திருச்சியில் மே 9-முதல் 11 (2025) வரை நடைபெற்ற
உலக இஸ்லாமியத் தமிழ்
இலக்கிய ஒன்பதாம் மாநாட்டில்
#விருந்தோம்பல் குறித்துத்
தமிழ் நூல்களும் தாஹா நபியும்
எனும் தலைப்பில் நான்
சமர்ப்பித்த #ஆய்வுக்கட்டுரை தங்களின் பார்வைக்கு...
-----------------------------------------
விருந்தோம்பல் குறித்துத்
தமிழ்நூல்களும் தாஹா
நபியும்
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம்
சென்னை-28
------------------------------
நம் வீட்டைத் தேடிவரும்
விருந்தினரை இன்முகத்துடன் வரவேற்று அவர்களை உரியமுறையில் உபசரிப்பது தமிழர்
பண்பாடாகும். அந்தப் பண்பாட்டை அப்படியே பிரதிபலிக்கும் விதமாகவே இறுதி இறைத்தூதர்
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைகளும் இருந்தன. பொதுவாகவே தமிழர்
பண்பாடுகளைப் பெரும்பாலும் அப்படியே பிரதிபலிக்கும் வண்ணம் இறுதி இறைத்தூதரின்
போதனைகள் இருந்ததாலேயே இஸ்லாமிய மார்க்கத்தால் ஈர்க்கப்பட்ட தமிழர் பலர் அதனை
மனமுவந்து ஏற்றுக்கொண்டனர் என்பர் முன்னோர்.
அந்த வகையில் தமிழர்
விருந்தோம்பலுக்குக் கொடுத்த அத்தனை முக்கியத்துவங்களையும் இறுதி இறைத்தூதர் தம்
சமுதாய மக்களுக்குப் போதித்துள்ளார்கள் என்பதை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு
பார்க்கலாம். பொதுவாக ‘விருந்தும்
மருந்தும் மூன்று நாள்’ எனும் பழமொழி தமிழர் மத்தியில் உண்டு. ஒரு
வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வந்தால் மூன்று
நாள் நல்லவிதமாக அவரைக் கவனித்து, உபசரித்து அனுப்ப வேண்டும். இது விருந்து கொடுப்பவரின்
தலையாய கடமையாகும். அதுபோலவே ஒரு விருந்தினர் ஒரு வீட்டிற்குச் சென்றால், அங்கு
மூன்று நாளுக்கு அதிகமாக அவர் தங்கியிருக்கக்கூடாது என்பதையும் அப்பழமொழி
சுட்டிக்காட்டுகிறது. ஆக விருந்துகொடுப்பவருக்கும் விருந்தாளியாகத்
தங்குவோருக்கும் இப்பழமொழி வழிகாட்டுகிறது எனலாம்.
இதே கருத்தை இறுதி
இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் வலியுறுத்திக்
கூறியுள்ளார்கள்: “விருந்தோம்பல் மூன்று நாளாகும். ஒரு பகல் ஓர் இரவு
(விருந்தோம்பல்) அவருடைய கொடையாகும். ஒரு முஸ்லிமான மனிதர், தம்
சகோதரரிடம் அவரைப் பாவத்தில் தள்ளும் அளவுக்குத் தங்கியிருப்பதற்கு அனுமதி இல்லை'' என்று
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
மக்கள், “அவரைப்
பாவத்தில் தள்ளுதல் எப்படி, அல்லாஹ்வின் தூதரே?'' என்று
கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அவ(ர் தம் சகோதர)ரிடம் தங்கி இருப்பார். ஆனால், விருந்தோம்பல்
செய்யுமளவுக்கு அவரிடம் எதுவுமே இருக்காது'' என்று
கூறினார்கள். (முஸ்லிம்: 3559)
இதில் விருந்தினரின்
உரிமைகளும் விருந்தளிப்பவரின் உரிமைகளும் சொல்லப்பட்டுள்ளன. அதாவது விருந்தினராக
வந்தவர் மூன்று நாள் வரை அங்கு தங்கியிருக்க உரிமையுண்டு. ஓரிரு நாளிலேயே அவரைத்
துரத்திவிட முற்படக் கூடாது. மேலும் அம்மூன்று நாளிலும் அவரை நல்லவிதமாக உபசரிக்க
வேண்டும். தமக்காகச் சமைக்கும் சாதாரண உணவைச் சமைக்காமல் சிறப்புணவு செய்து பரிமாற
வேண்டும். இவையெல்லாம் விருந்துகொடுப்பவரின் கடமைகள் ஆகும்.
அதுபோலவே விருந்தினராக
வந்தவர் மூன்று நாள் வரை அங்கு தங்கியிருந்துவிட்டு, அதன்பின்
அங்கிருந்து புறப்பட்டுவிட வேண்டும். மூன்று நாளுக்கு மேல் அங்கேயே தங்கியிருந்து
விருந்தளிப்பவருக்கு பொருளாதாரச் சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது. அவர் அந்த
விருந்தினருக்கான உணவைத் தயாரிக்கச் சிரமப்படுவார். அவர் பொருளாதாரத்தில்
நலிந்தவராக இருக்கலாம். அல்லது அவருக்குச் சமைத்துக் கொடுப்பது சிரமமாக
இருக்கலாம். அல்லது வேறு சில சங்கடங்கள்
அவருக்கு ஏற்படலாம். எனவே மூன்று நாளுக்குப் பிறகு இன்முகத்தோடு விடைபெற்று விட
வேண்டும். இவற்றையெல்லாம் உள்ளடக்கி இறைத்தூதர் கூறியுள்ளதையே மேற்கண்ட
பழமொழியும் உணர்த்துகிறது.
அன்போடு உபசரித்தல்:
விருந்தினர் நம் வீட்டிற்கு வந்திருக்கிறபோது அவர்களின் மனத்தில் ஒருவிதமான அசௌகரியத்தை
உணரலாம்; சாப்பிட
வெட்கப்படலாம்; அரைகுறையாகச்
சாப்பிட்டுவிட்டு எழுந்துவிடலாம். இதனால் அவரை முகமலர்ச்சியுடன் வரவேற்றதைப்
போலவே மலர்ந்த முகத்துடன் அவரைச் சாப்பிட அழைத்து, உணவைப்
பரிமாற வேண்டும். “உண்ணுங்கள், உண்ணுங்கள்” என்று வாயில் ஊட்டும் அளவிற்கு வாயார
வார்த்தைகளை வெளிப்படுத்த வேண்டும்.
இது குறித்து
பொய்யாமொழிப் புலவர் கூறுகையில்,
மோப்பக் குழையும் அனிச்சம்
முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
(குறள்: 90) அனிச்சம்பூ
மோந்தவுடன் வாடிப்போகும். அதைப் போல விருந்தளிப்பவர் முகம் கோணிவிட்டால்
விருந்தும் கெட்டுப் போகும். அதாவது அனிச்சம்பூ எவ்வாறு மோந்தவுடன்
வாடிப்போய்விடுகிறதோ அதுபோலவே விருந்தளிப்பவர் இன்முகத்துடன் பரிமாறாவிட்டால்
விருந்துண்பவர் சரியாகச் சாப்பிடாமல் எழுந்துவிடுவார். அவருக்காக ஆயத்தம் செய்த
உணவுகளெல்லாம் வீணாகிப்போய்விடும். எனவே இன்முகத்துடன் உணவு பரிமாற வேண்டும்
என்பதே புலவரின் கூற்றாகும்.
“உண்ணீர் உண்ணீர் என்றூட்டாதார் தம் மனையில்
உண்ணாமை கோடி யுறும்”
என்று ஔவை தமது நாலு கோடிப்பாடலில் பாடியுள்ளார். ஒருவரின் வீட்டிற்கு
விருந்தாளியாக நாம் செல்கிறபோது அவர்கள் நம்மை உபசரிக்க வேண்டும். உணவு பரிமாறும்
நேரத்தில், அவர்களும்
நம்மோடு அமர்ந்து, “உண்ணுங்கள், உண்ணுங்கள்”
என்று அன்பொழுகக் கூற வேண்டும். அவ்வாறு கூறாதோர் வீட்டில் உண்ணாமல்
சென்றுவிடுவதே கோடி நன்மை பெறும் என்று கூறுகிறார் எனில் அவர் எந்த அளவிற்குத்
தன்மானத்தை வலியுறுத்துகிறார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
சிலர் வகை வகையாகச் சமைத்து
வைத்துவிட்டு, அன்போடு
பரிமாறத் தவறிவிடுவார்கள். அத்தகையோர் இப்பாடலின் மூலம் படிப்பினை பெற வேண்டும்.
அதனால்தான், “எப்படி
வேண்டுமானாலும் சமையுங்கள்; ஆனால் அன்போடு பரிமாறுங்கள்” என்று இங்கிலாந்துப் பழமொழி
கூறுகிறது. அன்போடு நாம் பரிமாறாவிட்டால், விருந்தினர்
மனநிறைவோடு உண்ணாமல் எழுந்துவிடுவார்கள். நாம் பாடுபட்டுச் சமைத்ததெல்லாம்
வீணாகிவிடும். ஆக அன்போடு பரிமாறுதல் மிக மிக முக்கியமானது.
அன்புடன் பரிமாறுதல்
எவ்வளவு முக்கியமானது என்பதை விவேக சிந்தாமணி எனும் நூலில் இடம்பெற்றுள்ள பாடல்
ஒன்று இவ்வாறு கூறுகிறது:
ஒப்புடன் முகம் மலர்ந்தே
உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும்
உண்பதே அமிர்தம் ஆகும்
முப்பழ மொடு பால் அன்னம்
முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி
ஆகும் தானே.
முழு மனத்தோடு, மலர்ந்த
முகத்தோடு, உண்மையோடு
பேசி அளவளாவி உப்பு இல்லாத கூழையே கொடுத்தாலும் அதைச் சாப்பிடுவது அமிழ்தத்தைச்
சாப்பிடுவதற்கு நிகராகும். அவ்வாறு இல்லாமல் கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு மா, பலா, வாழை
ஆகிய மூன்று விதப் பழங்கள், பால் இவற்றோடு சோற்றைக் கொடுத்தாலும் ஏற்கெனவே இருந்த
பசி மேலும் கடுமையான பசியைத்தான் ஏற்படுத்தும். எனவே விருந்தோம்பல் என்பதை
முழுமனத்தோடும் அன்பு கலந்த இன்சொற்களோடும் செய்வது முக்கியம்.
விருந்தினரோடு சேர்ந்து
உண்ணல்: நம் வீட்டிற்கு விருந்தாளியாக வந்தவர் ஏதோ வேலையாக வெளியே
சென்றிருக்கிறார். அவர் வரத் தாமதமாகிவிட்டது என்றாலும் அவர் வரும் வரை
காத்திருக்க வேண்டும். பின்னர் அவருடன் சேர்ந்துதான் உணவருந்த வேண்டும். இதுவே
விருந்தினரைக் கண்ணியப்படுத்தும் முறைகளுள் ஒன்றாகும். அவரை விட்டுவிட்டு நாம்
மட்டும் தனியாகச் சாப்பிட்டுவிடக் கூடாது.
இது குறித்துப்
பொய்யாமொழிப் புலவர் கூறுகையில்,
விருந்து புறத்ததாத்
தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற்
றன்று. (குறள்: 82) விருந்தினராக
வந்தவர் வீட்டின் புறத்தே இருக்க, தான் மட்டும் உண்பது சாவா மருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் விரும்பத்தக்கதன்று
எனத் தெரிவிக்கிறார்.
இது குறித்து இறுதி
இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாவது: யார் அல்லாஹ்வையும்
மறுமை நாளையும் நம்பிக்கைகொண்டாரோ அவர் தம் விருந்தினரைக்
கண்ணியப்படுத்தட்டும். (புகாரீ: 6018) விருந்தினரைக்
கண்ணியப்படுத்துதல் என்பது அவர் வரும் வரை அவருக்காகக் காத்திருப்பதும், அவரோடு
சேர்ந்து உண்பதும், அன்போடு
பரிமாறுவதும் ஆகும்.
தமக்கில்லையாகினும்
விருந்தினருக்கு உணவூட்டல்: எதிர்பாராமல் வருவோர்தாம் விருந்தினர்.
தொலைத்தொடர்பில்லா முற்காலத்தில் எதிர்பாராத் தருணத்தில்தான் விருந்தாளிகள்
வருவார்கள். அவர்களை அன்போடு வரவேற்று, உண்ண உணவும் இருக்க உறைவிடமும் கொடுத்து வந்தார்கள் நம்
முன்னோர். அதுதான் விருந்தோம்பல் என்று போற்றப்பட்டது. தற்காலத்தில்
விருந்தாளிகளாக வருவோர் முன்னரே நம்மைத் தொடர்புகொண்டு தகவல் சொல்லிவிடுவதுண்டு.
சொல்லாமல் வருவோரும் சிலருண்டு. இத்தகைய தருணத்தில் நம்மிடம் எது இருக்கிறதோ
அதைக் கொடுத்து, வந்த
விருந்தாளியை உபசரிக்க வேண்டுமே தவிர, “எங்களிடமிருந்த உணவெல்லாம் தீர்ந்துபோய்விட்டது; இப்போது
எதுவும் இல்லை” என்று சொல்லி அனுப்பிவிடக் கூடாது.
தம்மிடம் உணவுப் பொருள்
மிகுதியாக இருக்கும் நிலையில் விருந்தினருக்கு உணவு பரிமாறுவது ஒரு வகைச் சிறப்பு
என்றால், தமக்கில்லையாகினும்
தம் பசியை மறைத்துக்கொண்டு, விருந்தினரின் பசியாற்றுவது படைத்த இறைவனுக்கு மிகவும்
விருப்பமானது. அத்தகைய நற்பண்பை இறுதி இறைத்தூதரின் பாசறையில் வளர்ந்த
நபித்தோழர்களின் வாழ்க்கையில் காணலாம். அத்தகைய நற்பண்பைக் கொண்ட
நபித்தோழர்களுள் ஒருவர்தாம் அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு ஆவார். இக்காலத்தில்
வாழும் பலருக்கும் இந்நிகழ்வு ஒரு முன்னுதாரணமாகும்.
ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபியவர்கள் (அவருக்கு
உணவளிப்பதற்காகத்) தம் மனைவியரிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், “எங்களிடம்
தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை'' என்று பதிலளித்தார்கள். ஆகவே, அல்லாஹ்வின்
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (தம் தோழர்களை நோக்கி), “இவரை
(தம்முடன் உணவுண்ண)ச் சேர்த்துக் கொள்பவர் யார்?''... அல்லது
“இவருக்கு விருந்தளிப்பவர் யார்?''... என்று கேட்டார்கள். அப்போது அன்ஸாரிகளுள் ஒருவர், “நான்
(விருந்தளிக்கிறேன்)'' என்று
சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார். (மனைவியிடம்)
“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களுடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து'' என்று
சொன்னார்.
அதற்கு அவருடைய மனைவி, “நம்மிடம்
நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை'' என்று
சொன்னார். அதற்கு அந்த அன்ஸாரித் தோழர், “உன்
(குடும்பத்திற்கான) உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி(விடுவதைப்
போல் பாவனை செய்து அணைத்து)விடு. உன் குழந்தைகள் உணவுண்ண விரும்பினால் அவர்களைத்
தூங்கச் செய்துவிடு'' என்று
சொன்னார். அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை
ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்துவிட்டார். பிறகு விளக்கைச்
சரிசெய்வது போல் நின்று (பாவனை செய்துகொண்டே) விளக்கை அணைத்துவிட்டார். பிறகு
அவரும் அவரின் மனைவியும் உண்பதுபோல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை)
காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக்
கழித்தனர். காலையானதும் அந்த அன்ஸாரித் தோழர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “நீங்கள்
(கணவன்-மனைவி) இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு (மகிழ்ச்சியால்)
சிரித்துக் கொண்டான். ...அல்லது வியப்படைந்தான்'' என்று
சொன்னார்கள்.
அப்போது அல்லாஹ், “தமக்கே
தேவை இருந்தும்கூட, தம்மைவிடப்
பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், எவர்
தம் உள்ளத்தின் கருமித்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு விட்டார்களோ அவர்கள்தாம்
வெற்றியாளர்கள்'' என்னும்
(59: 9ஆம்)
வசனத்தை அருளினான். (புகாரீ: 3798)
இத்தகைய பண்பு தமிழர்
மத்தியில் இருந்ததைச் சங்க கால நூல்களில் காணலாம். தானியம் ஏதும் இல்லாத நிலையில்
விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினருக்கு
விருந்தளித்தாள் தலைவி என்பதைப் புறநானூற்றுப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.
குரல்உணங்கு விதைத் தினை
உரல்வாய்ப் பெய்து
சிறிது புறப்பட்டன்றோ
இலள்.
மற்றொரு பாடல்:
பொருளினைப் பணயம் வைத்து
விருந்தளித்தல்
நெருநை வந்த விருந்திற்கு
மற்றுத் தன்
இரும்புடைப் பழவாள்
வைத்தனன் இன்றுஇக்
கருங்கோட்டுச் சீறியாழ்
பணையம். - புறநானூறு.
இப்புறநானூற்றுப் பாடலில்
நேற்று வந்த விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த
தன் பழைய வாளைப் பணையம் வைத்தான் தலைவன். இன்றும் விருந்தினர் வந்ததால் தன் கரிய
தண்டையுடைய சிறிய யாழைப் பணையமாக வைத்து விருந்தளித்தான் என்பதனை எடுத்துக்
காட்டுகிறது.
இளையான்குடி மாறநாயனாரின்
வீட்டுக்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க அவரிடம் தானியமில்லை. எனவே, அன்று
விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின்
சமைத்து விருந்து படைத்த திறம் பெரியபுராணத்தில் காட்டப்படுகிறது. ஆக இவ்வாறு
தமிழர் விருந்தோம்பலில் சிறந்துவிளங்கினார்கள் என்பதை நாம் நூல்கள் வாயிலாக அறிந்துகொள்கிறோம்.
பகுத்துண்டு வாழ்தல்:
விருந்தின் அடிப்படை நோக்கம் பிறரின் பசியைப் போக்குதல் என்பதே ஆகும். அந்த
வகையில் நம்மை நாடி வருகின்ற விருந்தினர்களை மட்டுமின்றி, நம்மைச்
சுற்றி வாழ்கின்ற எத்தனையோ பேர் உண்ண உணவின்றி இருக்கலாம். அவர்களைக் கண்டறிந்து
அவர்களோடு நம் உணவைப் பகிர்ந்துகொள்வது மிக்க மேலான அறமாகும். அது குறித்து
இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாவது: “ஒரு மனிதருடைய
உணவு இருவருக்குப் போதுமாகும். இருவரின் உணவு நால்வருக்குப் போதுமாகும்.
நால்வரின் உணவு எண்மருக்குப் போதுமாகும்.” (முஸ்லிம்: 4184)
இதே கருத்தைப்
பொய்யாமொழிப் புலவர் இவ்வாறு கூறுகிறார்:
பகுத்துண்டு பல்லுயிர்
ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம்
தலை. (குறள்: 322) கிடைத்த
உணவைப் பலரோடு பகிர்ந்து உண்டு உயிர்களைக் காப்பாற்றுதல் தலைசிறந்த அறமாகும்.
அந்த வகையில் விருந்தோம்பல் என்பதைத் தாண்டி, அன்றாடம்
நாம் காணும் ஏழைகளுக்கு நம் உணவைப் பகிர்ந்தளிப்பது அறச்செயலாகும். அதை நம்முள்
ஒவ்வொருவரும் செய்யத் தொடங்கிவிட்டால் ஏழ்மை அகலும் என்பது திண்ணம்.
அமிழ்தமே கிடைத்தாலும் தாமே
உண்ணாது பிறருக்கும் கொடுப்பர் நல்லோர்; அத்தகையோரால்தான்
உலகம் நிலைத்திருக்கிறது என்கிறார் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி. புறநானூற்றில் இடம்பெற்றுள்ள
அவரின் பாடல் (182) மூலம்
இதனை உணரலாம்.
“உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிது
எனத்
தமியர் உண்டலும் இலரே..”
விருந்தினரோடு உண்ணல்:
“மருந்தே ஆயினும் விருந்தொடு உண்” என்று கொன்றை வேந்தனில் ஔவையார்
பாடியுள்ளார். அதே கருத்தைத் தாஹா நபியவர்கள், “உன்
விருந்தாளிக்கு நீ செய்யவேண்டிய கடமை உன்மீது உள்ளது” (அபூதாவூத்: 1369) என்று
கூறியுள்ளார்கள். அந்தளவிற்கு விருந்தாளியை உபசரிப்பது முக்கியக் கடமை என்பதை
நமக்கு வலியுறுத்தியுள்ளார்கள்.
நம் முன்னோர்
விருந்தோம்பல் செய்த காலத்தில், வீதிகளில் உணவகங்கள் இருக்கவில்லை. ஆனால் தற்காலத்தில்
வீதிதோறும் பல்வேறு உணவகங்கள் உள்ளன. எனவே தற்போது விருந்தோம்பல் தேவையில்லை
என்று ஒதுக்கிவிடக் கூடாது. மாறாக நாம் நம் நண்பர்களையும் உறவினர்களையும்
அவ்வப்போது அழைத்து, நம்
வீட்டிலேயே உணவைத் தயார் செய்து அவர்களுக்கு அன்போடு பரிமாறுவது நமக்கு மத்தியில்
அன்பையும் பிணைப்பையும் அதிகப்படுத்தும். எனவே இத்தகைய அறத்தை நம்முள் யாரும்
தவறவிட்டுவிடக் கூடாது.
தலைவனும் தலைவியும்: நடு
இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத்
தலைவிக்கு உண்டு என்பதனை நற்றிணைப் பாடல் ஒன்று இவ்வாறு குறிப்பிடுகிறது: “அல்லில்
ஆயினும் விருந்து வரின் உவக்கும்”. விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த
பண்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு வீட்டில் தலைவனோ தலைவியோ ஒருவர்
மட்டுமே ஈகைப் பண்பு கொண்டிருந்து மற்றொருவருக்கு அப்பண்பு இல்லையேல் அங்கு
முழுமையாக விருந்தோம்பல் நடைபெறாது எனலாம்.
அதேநேரத்தில் தலைவனும்
தலைவியும் ஈகைப் பண்புமிக்கவர்களாக இருந்தால் அவ்வீட்டில் விருந்தோம்பல் மிகச் சிறப்பாக நடைபெறுவதோடு அந்த இல்லத்தில்
மகிழ்ச்சிக்கும் பஞ்சமிருக்காது. அத்தகைய சூழ்நிலையை ஒவ்வொரு வீட்டிலும்
ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில்தான் இறுதி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் இவ்வாறு கூறினார்கள்: “ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை - வீணாக்காமல்
தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த
காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும்... (புகாரீ: 1425)
குடும்பத் தலைவி செய்கின்ற
அறச்செயலுக்கான நற்கூலி அவளுக்குக் கிடைக்கும். ஆனால் அதற்கான பொருளாதாரத்தைக்
கணவனே ஈட்டுவதால் அதற்கான நற்கூலி அவனுக்கும் உண்டு. இவ்வாறு ஓர் அறச்செயலுக்கு
இருவருக்கும் நற்கூலி உண்டென்று கூறி, அதனை இருவரும் செய்ய ஊக்குவித்துள்ளார்கள்.
இதே கருத்தைப்
பொய்யாமொழிப் புலவர் இவ்வாறு கூறுகிறார்:
அன்பும் அறனும் உடைத்தாயின்
இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
(குறள்: 45) இல்வாழ்க்கை
அன்பும் அறமும் கொண்டு விளங்கினால், அதுவே அவ்வாழ்வின் நற்பண்பும் பயனும் ஆகும். அதாவது
தலைவனும் தலைவியும் அன்புகொண்ட நெஞ்சினராகவும் அறம் செய்யும் பண்பினராகவும்
இருந்தால் இல்வாழ்க்கை சிறக்கும். கணவனும் மனைவியும் அத்தகைய இணையராக இருப்பதே
இல்வாழ்க்கைக்கு அழகு சேர்க்கும்.
ஆக தமிழர் பண்பாடாக உள்ள
விருந்தோம்பல் குறித்து இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
நமக்குப் போதித்த போதனைகளை நம் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடித்து, பிறருக்கு
ஈந்து வாழும் நற்பேற்றினைப் பெற்று ஈருலகிலும் இன்பமாய் வாழ்வோமாக.
===============================0
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக