புதன், 4 ஜூன், 2025

இருப்பதைப் பகிர்ந்துகொள்வோம்

 

      

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28   

 

ஒருவர் தம்மிடமுள்ளதைப் பிறருக்கு மனமுவந்து வழங்குவதே பகிர்தல் ஆகும். உணவு, நீர், கல்வி, செல்வம், மகிழ்ச்சி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எல்லோருக்கும் இன்றியமையாதது உணவே ஆகும். அந்த








உணவைப் பகிர்ந்துகொள்வதே மிக முக்கியமானதாகும். இன்று பல நாடுகளில் ஏழ்மை பரவியிருக்கிறது;  இரவு உணவின்றிப் பலர் தூங்கச் செல்கின்றார்கள் என்றால் உணவுப் பகிர்தலைக் கைவிட்டதே உரிய காரணியாகும்.

 

இன்று பசுமைப் புரட்சி ஏற்பட்டுள்ளதால், நவீன உத்திகளைக் கையாண்டு நல்லவிதமாக உணவு தானியங்களை உற்பத்தி செய்கின்றார்கள். மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களைத் தாராளமாக விளைவிக்கின்றார்கள். தேவையுடையோர் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. அப்படியிருந்தும் பல கோடிப்பேர் இரவு உணவு உண்ணாமல் உறங்கச் செல்கின்றார்கள் என்றால் சமஅளவில் பகிர்தல் இல்லை என்பதே அடிப்படைக் காரணமாகும்.

 

உணவைப் பகிர்ந்துகொள்ளல்: இது குறித்து இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ள செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது: “ஒரு மனிதருடைய உணவு இருவருக்குப் போதுமாகும். இருவரின் உணவு நால்வருக்குப் போதுமாகும். நால்வரின் உணவு எண்மருக்குப் போதுமாகும்.” (முஸ்லிம்: 4184) அதாவது தமக்கான உணவை மட்டுமே வைத்துள்ள ஒருவர் தம்மோடு உணவில்லாத ஒருவரைச் சேர்த்துக்கொண்டு, அவரோடு அவ்வுணவைப் பகிர்ந்துண்ண வேண்டும். தமக்கான உணவை வைத்துள்ள இருவர் தம்மோடு மற்ற இருவரை இணைத்துக்கொண்டு அவ்வுணவை அவர்களோடு பகிர்ந்துண்ண வேண்டும். தமக்கான உணவை வைத்துள்ள நால்வர் தம்மோடு மற்ற நால்வரை இணைத்துக்கொண்டு அவ்வுணவை அவர்களோடு பகிர்ந்துண்ண வேண்டும்  என்பதே இந்நபிமொழி நமக்கு உணர்த்தும் பாடமாகும். அவ்வாறே எத்தனை பேருக்கான உணவு இருக்கிறதோ அத்தனை பேரைக் கூடுதலாக இணைத்துக்கொண்டு அவர்களோடு அவ்வுணவைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

 

இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழியைத் தலைமேல் தாங்கிய முஸ்லிம்கள் உலகெங்கும் தம்மால் இயன்ற வரை உணவைப் பகிர்ந்துகொண்டு இருப்பதால்தான் ஓரளவுக்கு மக்கள் பசியிலிருந்து காக்கப்படுகின்றார்கள். ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் பலர் உணவுக்காகப் போராடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். எனவே அத்தேவையைத் தம்மால் இயன்ற அளவிற்கு முஸ்லிம்கள் பகிர்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். அது மட்டுமின்றி, அவர்கள் இயற்கைச் சீற்றங்களின்போது சாதி, சமய வேறுபாடின்றிப் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் உணவு சமைத்துப் பரிமாறிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.  

 

இதே கருத்தைப் பொய்யாமொழிப் புலவர் இவ்வாறு வலியுறுத்திக் கூறுகிறார்:

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. (குறள்: 322) நற்கருத்துகளைத் தாங்கி நிற்கும் பல்வேறு அறநூல்கள் உள்ளன. அவற்றையெல்லாம்விடத் தம்மிடமுள்ள உணவைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதுதான் சிறந்தது; தலையாயது என்கிறார்.

 

நான் என் குடும்பத்தாருடன் வெளியே புறப்பட்டுச் செல்லும்போது வழியில் எங்கேனும் ஏதேனும் சாப்பிட முனைந்தால் இரண்டு வாங்கி நாங்கள் நால்வர் பகிர்ந்துகொள்வோம். இதை ஒரு வழக்கமாகவே நான் வைத்துள்ளேன். அதாவது இரண்டு இளநீர் வாங்கி, ஒன்றை நான் அருந்திவிட்டு அதில் பாதியை என் மனைவிக்குக் கொடுப்பேன். மற்றொன்றை என் மூத்த மகனிடம் கொடுத்து அருந்தச் சொல்லிவிட்டு அதில் பாதியை இளையவனுக்குக் கொடுக்கச் சொல்வேன். வெளிப்படையாகக் காணும்போது இது கஞ்சத்தனமாகத் தெரியலாம். ஆனால் நம் உணவை நமக்குள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நற்பழக்கத்தை ஊட்டவே இவ்வாறு செய்கிறேன். வீட்டில் சாப்பிடும்போதும் இவ்வாறு நாம் செய்யலாம். இது பாலர் பருவத்திலேயே நம் பிள்ளைகள் மத்தியில் பகிர்ந்துண்ணும் பழக்கத்தை விதைத்துவிடும்.

 

இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போதித்துள்ள எண்ணற்ற அறநெறிகளில் உணவுப் பொருளைப் பகிர்ந்துகொள்ளப் பல்வேறு வழிகாட்டல்கள் உள்ளன. நோன்பு நோற்றுள்ள ஒருவருக்கு நோன்பு துறப்பதற்கான உணவுப் பொருளை வழங்குபவருக்கு நோன்பு நோற்றவருக்குக் கிடைக்கும் நன்மையைப் போன்று கிடைக்கும் என்ற போதனை; ‘பசித்தோருக்கு உணவூட்டுங்கள்’ என்ற போதனை; தியாகத் திருநாளில் ஆட்டையோ மாட்டையோ அறுத்தால் அதன் இறைச்சியை மூன்று பங்குகளாகப் பிரித்து ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் வழங்குங்கள் என்ற போதனை; திருமணம் முடித்து, தம்பதிகளுக்கு ஓரிரவு கழிந்தபின் வலீமா எனும் மணவிழா விருந்து வழங்குங்கள் என்ற போதனை; குழந்தை பிறந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்விதமாக அகீகா-ஓர் ஆடு அல்லது ஈராடு அறுத்து அதன் இறைச்சியை மூன்று பங்குகளாகப் பிரித்து ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் வழங்குங்கள் என்ற போதனை- இவை அனைத்தும் உணவுப் பொருளைத் தமக்கிடையே பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன.

 

நீரைப் பகிர்ந்துகொள்ளல்: உணவும் தண்ணீரும் ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைத் தேவையாகும். தம்முடைய தேவைக்குப் போக எஞ்சியதைப் பிறருக்கு வழங்குவது நற்பண்பாகும்; அது ஓர் அறமாகும். இன்று குடிநீர் இன்றித் தவிப்போர் பலர் உள்ளனர். பலருக்குத் தூய குடிநீர் கிடைப்பதில்லை. மனிதனின் அடிப்படைத் தேவையான குடிநீர் விலைக்கு விற்கப்படுகிற நிலை உருவானதிலிருந்து மக்களுக்கு இயல்பாகக் கிடைக்க வேண்டிய குடிநீர் பணத்தைக் கொடுத்துப் பெற வேண்டிய நிலைக்கு மாறிவிட்டது. அதனால் பல நாடுகளில் குடிநீர் என்பது வியாபாரப் பொருளாகிவிட்டது. எனவே அது இயல்பாக எல்லோருக்கும் கிடைப்பதில்லை. பணம் உள்ளோர் நல்ல குடிநீரைப் பெற்றுக்கொள்கின்றனர். மற்றோர் தூய்மையற்ற குடிநீரையே பருகிவருகின்றனர்.

 

குடிநீரைப் பகிர்ந்துகொள்வது குறித்து இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வலியுறுத்திக் கூறியுள்ளது நினைவுகூரத்தக்கது. “தண்ணீர் கிடைக்கின்றபோது, யார் ஒரு முஸ்லிமுக்கு ஒரு மிடர் தண்ணீர் கொடுத்தாரோ, அவர் ஓர் அடிமையை விடுதலை செய்தவரைப் போன்றவராவார். தண்ணீர் கிடைக்காதபோது, யார் ஒரு முஸ்லிமுக்கு ஒரு மிடர் தண்ணீர் கொடுத்தாரோ அவர் அவரை உயிர்ப்பித்தவரைப் போன்றவராவார்” (இப்னுமாஜா: 2465) என்று கூறித் தண்ணீரைத் தர்மம் செய்யத் தூண்டியுள்ளார்கள். தண்ணீர், நெருப்பு, உப்பு ஆகியவை எல்லோருக்கும் பொதுவானவை எனக் கூறி இவற்றைப் பொதுவுடைமையாக்கி யுள்ளார்கள். குடிநீரை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள வழிகாட்டியுள்ளார்கள்.

 

கல்வியைப் பகிர்ந்துகொள்ளல்: கல்லாத மக்கள் மத்தியில் கற்றோர் சிலருண்டு. அச்சிலரே மற்றோருக்குக் கல்வியைப் போதித்து, எல்லோரையும் கல்வியாளர்களாகவும் கற்றோராகவும் உருவாக்க வேண்டும். ஒருவருக்கு வழங்கப்பட்ட கல்வி அவருக்கு மட்டுமே சொந்தமானது கிடையாது. கல்வி என்பது பொதுவுடைமை ஆகும். அது எல்லோருக்குமானது. எனவே கற்றோர் பிறருக்குக் கற்பிப்பது கடமையாகும்; அது ஓர் அறச் செயலாகும்.

 

உங்களுள் சிறந்தவர் குர்ஆனைக் கற்று, அதைப் பிறருக்குக் கற்பிப்பவரே ஆவார்” (புகாரீ: 5014) எனும் இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனை, கல்வியை மக்கள் மத்தியில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை நிலைநாட்டுகிறது.

 

எந்த மனிதரிடம் கல்வியைப் பற்றி வினவப்பட்டு, அதை அவர் மறைத்துவிடுகின்றாரோ அவருக்கு மறுமைநாளில் நெருப்பாலான கடிவாளம் இடப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். (இப்னுமாஜா: 260)  

 

வேதத்தில் அல்லாஹ் இறக்கியவற்றை மறைத்துவிட்டு அதற்கு விலையாகச் சொற்பத் தொகையைப் பெற்றுக்கொள்கின்றவர்கள் நிச்சயமாகத் தங்கள் வயிற்றில் நெருப்பையே நிரப்பிக் கொள்கின்றார்கள். மேலும், மறுமையில் அல்லாஹ் அவர்களுடன் (விரும்பிப்) பேசவும் மாட்டான். அவர்களை (மன்னித்து)ப் புனிதப்படுத்தவுமாட்டான். அவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனைதான் உண்டு” (2: 174) என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான். ஆக கல்வி என்பது பொதுவுடைமை. எனவே அதை அறிந்தோர் பிறரிடம் அதை மறைக்கக்கூடாது என்று அல்லாஹ் எச்சரிக்கின்றான்.

 

யார் என்னுடைய இந்த மஸ்ஜிதுக்கு வந்தாரோ அவர் நன்மைக்காகவே தவிர வரவில்லை. அவர் அங்கு வந்து (எதையேனும்) கற்றுக்கொள்கிறார். அல்லது கற்பிக்கிறார் என்றால் அவர் அல்லாஹ்வின் பாதையில் போராடுகின்றவரைப் போன்றவராவார்” (இப்னுமாஜா: 227) என்று இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். ஆக கல்வியைப் பகிர்ந்துகொள்பவர் இறைவழியில் போராடுகின்ற சிறப்பையும் உயர்வையும் பெறுகிறார்.

 

மேலும்  “என் சொல்லைக் கேட்டு அதை (ப் பிறருக்கு) எடுத்துரைத்தவனை அல்லாஹ் மகிழ்ச்சிப்படுத்துவானாக” (இப்னுமாஜா: 230) என்ற போதனை மனித சமுதாயத்திற்குக் கல்வியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. கல்வியைப் போதித்தல், பிறருக்கு எடுத்துரைத்தல், பகிர்ந்துகொள்ளல் ஆகியவை இறைவனுக்கு உவப்பான செயல்களாகும். ஆகவேதான் கல்வியைப் பகிர்ந்துகொள்வது குறித்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மிகவும் வலியுறுத்திச் சொல்லியுள்ளனர்.

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் இறுதி ஹஜ்ஜின்போது உரையாற்றிய நேரத்தில், “(இங்கு) வந்தவர் வராதவருக்கு எடுத்துரைக்கட்டும்” (இப்னுமாஜா: 233) என்று கூறினார்கள். இதுதான் கல்வியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நபியவர்கள் தூண்டிய உச்சமாகும். 

 

செல்வத்தைப் பகிர்ந்துகொள்ளல்: பணக்காரர் ஒவ்வொருவரும் தமக்கு வழங்கப்பட்ட மிகையான செல்வம் தமக்காக மட்டுமே வழங்கப்பட்டதாக எண்ணிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் தேவைக்குப் போக எஞ்சியதை ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் பகிர்ந்து வழங்கவே அவர்களுக்கு மிகுதியான செல்வத்தை அல்லாஹ் வழங்கியுள்ளான். இதை உணர்ந்து செயல்படுவோரின் செல்வம் வளர்ச்சியடைந்துகொண்டே செல்கிறது. இதை உணராமல், ஏழைகளுக்கோ உறவினர்களுக்கோ வழங்காதோரின் செல்வம் காலப்போக்கில் கரைந்துபோய்விடும். அல்லது அவர்களின் சந்ததிகளுக்கு அச்செல்வம் கிடைக்காமல் போய்விடும்.

 

செல்வம் என்பது செல்வர்களுக்கிடையே மட்டும் சுற்றிச் சுற்றி வரக்கூடாது” (59: 7) என்று அல்லாஹ் கூறுகின்றான். மாறாக அது உறவினர்கள், ஏழைகள், தேவையுடையோர், அநாதைகள், பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பதே அல்லாஹ்வின் நாட்டமாகும். 

 

செல்வர்கள் ஒவ்வொருவரும் தத்தமது செல்வத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதற்காகவே இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியுள்ளான். ஸகாத் கடமையான செல்வர்கள் ஒவ்வொருவரும் தமக்குரிய ஸகாத்தை உரிய முறையில் கணக்கிட்டு ஏழைகளுக்கும், ஏழைகளாக உள்ள உறவினர்களுக்கும் வழங்கினால் காலப்போக்கில் நம் சமுதாயத்தில் ஏழ்மை முற்றிலும் அகன்றுவிடும். அத்தகைய பொருளாதாரத் திட்டமே ஸகாத் ஆகும். ஆகவே ஸகாத்தை ஒவ்வோராண்டும் உரிய முறையில் ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் வழங்குவதோடு ஒவ்வொரு நாளும் தம்மால் இயன்ற அளவிற்குத் தர்மம் செய்தால் அவர்களுக்கு வரக்கூடிய விபத்துகள் விலகிவிடும்.

 

புன்னகையைப் பகிர்ந்துகொள்ளல்: உணவு, கல்வி, பணம் ஏதும் இல்லாதவர்கள் நன்மையை அடைந்துகொள்ள வழியுண்டா? இவர்கள் எதைப் பிறரோடு பகிர்ந்துகொள்வார்கள்? இவர்கள் தம்மிடமுள்ள புன்னகையைப் பிறரிடம் பகிர்ந்துகொண்டால் அதுவும் அறச்செயல் ஆகும். புன்னகை தவழும் நம் முகத்தைப் பார்க்கின்ற மற்றவர்கள் தம் சோகத்தையும் துக்கத்தையும் மறந்து புன்னகை செய்வார்கள்; மகிழ்ச்சியடைவார்கள். “நீ உன் சகோதரனின் முகத்தைப் புன்னகையோடு பார்ப்பது அறச்செயலாகும்” என்று இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.

 

ஆக நம்மிடம் உள்ளவற்றைப் பிறரிடம் பகிர்ந்துகொள்வதால் நாமும் மகிழ்ச்சியாக இருப்பதோடு பிறரும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். பகிர்ந்து வாழும் மனப்பக்குவத்தை நம் அனைவருக்கும் உயர்ந்தோன் அல்லாஹ் நல்குவானாக.     


=================0










 

கருத்துகள் இல்லை: