புதன், 10 ஜூன், 2026

மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா ஹதீஸ் நூலின் 2ஆம் பாகம் - தமிழாக்கம் தந்தோன் உரை

 நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா ஹதீஸ் நூலின் 2ஆம் பாகம் இப்போது வெளிவந்துவிட்டது. 


அந்நூலில் நான் எழுதிய 'மொழிபெயர்ப்பாளர் உரை' உங்கள் பார்வைக்கு...



தமிழாக்கம் தந்தோன் உரை

----------------------------------


அகில மக்கள் அனைவருக்கும் வழிகாட்டும் வகையில் இறைமறைக் குர்ஆன் எனும் பொதுமறையை அகிலத்தாருக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். இறைமறைப்படியும் இறைக்கட்டளைப்படியும் வாழ்ந்து வழிகாட்டிய இறுதி இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீதும் அவர்கள்தம் குடும்பத்தார். உற்ற தோழர்கள் ஆகியோர்மீதும் அல்லாஹ்வின் கருணையும் அருளும் என்றென்றும் பொழிவதாக


அல்லாஹ்வின் பெருங்கருணையால் இதோ இப்போது மஆலிமுஸ் ஸுன்னா நூலின் இரண்டாம் பாகம் உங்கள் கைகளில் தவழ்கிறது. அல்ஹம்து லில்லாஹ். நான் தமிழாக்கம் செய்த ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் இன்னும் அச்சுக்குச் செல்லாமல் உள்ளன. அந்த வரிசையில் இதுவும் சேர்ந்துவிடக் கூடாது என்று அவ்வப்போது அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தேன். அதன் பயனாக முதல் பாகம் வெளியிடப்பட்டு ஈராண்டுகளுக்குப்பின் இந்த இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது. இது தாமதம்தான் என்றாலும் இப்போதேனும் வெளிவந்ததில் மிக்க மகிழ்ச்சி.


கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நான் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டி ருந்தாலும், இறுதிப் பத்தாண்டுகளாக நபிமொழித் தொகுப்பு நூல்களைத் தமிழாக்கம் செய்வதில் ஈடுபட்டுவருவது அல்லாஹ் எனக்கு அருளிய நற்பேறாகக் கருதுகிறேன். ஒவ்வொரு பள்ளிவாசலுக்கும் சென்று தொழும்போது, அங்கு அலமாரியில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள அறுபெரும் நூல்களுள் நான் தமிழாக்கம் செய்த சுனனுன் நஸாயீ சுனன் இப்னுமாஜா ஆகிய நூல்களைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியடைவேன்.


ஒரே தொகுப்பில் திருக்குர்ஆன் இருப்பதைப்போலவே. ஒரே தொகுப்பில் நபிமொழி களும் இருந்தால் பயனுள்ளதாக இருக்குமே என்று நான் நீண்ட காலமாகவே எண்ணியதுண்டு. அதற்கொரு தீர்வாகத்தான் இந்த மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா நூல் திகழ்கிறது. பதினான்கு நூல்களில் உள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நபிமொழிகளை நுணுகி ஆராய்ந்து. கூறியது கூறல் வகை நபிமொழிகளை ஒதுக்கி வைத்துவிட்டு சான்றுமிக்க நபிமொழிகளை மட்டும் தேர்வுசெய்து. கூடுதல் செய்தி அடங்கிய வரிகளை அதன் கீழே கொண்டுவந்து முழுமையான நபிமொழிக் கோவையாக நமக்குத் தந்திருக்கிறார் இதன் மூலநூலாசிரியர். இதனால் ஹதீஸ்கள் அனைத்தையும் ஒருசேர, ஒரே நூலில் படிக்கக்கூடிய நல்வாய்ப்பு வாசகர்களுக்குக் கிடைத்துள்ளது.


திருக்குர் ஆனை ஒரே தொகுப்பாக வாசிப்பதைப் போன்று நபிமொழிகள் அனைத்தையும் ஒரே தொகுப்பாகப் படித்துத் தெரிந்துகொள்ள நாடுவோருக்கு உகந்த நூல்தான் இது பள்ளிவாசல்தோறும் அதிகாலை அல்லது அந்தி மாலையில் வாசிக்கப்பட வேண்டிய நூலிது வீட்டில் பிள்ளைகள் முன்னிலையில் வாசித்துக்காட்டப்பட வேண்டிய நூலிது சொற்பொழிவாளர்கள் தம்முடைய சொற்பொழிவுக்கான குறிப்புகளைத் தலைப்புவாரியாக மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் வகையில் இந்நூல் அமைக்கப்பெற்றுள்ளது. ஒரு தலைப்பின்கீழ் உள்ள அத்தனைச் செய்திகளையும் ஒரே இடத்தில் எடுத்துக்கொள்ளலாம்.


இந்த இரண்டாம் பாகத்தில் திருக்குர்ஆனிலுள்ள சில அத்தியாயங்களின் சிறப்புகள். திருக்குர்ஆன் ஓதலின்போது சஜ்தா செய்ய வேண்டிய இடங்கள். திருக்குர்ஆன் விரிவுரை. வழிபாடுகள் எனும் பகுதியில் தூய்மை, குளியல், பாங்கு. தொழுகை நேரங்கள், மஸ்ஜிதுகள். தொழுகைக்கான இடங்கள். தொழுகையின் சிறப்புகள் உள்ளிட்ட தலைப்புகளின்கீழ் 793 நபிமொழிகள் இடம்பெற்றுள்ளன. திருக்குர்ஆன் வசனங்களுக்கான விரிவுரையைக் காண, பல்வேறு நூல்களைப் புரட்ட வேண்டிய தேவையைக் குறைத்து. இந்நூல் நம் நேரத்தை மிச்சப்படுத்துகிறது.


அதேநேரத்தில் பலவீனமான ஹதீஸ்களும் நபிமொழி எனும் பெயரில் கற்பனையாகப் புகுத்தப்பட்டவையும் இதில் இடம்பெறவில்லை என்பதை நாம் உறுதியாகக் கூறலாம். அத்தகைய நபிமொழிகளை இந்நூலில் தேடுவோருக்கு ஏமாற்றமே மிஞ்சும். அந்த வகையில்

இந்த நூலின் நம்பகத்தன்மை மிகுதியாகிறது. ஹதீஸ்களுக்கு ஏற்பத் தம் வாழ்வியலை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றெண்ணும் இளம் தலைமுறையினருக்கு ஏற்ற நூலிது. எனவே இதிலுள்ள ஹதீஸ்களைப் படித்து, உங்கள் அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்த முயலுங்கள்.


உங்கள் மஹல்லா பள்ளிவாசல்களில் இதனை வாங்கி வையுங்கள். உங்கள் நண்பர்களுக்கு இதனை அறிமுகப்படுத்துங்கள். உங்கள் உறவினர்களுக்கும் பள்ளிவாசல் இமாமுக்கும் வாங்கிப் பரிசளியுங்கள்.


இந்நூலின் தமிழாக்கத்தைப் படித்து. மிகச் சிறந்த முறையில் அணிந்துரை வழங்கிய அரபுக் கல்லூரி முதல்வர்கள். பேராசிரியர்கள், பதிப்பகத்தார். வடிவமைப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.


இப்பணியில் ஈடுபட்ட எங்களுக்கும் எங்களுக்கு முன்னர் ஈடுபட்டோருக்கும் உயர்ந்தோன் அல்லாஹ் பாவமன்னிப்பை வழங்கி, ஈருலக நற்பேறுகளைத் தருவானாக.


அன்புடன்


மௌலவி நூ.அப்துல் ஹாதி பாகவி


பட்டினம்பாக்கம், சென்னை 28.

------------------------------------------


இந்நூல் 

கிடைக்குமிடம்: 

அப்துல்லாஹ் பப்ளிகேஷன்ஸ் 

மயிலாடுதுறை. 

தொடர்புக்கு: 93447 42844 / 99522 31434


ரஹ்மத் புக் ஹவுஸ்

மண்ணடி, சென்னை-1

தொடர்புக்கு: 91718 46184 / 96001 25000


ஆயிஷா டிரேடர்ஸ்

லால்பேட்டை. 

தொடர்புக்கு: 99440 08712/ 89407 91234


விலை: ரூ. 600 + (கூரியர் செலவு) 




கருத்துகள் இல்லை: