சனி, 31 அக்டோபர், 2015

சிந்தையை மாற்றிய கவிக்கோவின் சிந்தனை!

(கவிக்கோவின் கருவூலம் எனும் நூலில் இடம்பெற்றுள்ள எனது ஆக்கம்)

மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்.,


நான் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் ஓதிக்கொண்டிருந்த காலத்திலேயே கவிக்கோ அவர்களை அறிவேன். அவருடைய கவிதைகளையும் கட்டுரைகளையும் தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். அவருடைய ஆழமான சிந்தனைகளையும் நுண்ணிய கற்பனைகளையும் இரசித்துச் சுவைத்திருக்கிறேன். அவருடைய கவிதைகளில் மிகுதியாக மறுமைச் சிந்தனையையும் இறைவனைப் பற்றிய சிந்தனைத் தூண்டலையும் காண்கிறேன்.


நான் ஒரு தடவை அவரை அவர்தம் இல்லத்தில் சந்தித்து உரையாடியபோது, திருக்குர்ஆன் வசனங்களுக்கும் பொய்யாநபியுரைத்த அறவுரைகளுக்கும் புதியதொரு கோணத்தில் விளக்கவுரை கூறி என்னை வியப்பிலாழ்த்தினார். இத்தகைய கோணத்தில் ஆலிம்கள் சிந்திக்கவில்லையே என நான் அவரிடம் கூறினேன். தங்களைப் போன்ற இளம் மௌலவிகள் புதிய கோணத்தில் திருக்குர்ஆனைச் சிந்தித்து அதன் ஆழிய கருத்துகளை மக்களுக்கு எடுத்தோத வேண்டும் என்று அறிவுரை நல்கினார்.




முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றிய அவருடைய கவிதையில், புதையலுக்குக்கீழ் இருந்துகொண்டு பிச்சையெடுக்கிறோம் என்று எழுதியிருந்தார். ஆம்.  திருக்குர்ஆன் ஒரு கருத்துப் பெட்டகம்; அது ஒரு கருத்துப் புதையல். மனிதன் எந்த அளவிற்கு ஆழமாகவும் நுட்பமாகவும் சிந்திக்கின்றானோ அதற்கேற்றவாறு  பொருள் விரிந்து கொடுக்கக்கூடியதாகும். இந்தச் சமுதாயம்  திருக்குர்ஆனையும்  ஆலிம்களையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை. இரண்டையுமே ஃபாத்திஹாவிற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறது என்று நான் என் உரைகளில் சொல்வதுண்டு. திருக்குர்ஆனைச் செவ்வனே சிந்திக்காமல் அதன் கருத்துகளை ஆராயாமல் பிறரிடம் நாம் தீர்வுகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை இக்கவிதை மூலம் நமக்குச் சுட்டிக்காட்டுகிறார்.  


எனக்குக் கவித்திறன் கிடைக்கப்பெற்றபோது, திரைப்படப் பாடல் வரிகளை ஆங்காங்கே செவியுற்றுக் கூர்ந்து நோக்கத் தொடங்கினேன். அப்போது, இதைவிடச் சிறந்த பாடல்களை நாமே எழுதலாமே என்று நினைத்தேன். அத்தருணத்தில் ஒரு தடவை கவிக்கோ அவர்களின் கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில், திரைப்படங்களுக்காகப் பாடல்கள் எழுதித் தருமாறு சிலர்  அவரிடம் கேட்டபோது, அம்மி கொத்த சிற்பி எதற்கு?  என்று அவர் விடையளித்ததைப் படிக்க நேரிட்டது. அவருடைய அந்தக் கவிதை வரி, என்னுடைய எண்ணத்தை மாற்றிவிட்டது.




அவருடைய கவிதை வரியை நான் மற்றொரு கோணத்தில் சிந்தித்தேன். மறுமை குறித்த சிந்தனைதான் அவரை இப்படிப் பேச வைத்துள்ளது. இறைவனால் வழங்கப்பட்ட திறமையை மக்களின் நன்மைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர, பணம், காசு கிடைக்கிறது என்பதற்காக எதையும்  செய்து தன் திறமையை விற்பனை செய்யக்கூடாது என்பதையும் புரிந்துகொண்டேன். ஓர் ஆலிம் அல்லாதவரின் உள்ளத்தில் இறையச்சமும் அவனைக் குறித்த சிந்தனையும் இந்த அளவிற்கு நிழலாடுகிறது என்றால் ஓர் ஆலிமாகிய என் உள்ளத்தில் எத்தகைய சிந்தனை ஏற்பட வேண்டும் என்று என் சிந்தனை விரிவடையத் தொடங்கியது; குறுகிய எண்ணம் சிதைந்துபோனது.


கவிஞன் என்பவன் தன் உயர்சிந்தனையால், அறவே சிந்திக்காமல் தூங்கிக்கொண்டிருக்கும் உள்ளங்களைத் தட்டி எழுப்ப வேண்டும்; மக்களின் கல்வி வளர்ச்சிக்காக, சமுதாய மேம்பாட்டிற்காக, முன்னேற்றத்திற்காகப் பாடுபட வேண்டும்; அவனுடைய சிந்தனை பிறரின் சிந்தையைத் தூண்ட வேண்டும். அத்தகைய சிந்தனையும் நுண்ணறிவும் கொண்ட மக்கள் கவிஞராகத்தான் அண்ணன் கவிக்கோ அவர்களைக் காண்கிறேன். அவருடைய எழுத்தும் பேச்சும் மக்களுக்குப் பயன்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆனால் முஸ்லிம் சமுதாயம் அவருடைய தமிழையும் எழுத்தையும் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.



= என்னுடைய ஆக்கம் இடம்பெற வழிகாட்டி உதவி செய்த ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

========================================

சனி, 24 அக்டோபர், 2015

தினமணி ஆசிரியருக்கு

தினமணி ஆசிரியருக்கு
தினமணி நாளிதழை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், ஜைனர் உள்ளிட்ட பல்வேறு கடவுள் நம்பிக்கையாளர்கள் படித்து வருகின்றார்கள். அப்படிப்பட்ட இதழில் இந்து மத நம்பிக்கையைத் திணிப்பது சரியில்லை. மழையைப் பொழியச் செய்வது அவரவர் நம்பிக்கையின்படி அவரவரின் இறைவன். அப்படியிருக்கும்போது வருணனின் கருணை கிடைக்குமா? என்று தலைப்பிடுவது பிறமத நம்பிக்கையாளர்களுக்கு எதிரானது. ஒரு பொதுவான செய்திக்குள் இந்து மத நம்பிக்கையைத் திணிக்க முயல்வது பிறமத நம்பிக்கைகொண்ட வாசகர்களுக்கு நெருடலாக உள்ளது. எனவே இதுபோன்ற இந்து மத நம்பிக்கைகளைப் பொதுவான செய்திக்குள் திணிக்க முயல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 

சமுதாய முன்னேற்றத்திற்குப் பெரிதும் பங்கு வகிப்பது யார்?







மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ், அல்ஹாஜ் சதீதுத்தீன் ஃபாஸில் பாகவி அவர்களின் தலைமையின்கீழ் இயங்கிவரும் அல்ஹுதா அரபிக் கல்லூரியில் நேற்று 09 01 1437 (23.10.2015) எதிர்வரும் ஆஷூரா நாளை முன்னிட்டு மன்பவுல்ஹுதா மாணவ மன்றத்தில் சமுதாய முன்னேற்றத்திற்குப் பெரிதும் பங்கு வகிப்பது யார்? எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பல்வேறு தலைப்புகளில் ஐவர் பேசினர். அதில் நடுவராகப் பொறுப்பேற்று கருத்துரை வழங்கினேன். 

அதில் சமுதாய முன்னேற்றத்திற்குக் கல்வியின் அவசியம் என்ன, அதைப் பெற்றுக்கொண்டிருக்கின்ற மாணவர்களின் பொறுப்பு என்ன, அவர்கள் எப்படியெல்லாம் தம்மை முன்னேற்றப்படுத்திக்கொள்ள முனைய வேண்டும், எந்தெந்தத் துறைகளிலெல்லாம் முன்னேற வேண்டும், எதிலெல்லாம் மாணவர்களுக்கு வாய்ப்பிருக்கின்றது, மொழிபெயர்ப்புத் துறையின் பயன் என்ன, அதில் எவ்வாறு தம்மை ஈடுபடுத்திக்கொள்வது, பத்திரிகைத்துறையில் எவ்வாறு காலடி பதிப்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாணவர்களிடையே பரிமாறிக்கொண்டேன். 

சனி, 17 அக்டோபர், 2015

பசித்தோருக்கு உணவு வழங்குவோம்!

   -மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்.,

1979ஆம் ஆண்டு முதல் உலக உணவு நாள் (World Food Day) ஆண்டுதோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. "உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோரே'', "தானத்தில் சிறந்தது அன்னதானம்'' ஆகிய முதுமொழிகள் உணவு வழங்குவதன் சிறப்பையும் உயர்வையும் எடுத்துரைக்கின்றன.

"தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்'' என்ற பாரதியாரின் குரல்  உணவின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற அதேவேளையில், "அண்டைவீட்டார் பசித்திருக்க வயிறு நிறைய உண்பவன் இறைநம்பிக்கையாளன் இல்லை'' என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறிய முத்தான வார்த்தைகள் உணவைப் பகிர்ந்துண்ண வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. 

"ஒருவரின் உணவு இருவருக்குப் போதும்; இருவரின் உணவு நால்வருக்குப் போதும்; நால்வரின் உணவு எண்மருக்குப் போதும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: திர்மிதீ: 1743) இதன்மூலம் ஒருவர் தம் உணவைப் பிறருக்குப் பகிர்ந்து கொடுத்து உண்ண வேண்டும் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அது மட்டுமல்ல, சிறிதளவு உணவே ஒருவருக்குப் போதும் என்பதையும் இதன்மூலம் நாம் அறிகிறோம்.

உணவு கிடைக்காமல் ஆண்டுதோறும் பட்டினியால் இறப்போர் 3 கோடிக்கும் மேல் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. எத்தனையோ வசதி வாய்ப்புகள் இருந்தும், பசுமைப் புரட்சியெல்லாம் ஏற்பட்டும் என்ன பயன்? உணவு கிடைக்காமல் மக்கள் இறந்து கொண்டிருக்கின்றார்களே! சிலருக்கு  ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான் கிடைக்கிறது. சிலருக்கு அரைவயிற்றுக் கஞ்சிதான் கிடைக்கிறது!

"சலாமைப் பரப்புங்கள்; (பசித்தோருக்கு) உணவு வழங்குங்கள்; மக்கள் உறங்கும் நடுநிசி வேளையில் (எழுந்து) தொழுகுங்கள்; அமைதியாகச் சொர்க்கத்தில் நுழைவீர்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  பசித்தோருக்கு உணவு வழங்குவது சொர்க்கத்தில் நுழையக் காரணமாக அமைகிறது என்பதை அறிகிறோம்.

உணவு வழங்குவதன் முக்கியத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் மிகவும் வலியுறுத்திக் கூறியுள்ளதை உணர்ந்துள்ள முஸ்லிம்கள் பிறருக்கு உணவு வழங்குவதை அவர்களின் அடிப்படைப் பண்பாகக் காணமுடிகிறது. அதனால்தான் மக்காவில் ஹஜ்ஜின்போது அல்லாஹ்விற்காக அறுக்கப்படுகின்ற  ஆடு, ஒட்டகம் ஆகியவற்றின் இறைச்சிகள் ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. ஆனால் அதேநேரத்தில் சில பணக்கார நாடுகளில் தம் தேவைக்கு எஞ்சிய பொருள்களைக் கடலில் கொட்டுகின்றார்கள்.  சந்தையில் பொருள்களின் விலை குறைந்துவிடாமல் ஒரு கட்டுக்குள் இருப்பதற்காக இவ்வாறு செய்கின்றார்கள். தன் நாட்டு மக்களுக்கும் கொடுப்பதில்லை. பிற நாட்டு மக்களுக்கும் கொடுப்பதில்லை. இதனால் ஒரு பக்கம் அமோக விளைச்சல் இருந்தும் மறுபக்கம் பட்டினிச் சாவுகளும் வறுமையும் தாண்டவமாடுகின்றன.

படைத்தோன் அல்லாஹ் பாரிலோர் அனைவருக்கும் குறைவின்றி நிறைவாக உணவுப் பொருள்களை விளையச் செய்கின்றான். உணவுப் பொருள்களை அபரிமிதமாக வழங்குகின்றான். ஆனால் குறுமதி கொண்ட மனிதனோ அவ்வுணவுப் பொருள்களை வீணாக்குகின்றான். உரிய முறையில் சேமித்து வைக்காமலும் தேவையுடையோருக்குக் கொடுக்காமலும் விரயம் செய்கிறான். இதனால்தான் இவ்வளவு பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. உணவுப் பற்றாக்குறையும் வறுமையும் ஏற்படுகின்றன. 

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் உணவுண்ணும்போதெல்லாம் தம்மோடு ஒரு விருந்தினர் இல்லாமல் உண்ணமாட்டார்கள். அத்தகைய உயர்பண்பு அவர்களிடம் இருந்ததால்தான் அவர் இறைவனின் நேசத்திற்குரிய நண்பரானார். பசித்தோருக்கு உணவு வழங்குவதைக் கண்டு படைத்தோன் இறைவன் மட்டில்லா மகிழ்ச்சியடைகிறான் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இறைவனின் உவப்பை நாடி உணவு வழங்குவதைத் திருக்குர்ஆனில் உயர்ந்தோன் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்: அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டவர்களுக்கும் உணவளிக்கின்றனர். (தம்மிடம் பெறுபவர்களை நோக்கி) "நாம் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்தை நாடியேயன்றி, உங்கüடம் நாம் யாதொரு கூலியையோ அல்லது (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதையோ கருதவில்லை'' என்று கூறுகின்றார்கள். (76: 8-9)

மேலும் திருக்குர்ஆனைப் புரட்டி வாசிக்கின்றபோது சில குற்றங்களுக்கு உணவு வழங்குவதையே பரிகாரமாக ஆக்கியுள்ளான்.
எவரேனும் தங்கள் மனைவிகளைத் (தம்) தாய்க்கு ஒப்பிட்டுக் கூறிய பின்னர், அவர்களிடம் திரும்ப(ச் சேர்ந்துகொள்ள) விரும்பினால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்னதாகவே (இவ்வாறு ஒப்பிட்டுக் கூறிய குற்றத்திற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதனை (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசம் செய்கின்றான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.

(விடுதலை செய்யக்கூடிய அடிமையை) எவரேனும் பெற்றிருக்காவிடில், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்னதாகவே, (அவன்) இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். (இவ்வாறு நோன்பு நோற்கச்) சக்தி பெறாதவன் அறுபது ஏழைகளுக்கு (நடுநிலையான) உணவளிக்கட்டும். (58: 3-4)

"அபூதர்ரே! நீ குழம்பு சமைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்திக்கொள்; உன் அண்டைவீட்டினரையும் கவனித்துக்கொள்'' என்று  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்: 4758) நபிகள் நாயகத்தின் வாக்குப்படி, ஒவ்வொருவரும் தம் அண்டைவீட்டாரைக் கவனித்துக்கொண்டால், ஒவ்வோர் ஊராரும் தம் அண்டையிலுள்ள ஊர்களைக்  கவனித்துக்கொண்டால், ஒவ்வொரு மாவட்டத்தாரும் தம் அண்டை மாவட்டத்திலுள்ளோரைக் கவனித்துக்கொண்டால், ஒவ்வொரு மாநிலத்தாரும் தம் அண்டை மாநிலத்தாரைக் கவனித்துக்கொண்டால், ஒவ்வொரு நாட்டினரும் தம் அண்டை நாட்டினரைக் கவனித்துக்கொண்டால் இவ்வுலகில் பசி ஏது? பட்டினி ஏது?

==============================================



செவ்வாய், 22 செப்டம்பர், 2015

ஆசிரியரை மதிப்போம்!


-மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்.,

கற்றோரும் கல்லாதோரும் சமமாவார்களா? (39: 9) என்று அல்லாஹ் தன் அருள்மறையில் வினவுகின்றான். அதன்மூலம் மானிடரைக் கற்கத் தூண்டுகின்றான். கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு எனும் மூதுரைக்கேற்ப கல்வியாளர்கள் சென்றவிடமெல்லாம் சிறப்புறுவதையும் மதிக்கப்படுவதையும் காண்கிறோம். கல்வி கற்றோர் ஒவ்வொருவரும் தம் திறமைக்கேற்பவும் ஆர்வத்திற்கேற்பவும் ஒவ்வொரு பணியைத் திறம்படச் செய்துவரும் அதேநேரத்தில் சிலர் தம் வாழ்க்கையைக் கல்விக்காகவே அர்ப்பணிப்பதைக் காண்கிறோம். அவர்கள்தாம் ஆசிரியர்கள். அவர்கள் தாம் கற்ற கல்வியைப் பிறருக்குக் கற்பிக்க வேண்டும் என்ற ஆவலில் வந்தவர்கள்; அவர்கள் தம் வருவாயைக் குறிக்கோளாகக் கொள்ளாது தாம் கற்ற கல்வியைப் பிறருக்குக் கற்பிக்க வேண்டும் என்ற ஒரே இலட்சியத்தில் உள்ளவர்கள்; மாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்குபவர்கள்; அதன்மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமிடுபவர்கள். எனவே அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்.

இத்தகைய சிறப்பும் உயர்வும் கொண்ட ஆசிரியர்களை மாணவர்கள் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவர் தம் பெற்றோருக்குப்பின் இரண்டாம் பெற்றோராக மதிக்க வேண்டியது ஆசிரியர்களைத்தான். படிக்கின்ற புத்தகத்திற்கும் படித்துக் கொடுக்கின்ற ஆசிரியருக்கும் மரியாதை கொடு; நீ உன் வாழ்வில் உயர்வாய் என்று அடிக்கடி சொல்வதுண்டு.
அடிக்கடி கோபப்படுகின்றார்; அவ்வப்போது அடிக்கின்றார் என்று ஆசிரியர்கள்மீது குற்றச்சாட்டு சொல்வதுண்டு. மாணவர்கள் ஆசிரியரின் சொற்படி கேட்டு நடந்தால், அவர் சொன்னதைப் படித்தால், அவர் சொன்னதை மனனம் செய்தால், அவர் சொன்னபடி வீட்டுப்பாடம் செய்துவந்தால்,  வகுப்பில் சேட்டை செய்யாமல் பாடத்தைக் கூர்மையாகக் கவனித்தால் அவர் ஏன் கோபப்படப் போகிறார்? கோபம் என்பது மனித இயல்பு. ஆசிரியரின் கோபம் மாணவர்களின் நலனைக் கருதித்தானே தவிர அவர்கள்மீது வெறிகொண்டு அடிப்பதற்காகவோ கடுமையாகத் தண்டிப்பதற்காகவோ அல்ல.

ஒவ்வோராண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. டாக்டர் இராதா கிருஷ்ணன்  அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுகிறோம். அவர் ஆசிரியராக இருந்து செய்த பணிகள் ஏராளம். அவர் உருவாக்கிய மாணவர்கள் ஏராளம்.  தொண்டுள்ளத்தோடு அவர் செய்த ஆசிரியப் பணிதான் அவரைக் குடியரசுத் தலைவராக உயர்த்தியது. டாக்டர் ஜாகீர் உசேன் அவர்களுக்குக் கல்வியின்மீதிருந்த ஆர்வத்தால் ஜாமியா மில்லியா இஸ்லாமியா எனும் பல்கலைக் கழகத்தை உருவாக்கிக் கல்விப்பணியாற்றினார். அப்பல்கலைக் கழகத்தின் நிதி நிலைமையைச் சமாளிக்க முடியாதபோது தம் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டதோடு பிற ஆசிரியர்களிடமும் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டிய போது அவர்களும் குறைத்துக் கொண்டார்கள். அப்படி அவர்கள் செய்த தியாகத்தில்தான் அப்பல்கலைக் கழகம் வளர்ந்தது. அவரது அர்ப்பணிப்பு உணர்வாலும் தொண்டுள்ளத்தோடு செய்த கல்விப்பணியாலும் இந்திய நாட்டின் மூன்றாம் குடியரசுத் தலைவராக உயர்ந்தார்.

கல்வியின் மீதும் பிறந்த நாட்டின் மீதும் அதீத பற்றுக்கொண்ட டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தாம் பெற்ற கல்வியை எப்படியேனும் தம் தாய்நாட்டு மக்களுக்கே வழங்க வேண்டும் என்ற உயர்நோக்கத்தில், குடியரசுத் தலைவர் பதவியி-ருந்து ஓய்வு பெற்ற பின்னரும் நாடெங்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சந்தித்த மாணவ, மாணவிகளிடமெல்லாம் கல்வியைப் போதித்தார். அறிவொளி  ஊட்டினார். இன்று அவர் மறைந்தாலும் அவரின் கனவுகளும் சிந்தனைகளும் இளையோர் மனங்களில் இளமை குன்றாது வாழ்ந்துகொண்டிருக்கின்றன. நிச்சயம் அவை உயிரோட்டம் பெறும்.  அவர் அவ்வப்போது தம் ஆசிரியர்களைச் சந்தித்ததும் அவர்கள் தம் முன்னேற்றத்திற்குத் தூண்டுகோல்களாக  இருந்ததை மக்கள் மன்றத்தில் நினைவுகூர்ந்ததும் ஆசிரியர்களின் உயர்வெண்ணத்தையும் தியாக உணர்வையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

ஓர் ஆசிரியரின் உள்ளம் ஓர் அன்னையின் உள்ளத்திற்குச் சமம். தன் பிள்ளை தன்னைவிட மேம்பட வேண்டும்; புகழ்பெற வேண்டும் என்று எண்ணுவதைப் போல, தம் மாணவர் தம்மைவிட மேலோங்க வேண்டும்; சிறப்புற வேண்டும்; பற்பல துறைகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று உயர்வெண்ணம் கொள்வார். அங்கு சாதி, மத வேறுபாடுகளோ, குலத்தால் உயர்வு, தாழ்வு என்ற கீழ்த்தர எண்ணங்களோ அறவே இருக்காது. தாம் ஏணியாக இருந்துகொண்டு தம் மாணவர்களை மேலே ஏற்றிவிடுபவரே ஆசிரியர்; அவர்களின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் கண்டு முகம் சுழிக்காமலும் பொறாமைப்படாமலும் இருப்பவரே உண்மையான ஆசிரியர்.

இந்தச் சமூகம் முன்னேற வேண்டுமெனில் கல்வி தேவை; அக்கல்வியைக் கற்பிக்க ஆசிரியர்கள் தேவை. அந்த ஆசிரியர்கள்தாம் இந்நாட்டு மக்களின் ஒழுக்கத்திற்கும் பண்பாடுகளுக்கும் முதுகெலும்புகள். அவர்களால் போதிக்கப்படுகின்ற ஒழுக்கங்களும் நீதிபோதனைகளும்தாம் தலைசிறந்த, ஒழுக்கமான மாணவர்களை உருவாக்குகின்றன. ஆசிரியர்கள் தம் அன்பான போதனையால் தரமற்ற, கீழ்த்தரமான எண்ணங்களை உடைய மாணவர்களின் மனங்களைக்கூட   மாற்றிவிட முடியும்.

விளைநிலத்தில் போடப்படுகின்ற விதைகளைப்போலவே ஆசிரியர்களின் உரைகள்; அவர்கள் நல்ல விதைகளைப் போட்டால் நல்ல மகசூலை அறுவடை செய்யலாம். அவர்கள் அந்த விளைநிலத்தில் நஞ்சு விதைகளைப் போட்டால் அது போன்ற நஞ்சு மரங்களைத்தான் நாம் காண முடியும். எனவே ஆசிரியர்கள் தம் மாணவர்களைக் கெடுப்போர் அல்லர். ஒரு தரிசு நிலத்தை ஒரு விவசாயி பண்படுத்தி, விதைகள் தூவி, பின்னர் நல்ல மகசூலை நாட்டு மக்களுக்குத் தருவதைப்போல், மந்த நிலையிலுள்ள மாணவர்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டாலும் அவர்களுக்குத் தோதுவான முறையில் மீண்டும் மீண்டும் சொல்-க் கொடுத்து, புரிய வைத்து, அவர்களை மேல்நிலைக்குக் கொண்டு வருவதில்தான் ஓர் ஆசிரியரின் திறமையும் தியாகமும் மறைந்திருக்கின்றன. மேலோட்டமாகப் பார்த்து ஆசிரியர்களை மதிப்பிடாதீர்கள். அவர்களின் பணிக்குள் மறைந்துள்ள சிரமங்களையும் சிக்கல்களையும் சற்றே எண்ணிப்பாருங்கள்.

ஆடையில் அழுக்குப் பட்டால் அதை அடித்துத் துவைக்கத்தான் வேண்டும். அப்போதுதான் அதன் அழுக்கு நீங்கும்; ஆசிரியரின் சொல்கேளா மாணவர்களை அவர்கள் அடிக்கத்தான் வேண்டும். ஆனால் அது அவர்களைப் புண்படுத்தும் அளவிற்குப் பெரிய அளவில் இருக்கக் கூடாது; அது அவர்களின் மனதைப் பண்படுத்தும் விதமாக, மென்மையாக இருக்க வேண்டும்.

இன்றைய மாணவர்கள் படிப்பில் போதிய கவனம் செலுத்த முடிவதில்லை. அதற்கான சூழ்நிலை இல்லை. எங்கு நோக்கினாலும் தொலைக்காட்சி, திரைப்படக் காட்சிகள் மூலம் திசைதிருப்பப்படுகின்றார்கள். அதன் காட்சிகளால் கவரப்படுகின்றார்கள்; அதன் வசனங்களை உள்வாங்கிக் கொள்கின்றார்கள். திரைப்படங்கள் பலவற்றில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களை எதிர்மறையான தோற்றத்தில் காட்டுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். ஆசிரியர்களை நையாண்டி செய்யும் மாணவர்களை அதில் காட்சிப்படுத்துகின்றார்கள். எனவே அதைக் காணுகின்ற மாணவர்கள் தம் ஆசிரியர்களைக் கிண்டல் செய்யும் நிலை உருவாகிவிட்டது. அதனால் அவர்கள் தம் ஆசிரியர்களை உயர்வாக மதிப்பதில்லை.

ஓர் உயர்நோக்குள்ள ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்; மாணவர்களை எப்படி அணுக வேண்டும் என்பதைச் சில திரைப்படங்களில் காட்சிப்படுத்தினாலும் பல்வேறு திரைப்படங்கள் ஆசிரியர்களைக் கேலிக்குரியவர்களாகக் காண்பிப்பதால் ஆசிரியர்களைப் பற்றிய உயர்மதிப்பு மாணவர்களின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்குகிறது. இது ஆரோக்கியமான சூழ்நிலை இல்லை. இந்நிலை மாற வேண்டும். ஒவ்வொரு மாணவனின் மனதிலும் தன் ஆசிரியரைப் பற்றிய மதிப்பு இடம் பெற்றிருக்க வேண்டும். ஒரு மரியாதை கலந்த பயம் இருக்க வேண்டும். அத்தகைய மாணவர்களால்தான் ஓர் ஆசிரியரிடமிருந்து நுணுக்கமான, நுட்பமான பல்வேறு தகவல்களைக் கற்றுக்கொள்ள முடியும்.


ஓர் எழுத்தை எனக்குக் கற்றுக்கொடுத்தாலும் அவருக்கு நான் அடிமை என்று அலீ (ரளி) அவர்கள் கூறியுள்ளதன் பொருள் என்ன? அவர் சொன்னபடி நான் நடப்பேன் என்பதுதானே? ஆசிரியர் என்ன சொல்கின்றாரோ அதை அப்படியே ஏற்று நடப்பதுதான் நாம் அவருக்குக் கொடுக்கும் மரியாதை. எனவே கல்வியைக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை, கற்கின்றபோதும் கற்று முடித்த பின்னும் என்றென்றும் மதிப்போம்.  அதன்மூலம் அவர்களின் பிரார்த்தனையைப் பெற்று ஈருலகிலும் வெற்றியடைவோம்.






வியாழன், 10 செப்டம்பர், 2015

நபிகளார் நவின்ற மூன்றுகள்

நபிகளார் நவின்ற மூன்றுகள் 






திங்கள், 24 ஆகஸ்ட், 2015

தூது வந்த வீரர்

எழுத்தாளரும் கவிஞருமான ஜனாப் ஏம்பல் தஜம்முல் முகம்மது அவர்களை இன்று (24-08-2015) காலை சந்தித்து இஸ்லாமிய இல்லறம் எனும் நூலைக் கொடுத்தேன். பாராட்டினார்; வாழ்த்தினார்.

அவர் தமிழாக்கம் செய்த தூது வந்த வீரர் எனும் நூலை எனக்குப் பரிசளித்தார். தாமஸ் கார்லைல் எனும் வரலாற்று ஆசிரியர் 150 ஆண்டுகளுக்குமுன் இங்கிலாந்தில் ஆற்றிய சொற்பொழிவின் தமிழாக்கமே அந்நூல். தமிழாக்கம்  என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அதில் பக்கத்திற்குப் பக்கம் அவரின் அயராத உழைப்பு தெரிகிறது. வாசிக்கும்போது அதனைப் புரிந்துகொள்ளலாம்.

ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூலது. எனவே இதுவரை வாசிக்காதோர் யோசிக்காமல் அந்நூலை வாங்கி வாசிக்கத் தொடங்குங்கள். மொழியாக்கம் என்ற எல்லையைத் தாண்டி ஓர் இலக்கிய நூலைத் தமிழில் வாசிக்கின்ற திருப்தி கிடைக்கும்.

நூலைப் பெற தொடர்புகொள்க: 9994405644

குறிப்பு: நான் எனது நூலை அன்பளிப்பாகத்தான் கொடுத்தேன். ஆனால் அவர் அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டார். பிறகு அவர் தமது நூலைத் தந்தபோது, பதிலுக்கு நான் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்தேன். அவர் அதை வாங்க மறுத்து, துஆச் செய்யுங்கள் போதும் என்று கூறிவிட்டார். எனவே அவருடைய எழுத்துப் பணி புவியெங்கும் பரவிப் புகழ் பெறவும், அவர் ஈருலகிலும் அபரிமிதமான நன்மைகளை அடையவும் தூயோன் அல்லாஹ்விடம் இருகரமேந்துகின்றேன்.

 மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, சென்னை-81


சனி, 22 ஆகஸ்ட், 2015

நபிகளார் நவின்ற மூன்றுகள் (தொடர் 22)


மூவருக்கு உதவுவது அல்லாஹ்மீது கடமை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேருக்கு உதவி செய்வது மகத்துவமும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வின்மீது கடமையாக உள்ளது. 1. அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர், 2. கற்பைக் காக்க நாடித் திருமணம் செய்ய முனைபவர். 3. கடனை நிறைவேற்ற நாடுகின்ற விடுதலைப் பத்திரம் எழுதிக்கொடுக்கப்பட்ட அடிமை. (நசாயீ 3069)

நபிகளார் காலத்தில் எதிரிகளை எதிர்த்துப் போரிட வேண்டிய நிர்ப்பந்த நிலை முஸ்லிம்களுக்கு இருந்தது. எனவே அக்காலத்தில் நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களைப் போருக்கு அழைத்தார்கள். அவர்களோ அறப்போரில் கலந்துகொள்ள மிகுந்த ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள். அத்தகையோர் தம் குடும்பத்தையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைவைத்துப் போர்க்களத்திற்குச் சென்றார்கள். அதனால் அவர்களுக்கு அல்லாஹ் உதவிசெய்தான். அல்லாஹ்விற்காக அவர்கள் தம் குடும்பத்தையும் பொருட்படுத்தாமல் தம் உயிரையும் பொருட்படுத்தாமல் போருக்குச் சென்றதால் அவர்களுக்கு உதவிசெய்வது அல்லாஹ்வின்மீது கடமையாகின்றது. அந்த உதவி இரண்டு வகைகளில் கிடைக்கலாம். ஒன்று போர்க்களத்திலேயே அல்லாஹ்வின் உதவி கிடைப்பது. அதன்மூலம் அவர்கள் வெற்றி பெறுவது. மற்றொன்று அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் பொருளாதார உதவி செய்வது. ஆக அல்லாஹ்வின் உதவி அவர்களுக்குக் கட்டாயம் உண்டு.

முதன்முதலில் நடந்த போர் பத்ருப்போர் ஆகும். அது இஸ்லாமிய மார்க்கத்திற்கே திருப்புமுனையாக அமைந்தது. அப்போதைக்கு இருந்த முஸ்லிம்கள் 313 பேர் மட்டுமே. அவர்கள் அனைவரும் அப்போரில் கலந்துகொண்டார்கள். அந்தப் போரில் முஸ்லிம்கள் அனைவரும் தீரமுடன் கலந்துகொண்டதால் அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்தான். முஸ்லிம்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக வானவர்களை அனுப்பி எதிரிப்படையினரை வெருண்டோடச் செய்தான். அல்லாஹ்வின் பாதையில் போராடுகின்ற போராளிகளுக்கு அவனுடைய உதவி கட்டாயம் உண்டு என்பதை இது உறுதிப்படுத்துகிறது.  

இரண்டாவது கற்பைக் காக்க நாடித் திருமணம் செய்ய முனைபவருக்கு அல்லாஹ்வின் உதவி உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஒருவர் விபச்சாரத்தின் தீமையை உணர்ந்து அதன் தண்டனையைப் பயந்து அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சி, தம் கற்பைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் திருமணம் செய்ய நாடுகிறார் என்றால் அவருடைய நாட்டத்தை நிறைவேற்றும்பொருட்டு அல்லாஹ் அவருக்கு உதவி செய்கின்றான். அதாவது அவன் மணப்பெண்ணுக்கு வழங்க வேண்டிய மஹர் தொகையைச் செலுத்துவதற்கான ஏற்பாட்டைச் செய்கின்றான். அதன்மூலம் அவன் திருமணம் செய்ய உதவி செய்கின்றான். மேலும் அல்லாஹ் கூறியுள்ளதைக் கவனியுங்கள்: (ஆணாயினும், பெண்ணாயினும்) உங்களுள் எவருக்கும் வாழ்க்கைத் துணை இல்லாவிட்டால், அவர்களுக்கு(ம் விதவைகளுக்கும்) திருமணம் செய்துவிடுங்கள். (அவ்வாறே) உங்கள் அடிமையிலுள்ள நல்லோர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி (வாழ்க்கைத் துணைவரில்லாத) அவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாயிருந்தாலும் அல்லாஹ் தன்னுடைய அருளைக் கொண்டு அவர்களுடைய வறுமையை நீக்கி விடுவான். (24: 32)

மூன்றாவது, கடனை நிறைவேற்ற நாடுகின்ற விடுதலைப் பத்திரம் எழுதிக்கொடுக்கப்பட்ட அடிமைக்கு அல்லாஹ்வின் உதவி உண்டு. அக்காலத்தில் அடிமைகள் இருந்தனர். அவர்கள் தம் உரிமையாளர்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அவர்களின் கட்டுப்பாட்டிலேயே வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும். அத்தகைய தருணத்தில் அந்த அடிமைகள் விடுதலைபெற நாடினால் தமக்கான விலையை அந்த உரிமையாளரிடம் செலுத்த வேண்டும். அநத் அடிமைக்கான தொகையை நிர்ணயித்து விடுதலைப் பத்திரத்தை அந்த உரிமையாளர் எழுதிக்கொடுப்பார். நிர்ணயிக்கப்பட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள்  செலுத்திவிட்டு  அவர் தம் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றுக்கொள்ளலாம். இதுவே அக்காலத்தில் நடைமுறையில் இருந்த விடுதலைப் பத்திரமாகும்.

விடுதலைப் பத்திரம் எழுதப்பட்டவுடன் அந்த அடிமை விரும்பிய இடத்திற்குச் சென்று சம்பாதித்துப் பொருளீட்டித் தன் உரிமையாளரிடம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் அவ்வளவு பணத்தைச் சம்பாதிக்க முடியாமல் மீண்டும் அடிமையாகவே ஆகிவிடும் நிலையும் ஏற்படலாம். அதனால் அத்தகைய தருணத்தில் அல்லாஹ் அந்த அடிமைக்குத் திண்ணமாக உதவி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.  

மகத்துவமும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வின் படையினர் மூன்று பேர் ஆவர். (அவர்கள்) 1. போர்வீரர், 2. ஹஜ் செய்பவர், 3. உம்ராச் செய்பவர் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நசாயீ: 3070)

அல்லாஹ்வின் படையினர் என்று போர்வீரரோடு, ஹஜ் செய்பவரையும்  உம்ராச் செய்பவரையும் அல்லாஹ்வின் தூதர் இணைத்துக் கூறியுள்ளார்கள். அதன்மூலம் ஹஜ்ஜும்  உம்ராவும் செய்வது போர்செய்வதற்குச் சமமான இறைவழிபாடு என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். காரணம் போர்க்களத்தில் எவ்வாறு பல்வேறு சிரமங்களையும் துன்பங்களையும் சகித்துக்கொண்டு போரிட வேண்டுமோ அதுபோலவே ஹஜ்ஜிலும் பல்வேறு மொழிபேசுகின்ற, பல்வேறு நாட்டவர்களின் சிரமங்களையும் துன்பங்களையும் சகித்துக்கொண்டு பொறுமையை மேற்கொள்ளத்தான் வேண்டும். அது மட்டுமல்ல, தட்ப வெப்ப நிலை, காலநிலை மாற்றம், நேர மாற்றம் இப்படி எத்தனையோ இயல்பான வாழ்க்கையைப் பாதிக்கின்றவை இருக்கின்றன. நீண்ட தூரப் பயணம், உணவு முறை ஆகிய சிரமங்களும் உள்ளன. ஆகவேதான் அவ்வாறு கூறியுள்ளார்கள்.  

மகத்துவமும் மேன்மையும் மிக்க அல்லாஹ் ஓர் அம்பின் மூலம் மூன்று பேரைச் சொர்க்கத்தில் நுழையச் செய்கிறான்: 1. செய்கின்றபோது நன்மையை நாடி அதைச் செய்பவன், 2. அதை எறிபவன், 3. அதை (மீண்டும் பயன்படுத்த எடுத்துக் கொடுத்தோ பொருளாதார உதவிசெய்தோ) பரிமாறுபவன் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உக்பா பின் ஆமிர் (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நசாயீ: 3095)

போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் அம்பைச் செய்கின்றபோது அதைச் செய்பவர் நன்மையை நாடிச் செய்தால் அவரின் எண்ணத்திற்கேற்ப நற்கூலியை அல்லாஹ் அவருக்கு வழங்குகின்றான். இதன் மூலம் சண்டைகள் பெருக வேண்டும்; அதன் காரணமாக நிறைய வாங்கப்பட வேண்டும்; நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமில்லாமல் தூய எண்ணத்தோடு அதைச்  செய்தால் அவருக்குச் சொர்க்கம் உண்டு. இரண்டாவது, அந்த அம்பை எதிரிகளை நோக்கி எறிபவனுக்குச் சொர்க்கம். இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராகப் போர்புரிவோர்மீது எய்யப்படுகின்ற ஒவ்வோர் அம்புக்கும் நன்மை உண்டு. அந்த அடிப்படையில் அதை எறிபவருக்குச் சொர்க்கமே உண்டு. போருக்கு உதவியாக இருப்பவருக்கும் சொர்க்கம் உண்டு. ஒன்று பயிற்சியின்போது எய்யப்படுகின்ற அம்பை மீண்டும் மீண்டும் எடுத்துக்கொடுப்பதன்மூலம் சொர்க்கத்தை அடையலாம். அல்லது போருக்காக அம்புகள் வாங்கப் பண உதவி செய்து சொர்க்கத்தை அடையலாம். ஆக ஓர் அம்பு மூவர் சொர்க்கத்தில் நுழையக் காரணமாக அமைகிறது.

தற்காலத்தில் இஸ்லாமியப் போரும் இல்லை; அம்பும் இல்லை. ஆனால் அந்த அம்புக்குப் பதிலாக இன்றைய காலத்திற்கேற்ப இஸ்லாமிய மார்க்கத்திற்குப் பயன்படுகின்ற, மார்க்கத்தைப் பாதுகாப்பதற்குத் தேவைப்படுகின்ற பொருள்களை வாங்கிக் கொடுப்பதன்மூலம் அந்த நன்மையை அடையலாம். சான்றாக, நாவால் செய்யப்படுகின்ற மார்க்கப் பிரச்சாரம், எழுதுகோல்களால் எழுதப்படுகின்ற இஸ்லாமியக் கருத்துகள், இணையதளங்கள்மூலம் பரப்பப்படுகின்ற ஏகத்துவப் பிரச்சாரங்கள், அதற்கான உறுதுணைகள் யாவும் அந்த வகையில் சேரும். ஓர் அம்பு மூவர் சொர்க்கம் செல்லக் காரணமாக இருக்கும் என்றால் ஏன் ஓர் எழுதுகோல் மூவர் சொர்க்கத்திற்கு நுழையக் காரணமாக இருக்கக்கூடாது? நிச்சயமாக நம்முடைய எழுதுகோல் நம்மைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக் காரணமாக அமைய வேண்டுமென்றால் அது நம் கையில்தான் இருக்கிறது.

ஆம்! அந்த எழுதுகோல்மூலம் நாம் நன்மையைப் பரப்புவோராக இருக்க வேண்டும். அத்தகைய நல்வாய்ப்பு இக்காலத்தில் நிறையவே இருக்கின்றது. முகநூல், சுட்டுரை, வாட்ஸ்அப் முதலிய இணையதளங்கள் உள்ளன. அவற்றைத் தாண்டி எத்தனையோ இணையதளங்களிலும் பத்திரிகைகளிலும் நாம் சொந்தமாக எழுதுவதற்காக வாய்ப்பு நிறையவே உள்ளது. எனவே நம் எழுதுகோல் மூலம் நாம் சொர்க்கம் செல்ல இன்றிலிருந்து முயல்வோமாக!  
=========================





மகளிர் மஸ்ஜித்


மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்.,

நம்முள் பலர் பற்பல நன்மைகளைச் செய்து, தொழுது, வழிபட்டு இனிதே ரமளானை வழியனுப்பி வைத்தோம். இந்த ரமளான் மாதத்தின் நிகழ்வுகள் என்னுள் சில சிந்தனைகளை விதைத்துச் சென்றது.  ரமளான் மாதத்தில் மட்டும் பெண்களுக்கெனத் தனியாகத் தொழுகை நடப்பதும் சில மஸ்ஜிதுகளில் பெண்களுக்கெனத் தனியே இட ஒதுக்கீடு செய்வதையும் காண முடிந்தது. ஆனால் பெண்கள் பலருக்குக் கூட்டாகத் தொழுகின்ற வாய்ப்புக் கிடைப்பதில்லை என்பதும் ஐவேளைத் தொழுகைக்கு  இந்த முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்பதும் என்னுள் வருத்தத்தை ஏற்படுத்தியது.
பெரும்பாலான மஸ்ஜிதுகளில் மகளிர்க்கெனத் தனியாக இட ஒதுக்கீடு செய்யப்படாததால் அவர்கள் வீட்டில் தனியாகத் தொழுவதில் அக்கறை காட்டுவதில்லை. இதனால் பெண்கள் சக பெண்களோடு இணைந்து கூட்டாக வழிபடுவதற்கும் மார்க்கச் சொற்பொழிவுகளைக் கேட்பதற்கும் வாய்ப்பே கிடைப்பதில்லை.

கூட்டாக ஓரிடத்தில் இணைந்து தொழுகின்றபோது சோம்பல் நீங்கி, சுறுசுறுப்போடும்  ஆர்வத்தோடும் வழிபடும் நிலை ஏற்படுகிறது.  பெண்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் ஒருவித மந்தநிலை ஏற்படுவது இயல்பு. இதனைப் போக்கும் வண்ணம் அவ்வப்போது மஸ்ஜிதுக்கு ஒரு நடை சென்று, நிம்மதியாகத் தொழுதுவிட்டு மனதாரப் பிரார்த்தனை செய்துவிட்டு, மார்க்க அறிஞரின் சொற்பொழிவைக் கேட்டு, மனநிறைவோடு இல்லம் திரும்பினால் மனதுக்கு ஒரு நிம்மதியும் புதுத்தெம்பும் ஏற்படுவதை உணரலாம்.
ஒரு கணவன் தன் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் நடந்துகொள்ள வேண்டிய முறையை மஸ்ஜிதில் உள்ள இமாம்கள் ஆண்களிடம் சொல்லிவிடுகின்றார்கள். ஒரு மனைவி தன் கணவனிடமும் பிள்ளைகளிடமும் நடந்துகொள்ள வேண்டிய முறையை, செய்ய வேண்டிய பணிவிடைகளைப் பெண்களிடம் எவ்வாறு சொல்வார்கள்? பெண்களுக்கென இட ஒதுக்கீடு மஸ்ஜிதில் வழங்கப்பட்டிருந்தால் அவர்களும் மார்க்க விளக்கங்களைக் கேட்டு அதன்படி நடந்துகொண்டிருப்பார்கள். அந்த வாசல் அடைக்கப்பட்டுவிட்டதால் அவர்களுக்கு மார்க்க அறிவு எவ்வாறு கிடைக்கும்?
இஸ்லாத்தின்  தொடக்கக் காலத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமியர் என வரிசை வரிசையாக, ஒன்றன்பின் ஒன்றாக நின்று நபி (ஸல்) அவர்களின் தலைமையின்கீழ் ஏக இறைவனை வழிபட்டார்கள்; தொழுதார்கள். ஒரு கட்டத்தில் பெண்கள் மிகுதியாக வருகை புரிவதால் இடப்பற்றாக்குறை ஏற்படுவதைக் கவனித்த நபி (ஸல்) அவர்கள், பெண்கள் வீட்டில் தொழுவதன் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் கூறலானார்கள். இதனால் பெண்களின் வருகை குறையத் தொடங்கியது. இருப்பினும் அவர்களின் வருகை முற்றிலுமாக நின்றுவிடவில்லை. உமர் (ரளி) அவர்களின் காலம் வரை நடைமுறையில் இருந்தது.

 பெண்கள் அனைவரும் மஸ்ஜிதுக்குத்தான் வந்து தொழ வேண்டும் என்ற கட்டாயம் அவர்களுக்கு இல்லை. அதே நேரத்தில் மஸ்ஜிதுக்கு வருவதற்குத் தடை இல்லை என்பதையும் நாம் உணர வேண்டும். அவர்களுக்கும் வாய்ப்பளியுங்கள் என்றுதான் கூறுகிறேன். ஒவ்வொரு மஸ்ஜிதிலும் பெண்களுக்கெனத் தனியே இட ஒதுக்கீடு செய்யப்பட்டால், அவர்கள் விரும்பினால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வாய்ப்பே இல்லாதபோது அவர்கள் எங்கே போவார்கள்? மார்க்க அறிவை எங்கே பெறுவார்கள்?

கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து கடற்கரை, திரையரங்கு, பொழுதுபோக்குத் தளங்கள், சுற்றுலாத் தளங்கள் ஆகிய இடங்களுக்குச் செல்லலாம்; விரும்பினால் தர்ஹாவுக்குச் செல்வார்கள். மஸ்ஜிதுக்குச் சென்று தொழுக முடியுமா? "இன்று நாம் இருவரும் இன்ன மஸ்ஜிதுக்குச் சென்று  பயான் கேட்டு, தொழுதுவிட்டு வரலாம்'' என்று திட்டமிடமுடியுமா? ஆண்களும் பெண்களும் ஒருசேர இணைந்து தர்ஹாவுக்குச் செல்ல அனுமதித்தோர் மஸ்ஜிதுக்குச் செல்ல அனுமதிக்காததும்  அவர்களுக்கெனத் தனியிடம் ஒதுக்காததும் விந்தையிலும் விந்தை!

பயண நேரத்தில் பேருந்து நிலையம் அருகே உள்ள, தொடர்வண்டி நிலையம் அருகே உள்ள மஸ்ஜிதுக்குச் சென்று கணவன் தொழுகிறான்; பெண்களுக்கு உள்ளே அனுமதி இல்லாததால்  அவனுடைய மனைவி மஸ்ஜிதுக்கு வெளியே காத்திருக்கிறாள். இந்த நிலை எப்போது மாறும்?

இன்று பெண்கள் செல்லாத இடமும் உண்டோ? அவர்களின் கால் தடம் படாத இடமும் உண்டோ? பள்ளிக்கூடத்திற்குத் தம் பிள்ளைகளைக் கொண்டு விடுவதும் அவர்களைத் திரும்ப அழைத்து வருவதும், காய்கறிக் கடை முதல் துணிக்கடை வரை விருப்பம்போல் சென்று தாம் விரும்பியதை வாங்கி வருவதும், பொழுதுபோக்குத் தளங்கள் முதல் கொள்முதல் செய்யும் பெரும் பெரும் மால்கள் வரை சென்று வருவதும் பெண்களே! அப்படியிருக்கும்போது அவர்கள் மஸ்ஜிதுக்கு வந்தால் என்னதான் குழப்பம் வந்துவிடப் போகிறது?
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மஸ்ஜிதில் செய்யப்படுகின்ற பிரார்த்தனையில் ஆண்களோடு சேர்ந்து பெண்களும் ஆமீன் சொன்னால் அவர்களுடைய பிரார்த்தனையும் அங்கீகரிக்கப்படலாம் அல்லவா? ஆண்கள் மட்டும் மஸ்ஜிதில் தொழுதுவிட்டு இல்லம் திரும்பும்போது அங்கே இல்லாள் தொலைக்காட்சித் திரையில் தொடர் நாடகத்தைப் பார்த்து உளமுருகி கண்ணீரைச் சிந்திக்கொண்டிருக்கிறாள். கணவனோ மஸ்ஜிதில் கேட்ட பயானின் சுருக்கத்தைச் சொல்லத் தெரியாமல் தவிக்கிறான். இந்நிலை மாற வேண்டுமெனில் மஸ்ஜிதில் மகளிர்க்கான தனி ஒதுக்கீடு செய்வது ஒன்றே வழி! பெண்கள் சிலரின் கோரிக்கையை ஏற்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  பெண்களுக்கென ஒரு நாள் ஒதுக்கி, அவர்களுக்குத் தேவையான விஷயங்களைக் கூறினார்கள் என்பதை நபிமொழித் தொகுப்பு நூல்களின் வாயிலாக நாம் அறிகிறோம்.

இறைவனை இதயப்பூர்வமாக வழிபடுகின்ற இஸ்லாமியப் பெண்டிரும் சிலபல இல்லங்களில் உண்டெனினும் இறையில்லத்திற்கு வருகை புரிவதற்கான இனிய வாய்ப்பை உண்டாக்கிவிட்டால் அவ்வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக்கொண்டு மார்க்க அறிவை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும். தற்காலத்தில் பெரும்பாலோர் மனஅழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மன அமைதியைத் தேடி எங்கேனும் வெளியே செல்ல விரும்புகின்றனர். எனவே அவர்கள் அனைவரும் அமைதியைத் தேடி அல்லாஹ்வின் இல்லத்தை நோக்கி வருமாறு திசை திருப்பிவிடுவது நம் கடமையாகும்.

ரமளானில் பெரும்பாலான மஸ்ஜிதுகளில் கடைசிப் பத்து நாள்களும் சில மஸ்ஜிதுகளில் ஒற்றைப்படை நாள்களிலும் சஹர் உணவு ஏற்பாடு நன்மையை நாடிச் செய்யப்படுகிறது. இதை உண்போர் ஆண்கள் மட்டும்தானே? பெண்கள் அவ்வுணவைச் சுவைக்க வாய்ப்பில்லையே? "நான் மஸ்ஜிதில் சஹர் சாப்பிட்டுக் கொள்கிறேன். நீ உனக்கு மட்டும் சமைத்துக்கொள்'' என்று கூறிவிட்டு மஸ்ஜிதுக்குச் சென்றுவிடுகிறார் குடும்பத்தலைவர். அவளோ வேண்டா வெறுப்பாகத் தனக்கு மட்டும் எதையாவது சமைத்துவிட்டுத் துயில்கொண்டெழுந்து சஹர் உண்கிறாள். ஆண்-பெண் இரு பாலருக்கும் வழிபாட்டிற்கான ஏற்பாடு செய்து, சஹர் நேரத்தில் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யலாம்; மஸ்ஜிதில் போதிய இடவசதி இல்லையென்றால் அனைவருக்கும் உணவுப்பொட்டலங்களை வழங்கி வீட்டிற்கு அனுப்பலாம். ஆண்களுடைய எல்லாச் செயல்பாடுகளின் பின்னணியிலும் பெண்கள் இருப்பதைப் போன்று, தொழுகையில் ஆண்களின் பின்னணியில் பெண்களும் தனியே நிற்கட்டும். அவர்களும் படைத்தோனை உள்ளச்சத்தோடு வணங்கட்டும்.

பராஅத் இரவு அன்று ஒவ்வோர் ஊரிலும் உள்ள பொது அடக்கத்தலங்கள் (கபரஸ்தான்) தூய்மைப்படுத்தப்பட்டு, வண்ண விளக்குகள் ஒளியை உமிழ ஆண்களுக்கு ஒரு நேரம் பெண்களுக்கு ஒரு நேரம் என ஒதுக்கி ஸியாரத் எனும் ஒரு சுன்னத் உயிரூட்டப்படுவதைக் காண்கிறோம். மதீனாவில் அமைந்துள்ள நபிகள் நாயகம்  (ஸல்) அவர்களின் மஸாரை ஸியாரத் செய்ய ஆண்களுக்கு ஒரு நேரம் பெண்களுக்கு ஒரு நேரம் என ஒதுக்கப்படுகிறது; ஒரு சுன்னத் உயிர்ப்பிக்கப்படுகிறது. சுன்னத்தை நிறைவேற்றக் கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் ஃபர்ளுக்கு ஏன் கொடுக்கக்கூடாது? ஒவ்வொரு ஃபர்ளான தொழுகையையும் நிறைவேற்ற மஸ்ஜிதுக்கு வருகை புரிகின்ற ஆண்களுக்கு ஒரு பாதை, பெண்களுக்கு ஒரு பாதை என முடிவு செய்துவிட்டால் அந்தந்த வழியில் அவரவர் வந்து, இறைவனை வணங்கி, இன்புற்றுச் செல்வார்களே?

 பெண்களுக்கு ஒரு வழி; ஆண்களுக்கு ஒரு வழி. ஆனால் அனைவரும் செல்லுமிடம் ஒன்றுதான். அனைவரும் வழிபடும் இறைவன் ஒருவனே. ஆகவே ஒவ்வொரு மஸ்ஜிதிலும், "பெண்களுக்குத் தனி இடவசதி உண்டு'' என்ற அறிவிப்புப் பலகையை மாட்டி வைப்போம்; சமுதாயத்தை மாற்றியமைப்போம்!





ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

இஸ்லாமிய இல்லறம்

முஹம்மது முஸ்தபா அல்ஜிபாலீ ஆங்கிலத்தில் எழுதிய முஸ்லிம் பேமிலி எனும் நூலை மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி  இஸ்லாமிய இல்லறம் எனும் தலைப்பில் தமிழாக்கம் செய்துள்ளார்.

இந்நூல் தற்போது மூன்றாவது பதிப்பாக வெளிவந்துள்ளது.


கணவன் தன் மனைவியைப் பற்றித் தெரிந்துகொள்ளவும்
மனைவி தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகள் பற்றித்
தெரிந்துகொள்ளவும் படிக்க வேண்டிய நூலிது.

இருவரும் இணைந்து இனிதே இல்லறம் நடத்த விரும்பும் ஒவ்வொரு தம்பதியரும் படிக்க வேண்டிய நூலிது.

 இந்நூலில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகள், திருமணம் தொடர்பான அனைத்துத் தகவல்களும் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரங்களோடு கூறப்பட்டுள்ளன.

வெளியீடு
248 சாஜிதா பதிப்பகம்
தம்புச் செட்டித் தெரு, மண்ணடி, சென்னை

நூலைப்பெற தொடர்புகொள்ள வேண்டிய செல்பேசி எண்:  9840977758


விலை ரூ. 200 மட்டுமே.

பக்கங்கள்: 448