியாகத் அலீகான் காயிதே மில்லத்திடம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும், என்ன உதவி என்றாலும் நாங்கள் செய்யத் தயார் என்று கூறினார். அப்போது தெள்ளத் தெளிவாக, ஆணித்தரமாக காயிதே மில்லத் சொன்னார்:

நீங்கள் ஒரு நாட்டினர். நாங்கள் வேறு நாட்டினர். எங்கள் நாட்டு முஸ்லிம்களின் நன்மை தீமைகளை நாங்களே பார்த்துக் கொள்வோம். அதில் நீங்கள் தலையிட வேண்டியதில்லை. எங்கள் நாட்டு முஸ்லிம்களுக்கு நீங்கள் ஏதேனும் நன்மை செய்ய விரும்பினால், உங்கள் நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்கு (இந்து, சீக்கியர், கிறிஸ்தவர்) ஒரு துயரமும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுபோதும்!எவ்வளவு ஆழமும், அர்த்தமும் பொதிந்த வேண்டுகோள் அது! இந்தியா திரும்பிய காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைக் கூட்டினார். அதில்தான் அவர் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தாய்மொழிப்பற்று மிக்கவர்

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களுள் ஒருவராக 1948ஆம் ஆண்டு அவர் நியமிக்கப்பட்டார். 14.9.1949 அன்று அரசியல் நிர்ணய சபை கூடி இந்தியாவின் தேசிய மொழி பற்றி விவாதித்தபோது இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கும் தகுதி தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு என ஆணித்தரமாக எடுத்துரைத்தார். வரலாற்றின் பொன்னேட்டில் அன்று அவர் பொறித்துச் சென்ற வைர வரிகள் இவை:

ஒரு மொழி இந்திய மொழியாக மட்டும் இருந்தால் போதாது. அம்மொழி இந்நாட்டின் பழமையான மொழியாகவும் இருக்க வேண்டும். அத்தகைய மொழியையே இந்நாட்டின் தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்து இங்கே முன்வைக்கப்பட்டது.

அக்கருத்தை ஏற்று அரசியல் நிர்ணய சபை தேசிய மொழி பற்றிய முடிவை எடுக்குமானால், ஓர் உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்பக் காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதைபொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது எனது தாய்மொழி என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன். அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எளிமை

காயிதே மில்லத் (ரஹ்) அவர்கள் இறைவனுக்கு அஞ்சி, ஓர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். அவர் அரசியலில் இருந்தும் பிற அரசியல்வாதிகளுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார். அதற்குச் சான்றாக அவரது வாழ்க்கையைப் புரட்டிப் பார்ப்போம்.  
குரோம்பேட்டையில் ஒரு சிறிய வீடு. வந்தவர்களை அமரவைக்கப் போதுமான இடவசதி இருக்காது. குரோம்பேட்டையில் இருந்து மின்சாரத் தொடரியில் புறப்பட்டு, கடற்கரை இரயில் நிலையத்தில் இறங்கி, ரிக்ஷாவில் ஏறி மண்ணடி கட்சி அலுவலகம் செல்வார். அவருக்கு ஒரு மகிழுந்தை (கார்) வாங்கித் தரப் பலரும் முயன்றனர். அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு முறை மலேசியா சென்று ஓர் அன்பர் வீட்டில் தங்கியிருந்தபோது, அவர் காயிதே மில்லத்திடம் ஓர் உதவி கேட்டார். ஐயா என்னிடம் வெளிநாட்டு மகிழுந்து உள்ளது. அதைத் தங்கள் வீட்டில் நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். நான் சென்னை வரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும் என்பதால் இந்த உதவியைக் கோருகிறேன்என்று கேட்டார். அதற்கு என் வீட்டில் மகிழுந்தை நிறுத்துவதற்கான கொட்டகை இல்லையே என்று கூறினார் காயிதே மில்லத். மகிழுந்தை நிறுத்துவதற்கான கொட்டகையை நான் கட்டித் தருகிறேன்என்று தெரிவித்தார் மலேசிய அன்பர். நேரடியாக மகிழுந்தைப் பரிசளித்தால் காயிதே மில்லத் வாங்கிக்கொள்ள மறுத்துவிடுவார் என்பதற்காகவே அவர் சுற்றி வளைத்துப் பேசுகிறார் என்பதைப் புரிந்துகொண்ட காயிதே மில்லத் கண்டிப்புடன் அவரது வேண்டுகோளை நிராகரித்து விட்டார்.

கேரளாவில் ஒருமுறை அங்குள்ள கட்சிக்காரர்கள் ஒரு மகிழுந்தை வாங்கி, சாவியைக் காயிதே மில்லத் அவர்களின் கையிலேயே கொடுத்து விட்டார்கள். ஆனால் காயிதே மில்லத் அங்குள்ள இஸ்லாமியக் கல்லூரி ஒன்றின் பயன்பாட்டிற்கு அந்த மகிழுந்தை அங்கேயே கொடுத்துவிட்டார்.

இத்தகைய எளிமையான வாழ்க்கையை மேற்கொண்ட காயிதே மில்லத் அவர்களுக்குக் கிடைத்த மக்கள் பரிசு என்ன தெரியுமா? இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் பங்கேற்ற காயிதே மில்லத் அவர்கள், ஓர் உலகச் சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். 1962, 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் கேரள மாநிலம் மஞ்சேரி தொகுதியில் நின்று தொடர்ந்து மூன்று முறை வென்று காட்டினார். தேர்தலின்போது ஒருமுறை கூட மஞ்சேரி தொகுதிக்குத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் செல்லவே இல்லை.

இறையச்சம்

ஒருமுறை கட்சி அலுவலகத்துக்கு வந்த காயிதே மில்லத் அவர்கள் அங்கிருந்த அலுவலகப் பொறுப்பாளரிடம் ஓர் உறையைக் கொடுத்து பையில் இருந்து இரண்டு அணாவையும் கொடுத்து உரிய தபால் தலைகளை ஒட்டி அஞ்சலில் சேர்த்து விடுமாறு கூறி இருக்கிறார். உடனே அலுவலகப் பொறுப்பாளர் இதனை அலுவலகச் செலவிலேயே அனுப்பலாமே எனக் கேட்டிருக்கிறார். அதற்குக் காயிதே மில்லத் அவர்கள், “இது என் சகோதரருக்கு எழுதுகின்ற கடிதம். எனவே அலுவலகப் பணத்தை இதற்குச் செலவழிக்கக் கூடாதுஎன்று சொல்லியிருக்கிறார்.  அலுவலகப் பொறுப்பாளர் உடனே, “தலைவரின் சகோதரரும் கட்சிப் பொறுப்பில் இருப்பவர்தாமே, எனவே கட்சிப் பணத்தைச் செலவு செய்வதில் என்ன தவறுஎனக் கேட்டிருக்கிறார். உடனே காயிதே மில்லத் அவர்கள், “இந்தக் கடிதத்தில் நான் கட்சி விஷயங்களை எழுதவில்லை. குடும்ப விஷயங்களை எழுதி இருக்கிறேன். எனவே கட்சிப் பணத்தை இதற்குச் செலவழிக்கக் கூடாது. நான் கொடுத்த இரண்டு அணாவில் அஞ்சல் தலைகளை வாங்கி, ஒட்டி அனுப்பி விடுங்கள்எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார்.

இதைப் படிக்கும்போது எனக்கு இரண்டாம் உமர் எனும் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை நெஞ்சில் நிழலாடுகிறது. அவர்கள் இரண்டு விளக்குகள் வைத்திருந்தார்கள்.  அலுவலகப் பணியில் ஈடுபடும்போது அலுவலகப் பணத்தில் வாங்கிய விளக்கைப் பற்றவைத்துக் கொள்வார்கள்.  பின்னர் தம்முடைய சொந்தப் பணியில் ஈடுபடும்போது தம் சொந்தப் பணத்தில் வாங்கிய விளக்கைப் பற்றவைத்துக் கொள்வார்கள். இது அவர்களின் இறையச்சத்துடன்கூடிய வாழ்க்கைக்குத் தக்க சான்றாக உள்ளது. இதுபோலவே  காயிதே மில்லத் அவர்களின் வாழ்வும் அமைந்திருந்தது என நினைக்கையில் உள்ளம் நெகிழ்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் வந்த நான்கு கலீஃபாக்கள் வாழ்ந்து காட்டிய நேர்மையான எளிமையான வாழ்க்கையைத் தாமும் வாழ முயன்று வெற்றி கண்டவர் காயிதே மில்லத் அவர்கள்.

மறைவு

காயிதே மில்லத்முஹம்மது இஸ்மாயில் ஸாகிபுக்கு 1972 மார்ச் 25 ஆம் தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குடல் புண் நோய்க்காக அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. 1972, ஏப்ரல் 5 நள்ளிரவு 1.15 மணிக்கு காயிதே மில்லத் இஸ்மாயில் ஸாகிப் (ரஹ்) மரணமடைந்தார். அவரது உடல் அன்று காலை பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கு வசதியாக இராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரிக்குக் கொண்டு வரப்பட்டது. திராவிடக் கழகத் தலைவர் ஈ.வெ.ரா.பெரியார் உட்படப் பல அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் புதுக்கல்லூரியில் உள்ள மஸ்ஜிதுக்குக் காயிதே மில்லத்தின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு ஜனாஸாத் தொழுகை நடைபெற்றது. பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் போனவர்கள் எண்ணிக்கை இலட்சத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. திருவல்லிக்கேணியில் உள்ள வாலாஜா மஸ்ஜிதில் காயிதே மில்லத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நினைவுச் சின்னங்கள்

காயிதே மில்லத்தை நினைவுகூருமுகமாக, அவரது மறைவுக்குப்பின் தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு காயிதே மில்லத் நாகப்பட்டினம் மாவட்டம்என்று பெயர் சூட்டியது. பின்னர் 1996இல் அரசு பேருந்துக் கழகங்கள், மாவட்டங்களிலிருந்து தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட பின்னர் அதன் பெயர் நாகப்பட்டினம் மாவட்டம் என்று மாற்றப்பட்டு விட்டது. 2003ஆம் ஆண்டு அவர் நினைவாக தமிழக அரசு ஒரு மணிமண்டபத்தைக் கட்டியுள்ளது. காயிதே மில்லத்தின் பெயர் தற்போது தமிழகத்தில் பல கல்வி நிறுவனங்களுக்குச் சூட்டப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள காயிதே மில்லத் அரசினர் பெண்கள் கல்லூரி, சென்னை-மேடவாக்கத்தில் அமைந்துள்ள காயிதே மில்லத் கலைக் கல்லூரி ஆகியவை அவற்றுள் சில. காயிதே மில்லத் நினைவாக சென்னையில் காயிதே மில்லத் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, காயிதே மில்லத் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் காயிதே மில்லத்தை நினைவூட்டும் நினைவுச் சின்னங்களாகத் திகழ்கின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையைப் பின்பற்றி, மிக எளிமையாக வாழ்ந்து காட்டிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் போன்ற தலைசிறந்த, இறையச்சமுடைய இன்னொரு தலைவர் இச்சமுதாயத்திற்குக் கிடைப்பது அரிதிலும் அரிதாகும். அவர் சென்ற அரசியல் பாதையில் இன்றைய தலைவர்கள் செல்ல நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
=============








ஞாயிறு, 19 மார்ச், 2017

யார் நல்லவர்?


-முனைவர் மௌலவி நூ அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

உலகத்தில் நல்லவரைக் காண்பதே அரிதாக உள்ளது என்று ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டிருக்கின்றார். ஒவ்வொருவரும்,  "நான் நல்லவனா?' என்று கேட்டுக்கொண்டு, தம்மைச் சீர்திருத்திக்கொண்டால் எல்லோரும் நல்லவர்களாக மாறிவிடுவார்கள். ஒவ்வொருவரும் பிறந்தபோது நல்லவராகவே பிறந்தார். அவரவர் பெற்றோரின் வளர்ப்பு, சூழ்நிலை, நட்பு-இவையே ஒருவர் தொடர்ந்து நல்லவராக நீடிப்பதற்கும் தீயவராக மாறுவதற்கும் அடிப்படைக் காரணம் ஆகும்.

ஒவ்வொருவரும் நல்லவரே. தீயவராக இருப்பது தற்காலிக நிகழ்வுதான். உலகிலுள்ள எல்லோருமே நல்லவராகத் திகழ வாய்ப்புண்டு. ஆனால் உலகிலுள்ள எல்லோருமே தீயவராக மாற வாய்ப்பில்லை. ஏனென்றால் மனிதன் இயல்பிலேயே நல்லவனாகத்தான் படைக்கப்பட்டுள்ளான். தீயவனாக மாறுவது தற்காலிகமானதுதான். ஆகவே ஒவ்வொருவரும் நல்லவராக மாற நூறு சதவிகித வாய்ப்புண்டு. ஆனால் அதற்கு அவர் தம்மை முழுமையாக மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும். அவ்வளவுதான்.

ஒருவன் நல்லவனாகவும் தீயவனாகவும் மாற பெற்றோரின் வளர்ப்பு முக்கியப் பங்காற்றுகிறது.  பெற்றோர் தம் பிள்ளைகளை வளர்க்கின்றபோது நல்ல பண்புகள், நல்ல பழக்க வழக்கங்கள், நீதிபோதனைகள், அறநெறிகள் முதலானவற்றைக் கற்பிக்க வேண்டும். பாடுபட்டு வளர்க்கின்ற பெற்றோரின் பிள்ளைகள் நல்லவர்களாகவே நீடித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய நல்ல பிள்ளைகள்தாம் இச்சமுதாயத்திற்குத் தேவை.
பெற்றோர் தம் பிள்ளைகளுக்குத் தவறான பழக்க வழக்கங்களைச் சொல்லிக் கொடுத்தால் அல்லது பெற்றோரே கெட்டவர்களாக இருந்தால் அவர்களின் கெட்ட பழக்கம் அவர்கள்தம் பிள்ளைகளிடமும் ஒட்டிக்கொள்ளும். அதன்பின் பொய்பேசுவதும், வாக்கு மாற்றம் செய்வதும், பிறரை ஏமாற்றுவதும், அநியாயம் செய்வதும் அவர்களின் பழக்கமாக மாறிவிடும். அவர்கள் தீயவர்கள் எனும் பட்டியலில் இடம்பிடித்துவிடுவார்கள். 

இரண்டாவது ஒருவன் நல்லவனாக நீடிக்கவும் தீயவனாக மாறிப்போகவும் சூழ்நிலை முக்கியப் பங்காற்றுகிறது. "மனிதன் ஒரு சூழ்நிலைக் கைதி'' என்று கூறுவார்கள். என்னதான் பெற்றோர் நல்லவர்களாக இருந்து நல்ல நல்ல பழக்கங்களை ஊட்டி வளர்த்தாலும் அவனைச் சுற்றியுள்ள சூழ்நிலை அவனைக் கெட்டவனாக மாற்றிவிடுகிறது. ஒருவன் இலஞ்சம் வாங்குவதும், பொய் சொல்வதும், தீய பழக்கங்களுக்கு அடிமையாவதையும் சூழ்நிலைதான் தீர்மானிக்கிறது. சூழ்நிலைதான்  ஒருவனைக் கொலை செய்யத் தூண்டுகிறது. சூழ்நிலைதான் ஒருவனை வன்புணர்வுக்குத் தூண்டுகிறது. எனவே ஒருவன் தன் சூழ்நிலையை நல்லதாக ஆக்கிக்கொள்ள முனைய வேண்டும்.  தவறு செய்யத் தூண்டும் சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ளாமல் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.   அது குறித்து நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள் ஏராளமாக உள்ளன.

இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறியதாவது: "ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்தப் பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இல்லாமல் பயணம் செய்ய வேண்டாம்'' என்று  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 3006)

ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனிமையாய் இருக்கும்போது தவறு செய்யத் தூண்டும் சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்கிறான். ஒரு பெண் தனிமையில் பயணம் செய்யும்போது தவறு செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்கிறாள் அல்லது பிறருக்கு அத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுக்கிறாள்.
சூழ்நிலைதான் ஓர் ஆணையோ ஒரு பெண்ணையோ தவறு செய்யத் தூண்டுகிறது. எனவே அத்தகைய சூழ்நிலையைத் தவிர்த்துக்கொள்ள நம்மால் இயன்ற முயற்சிகளைச் செய்ய வேண்டும்.      அதைத்தான் நபி (ஸல்) அவர்கள் முன்னெச்சரிக்கை செய்கின்றார்கள்.

மூன்றாவது ஒரு மனிதனின் நட்பு அவனை நல்லவனாகவும் தீயவனாகவும் மாற்றியமைக்கும். ஒரு மனிதனின் நல்ல நட்பு அவனை நல்லவனாகவும் தீய நட்பு அவனைத் தீயவனாகவும் மாற்றிவிடும். எனவே நட்பைத் தேர்வு செய்யும்போது நல்ல நட்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நாமே தவறு செய்தாலும் தட்டிக் கேட்கின்ற, அதைத் தடுத்து நிறுத்துகின்ற நட்பாக இருந்தால் நாம் நல்லவனாக நீடித்திருக்க உதவும். இல்லையேல் நாம் தீயவனாக மாறிவிடுவோம். இது குறித்த வழிகாட்டுதலும் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளில் உண்டு.

"நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம்; அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக்கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ உமது ஆடையையோ எரித்துவிடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக்கொள்வீர்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 2101)

நண்பனின் குணம் ஒருவனுக்குப் பிரதிபலிப்பை ஏற்படுத்தும் என்பதை நயமாகக் கூறியுள்ளார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். எனவே நண்பன் நல்லவனாக இருந்தால் அவனோடு சேர்பவனும் நல்லவனாக நீடிப்பான். நண்பன் கெட்டவனாக இருந்தால் அவனோடு சேர்பவனும் கெட்டவனாக மாறுவான். இது இயல்பு. நண்பனிடம் பல்வேறு கெட்ட பழக்கங்கள் இருந்தால் அவற்றுள் சிலவற்றையாவது அவனோடு சேர்பவன் கடைப்பிடிக்கத் தொடங்கிவிடுவான். இதுதான் நட்பின்மூலம் ஏற்படும் மாற்றம். எனவே நாம் சேரும் நண்பர்கள் நல்லவர்களாக இருந்தால்தான் நாம் நல்லவர்களாக நீடித்திருக்க முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால்தான் "உன் நண்பனைப் பற்றிச் சொல். நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்'' என்று தெரிவித்தார் ஓர் அறிஞர்.

இதனால்தான் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: "இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள்.'' (9: 119) உண்மையாளர்களுடன் தொடர்புவைத்துக்கொண்டால் அவர்களின் பழக்கம் நமக்கு வரும். கெட்டவர்களோடு தொடர்புவைத்துக்கொண்டால் கெட்ட பழக்கம் நம்மைத் தொற்றிக்கொள்ளும். இதுதான் நட்பின் இயல்பு. அதேநேரத்தில் நல்லவன் கெட்டவனாக மாறலாம்; கெட்டவன் நல்லவனாக மாறலாம்; நண்பன் எதிரியாக மாறலாம்; எதிரி நண்பனாக மாறலாம். எதுவும் நிரந்தரமல்ல. ஏனென்றால் நல்லவனைக் கெட்டவனாகவும் கெட்டவனை நல்லவனாகவும் மாற்றும் ஆற்றல் சூழ்நிலைக்கு உண்டு என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உணர்த்துகின்றார்கள்.

"உன் நண்பனையும் ஓர் அளவோடு நேசி. ஒரு நாள் அவனும் உன் பகைவனாகலாம். உன் பகைவனையும் ஓர் அளவோடு பகைத்துக்கொள். அவனும் ஒரு நாள் உன் நண்பனாகலாம்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 1920)

நாம் நல்லவர்களாக நீடித்திருக்க வேண்டுமானால் நல்லவர்களோடு சேர்ந்துகொள்ள வேண்டும்; நல்லவர்களோடு பழக வேண்டும்; நல்லவர்களை அடிக்கடிச் சந்திக்க வேண்டும்; அவர்களோடு கலந்துரையாட வேண்டும்; அவர்களோடு சேர்ந்தே இருக்க வேண்டும். இது குறித்து மூதுரை எனும் நூலில் அவ்வை மூதாட்டி கூறியுள்ள பாடலைக் காணலாம்.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே;
நலம்மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.

ஆக, நல்லவர்களைக் காண்பதும் நல்லவர்களின் அறிவுரையைக் கேட்பதும் அவர்கள் கூறிய அறிவுரைகளைப் பிறருக்கு எடுத்துக் கூறுவதும் அவரோடு சேர்ந்து இருப்பதும் நாம் நல்லவர்களாக இருக்கத் தேவையான வழிமுறைகள் ஆகும்.
அதேநேரத்தில்  ஒருவன் தீயவர்களைக் காண்பதும், தீயவர்களின் சொல் கேட்டு அதன்படி நடப்பதும் அவர்கள் கூறுவதைப் பிறருக்குச் சொல்வதும் அவர்களோடு சேர்ந்து இருப்பதும் தீயவனாக மாறுவதற்கான அடிப்படைக் காரணங்கள் ஆகும்.

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது-எனும் மூதுரைப் பாடல் தெளிவாக விளக்குகிறது.

பிறரைப் பார்த்து, இவன் நல்லவனா, கெட்டவனா என்று சிந்திப்பதைவிட, நான் நல்லவனா என்று கேட்டு நம்மைச் சீர்திருத்திக்கொண்டால் நம்மைச் சுற்றியுள்ளோரும் நல்லவர்களாக நமக்குத் தென்படுவார்கள். நாம் கெட்டவர்களாக இருந்துகொண்டு நம்மைச் சுற்றி நல்லவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்தால் அது ஒருபோதும் நடக்காது. ஏனென்றால் நல்லவர்களைச் சுற்றி நல்லவர்கள் இருப்பதும் தீயவர்களைச் சுற்றித் தீயவர்கள் இருப்பதும் இயல்பு. நாம் நல்லவர்களாக இருந்து, நம்மைச் சுற்றிக் கெட்டவர்களாக இருந்தால்  நாம்  நல்லவர்களை நாடிச் செல்ல வேண்டும்.

கெட்டவனாக இருத்தல் என்பது தற்காலிகமானதுதான் என்று சொன்னேன். ஆம். அதனால்தான்  பாவம் செய்யும் இயல்பிலேயே படைக்கப்பட்டுள்ள மனிதன் பாவங்களைச் செய்துவிட்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகின்றபோது அவனை மன்னித்துத் தூய்மைப்படுத்தி விடுகின்றான்.
"ஆதமுடைய பிள்ளைகள் யாவரும் பாவம் செய்யக்கூடியவர்தாம். பாவம் செய்வோருள் சிறந்தோர் (அப்பாவத்திலிருந்து) பாவமீட்சி பெறுபவர்களே ஆவர்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா: 4241)

பாவமீட்சி பெற்றுத் தூய்மையான நிலையில் நல்லவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற நமக்கு ஒரு கவலை ஏற்படுகிறது. நாம் வாழ்ந்து முடித்தபின் நம்மைக் குறித்து மக்கள் என்ன கூறுவார்களோ என்ற கவலைதான் அது. ஆனால் நாம் நல்லவர்களாக வாழ்ந்திருந்தாலும் கெட்டவர்களாக வாழ்ந்திருந்தாலும் இச்சமுதாயமே நமக்குச் சாட்சி சொல்லும்.
நபி (ஸல்) அவர்கள் இருந்த இடத்தின் வழியாகப் பிரேதம் (ஜனாஸா) ஒன்று கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அதைக் குறித்து நல்லவிதமாகப் (புகழ்ந்து) பேசினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், "உறுதியாகி விட்டது'' என்று கூறினார்கள். பிறகு, மற்றொரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அது குறித்து (இகழ்ந்து) கெட்டவிதமாகப் பேசினார்கள். நபி (ஸல்) அவர்கள், "உறுதியாகி விட்டது'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கüடம், "அல்லாஹ்வின் தூதரே! அதற்கும் "உறுதியாகி விட்டது' என்று கூறினீர்கள்; இதற்கும் "உறுதியாகிவிட்டது' என்று கூறினீர்களே (இரண்டிற்குமே இவ்வாறு கூறக் காரணமென்ன?)'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "இது சமுதாயத்தின் சாட்சியமாகும். இறைநம்பிக்கை கொண்டோர் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவர்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 2642)

எனவே நாம் இறந்தபிறகு நம்மைக் குறித்து மக்கள் நல்லவிதமாகப் பேசவேண்டுமென்றால்  வாழுகின்றபோது நல்லவர்களாக, நான்கு பேருக்குப் பயனுள்ளவர்களாக வாழ வேண்டும். அதுதான் நாம் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தமாகும்.
=========================




புதன், 1 மார்ச், 2017

இனிய திசைகள் பிப்ரவரி 2017



​பிப். '2017 இதழைப் படிக்க அட்டைப் படத்தின்மீது “CLICK" செய்க....
 தங்கள் வசதிக்காக PDF இணைப்பும் உள்ளது. 
அன்புகூர்ந்து இனிய திசைகளைப்
படித்தும் தங்கள் உற்றார், உறவினர்,
நண்பர்கள் குழாத்திற்கு அனுப்பிப் பரப்பியும்
தங்களது மேலான சிந்தனைகளைத்
தெரிவித்தும் உதவுக....
நன்றி,
வஸ்ஸலாம்,

Inline image 1

--