வியாழன், 28 ஜூலை, 2022

சதுரங்க விளையாட்டு



சதுரங்க விளையாட்டு விளையாடுவது கூடுமா, கூடாதா என்ற வினா முஸ்லிம்கள் மத்தியில் எழுவது இயல்பானது. சதுரங்க விளையாட்டு மூவகை உள்ளது. அதை வைத்துத்தான் அது கூடுமா, கூடாதா என்று சொல்ல முடியும்.
1. பந்தயம் கட்டி விளையாடுதல். அதாவது நான் வென்றால் நீ எனக்கு நூறு ரூபாய் தர வேண்டும். நீ வென்றால் நான் உனக்கு நூறு ரூபாய் தருவேன் என்று இருவரோ, இரு குழுவினரோ பணம் கட்டி விளையாடுதல். இது முற்றிலும் ஹராம்-தடைசெய்யப்பட்டதாகும். ஏனெனில் இது சூதாட்டம் ஆகும்.

2. கடமைகளை மறந்து விளையாடுதல். அதாவது தொழுகையை விட்டுவிடுதல், பெற்றோருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்யாதிருத்தல், மனைவி-பிள்ளைகளுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாதிருத்தல், பொய் சொல்லுதல், பொய்ச் சத்தியம் செய்தல் முதலானவை. அறிஞர்களின் ஏகோபித்த முடிவின்படி இதுவும் ஹராம்-தடைசெய்யப்பட்டதாகும்.

இறைநம்பிக்கை கொண்டோரே! நிச்சயமாக மது, சூதாட்டம், சிலை வணக்கம், அம்பெறிந்து குறிபார்த்தல் ஆகியவை ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க செயல்களுள் உள்ளவையாகும். ஆகவே, இவற்றிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.
மதுவாலும் சூதாட்டத்தாலும் உங்கள் மத்தியில் பகைமையையும் பொறாமையையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே, அவற்றிலிருந்து) நீங்கள் விலகிக்கொள்வீர்களா? (5: 90-91)
ஷைத்தான் மனிதர்கள் மத்தியில் சூதாட்டத்தின்மூலம் பகைமையை வளர்க்க முனைகின்றான். எனவேதான் அல்லாஹ் அதனைத் தடுக்கின்றான்.

3. மேற்கண்ட இரண்டும் இல்லாமல், பொழுதுபோக்கிற்காக விளையாடுதல். இது கூடுமா கூடாதா என்பதில் அறிஞர்கள் மத்தியில் கருத்துவேறுபாடு நிலவுகிறது. இதுவும் ஹராம்-தடைசெய்யப்பட்டதுதான் என்பதே அபூஹனீஃபா ரஹிமஹுல்லாஹ், அஹ்மத் பின் ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் ஆகியோரின் கூற்றாகும்.
இவ்வாறு விளையாடிக்கொண்டிருந்த ஒரு குழுவினரை அலீ ரளியல்லாஹு அன்ஹு கடந்துசென்றபோது, “நீங்கள் அமர்ந்து (வெகுநேரமாக) விளையாடிக்கொண்டிருக்கிற இந்தச் சிலைகள் (காய்கள்) என்ன?” என்று கேட்டார்கள். இதைக் கேட்டபோது அவர்களின் முகத்தில் ஒருவித வெறுப்புணர்வு வெளிப்பட்டது.


இது மக்ரூஹ் என்பதே இமாம் ஷாஃபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கூற்றாகும்.
சஈத் பின் ஜுபைர், சஈத் பின் அல்முஸய்யப், தாபியீன்களுள் ஒரு குழுவினர் பொழுது போக்கிற்காக இந்த விளையாட்டை விளையாடியுள்ளதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஆக இதில் மூவகை உள்ளது. இரண்டு வகைகள் தடைசெய்யப்பட்டவை. கடைசி வகை வெறுக்கத்தக்கது. இருப்பினும் அறிவுசார் பயன் கருதிச் சற்று நேரம் விளையாடுவதில் தவறில்லை என்றே தெரிகிறது. ஆனால் ‘விளையாட்டு வினையாகும்’ என்ற பழமொழியும் நம்மை எச்சரிக்கிறது. எனவே நாமும் எச்சரிக்கை உணர்வோடு இதனை எதிர்கொள்வோம்.

மேலும் இஸ்லாமிய மார்க்கம்
வீண்விளையாட்டுகளைத் தடைசெய்கிற அதேநேரத்தில், நீச்சல், அம்பெறிந்து பயிற்சி பெறுதல், ஈட்டி எய்தல், ஓட்டப்பயிற்சி பெறுதல், குதிரையேற்றம் முதலிய விளையாட்டுகளை மேற்கொள்ளுமாறு ஊக்குவிக்கிறது என்பதை இந்நேரத்தில் நம் நினைவில் பதிவுசெய்துகொள்வோம்.


அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி
28 07 2022
28 12 1443
=======================



 
x

வெள்ளி, 22 ஜூலை, 2022