புதன், 25 ஜூலை, 2018

பரங்கிப்பேட்டையில் பாகவிகள் மலரும் நினைவுகள் சங்கமம்

பாகவிகள் மலரும் நினைவுகள் சங்கமம் 24 07 2018 அன்று பரங்கிப்பேட்டையில் நடைபெற்றது. பல்வேறு ஊர்களிலிருந்து 35 பாகவிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்கள். சந்திப்பின் முக்கியக் கட்டமாக அவ்வூரின் சி.புதுப்பேட்டை கடற்கரையில் அமர்ந்து பாகவிகள் அனைவரும் தத்தம் மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். அதே நேரத்தில் இச்சந்திப்பு வெறும் சந்திப்பாக மட்டும் போய்விடாமல் இருக்க வேண்டும் என்ற அனைவரின் எண்ணப்படி, இச்சந்திப்புக் கூட்டத்தில் சில முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பல்கலைக் கழகத்தின் நம்முடைய ஆசிரியப் பெருந்தகை முன்னாள் முதல்வர் பி.எஸ்.பி. ஜைனுல் ஆபிதீன் பாகவி ஹள்ரத் அவர்கள் தற்போது சென்னையில்தான் வசித்து வருகின்றார்கள். அவர்களின் தீரா ஆசை என்னவென்றால், தம் இறுதிக் காலம் வரை ஹதீஸ், தஃப்சீர் பாடம் நடத்தியவாறே உயிர்துறக்க வேண்டும் என்பதுதான். எனவே அவர்களின் தீரா ஆசையை நிறைவேற்றும் முகமாக சென்னையில் வசிக்கும் பாகவிகள் ஐவர் தலைமையில் (ஃபக்ருத்தீன் பாகவி, முஜீப்  பாகவி, ஏரல் பீர் முஹம்மது  பாகவி, ஹபீபுல்லாஹ் கான்  பாகவி, செய்யது அஹமது அலி  பாகவி) ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை காலை 10 முதல் 12 வரை பாடம் கேட்கச் செல்வதென தீர்மானம் செய்யப்பட்டது.

2. அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பல்கலைக் கழக அல்இர்ஷாத் மாமன்றம் தொடங்கி நூறாண்டுகள் ஆகின்றன. அதன் நூற்றாண்டு விழாவை நடத்த மத்ரஸா நிர்வாகமே பொறுப்பேற்றுக்கொண்டதால் அது சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பதெனவும் அதன்பின் சென்னையில் அதன் நூற்றாண்டு விழாவை  "பாகவிகள் மலரும் நினைவுகள்''  சார்பாக நடத்துவதெனவும் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3. இன்ஷா அல்லாஹ் "பாகவிகள் மலரும் நினைவுகள்'' சார்பாக அடுத்த சந்திப்பு, கூத்தாநல்லூர், பொதக்குடி, அத்திக்கடை ஆகிய இடங்களில் நடத்துவதெனவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

4. பரங்கி மாநகரில் நடைபெற்று வருகின்ற மக்கள் தொண்டுகளைக் கேட்டறிந்த பாகவிகள் அதன் சேவைகளால் ஈர்க்கப்பட்டார்கள். அச்சேவைகளை தத்தம் மஹல்லாவில் விரிவுபடுத்துவதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (அவர்களின் சேவைகளுள் ஒன்றான பசுமைப் புரட்சி-மரம் நடு தர்மம் எனும் சேவையை வரவேற்ற அவர்கள், ஒரு மரம் நடுவதற்கு ஆகும் செலவான ரூ. 200ஐ உடனடியாக 21 பேர் பாகவிகள் (21X200= 4200) வழங்கி எங்கள் சார்பாக மரத்தை நட்டுவிடுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்கள்.

5. பாகவிகள் மலரும் நினைவுகள் சார்பாக வருகை தந்த பாகவிகளை அன்புடன் வரவேற்று இன்முகத்துடன் உபசரித்து, பரிசுகள் வழங்கி, துஆ செய்து வழியனுப்பிவைத்த கலீல் பாகவி, ஃபாரூக் பாகவி உள்ளிட்ட பரங்கி மாநகர பாகவிகள் அனைவருக்கும் நன்றி கூறித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (பரங்கி மாநகர பாகவிகளின் அழைப்பை ஏற்று, இங்கு வருகை  தந்த பாகவிகள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக அவர்களும் நம்மிடம் தெரிவித்தார்கள்.)

மேற்கண்ட தீர்மானங்களை அனைவரும் செவ்வனே நிறைவேற்ற உயர்ந்தோன் அல்லாஹ் அருள்புரிவானாக.
-தகவல்: நூ. அப்துல் ஹாதி பாகவி (ஆலங்குடி)










கருத்துகள் இல்லை: