சனி, 12 செப்டம்பர், 2026

எழுத்தாளர்கள் தேவை!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம், சென்னை-28

 

சர்வதேச எழுத்தறிவு நாள் (International Literacy Day) ஆண்டுதோறும் செப்டம்பர் 8ஆம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இது யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு மூலம் 1967ஆம் ஆண்டு முதன்முதலாக அறிவிக்கப்பட்டது. உலகெங்கிலும் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல், அனைவருக்கும் கல்வி, எழுத்தறிவு வாய்ப்புகளை ஏற்படுத்துதல் முதலான நோக்கங்களைக் கொண்டது.

 

ஒரு மனிதனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வி மட்டுமே. எழுத்தறிவு என்பது வெறும் எழுத்துகளைக் கூட்டிப் படிக்கும் திறன் அன்று; அது மனிதனின் அகக்கண்களைத் திறந்து, அறியாமை என்னும் காரிருளை அகற்றும் ஒப்பற்ற ஒளிவிளக்காகும். ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது பெரிய பெரிய தொழிற்சாலைகளிலோ கட்டடங்களிலோ இல்லை; அது அங்குள்ள மக்களின் எழுத்தறிவு விகிதத்திலேயே அடங்கியுள்ளது. மேலும் தற்காலத்தில் இளைஞர்கள் சிலர் தடைசெய்யப்பட்டுள்ள தொழில்களில் ஈடுபடுகின்றனர் என்றால், அதற்கான முதற்காரணம் எழுத்தறிவி ன்மை; கல்வியறிவின்மையே ஆகும்.  

 




எழுத்தறிவின் மகத்துவம்: கல்வி என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்ற ஒருவரால் மட்டுமே தம் உரிமைகளையும் கடமைகளையும் சரிவர உணர்ந்து செயல்பட முடியும். அது மனிதர்களுக்குத் தன்னம்பிக்கையைத் தருவதோடு, நல்லதையும் கெட்டதையும் பகுத்தறிந்து பார்க்கவும், சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழவும் வழிகாட்டுகிறது. ஒரு நாட்டின் பொருளாதார மற்றும் சமூகப் புரட்சிக்கு எழுத்தறிவே ஆணிவேராக அமைகிறது. எழுத்தறிவு பெற்ற சமூகம் புதிய சிந்தனைகளையும் தொழில்நுட்பங்களையும் எளிதில் ஏற்றுக்கொண்டு முன்னேற்றப் பாதையில் பயணிக்கிறது. ‘எழுத்தறிவு’ என்பது நேரடியாகக் கல்வியைக் குறித்தாலும், எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை முன்னிறுத்தியே இக்கட்டுரையை எழுதுகிறேன்.  

 

அல்லாஹ்வின் பார்வையில்: முதன்முதலாக எழுத்தறிவித்த இறையோன் எழுதுகோலின் முக்கியத்துவம் குறித்தும் எழுத்தறிவு குறித்தும் கூறுவதைப் பாருங்கள். “ஓதுவீராக! படைத்த உம் இறைவனின் பெயரால் ஓதுவீராக! ஓதுவீராக! உம் இறைவன் மாபெரும் கொடையாளி; அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்; மனிதனுக்கு அவன் அறியாதவற்றைக் கற்றுக் கொடுத்தான்” (96:1-5) என்று கூறுகின்றான். நூல்களைப் படித்து அறிவை வளர்த்துக்கொள்வது ஒரு வகை; அதுபோலவே எழுதுகோலால் எழுதி எழுதி அறிவை வளர்த்துக்கொள்வது மற்றொரு வகை என்பதை இவ்வசனங்களில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.

  



முன்னோர்கள் எழுதியவை: எழுத்துத்துறை குறித்த விழிப்புணர்வு நம் சமுதாயத்திற்கு அவசியத் தேவையாகும். நம் முன்னோர்கள் எழுதி வைத்த நூல்கள் மூலம் இன்று நாம் அறிவைப் பெறுகின்றோம்; பல்வேறு தகவல்களை வாசித்துத் தெரிந்துகொள்கிறோம். அவர்கள் பேச்சாளர்களாக மட்டும் இருந்துவிட்டுச் சென்றிருந்தால் இன்று நாம் வாசிக்கும் நூல்கள் எதுவும் இருந்திருக்காது. அவர்கள் குர்ஆன், ஹதீஸ்கள், வரலாறு, ஃபிக்ஹு உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதிப் பதிவு செய்து வைத்துவிட்டுச் சென்றதால்தான் இன்று நாம் அவற்றின்மூலம் பயன்பெற்றுக்கொண்டிருக்கிறோம். அத்தகைய எழுத்துத்துறையில் திறமை வாய்ந்தவர்கள் இன்று மிகக் குறைவாகவே காணப்படுகின்றனர் என்பது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது.  

  

எழுதுகோல்மீது சத்தியம்: “நூன்; எழுதுகோலின் மீதும், அவர்கள் எழுதுபவற்றின் மீதும் சத்தியமாக!” (68:1) என்று அல்லாஹ் சத்தியம் செய்கிறான். எழுத்துக்கும் எழுதும் செயலுக்கும் உயர்ந்தோன் அல்லாஹ் மிகப்பெரும் முக்கியத்துவம் அளிக்கிறான். “அதை நீங்கள் எழுதிக் கொள்ளுங்கள்” (2:282) எனக் குர்ஆன் மூலம் கட்டளையிடுகிறான். இது வெறுமனே “அறிவைப் பெறுங்கள்” என்ற பொதுவான அறிவுரை அன்று. சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையில் எழுத்தறிவு தேவைப்படுகிறது என்பதற்கான குர்ஆனின் நேரடிச் சான்றாகும்.

 

எழுதப்பட்ட ஆவணம்: தற்காலத்தில் எல்லாமே எண்மமயமாகிவிட்டது. அதனால் காகிதங்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது. எனவே கையால் எழுதும் பழக்கம் அருகிவருகிறது. இருப்பினும் ஆவணங்கள் அனைத்தும் தட்டச்சு செய்யப்பட்டுக் கணினியில் சேமிக்கப்படுகின்றன. அந்த வகையில் அல்லாஹ் இட்டுள்ள கட்டளை இன்றும் நிறைவேற்றப்படுகிறது. குறிப்பாகக் கடன் கொடுக்கும்போது அதற்கான ஒப்பந்தத்தை எழுதிவைத்துக்கொள்ளுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். மேலும் “உங்களுக்கிடையே ஓர் எழுத்தர் நீதியுடன் அதை எழுதட்டும்” (2: 282) என்று அவன் கட்டளையிடுகின்றான். இந்தக் கட்டளையைப் பின்பற்றியோர் தாம் கொடுத்த கடனைத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கான நல்வாய்ப்பு இருக்கிறது. அதைப் பின்பற்றாதோர் ஏமாற்றமடைவதை நாம் அவ்வப்போது நாளிதழ்களிலும் சமூக ஊடகங்களிலும் கண்டுவருகிறோம்.  

“அது சிறிதாக இருந்தாலும் பெரிதாக இருந்தாலும், அதன் காலக்கெடு வரை அதை எழுதுவதில் சலிப்படையாதீர்” (2: 282) என்று அல்லாஹ் கூறுகிறான். இதன் மூலம் எழுத்து என்பது சமூக ஒழுங்கு, உரிமைப் பாதுகாப்பு, நம்பகத்தன்மை ஆகியவற்றுக்கான கருவி என்பதைப் புரிந்துகொள்ளலாம். மக்கள் தமக்கு மத்தியில் செய்கிற வியாபாரத்தில், கொடுக்கல் வாங்கலில் சண்டை சச்சரவு ஏற்படாமல் இருக்கவும், ஒருவருக்கொருவர் ஏமாற்றப்படாமல் இருக்கவும் ‘எழுத்துப் பதிவு’ மிக முக்கியமானது என்பதை அல்லாஹ் வலியுறுத்துகிறான்.

 




எழுத்துப் பதிவுக்கு அனுமதி: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை மனப்பாடம் செய்வதோடு மட்டுமல்லாமல், எழுதி வைத்துப் பாதுகாப்பதும் ஸஹாபாக்களிடையே காணப்பட்டது. அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ‘அஸ்-ஸஹீஃபத்துஸ்-ஸாதிகா’ எனப்படும் எழுத்துப் பதிவுகள் இதற்குச் சிறந்த உதாரணமாகும். இதன் மூலம் கேட்டல், புரிதல், எழுதுதல், பாதுகாத்தல், அடுத்த தலைமுறைக்கு வழங்குதல் என்ற அறிவுப் பாதுகாப்பு முறை உருவானது.

இது குறித்து அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நான் எதையெல்லாம் கேட்கிறேனோ, அவை அனைத்தையும் அவற்றைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதிக் கொண்டிருந்தேன்.

 

அப்போது குறைஷிகள் என்னைத் தடுத்து, “நீ கேட்கும் அனைத்தையும் எழுதிக் கொண்டிருக்கிறாயா? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஒரு மனிதர்தாமே! அவர்கள் கோபத்திலும் திருப்தியிலும் பேசுகிறார்களே!” என்று கூறினார்கள். எனவே, நான் எழுதுவதை நிறுத்திவிட்டேன். பின்னர் இதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அவர்கள் தமது விரலால் தமது வாயைச் சுட்டிக்காட்டி, ‘எழுதுவீராக! என் உயிர் எவன் கையில் இருக்கிறதோ அவன்மீது சத்தியமாக! இதிலிருந்து உண்மையைத் தவிர வேறு எதுவும் வெளிப்படுவதில்லை’ என்று கூறினார்கள்.” (அபூதாவூத்: 3646)

 

மற்றொரு முக்கியமான சான்று பின்வருமாறு: மக்கா வெற்றியின்போது நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது, அபூ ஷாஹ் என்பவர், “அல்லாஹ்வின் தூதரே! இதை எனக்காக எழுதித் தாருங்கள்” என்று கேட்டார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “அபூஷாஹுக்காக எழுதிக்கொடுங்கள்” என்று கூறினார்கள். (புகாரீ: 112) ஒருவர் கேட்டதை எழுதிக் கொடுக்குமாறு நபியவர்கள் நேரடியாகக் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. ‘எழுத்துதான் தகுதியான ஆதாரம்’ என்று நபியவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டது அவரின் கூரிய அறிவுக்கு அடையாளமாகும்.   

 

நபியவர்களின் கடிதங்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பல அரசர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் கடிதங்கள் அனுப்பியுள்ளார்கள். அவற்றை எழுதுவதற்கு எழுத்தர்களை நியமித்திருந்தார்கள். உதாரணமாக, ஸைத் இப்னு ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எழுத்தராகப் பணியாற்றியோருள் ஒருவர். இது ஒரு முக்கியமான சமூக உண்மையை வெளிப்படுத்துகிறது. இஸ்லாமியச் சமூகத்தில் எழுத்தர்கள் தேவைப்பட்டனர்; அதிகாரப்பூர்வ தகவல்கள் எழுத்து மூலம் பரிமாறப்பட்டன. ஆகவே நாம் செல்ல முடியாத இடத்திற்கும் நம் எழுத்து செல்லும் என்பதை இது உணர்த்துகிறது.   

 

எழுத்தர், எழுத்தாளர்: அழகிய கையெழுத்தில் ஒரு பிரதியை அல்லது பிறவற்றை எழுதித் தருபவர் ‘எழுத்தர்’ எனப்படுகிறார். சமுதாயம் பயனுகிற வகையில் கட்டுரைகள், நூல்கள் எழுதுபவர் ‘எழுத்தாளர்’ எனப்படுகிறார்.  தற்காலத்தில் பேச்சாளர்களின் எண்ணிக்கை அளவிற்கு எழுத்தர்களோ எழுத்தாளர்களோ இல்லை எனலாம்.  நூற்றில் பத்துப்பேர் பேச்சாளர் என்றால், ஆயிரத்தில் சிலரே எழுத்தாளர்களாக உள்ளனர். முன்னோர்கள் பலர்  எழுத்தாளர்களாக இருந்தார்கள். அவர்கள் எழுதிய நூல்களால் நாம் இன்று பயனடைகிறோம்; நாளை நம் சந்ததிகளும் பயனடைவார்கள். ஆனால் தற்கால வரலாறுகள், நிகழ்வுகள் உள்ளிட்டவற்றைத் தற்போது வாழ்கின்ற எழுத்தாளர்கள்தாம் எழுத வேண்டும். அப்போதுதான் அது நம் சந்ததிகளுக்குப் பயனுள்ளதாக அமையும்.

 

எழுத்தாளர்களை உருவாக்குவோம்: அரபுக் கல்லூரிகளில் பயிலும் காலத்தில் மாணவர் சொற்பயிற்சி மன்றத்தின் மூலம் மாணவர்களைப் பேச்சாளர்களாக உருவாக்கும் முயற்சி ஒருபுறம் நடைபெறும். மற்றொரு புறம் எழுத்தாளர்களை உருவாக்கும்முகமாக ‘மாணவர் கையேட்டுப் பிரதி’ வெளியிடப்படும். இந்த நடைமுறை பெரும்பாலான அரபுக் கல்லூரிகளில் இன்றும் உயிரோட்டத்துடனே உள்ளது எனலாம். மாணவர்கள் எழுதித்தரும் கட்டுரைகளை ஒருங்கிணைத்து, அழகிய கையெழுத்தில் எழுதும் எழுத்தர்களிடம் கொடுத்து எழுதி வாங்கி, அதை பைண்டிங் செய்து ஒரு ‘கையேட்டுப் பிரதி’யாக வெளியிடப்படும். இது எழுத்தாளர்களை உருவாக்கும் பெருமுயற்சியாகும். இருப்பினும் அங்குப் பெற்ற பயிற்சியைப் பட்டம் பெற்றபின்னரும் தொடர்ந்தோரே இன்று எழுத்தாளர்களாகவும் மொழிபெயர்ப்போராகவும் உள்ளனர். அத்தகையோர் மிக மிகக் குறைவுதான்.

 

எழுத்தறிவு பெற்ற பெண்:  "ஓர் ஆண் கல்வி கற்றால் அவன் மட்டுமே பயன்பெறுவான்; ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் அந்தத் தலைமுறையே பயன்பெறும்’ என்பது சான்றோர் வாக்கு. பெண்கள் எழுத்தறிவு பெறுவது ஒரு சமூகத்தின் மிகப்பெரிய மாற்றத்திற்கு வித்திடுகிறது. பெண் கல்வி மூலமாக, மார்க்கத்தில் ஊடுருவியுள்ள முரணான செயல்பாடுகள், ஒழுக்கமின்மை முதலானவை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, சீரிய செயல்பாடுகளைச் செய்கிற, ஒழுக்கத்தைப் பேணுகிற சமுதாயம் உருவாகும். குடும்ப நிர்வாகம், குழந்தை வளர்ப்பு, இல்லற வாழ்க்கை  உள்ளிட்ட அனைத்திலும் பெண்கள் சிறந்து விளங்க எழுத்தறிவே முதற்படியாக அமைகிறது. அதுபோலவே பெண் எழுத்தாளர்கள் அதிகமானோர் உருவாக வேண்டும். அவர்கள்தாம்  பெண்கள் குறித்த செய்திகளையும் அவர்களின் உணர்வுகளையும் உள்ளுணர்ந்து எழுத முடியும்.

 

ஆலிம் எழுத்தாளர்கள்: அன்றாடம் வெளிவரும் நாளிதழ்களிலும் வாரப் பத்திரிகைகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக எழுதப்படுகின்ற கட்டுரைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ‘பத்திரிகை மொழி’யில் விமர்சனம் எழுதுகின்ற ஆலிம் எழுத்தாளர்கள் மிகவும் குறைந்துபோய்விட்டனர்; ஏன், இல்லை என்றே சொல்லலாம். இந்த நிலை மாறவேண்டுமெனில், எழுத்தின் முக்கியத்துவத்தையும் அதன் ஆழமான வலிமையையும் ஆலிம்கள், உயர்கல்வி கற்றோர், உயர்பதவி வகிப்போர் முதலானோர் உணர வேண்டும். சிறந்த எழுத்தாளர்களோடு தொடர்புவைத்துக்கொண்டு அவர்கள் தம் எழுத்துத் திறனை வளர்த்துக்கொள்ள முன்வர வேண்டும்.

 

போட்டி நடத்துவோம்: கல்லூரி முதல்வர்கள், கல்விசார் பொறுப்பு வகிப்போர் தமக்குக் கீழுள்ள மாணவ-மாணவியர்க்கு எழுத்துப் பயிற்சி கொடுத்து, ஊக்கப்படுத்துவதோடு, அவ்வப்போது கட்டுரைப்போட்டி, குறிப்பிட்ட தலைப்பில் நூல் எழுதும் போட்டி ஆகியவற்றை நடத்த வேண்டும். போட்டியில் வென்று பரிசைப் பெற  வேண்டும் என்ற உந்துதல்தான் அவர்களை எழுதத் தூண்டும். அத்தகைய முயற்சியே காலத்தின் கட்டாயத் தேவையாகும். எழுதுகோல் மூலம் கற்பித்த இறைவன் எழுத்தின் வலிமையை நம் அனைவரையும் உணரச் செய்வானாக. மிகுதியான எழுத்தாளர்களை உருவாக்குவானாக.            

====================