திங்கள், 9 மே, 2011

இஸ்லாமிய இல்லறம் (II)



உடலுறவில் இஸ்லாமிய ஒழுக்கங்கள்

தம்பதிகளுக்கிடையே நடைபெறுகின்ற உடலுறவை இஸ்லாம் அனுமதிப்பது மட்டுமின்றி ஊக்கப்படுத்தவும் செய்கிறது. இது அல்லாஹ் நமக்களித்த மிகப்பெரும் அருட்கொடையாகும். எவர்கள் சட்டமுறைப்படி தம் ஆசைகளைத் தீர்த்துக் கொள்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் இழித்துரைப்பதில்லை. மாறாக, அவன் இதை அனுமதிப்பதோடு இதற்காக நன்மைகளையும் வழங்குகின்றான்.

அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் தம் அந்தரங்க உறுப்பையும் (விபசாரத்திலிருந்து) காப்பாற்றிக் கொள்வார்கள். எனினும், அவர்கள் தம் மனைவிகளிடமோ அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்ட (அடிமைப்) பெண்களிடமோ (சேர்வதில்) நிச்சயமாக (அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள். ஆகவே, இவ்விசயத்தில்) அவர்கள் நிந்திக்கப்பட மாட்டார்கள். இதற்குப் புறம்பானதை எவரேனும் விரும்பினால் அவர்கள் வரம்பு மீறியவர்களாகி (குற்றவாளியுமாகி) விடுவார்கள். (23: 5-7)

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள், தங்கள் அந்தரங்க உறுப்புகளையும் பாதுகாத்துக்   கொள்வார்கள். ஆயினும், தங்கள் மனைவிகளிடமும், தங்கள் அடிமைப் பெண்களிடமும் தவிர. நிச்சயமாக அவர்கள் (இவர்களுடன் சம்பந்தப்படுவதைப் பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள். இதனையன்றி (மற்றெதையும்) எவரேனும் விரும்பினால், அத்தகையவர்கள் வரம்பு மீறியவர்களாவார்கள். (70: 29-31)
இருப்பினும், ஒருவன் தன் மனைவியிடம் உடலுறவு கொள்வதற்காக அவளை நெருங்கும் போது அவன் கவனிக்க வேண்டிய நிறைய வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் அவற்றுள் மிக முக்கியமானவற்றை நாம் பரிசீலிக்க உள்ளோம்.

அல்லாஹ்வைப் பற்றிய விழிப்புணர்வு

அல்லாஹ் எப்போதும் தன் அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு ஒவ்வொருவனுக்கும் இருக்க வேண்டும். இந்த உணர்வு இருக்கின்ற ஒருவன் உடலுறவின் இன்பத்தில் இருக்கின்ற போதும்கூட தன் செயல்களைக் கட்டுப்படுத்திக் கொள்வான். மேலும், தன் விருப்பத்தையும் ஆசையையும் சட்ட முறைப்படி மகிழ்ச்சியாக நிறைவேற்றிக்கொள்ள அல்லாஹ் தனக்கு வசதிசெய்து கொடுத்துள்ளான் என்ற நன்றியுணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். இத்தகைய எண்ணத்தோடு ஒருவன் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கின்றபோது அது அவனுக்கு நன்மையைப் பெற்றுத் தரக்கூடிய வணக்கமாக ஆகிவிடுகின்றது.

உடலுறவைப் பற்றிச் சரியாக விளங்கிக் கொள்ளுதல்

இறைநம்பிக்கையாளர்கள் தம் உச்சக்கட்ட மகிழ்ச்சியிலும் அல்லாஹ்வை மறக்கமாட்டார்கள். அவர்கள் தம் மனைவியரோடு உடலுறவு கொள்வது இச்சையைத் தீர்த்துக்கொள்ள மட்டுமில்லை; அது பற்பல நல்ல நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதாகும் என்பதை நினைவுகூர்வார்கள்.
எனவே, ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்வது அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதாகும்; நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றுவதாகும். முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதாகும்; மேலும் தம்மையும் தம் மனைவியையும் பாவத்திலிருந்து பாதுகாப்பதாகும் என்ற தூய்மையான (நிய்யத்) எண்ணம் கொள்ளவேண்டும்.

மகிழ்ச்சிக்கு வழங்கப்படும் நன்மைகள்

ஒருவன், பாவத்திலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு தன் மனைவியுடன் உடலுறவு கொண்டால் அவன் அதற்காக நன்மைகளைப் பெறுகிறான்.
அபூதர்ரு (ரளி) அறிவிக்கின்றார்கள்: நபித்தோழர்களுள் சிலர் நபியவர்களிடம் முறையிட்டார்கள். "அல்லாஹ்வின் தூதரே! பணக்காரர்கள் எல்லா நன்மைகளையும் எடுத்துக் கொள்கின்றார்கள். நாங்கள் தொழுவதைப் போல் அவர்களும் தொழுகின்றார்கள்; நாங்கள் நோன்பு வைப்பதைப் போல் அவர்களும் நோன்பு நோற்கின்றார்கள்; மேலும் அவர்கள் தம் பொருட்களிலிருந்து தானம் செய்கின்றார்கள்''. அப்போது நபியவர்கள், நீங்கள் தானம் செய்வதற்கான வழிகளை அல்லாஹ் ஆக்கவில்லையா? நிச்சயமாக ஒவ்வொரு தஸ்பீஹும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும்; ஒவ்வொரு தக்பீரும் (அல்லாஹு அக்பர்) தர்மமாகும்; ஒவ்வொரு தஹ்லீலும் (லாயிலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; ஒவ்வொரு தஹ்மீதும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும்; நன்மையை ஏவுவதும் தர்மமாகும்; தீமையைத் தடுப்பதும் தர்மமாகும்; உங்கள் மனைவியோடு உடலுறவு கொள்வதும் தர்மமாகும். (மேற்கண்ட) இவை அனைத்துக்கும் முற்பகல் (ளுஹா) தொழுகை போதுமாகும் என்று பதிலளித்தார்கள். 
       
அல்லாஹ்வின் தூதரே! எங்களுள் ஒருவர் தம் இச்சையைத் தீர்த்துக்கொள்வதற்கும் நன்மை உள்ளதா? என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், ஒருவன் தன் இச்சையைத் தீர்த்துக்கொள்ளத் தடுக்கப்பட்ட வழியில் சென்றால் அது அவனுக்குத் தீமைதானே? என்று மறுவினாத் தொடுத்தார்கள். அதுபோல்தான் ஒருவன் தன் இச்சையைத் தீர்த்துக்கொள்ள ஆகுமான வழியில் சென்றால் அதில் அவனுக்கு நன்மை உள்ளது.   (நூல்கள்: முஸ்லிம், அஹ்மது) 
  
இதற்கு விளக்கமளித்து அல்அல்பானீ (ரஹ்) கூறுகின்றார்:
சுயூத்தி (ரஹ்) அவர்கள் தமது "இத்காருல் அத்கார்' எனும் நூலில், ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்வது தர்மமாகும். அப்போது அவனுக்கு அது சம்பந்தமாக எந்த எண்ணமும் இல்லாவிட்டாலும் சரியே! ஒவ்வொரு தனித்தனி உடலுறவுக்கும் இவ்வாறு நன்மையுண்டு என்பது என் கருத்தாகும். ஆனால் அவளை முதன் முதலில் திருமணம் செய்த போதாகிலும் அவனுக்கு அந்த எண்ணம் இருந்திருக்க வேண்டும். அல்லாஹ்வே யாவையும் அறிந்தவன் என்று கூறியுள்ளார். (நூல்: ஆதாபுஸ்ஸிஃபாஃப், பக்கம்: 138)

உடலுறவுக்கு முன் பிரார்த்தனை

உடலுறவின் கண்ணியமான நோக்கங்களுள் ஒன்று நல்ல சந்ததிகளை உற்பத்தி செய்வதாகும். எனவே உடலுறவு கொள்ளக்கூடிய தம்பதியர் தம் சந்ததியை ஷைத்தானின் தீங்கி லிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொள்வது அவசியமாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரளி) அறிவிக்கின்றார்கள்: உங்களுள் ஒருவர் தம் மனைவியிடம் (உடலுறவிற்காக) வந்தால் "பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்த்தனா'' என்று ஓதிக் கொள்ளட்டும். (பொருள்: அல்லாஹ்வின் பெயரால் தொடங்குகின்றேன். இறைவா, எங்களைவிட்டு ஷைத்தானைத் தவிர்ப்பாயாக. நீ எங்களுக்கு வழங்கவுள்ள சந்ததியிலும் ஷைத்தானைத் தவிர்ப்பாயாக.) ஏனென்றால் அதன் மூலம் அவ்விருவருக்கிடையே குழந்தை உண்டானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் எவ்விதத் தீங்கும் செய்யமாட்டான்.'' (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)

உடலுறவுத் தேவையை உடனடியாக நிறைவேற்றிக் கொள்ளுதல்

திருமணத்தின் மிக முக்கியமான நோக்கங்களுள் ஒன்று தம் கற்பைப் பாதுகாத்துக் கொள்வதாகும். எனவே எப்போது ஒருவருக்கு உடலுறவு கொள்வதற்கான உணர்வு ஏற்படுகிறதோ அவர் உடனே தம் மனைவியிடம் வந்து தம் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவருக்குத் தீய எண்ணங்கள் ஒன்று சேர்ந்துகொண்டு அது படபடப்புக்குக் காரணமாகின்றது; தவறு செய்யத் தூண்டுகிறது.

ஆசையை நிறைவேற்றிக்கொள்ள தன் மனைவியிடம் விரைதல்

பெண்கள் மீது ஆண்களுக்கும் ஆண்கள் மீது பெண்களுக்கும் இயற்கையாகவே ஆசை இருக்கிறது. ஷைத்தான், ஆண்களைக் கவர இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றான். அப்பெண்கள் அவர்களை நெருங்கும்போதோ அவர்களைக் கடந்து செல்லும்போதோ அவன் ஆண்களின் ஆசையையும் காம உணர்வையும் தூண்டிவிடுகின்றான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உசாமா இப்னு ஸைது (ரளி) அறிவிக்கின்றார்கள்: "எனக்குப் பிறகு பெண்களைவிட மிகப்பெரும் துன்பத்தை ஆண்களுக்கு நான் விட்டுச் செல்லவில்லை. '' (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரளி) அறிவிக்கின்றார்கள்: நிச்சயமாக ஒரு பெண் ஷைத்தானுடைய தோற்றத்திலேயே முன்னோக்கி வருகிறாள்; ஷைத்தானுடைய தோற்றத்திலேயே பின்னோக்கிச் செல்கிறாள். உங்களுள் ஒருவர் ஏதேனும் பெண்ணிடம் தமக்கு மகிழ்ச்சியளிக்கின்ற எதையேனும் கண்டால் அவர் உடனடியாகத் தம் மனைவியிடம் வந்து (உடலுறவுகொண்டு) விடட்டும். ஏனென்றால், அவளிடம் உள்ளதுதான் இவளிடமும் உள்ளது. மேலும், இ(வ்வாறுசெய்வ)து அவருடைய மனதில் உள்ள விருப்பத்தை(ச் சட்டமுறைப்படி)த் தீர்த்துக்கொள்ளச் செய்கிறது. (நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது)

எனவே, மணமான ஆண், ஷைத்தானின் சூழ்ச்சிக்கெதிராகத் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அவனுடைய மனைவி ஏதேனும் ஒரு முக்கியமான வேலையில் ஈடுபட்டிருந்தாலும் அவன் அவளை அழைக்கின்றபோது உடனடியாக அவள் தன் கணவனிடம் செல்ல வேண்டும். ஏனென்றால் அவள் செய்து கொண்டிருக்கிற வேலையைவிட கணவனின் தேவையை நிறைவேற்றுவது மிகவும் முக்கியமானதாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக தல்க் இப்னு அலீ (ரளி) அறிவிக்கின்றார்கள்: "உங்களுள் ஒருவர் தம் மனைவியிடம் தம் தேவையை நிறைவேற்றிக்கொள்ள நாடினால் அவள் அடுப்பங்கரையில் வேலை செய்து கொண்டிருந்தாலும் அவளிடம் சென்று தம் தேவையை நிறைவேற்றிக் கொள்ளட்டும்.'' (நூல்கள்: திர்மிதீ, அஹ்மது)

மனைவி தன் கணவனின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்

தன் கணவனின் விருப்பத்தை நிறைவேற்ற எப்போதும் தயாராக இருப்பது ஒரு மனைவி மீதுள்ள பெருங்கடமையாகும். அவன் அவளிடம் இன்பம் நுகர நாடிவருகின்றபோது அவள் மறுப்பது மிகப்பெரும் பாவமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அபீஅவ்ஃபா (ரளி) அறிவிக்கின்றார்கள்: முஹம்மதுவின் ஆன்மா எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! ஒரு பெண் தன் கணவனுக்குரிய எல்லாக் கடமைகளையும் நிறைவேற்றாத வரை அவள் தன் இறைவனுக்குரிய கடமைகளை நிறைவேற்றியவளாக ஆகமாட்டாள். அவள் ஒட்டகத்தின் மீதிருந்தாலும் அவன் அவளை (உடலுறவு எனும் தேவைக்காக) அழைத்தால் அதை நிறைவேற்ற மறுக்கக் கூடாது. (நூல்கள்: அஹ்மது, இப்னுமாஜா)

மனைவி, தன் கணவனின் அழைப்புக்குப் பதில் கொடுக்கத் தயங்கக்கூடாது,. அது அவளுக்கு அசௌகரியமாக இருப்பினும் சரியே! அவள் அவனுடைய அழைப்பை மறுப்பது பெரும்பாவமாகும். மேலும் அவள் மறுப்பதால் வானவர்களின் சாபத்திற்கும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளாகின்றாள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவிக்கின்றார்கள்: ஒருவன் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து (அதற்கு இணங்கி வராமல்) அவள் மறுத்துவிட்டாள்; எனவே கணவன் அவள் மீது கோபத்துடன் இரவைக் கழித்தான் என்றால், காலை வரை வானவர்கள் அவளைச் சபிக்கின்றார்கள். (அல்லது அவன் அவளைத் திருப்திகொள்கின்ற வரை சபிக்கின்றார்கள்). (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவிக்கின்றார்கள்:  என்னுடைய ஆன்மா எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! ஒருவன் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து (அதற்கு இணங்கி வராமல்) அவள் மறுத்துவிட்டால், அவ(ளின் கணவ)ன் அவளைத் திருப்திகொள்கின்ற வரை வானிலுள்ளவன் (அல்லாஹ்) அவள் மீது கோபமாகவே இருக்கின்றான். (நூல்: முஸ்லிம்)


ஆங்கிலத்தில் : முஹம்மது முஸ்தபா அல்ஜிபாலி 
தமிழில் : நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.

கருத்துகள் இல்லை: