__________
குர்பானிக் கடாவை அறுத்து, அதன் இறைச்சிகளைப் பங்கிட்டு, ஏழைகளைத் தேடிச் சென்று அவர்களின் குடியிருப்புகளில் நேரடியாக இன்முகத்தோடு வழங்கச் சோம்பல் பட்டு, பள்ளிவாசல்களிலும் பொது மையவாடிகளிலும் (கப்ரஸ்தான்) அமர்ந்து கொண்டு கையேந்துவோருக்கு ஒவ்வொரு பொட்டலம் வழங்கி விட்டு, நம்முடைய பொறுப்பு முடிந்தது என நினைத்துக் கொள்ளும் செல்வர்கள் பலர் உள்ளனர்.
அவ்வாறு கையேந்துவோருள் முஸ்லிம்கள் அல்லாதோரும் உள்ளனர். நான் பார்த்த வரை, இந்நிலைதான் சென்னையின் பெரும்பாலான இடங்களில் உள்ளது.
அவ்வாறு முஸ்லிம்கள் பலர் குர்பானி இறைச்சியை வழங்குவதால் ஒருவருக்கு / ஒருத்திக்கு 15 முதல் 20 பொட்டலங்கள் வரை கிடைக்கின்றன. அவற்றைச் சரியான முறையில் பராமரிக்கத் தெரியாததால் சிலர் வீணாக்கி விடுகின்றனர். வேறு சிலர் சாதாரண உணவகங்களில் விற்று விடுகின்றனர்.
"ஓரிரு கவள உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில் அவன் தன் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள எந்தச் செல்வத்தையும் பெற்றிருக்க மாட்டான்; பிறரும் அவனது நிலையை அறிந்து தர்மம் செய்ய மாட்டார்கள். தானும் வலியச் சென்று கேட்கமாட்டான் (இத்தகையவனே உண்மையான ஏழையாவான்)" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரீ: 1479)
கையேந்த வெட்கப்பட்டுக் கொண்டு ஒவ்வொரு மஹல்லாவிலும் தன்மானத்தோடு எத்தனையோ ஏழைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தம் சிரமங்களை வெளியில் சொல்வதில்லை. அத்தகையோர் குறித்துக் கவலைப்படுவோர் அரிதிலும் அரிதாகவே உள்ளனர்.
இவ்வாறு அச்செல்வர்கள் செய்வது குறித்து அவர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளையும் தான்...
ஒவ்வொரு மஹல்லாவிலும் ஸகாத் பெறத் தகுதியானோர் பட்டியல் / ஸதக்கா பெறுவதற்குத் தகுதியானோர் பட்டியல் ஏதாவது அந்தந்தப் பள்ளிவாசலில் இருக்கிறதா? அவ்வாறு பட்டியல் இருந்தால் அல்லவா அதனை வாங்கி, அதிலுள்ளோருக்கு நேரடியாகச் சென்று கொடுக்க முடியும்? அத்தகைய எந்த ஏற்பாடும் இல்லாத போது எப்படி ஏழைகளைக் கண்டறிந்து நேரடியாகக் கொடுக்க முடியும் என்று அச் செல்வர்கள் கேட்டால் நம்மிடம் பதில் இல்லை.
ஆக நம்முள் பலர் தத்தமது பொறுப்பைச் சரியாகச் செய்யாததாலும் சமுதாய அக்கறையோடு செயல்படாததாலும் ஏழைகள் ஏழைகளாகவே இருக்கின்றார்கள்.
இனியேனும் நாம் ஒவ்வொருவரும் சமுதாய அக்கறையோடு செயல்பட முனைவோம்.
சமுதாய அக்கறையோடு திட்டங்களை வகுத்துச் செயல்படுவோம்.
அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி
04.06.2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக