----------------------------------------------------------
#ஈதுல்அள்ஹா-தியாகத் திருநாள் அன்று நம்முள்
பெரும்பாலோர் தத்தம் குடும்பங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஆடுகளை அல்லாஹ்விற்காக அறுத்துப்
பலியிடுகின்றனர். ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான இறைச்சியை-மூன்றில் ஒரு பங்கை
அல்லது அதைவிடக் குறைவாக எடுத்துக்கொண்டு எஞ்சியுள்ளதை உறவினர்களுக்கும்
ஏழைகளுக்கும் பங்கிட்டுக் கொடுக்கின்றனர். அவ்வாறு கொடுக்கும்போது சில குடும்பங்களுக்கு மட்டும்
பலரின் வாயிலாக மிகுதியான இறைச்சி சேர்ந்துவிடுகின்றது; வேறு சில குடும்பங்களுக்கு
அறவே இறைச்சி கிடைக்காமல் போவதும் உண்டு.
மிகுதியான இறைச்சி கிடைக்கப் பெற்றோர், அவ்வளவு இறைச்சிகளையும்
பாதுகாத்து வைக்க, குளிர்சாதனப் பெட்டியில் போதிய இடமில்லாததால், அதில் ஒரு பகுதியை
வீணாக்கிவிடுகின்றனர். இதைத் தவிர்க்க, கூட்டு முயற்சி செய்தால்
எல்லோருக்கும் சமஅளவில் குர்பானி இறைச்சி கிடைக்கும்படி செய்யலாம்.
ஒரு மஹல்லாவில் 500 குடும்பங்கள் என்று
வைத்துக்கொண்டால் அதில் குறைந்தபட்சம் 200 குடும்பத்தினராவது குர்பானி
கொடுப்போராக இருப்பார்கள். நூறு குடும்பத்தினர் கூட்டுக் குர்பானி கொடுப்போராக
இருக்கலாம். ஏழைகளாகவோ, குர்பானி கொடுக்க
வாய்ப்பில்லாதவராகவோ இருப்போரை மட்டும் கணக்கெடுத்துக்கொண்டு ஒரு பட்டியல்
தயார் செய்துகொள்ளலாம்.
குர்பானி கொடுப்போர் தமக்குத் தேவையான இறைச்சியை
எடுத்துக்கொண்டு, ஏழைகளுக்கான பங்கை அந்த மஹல்லாவிலுள்ள பள்ளிவாசலில்
ஒப்படைத்துவிட வேண்டும். ஒவ்வொருவரும் 10 அல்லது 15 கிலோ இறைச்சியை
வழங்குகின்றார்கள் என்றால் ஏறத்தாழ 3000 கிலோ இறைச்சி
சேர்ந்துவிடும். அதைச் சரியான விகிதத்தில் பைகளில் போட்டு, ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ள
பட்டியலில் உள்ளபடி அந்த மஹல்லாவாழ் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கினால் ஒவ்வொரு
குடும்பத்திற்கும் தாராளமாகக் கிடைக்கும். இவ்வாறு செய்வதால்
எல்லோருக்கும் குர்பானி இறைச்சி கிடைக்குமல்லவா?
பல்வேறு மஹல்லாக்களில் இளைஞர் நற்பணி மன்றங்கள்
உள்ளன. அந்த இளைஞர்களை இச்சேவைக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
குர்பானி
இறைச்சியை எடுத்துக்கொண்டு, ஏழைகளைத் தேடி, ஒவ்வொரு வீடாகச் சென்று கொடுக்க முடியவில்லை என்பதற்காகவே
குர்பானி கொடுப்பதைத் தவிர்ப்போர் உள்ளனர். அவர்களுக்கு இச்சேவை மிகவும்
பயனுள்ளதாக இருக்கும்.
தொழுகையில் மட்டுமின்றி எல்லாவற்றிலும் கூட்டு முயற்சி செய்தால் நாம் பற்பல வெற்றிகளை அடையலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக