புதன், 11 ஜூலை, 2018

ஆணும் பெண்ணும்...


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

மனித இனத்தை ஆண்-பெண் என அல்லாஹ் ஈரினமாகப் படைத்தான். அந்த ஆணும் பெண்ணும் ஒன்றாகச் சேர்ந்து வாழ சில நிபந்தனைகள் விதித்தான். அதுவரை அவ்விருவரும் ஒருவரையொருவர்  சந்திக்கத் தடைவிதித்தான். அந்தத் தடையை மனிதன் உடைத்தான். அதனால் பல்வேறு கேடுகளும் தீமைகளும் உண்டாயின; உண்டாகிக்கொண்டே இருக்கின்றன. 
ஆணும் பெண்ணும் ஒன்றாகக் கலந்து இறைவனை வணங்குவதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதிக்காதபோது பிற செயல்களில் அவ்விருவரும் ஒன்றிணைவதை எவ்வாறு அனுமதிக்க முடியும்? சேர்ந்து படித்தல், சேர்ந்து பணியாற்றுதல், சேர்ந்து பழகுதல் என அனுமதிக்கின்றபோது அங்கு அவ்விருவருக்கிடையே தூய எண்ணம் களையப்பட்டு, தீய எண்ணத்தைத் தூண்டுகின்ற ஷைத்தான் வந்துவிடுகின்றான். இறைவன் விதித்த நிபந்தனையை மீறிச் சந்தித்ததால் புவியில் பற்பல கேடுகள் பிறக்கத் தொடங்கின.

இன்றைய நவீன உலகில் “ஆணுக்குப் பெண் சமம்” என்ற மாயையான வாக்கியத்திற்குள் அடிமைப்பட்டுக் கிடக்கின்றது பெண் சமூகம். அதனால் ஓர் ஆண் எங்கெல்லாம் செல்கின்றானோ அங்கெல்லாம் அவளும் செல்கின்றாள். அவன் எதையெல்லாம் செய்கின்றானோ அதையெல்லாம் அவளும் செய்கின்றாள். இதனால் அவள் தன்னை ஆணுக்குச் சமமாகிவிட்டதாகக் கருதிக்கொள்கின்றாள். 

ஆணும் பெண்ணும் ஒன்றாகக் கலப்பதால்-படித்தல், பணியாற்றுதல், பழகுதல்- தீமை நடந்துவிடுமா? எல்லோருமா அப்படிச் செய்துவிடுவார்கள்? என்று சிலர் கேட்கலாம். எல்லோரும்  தகாத செயலைச் செய்யமாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். ஆனால் யாருமே தவறிழைக்க மாட்டார்கள் என்று கூற முடியாது. நூறு சதவிகிதத்தில் தொண்ணூறு பேர் நல்லவர்கள்தாம். பத்து சதவிகிதம் பேரே கெட்டவர்கள்; தவறிழைக்கின்றார்கள். அந்தப் பத்து சதவிகிதத் தவறுகளும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதே அல்லாஹ்வின் நாட்டம். எனவேதான் அவன் செவ்வனே இயற்றியுள்ளான் சட்டம். 

பத்து சதவிகித ஆணும் பெண்ணும் தவறு செய்வதைத் தடுக்கவும் எஞ்சியுள்ள தொண்ணூறு சதவிகிதத்தினர் தவறு செய்யத் துணிவு பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவுமே அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மனித சமுதாயத்திற்கான சட்டத்தை அமைத்துத் தந்துள்ளார்கள்.  அதேநேரத்தில் அந்தப் பத்து சதவிகிதத் தவறுகள் எல்லா ஆண்களையும் பெண்களையும் பாதிக்கும் என்பது உண்மை.  ஏனென்றால் அச்சமும் பயமும் எல்லோருக்கும் உண்டு. சமுதாயத்தில் நடைபெறும் முறைகேடான ஒரு நிகழ்வுகூட எல்லோரின் உள்ளத்திலும் அச்சத்தை ஏற்படுத்தலாம்; அவர்களின் நிம்மதியைக் கெடுக்கலாம். தொண்ணூறு சதவிகித மக்களின் நல்வாழ்வைக் காக்கவே பத்து சதவிகிதத் தவறுகள்கூட நிகழாவண்ணம் இறைவன் சட்டத்தை வகுத்துள்ளான்.

“(பெண்களே!) நீங்கள் உங்கள் இல்லங்களில் தங்கியிருங்கள். முந்தைய அறியாமைக்காலப் பெண்கள் (சுற்றித் திரிந்ததைப்) போல் சுற்றித் திரியாதீர்கள்” (33: 33) என்று அல்லாஹ் கூறுகின்றான்.  
“ஒரு பெண் மறைக்கப்பட வேண்டியவள் ஆவாள். அவள் வெளியே புறப்பட்டுவிட்டால் ஷைத்தான் அவளை ஏறெடுத்துப் பார்க்க வைக்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 1093)

முந்தைய அறியாமைக் காலப் பெண்கள் வீதிகளில் சுற்றித் திரிந்ததைப்போல் இறைநம்பிக்கைகொண்ட பெண்கள் சுற்றித் திரியக்கூடாது என்பது இறைக்கட்டளை. ஒரு பெண் வீட்டைவிட்டுப் புறப்பட்டால் ஷைத்தான் அவளை வரவேற்று, அவளைப் பிற ஆடவர் பார்க்குமாறு தூண்டுகிறான் என்பது இறைத்தூதரின் எச்சரிக்கை. இவ்விரண்டும் நம்முன் இருக்கும்போது பெண்கள் வெளியில் செல்ல, ஒன்றாகப் படிக்க, பணியாற்ற, பழக எவ்வாறு அனுமதிக்க முடியும்? ஆனாலும்  வகுக்கப்பட்ட விதிகளை மீறி மனித சமுதாயம் செயல்படத் துணிந்துவிட்டதால் பெண்சீண்டல், வன்புணர்வு, கர்ப்பம், கொலை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதனால் சிலர் அந்த மன உளைச்சலோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வேறு சிலர் மக்களின் பழிச் சொல்லுக்குப் பயந்து தற்கொலை செய்துகொள்கின்றனர். 

நிம்மதியான வாழ்க்கைக்குத்தான் இஸ்லாம் வழிகாட்டுகிறது. அதனை நாம் அனுபவிக்க வேண்டுமெனில் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டிய வழியில் பயணித்தால்தான் இயலும். இல்லையேல் பல தொல்லைகளைச் சந்திக்க நேரிடும். அதனால் நாமும் நிம்மதியிழந்து நம்மைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களும் நிம்மதியிழக்க நேரிடும். 

பெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழ அனுமதிக்கும் அதேநேரத்தில் அவள் மறைமுகமாக இருந்து, தன் வீட்டினுள் உள்அறைக்குள் தொழுவதே சாலச் சிறந்தது என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதைத் தற்கால இளைஞிகள் நினைவுகூர வேண்டும்.

பெண்கள் ஆண்களோடு சேரும்போது முதன்முதலில் பேசுவதற்கு வாய்ப்பு ஏற்படாவிட்டாலும் பார்த்துக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுவிடும். அப்பார்வைதான் பாவத்திற்கான தொடக்கப்புள்ளி. பின்னர் படிப்படியாக வளர்ந்து அப்பார்வையானது பேச்சுக்கு வழியமைத்து, அப்பேச்சு இருவருக்கும் இனிமையூட்டி, தடைசெய்யப்பட்ட விபச்சாரத்திற்கு வழிவகுக்கும். இவர்தாம் பாவம் செய்வார், அவர் செய்ய மாட்டார் எனப் பிரித்தறிந்து பழகவோ பேசவோ முடியாது. ஏனென்றால் எம்மனிதனும் பாவம் செய்யலாம் என்ற இயல்போடும் துணிவோடும்தான் அவன் படைக்கப்பட்டுள்ளான். 
உயர்பதவியில் இருப்போர்கூடச் சிலவேளை சில அசிங்கமான செயல்களைச் செய்யலாம்; உயர் கல்வி பயின்றவர், இறைவனுக்கு நெருக்கமானவர், இறைவனை நோக்கி அழைப்பவர் என யாரும் அசிங்கமான செயல்களில் ஈடுபடலாம்; பெண்களோடு தவறாக நடந்துகொள்ளலாம். எனவே இவர் செய்வார், இவர் செய்யமாட்டார் என வரையறுத்துக் கூற முடியாது. 

ஏனென்றால் மனிதன் சூழ்நிலைக் கைதி. பாவம் செய்வதற்கான சூழல் அமையாத வரை அனைவரும் நல்லவரே. பாவம் செய்வதற்கான சூழ்நிலை அமைந்துவிட்டால் யாரையும் நம்ப முடியாது. ஆகவேதான் பாவம் செய்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி அதனுள் மனிதனை விழவைக்க ஷைத்தான் எல்லா விதத்திலும் முயன்றுகொண்டிருக்கிறான். 
“பெண்கள் ஷைத்தானின் வலைகள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆகவே ஷைத்தான் பெண்கள்  எனும் வலையை அங்கிங்கெனாதபடி புவியெங்கும் பரப்பிவைத்துள்ளான். அதில் மனிதன் சிக்கிக்கொள்கின்றான். எனவே பெண்களிடம் எச்சரிக்கையாக இருப்பதும் பெண்ணோடு தனிமையில்  சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளாமல் இருப்பதுமே ஆண்களுக்கான பாதுகாப்பு. 

பெண்கள் கல்லூரிக்குப் படிக்கச் சென்றால், படிக்கத்தானே செல்கின்றார்கள் அதில் எந்த ஆபத்தும் இல்லை என்று கருதிக்கொண்டிருந்தார்கள். தற்போது ஒரு கல்லூரிப் பேராசிரியை தம் மாணவிகளுக்கு போன் செய்து, அதிக மதிப்பெண் பெற வேண்டுமானால் நான் சொன்னபடி நீங்கள் நடந்துகொள்ள வேண்டும் எனக் கூறி, சில உயர்அதிகாரிகளின் ஆசைக்கிணங்குமாறு அழைத்துள்ளார். இச்செய்தி வெளியே பரவி, படிக்க வைக்கும் பெற்றோருக்குப் பீதியைக் கிளப்பியுள்ளது. ஒழுக்கமும் வெட்க உணர்வும் கொண்ட பெண்கள் அந்த அசிங்கமான செயலிலிருந்து தூர ஓடிவிடுவார்கள். அதேநேரத்தில் வெட்க உணர்வற்றவர்களாகவும், உயர் பதவிக்கு ஆசைப்படுவோராகவும் இருந்தால் அந்தப் பேராசிரியையின் ஆணைக்கேற்ப அதிகாரிகளின் ஆசைக்கிணங்க உடன்படுவார்கள். ஆக ஷைத்தான் எல்லா இடங்களிலும் பெண்கள் எனும் வலையை விரித்து வைத்துள்ளான். 

பெண்கள் பணியாற்றும் இடங்களானாலும் ஆண்கள் பணியாற்றும் இடங்களானாலும் ஈரினத்தாரின் பதவி உயர்வுக்கும் சம்பள உயர்வுக்கும் பெண்களின் கற்பு விலைபேசப்படுவதைக் காணமுடிகின்றது.  சில இடங்களில் பெண்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களைத் தம் அற்ப ஆசைக்கு இணங்க வைக்கின்ற கயவர்கள் இருக்கின்றார்கள். கணவனை நம்பிப் பயன் இல்லை; பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள  ‘இது ஒன்றே வழி’ எனத் தவறான முடிவெடுத்துத் தம் கற்பை அடகுவைக்கின்ற பாதகிகளும் உண்டு.  
இங்கே “ஆண்கள்தாம் வேட்டைக்காரர்கள்; பெண்கள் வேட்டையாடப்படுபவர்கள்” என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட முடியாது. ஈரினத்திலும் வேட்டைக்காரர்களும் உண்டு; வேட்டையாடப்படுவோரும் உண்டு. அதற்கான சான்று திருக்குர்ஆனில் உண்டு. 

பெண்கள் சிலர் அலுவலகங்களில் தமக்குரிய சலுகை வழங்கப்படவில்லை என்பதற்காக அல்லது பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்பதற்காக அங்குள்ள மேலாளரைப் பழிவாங்கும் எண்ணத்தில், தன்னிடம் அவர் தவறாக நடக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி, அதன்மூலம் அவர்களை மிரட்டி, காரியத்தைச் சாதித்துக்கொள்வோரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். எனவே ஈரினத்தாரும் தம் எதிர்பாலினத்தாரிடம் எச்சரிக்கையுணர்வோடு இருந்துகொள்வது நல்லது.

ஒரு வேட்டைக்காரன் ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்ததைக் கண்ட ஒரு ஞானி அந்த வேட்டைக்காரனிடம், “நீ வேட்டையாடப்படாமல் கவனமாக இருந்துகொள்” என்று எச்சரித்தார். ஆம்! ஓர் ஆணிடம் ஒரு பெண் மாட்டிக்கொள்வது ஆபத்து என்றால், ஒரு பெண்ணிடம் ஓர் ஆண் மாட்டிக்கொள்வது பேராபத்தாகும். இவ்விஷயத்தில் ஆண் பலவீனன்; பெண்ணோ பலசாலி என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.     
“(பெண்களைத் திருப்திப்படுத்துவதற்காக எதையும் செய்யத் துணிகின்ற) ஆண்களுக்கு (அந்த)ப் பெண்களைவிட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் என(து வாழ்நாளு)க்குப் பிறகு நான் விட்டுச் செல்லவில்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 5096)

பெண்கள் ஆண்களுக்கு எவ்வளவு பெரிய துன்பமும் தொல்லையுமாக உள்ளார்கள் என்பதை இந்நபிமொழி உணர்த்துகிறது. எனவே  பெண்கள் ஆண்களிடம் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டுமோ அதைவிட ஒருபடி மேலாக ஆண்கள் பெண்களிடம் எச்சரிக்கையுணர்வோடு இருக்க வேண்டும். அதுவே அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் நமக்குப் போதிக்கும் போதனையாகும். 
=====================================








புதன், 4 ஜூலை, 2018

ஆவிகள் உலகம்



முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
(துணை ஆசிரியர்-இனிய திசைகள் மாத இதழ், இமாம்-மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார், மணலி, சென்னை)

எதற்கெடுத்தாலும் "ஆதாரம் இருக்கிறதா?'' என்று கேட்பதுதான் இன்றைய தலைமுறையினரின் போக்கு. எல்லாவற்றிற்கும் நேரடியாக ஆதாரம் காட்ட முடியாது. அதேநேரத்தில் திருக்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள் (ஹதீஸ்) ஆகியவற்றில் நேரடியாக இல்லாவிட்டாலும் அதன் விரிவுரைகள், விளக்கவுரைகள் ஆகியவற்றிலிருந்து பிறந்தவைதாம் இன்றுள்ள கல்விகள் யாவும். அந்த  அடிப்படையில்தான் ஆவிகள் குறித்த செய்திகள் அமையும். ஆவிகள் என்பது ஜின், ஷைத்தான்களையே குறிக்கும். இந்த ஆவிகள் மனிதர்களுக்கு எவ்வாறெல்லாம் தொல்லைகள் கொடுக்கின்றன; அவற்றிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான வழிமுறைகள் என்ன என்பதைத் தெளிவுபடக் கூறுவதே இக்கட்டுரையின்  நோக்கம். நம்புவதும் செயல்படுத்துவதும் அவரவர் விருப்பம்.  

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு ஷைத்தான் தனித்தனியே சாட்டப்பட்டுள்ளான். அந்த ஷைத்தான் அந்த மனிதரைத் தீமை செய்யுமாறு தூண்டிக்கொண்டே இருப்பான். அவனுடைய போக்கிலேயே  செல்பவர்கள்தாம் தம்மைத்தாமே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாதவர்கள்; அவர்கள்தாம் கெட்டவர்கள்-பாவிகள். அவர்களையே அவன் மது குடித்தல், சூதாடுதல், திருடுதல், கொலை செய்தல், விபச்சாரம் செய்தல் ஆகிய பஞ்ச மாபாவங்களைச் செய்ய வைக்கிறான். இவ்வளவையும் செய்ய வைத்து, இறுதியில் அவனை நரகத்தில் கொண்டுபோய்ச்  சேர்த்துவிடுகின்றான்.
அதற்கு முரணாக, ஷைத்தான் தூண்டுகின்ற தீமைகளைச் செய்யாமல் அவனுடைய போக்கில் செல்லாமல் அவனுக்கு எதிராகச் செயல்படுபவர்கள்தாம் நல்லவர்கள். அவர்கள் தம்மைப் படைத்த இறைவனை அஞ்சி வாழ்கின்றார்கள். ஒவ்வொரு தடவையும் அவன் அவர்களைத் தூண்டும்போதெல்லாம் அவனுக்கு எதிராகச் செயல்பட்டு அவனுக்குக் கட்டுப்படாமல் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டே இருக்கின்றார்கள். இறுதியில் அவன் அவர்களிடம் தோற்றுப்போய்விடுகின்றான். அவர்கள் இறைவனை அஞ்சிய நல்லடியார்களாக வாழ்ந்து மறைகின்றார்கள். மறுமையில் சொர்க்கத்தில் நுழைவார்கள்.

 ஆயிஷா (ரளி) அறிவித்துள்ளார்கள்: ஒரு நாள் இரவு நபி (ஸல்) அவர்கள் என்னருகில் காணவில்லை. பிறகு அவர்கள், அருகில் (தொழுது) துஆ செய்து கொண்டிருந்ததைக் கண்டேன். பிறகு நான், அவர்கள் குளித்திருக்கின்றார்களா என்று தெரிந்துகொள்வதற்காக என் விரல்களால் அவர்களுடைய தலைமுடியைத் தடவினேன். (அவர்கள் தம் மனைவிகளுள் யாரேனும் ஒருவரிடம் இரகசியமாகச் சென்று வந்திருப்பார்களோ என்ற சந்தேகத்தோடு அவ்வாறு செய்தேன்.) அப்போது நபியவர்கள் "நிச்சயமாக உன்னுடைய (சந்தேகம் எனும்) ஷைத்தான் உன்னிடம் வந்துவிட்டான்'' என்று சொன்னார்கள்.
அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் ஷைத்தான் இல்லையோ?'' என்று கேட்டேன்.  "ஆம்! (இருக்கிறான்). ஆனால், அல்லாஹ் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். ஏனென்றால், அவன் எனக்குப் பணிந்து (முஸ்லிமாகி) விட்டான்'' என்று கூறினார்கள். (நூல்: நஸாயீ: 3898)

ஒவ்வோர் ஆளுக்கும் தனித்தனி ஷைத்தான் நியமிக்கப்பட்டுள்ளான் என்பதும் அவரவரின் பண்பிற்கேற்ப அவன் மாறிவிடுகின்றான் என்பதும் மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்குகிறது.

ஒரு மனிதன் இறந்தபின் அவனுடைய உயிர் அடங்கிவிடுகிறது. அவனுள் ஆட்கொண்டிருந்த ஷைத்தான் அவனைவிட்டு விலகிக்கொள்கின்றான். அவன் பிற மனிதர்களிடமுள்ள ஷைத்தானோடு தோழமை கொள்கிறான். அந்த மனிதன் எதையும் ஓதாத, இறைவனைத் தொழாத மனிதனாக இருந்தால் அவனை அவன் ஆட்கொண்டுவிடுகின்றான். கெட்ட மனிதர்களைக் கெட்ட மனிதர்களுக்குள் குடியிருந்த ஷைத்தான்கள் ஆக்கிரமித்துக்கொள்கின்றார்கள். காலப் போக்கில் அவன் மிகக் கெட்டவனாகிவிடுகின்றான். ஷைத்தான்கள் ஒன்றுகூடி அம்மனிதனைக் கெடுக்க முயல்வார்கள். அந்த ஷைத்தான்கள் அவனைத் தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆட்டுவிப்பார்கள். உடல் நிலையைப் பாதிப்படையச் செய்வார்கள். அவனுக்குள் இருந்துகொண்டு பேயாடுவார்கள்; கத்துவார்கள்; சேட்டை செய்வார்கள். இவை அனைத்தும் அவனுள் புகுந்துகொண்ட ஷைத்தான்களின் வேலையாகும்.

இதிலிருந்து பாதுகாப்புத் தேடுவதற்கான வழிமுறையை அல்லாஹ் தன்னுடைய தூதருக்குத் திருக்குர்ஆனில் கற்றுக்கொடுக்கின்றான்:
"என் இறைவா! (பாவமான செயல்களைச் செய்யும்படித்    தூண்டும்) ஷைத்தானுடைய தூண்டுதல்களிலிருந்து என்னைக் காப்பாற்றும்படி நான் உன்னிடம் கோருகிறேன். என் இறைவா! ஷைத்தான் என்னிடம் வராமலிருக்கவும் நான் உன்னிடம் கோருகிறேன்'' என்று (நபியே!) நீங்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருங்கள். (23: 97-98) இந்த இறைவசனங்களின் அரபி மூலத்தை ஓதிக்கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களும் சில முக்கியமான பாதுகாப்பு வசனங்களையும் துஆக்களையும் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். அவற்றுள் ஒன்று:  அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹி, வ இகாபிஹி வ மின் ஷர்ரி இபாதிஹி, வ மின் ஹமஸாத்திஷ் ஷயாத்தீனி வ அன் யஹ்ளுரூன். (நூல்: முஸ்னது அஹ்மத்: 15978)

(பொருள்: அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு அவனுடைய சினத்திலிருந்தும் அவனுடைய தண்டனையிலிருந்தும் அவனுடைய அடியார்களின் தீங்கிலிருந்தும் ஷைத்தான்களின் ஊசலாட்டங்களிலிருந்தும் அந்த ஷைத்தான்கள் என்னிடம் நெருங்குவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்.)   
  
நல்ல மனிதருக்குள்ளும் ஷைத்தான்  புகுந்துகொண்டு குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு என்பதை உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரளி) அவர்கள் தம்மைக் குறித்து அறிவித்துள்ள கீழ்க்கண்ட நபிமொழி தெரிவிக்கிறது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தாயிஃப் நகருக்கு ஆளுநராக அனுப்பிவைத்தபோது (அங்கு) எனக்குத் தொழுகையில் ஏதோ ஒன்று குறுக்கிடத்தொடங்கியது. நான் தொழுவது (எத்தனை, என்ன) என்பதைக்கூட என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. இதை நான் உணர்ந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பயணித்துச் சென்றேன். "(என்னைக் கண்ட அவர்கள்) நீர் இப்னு அபில்ஆஸ்தானே? '' என்று வினவினார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதரே!  எனக்குத் தொழுகையில் ஏதோ ஒன்று குறுக்கிடுகிறது. நான் தொழுவது (எத்தனை, என்ன) என்பதைக்கூட என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை'' என்று கூறினேன். 

அதற்கவர்கள், "அதுதான் ஷைத்தான். நெருங்கிவாரீர்'' என்று கூறினார்கள். எனவே நான் அவர்களிடம் நெருங்கிச் சென்று என் கால்களின் நுனிப்பகுதி (தரையில் படும் வகை)யில் அமர்ந்தேன்.  அப்போது அவர்கள்  தம் கையால் என் நெஞ்சை அடித்தார்கள். என் வாயினுள் (உமிழ்நீர் கலந்த காற்றை) ஊதினார்கள். "அல்லாஹ்வின் எதிரியே வெளியேறு' என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை செய்தார்கள். பின்னர், "நீர் உம்முடைய நல்லறங்களைச் செய்வீர்'' என்று கூறினார்கள்.
உஸ்மான் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: திண்ணமாக, அதன்பின் என்னை (எதுவும்) குழப்பத்தில் ஆழ்த்தவில்லை என்று நான் எண்ணுகிறேன். (நூல்: இப்னுமாஜா: 3538)

இந்நபிமொழியில் "அல்லாஹ்வின் எதிரியே வெளியேறு'' எனும் நபிகளாரின் வார்த்தை கூர்ந்து கவனிக்கத்தக்கது. ஷைத்தான் உள்ளே புகுந்து கொண்டதால்தான் "வெளியேறு' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதையும் இவ்வாறு ஷைத்தான்கள் மனிதருக்குள் நுழைந்துகொள்ள வாய்ப்புண்டு என்பதையும் இதன்மூலம் நாம் அறியலாம்.

பின்வரும் நபிமொழியும் உள்ளே புகுந்துகொண்ட ஷைத்தானை விரட்டுவதற்குத் தக்க ஆதாரமாக உள்ளது: நபி (ஸல்) அவர்கள், "உக்ருஜ் அதுவ்வல்லாஹ், அன ரசூலுல்லாஹ்'' (அல்லாஹ்வின் விரோதியே வெளியேறு; நான் அல்லாஹ்வின் தூதர்) என்று கூறிவந்தார்கள். (நூல்: முஸ்னது அஹ்மத்: 16890)

ஒருவர் தம் சகோதரர் தன்னிலை மறந்துள்ளதாக நபியவர்களிடம் அழைத்துக்கொண்டு வந்தார். நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனிலிருந்து முக்கியமான வசனங்களை ஓதி ஊதியதும் அவர் நிவாரணம் பெற்றுச் சென்றார் என்ற தகவலும் இப்னுமாஜா (3539) நபிமொழித் தொகுப்பு நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. "மருந்தில் சிறந்தது அல்குர்ஆன் (மூலம் நிவாரணம் தேடுவது) ஆகும்'' (நூல்: இப்னுமாஜா:  3492) என்று  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதோடு விட்டுவிடாமல் அதற்கேற்பச் செயல்பட்டுள்ளார்கள் என்பதை நாம் அறியமுடிகிறது. 

மனிதருக்குள் புகுந்துகொண்ட ஷைத்தானை-கெட்ட ஆவியை விரட்ட நபி (ஸல்) அவர்கள் "உக்ருஜ்-வெளியேறு' என்ற ஒற்றை வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்கள். அதைக் கேட்டதும் அந்த ஷைத்தான் விலகி ஓடிவிட்டான்.  ஆனால் இது மனிதர்க்கு மனிதர் மாறுபடும். சிலர் ஒரு சில பிரார்த்தனைகளை ஓதத் தொடங்கியதுமே அவன் விலகி ஓடிவிடுவான். சிலர் பலவிதமான பிரார்த்தனைகளை ஓதினால்தான் அவனிடமிருந்து அவன்  விலகுவான். இது ஓதிப்பார்ப்பவர் கொண்டுள்ள வலிமையான இறைநம்பிக்கையையும் மாசற்ற மனத்தையும் பொறுத்து அமைகிறது. அதாவது ஒருவரின் வீட்டில் அநியாயமாகப் புகுந்துகொண்டவனை ஒரு காவல்துறை அதிகாரி விரட்டுவதற்கும் சாதாரணமான மனிதன் விரட்டுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? அதுபோலவே நன்கு கற்றறிந்த இறையச்சம் மிகுந்துள்ள ஆலிம் ஓதி ஊதுவதற்கும் மற்றோர் ஓதி ஊதுவதற்கும் வித்தியாசம் உள்ளது. ஆக ஒருவனின் உடலுக்குள் புகுந்துகொண்ட ஷைத்தானை விரட்டுவதற்கான பிரார்த்தனைகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள். அவற்றை மனஉறுதியுடனும் மனஓர்மையுடனும் முழுமையான நம்பிக்கையோடும் ஓதி ஊதினால் நிச்சயமாக அந்த ஷைத்தான் விலகி ஓடிவிடுவான் என்பதில் சந்தேகம் இல்லை. அதை விட்டுவிட்டு எங்கெங்கோ கொண்டு சென்று சங்கிலியால் கட்டிப்போடுவது முறையான சிகிச்சை இல்லை என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஷைத்தான் மனிதனைத் தீண்டவோ பாதிப்பை ஏற்படுத்தவோ முடியுமா என்று கேட்போர் உண்டு. அவர்கள் பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தைக் கூர்ந்து படிக்க வேண்டும். "வட்டி (வாங்கித்) தின்பவர்கள் ஷைத்தான் பிடித்துப் பித்தம் கொண்டவர்கள் எழுவது போலன்றி (வேறு விதமாக மறுமையில்) எழ மாட்டார்கள்...'' (2: 275) 

ஷைத்தான் தீண்டினால் எவ்வாறு பித்துப் பிடித்தவர்கள் போல் இருப்பார்களோ அவர்களைப் போலவே வட்டியைத் தின்போர் எழுவார்கள் என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான். ஒரு மனிதனை ஷைத்தான்  ஆக்கிரமித்துக் கொண்டால் அவன் தன் சுயநினைவை இழந்துவிடுகின்றான். தான் செய்வதும் பேசுவதும் அவனுக்கே தெரிவதில்லை. அத்தகையோரைத்தான் நபியவர்களிடம் கொண்டுவந்து ஓதிப் பார்த்து, நிவாரணம் பெற்றுச் சென்றுள்ளார்கள். அவர்களை நோக்கித்தான் நபி (ஸல்) அவர்கள், "உக்ருஜ் அதுவ்வல்லாஹ், அன ரசூலுல்லாஹ்'' (அல்லாஹ்வின் விரோதியே வெளியேறு; நான் அல்லாஹ்வின் தூதர்) என்று கூறினார்கள். 

இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் ஸாதுல் மஆத் எனும் தமது நூலில் கூறியுள்ளதாவது:  வலிப்பு நோய் (Epilepsy) இரண்டு வகையாகும். 1. இப்பூமியிலுள்ள கெட்ட ஆவிகளால் பாதிக்கப்பட்டு வலிப்பு ஏற்படுதல், 2. உடலின் மோசமான இயல்புகளால் பாதிக்கப்பட்டு வலிப்பு ஏற்படுதல். இந்த இரண்டாவதைப் பற்றித்தான் மருத்துவர்கள் விவாதிக்கின்றார்கள். அதற்கான காரணங்களையும் சிகிச்சையையும் கூறுகின்றார்கள். முதலாவது வகை குறித்து  அவர்கள் அறிவதில்லை.  

யாரேனும் ஒருவரின் உடலுக்குள் புகுந்துவிட்ட கெட்ட ஆவியிடம் பேசுகின்ற ஒருவரை எங்களின் ஆசிரியர் அனுப்பி வைப்பதை நான் நேரடியாகக் கண்டுள்ளேன். அவர் பாதிக்கப்பட்டவரிடம் சென்று, “"கால லகஷ் ஷைக் உக்ருஜீ, ஃபஇன்ன ஹாதா  லா யஹில்லு லகி'' (நீ வெளியேறிச் செல்லுமாறு என் ஆசிரியர் கூறினார்; இது உன்னுடைய தங்குமிடமில்லை) என்று கூறுவார். உடனே பாதிக்கப்பட்டவர் தெளிவடைந்துவிடுவார். சிலவேளை சென்றவர் சுயமாகவே அந்த ஆவியிடம் பேசுவார். சிலவேளை அந்த ஆவி பிடிவாதமிக்கதாக இருக்கும். அப்போது அவர் அதை அடித்து வெளியேற்றுவார். அதன்பின் பாதிக்கப்பட்டவர் தெளிவடைவார்; அவர் அடித்த அடியின் வலியை பாதிக்கப்பட்டவர் உணரமாட்டார்.  இப்படிப் பல தடவை நாங்களும் மற்றவர்களும் அவர் செய்ததைப் பார்த்திருக்கிறோம்.

அவர் பெரும்பாலும், பாதிக்கப்பட்டவரின் காதில் ஓதுவது இதுதான்: (என்னே!) நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடம் கொண்டுவரப்படமாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா?''  (23: 115)

ஓதிப் பார்க்கின்ற அவர் எனக்குத் தெரிவித்தார்: அவர் ஒரு தடவை, பாதிக்கப்பட்டவரின் காதில், மேற்கண்ட இறைவசனத்தை ஓதினார். அப்போது அந்த ஆன்மா-ஆவி, "ஆம்!''’என்று சொன்னது. உடனே நான் கையில் கம்பை எடுத்து அதன்  கழுத்து நரம்பில் அடித்தேன். அதை அடித்து அடித்து என் கைகள் சோர்ந்துவிட்டன. அந்த அடியில் பாதிக்கப்பட்ட மனிதன் இறந்துவிடுவானோ என்று மக்கள் எண்ணினார்கள். அடித்தபோது இடையில் அது, "நான் இவனை நேசிக்கிறேன்''’என்று கூறியது. அப்போது நான், “"இவன் உன்னை விரும்பவில்லை'' என்று கூறினேன். அதற்கு அது, “"நான் இவனோடு ஹஜ் செய்ய நாடுகிறேன்'' என்று கூறியது. அதற்கு நான்,“ "இவன் உன்னோடு ஹஜ் செய்ய நாடவில்லை''’ என்று கூறினேன். அதற்கு அது,“ "உனக்கு மரியாதை கொடுத்து நான் இவனைவிட்டு வெளியேறுகிறேன்'' என்று கூறியது. அதற்கு நான், “"இல்லை, மாறாக, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் பணிந்து வெளியேறு'' என்று கூறினேன். அதற்கு அது,“ "நான் இவனைவிட்டு வெளியேறுகிறேன்'' எனக் கூறிவிட்டுச் சென்றுவிட்டது.
அதன்பின் பாதிக்கப்பட்டவர் எழுந்து உட்கார்ந்துகொண்டு வலப்புறமும் இடப்புறமும் திரும்பித் திரும்பிப் பார்த்தார். "நான் எப்படி என் ஆசிரியர் முன்னிலையில் வந்தேன்? '' என்று கேட்டார். "இதோ, இவர் அடித்த அடியில்தான் வந்தாய்'' என்று சொன்னார்கள். "நான் எந்தப் பாவமும் செய்யாத நிலையில் என்னை என் ஆசிரியர் ஏன் அடித்தார்?'' என்று கேட்டார். ஆக, அவர்மீது விழுந்த அடிகளையெல்லாம் அவர் உணரவே இல்லை.

எங்களின் ஆசிரியர் ‘"ஆயத்துல் குர்சீ'யை ஓதியபடியே சிகிச்சையை மேற்கொள்வார். பாதிக்கப்பட்டவரும் ஷைத்தானை-ஆவியை ஓட்டுபவரும் அதை ஓதிக்கொள்ளுமாறு கட்டளையிடுபவராக இருந்தார். மேலும் அல்ஃபலக், அந்நாஸ் ஆகிய அத்தியாயங்களையும் ஓதிக்கொள்ளுமாறு கூறிவந்தார். (நூல்: ஸாதுல் மஆத்) 

சில கெட்ட ஆவிகளால் தீண்டப்பட்ட வலிப்பு  நோய் தீராநோயாகவும் இருக்கலாம். அதற்கான சிகிச்சை மேற்கொள்ளாமல் பொறுமை காத்து, இறைவனிடம் பிரார்த்தனை செய்வதே சாலச் சிறந்தது என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்கிக் கூறுகிறது.

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் என்னிடம், “"சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?'' என்று கேட்டார்கள். நான், “"ஆம்; (காட்டுங்கள்)'' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கருப்பு நிறப் பெண்மணிதான் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் வலிப்பு நோயால் (அடிக்கடி) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று வேண்டினார். நபி (ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (அதற்குப் பதிலாக) உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்தனை செய்கிறேன்'' என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணி, “"நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்துகொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள் என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 5652)

ஆக, இவ்வளவு ஆதாரங்களையும் முன்வைத்துப் பார்க்கும்போது ஜின், ஷைத்தான்களால் தீண்டப்படுவது உண்மையே என்றும் அதனால் பாதிப்பு ஏற்படுவது உண்மையே என்றும் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பார்ப்போருக்கும் கேட்போருக்கும்  வேடிக்கையாகத்தான் தெரியும். பாதிக்கப்பட்டோருக்குத்தான் அதன் வேதனை புரியும். மேலும் மனித உடலுக்குள் ஜின் நுழைந்துகொண்டு பாதிப்பை ஏற்படுத்தலாம் எனும் கருத்து சுன்னத் வல் ஜமாஅத் அடிப்படைக் கொள்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான் என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
=============================================






புதன், 20 ஜூன், 2018

கேட்டல் கலை


என்ஜாய் யுவர் லைஃப் எனும் ஆங்கில நூலைத் தமிழாக்கம் செய்துகொண்டிருக்கிறேன். (மூலநூலாசிரியர்:  டாக்டர் மௌலானா அப்துர் ரஹ்மான் அரீஃபீ-சவூதி) அதில் கேட்டல் கலை எனும் தலைப்பில் ஒரு பகுதி இதோ உங்கள் பார்வைக்கு...

சிறப்புவாய்ந்த இஸ்லாமியப் பிரச்சாரகர் ஒருவரை நான் நினைவுகூர்கிறேன். அவர் ஆழமான அறிவுடையவர்; இலக்கியப் பேச்சாளர்; சொற்பொழிவுக்காக அடிக்கடி அழைக்கப்படுபவர்; வெள்ளிக்கிழமை உரையாகட்டும்; ஃபிக்ஹ் வகுப்பாகட்டும்; பல்கலைக் கழகத்தில் நிகழ்த்தும் உரையாகட்டும் அவர் தொடர்படியாகப் பேசுவார். அவர் பேசுவதை மக்கள் நேரடியாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் ஆர்வத்துடன் கேட்பார்கள். அவருடைய மனைவியைத் தவிர. ஏனென்றால் அவர் தம் மனைவியிடம் இருக்கும்போதும் வழமைபோல் அவர்தாம் பேசிக்கொண்டே இருப்பாரே தவிர, மனைவி சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கமாட்டார்.

அவரைப் பற்றி அவர்தம் மனைவி அவரிடமே புகார் தெரிவிப்பார். ஆனால் தம் மனைவி எதற்காகத் தம்மைப் பற்றிப் புகார் கூறுகிறார் என்பதை அறியாமலே இருந்துவந்தார். அவருடைய மனைவியைத் தவிர ஒவ்வொருவரும் அவரை மதிக்கிறார்கள்; பாராட்டுகிறார்கள். எனவே அவர் ஒரு நாள் தம்முடைய சொற்பொழிவைக் கேட்கத் தம் மனைவியையும் தம்மோடு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார். அப்போதாவது அவர் தம்மைப் பாராட்டுவார் அல்லவா என எண்ணிக்கொண்டார்.

"நீ என்னோடு வருகிறாயா?'' என்று கேட்டார். "எங்கே?'' என்று அவர் கேட்க, "ஒரு சொற்பொழிவாளர் ஆற்றுகின்ற உரையைக் கேட்பதற்காக உன்னை அழைத்துச் செல்ல விரும்புகிறேன். அதன்மூலம் நாம் மிகுந்த பயனடையலாம். நீ வருகிறாயா?'' என்று கேட்டார்.

அவள் தன் கணவருடன் காரில் ஏறி அமர்ந்தாள். குறிப்பிட்ட இடத்தை அவர்கள் அடைந்தவுடன் காரிலிருந்து இறங்கி, பள்ளிவாசலின் கதவு வரை நடந்து சென்றனர். ஒரு மிகப்பெரும் கூட்டம் அவருடைய சொற்பொழிவைக் கேட்க வருகை தந்திருந்தது. அவர்தம் மனைவி பெருங்கூட்டத்தின் இடையே நடந்து சென்று, பெண்கள் பகுதியில் அமர்ந்துகொண்டாள். சொற்பொழிவு தொடங்கியது. மக்கள் அனைவரும் மிகவும் கவனத்துடன் அவரது உரையைக் கேட்டனர். அவருடைய மனைவியும்கூட வியப்போடு கேட்டாள்.  சொற்பொழிவு முடிந்ததும் அவர் தமது காரில் ஏறி அமர்ந்துகொண்டார். தம்முடைய சொற்பொழிவை எண்ணி மகிழ்ந்துகொண்டார். அவருடைய மனைவியும் வந்து காரில் அமர்ந்தார். அவர்கள் இருவரும் அமர்ந்ததும், வழமைபோல் அவர் அவளுக்குப் பேச வாய்ப்புக் கொடுக்காமல், அங்கிருந்த கூட்டத்தைப் பற்றியும் மஸ்ஜிதின் அழகைப் பற்றியும் பேசத் தொடங்கிவிட்டார்.

பிறகு அவர் தம் மனைவியிடம், "இன்றைய சொற்பொழிவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?'' என்று கேட்க,  "அது நன்றாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. அது சரி! சொற்பொழிவாளர் யார்?'' என்று கேட்டார். அவர் ஆச்சரியத்துடன், ''என்ன! உனக்கு யாருடைய குரல் என்று தெரியவில்லையா?'' என்று கேட்க,  ''சரிதான்! கூட்டத்தில், ஒலிபெருக்கி சரியில்லாததால், என்னால் சரியாகக் கவனம் செலுத்த முடியவில்லை'' என்றாள்.

அவர் பெருமையோடு, "நான்தான் உரையாற்றினேன்'' என்றார். அதற்கவள், "ஓ! அப்படியா! பேசிக்கொண்டிருந்தபோதே, இவர் எப்போது முடிப்பார் என்றுதான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன்'' என்றாள்.

எனவே மற்றவர் பேசுவதைக் கேட்பதும் ஒரு கலைதான். அது எல்லோருக்கும் வாய்க்காது என்பதை நாம் உணரலாம்...

-தமிழாக்கம்: முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி (ஆலங்குடி) 



ஞாயிறு, 17 ஜூன், 2018

வழக்குகளையும் சிக்கல்களையும் எதிர்கொள்ள...



ஆங்காங்கே முஸ்லிம்களுக்கு ஏற்படும் இன்னல்கள், சிக்கல்கள், பள்ளிவாசல் தொடர்பான பிரச்சனைகள், வழக்குகள் இவற்றையெல்லாம் தீர்ப்பதற்கும் தனிக்கவனம் செலுத்தி எதிர்கொள்வதற்கும் முஸ்லிம்கள்மீது அவ்வப்போது போடப்படுகின்ற பொய்வழக்குகளை எதிர்கொண்டு சந்திப்பதற்கும் முழுநேரம் பணியாற்றும் ஒரு குழு தேவை. 

அக்குழுவினருக்கான பொருளாதாரத் தேவையை முஸ்லிம் சமுதாயம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் தமிழக முஸ்லிம்களுக்கு எங்கு, என்ன பிரச்சனையானாலும் நேரடியாகச் சென்று அதைப் பேசித் தீர்க்க, அல்லது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, அல்லது அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முயல்வார்கள். பொய் வழக்குகளுள் சிக்குண்ட முஸ்லிம்களை மீட்பதற்குரிய வேலைகளைச் செய்வார்கள். 

பள்ளிவாசல் நிலத்தை ஆக்கிரமித்தல், புதிதாகப் பள்ளிவாசல் கட்டுவதற்கு ஏற்படும் தடை, பொய்வழக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் கவனித்துக்கொள்வார்கள். இக்குழுவில் ஆலிம்கள், வழக்கறிஞர்கள், படித்த இளைஞர்கள் இருப்பார்கள். இத்தகைய ஒரு குழுவினர் முஸ்லிம்களுக்கு அவசிய அவசரத் தேவை என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்?  

ஜமாஅத்துல் உலமா சபை இதற்கான ஏற்பாட்டைச் செய்ய முன்வந்தால் சமுதாயம்  வரவேற்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேநேரத்தில் சமுதாயம் இதற்கான பொருளாதார உதவி செய்வது முற்றிலும் அவசியம்.  

இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து உடனடியாக ஆலோசனை செய்து, செயல்பட முன்வருமா ஜமாஅத்துல் உலமா சபை?

-மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி  

திருமண விருந்தை மாற்றுவோம்!



பொதுவாக முஸ்லிம்கள் நடத்தும் திருமணத்தில் அவர்கள் பிறமதச் சகோதரர்களையும் விருந்துக்கு அழைப்பதுண்டு. திருமணத்திற்கு வருகை தருவோருள் பிரியாணியை விரும்பி உண்போரும் சைவ உணவை மட்டுமே சாப்பிடுவோரும் உண்டு. ஏன், இன்று முஸ்லிம்களே நிறையப் பேர் மருத்துவர்களின் அறிவுறுத்தலால் (அல்லது அச்சுறுத்தலால்) சைவ உணவைச் சாப்பிடத் தொடங்கிவிட்டனர். எனவே விருந்து ஏற்பாடு செய்வோர் அசைவ உணவையும் சைவ உணவையும் தனித்தனியே ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர். விருந்துக்கு அழைப்போருக்கு இது இரட்டைச் சுமைதான் என்றால் மிகையில்லை. ஆனாலும் ஒரு சுகமான சுமையாக அதைச் செய்துவருகின்றனர். 

இந்தச் சிரமத்தை நீக்கும் முகமாக எல்லோருக்கும் சைவ உணவையே ( வெஜிடபிள் பிரியாணி) ஏற்பாடு செய்துவிட்டு, அத்தோடு பக்க உணவாக (சைடு டிஷ்) அசைவப் பொரியல் செய்துவிட்டால் எல்லோரையும் ஒரே மொத்தமாக அமர வைத்துவிடலாம். சைவம் தனி, அசைவம் தனி எனப் பிரிக்கத் தேவை ஏற்படாது. அசைவம் தேவைப்படுவோருக்கு மட்டும் அதை வழங்கலாம். சைவம் சாப்பிடுவோருக்கு அதைத் தவிர்த்துவிடலாம்.

இதனால் வேலைப்பளு குறைவதோடு, சைவ உணவு எவ்வளவு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கணக்குத்  தெரியாமல் வாங்கி அல்லது ஆக்கி, விரயம் செய்வது தவிர்க்கப்படும்.

இனி வரும் காலங்களில் எல்லோருக்கும் ஒரே உணவு என்ற முறையைக் கடைப்பிடிக்கலாமே!

-மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி