திங்கள், 17 ஆகஸ்ட், 2026

மனிதர்களை நேசிப்போம்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19 அன்று உலகம் முழுவதும் உலக மனிதாபிமான தினம் (World Humanitarian Day) அனுசரிக்கப்படுகிறது. இயற்கைப் பேரிடர்கள், போர்கள், பஞ்சம், தொற்றுநோய்கள் மற்றும் பிற நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தன்னலமின்றி உதவிசெய்யும் மனிதாபிமானப் பணியாளர்களைக் கௌரவிப்பதும், மனிதாபிமானச் சேவையின் அவசியத்தை உலகிற்கு உணர்த்துவதுமே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.

 

மனிதாபிமானம்: மனிதர்களின் உயிர், கண்ணியம், அடிப்படை உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில், இனம், மதம், மொழி, நாடு, அரசியல் வேறுபாடு ஆகியவற்றைப் பாராமல் வழங்கப்படும் உதவியே மனிதாபிமான உதவி ஆகும். உணவு, குடிநீர், மருத்துவம், தங்குமிடம், கல்வி, பாதுகாப்பு, மனநல ஆதரவு போன்ற அத்தியாவசிய உதவிகள் இதில் அடங்கும். எல்லாவற்றுக்கும் மேலாகத் தம் அண்டையில் வாழும் மனிதர்களை மதிப்பதும் நேசிப்பதுமே மனிதாபிமானம் ஆகும்.

  

உருவான வரலாறு: 2003 ஆகஸ்ட் 19 அன்று ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகமான கேனல் ஹோட்டல் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில், ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி செர்ஜியோ வியேரா டி மெலோ உட்பட 22 மனிதாபிமானப் பணியாளர்கள் உயிரிழந்தனர். அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், 2008ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆகஸ்ட் 19-ஐ உலக மனிதாபிமான நாளாக அறிவித்தது. அதன் பின்னர் 2009ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

 

மனிதாபிமானப் பணியாளர்களின் சேவை: மனிதாபிமானப் பணியாளர்கள் பல நேரங்களில் உயிருக்கு ஆபத்தான சூழல்களிலும் சேவை செய்கின்றனர். போர் நடைபெறும் பகுதிகள், அகதிகள் முகாம்கள், நிலநடுக்கம் மற்றும் வெள்ளப் பேரழிவுகள் ஏற்பட்ட இடங்கள் போன்றவற்றில் உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்ட அவசர உதவிகளை வழங்குகின்றனர். கடந்த காலங்களில் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பெருநகரங்களில் வெள்ளம் ஏற்பட்டபோது மனித நேயத்தோடு பணியாற்றிய நம் சகோதரர்களை நினைவுகூர்ந்து பார்க்க வேண்டும்.  

 

இன்றைய உலகிற்கான செய்தி: இன்றைய உலகம் போர்கள், காலநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர்கள், வறுமை, பசியால் பல்வேறு மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், அரசுகள் மட்டுமின்றி, தனிநபர்கள், சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், இளைஞர்கள் அனைவரும் மனிதாபிமான உணர்வுடன் செயல்பட வேண்டியது காலத்தின் தேவை. சாலையில் ஒருவர் விபத்து ஏற்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தால் அவரை நிழற்படம் எடுத்துக்கொண்டிருக்காமல், அருகிலுள்ள மருத்துவமனையில் துரிதமாகச் சேர்க்க என்ன செய்ய இயலுமோ அதைச் செய்ய வேண்டும். அதுதான் மனிதாபிமானம்.

 

நாம் என்ன செய்யலாம்: பேரிடர் நிவாரண நிதிக்கு உதவுதல், இரத்ததானம் செய்வதோடு அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஏழை, எளிய மக்களுக்கு உணவு, உடை, கல்வி உதவிகள் வழங்குதல், பேரிடர் காலங்களில் தன்னார்வத் தொண்டில் ஈடுபடுதல், மத, இன, மொழி வேறுபாடுகளைத் தாண்டி மனிதநேயத்துடன் நடந்து கொள்ளல் முதலானவற்றை நாம் செய்யலாம். அத்தோடு பிறரையும் அப்பணிகளைச் செய்யத் தூண்டலாம்.

 

ஏழைகளைக் கண்டு இரங்குவோம்: ஜரீர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: (ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய்க் கிழிந்த ‘கம்பளி ஆடை’ அல்லது ‘நீளங்கி’ அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாள்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார்கள். அவர்களுள் பெரும்பாலானோர் “முளர்’ குலத்தைச் சேர்ந்தோராக இருந்தனர். இல்லை; அவர்கள் அனைவருமே ‘முளர்’ குலத்தைச் சேர்ந்தோர்தாம். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது முகம் நிறமாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் உத்தரவிட, பிலால் ரளியல்லாஹு அன்ஹு தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.

 

அப்போது “மக்களே! உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனை பயந்துகொள்ளுங்கள்’’ எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும், “அல்ஹஷ்ர்’ அத்தியாயத்திலுள்ள “இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வோர் ஆன்மாவும் நாளைக்கென்று எதனை அனுப்பியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்’’ எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக் காட்டி (முளர் கூட்டத்தாருக்குத் தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். அப்போது பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் (தர்மம் செய்யுமாறு அறிவுறுத்தினார்கள்).

 

உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளையும் வெள்ளிக்காசுகளையும்  ஆடைகளையும் ஒரு ‘ஸாஉ’ கோதுமையையும் ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழத்தையும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்ஸாரிகளுள் ஒருவர் ஒரு பை (நிறையப் பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது; ஏன் தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக்கொண்டிருப்பதையும் நான் கண்டேன்.

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுவோரின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுவோரின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு’’ என்று கூறினார்கள். (முஸ்லிம்: 1017 / 1812)

 

உணவுக்கும் ஆடைக்கும் வழியின்றிச் சிரமப்பட்ட அந்த ஏழைகளைக் கண்டு அல்லாஹ்வின் தூதர் எந்த அளவிற்கு மனம் இளகியுள்ளார்கள் என்பதைக் காணும்போது நம் கண்கள் கண்ணீரைச் சிந்துகின்றன. 2026-இன் ஐ.நா. தரவுகளின்படி, “இந்தியாவில் 14.25 கோடிப் பேர் போதிய உணவு கிடைக்காத நிலையில் உள்ளனர்” என்ற செய்தியைப் படிக்கும்போது நமக்கு மனம் வலிக்கிறது. ஆனால் ஆட்சியாளர்கள் அது பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஏழைகளின் ஏழ்மையை அகற்ற ஏற்ற வழிகளைச் செய்வதே இல்லை.   

 

திருக்குர்ஆன் கூறுகிறது: இஸ்லாம் மனிதாபிமானத்தை (Humanity) வெறும் சமூகச் சேவையாக மட்டுமல்ல, இறைவழிபாட்டின் ஒரு பகுதியாகவும் கருதுகிறது. பசி, வறுமை, இயற்கைப் பேரிடர், போர், நோய், அகதிகள், ஆதரவற்றோர் போன்ற எந்தச் சூழலிலும் துன்பப்படுவோருக்கு உதவுவது உயர்ந்த அறமாகக் குர்ஆனும் ஹதீஸ்களும் வலியுறுத்துகின்றன. “யார் ஓர் உயிரைக் காப்பாற்றுகிறாரோ, அவர் எல்லா மனிதர்களின் உயிரையும் காப்பாற்றியவர் போன்றவர்’ (அல்குர்ஆன் 5:32) இந்த வசனம், மனித உயிரைக் காப்பது இஸ்லாத்தில் எவ்வளவு உயர்ந்த செயலாகக் கருதப்படுகிறது என்பதை எடுத்துரைக்கிறது.

 

மேலும் மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்: “அல்லாஹ்வின் அன்பிற்காக உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், உதவி கேட்போருக்கும் தமது செல்வத்தை வழங்குவோரே உண்மையான நன்மையாளர்கள்.” (அல்குர்ஆன் 2: 177) தமக்குத் தேவை இருக்கும்போதும் பிறருக்கு முன்னுரிமை அளிப்பதே மனிதநேயம் ஆகும். “தாமே தேவையுடையவர்களாக இருந்தாலும், பிறருக்கு முன்னுரிமை அளிப்பார்கள்” (அல்குர்ஆன் 59:9) என்று அல்லாஹ் கூறுகின்றான். மதீனாவின் அன்ஸாரிகள் மக்கா முஹாஜிர்களுக்குச் செய்த தியாகத்தை இந்த வசனம் பாராட்டுகிறது.

  

மனிதாபிமானமற்ற நாடுகள்: மனிதாபிமானமற்ற முறையில் ஓர் இனத்தையே அழிக்க வேண்டுமென்ற கெடுநோக்கில் ஒரு நாட்டின் மீது எந்தவித முன்னறிவிப்புமின்றிப் போர் தொடுத்தல், அவர்கள்மீது திடீர்த்தாக்குதல் தொடுத்தல், பிள்ளைகளைக் குறி வைத்துத் தாக்குதல், மருத்துவமனைகள்மீது தாக்குதல் தொடுத்தல், உணவும் தண்ணீரும் கிடைக்கவிடாமல் பசியில் வாட்டுதல் உள்ளிட்ட வன்செயல்களைத் தொடர்ந்து செய்துவருகின்ற இஸ்ரேல், அமெரிக்கா இருநாட்டு அதிபர்களும் மனித இனத்தைச் சார்ந்தவர்கள்தாமா என்று கேட்கத் தோன்றுகிறது. தயாரித்த ஆயுதங்களை விற்பனை செய்யவும் தம் பலத்தைக் காட்டவும் அப்பாவி முஸ்லிம்களைக் கொல்லுதலும் அண்டை நாடுகளுக்கிடையே போர் மூளச் செய்வதும் எந்த விதத்தில் நியாயம்?

 

நபிமொழிகள் கூறுகின்றன: “ஓர் அடியான் தன் சகோதரனுக்கு உதவிக் கொண்டிருக்கும் வரை, அல்லாஹ் அவனுக்கு உதவி செய்துகொண்டே இருப்பான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்: 2699) “கருணை காட்டுவோருக்கு அருளாளன் கருணை காட்டுவான். பூமியில் உள்ளவர்களிடம் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள்; வானத்தில் இருப்பவன் உங்கள்மீது கருணை காட்டுவான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் (திர்மிதீ: 1924). ஆக இந்த இரண்டு நபிமொழிகளும் பிறருக்கு நாம் உதவி செய்வதோடு, பிறர் மீது மனிதநேயத்தோடும் கனிவோடும் நடந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

 

மேலும் ஒரு நபிமொழி, சமுதாயத்தில் நலிவுற்றோருக்கும் விதவைகளுக்கும் நாம் உதவி செய்வதே அல்லாஹ்வின் பாதையில் அல்லும் பகலும் அறப்போர் புரிவதைவிட அல்லது தொழுது, நோன்பு நோற்பதைவிடச் சிறந்தது என்று பகர்கிறது. இதோ அந்த நபிமொழி: “(கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவர் ஆவார் அல்லது இரவில் நின்று வணங்கிப் பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவர் ஆவார்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரீ: 5353)

 

மனித நேயத்தோடும் மனிதாபிமானத்தோடும் பிறருக்காக நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் உயர்ந்தோன் அல்லாஹ்வின் பார்வையில் எவ்வளவு உயர்வைப் பெறுகின்றன என்பதை எண்ணிப் பார்க்கும்போது, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மனித சமுதாயத்தை எந்த அளவிற்கு நேசித்துள்ளார்கள் என்பதை உணர முடிகிறது. ஆகவே அத்தகைய உணர்வை அல்லாஹ் நமக்கும் வழங்கி, மனிதர்களை நேசித்து, அதன்மூலம் அதீத நன்மைகளை ஈட்டிக்கொள்ளும் நற்பாக்கியத்தை நல்குவானாக. ‘மனிதனை நேசிப்பதே உயர்ந்த மனிதாபிமானம்’ என்ற உண்மையை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவோமாக.   

==============








கருத்துகள் இல்லை: