சனி, 21 ஜூன், 2025

பசுமைப் புரட்சி செய்வோம்!

 பசுமைப் புரட்சி செய்வோம்!     

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

ஆண்டுக்கு ஆண்டு வெப்பத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட பல்வேறு பெருநகரங்களில் வெப்ப அளவு 100 டிகிரிக்கு மேல் உள்ளது. வரும் காலங்களில் இதைவிட அதிகரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. அதைத் தணிப்பதற்கான வழிமுறையைச் சுற்றுச்சூழல் அறிஞர்கள் மக்களுக்குச் சொல்லிக்கொண்டேதான் இருக்கின்றார்கள். ஆனால் அதைப் பொதுமக்கள் இன்னும் ஆர்வத்தோடு செயல்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதுதான் மரம் வளர்த்தல் ஆகும். இருப்பினும் சொந்த வீடு உள்ளவர்கள் மட்டுமே மரம் வளர்க்க முடியும். மற்றவர்களுக்கு அத்தகைய வாய்ப்பு இல்லை. எனவே அரசுதான் மிகுதியான மரங்களை மக்கள் நடமாடும் இடங்களிலும் ஏனைய இடங்களிலும் வளர்க்க முனைப்போடு செயல்பட வேண்டும். ஆனால் இன்று நகர விரிவாக்கம், சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பல்வேறு மரங்கள் மிக எளிதாக அகற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றனவே தவிர மரங்கள் அவ்வளவாக நடப்படவில்லை என்றே சொல்லலாம்.

 

சில இடங்களில் மட்டும் அகற்றப்படும் அம்மரங்கள் வேறு இடங்களில் நடப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன.  மற்ற இடங்களில் அவ்வாறு முனைப்புக் காட்டப்படுவதில்லை. மரங்கள் வளர்ப்பதால் பற்பல நன்மைகள் உள்ளன. சுற்றுச்சூழல் சார்ந்த நன்மைகள், சமூகம் சார்ந்த நன்மைகள், ஆக்கிரமிப்பில்லா வாழ்க்கைமுறை எனப் பற்பல நன்மைகள் உள்ளன.

 

சுற்றுச்சூழல் நன்மைகள்: மரங்கள் உயிரினங்களுக்குத் தேவைப்படும் உயிர்வளியை (ஆக்சிஜன்) வழங்குகின்றன. கார்பன் டை ஆக்ஸைடு, சல்பர் டயாக்ஸைடு போன்ற வாயுக்களை உறிஞ்சிக்கொள்வதோடு தூசுக்களையும் நீக்கித் தூய்மையான காற்றை வழங்குகின்றன. வெப்ப நிலையைச் சமநிலைப்படுத்தும் பணியில் மரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மழைநீரைக் குடிநீராக மாற்றும் நிலநீரின் அளவை அவை உயர்த்துகின்றன. வேர்கள் மண்ணை உறுதியாகப் பிடித்துக்கொள்வதால் மண் அரிப்பு ஏற்பட்டு, நிலச்சரிவு ஏற்படுவது தடுக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவுக்குக் காரணம், மலைப்பகுதியில் இருந்த மரங்களைப் பெருமளவில் வெட்டிவிட்டு, கட்டடங்கள் கட்டப்பட்டதே ஆகும் என்று சூழலியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

 

சமூக நன்மைகள்: மரங்கள் இயற்கை அழகை அதிகரிக்கின்றன; மைதானங்கள், வீதிகள், வீடுகள் எல்லாம் அழகாகத் தோற்றமளிக்கின்றன. நிழலினால் வெப்பம் குறையும்; இதனால் திறந்த இடங்களில்கூட வசதியாக இருக்க முடியும். இயற்கைச் சூழலில் மரங்களைச் சுற்றியிருப்பது மனஅழுத்தத்தைக் குறைத்து மனநலத்தை மேம்படுத்துகிறது. பறவைகள், விலங்குகள், பூச்சிகள் மற்றும் பிற உயிரினங்களுக்கு மரங்கள் வாழிடமாக விளங்குகின்றன. மரம் வளர்ப்பு, பழ மர விவசாயம், மர அடிப்படையிலான தொழில்கள் போன்றவை வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. பழ மரங்கள், மர உலோகம், மூலிகை மரங்கள் போன்றவை வருமானத்தை அதிகரிக்க உதவுகின்றன. மரம் கட்டடப் பொருட்களாகவும் பயன்படுவதால் பொருளாதார நன்மைகளும் இதில் உள்ளன. 

 

கலாமின் கனவை நிறைவேற்றியவர்: திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் எண்ணற்ற தனி மனிதர்கள், தன்னார்வ அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகளோடு இணைந்து மரம் நடும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். தமிழ்நாட்டில் இவர் இப்படி வளர்த்த மரங்களின் எண்ணிக்கை 30 இலட்சம் இருக்கும். ‘கிரீன் கலாம்’ என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தமிழகமெங்கும் மரம் வளர்ப்பை முன்னெடுத்து வந்தார். மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமோடு மிகுந்த நட்போடு இருந்தவர். ஒரு தடவை அவரைச் சந்தித்தபோது “ஒரு கோடி மரம் நடுங்கள் விவேக்” என்று அவர் கூறியதை மதித்து, அவரது அறிவுரையை ஏற்று அதன்படி செயல்பட்டவர்தாம் நடிகர் விவேக். கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரங்கள் வளர்க்க வேண்டும் என்ற வேட்கையோடு தொடர்ந்து இயங்கி வந்தார்.

 

அதேபோன்று உலக வன நாள், சுற்றுச்சூழல் நாள் என எந்தச் சிறப்பு நாள் வந்தாலும் அன்று மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தும் விதமாக ஏதாவது ஒன்றைச் செய்துவந்தார். ``நாட்டில் தண்ணீர் வேண்டுமென்றால் மழை வேண்டும்; மழை வேண்டுமென்றால் மரங்கள் இருக்க வேண்டும். நாட்டில், விவசாயம் செய்வதற்கான மண் வளம், மனிதர்களுக்குத் தேவையான தூய்மையான உயிர்வளி ஆகியவை குறைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் என்னிடம் கூறினார்” என்று நடிகர் விவேக் 2011இல் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதன்முதலில் தொடங்கியபோது பேட்டியளித்தார்.

 

சென்னையில் 10,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கினார். கோவையில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, சேலத்தில் 25,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கினார். பின்னர் பல்வேறு முக்கிய நகரங்களிலும் அப்பணியைத் தொடர்ந்தார். 

ஒவ்வொருவரும் வீட்டிலும் 2 மரக்கன்றுகளை நடவேண்டும். இந்த விஷயம் மக்கள் மனதில் பதிய வேண்டும். இவ்வாறு மரக்கன்றுகள் நட்டால் காற்றிலுள்ள நச்சுத்தன்மை குறையும். எனவே, தமிழகத்திலிருந்து மரங்களின் பசுமைப் புரட்சி தொடங்க வேண்டும்” என்று பேசிவந்தார். ஆனால் அவர் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். அப்பணிக்கு மூலவேராக இருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் நம்மைவிட்டு மறைந்துவிட்டார். இருப்பினும் அவர்கள் கூறிய நல்லுரை நம்மைத் தூண்டிக்கொண்டே இருக்கிறது.

 

சாலையோர மரங்கள்: கடந்த காலங்களில் சாலையின் இருபுறங்களிலும் புளிய மரங்களும் வேப்ப மரங்களும் இருந்தன. நடந்து செல்வோர் அந்த மரங்களின் நிழலிலேயே செல்வர். தாகமாக உள்ளோர் அந்தப் புளிய மரங்களின் காய்களை, செங்காய்களை, பழங்களைப் பறித்து உண்பர். ஆனால் தற்காலச் சாலைகளின் இருபுறங்களும் வெறுச்சோடிக் கிடக்கின்றன. ஒருக்கால் மரங்கள் இருந்தாலும் பயனற்ற மரங்கள் மட்டுமே உள்ளன. அவற்றிலிருந்து காய்களையோ கனிகளையோ பறித்து உண்ண இயலாது. எனவே மரங்கள் நடவேண்டும். ஆனால் மக்கள் பயனுறும் மரங்களை நடவேண்டும்.

 

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ, ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: புகாரீ: 2320)

 

பயனுள்ள மரம் வளர்த்தல்: முஸ்லிம் ஒருவர் பயனுள்ள ஒரு மரத்தை நட்டு, அதைப் பராமரித்து வளர்த்து வந்தார். அதில் காய்கள் காய்த்து, கனியத் தொடங்கின. அதிலிருந்து பறவைகள், கால்நடைகள் உண்டன. கீழே விழுந்தவற்றைச் சிறுவர் சிறுமியர் எடுத்து உண்டனர். அக்கம் பக்கம் வசிப்போர் அதிலிருந்து பறித்துச் சென்றனர். இவை அனைத்தும் அவருக்கு நன்மையாக மாறிவிடும். அதிலிருந்து அவருக்குத் தெரியாமல் யாரும் பறித்துச் சென்றால் அது குறித்து அவர் கவலைப்படத் தேவையில்லை. அவை அனைத்தும் அவருக்கு நன்மைகளாகக் கிடைத்துவிடும். இதுதான் இஸ்லாமியப் பார்வை. ஆக மற்றவர்கள் மரங்களை நட வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பயனுள்ள மரங்களை நடவேண்டுமெனக் கூறுகின்றார்கள்.

 

அன்னையின் பெயரில் ஒரு மரம்: உலகச் சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு, அதன் தொடர்ச்சியாக, நிலமெங்கும் பசுமையை ஏற்படுத்துமுகமாக ‘அன்னையின் பெயரில் ஒரு மரம்’ எனும் பிரச்சார இயக்கத்தைத் தமிழக ஆளுநர் ஆர்.என். இரவி முன்னெடுத்துள்ளார். அப்பிரச்சார இயக்கத்தைத் தொடங்கிவைத்து 27 மரங்களை நட்டுள்ளார். இது வரவேற்கத்தக்க ஒரு முயற்சி என்றே நாம் கூறலாம். அதாவது ஒவ்வொருவருக்கும் அன்னை உண்டு. அந்த அன்னையின் மீதுள்ள அன்பின் அடையாளமாக ஒவ்வொருவரும் ஒரு மரம் நட்டால் தமிழ்நாடு பசுமை நாடாக மாறிவிடும் அல்லவா? நாம் ஏன் அதைச் செய்ய முயலக் கூடாது?

 

நிரந்தர நன்மை: ஒரு முஸ்லிம் தம் பெற்றோர் இறந்துவிட்டால், அவர்களுக்கு நன்மையைச் சேர்த்துவைக்க வேண்டும் என்று எண்ணுவார். அவர் தம் பெற்றோருக்காக அன்னதானம் செய்வார்; ஆடை தானம் செய்வார்; தர்மம் செய்வார். மிக அரிதாகச் சிலர் தம் பெற்றோருக்காக ஒரு கிணற்றைத் தோண்டி, அதன் நீரை எல்லோரும் எடுத்துப் பயன்படுத்த பொதுஅனுமதி வழங்கிடுவர். அதனால் அதிலிருந்து பயன்பெறக்கூடியோரின் நன்மைகள் அவர்களின் பெற்றோருக்குப் போய்ச் சேரும். இந்த வரிசையில் ஒருவர் தம் அன்னைக்காக ஒரு மாமரத்தையோ அதுபோன்ற பயனுள்ள கனிகளைத் தரும் வேறு மரத்தையோ நட்டு, அது பெரிதாக வளரும் வரை பராமரித்து, அதன்பின் அதன் பயனைப் பொதுமக்கள் அனுபவித்துக்கொள்ள பொதுஅனுமதி வழங்கிவிட்டால், அதிலிருந்து யாரெல்லாம் பயன்பெறுகின்றார்களோ அதன் நன்மைகள் யாவும் அவருடைய அன்னைக்கு நன்மையாகச் சென்றடையும். இது அவர் தம் தாய்க்குச் செய்யும் ஒரு நிரந்தர நன்மையாகும்.

 

போத்து நடவு முறை: ‘மரம் நடுவிழா என்று சொல்லிவிட்டுச் செடியை நடுகின்றார்களே’ என்று கேலி செய்து சிலர் சிரிப்பதுண்டு. செடியை நட்டால் அது பெரிய மரமாகும்; அது எதிர்காலத்தில் ஆகும் நிலையை முன்னரே சொல்வதுதானே உலக வழக்கு? இன்றைய செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் அனைத்தையுமே துரிதமாகப் பெற வேண்டும் என்று துடிக்கும் இளைஞர் இளைஞிகளே அதிகம். எனவே அவர்களின் எண்ண ஓட்டத்திற்கேற்பவே மரம் நடுதலில் ஒரு புதிய முறையும் பரவலாக்கப்பட்டுள்ளது. செடிகளை நடுவதற்குப் பதிலாக நல்ல வாட்டமான மரக்கிளைகளை ஏழு அடி உயரத்திற்குக் குறையாமல் வெட்டி பச்சை காய்ந்து விடாமல் பாதுகாப்பாக நட்டுவைத்தால் அது மிக விரைவாகத் துளிர்த்து, வளர்ந்து காய் காய்க்கத் தொடங்கிவிடும். மிக விரைவிலேயே அதன் பயன்களை நாம் அனுபவிக்கலாம். இவ்வாறு செய்வதால் மிகக் குறுகிய காலத்திலேயே மிகப்பெரும் சோலையை உண்டுபண்ணிவிடலாம். இந்த எளிய முறைக்கு ‘போத்து நடவு முறை’ என்று பெயர். இம்முறை குறிப்பிட்ட சில வகை மரங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

 

நிழலின் அருமை: பொதுவாக மரம் வளர்த்தலின் பயன் அதன் காய், கனிகள் என்பதைத் தாண்டி, அதன் நிழல் என்பதும் மிக முக்கியமானதாகும். ‘நிழலின் அருமை ª வயிலில் தெரியும்’ என்பார்கள். உச்சி வெயிலில் நடந்து வருகின்ற எத்தனையோ பேர் மரநிழலைக் கண்டதும் அங்குச் சற்றுநேரம் நின்று ஓய்வெடுத்துச் செல்வது இயல்பு. அவ்வாறு ஓய்வெடுக்கும் சிலர் அங்கு மரம் வைத்தவரை மனதார வாழ்த்துவார்கள். அந்த வாழ்த்தைப் பெறுவதற்காகவேனும் நாம் மரங்களை ஆங்காங்கே வளர்க்க வேண்டும். மேலும் நிழல் தரும் மரங்களுக்குக் கீழே நாம் ஒருபோதும் அசுத்தம் செய்துவிடக்கூடாது. ஏனெனில் அது மக்கள் ஓய்வெடுக்கும் இடமாகும். இது குறித்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “நீர்த் துறைகள், நடைபாதைகள், நிழல் (தரும் மரங்கள்-இடங்கள்) ஆகிய மூவிடங்களில் (மலஜலம் கழிப்பதால் மக்களின்) சாபத்திற்கு ஆளாகாமல் நீங்கள் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். (நூல்: அபூதாவூத்: 24)

 

ஆக மரங்கள் வளர்ப்பது ஒரு நிலையான அறச்செயல் (ஸதக்கத்துன் ஜாரியா) என்பதை உணர்வோம். அதன்மூலம் மக்களின் அன்பையும் வாழ்த்தையும் (துஆ) பெறுவோம். நாம் ஒவ்வொருவரும் செய்யும் பசுமைப் புரட்சியே புவிவெப்பமயமாதலைத் தடுக்கும் எதிர்காலக் கேடயம் என்பதை மக்களுக்கு உணர்த்துவோம்.

===============







கருத்துகள் இல்லை: