ஞாயிறு, 5 ஜூலை, 2020

புதிதாய் எழுதுவோம்!



-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

நாம் ஒருவரைப் பார்த்ததும் விரும்புகிறோம். மற்றொருவரைப் பார்த்ததும் வெறுக்கிறோம். இருவரும் நம் பார்வையில் அவ்வப்போது வந்துசெல்பவர்கள். ஒருவர் நம்முடன் நெருங்கிப் பழகுகிறார்;  அன்பாக நலம் விசாரிக்கிறார். அவரைப் பற்றிய நன்மதிப்பும் அன்பும் நம் மனதில் பதிந்துவிடுகின்றன. மற்றொருவர் நமக்கு ஏதும் நன்மை செய்யவில்லை; அன்பாகப் பழகவில்லை; அத்தோடு ஏதோ ஒரு தடவை நம் மனதுக்குப் பிடிக்காத விதத்தில் நடந்துகொண்டார். அவ்வளவுதான். ஆகவே அவரைப் பற்றிய தவறான பிம்பம் நம் மனதில் பதிந்துவிட்டது. எனவே அவரைப் பார்க்கும்போதெல்லாம் தவறான அப்பிம்பமே நம் மனதில் தோன்றுகிறது. அதுவே அவரை வெறுக்கத் தூண்டுகிறது.

மனைவியாக இருக்கலாம்; அண்டைவீட்டாராக இருக்கலாம்; உறவினராக இருக்கலாம்; உடன் பணியாற்றுபவராக இருக்கலாம். அவர்கள் முதல் தடவை எப்படி நம்மிடம் நடந்துகொள்கின்றார்களோ அதை வைத்து, இவர் இப்படித்தான் என்று நம் மனதில் பதிவு செய்துகொள்கிறோம். அதனால் நாம் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் நம் மனதில் பதிவு செய்ததையே நம் மனம் முன்னிலைப்படுத்துகிறது. எனவே அவர்களுள் சிலரைப் பார்க்கும்போதே நம் மனம் மகிழ்கிறது. அவர்களுள் வேறு சிலரைப் பார்க்கும்போதே நம் மனம் வெறுக்கிறது.

ஏதோ ஒரு தடவை நம் முதலாளி நம்மிடம் கடுமையாக நடந்துகொண்டார் என்பதற்காக அவரைப் பற்றி நம் மனதில், அவர் கடுகடுப்பானவர்; கோபக்காரர் என்று பதிவு செய்துகொள்கிறோம்.  பிறகு அவரைப் பார்க்கும்போதெல்லாம் அவரைப் பற்றி நம் மனதில் பதிவுசெய்தவையே தோன்றித் தோன்றி மறைகின்றன. எனவே அவரைப் பார்க்கும்போதெல்லாம் நமக்குப் பிடிப்பதில்லை.
நம்முடைய மனக்குழப்பத்திற்கும் நிம்மதியின்மைக்கும் காரணம் இதுதான். ஒரு விஷயத்தைப் பற்றி, இது தீராத பிரச்சனை என்றோ தீர்க்க முடியாத பிரச்சனை என்றோ நம் மனதில் பதிவு செய்துகொள்கிறோம். எனவே அதைப் பற்றிப் பேசினாலே நமக்குப் பிடிப்பதில்லை. தீராப் பிரச்சனை என்று நம் மனதில் பதிவு செய்துவிட்டதால், அப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வழியை நாம் ஆராய்வதே இல்லை; அது குறித்துச் சிந்திப்பதே இல்லை. எனவே அது தீராப் பிரச்சனையாகவே நீடிக்கிறது.

அண்டை வீட்டார் ஏதோ ஒரு தடவை நம்மை எதிர்த்துப் பேசிவிட்டார்; அல்லது நமக்கு எதிராகச் செயல்பட்டுவிட்டார் என்பதற்காக அவரைப் பற்றிய நம் கணிப்பு, அவர் எப்போதும் சண்டை போடுபவர் என்பதுதான். அதன்பின் அவரிடம் ஒரு தடவையேனும் அன்பாகப் பேசிப் பார்த்திருக்கிறோமா? அன்பாக நலம் விசாரித்திருக்கிறோமா? அப்படிச் செய்திருந்தால் அவர் நல்லவரா,  கெட்டவரா என்பது நமக்குப் புரிந்திருக்கும்.

நம் சகோதரனோ, சகோதரியோ, உறவினரோ ஏதோ ஒரு தடவை நம்மை எதிர்த்துப் பேசிவிட்டார் என்பதற்காக மாதக் கணக்காக, ஆண்டுக்கணக்காக அவரிடம் பேசாமல் இருப்பது சரியா? அவர் அப்படித்தான் என்று பதிந்துவிட்ட எதிர்மறையான பிம்பத்தை அழிக்க நாம் என்றாவது ஒரு நாள் முயன்றுள்ளோமா? நம்மோடு ஒன்றாக வாழ்ந்தவராயிற்றே. சொத்துப் பங்கீட்டின்போதோ திருமண நிகழ்வின் போதோ ஏற்பட்ட கசப்பான அனுபவம் இன்னும் நம் மனதில் தோன்றித் தோன்றி மறைகிறதே. அதை அழிக்க முயன்றுள்ளோமா?

நாம் ஒருவரைப் பற்றி எப்போதோ நம் மனதில் பதிந்த நேர்மறையான எண்ணத்தை மாற்றி எழுதப் பழகிக்கொண்டால் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். எல்லோரும் நம் அன்பிற்குரியோராக மாறிவிடுவர். ஆம். நாம் ஒருவரைப் பற்றி நம் மனதில் எழுதிய கடந்த காலப் பிம்பத்தை அழித்துவிட்டு, தற்போது அவரைப் பற்றிப் புதிதாக எழுத வேண்டும். நம் மனதில் பதிய வைக்க வேண்டும். அவரைப் பற்றிய நற்குணங்களையும் நல்ல எண்ணங்களையும் நம் மனதில் புதிதாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்போது அவரைப் பற்றிய எதிர்மறையான கருத்து அகற்றப்பட்டு, நேர்மறையான கருத்து, அவரைப் பார்க்கும்போது நமக்குத் தோன்றும்.

எழுதுபலகையில் கண்டபடி கிறுக்கப்பட்டவற்றையெல்லாம் அழித்துத் தூய்மைப்படுத்தினால்தான் அதில் அழகிய ஓவியத்தைத் தீட்ட முடியும்; அழகிய எழுத்துகளால் அதை நிறைக்க முடியும். கிறுக்கப்பட்டவற்றை அழிக்காமலேயே அதில் மேலும் மேலும் எழுதினால் எதுவும் தெரியாது. 

அதுபோலவே நம் மனது எனும் எழுதுபலகையில் பிறரைப் பற்றித் தப்பும் தவறுமாக நிறைய எழுதி எழுதிப் பதிவு செய்து வைத்துள்ளோம். அவற்றை அழித்துச் சுத்தப்படுத்தினால்தான் நாம் நம் மனதில் புதிது புதிதாக எழுத முடியும். நம் அண்டைவீட்டார், உறவினர், மனைவி, சகோதரர், சகோதரி என யாரைப் பற்றி நாம் நம் மனப் பலகையில் தவறாகவும் எதிர்மறையாகவும் எழுதி வைத்துள்ளோமோ அவ்வளவையும் அழித்துவிட்டு, அவர்களைப் பற்றிச் சரியாகவும் நேர்மறையாகவும் எழுதி வைத்தால்  நாம் அவர்களைச் சந்திக்க நேரிடுகின்றபோது நம்மையறியாமலேயே அவர்கள்மீது அன்பு ஏற்படும். அதனால் அவர்களுக்கு நன்மையோ இல்லையோ நமக்கு நன்மை; நம் மனதுக்கு மகிழ்ச்சி.

இவ்வுலகைப் படைத்த இறைவன், தன் அடியார்கள் செய்கின்ற பாவங்களை மன்னித்துக்கொண்டே இருக்கின்றான். மனிதன் பாவம் செய்துவிட்டு, ஒரு கட்டத்தில் அதை உணர்ந்து பாவமன்னிப்புக் கேட்கின்றான். அதை உடனடியாக இறைவன் ஏற்றுக்கொண்டு அவனுக்கு மன்னிப்பு வழங்குகின்றான். மீண்டும் ஷைத்தானின் தூண்டலால் பாவம் செய்துவிடுகின்றான். பின்னர் அதை உணர்ந்து இறைவனிடம் அழுது மன்னிப்பு கேட்கின்றான். அவனுடைய பாவமன்னிப்பை ஏற்றுக்கொண்டு அவனுக்கு மீண்டும் மன்னிப்பு வழங்குகின்றான். இதுதான் இறைவனின் அன்பிற்கும் கருணைக்குமான அடையாளமாகத் திகழ்கின்றது. அடியான் எத்தனை தடவை பாவம் செய்தாலும், அவன் மன்னிப்பு கேட்டவுடனேயே அவனை மன்னித்துவிடுகின்றான்.

ஆனால் நாம், என்றோ ஒரு நாள் நம் சகோதரன் நம்மை வன்மையாகப் பேசிவிட்டான் என்பதற்காக அவனுடன் ஆண்டுக்கணக்கில் பேசுவதில்லை; அவனுடைய வீட்டிற்குச் செல்வதில்லை. அதனைத் தொடர்ந்து அவனுடைய பிள்ளைகளிடமும் பேசுவதில்லை. காரணம், அவன் அன்று பேசிய பேச்சை நம் மனதிலிருந்து நம்மால் அழிக்க முடியவில்லை. அதைச் சுமந்துகொண்டே ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதைத் திருப்பித் திருப்பி நம் நினைவில் கொண்டு வருகிறோம். இதனால் நமக்கு மனப்பாரம் கூடுகின்றது; நெஞ்சு படபடக்கிறது.  அவனை எங்கேனும் ஓரிடத்தில் அல்லது ஒரு திருமணத்தில் சந்திக்க நேர்ந்தாலும் முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்று விடுகிறோம். 

இதனால் நம் மகிழ்ச்சி பாழாகிறதல்லவா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன பொன்மொழியை இவ்விடத்தில் நினைவுகூர்வது இன்றியமையாதது: "ஒரு முஸ்லிம் தம் சகோதரரை (அவருடன் கோபித்துக்கொண்டு) மூன்று நாள்களுக்குமேல் வெறுத்து ஒதுக்கக்கூடாது. அவ்விருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள். இவர் அவரைப் புறக்கணிக்கிறார்; அவர் இவரைப் புறக்கணிக்கிறார். (இவ்வாறிருக்கும்போது) அவ்விருவருள் யார் சலாம் சொல்லி(ப் பேச்சை)த் தொடங்குகின்றாரோ அவரே சிறந்தவர்.'' (நூல்: அபூதாவூத்: 4265)

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எத்தனையோ பேர் எத்தனையோ தருணங்களில் தொல்லை  கொடுத்திருக்கின்றார்கள்
துன்புறுத்தியிருக்கின்றார்கள்; கடுஞ்சொற்களால் வதைத்திருக்கின்றார்கள்.  ஆனால் அவற்றையெல்லாம் அவர்கள் தம் மனதுக்குள் பதிய வைத்துக்கொள்ளவில்லை. ஒருவரைப் பற்றிய நன்மதிப்பை மட்டுமே பதிய வைத்துக்கொள்வார்கள். அதனால்தான் அவர்களால் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ முடிந்தது. யாரைப் பார்த்தாலும் புன்முறுவலோடும் மலர்ந்த முகத்தோடும் சந்திக்க முடிந்தது. எனவே மன்னிப்பதும் நம் மனதிலுள்ள பழைய பதிவுகளை அழித்துவிட்டு, ஒருவரைப் பற்றிப் புதிய புதிய நன்மதிப்புகளைப் பதிய வைத்துக்கொள்வதும்தான் நம் மகிழ்ச்சியான வாழ்விற்கு வழிவகுக்கும். ஆகவே நம் மனதிலுள்ள பழையனவற்றை அழித்துவிட்டு, புதிது புதிதாக எழுதுவோம்; புத்துணர்வு பெறுவோம்; மகிழ்ச்சியாய் வாழ்வோம்.
========================================






வியாழன், 4 ஜூன், 2020

மர்ஹூம் அப்துர் ரஹ்மான் ஹழ்ரத்-40


தொடர் - 2
மர்ஹூம் அப்துர் ரஹ்மான் ஹழ்ரத்-40
____________ 
சென்னை கல்மண்டபம் அருகிலுள்ள ஏரியாவில்
வசித்து வருகின்ற ஓர் இளம் மெளலவி மர்ஹூம் அப்துர் ரஹ்மான் ஹழ்ரத் அவர்களோடு  நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.      

அவர் தம் தங்கைக்குத் திருமணம் முடிக்கவும் வீட்டுத் தேவைகளுக்காகவும் கடன் வாங்கியிருந்தார். அதைத் திரும்பச் செலுத்த இயலாமல் மிகவும் சிரமப்பட்டார். ஒரு கட்டத்தில் நம்பிக்கையிழந்து நிராசையாகிவிட்டார்; மனமுடைந்து போய்விட்டார்.


அச்சமயத்தில் உஸ்தாதைச் சந்தித்துவிட்டு வந்தால் மனசுக்கு அமைதி ஏற்படுமே என்றெண்ணி, ஹழ்ரத் அவர்களைச் சந்திக்கச் சென்றார். தம் சோகங்களையும் மன வேதனைகளையும் எடுத்துச் சொன்னார். அதற்கவர்கள், குறிப்பிட்ட அவ்ராதைச் சொல்லிக் கொடுத்து “இதை 40 நாள்கள் தொடர்ந்து ஓதிவிட்டு 41 ஆம் நாள் என்னைச் சந்திங்கம்மா. அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்" என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். அவரும் அந்த அவ்ராதை 40 நாள்கள் இடைவிடாமல் ஓதிவந்தார். பின்னர் மலர்ந்த முகத்துடன் உஸ்தாதைச் சந்திக்கச் சென்றார்.

அவரை அன்புடன் வரவேற்று ஆரத்தழுவி அரவணைத்து, ஐம்பதாயிரம் ரூபாயை அவர் கையில் கொடுத்தார்கள். அதைப் பெற்றுக்கொண்ட அந்த இளம் மௌலவி அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. பணம் கொடுத்ததோடு விட்டுவிடாமல், அழகிய அறிவுரையும் வழங்கினார்கள். வாப்பா, நாம் எப்போதும் அல்லாஹ்வை நம்பியிருக்கணும்; அவன் தருவான் என்று நம்பணும்; போதுமென்ற மனதோடு வாழப் பழகிக்கணும்; பிறரிடம் வாங்கியே வாழ்ந்திடலாம் என்று இருக்கக்கூடாதுஎன்ற அறிவுரையோடு அனுப்பிவைத்தார்கள்.  

இதில் பல்வேறு படிப்பினைகள் இருக்கின்றன. அல்லாஹ் தருவான்என்று சொல்லி அனுப்பிவைத்து, 40 நாள்களுக்குப் பிறகு அவர்களைச் சந்தித்தபின் அல்லாஹ் தருவான்என்ற நம்பிக்கையோடு வந்தவரிடம் பணத்தைக் கொடுத்து, அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்திய விதம் பாராட்டத்தக்கது.

வாங்கிய மனம் அதையே பழகிக்கொண்டு அவ்வப்போது வந்து கைநீட்டிவிடக்கூடாது; போதுமென்ற மனதோடும், இருப்பதைக் கொண்டு திருப்தியோடும் வாழப் பழகிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தை உண்டாக்கி அனுப்பிவைக்கிறார்கள். 

இதையெல்லாம் அவர்களின் நடைமுறை வாழ்க்கையிலிருந்து பாடங்களாக நாம் பெற்றுக்கொள்ளலாம்.

(தொடரும்)

அன்புடன்

நூ. அப்துல் ஹாதி பாகவி
04.06.2020 11.10.1441
=================================

புதன், 27 மே, 2020

மாபெரும் சேவையாளர் மறைந்தார்




----------------------------------------------
அல்ஹாஜ் அப்துர் ரஹ்மான் ரஹ்மானி ஹழ்ரத் அவர்கள் இன்று (27 05 2020 ) அதிகாலை நான்கு மணிக்கு இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டு மறுமை வாழ்வை நோக்கி மீளாப்பயணம் மேற்கொண்டார். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.)

ஹழ்ரத் அவர்களின் மார்க்கச் சேவை அனைவரும் அறிந்ததே. சென்னை மண்ணடியில் அமைந்துள்ள ரியாழுள் ஹுதா மத்ரஸா மூலம் நூற்றுக்கணக்கான ஹாபிழ்களை உருவாக்கிய பெருமை அவர்களையே சாரும்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மக்தப் பாடத்திட்டத்தில் உள்ள ரவ்லாத்துல் ஜன்னாத் எனும் ஐந்து நூல்கள் ஹழ்ரத் அவர்களின் முயற்சியில் உருவானதாகும். அதை இங்லீஷ் மீடியம் உள்ள பள்ளிக்கூடங்களிலும் பாடத்திட்டத்தில் கொண்டுவரவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் அதை மொழியாக்கம் செய்யும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். ஈராண்டுகளாகத் தொடர் முயற்சி செய்து இந்த ரமழானில்தான் முடித்தேன். மிகச் சீக்கிரமாகவே அது பாடத்திட்டத்தில் வரவேண்டும் என்ற ஆவலில் இருந்தேன். அதற்குள் அவர் இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார் எனும் பேரிடியான செய்தியைச் சீரணிக்க முடியவில்லை.

அதற்கு முன்பாக புலூகுஸ் ஸஆதா எனும் அரபி நூலைத் தமிழாக்கம் செய்து கொடுத்துள்ளேன். அதுவும் மிக விரைவில் வெளிவரும் என்று நம்புகிறேன். இன் ஷாஅல்லாஹ்.

எல்லோருடனும் மிக அன்பாகப் பழகக்கூடிய அன்பாளர்; பண்பாளர். எல்லா ஆலிம்களாலும் மதிக்கப்படக்கூடிய மாண்பாளர். இன்று நம்மைவிட்டுப் பிரிந்துள்ளார்.
நாம் அனைவரும் அவரின் மறுமை வாழ்வு ஜன்னத்துல் பிர்தௌசில் அமைய துஆ செய்வோம்.   
அல்லாஹ் அவர்தம் சேவைகளையும் நல்லறங்களையும் ஏற்றுக்கொள்வானாக.

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
27 05 2020  03 10 1441





வெள்ளி, 15 மே, 2020

நபிவழி மருத்துவத்தில் எண்ணெய்கள்!



-
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி Ph.D.
(
இமாம் மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார், மணலி, சென்னை)

அகில உலகமனைத்திற்கும் இறுதித் தூதராம் முஹம்மது (ஸல்) அவர்கள் ஆன்மிக வழிகாட்டி மட்டுமல்ல, மனிதனுக்குத் தேவையான அனைத்தையும் அள்ளி வழங்கியுள்ளார்கள் என்பதை, அவர்களின் பொய்யாமொழிகளைப் படிக்கின்றபோது புலப்படும். அவர்கள் கூறிய பொன்மொழிகள் இன்று பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. அந்த ஆய்வுகள் மூலம் கண்டறிந்த உண்மைகளை ஆய்வாளர்கள் உலக மக்களுக்கு எடுத்துரைக்கின்றார்கள்.

இதற்கான காரணம் ஒன்று உண்டு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதைப் பேசினாலும் அது அவர்களின் சொந்தக் கருத்தல்ல. அல்லாஹ் அவர்கள் மூலம் மக்களுக்குத் தேவையான கருத்துகளை வழங்கினான். எனவேதான் அவை யாவும் மனித சமுதாயத்திற்குப் பயனுள்ளவையாகவும் எக்காலத்திற்கும் பொருந்துபவையாகவும் உள்ளன. அதற்கான சான்றைத் திருக்குர்ஆனில் காணலாம். அவர் தம் விருப்பப்படி எதனையும் கூறுவதில்லை. இது அவருக்கு வஹீமூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை” (53: 3-4) என்று அல்லாஹ் கூறியுள்ளான்.

எண்ணெய்

அனஸ் பின் மாலிக் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையில் மிகுதியாக எண்ணெய் தடவுவதையும் தம் தாடியைச் சீவுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் முகத்தை மறைத்தவர்களாக இருந்து வந்தார்கள். அவர்களுடைய ஆடைகள் எண்ணெய் விற்பனை செய்பவரின் ஆடைகளைப் போன்று இருக்கும். (நூல்: ஷமாயில் திர்மிதீ: 33)

பொதுவாக எண்ணெய் உடலின் நுண்துளைகளை அடைத்துவிடுகிறது. அதிலிருந்து வெளியேறுகின்ற கழிவுகளைத் தடுத்துவிடுகிறது. வெந்நீரில் குளித்த பிறகு அதைப் பயன்படுத்தினால் அது உடலை அழகாக்கி, அதை ஈரப்பதத்தில் வைத்துக்கொள்ளும். அதைத் தலைமுடியில் தேய்த்தால் அதை அழகாக்கி, உரோமங்கள் நீண்டு வளர உதவும். தட்டம்மை, புட்டாளம்மை போன்ற நோய்கள் குணமாகும். உடலுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு ஆபத்துகளிலிருந்து காக்கும்.

இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் தலையில் எண்ணெய் தேய்த்துக்கொள்வது ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் உடலின் வெப்பநிலையைச் சீராக்கிக்கொள்வதற்குமான காரணங்களுள் ஒன்றாகும். இது வெப்பமண்டலத்தில் வாழ்பவர்களுக்கு அவசியமான ஒன்றாகும். 

அதேநேரத்தில் குளிர்ப் பிரதேசங்களில் வாழ்பவர்கள் எண்ணெய் தேய்க்க வேண்டிய அவசியமில்லை. பொதுவாக மிகப் பயனுள்ள எண்ணெய்கள் என்பவை ஸைத்தூன் (ஒலிவ) எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கருஞ்சீரக எண்ணெய் முதலானவை ஆகும்.

ஸைத்தூன் எண்ணெய்

பொதுவாக மிகப் பயனுள்ள எண்ணெய்களுள் ஒன்று ஸைத்தூன் எண்ணெய் ஆகும். ஸைத்தூன் எண்ணெய்யை ஆங்கிலத்தில் ஆலிவ் ஆயில் என்றும் தமிழில் ஒலிவ (இடலை) எண்ணெய் என்றும் கூறுவர். தமிழர்கள் இந்த எண்ணெய்யைச் சங்க காலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். அரபியர்கள் இந்த எண்ணெய்யை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகைக்கு முன்பிருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். 

அதனால்தான் அல்லாஹ் ஸைத்தூன் குறித்து அத்தீன் எனும் 95ஆம் அத்தியாயத்தில் கூறியுள்ளான். அத்தோடு இந்த எண்ணெய் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளதோடு, அதை அவர்கள் மிகுதியாகப் பயன்படுத்தியுமுள்ளார்கள்.

ஆலிவ் பழத்திலிருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெய் பல்வேறு மருத்துவப் பயன்களைக் கொண்டது. நபி (ஸல்) அவர்கள் ரொட்டி சாப்பிடும்போது இந்த எண்ணெய்யைத் தொட்டுச் சாப்பிடும் பழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.
ஆகவே இதை அவர்கள் நெய்யைப் போன்று பயன்படுத்தியுள்ளதை அறியமுடிகிறது. உணவுப் பொருளாகவும் மருந்தாகவும் இது பயன்படுகிறது. அந்த வகையில் இதிலுள்ள வைட்டமின் இ, ஏ ஆகிய சத்துக்கள் முகத்தின் அழகைப் பாதுகாத்து, மேம்படுத்த உதவுகின்றன.
முகத்தில் ஏற்படும் பரு, வடு, தழும்புகள் போன்றவற்றை முற்றிலுமாக நீக்க இந்த எண்ணெய் பயன்படுகிறது.
ஆலிவ் எண்ணெய்யில் உள்ள வைட்டமின் இ சத்து, தோலிலுள்ள செல்கள் சேதமடையாமல் பாதுகாத்து, சருமத்தை மிளிரச் செய்யும். ஆலிவ் எண்ணெய்யைச் சருமத்தில் தடவி வந்தால் சருமம் பொலிவான, மிளிரும் தோற்றத்தைப் பெறுவதைக் காணலாம். அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இதைத் தம் மேனியிலும் தலையிலும் தடவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இவ்வாறு சருமத்தை மிளிரச் செய்து, வயதாவதைத் தடுத்து, இளமைத் தோற்றத்தைப் பெற முக்கிய உதவி புரிவது இந்த எண்ணெய்யிலுள்ள ஸ்குவாலின் அமிலம் ஆகும்.

ஆலிவ் எண்ணெய் மலச்சிக்கலை நீக்க உதவுகிறது. இரைப்பை, குடல், பெருங்குடல் போன்ற உறுப்புகளுக்கு இது நன்மையளிக்கிறது. இதன் உறுதித்தன்மையும் அமைப்பும் உணவுப் பொருள்களைக் குடல் வழியாக, மென்மையாக எடுத்துச் செல்வதன்மூலம் செரிமானச் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இந்த எண்ணெய்யைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலை முற்றிலும் தடுத்து அதிலிருந்து முழுமையாக விடுபடலாம். இதில் வைட்டமின் இ, கே, இரும்புச் சத்து, ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள், ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் போன்றவை நிறைந்துள்ளன. இந்த ஊட்டச் சத்துகள் செரிமான இயக்கம் உட்பட, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

ஆலிவ் எண்ணெய் இரத்தச் சோகையை நீக்குகிறது. இதன் செரிமான சக்தி இதர எண்ணெய்களைப் போலவே இருக்கும். இந்த எண்ணெய்யில் மோனோ அன்சாச்சுரேட்டட் (Mono unsaturated fat), கொழுப்பு அமிலங்கள் 70 சதவிகிதம் இருக்கும். இது இதயத்துக்கு மிகவும் நல்லது. இந்த மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலமானது எல்.டி.எல்.கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவரும் ஆலிவ் எண்ணெய்யில் செய்த உணவுகளைச் சாப்பிடலாம்.

ஆலிவ் எண்ணெய் பலவிதமான பயன்களைத் தருகிறது என்பதற்காக, தொடர்ந்து இதையே பயன்படுத்தக்கூடாது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், அரிசித் தவிட்டில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் எனப் பல வகை எண்ணெய்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவதே சிறந்தது. ஏனெனில் ஒவ்வோர் எண்ணெய்யிலும் ஒவ்வொரு விதமான சத்தும் ஆற்றலும் உண்டு. நம் உடலுக்கு எல்லா வகையான சத்துகளும் ஆற்றல்களும் கிடைக்க வேண்டுமல்லவா?

தொப்புளில் எண்ணெய்

நம் உடலில் ஏற்படும் அனைத்து நோய்களையும் குணமாக்கப் பல்வேறு மருத்துவ இரகசியங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமான இரகசியம்தான் தொப்புளில் எண்ணெய் தேய்ப்பதாகும். நம் தொப்புள் என்பது நம்மைப் படைத்த இறைவன் நமக்குக் கொடுத்துள்ள அற்புதமான பரிசு. அறிவியல் கூற்றுப்படி, கருவுற்றவுடன் முதல் அணு உருவாகும் இடம் தொப்புள்தான். தொப்புள் உருவானவுடன், அது தாயின் நஞ்சுக்கொடியுடன் தொப்புள் கொடி மூலம் இணைக்கப்படுகிறது. நமது தொப்புள் உண்மையிலேயே ஆச்சரியப்படத்தக்க ஓர் உறுப்புதான். ஒரு மனிதன் இறந்தவுடன் 3 மணி நேரத்திற்கு தொப்புள் வெதுவெதுப்பாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

காரணம் ஒரு பெண் கருவுற்றதும், பெண்ணின் தொப்புள் மூலம் குழந்தையின் தொப்புள் வழியாகக் கருவிலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்கப்படும். முழுமையாக ஒரு கரு குழந்தையாக உருவாவதற்கு 270 நாள்கள்-அதாவது 9 மாதங்கள் ஆகின்றன. நமது உடம்பிலுள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைவதற்கு இதுவே காரணம். தொப்புளே நமது உடம்பின் குவியப்புள்ளி. அதுவே உயிரும்கூட. தொப்புளுக்குப் பின்னால் 72000-க்கும் அதிகமான நரம்புகள் உள்ளன. நமது உடம்பில் உள்ள இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை புவியின் இரு மடங்கு சுற்றளவிற்குச் சமம்.

இப்போதும் கிராமத்தில் குழந்தைகள் அழுதால் தொப்புளில் சிறிது எண்ணெய்த் துளி விட்டதும் அடுத்த நொடியில் குழந்தை அழுகையை நிறுத்துவது நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. வாயுக் கோளாறுகள் இருந்தால், சிறிது பெருங்காயத்தை நீரில் கரைத்து தொப்புளில் தடவுவது உண்டு. அப்படித் தடவுவதால் உடனடிப் பலன் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தொப்புளில் எண்ணெய் போடுவதன் மூலம் கண்கள் வறட்சி, குறைந்த கண்பார்வை, கணையம் சீரற்ற தன்மை, குதிகால் மற்றும் உதடு வெடிப்பு, முகப்பொலிவின்மை, பளபளப்பான முடியின்மை, மூட்டுவலி, நடுக்கம், உடல் சோர்வு, முழங்கால் வலி, வறண்ட சருமம் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் மூன்று துளி சுத்தமான நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை அங்குலம் (இன்ச்) தொப்புளைச் சுற்றிப் பரவவிடுவதன்மூலம் கண்கள் வறட்சி நீங்கும்; பார்வைக்குறைவு சரியாகும்; தலைமுடி பளபளப்பாகும்.

தொப்புளில் ஏன் எண்ணெய் விட வேண்டும் என்று கேட்கலாம். எந்த நரம்பில் இரத்தம் வறண்டு உள்ளதோ அதனை நம் தொப்புளால் கண்டுபிடிக்க இயலும். அதனால் தொப்புள் அந்த எண்ணெய்யைக் குறிப்பிட்ட வறண்ட நரம்பிற்கு அனுப்பித் திறக்கச் செய்கிறது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் தம் மேனியில் எண்ணெய்யைத் தடவும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.

கண்பார்வைக் குறைபாடு, கண் வறட்சி, உடல் சூட்டினால் உண்டாகும் பித்த வெடிப்பு, முழங்கால் மற்றும் மூட்டு வலிகள், உடல்சோர்வு, நரம்பு பாதிப்புகள் முதலான பல்வேறு நோய்களைத் தொப்புளில் எண்ணெய் தேய்ப்பதன்மூலம் குணப்படுத்தலாம். வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், எலுமிச்சை எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் முதலான ஒவ்வோர் எண்ணெய்க்கும் தனித்தனி குணமும் குறிப்பிட்ட நோய்களைச் சீராக்கும் தன்மையும் உண்டு. அதைத் தெரிந்துகொண்டு அந்தந்த எண்ணெய்யைத் தொப்புளில் தடவி நிவாரணம் பெறலாம்.

ஒலிவ எண்ணெய்யை (ரொட்டியுடன்) சாப்பிடுங்கள். அதனை (உடலில்) தேய்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது அருள்வளம் நிறைந்த மரத்திலிருந்து கிடைக்கின்றதுஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: ஷமாயில் திர்மிதீ: 158) அதாவது நபி (ஸல்) அவர்கள் ஒலிவ எண்ணெய்யை ரொட்டியுடன் தொட்டுக்கொண்டு நேரடியாகச் சாப்பிட்டுள்ளார்கள். அவ்வாறு சாப்பிட வலியுறுத்தியும் உள்ளார்கள். அத்தோடு உடலில் தேய்த்துக்கொள்ளவும் கட்டளையிடுகின்றார்கள். சாப்பிடுதல், தலையிலும் உடலிலும் தேய்த்தல் ஆகிய செயல்பாடுகள் மூலம் பல்வேறு நற்பயன்களை மனிதனுக்கு அது வழங்குகிறது.

ஒலிவ மரம் மிகுந்த பயன்தரும் மரமாக இருப்பதால் அருள்வளம் நிறைந்த மரம்என வர்ணிக்கப்பட்டுள்ளது. இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறியதாவது: ஒலிவ எண்ணெய் விளக்கெரிக்கப் பயன்படுகிறது. உட்கொள்ளும் குழம்பாகவும் தலையிலும் உடலிலும் தேய்த்துக்கொள்ளவும் பயன்படுகிறது. இதனால் தோல் பதப்படுத்தப்படுகிறது.

அதாவது நம்முள் பலர் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதே இல்லை. அதுபோலவே யாருமே உடலில் எண்ணெய் தேய்ப்பதில்லை. உடலிலும் தொப்புளிலும் தேய்ப்பதால் என்னென்ன பயன்கள் மனிதனுக்குக் கிடைக்கின்றன என்பதைச் சித்தர்கள் விளக்கிக் கூறியுள்ளனர். எனவே ஒலிவ எண்ணெய் மட்டுமின்றி, நல்லெண்ணெய், தேய்காய் எண்ணெய், கருஞ்சீரக எண்ணெய் ஆகியவற்றை நாம் தலைக்குத் தேய்க்கப் பயன்படுத்தலாம். அதனால் தலைமூலம் அந்த எண்ணெய் உடலுக்குப் பாய்ந்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்கிறது. கோடைக் காலங்களில்தான் மிகுதியாக எண்ணெய்யைப் பயன்படுத்த வேண்டும். குளிர் காலங்களில் மிகக் குறைவாகவே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் குளிர் காலங்களில் இயல்பாகவே உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

உடலில் ஏன் எண்ணெய் தேய்க்க வேண்டும் என்று சிலர் கேட்பதுண்டு. பொதுவாக நமது உடல் மென்மையாக இருக்க அதிலுள்ள எண்ணெய்ப் பசைதான் முக்கியக் காரணமாகும். கோடைக் காலங்களில் உடல் வறண்டுபோய்விடுவதால் அந்த மென்மைத்தன்மை குறைந்துவிடத் தொடங்குகிறது. நா வறட்சியும் ஏற்படுகிறது. எனவே உடலில் எண்ணெய் தேய்ப்பதால் மயிர்க்கால்கள் மூலம் எண்ணெய் உடலுக்குள் சென்று குளிர்ச்சியை ஏற்படுத்துவதோடு மேல்தோலை மென்மையாக வைத்துக்கொள்கிறது.

அக்காலத்தில் நாள்தோறும் தலைக்கு எண்ணெய் தேய்த்து வந்ததால்தான் ஆண்களுக்கு வழுக்கை ஏற்படாமல் இருந்தது. ஆனால் இன்றைய அவசர உலகத்தில் யாருக்கும் எதற்கும் நேரமில்லை. ஆண்களும் பெண்களும் அவசர கதியில் வேலைக்கு ஓடுகின்றார்கள். அதனால் பெண்கள் தம் தலைமுடியைக்கூடச் சீவிக்கொள்வதில்லை. இன்றைய இளைஞர்கள் பலருக்கு இளநரை ஏற்படுவதற்கான காரணங்களுள் ஒன்று தலைக்கு எண்ணெய் தேய்க்காததே ஆகும். எண்ணெய் தேய்க்காததால் தலைக்குக் கிடைக்க வேண்டிய வைட்டமின்கள், புரோட்டீன்கள் ஆகியவை கிடைக்காமல் போய்விடுகின்றன. அதனால் முடிக்கு நிறத்தை வழங்கும் நிறமியான மெலனின் குறைந்து, நரைக்கத் தொடங்குகிறது. அதேநேரத்தில் நாள்தோறும் எண்ணெய் தேய்ப்பதன்மூலம், முடிக்கு வேண்டிய சத்துகள் கிடைப்பதோடு நிறமியும் ஊட்டம் பெற்று, முடிக்கு நிறத்தை வழங்குகிறது.

தலைக்கு எண்ணெய் தேய்ப்பதன்மூலம் மற்றொரு நன்மை பொடுகு நீங்குதல் ஆகும். சிலருக்குத் தலையில் பொடுகு மிகுதியாக இருக்கும். அப்படி இருப்பதற்கான காரணம், உச்சந்தலை (ஸ்கால்ப்) வறட்சிதான். அதிலும் வறட்சி அதிகமான நிலையில்தான் பொடுகு உருவாகி, பேன் வரத் தொடங்கும். எனவே நாள்தோறும் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால் உச்சந்தலையில் ஏற்படும் வறட்சி தடுக்கப்பட்டு, பொடுகு உருவாவது குறையும். தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால் முடி உதிர்தல், முடி உடைதல் உள்ளிட்ட குறைபாடுகள் நீங்குகின்றன. ஒவ்வொரு நாளும் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால் மயிர்க்கால்கள் ஊட்டம் பெற்று மேற்கண்ட குறைபாடுகள் நீங்கிவிடுகின்றன.

தலையில் எண்ணெய் தேய்த்தல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையில் மிகுதியாக எண்ணெய் தடவுவதையும் தம் தாடியைச் சீவுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் என்று ஷமாயில் திர்மிதீயில் இடம்பெற்றுள்ள செய்தி, தலைக்கு எண்ணெய் தடவுவதை ஊக்கப்படுத்துகிறது. தலைக்கு எண்ணெய் தடவுகின்ற பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. அதனடிப்படையில் நபி (ஸல்) அவர்களும் அப்பழக்கத்தைக் கடைப்பிடித்துள்ளார்கள். நமக்கு அவர்களுடைய வாழ்வில் அழகிய முன்மாதிரி உள்ளது. அந்த அடிப்படையில் தலைக்கு எண்ணெய் தேய்ப்பது நபிவழியாகும்.

பொதுவாக தலைக்குத் தேய்க்கப்படும் எண்ணெய்களுள் நல்லெண்ணெய்யும் தேங்காய் எண்ணெய்யும் முதலிடம் வகிக்கின்றன. இவற்றின் பயன்கள் மிகுதியானவை. இவ்விரு எண்ணெய்களிலும் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச் சத்து ஆகியவை உள்ளன. நல்லெண்ணெய்யில் உள்ள வைட்டமின் இ முடி சிதைவைத் தடுக்கிறது.

ஆக நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத பொருளாக இருந்த எண்ணெய்யை நாமும் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி பல்வேறு நன்மைகளை அடைவோம்.
==========================================









வியாழன், 30 ஏப்ரல், 2020

தராவீஹ் தஸ்பீஹ்கள்

புதன், 22 ஏப்ரல், 2020

பூனையை அவிழ்த்துவிடு!



---------------------------------------
“பனூ இஸ்ராயீல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஒரு பூனையின் காரணத்தால் வேதனை செய்யப்படுவதை நான் பார்த்தேன். அவள் தனது பூனைக்குத் தீனி போடாமல் கட்டிப்போட்டு வைத்திருந்தாள். அவள் அதை பூமியிலுள்ள புழுப்பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து)விடவுமில்லை (இதன் காரணமாகவே அவள் நரகம் சென்றாள்.)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (முஸ்லிம்: 1651)

ஆட்சியாளர்கள் தற்போதைய சூழ்நிலை கருதி, மக்களை வீட்டுக்குள் அடைத்துப்போட்டது தவிர்க்க இயலாதது. இருப்பினும் அவர்களுக்கான உணவுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமல்லவா? வெளியில் விடாமல் வீட்டுக்குள் அடைத்துப்போட்டு, உதவித்தொகையும் கொடுக்காமல் விட்டுவிட்டால் அவர்கள் தமக்கான வாழ்வாதாரத்தை எப்படிப் பெறுவார்கள்? இதற்கு ஆட்சியாளர்கள்தாம் பதில் சொல்ல வேண்டும்.

நூ. அப்துல் ஹாதி பாகவி
22 04 2020      27 08 1441    =====================

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

தொழுதாலும் சிறையா?

சிறுகதை
_____________

பற்பல தவறுகளைச் செய்து ரௌடிப் பட்டியலில் இடம்பெற்றிருந்த முஸ்தபாவின் பெயர் அவ்வூர் போலிஸ் ஸ்டேஷனில் உள்ள அனைவருக்கும் மனப்பாடம் ஆகிவிட்டது. 

ஒரு நாள் மாலையில் சிகரெட் பற்ற வைத்து உள்ளிழுத்து மூக்கு வழியாக வெளியேற்றியவாறு,  “திருந்தி நல்லவனாக வாழ என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அவனை அறிந்த தப்லீக் சகோதரர்கள் சிலர் அவனை நெருங்கி, “கலிமா சொல்லியுள்ள நீங்க தொழுகையைக் கடைப்பிடிப்பது ரொம்ப முக்கியம். ஐவேளைத் தொழுகைய ஒவ்வொரு முஸ்லிமும் தொழுகணும்; வாங்க பாய் பள்ளிவாசலுக்குப் போகலாம்" என்று சொல்லி அழைத்துச் சென்றார்கள்.

தொழுது முடித்து வெளியே வரும்வேளையில்,
அடுத்த வாரம் நம் பள்ளியிலிருந்து ஒரு ஜமாத் புறப்படுது. ஒரு நாற்பது நாள் எங்களோட ஜமாத் வாங்க பாய். அல்லாஹ்வுடைய பாதையிலே போயி இஸ்லாமிய மார்க்கத்த கத்துக்கலாம். நாலு பேரப் போல ஒரு நல்ல மனுஷனா வாழலாம். உங்க பேரையும் எழுதிக்கலாமா?" என்று அவனை மனதளவில் தயார்படுத்தி, சம்மதிக்க வைத்தார் அந்த ஊர் அமீர்ஸாப். 


மூன்று மூன்று நாள்களாகப் பல்வேறு ஊர்கள் சென்று பல்வேறு பள்ளிவாசல்களில் தங்கினார்கள். உண்டார்கள்; உறங்கினார்கள்; கற்றுக் கொடுத்தார்கள். முஸ்தபா புதிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டான். தொழுவது குறித்து அறிந்துகொண்டான். திருக்குர்ஆனிலிருந்து சில (சூராக்களை) பகுதிகளை மனனம் செய்துகொண்டான். நாற்பது நாள் முடிந்து போனது. இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சு போச்சா என்று நினைத்துக்கொண்டே ஊருக்குத் திரும்பினான். 

ஊர் வந்த சில நாள்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதுவரை பள்ளிவாசலில் தொழுது பழகிய அவனுக்கு வீட்டில் தொழுவது திருப்தியாக இல்லை. 

அன்று ஒரு வெள்ளிக்கிழமை. ஊரடங்கு இன்னும் தொடர்கிற வேளை. பக்கத்திலுள்ள அமீர்ஸாப் வீட்டுக்குச் சென்று, “வாங்க பாய் தொழுகப் போகலாம். இன்று ஜும்ஆ பாய். என்னால வீட்ல தொழுக முடியல பாய்” என்றான்.

“தம்பி முஸ்தபா, ஊரடங்கு போட்டுருக்காங்க. பள்ளிவாசலுக்குப் போகக்கூடாதுப்பா. வீட்லதான் தொழுகணும்" என்றார் அமீர்ஸாப். 

“என்ன பாய், நீங்களே இப்படிச் சொல்லலாமா? ஒவ்வொரு முஸ்லிமும் ஐவேளை தொழுகணும்; வீட்ல தொழுவதைவிட பள்ளிவாசல்ல தொழுதா 27 மடங்கு நன்மைன்னு நீங்கதான் சொன்னீங்க. இப்ப நீங்களே வீட்ல தொழுகச் சொல்றீங்களே? 

“வாங்க பாய். யாருக்கும் பயப்படாதீங்க. எல்லாம் நான் பாத்துக்குறேன் பாய்” என்று கூறி அமீர்ஸாபைச் சம்மதிக்க வச்சு, அக்கம் பக்கத்துல இருந்த சில இளைஞர்களையும் கூட்டிக்கொண்டு பள்ளிவாசலுக்குப் போனான். பள்ளிவாசல் கேட் பூட்டியிருந்தது.

 உள்ளே பார்த்தால் இமாமும் பள்ளி ஊழியர்களும் மட்டுமே தொழுது கொண்டிருந்தார்கள். எப்படி உள்ளே போவது என்று யோசித்த முஸ்தபாவுக்கு பக்கத்தில் இருந்த சின்ன கேட் பக்கம் பார்வை சென்றது. அதில் துருப்பிடித்த பூட்டு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பலமாகப் பிடித்து இழுத்தான். அது கையோடு வந்தது. 


மிக வேகமாக எல்லோரும் ஓடிச் சென்று தொழுகையில் கலந்து கொண்டார்கள். தொழுகை முடிந்து துஆ ஓதி முடிப்பதற்குள் போலிஸ் குரல் கேட்டு உள்ளிருந்த அனைவரும் பீதியடைந்தனர். 


“பாய், எல்லோரும் வெளியே வாங்க” என்று போலிஸின் அதிகாரக் குரல் ஒன்று வன்மையாகக் கேட்டதும் அனைவரும் பயந்துகொண்டே வெளியே வந்தனர். 

“ஏன் பாய், ஊரடங்கு போட்டுள்ளது உங்களுக்குத் தெரியாதா? உங்களுக்குத் தனியா சொல்லணுமா? எல்லோரும் வேன்ல ஏறுங்க” என்று மிரட்ட, எல்லோரும் வேனில் ஏறினார்கள்.

எல்லோரையும் போலிஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று, சிறையில் அடைத்தார்கள். எல்லோரும் அச்சத்தில் இருக்க, முஸ்தபா மட்டும் ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்தான்.

அவன் பக்கத்தில் இருந்த அமீர்ஸாப் அவனிடம், “என்னப்பா ஆழ்ந்த யோசனை?” என்று கேட்க, “இல்ல பாய், நான் எத்தனையோ தவறுகள் செய்துட்டு இந்த ஜெயிலுக்குப் பல தடவை வந்துருக்கேன். அதுல ஒரு நியாயம் இருக்கு. ஆனா இப்ப, நான் என்ன தவறு செய்தேன். எதற்காக கைது செய்து இந்த ஜெயிலுல போட்ருக்காங்க? நன்மை செய்வதுகூட தவறா பாய்?” என்று கோபமாகக் கேட்டான்.   

“அப்படி இல்லப்பா, நாம தொழுததால் நம்மைக் கைது செய்யல. சட்டத்த மீறிச் செயல்பட்டதால்தான் நம்மைக் கைது செய்துருக்காங்க. சட்டத்த மீறினால் கைதுதான். இதில் நல்லது, கெட்டதுன்னு எதுவுமில்ல. சட்டத்தால் நல்லதையும் கெட்டதாக்க முடியும். கெட்டதையும் நல்லதாக்க முடியும்” என்றார்.  

“எப்படி பாய், புரியலையே” என்றான்.

“ஒனக்குப் புரியுற மாதிரியே சொல்றேன். “மது குடிப்பது தடை”ன்னு அரசாங்கம் சட்டம் போட்டுருக்கும்போது ஒருவன் மது குடித்தால் அவனைக் கைது செய்வாங்க. “மது குடிப்பது தடை இல்லை”ன்னு அரசாங்கம் சட்டம் போட்டுருக்கும்போது ஒருவன் மது குடித்தால் அவனைக் கைது செய்ய மாட்டாங்க. இதுதான்பா சட்டத்தின் வலிமை. இப்ப புரியுதா?” என்றார் அமீர் ஸாப்.

“தெளிவாப் புரிஞ்சுது பாய்” என்றான்

“சரி, வாப்பா அசர் தொழுகலாம். நேரமாச்சு” என்று அமீர்ஸாப் சொல்ல, “உளூ செய்யணுமே. என்ன செய்யிறது பாய்?” என்றான் முஸ்தபா.

“உளூ செய்ய முடியாதபோது, தயம்மும் செய்துக்கலாம். எப்படி செய்யிறதுன்னு நான் உனக்குச் சொல்லித்தாரேன். நான் செய்வதைப்போல் நீயும் செய்” என்று சொல்லிவிட்டு அமீர்ஸாப் தயம்மும் செய்யத் தொடங்கினார்.

அதன்பின் அவ்விருவரும் அங்கே தொழுக, மற்றவர்களும் ஆங்காங்கே தொழுதார்கள்.

இவர்களின் நன்னடத்தையைப் பார்த்த எஸ்.ஐ., இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய மேலிடத்துக்குப் பரிந்துரை செய்தார்.

மேலிடத்திலிருந்து விடுதலைக்கான உத்தரவு வருவதற்குள், ஊரடங்கு உத்தரவும் வாபஸ் பெறப்பட்டது.

“அல்ஹம்து லில்லாஹ்” என்று சொல்லியவாறே அனைவரும் விடுதலையாகி ஊர் திரும்பினர்.

ஊருக்குள் சென்றதும், அனைவரும் தத்தம் வீட்டிற்குச் செல்வதற்குமுன் அல்லாஹ்வின் வீட்டிற்குள் சென்று நிம்மதியாகத் தொழுதனர்.

-நூ. அப்துல் ஹாதி பாகவி
18 04 2020      24 08 1441