சனி, 7 ஆகஸ்ட், 2010

நூல் வெளியீட்டு விழா (தினமணி)



சென்னை ஆயிஷா பதிப்பகம் சார்பாக, புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் அரபியில் எழுதிய அல்பிதாயா வந்நிஹாயா நூலின் ஒரு பகுதியான கஸஸுல் அன்பியாவின் தமிழாக்கம் நபிமார்கள் வரலாறு முதல் பாகம் வெளியீட்டு விழா 06.08.2010 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு, தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்றது.

பேராசிரியர், அ. முஹம்மது கான் ஃபாஸில் பாகவி இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். பி. ஜபருல்லாஹ் கான் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் தொடக்கமாக, ஹாஃபிழ் எம்.என். புகாரி திருமறை வசனங்களை ஓதினார். அதைத் தொடர்ந்துஆயிஷா பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பாளர் மௌலவி, நூ. அப்துல் ஹாதி பாகவி வரவேற்புரை நிகழ்த்தினார்.  ஆயிஷா பதிப்பகத்தின் நிறுவனர்களுள் ஒருவரான ஜே. இக்பால் கான்  துவக்கவுரை நிகழ்த்தினார்.  மௌலவி அ. முஹம்மது கான் ஃபாஸில் பாகவி தம்முடைய தலைமையுரையில், ஆயிஷா பதிப்பகத்தார் தொடங்கியுள்ள இப்பணி வெகுவாகப் பாராட்டத்தக்கது. அரபியில் நூற்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்கத் தகுந்த ஆட்கள் இல்லை. எனவே அரபிக் கல்லூரிகள் மொழிபெயர்ப்புக்காகவே ஒரு தனித்துறையைத் தொடங்க வேண்டும். மேலும், இவர்கள் தொடங்கியுள்ள இப்பணியைப்போல் மற்ற செல்வந்தர்களும் பொதுத்தொண்டு செய்ய முன்வர வேண்டும். அதற்கு அறிஞர்களும் செல்வந்தர்களும் ஒன்றிணைய வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அடுத்து, கவிக்கோ அப்துர் ரஹ்மான் வாழ்த்துரை வழங்கினார். அவர் தம்முடைய உரையில், என் வீட்டில் ஒரு பிரசவம் நடந்ததைப் போன்ற மகிழ்ச்சி எனக்கு உள்ளது. ஏனென்றால், ஆதாரப்பூர்வமான ஒரு வரலாற்று நூல் தமிழில் வராதா என நான் நீண்ட காலமாக ஏங்கிக்கொண்டிருந்தேன். என்னுடைய  ஏக்கத்தைத் தணிக்கும் வகையில் ஆயிஷா பதிப்பகத்தார் அதைக் கையில் எடுத்துக்கொண்டுச் செயல்படத் தொடங்கியுள்ளனர்; அவர்களின் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டார். 
   அவருக்கு அடுத்து, தமிழ்நாடு முஸ் லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர், டாக்டர், பேராசிரியர், எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் வாழ்த்துரை வழங்கினார். அவர் தம் உரையில், இந்நூல் மிகச் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. கான் பாகவி கூறியதைப்போல், மொழிபெயர்ப்புக்கென்றே அரபிக் கல்லூரிகளில் தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும். இப்பணி தொடர்ந்து நடைபெற வேண்டும். சமுதாய மக்களுக்குப் பயன்படும் வகையில் ஒவ்வொருவரும் பொதுப்பணியில் ஈடுபட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அடுத்து, டாக்டர் பி.எஸ். செய்யது மஸ்வூத் ஜமாலி நூல் அறிமுக உரை நிகழ்த்தினார். அவர் தம் உரையில், இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அல்பிதாயா வந்நிஹாயா எனும் இந்த வரலாற்று நூலை மிக நுட்பத்தோடு ஆராய்ச்சி செய்துள்ளார். அவர் நூஹ் நபியின் கப்பலைப் பற்றி ஆய்வுசெய்து கூறியுள்ள தகவல்களையும்  ஜூதி மலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நூஹ் நபியின் கப்பலை 1959ஆம் ஆண்டு அமெரிக்கத் தொல்லியல் துறை அறிஞர்கள் ஆய்வுசெய்து வெளியிட்ட தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது நான் அதிசயித்துப்போனேன். இரண்டும் ஒன்றாகவே உள்ளது என்று குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து, மௌலவி, ஏ.எம். முஹம்மது இல்யாஸ்  ஃபாஸில் பாகவி வாழ்த்துரை வழங்கினார். அவர் தம் உரையில், ஐரோப்பியர்களும் ஆங்கிலேயர்களும் இஸ்லாமிய வரலாற்றைத் திரித்து எழுதி, அதையே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடமாக வைத்துப் போதித்துவிட்டனர். இதனால் இஸ்லாமியர்களைப் பற்றிய தவறான சிந்தனையே மக்கள் மத்தியில் உள்ளது.  மேலும், ஆங்கிலேயர்கள், ஜிஹாத் எனும் அரபி வார்த்தைக்கு, போர் என்ற தவறான அர்த்தத்தைக் கூறி இஸ்லாமிய மார்க்கம் போரையே வலியுறுத்திக் கூறுகின்ற ஒரு வன்மையாக மார்க்கம் என்ற பொய்யான தோற்றத்தை உண்டாக்கியுள்ளனர். ஆனால், ஜிஹாத் எனும் வார்த்தைக்கு, போராட்டம் என்று பொருள் என்று கூறினார்.  எனவே இதுபோன்ற தவறான செய்திகளைப் படித்துக்கொண்டிருக்கிற நாம், நபிமார்களைப் பற்றிய சரியான தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமாயின், `நபிமார்கள் வரலாறு எனும் இந்த நூலை வாங்கிப் படியுங்கள் என்று குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து,   மௌலவி, காஞ்சி அப்துல் ரவூப் பாகவியும், டாக்டர் அப்துல்லாஹ்வும் (பெரியார்தாசன்) வாழ்த்துரை வழங்கினர். டாக்டர், அப்துல்லாஹ் தம்முடைய உரையில், இந்நூல் பாமரனும் விளங்கிக்கொள்ளக்கூடிய, எல்லா மக்களும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், எளிய நடையில் இனிய தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய இந்நூலை மலிவுப் பதிப்பில் அச்சிட்டு எல்லோரும் வாங்கும் நிலையை உருவாக்க ஆயிஷா பதிப்பகத்தார் ஆவண செய்ய வேண்டும்; இந்நூல் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சென்னைப் பல்கலைக் கழக அரபித் துறைத் தலைவர், டாக்டர். பி. நிஸார் அஹ்மத்  நூலை வெளியிட்டார்.  எல்.கே.எ. சையித் அஹ்மத் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.  நிகழ்ச்சியில் பங்குகொண்ட சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில் ஆயிஷா பதிப்பகத்தின் நிறுவனர்களுள் ஒருவரான எம். சாதிக் பாட்சா நன்றியுரை கூறினார்.  
                                                                                                 -தருபவர்:   நூ. அப்துல் ஹாதி பாகவி

கருத்துகள் இல்லை: