திங்கள், 27 நவம்பர், 2023

அல்லாஹ்வின் உதவி எப்போது?

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

கடுமையான சோதனையில் சிக்கி, பல்வேறு சிரமங்களுக்கு ஆளானோர் கேட்கின்ற கேள்வி, அல்லாஹ்வின் உதவி எப்போது கிடைக்கும் என்பதுதான். அல்லாஹ் தன் அடியார்களைச் சோதித்துப் பார்க்கின்றான். அந்தச் சோதனைக் காலத்தில் மனிதர்கள் எவ்வாறு நடந்துகொள்கின்றார்கள்; சோதனைக் காலத்தில் ஈமான் (இறைநம்பிக்கை) கூடுகிறதா, குறைகிறதா அல்லது நடுநிலை வகிக்கிறதா என்பதைத் தெளிவுபடத் தெரிந்துகொள்வதற்காகவே அல்லாஹ் சோதிக்கிறான். அந்தச் சோதனையைப் பொறுமையோடு தாங்கிக்கொண்டு சகித்துக்கொண்டால் அல்லாஹ் தன் உதவியை அவனுக்கு வழங்குவான்.

அல்லாஹ் கூறுகின்றான்: (இறைநம்பிக்கை கொண்டோரே!) சிறிதளவு பயத்தாலும், பசியாலும்செல்வங்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் சேதத்தாலும் நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் சிரமங்களைச்) சகித்துக் கொண்டிருக்கிற பொறுமையாளர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள். (2: 155)

 

சோதனைகளைச் சகித்துக்கொண்டு பொறுமையோடு இருப்பவர்களுக்கு அல்லாஹ் நற்செய்தி கூறச் சொல்கிறான். ஆம்! பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி நற்கூலி வழங்கப்படும் (39: 10) என்ற இறைவசனம் இதனை உறுதிப்படுத்துகிறது.

 

அல்லாஹ் தன் அடியார்களுக்குச் சோதனையை ஏற்படுத்துவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன.  அதாவது பல்வேறு சோதனைகளைத் தாங்கிக்கொண்டு அவன் இந்த மார்க்கத்திலேயே நீடித்திருக்கின்றானா, அல்லது இம்மார்க்கத்தைப் புறக்கணித்துவிடுகின்றானா என்பதைச் சோதித்தறிகின்றான்.

 

 

மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்: பொய்யர்கள் யார், உண்மையாளர்கள் யார் என்று சோதிப்பதற்காகவே அல்லாஹ் சோதனையைக் கொடுக்கின்றான். லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறி ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்டுவிட்டால் சோதனை செய்யப்படாமல் விட்டுவிடப் படுவார்கள் என்று எண்ணிக்கொண்டார்களா? எனக் கேட்கின்றான். (29: 2-3) இந்த ஏகத்துவக் கலிமாவைச் சொல்லிவிட்டாலே சொர்க்கம் கிடைத்துவிடும் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது.

 

கப்பாப் பின் அல்அரத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கஅபாவின் நிழலில் தமது சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்தபோது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, “எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின்மீது நம்பிக்கைகொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழிதோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, இரம்பம் கொண்டு வரப்பட்டு அவரது தலைமீது வைக்கப்பட்டு அது இரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அ(ந்தக் கொடுமை யான)து அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை.

 

(பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரது இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்துவிடும். அ(ந்தக் கொடூரமான சித்திரவதையும் தீ)தும்கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) ஸன்ஆவிலிருந்து ஹளர மவ்த்வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தம் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்சமாட்டார். ஆயினும், நீங்கள்தாம் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகிறீர்கள்என்று சொன்னார்கள். (புகாரீ: 3612)

 

பிலால், கப்பாப் பின் அரத், அபூதர் ஃகிஃபாரீ ரளியல்லாஹு அன்ஹும் உள்ளிட்ட நபித்தோழர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டதற்காகப் பல்வேறு முறைகளில் மிகக் கடுமையாகச் சோதிக்கப்பட்டார்கள்; அவர்களுடைய உரிமையாளர்களால் தண்டிக்கப்பட்டார்கள். அவற்றையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து முறையிட்டார்கள். அப்போதுதான் நபியவர்கள், அவர்களுக்குமுன் வாழ்ந்தவர்கள் எப்படியெல்லாம் சோதனைக்கும் வேதனைக்கும் உள்ளாக்கப்பட்டார்கள் என்பதை விளக்கிக் கூறினார்கள்.

 

ஆக ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்ட யாரும் சோதனைக்கு உள்ளாக்கப்படாமல் இல்லை.  அவர்கள் காலத்தில் அவர்களுடைய இறைநம்பிக்கைக்கு ஏற்ப அவர்கள் சோதிக்கப்பட்டார்கள். நாம் நம்முடைய இறைநம்பிக்கைக்கு ஏற்பத் தற்காலத்தில் சோதிக்கப்படுகிறோம். அளவு வேண்டுமானால் கூடுதல் குறைவாக இருக்கலாம். ஆனால் சோதனை ஒன்றுதான். முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று ஊடகங்களால் முத்திரை குத்தப்பட்டு வஞ்சிக்கப்படுகிறோம்; சோதிக்கப்படுகிறோம். அதனால்  முஸ்லிம்களுக்குப் பிற சமய மக்கள் வாடகைக்கு வீடு கொடுப்பதில்லை; அல்லது தயங்கித் தயங்கி வாடகைக்கு விடுகின்றார்கள். எளிதான முறையில் தொழில் செய்ய முடிவதில்லை; உரிய நீதியைப் பெற முடியவில்லை. எல்லாத் தளங்களிலும் அநியாயம் செய்யப்படுகின்றோம். இதுபோன்ற சோதனைகளைத் தாங்கிக்கொண்டு பொறுமையோடு நாம் நம் ஈமானைக் காத்துக்கொண்டு இருந்தால் நிச்சயம் நமக்கான மாற்றுவழி பிறக்கும்.

 

அல்லாஹ் கூறுகின்றான்: இறுதியில் இறைத்தூதர்கள் (மக்கள்மீது) நம்பிக்கை இழந்து அவர்க(ளின் ஆதரவாளர்க)ளும் தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டதோ என்று எண்ணத்தொடங்கியபோது, அவர்களுக்கு நம் உதவி வந்தடைந்தது. நாம் நாடியவர்கள் பாதுகாக்கப்பட்டனர். குற்றம் செய்யும் மக்களைவிட்டு நம் வேதனையை எவராலும் நீக்கிவிட முடியாது. (12: 110)

 

இறைத்தூதர்களை நம்பிக்கைகொண்டவர்கள் நிராசையாகிவிட்ட நேரத்தில் திடீரென இறைவனின் உதவி வந்தது. இறைநம்பிக்கையாளர்கள் காப்பாற்றப்பட்டார்கள்; இறைமறுப்பாளர்கள் அழிக்கப்பட்டார்கள். இந்த  நிகழ்வு ஒவ்வோர் இறைத்தூதரின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. நபி நூஹ் அலைஹிஸ் ஸலாம் தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்து களைப்படைந்துவிட்ட நிலையில்இறுதியாக இறைவனின் ஆணைக்கேற்பக் கப்பல் செய்து அதில் இறைநம்பிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டபோது, மிகக் கடுமையான வெள்ளப் பிரளயம் ஏற்பட்டு, இறைமறுப்பாளர்கள் அனைவரும் அழிக்கப்பட்டார்கள் என்பது குர்ஆன் கூறும் வரலாறு.

 

அதுபோலவே நீண்ட காலப் பிரச்சாரத்திற்குப் பின்னும் இறைத்தூதர் லூத் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் போதனையை ஏற்றுக்கொள்ளாத இறைமறுப்பாளர்கள் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். இறுதியில், “நீங்கள் இவ்வூரைவிட்டுப் புறப்பட்டுவிடுங்கள்  என்ற அல்லாஹ்வின் கட்டளைக்கேற்பத் தம்மை நம்பிக்கைகொண்டவர்களை மட்டும் தம்மோடு அழைத்துக்கொண்டு அவ்வூரை விட்டுப் புறப்பட்டார்கள். அதன்பின் அவர்களுடைய மனைவி உள்பட அனைவரும் அழிக்கப்பட்டார்கள் என்பது வரலாறு. இவ்வாறே ஒவ்வோர் இறைத்தூதரும் சோதனைக்கு ஆளாக்கப்பட்டு, கடைசியில் இறையுதவியைப் பெற்றார்கள்; காப்பாற்றப்பட்டார்கள் என்றே குர்ஆன் கூறுகிறது.

 

 

இன்று உலக அளவில் முஸ்லிம்கள் பின்தங்கியவர்களாகவும் வலிமை குன்றியவர்களாகவும் இருக்கின்றார்கள். மிக விரைவில் இந்நிலை மாறும் என்ற நம்பிக்கையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யூதர்கள் ஃபலஸ்தீனில் முஸ்லிம்களைக் கொன்று குவிக்கின்றார்கள். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்படப் பலர் கொல்லப்படுகின்றார்கள். மருத்துவமனைகளையும் குறிவைத்துத் தாக்குகின்றார்கள்; போர் மரபையே யூதர்கள் மீறுகின்றார்கள். போரை நிறுத்துங்கள்என்று ஐ.நா. சபை கேட்டுக்கொண்டபின்னும் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கொன்று குவிக்கின்றார்கள். இத்தகைய கடினமான நேரத்திலும் அசைக்க முடியாத இறைநம்பிக்கையோடு ஃபலஸ்தீனர்கள் அங்கு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

 

அவர்களுடைய ஈமானின் உறுதியைக் கண்டு, விரைவில் அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்வான்; அக்கிரமக்காரர்களான இஸ்ரேலிய யூதர்களிடமிருந்து ஃபலஸ்தீன் மக்களுக்கு விடுதலை கொடுப்பான். அதுவரை அவர்கள் அமைதி காக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள ஃபலஸ்தீன் மக்களுக்காகவும் நமக்காகவும் நாம் அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதுதான் நம்முடைய ஒரே ஆயுதம். ஏந்திய கைகளை வெறும் கைகளாக அல்லாஹ் திருப்பிவிட மாட்டான் என்று உறுதியாக நம்புவோம்.

0000000000000000







வியாழன், 9 நவம்பர், 2023

ஏற்றத் தாழ்வுகள் களைந்த ஏந்தல் நபி

  

    

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28

--------------------------------------------

இந்தியாவில் தொழில்ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்படுவதும், மனிதர்களை அவர்கள் செய்யும் தொழிலை வைத்து மதிப்பதும் இகழ்வதும் காலங்காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. நாவிதர் ஒருவரின் பிள்ளை தன் தந்தையின் தொழிலையே செய்ய வேண்டும்; குயவர் ஒருவரின் பிள்ளை தன் தந்தையின் தொழிலான குயத்தொழிலையே செய்துவர வேண்டும். வாழையடி வாழையாகத் தொடர்கிற இப்பழக்கம் மக்கள் மத்தியில்  அவர்கள் செய்யும் தொழிலை வைத்து இழிவாகவும் கேவலமாகவும் நடத்தப்படுகிற நிலையை உண்டாக்கிவிட்டது.  பானை வனைதல், தலைமுடி சிரைத்தல், புதைகுழி தோண்டுதல், துணிதுவைத்தல் உள்ளிட்ட தொழில்களைக் குறிப்பிட்ட சாரார் மட்டுமே செய்ய வேண்டும் என்று சொல்லப்படாத விதி இருந்துவருகிறது.

 

பெரியார் உள்ளிட்ட சமூகச் சீர்திருத்தவாதிகள் தோன்றி, மக்கள் மத்தியில் புரையோடிப்போய்க் கிடந்த மூடப் பழக்கங்களையும், தீண்டாமைகளையும் ஒழிக்கப் பாடுபட்டார்கள். அப்படியிருந்தும் இன்று வரை மக்கள் மத்தியில் தீண்டாமையோ சாதிக்கொடுமைகளோ ஒழிந்த பாடில்லை; சாதிப் படுகொலைகள் இன்று வரை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன; தீண்டாமைக் கொடுமைகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.

  

அந்தந்தத் தொழிலை அவரவர்தாம் செய்ய வேண்டும் என்ற சமூகக் கட்டுப்பாடும் இருந்து வருகிறது. எல்லோரின் தலைமுடிகளையும் களைந்து, சிகையலங்காரம் செய்கிற தொழிலாளி, ‘நாவிதன்என்ற பெயரால்  சிறுமைப்படுத்தப்படுகின்றான். புதைகுழி தோண்டி, ஒருவரின் இறுதிச் சடங்கை நிறைவேற்றுகிற தொழிலாளி வெட்டியான்என்ற பெயரால் சிறுமைப்படுத்தப்படுகின்றான். உணவு உள்ளிட்ட பொருள்களைச் சமைக்கப் பயன்படுத்துகிற பானைகளைச் செய்துகொடுக்கிற தொழிலாளி, ‘குயவன்என்ற பெயரால்  சிறுமைப்படுத்தப்படுகின்றான். இவ்வாறு ஒவ்வொரு தொழிலாளியும் அவரவர் செய்கிற தொழிலை முன்னிலைப்படுத்திச் சிறுமைப்படுத்தப்படும் நிலை இன்று வரை தொடர்கிறது. அதனால் மக்கள் மத்தியில் உயர்வு தாழ்வு நீடிக்கிறது.

 

அண்மையில் நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி விஸ்வகர்மா யோஜனா எனும் திட்டத்தை அறிவித்தார்.  நாடு முழுவதும் உள்ள பாரம்பரியக் கைவினைஞர்களுக்கு உதவுமுகமாக செப்டம்பர் 17, 2023 அன்று இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இவர்கள் எந்தவிதப் பிணையமும் இல்லாமல் ஒரு இலட்சம் வரை நிதியுதவி பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். இத்திட்டத்தைச் சிலர் வரவேற்றாலும் பலர் இதனை விமர்சனம் செய்துள்ளார்கள். மக்களுள் சில பிரிவினர் செய்துவந்த குலத்தொழிலை ஊக்கப்படுத்துவதும், அவர்களைத் தொழில்ரீதியாக இழிவடையச் செய்வதும்தான் அரசின் நோக்கம் என்கின்றனர்.

இந்தத் திட்டத்தின் அடிப்படையில் செருப்பு தைப்பவரின் பிள்ளை செருப்புத் தைக்கும் தொழிலையும் பானை செய்யும் குயவரின் பிள்ளை பானை செய்யும் தொழிலையும், பறையடிப்பவரின் பிள்ளை பறையடிக்கும் தொழிலையும், துணிவெளுக்கும் வண்ணான் பிள்ளை துணி வெளுக்கும் தொழிலையும் அந்தந்தத் தொழில் செய்வோரின் பிள்ளைகள் தத்தம் தந்தையின் குலத்தொழிலையும் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு அரசு நிதியுதவி செய்ய முன்வருகிறது. இது சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமா? அல்லது மனிதர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்குமா?


இஸ்லாமிய மார்க்கத்தில் எந்தத் தொழிலையும் யாரும் செய்யலாம். குறிப்பிட்ட இனத்தவர்தாம் இந்தத் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடோ நிபந்தனையோ கிடையாது. யாரும் எந்தத் தொழிலையும் செய்யலாம். செய்யும் தொழிலை வைத்து ஒருவரை மதிப்பதோ இழிவாகக் கருதுவதோ இங்கு கிடையாது.  அதாவது வண்ணான், குயவர், வெட்டியான் என்ற அடைமொழிப் பெயர்கள் இங்கு கிடையாது. எல்லோரும் முஸ்லிம் என்றே அறியப்படுகின்றார்கள். ஒருவர் அடக்கத்தலத்தில் புதைகுழி (கப்ர்) தோண்டுபவராக இருந்தாலும் சமூகத்தில் அவர் செய்யும் தொழிலைவைத்து அழைக்கப்பட மாட்டார். இதுதான் இஸ்லாம் மனித சமுதாயத்திற்குத் தந்த மிகப்பெரும் அருட்கொடை எனலாம்.


மேலும் ஒருவர் செய்யும் தொழிலை வைத்து ஏற்றத்தாழ்வு ஏற்படாத வகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழிகாட்டியுள்ளார்கள். ஒவ்வொரு செயலையும் நன்மைக்குரிய அறச் செயல் என்ற வட்டத்திற்குள் கொண்டுவந்துள்ளார்கள். ஒவ்வொரு நற்செயலும் தர்மம் ஆகும் (புகாரீ: 6021) என்ற நபிமொழியின் அடிப்படையில் இறந்துவிட்ட சகோதரரின் பிரேதத்தை நல்லடக்கம் செய்வதற்காகப் புதைகுழி தோண்டுவதும் தர்மமே ஆகும். எனவே இறந்தவர் யாராக இருந்தாலும் அவர்தம் உறவினரோ மற்றவர்களோ புதைகுழி தோண்டத் தயாராகிவிடுவார்கள். அதற்கெனத் தனியாக ஓர் ஆள் நியமிக்கப்பட வேண்டிய கட்டாயம் முஸ்லிம்களுக்கு ஏற்படவில்லை. மேற்கண்ட நபிமொழியின் அடிப்படையில் முஸ்லிம்கள் செயல்படுவதால் யார் வேண்டுமானாலும் குழி தோண்டி, அந்த நன்மையை அடைந்துகொள்ளலாம். எனவே சில ஊர்களில் முஸ்லிம் இளைஞர்கள் பலர் புதைகுழி தோண்டப் போட்டிபோடுவர்.

 

அதுபோலவே இறந்துவிட்ட ஒருவரின் இறுதிக் கடமையை நிறைவேற்றுவதற்கு, பிற சமயங்களில் புரோகிதர் ஒருவர் தேவைப்படுவதைப் போலத் தனிப்பட்ட முறையில் ஆலிம் ஒருவர் தேவையில்லை.


இறந்துவிட்டவரின் மகன்களே அக்கடமையை நிறைவேற்றிவிடலாம். இறந்துவிட்ட தந்தைக்கு இறுதித் தொழுகையான பிரேதத் தொழுகை (ஜனாஸா) நடத்த மகனுக்கே முன்னுரிமை வழங்கப்படும். மகன் தொழுகை முறை குறித்து அறிந்திருக்கவில்லையானால் அவருடைய நெருங்கிய உறவினர்களுள் ஒருவர் தொழுகை நடத்தலாம். ஆக இஸ்லாமிய மார்க்கம் எல்லாவற்றையும் எளிமைப்படுத்தி, ஏற்றத்தாழ்வுகளை அகற்றிவிட்டது.

 

பிற சமயத்தவர் ஒருவர் இறந்துவிட்டால், அவர் ஏழையாக இருந்தால் வெகுசிலரே இடுகாடு வரை செல்வார்கள்.  செல்வாக்கு உள்ளவராக இருந்தால் ஒரு பெருங்கூட்டத்தினர் செல்வார்கள். ஆனால் முஸ்லிம் ஒருவர் இறந்துவிட்டால்-அவர் ஏழையாக இருந்தாலும் அந்த மஹல்லாவில் உள்ள பலர் அவரின் இறுதித் தொழுகையில் பங்கேற்பார்கள். குறிப்பிடத்தக்க தொகையினர் கப்ரஸ்தான்-அடக்கத்தலம் வரை சென்று, அடக்கம் செய்யப்பட்டபின், இறந்தவருக்காகப் பிரார்த்தனை செய்துவிட்டுத் திரும்புவார்கள். காரணம், இச்செயலையும் நன்மைக்குரியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆக்கிவிட்டார்கள்.


 ஏனென்றால் நம் உறவினர் அல்லாத முஸ்லிம் ஒருவர் இறந்துவிட்டதற்காக நாம் ஏன் அவரின் இறுதித் தொழுகையில் கலந்துகொள்ள வேண்டும்; நாம் ஏன்  அடக்கத்தலம் வரை சென்று கால்கடுக்க நிற்க வேண்டும்; நாம் ஏன் நம் நேரத்தை வீணடிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றலாம். அந்த எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாகவே மறுமையின் நன்மையைக் கூறியுள்ளார்கள். அந்த நபிமொழி இதோ: 



யார் ஜனாஸா தொழுகையில் பங்கேற்கின்றாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு; அடக்கம் செய்யப்படும் வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு''  என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  கூறினார்கள். அப்போது இரண்டு கீராத்கள் என்றால் என்ன?'' என வினவப்பட்டது. அதற்கவர்கள், “இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)'' என்றார்கள். (புகாரீ: 1325)

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே அடிமைத்தளையை உடைத்து, மனிதர்களுக்கு மத்தியில் இருந்த ஏற்றத்தாழ்வுகளையெல்லாம் களைந்துவிட்டார்கள். எஞ்சியிருந்த சின்னச்சின்ன  ஏற்றத்தாழ்வுகளையும் தம் இறுதி உபதேசத்தின்மூலம் நிர்மூலமாக்கிவிட்டார்கள். அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின்போது ஆற்றிய உரையின் ஒரு பகுதி இதோ:

 

மக்களே! அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் இறைவன் ஒருவனே; உங்கள் தந்தையும் ஒருவரே; அறிந்து கொள்ளுங்கள்! எந்த அரபியருக்கும் அரபியர் அல்லாதவரை விடவோ, அரபியர் அல்லாதவர் எவருக்கும் அரபியரைவிடவோ எந்தச் சிறப்பும் இல்லை. எந்த  வெள்ளையருக்கும் கருப்பரை விடவோ, எந்தக் கருப்பருக்கும் வெள்ளையரை விடவோ எந்தச் சிறப்பும் இல்லை. இறையச்சத்தைக் கொண்டே தவிர (யாரும் மற்றவரைவிடச் சிறப்பை அடைய முடியாது)... (முஸ்னது அஹ்மத்: 23489)

 

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். (49: 13) இவ்வுலகில் பிறந்த எல்லோரும் ஒரே பெற்றோரின் மூலமே பிறந்துள்ளோம். ஆகவே மனிதர்கள் மத்தியில் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை என்பதையே இந்த இறைவசனம் பறைசாற்றுகிறது. உன் தாய் உன்னைப் பெற்றாள்; என் தாய் என்னைப் பெற்றாள். இதில் உனக்கும் எனக்கும் என்ன ஏற்றத்தாழ்வு? “இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்கள்தாம் (49: 10) என்ற இறைவசனத்தின் அடிப்படையில் அனைவரும் சமம்தான். 

 

ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கைலாகு (முஸாஃபஹா) செய்தார். மரம் வெட்டியதால் அவருடைய கை காய்ச்சிப் போயிருந்தது. அந்த உழைப்பாளியின் கையில் நபியவர்கள் முத்தமிட்டார்கள். ஆக தொழில்ரீதியாக யாரையும் ஏற்றத்தாழ்வாக நபியவர்கள் நடத்தியதில்லை. எனவே நபியவர்களைப் பின்பற்றி வருகின்ற இந்தச் சமுதாயத்தில் எல்லோரும் சமமே. எத்தொழில் செய்வோரும் பள்ளிவாசலில் ஓரணியில் நின்று தோளோடு தோள் சேர்த்து ஒன்றாகத் தொழுவதைக் காணலாம்.

 

ஏற்றத்தாழ்வைக் களைய நபியவர்கள் கையாண்ட மற்றொரு வழிமுறை, ஒருவர் மற்றொருவரைச் சந்திக்கும்போது முகமன் கூறுதல் என்பதாகும். இதில் நான் ஏன் அவருக்கு முதலில் முகமன் கூற வேண்டும்; அவர் எனக்கு முதலில் முகமன் கூறட்டும் என்ற இறுமாப்பும் பெருமையும் ஏற்படும். வசதியானவன் ஏழையைப் பார்த்து, முதலில்  முகமன் கூற யோசிப்பான். நான் இந்தச் சாதாரண மனிதனுக்கு முதலில் முகமன் கூற வேண்டுமா, அவனே சொல்லட்டுமே என்று நினைப்பான். மாணவரைப் பார்த்த ஆசிரியர், அவன் நமக்கு முதலில் சொல்லட்டும் என நினைப்பார். இப்படி ஒவ்வோர் உயர்நிலையில் உள்ளோரும் தம் கீழ் நிலையில் உள்ளோரிடம் எதிர்பார்க்கலாம். இதையெல்லாம் முறியடிக்கும் வண்ணம், “அல்லாஹ்விடம், மக்களுள் மிகவும் சிறந்தவர் முதலில் முகமன் கூறுபவர் ஆவார் (அபூதாவூத்: 4522) என்று மொழிந்தார்கள்.

 

ஒவ்வொருவரும் தாமே அல்லாஹ்விடம் சிறந்தவராகவும் நெருக்கமானவராகவும் இருக்க விரும்புவார். ஆகவே முஸ்லிம்கள் யாரும் முதலில் முகமன் கூற யோசிப்பதில்லை. எதிரே வருபவர் முஸ்லிம் என்று தெரிந்துவிட்டால், இவர் அவருக்கு இயல்பாகவே முந்திக்கொண்டு முகமன் கூறிவிடுவார். ஆகவே இங்கு இவ்விஷயத்திலும் ஏற்றத்தாழ்வு முறியடிக்கப்படுகிறது என்பதை உணரலாம்.  

 

ஆகவே ஒருவர் செய்யும் தொழிலை வைத்தோ, பிறந்த குலத்தை வைத்தோ, நாட்டை வைத்தோ ஏற்றத்தாழ்வுகள் இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லை. மக்களின் பழக்கவழக்கங்களில், நடைமுறைகளில் சிற்சில வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் இருக்கலாம். அவற்றையெல்லாம் இஸ்லாமிய மார்க்கத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடாது. எனவே எந்த முஸ்லிமும் பிறப்பால், மொழியால், குலத்தால், தொழிலால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் இல்லை என்பதை மனத்தில் பதிய வைத்து, வாழ்க்கைப் பாதையில் நடைபோடுவோம்.

================================









ஞாயிறு, 22 அக்டோபர், 2023

பார்வையில் படாத படக்கருவிகள்

  


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

முப்பது ஆண்டுகளுக்குமுன் ஊருக்கு ஒருவரோ இருவரோ நிழற்படக் கருவி வைத்திருப்பார்கள். ஊர்மக்கள் அனைவரும் தத்தம் தேவைக்கேற்ற நேரங்களில் அங்கு சென்று நிழற்படம் எடுத்துக்கொள்வார்கள். குறிப்பாகப் பெண்கள் பருவ வயதை அடைந்தபின்னர், நீண்ட சடைபோட்டு, அதில் முழுவதுமாக மல்லிகைப் பூவால் அலங்காரம் செய்து, நிழற்படக் கடைக்குச் சென்று, சடையின் பூ அலங்காரம் கண்ணாடியின் பிம்பத்தில் தெரியும் வண்ணம் நிழற்படம் எடுத்து வைத்துக்கொள்வார்கள். தம் வீட்டிற்கு வரும் உறவினர்களிடம் அதைக் காட்டி மகிழ்வார்கள்.

 

ஆண்களோ வெளிநாட்டிற்குச் செல்வதற்காகக் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது பாஸ்போர்ட் சைஸ் நிழற்படம் 16 பிரதிகள் எடுத்துக்கொள்வார்கள். பின்னர் பள்ளிக்கூடத்தில் வகுப்புவாரியாக ஒவ்வொரு வகுப்பு மாணவ-மாணவியரோடு அவ்வகுப்பு ஆசிரியர்களும் நின்று நிழற்படம் எடுத்துக்கொள்ளும் வழக்கம் இருந்தது. திருமணம் முடிந்த கையோடு மாப்பிள்ளை-பெண்ணை நிற்க வைத்து ஒரு நிழற்படம் எடுத்துக்கொள்வார்கள். ஆக குறிப்பிட்ட சில நினைவுகளை ஆவணப்படுத்திக்கொள்ளவும் பிற்காலத்தில் அதைப் பார்த்து மகிழவும், கடந்த கால நினைவுகளை அசைபோட்டுக்கொள்ளவுமே நிழற்படங்கள் எடுக்கப்பட்டன; அது ஒரு வசந்தகாலமாக இருந்தது.

 

தற்காலத்தில் அறிதிறன் பேசி (ஸ்மார்ட் ஃபோன்) வைத்துள்ள ஒவ்வொருவரும் புகைப்படக் கலைஞர்தாம். அறிதிறன் பேசி வைத்துள்ள இளைஞர்களும் இளைஞிகளும் அன்றாடம் ஆங்காங்கே கைப்படம் (செல்ஃபீ) எடுத்து மகிழ்கின்றனர். அவர்களுள் பலர் தாம் செல்லும் இடங்கள், உணவகங்கள், உண்ணும் உணவுகள், சந்திக்கும் நண்பர்கள் உள்ளிட்ட அனைத்தையும் படம் பிடித்துக்கொண்டே இருக்கின்றனர். சிலர் தம் திறமையைக் காட்டும்விதத்தில் சாகசங்கள் செய்து கைப்படம் எடுக்கின்றனர். அவ்வாறு எடுக்கும் இளைஞர்கள் சிலர் ஆங்காங்கே இறந்துபோய்விடுகிற துக்க நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன.

 

இன்றைய இளைஞர்களுள் வக்கிரப் புத்திகொண்டவர்கள் வலைதளங்களில் கிடைக்கின்ற பெண்களின் புகைப்படங்களை வைத்து, ஒட்டுவேலை (மார்ஃபிங்) செய்து, அப்படங்களில் உள்ள முகங்களோடு  ஆடையற்ற கீழ்ப்பகுதியை இணைத்து அசிங்கமான படமாக உருவாக்கி, அதற்கென உள்ள வலைதளங்களுக்கு விற்றுவிடுகின்றார்கள். பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொள்ள எடுக்கப்பட்ட நிழற்படங்கள், சமூக வலைதளங்களில் நண்பர்கள், தோழிகள் ஆகியோரின் விருப்பக்குறிகளைப் பெறுவதற்காகப் பெண்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட நிழற்படங்கள், இறுதியில் ஒரு நாள் அவர்களுக்கே கேடாக அமைந்துவிடுகிறது.  கேவலமான மனிதர்களின் குறுமதியால் இளம்பெண்கள் பாதிக்கப்படுகின்றார்கள். பெண்கள் ஓட்டல்கள் அல்லது வேறு எங்கேனும் தனிமையில் குளித்ததைக் காணொலிக் காட்சியாகப் பதிவு செய்துவைத்துக்கொண்டு, அதைச் சொல்லி அப்பெண்களை மிரட்டுவதும் தொடர்கிறது.  கேட்ட பணத்தைக் கொடுக்கவில்லையானால் உன்னைப் பற்றிய அந்தக் காணொலியைச் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என்று மிரட்டிப் பணம் பறிக்கின்றார்கள். இதனால் இளம்பெண்கள் தம்மை மாய்த்துக்கொள்ளும் பரிதாப நிலையும் நீடிக்கிறது. 

 

இன்றைய இளைஞர்கள் பலர் தம் கைப்பேசியை நீண்டதொரு கைப்பிடி நிலைக்கம்பியில் மாட்டி வைத்துக்கொண்டு அலைகின்றார்கள். போவோர், வருவோர் என யாரையும் விடாமல் நிழற்படம், காணொலிக் காட்சி எடுத்து, யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுகின்றார்கள். அக்காட்சிகளைப் பார்ப்போர் இடுகின்ற விருப்பக்குறிகள் (லைக்ஸ்) எவ்வளவு என்பதைப் பார்த்து ஆனந்தமடைகின்றார்கள். இன்றைய இளைஞர்களும் இளைஞிகளும் சமூக வலைதளங்களில் உலாவருவோரின் விருப்பக்குறிகளுக்கு அடிமையாகிக் கிடக்கின்றார்கள்; அதில் கிடைத்துள்ள கூடுதல் விருப்பக்குறிகள் குறித்துத் தம் நண்பர்களிடம் பெருமையாகப் பேசிக்கொள்கின்றார்கள்.

 

இளம்பெண்கள் சிலர் காணொலிக் காட்சிகளைச் சமூக வலைதளங்களில் பதிவேற்றுகிறார்கள். முஸ்லிமல்லாத பெண்கள் குறித்து நாம் பேச வேண்டியதில்லை. முஸ்லிமான இளம்பெண்களும் சமூக வலைதளங்களில் தம் நிழற்படங்களைப் பகிர்கின்றார்கள்; காணொலிக் காட்சிகளை வெளியிடுகின்றார்கள். ஆடல், பாடல், அங்க அசைவுகள் உள்பட அனைத்தையும் உள்ளடக்கிய முகம் சுழித்துப் பார்க்கக்கூடிய காட்சிகளும் இடம்பெறுகின்றன. முஸ்லிம் பெண்கள் சிலர் இஸ்லாமியக் கட்டுப்பாடுகளையும் வழிகாட்டல்களையும் தாண்டிச்சென்று, காட்சி ஊடகங்களில் நடிகர்களோடு கைகுலுக்குகின்றார்கள்; காட்சி ஊடகங்களில் மற்ற சமுதாயப் பெண்களைப் போன்று தோன்ற நினைக்கின்றார்கள்; பல்வேறு படக்கருவிகள் (காமிராக்கள்) முன் எந்தவித நாணமுமின்றிக் காட்சி தருகின்றார்கள். இத்தகைய இஸ்லாமிய இளம்பெண்கள் நாளை மறுமையில் நடைபெறும் விசாரணை நாளில் என்ன பதில் சொல்லப்போகிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியமாகும்.

 

வக்கிரப் புத்தி கொண்ட இளைஞர்கள் ஆங்காங்கே மறைமுகமாக, கண்ணுக்குப் புலப்படாப் படக் கருவிகளை வைத்து, காட்சிகளைப் பதிவு செய்து, அதைத் தனிமையில் கண்டு இரசிக்கின்றார்கள்; பலர் அக்காட்சிகளை விற்பனை செய்துவிடுகின்றார்கள். பெண்கள் பயன்படுத்துகிற கழிப்பறைகள், ஒப்பனை அறைகள், குளியல் அறைகள் ஆகியவற்றில் கண்ணுக்குப் புலப்படா வண்ணம் படக்கருவிகள் வைக்கப்படுகின்ற அபாயம் இருப்பதால் பெண்கள் பெரிய பெரிய ஓட்டல்கள், துணிக் கடைகள் செல்லும்போது மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். வெளியிடங்களில் ஆடைகள் உடுத்துவதையும் துணிக்கடைகளில் ஆடைகளை உடுத்திப் பார்த்து வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். குளித்தல், உடை மாற்றுதல் உள்ளிட்ட அதில் பதிவாகும் காட்சிகளை அவர்கள் கண்டு இரசிப்பதோடு அதற்கென உள்ள வலைதளங்களுக்கு அவற்றை விற்றுப் பணமாக்கிவிடுகின்றார்கள்.

 

பெண்கள் இதுபோன்ற விபத்துகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதினான்கு நூற்றாண்டுகளுக்குமுன் கூறியுள்ள முன்னெச்சரிக்கையான செய்தி இன்று அவர்களுக்குப் பயனுள்ளதாக இருப்பதை நினைத்து நாம் மிகுந்த வியப்படைகின்றோம்.

 

உம்முத் தர்தாஉ ரளியல்லாஹு அன்ஹா கூறியதைத் தாம் செவியுற்றதாக முஆத் பின் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது: நான் (பொதுக்) குளியலறையிலிருந்து வெளியே வந்தேன். அப்போது என்னைச் சந்தித்த அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடம், “உம்முத் தர்தாஉ! எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார்கள்.

 

(பொதுக்) குளியலறையிலிருந்து வருகிறேன் என்றேன். அதற்கு அவர்கள், “யாருடைய கையில் என் உயிர் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! எந்தப்பெண் தன் தாய்வழி உறவினர் அல்லாத வீட்டில் தன் ஆடையை அவிழ்க்கிறாளோ, அவள் தனக்கும் ரஹ்மா(ன் ஆகிய தன் இறைவ)னுக்கும் இடையிலான திரையைக் கிழித்துவிட்டாள் என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மத்: 27038)

 

நபியவர்கள் அன்று கூறிய செய்தி, இன்றையக் காலத்தில் எந்த அளவிற்குப் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது என்பதைச் சிந்தித்தால் வியப்படையாமல் இருக்க முடியாது. ஆங்காங்கே படக்கருவிகள் இரகசியமாக வைக்கப்படும் சூழ்நிலையில், பெண்கள் தம் நெருங்கிய உறவினர் வீடுகளில் அல்லாது வேறெங்கும் ஆடையை அவிழ்க்காமல் புர்காவோடு இருந்துவிட்டால் இரகசியப் படக்கருவிகளால் எந்தச் சிக்கலும் அவர்களுக்கு ஏற்படப்போவதில்லை. ஆகவே பெண்கள் தம் நெருங்கிய உறவினர்கள் இல்லங்களைத் தவிர வேறெங்கும் தம் ஆடையை அவிழ்க்கவோ மாற்றவோ கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நம்முடைய ஒவ்வொரு செயலிலும் நபியவர்களின் முன்மாதிரிவாழ்க்கையைப் பின்பற்றி நடந்தால் எப்போதும் நமக்குப் பாதுகாப்பு; அதில்தான் ஈருலக வெற்றி உள்ளது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

===========================








புதன், 20 செப்டம்பர், 2023

தினமணி விவாதமேடை (20 09 2023)


--------------------------------------------------

கடந்த வாரம் கேட்கப்பட்ட 'மாணவர்களின் கல்வியை திசைதிருப்புவதால் பள்ளிகளில் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று யுனெஸ்கோ அமைப்பு பரிந்துரைத்திருப்பது ஏற்புடையதா?" என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...


 இன்றைய நவீன உலகில் காட்சி ஊடகங்கள் மாணவர்களின் மிகுதியான நேரத்தைத் திருடிக்கொள்கின்றன.  அவற்றுள் முதலிடம் வகிப்பது அறிதிறன்பேசி (ஸ்மார்ட் ஃபோன்) ஆகும். அதில் விளையாட்டு, திரைப்படம், காணத்தகாத காட்சிகள் ஆகியவற்றில் மாணவ-மாணவிகள் பலர் தம் பொன்னான நேரத்தைப் பாழ்படுத்திக்கொண்டிருக்கின்றனர். இதனால் அவர்கள்தம் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கல்வியில் கவனம் செலுத்தத் தவறிவிடுகின்றனர்.  எனவே மாணவர்கள்  அதைப் பயன்படுத்தாமல் இருப்பதே கல்வியில் முழுமையான கவனம் செலுத்த வழிவகுக்கும். 

நூ. அப்துல் ஹாதி பாகவி, 

பட்டினம்பாக்கம், 

சென்னை-28 

13.09.2023






ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

இதயம் கெட்டால் எல்லாம் கெட்டது!

  


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 மனிதனின் உள்ளம் ஒரு திடலில் கிடக்கின்ற இறகு போன்றது. காற்று எத்திசையில் வீசுகிறதோ அத்திசையில் அது பறக்கும்; நகரும். ஆகவே அது ஒரு நிலையில் நீடித்து நில்லாதது. இறைவன்மீது நம்பிக்கைகொண்டிருக்கிற நாம், ஒவ்வொரு நாளும் ஓயாமல் கேட்க வேண்டிய பிரார்த்தனையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்குக் கற்றுத்தந்துள்ளதோடு அவர்களும் அடிக்கடி கேட்டுள்ளார்கள்.

 

யாமுகல்லிபல் குலூப், ஸப்பித் கல்பீ அலா தீனிக-உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே! என் உள்ளத்தை உன் மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வாயாக. (திர்மிதீ: 2140) இதுதான் அந்தப் பிரார்த்தனை. இவ்வாறு ஒரு தடவை நபியவர்கள் பிரார்த்தனை செய்தபோது நபித்தோழர் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களையும் நீங்கள் கொண்டு வந்ததையும் (குர்ஆனையும்) நம்பிக்கை கொண்டுள்ளோம். அப்படியிருக்க, (நாங்கள் உங்களைவிட்டு விலகிவிடுவோம் என்று) நீங்கள் எங்களைக் குறித்து அஞ்சுகிறீர்களா?” எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள், “திண்ணமாக (மனித) உள்ளங்கள் அல்லாஹ்வின் விரல்களுள் இரண்டு விரல்களுக்கிடையே உள்ளன; அவற்றை அவன் விரும்பியவாறு  திருப்புகிறான்என்று விடையளித்தார்கள்.

 

மனித உள்ளம் நன்மை-தீமைகளின் பிறப்பிடம். நம் உள்ளத்தினுள் இரண்டும் உள்ளன. அது நன்மை  மட்டுமே செய்யும் விதத்தில் அதை மாற்றியமைக்கப் பயிற்சி எடுப்பதுதான் ஆன்மிகப் பயிற்சி எனப்படுகிறது. திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்: ஆத்மாவின் மீதும், அதனை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும், அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக! எவன் (பாவங்களை விட்டுத் தன் ஆத்மாவைத்) தூய்மையாக்கிக் கொண்டானோ அவன், நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டான். எவன் அதனைப் (பாவத்தில்) புதைத்து விட்டானோ அவன், நிச்சயமாக நட்டமடைந்துவிட்டான். (91: 7-10)

 

உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக்கொண்டவர் வெற்றியடைந்துவிட்டார்என்று இந்த இறைவசனம் இயம்புகிறது. தீமை செய்தல், காழ்ப்புணர்வு, பொறாமை, வஞ்சகம், சூழ்ச்சி, காமம், கோபம் உள்ளிட்ட பல்வேறு அசுத்தங்கள் அந்த ஆன்மாவுக்குள் மண்டிக் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் நீக்கி, சுத்தப்படுத்தி, உள்ளத்தை நற்குணங்களால் பக்குவப்படுத்திக்கொள்பவரே வெற்றிபெறுகிறார். அத்தோடு  இறைமறுப்பும் ஓர் அசுத்தமே ஆகும். அதை நீக்கி, இறைநம்பிக்கைகொண்ட உள்ளமே மறுமையில் வெற்றிபெற முடியும்.

அல்லாஹ் கூறுகின்றான்: கல்வியறிவில்லாத (அரபு) மக்களில் அவர்களுள் ஒருவரை அவன் (தன்னுடைய) தூதராக அனுப்பி வைத்தான். அவர்கள் இதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலிருந்த போதிலும், அத்தூதர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து, (நற்குணங்களால்) அவர்களைத் தூய்மையாக்கி, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். (62: 2)

 

ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஓர் இறைத்தூதரை அல்லாஹ் அனுப்பினான். ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமுதாய மக்களைத் தீமையிலிருந்து விலக்கி, அவர்களிடம் குடிகொண்டிருந்த துர்க்குணங்களை அகற்றி, நற்குணங்களைக் கற்பித்தார்கள். அந்த வகையில் ஒவ்வோர் இறைத்தூதரும் தம் சமுதாய மக்களைத் தூய்மைப்படுத்துவோராகவே இருந்துள்ளனர். அவர்களைத் தூய்மைப்படுத்தி, நற்குணங்களை அவர்களின் உள்ளங்களில் விதைத்தார்கள். அதுபோலவே இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், துர்க்குணங்களின் மொத்த உருவமாகத் திகழ்ந்த அரபியர்களின் உள்ளங்களைப் பக்குவப்படுத்தி, நல்லுரைகளைக் கூறி, நற்குணங்களை விதைத்தார்கள்.


ஒருவனின் உள்ளம் இறைமறுப்பு என்ற அசுத்தத்தால் நிரம்பியிருக்கின்றபோது அவன் நரகம் செல்கின்றான். அதேநேரத்தில் ஒருவன் இறைநம்பிக்கை என்ற ஏகத்துவக் கொள்கையால் தன் உள்ளத்தைத் தூய்மைப்படுத்திவிடுகிறபோது, அவன் சொர்க்கம் செல்கின்றான். ஆக ஒருவனின் உள்ளம் தூய்மைபெற அவன் செய்ய வேண்டிய முதல் வேலை, இறைநம்பிக்கை கொள்வதே ஆகும். ஏனெனில் இறையச்சத்தின் தொடக்கமே இறைநம்பிக்கை ஆகும். அந்த இறைநம்பிக்கைமூலமே அவன் தன் உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக்கொள்ள இயலும்; பின்னர் அதன்மூலமே இறைவனை அடைய முடியும்.

 

தீமையிலிருந்து விலகி, இறைவனை மாசற்ற முறையில் நம்பி, அல்லாஹ்வுடன் தொடர்புடைய விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி, எல்லா நிலைகளிலும் அவனையே சார்ந்திருந்து, அவன் எத்தனையெத்தனை சோதனைகளைக் கொடுத்தாலும் அவற்றைப் பொறுமையோடு சகித்துக்கொண்டு அல்லாஹ்விற்காகவே வாழ்கின்ற உள்ளம் நிச்சயமாக வெற்றிபெறும்; இம்மையிலும் மறுமையிலும் நல்லதொரு வாழ்க்கை அதற்கு அமையும்.

 

ஒரு மனிதனின் உள்ளம் கெட்டுப் போய்விட்டால் அவனுடைய செயல்கள் யாவும் கெட்டுப்போய்விடும் என்பதை ஆணித்தரமாக இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்: அறிந்துகொள்ளுங்கள்! உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது; அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்துவிடும். அறிந்துகொள்ளுங்கள், அதுதான் உள்ளம். (புகாரீ: 52)

 

ஆக மனித உடலுக்குள் உள்ள ஒரு சதைத்துண்டுதான் இதயம். அது சீராக இருந்தால் நம் எண்ணங்கள் சீராகும்; சீரான எண்ணங்களுக்கேற்பச் செயல்கள் சீராகும்; சீரான செயல்களுக்கேற்ப நம் வாழ்க்கை சீராகும். அதேநேரத்தில் அந்தச் சதைத்துண்டு சீர்குலைந்துவிட்டால், அதற்கேற்ப நம் எண்ணங்கள் சீர்குலையும்; சீர்குலைந்த எண்ணங்களின்படி செயல்கள் சீர்குலையும்; சீர்குலைந்த செயல்களைச் செய்யத் தொடங்கிவிட்டால் நம் வாழ்க்கையே சீர்குலைந்துபோகும். இம்மையில் மட்டுமின்றி, மறுமையிலும்  சீர்குலைந்துபோகும். எனவே நம் உள்ளத்தைச் சீராக வைத்துக்கொள்வது இன்றியமையாததாகும்.

 

உள்ளத்தில் தோன்றுவதுதான் எண்ணங்கள். அந்த உள்ளம் நல்ல உள்ளமாக இருந்தால் அதில் நல்ல எண்ணங்கள் தோன்றும். அது கெட்ட உள்ளமாக இருந்தால் அதில் கெட்ட எண்ணங்களே தோன்றும்.  அதன்பின் நாம் பார்ப்பவை, கேட்பவை, பேசுபவை அனைத்தும் கெட்டவையாகவே இருக்கும். சீரான உள்ளத்தில் உதிக்கின்ற நல்ல எண்ணங்களின் பயனாக, நம் செயல்கள் யாவும் நல்லவையாக இருப்பதோடு நாம் பார்ப்பவை, கேட்பவை யாவும் அல்லாஹ்வால் ஏற்கத்தக்கவையாக ஆகிவிடும். அதை ஒரே வரியில் உணர்த்தும்விதமாக நபியவர்கள் கூறினார்கள்: எண்ணத்திற்கேற்பவே செயல்கள் அமைகின்றன; ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. (புகாரீ: 1)

 

ஒவ்வோராண்டும் செப்டம்பர் 29ஆம் நாள் உலக இதய நாளாகக் கொண்டாடப்படுகிறது. அதாவது   இதயம் சீராக இயங்கும் வகையில் அதைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள்  அறிவுறுத்துவார்கள். உடல் சீராக இயங்க வேண்டுமாயின் இதயம் சீராக இயங்க வேண்டும். ஆம்! இதயத்திலிருந்து இரத்தம் உந்தப்பட்டு இரத்த நாளங்கள் வழியாக அது உடல் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறது. உடலில் உள்ள அனைத்து அசுத்த இரத்தத்தையும் சுத்திகரித்து மீண்டும் உடலுக்குச் செலுத்துவதே இதயத்தின் பிரதானப் பணியாகும். இதயத்திற்குச் செல்லும் இரத்த நாளங்கள் அடைபட்டுப்போய்விட்டால் அது உதிரத்தைச் சீராக உந்தித்தள்ள இயலாமல், இதயத்துடிப்பு நின்றுபோய்விடும். அதையே நாம் ஹார்ட் அட்டாக் என்கிறோம். இதயம் செயலிழந்துவிட்டால் மனிதனின் உயிர் நின்றுபோகும். ஆகவே இதயத்தைக் காக்க வேண்டிய அவசியத்தையும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவுமே இந்நாள் மேற்கொள்ளப்படுகிறது.

 

ஆக ஆன்மிக ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் உள்ளம் மிக முக்கியமானது என்பதை நாம் உணரலாம்.  ஒரு கணினியில் சிபீயு (Central Processing Unit)  எனும் மையக் கட்டுப்பாட்டு அலகு எவ்வளவு முக்கியமானதோ அந்த இடத்தை வகிக்கிறது மனித உள்ளம். ஒரு மனிதனின் செயல்பாடுகள் சீராக அமையவும் சீரற்ற நிலையில் அமையவும் அதனுள் விதைக்கப்படுகின்ற நல்ல-கெட்ட எண்ணங்களே அடிப்படைக் காரணமாகும். எனவே நாம் நம் உள்ளத்தை உடல்ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் சீராகவும் தூய்மையாகவும் வைத்துக்கொள்ள முயல்வோமாக. அதற்காக நம்மைப் படைத்த இறைவனிடம்  இறைஞ்சுவோமாக.

======================





சனி, 9 செப்டம்பர், 2023

கமுக்கம் காப்போம்!

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28
-------------------------------------------

இரகசியத்தைத்தான் கமுக்கம் என்ற மற்றொரு வார்த்தையில் கூறுகின்றனர். அது நிறையப் பேருக்குத் தெரியாமலேயே கமுக்கமாக உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓராயிரம் இரகசியங்கள் உண்டு. அவற்றுள் சிலவற்றைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ளலாம்; அவற்றுள் பலவற்றைக் கமுக்கமாகவே வைத்துக்கொள்ளவேண்டும். இல்லையேல் அவை நம்மையே ஒரு நாள் அசிங்கப்படுத்திவிடலாம். தாய்-தந்தைக்கிடையே உள்ள இரகசியங்கள்; கணவன்-மனைவிக்கிடையே உள்ள இரகசியங்கள்; நண்பர்களுக்கிடையே உள்ள இரகசியங்கள்; தாய்க்கும் பிள்ளைக்குமிடையே உள்ள இரகசியங்கள்; தந்தைக்கும் பிள்ளைக்குமிடையே உள்ள இரகசியங்கள். இப்படி இரகசியங்கள் பற்பல பரிமாணங்கள் கொண்டவை.


“ஆம்பளையிடம் வருமானத்தைக் கேட்காதே; பொம்பளையிடம் வயதைக் கேட்காதே” என்று மூத்தோர் சொல்வதுண்டு. கணவனின் சம்பளமோ வருமானமோ மனைவிக்கு முழுமையாகத் தெரிந்துவிட்டால், அதற்கேற்பச் செலவுகளை ஏற்படுத்திவிடுவாள்; அல்லது நீதான் இவ்வளவு சம்பாதிக்கிறாயே, எனக்கு அதை வாங்கிக் கொடுத்தால் என்ன என்று சண்டையிடுவாள். அல்லது அதை வாங்கிக் கொடு; இதை வாங்கிக்கொடு என்று நச்சரிப்பாள். அதேநேரத்தில் கணவனின் வருமானம் இரகசியமாக இருக்கும்போது, அவன் தன் குடும்பத்திற்கு என்னென்ன தேவையோ அவற்றை மட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டு, எதிர்கால நலனை நாடிச் சிறிதளவு சேமிப்பான்; தாய்-தந்தைக்கு அல்லது நெருங்கிய உறவினர்களுக்குச் செலவு செய்வான். அதனால் கணவன்-மனைவிக்கிடையே உள்ள இல்வாழ்வில் இடர்ப்பாடு ஏதும் ஏற்படாமல் சீராகச் செல்லும்.


“இதை யாரிடமும் சொல்லிவிடாதே” என்று கூறி, ஏதேனும் இரகசியத்தை ஒருவரிடம் சொன்னால் அது இரகசியமில்லை. ஏனெனில் அது எப்படியும் பிறருக்குப் பரவிவிடும். நமக்குள் இருக்கின்ற வரைதான் அது இரகசியம். நம்மைவிட்டு அடுத்தவருக்குச் சென்றுவிட்டால் அது இரகசியமே கிடையாது. இரகசியத்தைத் தெரிந்துகொள்வதிலும் பரப்புவதிலும் பெண்கள் மிகுந்த ஆர்வமுடையவர்கள். எனவே ஒரு விஷயத்தை மனைவியிடம் சொல்லி, “இதை யாரிடமும் சொல்லிவிடாதே” என்று சொன்னால் அது எல்லோரிடமும் பரவிவிடும் என்பது திண்ணம். அதற்கான வரலாற்றுச் சான்று ஒன்றை நாம் காணலாம்.


நபியவர்களின் இரகசியத்தைப் பரப்பிய மனைவி: அல்லாஹ்வின் தூதர் சத்தியம் செய்துவிட்டு, “இது குறித்து எவரிடமும் தெரிவித்துவிடாதே!'' என்று கூறியதை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹாவிடம் தெரிவித்துவிட்டதால், அது குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ள செய்தி புகாரீ நூலில் கீழ்க்கண்டவாறு விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம், (அவர்களது அறையில்) தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள். (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் இவ்வாறு கூடிப் பேசி முடிவு செய்துகொண்டோம்: (தேன் சாப்பிட்ட பின்,) நம்மவரில் எவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முதலில் வருவார்களோ அவர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் “கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? உங்களிடமிருந்து, பிசினின் துர்வாடை வருகிறதே'' என்று கூற வேண்டும்.

(வழக்கம் போல் ஸைனபின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டுவிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வந்தபோது நாங்கள் பேசி வைத்திருந்தபடி கூறியதற்கு) அவர்கள், “இல்லை (நான் பிசின் சாப்பிடவில்லை). ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரது அறையில்) தேன் குடித்து வந்தேன். (இனிமேல்,) நான் ஒருபோதும் அதைக் குடிக்கமாட்டேன்; நான் சத்தியமும் செய்து விட்டேன்'' என்று கூறிவிட்டு, “இது குறித்து எவரிடமும் தெரிவித்துவிடாதே!'' என்றும் கூறினார்கள். (இது குறித்தே 66:1ஆம் இறைவசனம் அருளப்பெற்றது.) (புகாரீ: 4912)


இருப்பினும், ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அந்த இரகசியத்தைப் பாதுகாக்கவில்லை. மாறாக, அதை ஹஃப்ஸாவிடம் சொல்லிவிட்டார். அப்போது அல்லாஹ் நபியவர்களுக்கு "இறைத்தூது' அறிவித்தான். எனவே, தம்முடைய இரகசியத்தை வெளிப்படுத்தியதற்காக நபியவர்கள் ஆயிஷாவைக் கடிந்து கொண்டார்கள்.


(நம்முடைய) நபி தம் மனைவிகளுள் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகக் கூறிய சமயத்தில், அப்பெண் அதனை (மற்றொரு மனைவிக்கு) அறிவித்துவிட்டார். அதனை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கிவிட்டான். நபி (அதில்) சிலவற்றை (அம்மனைவிக்கு) அறிவித்துச் சிலவற்றை (அறிவிக்காது) புறக்கணித்துவிட்டார். (இவ்வாறு) நபி தம் மனைவிக்கு அறிவிக்கவே, அம்மனைவி “இதனை உங்களுக்கு அறிவித்தவர் யார்?'' எனக் கேட்டார். அதற்கு அவர், “(அனைத்தையும்) நன்கறிந்து தெரிந்தவனே அதனை எனக்கு அறிவித்தான்'' என்று கூறினார். (66: 3, நூல்: புகாரீ)


இரகசியம் பரவும் இடங்கள்: வீட்டில் ஏதேனும் விசேஷம், திருமண விழாக்கள், சந்திப்புகள் -இவற்றின்போதுதான் இரகசியங்கள் பரிமாறிக்கொள்ளப்படும். ஒருவரின் இரகசியங்கள் வெளிப்படுகின்றபோது பல்வேறு தீமைகள் விளையும் என்பது உறுதி. அரிதாக எப்போதேனும் ஏதாவது நன்மை ஏற்படலாம். கமுக்கம் என்பது எல்லா இடங்களிலும் உண்டு. அலுவலகத்தில் இருக்கலாம்; குடும்பத்தில் இருக்கலாம்; உறவினர்களுக்கு மத்தியில் இருக்கலாம். எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதைக் காப்பது நமது கடமை. எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்லிவிடக் கூடாது. ஒருவர் குறித்து நமக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்களைப் பிறருக்குப் பரப்பக்கூடாது. அது அவர்மீது மற்றவர்கள் வைத்துள்ள மரியாதையைக் குறைத்துவிடும்.

 
நபியவர்கள் மேற்கொண்ட இரகசியங்கள்: இரகசியம் குறித்தும் அதன் ஒழுங்குகள் குறித்தும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிறையப் பேசியுள்ளார்கள். அத்தோடு நபியவர்களும் தம் அன்றாட வாழ்க்கையில் பற்பல கமுக்கங்களை மேற்கொண்டுள்ளார்கள். சிலநேரங்களில் போருக்குப் புறப்படுமாறு அறிவிப்புச் செய்வார்கள்; அதனைக் கேட்டு, நபித்தோழர்கள் போருக்கு ஆயத்தமாவார்கள்; ஆயுதங்களை ஆயத்தநிலையில் வைப்பார்கள்; நிதியைச் சேகரிப்பார்கள்; எல்லாம் நடைபெறும்; தூரமான பயணம் என்றும் நபியவர்கள் சொல்வார்கள்; ஆனால் எங்கு செல்கிறோம் என்பதை இரகசியமாக வைப்பார்கள். இது அவர்கள் மேற்கொண்ட போர்த்தந்திரம் ஆகும். இதுபோன்று ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்திருக்கின்றார்கள் என்பது வரலாற்றுச் செய்தியாகும்.


இன்றும் ஒவ்வொரு நாடும் இராணுவ இரகசியங்களை வெளியிடுவதில்லை. ஒவ்வொரு நாட்டின் இராணுவத் தகவல்களும் இரகசியமாகவே இருக்கும். ஒரு நாட்டின் இராணுவத்தில் எத்தனை வீரர்கள் பணியாற்றுகின்றார்கள், எத்தனை ஆயுதங்கள் உள்ளன, எத்தனை பீரங்கிகள், தோட்டாக்கள் உள்ளன, அணு ஆயுதங்கள், திட்டங்கள் உள்ளிட்ட தகவல்கள் கமுக்கமானவை. அவற்றைப் பிற நாட்டுக்குப் பரப்புவோர் தேசத் துரோகிகள் என வர்ணிக்கப்படுவார்கள்.


இரகசியத்தைப் பாதுகாத்த நபித்தோழர்கள்: பொதுவாக குறிப்பிட்ட காலத்திற்கான இரகசியங்கள், நிரந்தரமான இரகசியங்கள் என இருவகை உண்டு. நபியவர்கள் சொன்ன இரகசியத்தை அவர்களின் தோழர்கள் மிகச் சிறப்பாகப் பேணிக் காத்துள்ளார்கள். அந்தச் செய்தியை மக்கள் தெரிந்துகொள்வது அவர்களுக்கு நலம் பயக்கும் என்ற எண்ணத்திலும், தமக்குத் தெரிந்த கல்வியை மறைக்கக்கூடாது என்ற நபிமொழியின் காரணத்தாலும் இது குறிப்பிட்ட காலத்திற்கான இரகசியம்தான் என்பதை உணர்ந்ததாலும் சிலவற்றை நபியவர்களின் மரணத்திற்குப்பின் சிலர் தெரிவித்தார்கள். அதேநேரத்தில் சிலர் நபியவர்களின் மரணத்திற்குப் பின்னரும் அதைக் காத்தார்கள். அவ்வாறு நபியவர்களின் இரகசியத்தை இறுதிவரை பாதுகாத்த தோழர் ஒருவரின் செய்தி புகாரீ நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.


அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: என்னிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இரகசியம் ஒன்றைச் சொன்னார்கள். அவர்களுடைய இறப்புக்குப் பிறகும்கூட ஒருவரிடமும் அதை நான் தெரிவிக்கவில்லை. என்னிடம் (என் தாயார்) உம்மு சுலைம் ரளியல்லாஹு அன்ஹா அது குறித்துக் கேட்டார்கள். அதை நான் அவருக்கும் தெரிவிக்கவில்லை. (புகாரீ: 6289) இதுதான் இரகசியத்தைப் பாதுகாக்கும் ஒழுங்குமுறை.


நபியவர்களின் இரகசியத்தைப் பாதுகாத்த அவர்களின் நெருங்கிய நண்பர் அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு. அவர்கள் குறித்த ஒரு செய்தி புகாரீ நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: (என் தந்தை) உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு (தம் மருமகன்) குனைஸ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ ரளியல்லாஹு அன்ஹு இறந்துவிட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையானபோது (அவரை வேறொருவருக்கு மணமுடித்து வைக்க எண்ணினார்கள். அது குறித்து) உமர் இப்னுல் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது:
நான் உஸ்மான் இப்னு அஃப்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று, (என் மகள்) ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறினேன்.

அதற்கு அவர்கள், “(தங்கள் மகளை நான் மணந்துகொள்ளும் இந்த) என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது; (யோசித்து என் முடிவைக் கூறுகிறேன்)'' என்று கூறினார்கள். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு அவர்கள் என்னைச் சந்தித்து 'இப்போது திருமணம் செய்துகொள்ளவேண்டாம் என்றே எனக்குத் தோன்றுகிறது'' என்று கூறினார்கள். எனவே, நான் அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) “நீங்கள் விரும்பினால், என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன்'' என்று கூறினேன். அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அமைதியாக இருந்தார்கள். எனக்கு அவர்கள் எந்தப் பதிலையும் கூறவில்லை. எனவே, உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை விட அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்மீதே நான் மிகவும் மனவருத்தம் கொண்டவனாக இருந்தேன்; சில நாள்கள் பொறுத்திருந்தேன்.


பிறகு, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன். பிறகு (ஒரு நாள்) அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு என்னைச் சந்தித்து, “நீங்கள் என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச் சொன்னபோது நான் உங்களுக்குப் பதிலேதும் கூறாததால், உங்களுக்கு என்மீது மனவருத்தம் இருக்கக்கூடும்'' என்று கூறினார்கள். நான், “ஆம்'' என்று சொன்னேன்.


(அதற்கு) அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, “நீங்கள் கூறியபோது நான் உங்களுக்குப் பதில் கூறாததற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணப்பது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்ததே ஆகும். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. (எனவேதான், உங்களுக்குப் பதிலேதும் கூறவில்லை). அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 'ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால், உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருந்திருப்பேன்” என்று கூறினார்கள். (புகாரீ: 5122)


தம்பதியரிடையே இரகசியங்கள்: கணவன்-மனைவிக்கிடையே ஆயிரமாயிரம் இரகசியங்கள் இருக்கலாம். அவற்றையெல்லாம் பிறரிடம் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது. கணவன் பற்றி மனைவிக்கும் மனைவி குறித்துக் கணவனுக்கும் நன்றாகத் தெரியும். அவ்விருவருள் ஒவ்வொருவரின் குறைகளும் பலவீனங்களும் மற்றவருக்குத் தெரியும். அவற்றைப் பிறரிடம் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது. கணவனின் குறையை மனைவியும் மனைவியின் குறையைக் கணவனும் மறைக்க வேண்டும். இல்லையேல் அது அவ்விருவரின் இல்வாழ்வில் மிகப்பெரும் சிக்கலை உண்டுபண்ணிவிடும். பொதுவாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ள செய்தி: யார் ஒரு முஸ்லிமை (அவருடைய பாவத்தை அல்லது குறையை) மறைத்தாரோ அவரை (அவர்தம் பாவத்தை அல்லது குறையை) அல்லாஹ் இவ்வுலகிலும் மறுமையிலும் மறைக்கின்றான். (இப்னுமாஜா: 2534)

அதேபோல் கணவன்-மனைவிக்கிடையே நடைபெறுகிற தாம்பத்திய உறவு குறித்தும் அதன் நிறை-குறைகள் குறித்தும் கணவன் தன் நண்பர்களிடமோ, மனைவி தன் தோழிகளிடமோ பகிர்ந்துகொள்ளக்கூடாது. அது மிகப்பெரும் குற்றமாகும். அது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளதாவது:

மறுமைநாளில் அல்லாஹ்விடம் (தண்டனையால்) மிகக் கடுமையான நிலையில் உள்ள மனிதன் யாரென்றால், அவன் தன் மனைவியுடன் உடலுறவுகொண்டபின் அவன் அவளுடைய இரகசியங்களைப் பரப்புகிறானே அவனாவான். (நூல்: முஸ்லிம்)

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது: ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மஸ்ஜிதில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அப்போது, அவர்கள் ஆண்களின் பக்கம் திரும்பி அவர்களிடம் கேட்டார்கள்:

“உங்களுள் ஒருவர் தம் மனைவியிடம் (உடலுறவுக்காக) வருகிறார்; கதவைச் சாத்திக் கொள்கிறார்; அல்லாஹ்வின் திரையால் தம்மை மறைத்துக் கொள்கிறார். அதன் பிறகு (தம் நண்பர்களுடன்) அமர்ந்து கொண்டு நான் இவ்வாறு செய்தேன்; நான் இவ்வாறு செய்தேன் என்று சொல்லக்கூடியவர் யாரேனும் உள்ளாரா?” அங்கிருந்த ஆண்களெல்லாம் அமைதியாக இருந்தார்கள். பிறகு அவர்கள் பெண்களை நோக்கி, “உங்களுள் யாரேனும் தம்முடைய தாம்பத்திய இரகசியங்களை வெளியிடுபவர் உள்ளாரா?'' என்று கேட்டார்கள். அவர்களும் அமைதியாகவே இருந்தார்கள்.

பிறகு, ஓர் இளமங்கை, நபியவர்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காக ஒற்றைக் காலில் நின்று கொண்டு மற்றொரு காலை மடக்கிக் கொண்டு, “அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக ஆண்களும் அது பற்றிப் பேசுகின்றார்கள்; பெண்களும் அது பற்றிப் பேசுகின்றார்கள்'' என்று சொன்னாள்.
பிறகு நபியவர்கள் சொன்னார்கள்: “உங்களுக்கு அதனுடைய உதாரணம் தெரியுமா? அதற்கு உதாரணம், ஒரு பெண்ஷைத்தானைப் போலவாகும். அந்தப் பெண்ஷைத்தான் ஓர் ஆண்ஷைத்தானை வழியில் கண்டது. (அங்கேயே) அந்த ஆண்ஷைத்தான் மக்களெல்லாம் பார்க்கின்ற நிலையில் தன் தேவையை முடித்துக் கொண்டது..... (நூல்கள்: அபூதாவூத்: 2174, முஸ்னது அஹ்மது: 27583)


தாம்பத்திய உறவில் கணவன்-மனைவிக்கிடையே உள்ள குறை-நிறைகளை மூன்றாம் மனிதரோடு பகிர்ந்துகொள்வது வெட்கக்கேடான செயலாகும். குறைபாட்டைக் களையுமுகமாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்காகக் கூறுவது தவறில்லை. மாறாகப் பிரச்சனையை ஏற்படுத்துமுகமாகவோ மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதற்காகவோ தன் இணையின் இரகசியத்தைப் பிறரிடம் தெரிவிக்கக் கூடாது.

செல்வமும் இரகசியமே: ஒருவர் தாம் சேமித்து வைத்துள்ள செல்வம் குறித்துப் பிறரிடம் பெருமையாகப் பேசுவது கூடாது. ஒருவரிடம் உள்ள செல்வம் அவருக்கான இரகசியமாகும். என்னிடம் இவ்வளவு இருக்கின்றது; நான் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? என்று தம்பட்டம் அடிப்பது கூடாது. இதையே “உடையது விளம்பேல்” எனத் தமிழ் மூதாட்டி ஔவை கூறியுள்ளார். அவ்வாறு ஒருவர் தம்மிடம் உள்ள செல்வத்தைப் பிறரிடம் சொல்லும்போது, அது இல்லாதவனுக்கு ஏக்கத்தை ஏற்படுத்தும்; அதை அபகரித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் சிலருக்கு ஏற்படலாம். இதையெல்லாம் தவிர்ப்பதற்கே அத்தகைய அறிவுரை கூறப்பட்டுள்ளது.

பிறரின் இரகசியத்திற்குள் மூக்கை நுழைக்காதே: அண்டை வீட்டிலுள்ள ஒருவரைச் சந்திக்கின்றபோது, சாப்பிட்டீங்களா? என்று நாம் கேட்பதுண்டு. அவர் அதற்கான பதிலைச் சொல்வார். அத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் நாகரிகமானது. அவர் ஆம் என்றதும், என்ன சாப்பிட்டீங்க? என்று கேட்பது அநாகரிமானது. அவ்வாறு நாம் ஒருபோதும் கேட்கக்கூடாது. ஏனெனில் ஒவ்வொருவரின் குடும்ப நிலைமை என்னவென்று நமக்குத் தெரியாது. அவர் சாதாரணமான உணவைச் சாப்பிட்டிருக்கலாம். அல்லது மிக உயர்வான உணவைச் சாப்பிட்டிருக்கலாம். நமக்காகப் பொய் சொல்ல வேண்டியது ஏற்படலாம். கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உண்மைக்கு மாறாகப் பேசலாம். எனவே அத்தகைய கேள்வியே தேவையற்றது. என்ன சாப்பிட்டார் என்பது இரகசியமானது; பிறரின் இரகசியத்திற்குள் மூக்கை நுழைப்பது கூடாது.
 
ஆனால் இன்று முகநூல், புலனம் (வாட்ஸ்அப்), இன்ஸ்டாகிராம், கீச்சகம் (ட்விட்டர்) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெட்கமின்றி எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்கின்றார்கள். அவர்களுக்கு இரகசியம் என்று எதுவும் கிடையாது. இத்தகையோரைப் பார்க்கும்போது, எனக்கு இந்த நபிமொழிதான் நினைவுக்கு வருகிறது: “உனக்கு வெட்கம் இல்லையென்றால் நீ விரும்பியதைச் செய்துகொள்.” (புகாரீ: 3483)


ஆக ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஓராயிரம் இரகசியங்கள் நிறைந்தது. அவற்றுள் எதைப் பிறருக்குச் சொல்ல வேண்டும்; எதைப் பிறருக்குச் சொல்லக் கூடாது; எதை மூடிமறைக்க வேண்டும்; எதை இலைமறை காயாகச் சொல்ல வேண்டும் என்று தெரிந்து, புரிந்து செயல்பட வேண்டும். அதுதான் இறைநம்பிக்கைகொண்ட ஆண்-பெண்ணுக்கான பண்பாகும். எனவே இரகசியம் காப்போம்; பிறரின் இரகசியத்திற்குள் தலையிடாதிருப்போம்.
=========================