சனி, 19 ஆகஸ்ட், 2017

மனிதன் மரியாதைக்குரியவன்!



-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

ஏழை-பணக்காரர் எனப் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும், கருப்பு-வெள்ளை என உடலின் நிறத்தில் வேறுபாடு இருந்தாலும், ஆண்-பெண் எனப் பாலின வேறுபாடு இருந்தாலும் மனிதன் மரியாதைக்குரியவன். ஒருவருக்கொருவரின் மதிப்பு, மரியாதையில் கூடுதல் குறைவு இருந்தாலும் ஒவ்வொரு மனிதருக்கும் தனிப்பட்ட மரியாதை உண்டு. இதுவே இஸ்லாமிய மார்க்கம் வகுத்துள்ள மனிதச் சமத்துவம்; மனித உரிமை.

மனிதனை அவமதிப்பதோ, கேவலப்படுத்துவதோ, அசிங்கப்படுத்துவதோ, மானபங்கப்படுத்துவதோ ஒருபோதும் கூடாது. சுருக்கமாக, யாருடைய மனதும் புண்படுமாறு நடந்துகொள்ளக்கூடாது. ஒவ்வொருவரையும் மதிக்க வேண்டும். ஏனென்றால் மனிதன் மரியாதைக்குரியவன்.

அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக ஆதமின் மக்களை (மனிதர்களை) நாம் கண்ணியப்படுத்தியுள்ளோம். அவர்களைத் தரையிலும் கடலிலும் (வாகனங்கள் மூலம்) நாமே சுமந்து செல்(லும்படிச் செய்)கிறோம். நல்ல உணவுகளையும் நாமே அவர்களுக்கு அüக்கிறோம். மேலும் நாம் படைத்துள்ள பெரும்பாலானவற்றைவிட அவர்களுக்குக் கூடுதல் சிறப்புகளை வழங்கியுள்ளோம். (17: 70)

இவ்வசனத்தில் "நாம் படைத்துள்ள பெரும்பாலானவற்றைவிட அவர்களுக்குக் கூடுதல் சிறப்புகளை வழங்கியுள்ளோம்'' எனும் அல்லாஹ்வின் கூற்று கவனிக்கத்தக்கது. இவ்வுலகில் படைக்கப்பட்டுள்ள கோடானு கோடிப் படைப்புகளைவிட மனிதனே உயர்வானவன்; மரியாதைக்குரியவன் என்பது நமக்குப் புலப்படுகிறது.

வானவர்கள், "இறைவா! ஆதமின் மக்களுக்கு (மனிதர்களுக்கு) உலகத்தை வழங்கியுள்ளாய். அதில் அவர்கள் உண்ணவும் பருகவும் (ஆடைகளை) அணியவும் செய்கின்றார்கள். ஆனால் நாங்கள் உன்னைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் உண்பதோ பருகுவதோ வீண் விளையாட்டுகளில் ஈடுபடுவதோ இல்லை. எனவே உலகத்தை அவர்களுக்குரியதாக நீ ஆக்கியதைப் போன்று மறுமையை எங்களுக்குரியதாக ஆக்குவாயாக'' என்று கூறினார்கள்.

அதற்கு அல்லாஹ், "நான் என் கையால் படைத்த ஒருவரின் (ஆதமின்) வழிவந்தவர்களில் நல்லவர்களை, "ஆகு' என்றவுடன் உண்டாகிவிட்ட (வான)வர்களைப் போன்று ஆக்க மாட்டேன்'' என்று கூறினான். (நூல்: தப்ரானீ)

இவ்விடத்தில் "நான் என் கையால் படைத்த ஒருவரின் வழிவந்தவர்களில் நல்லவர்களை'' எனும் வாக்கியம் மிகுந்த கவனத்திற்குரியது. வானவர்களை அல்லாஹ் ஒளியால் படைத்தான். ஆனால் "ஆகு' எனும் சொல்லால் அவர்களைப் படைத்தான். அதேநேரத்தில் மனிதனை அவன் தன் கையால் படைத்தான். ஆகவே அவன் மிகுந்த மரியாதைக்குரியவன்; மற்றெல்லாப் படைப்பினங்களைவிடச் சிறப்பிற்குரியவன்; ஏன், வானவர்களைவிட மேலானவன்.

இதனால்தான் தன் கையால் படைத்த உயரிய படைப்பான மனிதனுக்கு வானவர்கள் அனைவரும் சிரம்பணியுமாறு கட்டளையிட்டான். வானவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் கட்டளைக்குப் பணிந்து முதல் மனிதரான ஆதமுக்குச் சிரம் பணிந்தனர். சிரம் பணிய மறுத்த இப்லீசைச் சபித்து விரட்டியடித்தான்.
 
மனிதன் மரியாதைக்குரியவனாக இருப்பதால் அவனுடைய மானமும் மரியாதையும் காக்கப்பட வேண்டும்; அவனுடைய மரியாதைக்குக் களங்கம் ஏற்படுத்தக்கூடாது; அவனைப் பிறர் முன்னிலையில் கேவலப்படுத்தக்கூடாது. இதனை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் தம் இறுதி ஹஜ்ஜில் மக்கள் திரள் முன்னிலையில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

"உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனித மிக்க இந்த மாதத்தில், இன்றைய நாள் எந்த அளவு புனிதமானதோ, அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவையாகும்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 67)

புனிதமிக்க மக்கா நகர் குறித்த மதிப்பும் மரியாதையும் ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் ஆழமாகப் பதிந்துள்ளது. அதில் அமைந்துள்ள கஅபாவை முன்னோக்கியே உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் தொழுதுவருகின்றார்கள். அத்தகைய கஅபா எனும் இறையாலயம் அமைந்துள்ள நகரம் எந்த அளவு புனிதமானதோ அதே அளவு ஒவ்வொரு மனிதனின் மானமும்  மரியாதையும் புனிதமானது என்பதை உள்ளடக்கிக் கூறியுள்ளார்கள்.

மனிதன் உயர்வானவன். மேன்மையானவன் அவன் எந்த மனிதனுக்கும் தலைசாய்க்கத் தேவையில்லை. எந்தத் தலைவரையும் வணங்கத் தேவையில்லை. அவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அடிமை இல்லை என்பதைப் பின்வரும் நபிமொழி உணர்த்துகிறது.

அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: முஆத் (ரளி) அவர்கள் சிரியாவிலிருந்து திரும்பி வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்குச் சிரவணக்கம் செய்தார்கள். "முஆதே! இது என்ன (புதுப்பழக்கம்)?'' என்று வினவினார்கள். "நான் சிரியாவுக்குச் சென்றிருந்தேன். அங்கு அவர்கள் தம் பாதிரிமார்களுக்கும் தலைவர்களுக்கும் சிரவணக்கம் செய்வதைக் கண்டேன். எனவே நான் அதைத் தங்களுக்குச் செய்ய வேண்டுமென விரும்பினேன்'' என்று விடையளித்தார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறு செய்யாதீர். திண்ணமாக நான் அல்லாஹ் அல்லாதவருக்குச் சிரவணக்கம் செய்ய யாரையேனும் ஏவுவதாக இருந்தால், ஒரு பெண் தன் கணவனுக்குச் சிரவணக்கம் செய்யுமாறு நான் ஏவியிருப்பேன்...'' என்று கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா: 1843)

இதில் மிக முக்கியமான செய்திகள் உள்ளன. ஒரு மனிதர் சமுதாயத்தில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவருக்குப் பிறர் குனியவோ, தலைதாழ்த்தி வணங்கவோ, அவரது காலைத் தொட்டு வணங்கவோ தேவையில்லை; அவ்வாறு செய்வது கூடாது. அதுபோலவே ஒரு பெண் தன் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது ஒருபுறமிருக்க, அவள் தன் கணவனுக்குச் சிரம் தாழ்த்த வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லை. ஆணும் பெண்ணும் சமமே என்பதும் இதில் உள்ளடங்கியுள்ளது.

ஆக, எல்லாப் படைப்பினங்களையும்விட உயரிய மனிதன், மாட்டிறைச்சி சாப்பிடுவதற்காகக் கொல்லப்படலாமா? எல்லாப் படைப்பினங்களையும் மரியாதைக்குரிய மனிதனின் பயன்பாட்டிற்காகத்தான் உயர்ந்தோன் அல்லாஹ் படைத்துள்ளான். எனவே ஒவ்வொரு மனிதனும் தனக்கு அல்லாஹ் ஆகுமாக்கிய உணவுகளுள் தான் விரும்பியவற்றை உண்ண முழு உரிமை உண்டு.  அப்படியிருக்கும்போது அவன் விரும்பிய உணவை உண்ணவிடாமல் தடைசெய்யவோ அவனை அடிக்கவோ, கொலை செய்யவோ யாருக்கும் உரிமையில்லை.

இவ்வுலகில் பிறந்துள்ள அனைவரும் சமமே. நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்று கூற யாருக்கும் உரிமை இல்லை. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:

மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு, உங்களைக் குலங்களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களுள் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற்கில்லை.) எனினும், உங்களுள் யார் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். (49: 13)

இவ்வுலகிலுள்ள அனைவரும்  ஓர் ஆண்-பெண்ணிலிருந்து பிறந்த சமமதிப்புடைய மனிதர்களே ஆவர். அவர்களுள் மிகுந்த இறையச்சமுடையவரே இறைவனிடம் மிகுந்த மரியாதைக்குரியவர். எனவே இறைவனின் படைப்பிலும் மனிதப் பிறப்பிலும் ஒருவருக்கொருவர் எந்த வித்தியாசமும் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதுதான் இஸ்லாமிய மார்க்கம் வகுத்துள்ள மனித உரிமைச்சட்டம் ஆகும்.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் பிற மனிதர்களை மதித்து அவரவர்க்குரிய மரியாதையைக் கொடுத்து மனிதநேயத்தோடு வாழ்வோம்.
=========================================




செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

71 ஆம் ஆண்டு விடுதலை நாளில் தேசிய மூவண்ணக் கொடியை ஏற்றியபோது...

சென்னை, கொளத்தூரில் உள்ள பிரஸ் மீடியா அசோசியேஷன் அலுவலகத்தில் 71 ஆம் ஆண்டு விடுதலை நாளில் தேசிய மூவண்ணக் கொடியை ஏற்றியபோது...







கூட்டுக் குர்பானியா? வியாபாரமா?


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

துல்ஹஜ் பத்தாம் நாள் உலகம் முழுவதும் இறைவனுக்காகப் பிராணிகளை அறுத்துப் பலியிடும் ஓர் ஒப்பற்ற வழிபாட்டை முஸ்லிம்கள் செய்துவருகின்றார்கள். தம்மால் இயன்ற பொருளாதாரத்தைச் செலவு செய்து ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு பிராணியை வாங்கி, அறுத்துப் பலியிட்டு, தாமும் உண்டு, ஏழைகளுக்கும் உண்ணக் கொடுத்துக் கொண்டாடப்படுகின்ற இரண்டாவது திருநாள்; பெருநாள்.

“துல்ஹஜ் மாதம் பத்தாம் நாள் அன்று ஒரு மனிதர் செய்யும் நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது இரத்தத்தை வழிந்தோடச் செய்யும் (இந்தக் குர்பானி) நற்செயலைவிட வேறெதுவுமில்லை. மறுமை நாளில் அந்தக் குர்பானிப் பிராணி தனது கொம்புகளுடனும் உரோமங்களுடனும் கால்குளம்புகளுடனும் (முழுமையாக) வரும். (குர்பானிப் பிராணியின்) அந்த இரத்தம், நிலத்தில் விழுவதற்குமுன் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டுவிடுகிறது. எனவே மனநிறைவுடன் குர்பானி கொடுங்கள்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 1413)

இதன் முக்கியத்துவத்தை அறியாதோரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இறைச்சி மட்டுமே இதன் நோக்கம் எனத் தவறாக எண்ணிக்கொண்டுள்ளார்கள். ‘குர்பானி ஒரு வழிபாடு’ என்பதை அவர்கள் அறியாதிருக்கின்றார்கள். “உம் இறைவனை வணங்குவீராக. (பின்னர் அவனுக்காக) அறுத்துப் பலியிடுவீராக” (108: 2) என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறுவதை நினைவுகூர்வது அவசியமாகும்.

நம்முள் பலர் தத்தம் வீடுகளில் அன்றைய நாளில் ஆட்டை அறுத்துப் பலியிடுவதைக் கடமையாகக் கருதிச் செய்துவந்தாலும் இன்னும் ஒரு பெரும்தொகையினர் கூட்டுக் குர்பானி கொடுப்பதையே தமக்கு வசதியாகக் கருதுகின்றார்கள். “ஆட்டை வாங்கி, அறுத்து, அதைப் பங்கிட்டுக் கொடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது” என்று அலுத்துக்கொள்கின்றார்கள். “ஆட்டை அறுப்பவர் (கஸாயி) கிடைப்பதே  பெரும் திண்டாட்டமாக உள்ளது. அவர் கேட்கும் தொகையும் மிக அதிகமாக உள்ளது” என்று வேறு சிலர் அங்கலாய்த்துக்கொள்கின்றார்கள். இப்படிப் பல்வேறு சாக்குப்போக்குகள் கூறி, வசதியிருந்தும் அதிலுள்ள சில சங்கடங்களைச் சகித்துக்கொள்ள முடியாத பலர் கூட்டுக் குர்பானியைத் தேர்ந்தெடுத்துவிடுகின்றனர்.

இன்றைய அவசர உலகில், கூட்டுக் குர்பானியைப் பருவக் காலத் தொழிலாகவும் வியாபாரமாகவும் கருதியே பலரும் இதில் ஈடுபடுகின்றனர். “இது ஒரு வழிபாடு” என்பதை மறந்து செயல்படுகின்றனர். எழுபது பேர் பங்கு சேர்ந்திருந்தால் பத்து மாடுகளை அறுக்க வேண்டும். ஆனால் பங்குதாரர்கள் பலர் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கமில்லாததால், “எங்களுக்கு இறைச்சி வேண்டாம். நீங்களே பங்கிட்டுக் கொடுத்துவிடுங்கள்” என்று எல்லாப் பொறுப்பையும் அவர்கள்மீதே சாட்டிவிட்டு, இவர்கள் தம் கடமை முடிந்தது என்று ஒதுங்கிக்கொள்கின்றார்கள்.  இதனால் பத்து மாடுகளை அறுப்பதற்குப் பதிலாக ஐந்து அல்லது ஏழு மாடுகளை அறுத்து, இறைச்சியைக் கேட்போருக்கு மட்டும் பகிர்ந்துவிட்டு, அப்படியே முடித்துக் கொள்கின்றார்கள்.

உண்மையில் கூட்டுக் குர்பானி என்பது, அருகருகே உள்ள ஏழு பேர் ஒன்றாகச் சேர்ந்து, ஒரு மாட்டை வாங்கி,  ஓரிடத்தில் வைத்து, அவர்களுள் ஒருவர் அதனை அறுத்து, அதன்பின் அந்த ஏழுபேரும் அதன் இறைச்சியைச் சமமாகப் பங்கு வைத்துக்கொள்வதுதான். இது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த கூட்டுக் குர்பானி முறை ஆகும். இவ்வாறு ஏழு ஏழு பேராகக் கூட்டாகச் சேர்ந்து நிறைவேற்ற வேண்டிய வழிபாட்டை, சிலர் தாமே முன்னின்று செய்வதாகப் பங்குதாரர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அறுக்க வேண்டிய அளவிற்கு மாடுகளை அறுக்காமல், பங்குதாரர்களின் வழிபாட்டை முடக்கிவிடுகின்றார்கள்.

ஆகவே கூட்டுக் குர்பானியில் பங்கு சேர்பவர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். “மாட்டை அறுக்கும்போது நாங்களும் அங்கு வந்து நிற்போம்” என்ற தகவலை அவர்களிடம் தெரிவித்துவிட வேண்டும்.    பங்குதாரர் இறைச்சியைச் சாப்பிடாவிட்டாலும், அதை அவர்களிடமிருந்து வாங்கி ஏழைகளுக்கு நேரடியாக அவர்களே வழங்க வேண்டும். அப்போதுதான் இது முறையாக நடைபெறும். அல்லது சிரமம் பாராமல், ஒவ்வொருவரும் தமக்குரிய ஓர் ஆட்டை வாங்கி, தம் கையால் அதை அறுத்துப் பலியிட்டு, குர்பானி வழிபாட்டை முழுமையாக நிறைவேற்ற முன்வர வேண்டும்.

தனியாக ஓர் ஆட்டையோ மாட்டையோ வாங்க இயலாதோருக்குத்தான் கூட்டுக் குர்பானி. தனியாக ஓர் ஆட்டையோ மாட்டையோ வாங்க முடியும் என்ற சூழ்நிலையில் உள்ளோர் சுயமாகவே இந்த வழிபாட்டைத் தத்தம் இல்லங்களில் நிறைவேற்ற வேண்டும்; கூட்டுக் குர்பானியில் சேரக் கூடாது.

மற்றொரு புறம், கறிக்கடை வைத்து நடத்துபவர்களும் கூட்டுக் குர்பானிக்காகப் பங்குதாரர்களைச் சேர்க்கின்றார்கள். அவர்கள் அத்தொழிலையே ஆண்டுமுழுவதும் செய்துவருவதால், வியாபார நுணுக்கத்தோடு இதில் பெருவாரியான இலாபத்தை ஈட்டிக்கொள்கின்றார்கள். பங்குதாரர்களிடம் மிகுதியான பணத்தைப் பெற்றுக்கொண்டு, விலை குறைவான மாட்டை அறுத்து, குர்பானியை முடித்துவிடுகின்றார்கள். அவர்கள் மாட்டை அறுக்கும்போது பங்குதாரர்கள் அங்கு நிற்பதோ பார்ப்பதோ கிடையாது. பெரும்பாலோர் மாட்டிறைச்சி என்பதால் குர்பானி இறைச்சியை வாங்குவதும் கிடையாது. இவையெல்லாம் அவர்களுக்கு வசதியாகப் போய்விடுகின்றன. ஆக, ஒரு வழிபாடு எப்படியெல்லாம் திசைமாறிச் செல்கிறது என்பதைக் கண்டு மனம் வெதும்பாமல் இருக்க முடியவில்லை.

மற்றொரு சாரார் கூட்டுக் குர்பானியை நாடுவதன் காரணம், அவர்களுக்குப் பலிப்பிராணிகளை அறுத்துப் பலியிடத் தேவையான இடவசதி இல்லாததே ஆகும். பெருநகரங்களில் மிகுதியானோர் தொகுப்பு வீடுகளில்  (அபார்ட்மெண்ட்) வசித்து வருகின்றனர். அவர்களிடம் போதுமான பொருளாதார வசதி இருந்தும், ஆட்டை வாங்கி அறுத்துப் பலியிடத் தேவையான இடவசதி இல்லை. அக்கம் பக்கம் வசிப்போர் பிறமதச் சகோதரர்களாக இருப்பதால் அவர்களின் நலம் நாட வேண்டியுள்ளது. இதனால் இத்தகையோர் தம் இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, இவர்கள் அனைவரும் கூட்டுக் குர்பானியை நாடுகின்றனர். ஆகவே  இவர்கள் தம் குர்பானி வழிபாட்டைச் செவ்வனே நிறைவேற்றிக்கொள்ள இடவசதி செய்து கொடுக்க வேண்டும்.

பள்ளிவாசலைச் சுற்றிக் காலி இடம் இருந்தால் அதைக் குர்பானி வழிபாட்டிற்காகப் பயன்படுத்திக்கொள்ள அந்தந்தப் பள்ளி நிர்வாகிகள் அனுமதியளிக்க வேண்டும்; அதனைத் தம் மஹல்லா மக்களுக்குப் பொது அறிவிப்புச் செய்ய வேண்டும். அல்லது வேறு காலியிடங்கள் இருந்தால் அங்கு அந்த மஹல்லா நிர்வாகமே அதற்கான ஏற்பாட்டைச் செய்து கொடுக்க வேண்டும். இதனால் முஸ்லிம்கள் பலர் குர்பானி எனும் வழிபாட்டைத் திருப்தியோடு செய்ய வாய்ப்புக் கிடைக்கும்.

ஆக நாம் அனைவரும் மாசற்ற மனதோடு, இந்தக் குர்பானி வழிபாட்டை மனதார நிறைவேற்ற உயர்ந்தோன் அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்வாய்ப்பை நல்குவானாக. நாம் அறுத்துப் பலியிடுகின்ற உயிர்ப்பிராணியை நாளை மறுமையில் சிராத்துல் முஸ்த்தக்கீம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடந்து செல்லும் வாகனமாக நமக்கு ஆக்கித் தருவானாக.

=========================================================





முனைவர் பட்டம் பெற்ற ஐந்து ஆலிம்கள்!


சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு கட்டட மண்டபத்தில் 15. 07. 2017 அன்று 159ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தரும், தமிழக பொறுப்பு ஆளுநருமான வித்யாசாகர் ராவ் தலைமையில் நடைபெற்றது. அதில் பல்கலைக்கழக இணைவேந்தரும் உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி. அன்பழகன், பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பி. துரைசாமி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பட்டங்களை வழங்கினார்.  மொத்தம் 13 ஆயிரத்து 780 பேர் பட்டம் பெறும் நிலையில் இந்த நிகழ்வில் 1,216 பேர் பட்டம் பெற்றனர். சில நூறு பேருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பட்டங்களை வழங்கிய பின், மற்ற மாணவர்கள் அனைவருக்கும் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் துரைசாமி பட்டங்களை வழங்கினார். பல்வேறு துறைகளில் முனைவர் பட்டம் பெற்ற 1,216  மாணவர்களுள் ஐவர் ஆலிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இனிய திசைகள் துணை ஆசிரியராகவும் மணலியில் உள்ள மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார் பள்ளிவாசலில் இமாமாகவும்  பணியாற்றி வருகின்ற, மொழிபெயர்ப்பாளர் மௌலவி நூ.  அப்துல் ஹாதி பாகவி, அண்ணா நகர் அருகே உள்ள சாந்தி காலனியில் அமைந்துள்ள மஸ்ஜித் நூர்  பள்ளிவாசலில் இமாமாகவும் அரும்பாக்கம் சதக்  மெட்ரிக்குலேஷன் பள்ளியில் அரபித்துறை ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்ற மௌலவி அல்ஹாஃபிழ் முஹிப்புல்லாஹ் பாகவி, வண்டலூரில் அமைந்துள்ள புகாரிய்யா அரபுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகின்ற மௌலவி அப்துஸ் ஸமது நத்வி, புதுக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகின்ற மௌலவி சையது ஃபஸ்லுல்லாஹ் பக்தியாரி உமரி நத்வி, இராயப்பேட்டையில் உள்ள தலைமை காஜி மஸ்ஜிதில் இமாமாகப் பணியாற்றுகின்ற மௌலவி அல்ஹாஃபிழ் சயீதுத்தீன் ஜமாலி ஆகியோர் அரபித்துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். ஒரே நேரத்தில் ஆலிம்கள் ஐவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளதன்மூலம் சமுதாயத்தில் கல்வியின் முக்கியத்துவம் மேலோங்கி வருவதைக் காண முடிகிறது. இவர்கள் ஐவரும் இன்றைய இளம் ஆலிம்களுக்கும் இஸ்லாமியச் சமுதாயத்திற்கும் ஒரு முன்னோடியாகத் திகழ்கின்றார்கள். 
        
     -தகவல்: முனைவர் மௌலவி நூ. அப்துல்ஹாதி பாகவி

குறிப்பு: இச்செய்தியை வெளியிட்ட மணிச்சுடர் நாளிதழுக்கும் இனிய திசைகள் மாத இதழுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.     

================================


வியாழன், 10 ஆகஸ்ட், 2017

சுனனுந் நஸாயீ (நபிமொழித் தொகுப்பு) நூல் வெளியீடு

நான் தமிழாக்கம் செய்த சுனனுந் நஸாயீ (நபிமொழித் தொகுப்பு) நூல் இன் ஷா அல்லாஹ் 12-08- 2017 அன்று மாலை கவிக்கோ மன்றத்தில் வெளியிடப்படவுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

வாய்ப்புள்ளோர் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

- முனைவர் மெளலவி நூ. அப்துல் ஹாதி பாகவி


சனி, 22 ஜூலை, 2017

இணைக்கப்பட்ட மின்கம்பிகளாக இருப்போம்!


உ.பி., உத்தரகாண்ட் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் பாக ஆட்சி அமைத்துள்ளதோடு தற்போது பாக ஆதரவு பெற்ற குடியரசுத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் முஸ்லிம்கள் ஓர் அச்சநிலையில் வாழ்வதாகச் செய்திகள் பரவி வருகின்றன; பரப்பப்படுகின்றன. ஆனால் முஸ்லிம்கள் அச்சப்படத் தேவையில்லை. பிரித்தாளும் சூழ்ச்சியால் ஆட்சியைப் பிடித்தவர்களுக்கு எதிராக அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்வான் என்பதை முஸ்லிம்களாகிய நாம் மறந்துவிட வேண்டாம்.

நம்முள் பலர் அல்லாஹ்வை உரிய முறையில் நினைவுகூராமல் மறந்துவிட்டதன் காரணமாக இது நமக்கொரு சோதனையாக இருக்கலாம். மக்கள் அநியாயம் செய்யும்போது அநீதியான ஆட்சியாளர்களால் அல்லாஹ் நம்மைச் சோதிப்பான். அதேநேரத்தில் அச்சோதனையிலிருந்து மீள்வதற்கான வழியையும் அவன் சொல்லித் தந்துள்ளான்.

முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வை மனத்தில்கொண்டு எந்நேரமும் அவனை நினைத்துக்கொண்டே இருந்தால் நம்மை எதிர்க்கவோ அச்சுறுத்தவோ யாராலும் முடியாது. நாம் அல்லாஹ்வுடன் தொடர்புகொண்டோராக இருக்கும்போது மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட மின்கம்பிகளாக மாறிவிடுகின்றோம். எனவே மின்சாரத்தில் இணைக்கப்பட்ட கம்பிகளாக உள்ள நம்மை எதிரிகள் தீண்டுவதற்கு அஞ்சுவார்கள். அத்தகைய அச்சத்தை அவர்களின் உள்ளத்தில் அல்லாஹ் போட்டுவிடுவான்.

“அவர்களுடைய பசிக்கு உணவளித்து (கொலை, களவு முதலிய கொடிய) பயத்திலிருந்து அவர்களுக்கு அபயமளித்த (கஅபா எனும்) இவ்வீட்டின் இறைவனையே அவர்கள்  வணங்கட்டும்”  (106: 3-4) என்று அல்லாஹ் கூறுகின்றான். நாம் அல்லாஹ்வுடன் தொடர்புடைய நல்லடியார்களாக இருக்கும் வரை அவன் நம்மைப் பசியிலிருந்தும் பயத்திலிருந்தும் பாதுகாத்துக்கொண்டே இருப்பான்.

எதிரிகளெல்லாம் ஒன்றுசேர்ந்து ஒரு பெரும் படையினராக நமக்குக் காட்சியளிக்கலாம். ஆனால் அவர்களின் உள்ளங்களில் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தித் தனித்தனியாகப் பிரித்துவிடும் பேராற்றலுடையவன்தான் உயர்ந்தோன் அல்லாஹ். அது குறித்துத் திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுவது நமக்கு ஆறுதலாக இருக்கிறது. “அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டிருப்பதாக நீங்கள் எண்ணுகின்றீர்கள். (அன்று!) அவர்களுடைய உள்ளங்கள் (கருத்து வேறுபாடுகளால்) சிதறிக்கிடக்கின்றன.” (59: 14) இதை  நினைவில் கொண்டு அச்சமற்று வாழ்வோம். நடப்பவை யாவும் நலமாகவே அமையும் என நம்புவோம். அல்லாஹ்வைத் தொழுது அவனிடமே உதவி தேடுவோம். பசியோ பட்டினியோ பயமோ எதுவும் நம்மை அண்டாமல் பாதுகாப்பவன் அந்த அல்லாஹ் ஒருவனே என்பதை நினைவில் நிறுத்தி நிம்மதியாக வாழ்வோம்.

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

புதன், 19 ஜூலை, 2017

பிலால் பணிக்குப் பயிற்சிப் பட்டறை தேவை



மருத்துவருக்குத் துணையாகப் பணியாற்றும் கம்மவுண்ட்டர், நர்ஸ் ஆகியோருக்குக் குறிப்பிட்ட படிப்பும் பயிற்சியும் இருப்பதைப்போல் பள்ளிவாசலில் பணியாற்றும் இமாமுக்குத் துணையாகப் பணியாற்றுகின்ற பிலாலுக்கு (முஅத்தின், மோதினார்) இஸ்லாமியச் சமுதாயத்தில் எந்தப் படிப்பும் பயிற்சியும் வழங்கப்படுவதில்லை. இதனால் யார் வேண்டுமானாலும் பிலால் ஆகலாம் என்ற நிலையே இதுநாள் வரை இருந்துவருகிறது.

“யார் வேண்டுமானாலும் பிலால் ஆகலாம்” என்ற நிலை இருப்பதால்தான் இன்று தமிழ்நாட்டில் பிலால் பணிக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. முந்தைய காலத்தில் எல்லோரும் இஸ்லாமிய மார்க்கத்தைப் படித்தனர்; எல்லாவற்றையும் தெரிந்துவைத்திருந்தனர். அதனால் ஆர்வமுள்ளோர் பிலாலாகப் பணியில் சேர்ந்துகொண்டனர். ஆனால் தற்காலத்தில் அந்தந்தப் பணிக்கு உரியதை மட்டுமே அவரவர் படிக்கின்றனர். அதனால்தான் பிலால் பணிக்குத் தமிழ்நாட்டில் பற்றாக்குறை உள்ளது.

எனவே இக்குறையை நீக்க பிலால் பணிக்கு விருப்பமுள்ளோருக்கு உரிய பயிற்சி கொடுக்கப்பட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். சான்றிதழ் உள்ளோரை மட்டுமே பணி நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு பயிற்சி வழங்கப்பட்டால் தகுதியான ஆள்களை நம் தமிழகத்திலிருந்தே உருவாக்கிக்கொள்ளலாம். இதற்கான பயிற்சியை அரபுக் கல்லூரிகளே வழங்க முன்வர வேண்டும்.

பிலால் பணிக்கு உரிய மரியாதையும் தக்க சம்பளமும் வழங்கப்பட்டால் நம் தமிழகத்திலிருந்தே அதற்குரிய ஆள்களை நாம் நியமித்துக் கொள்ளலாம். இல்லையேல் இப்பணிக்கு வடமாநிலங்களிலிருந்துதான் ஆள்களை இறக்குமதி செய்ய வேண்டும்.

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
=========================

செவ்வாய், 18 ஜூலை, 2017

இறைநம்பிக்கையை வலுப்படுத்திக்கொள்வோம்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இந்திய அளவிலும் உலக அளவிலும் முஸ்லிம்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள அச்சவுணர்வைக் கண்டு பலர் பீதியில் உறைந்துள்ளனர்; வெளியே தனியாகச் செல்ல அஞ்சுகின்றனர்.  ஆனால் இத்தகைய நிலை குறித்து முஸ்லிம்கள் யாரும் அஞ்சவோ பீதியடையவோ தேவையில்லை. இது முஸ்லிம்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள செயற்கையான சூழ்நிலைதான்.

முஸ்லிம்கள் என்ற பெயரைக் கேட்டவுடனே பிற சமுதாய மக்கள் மனங்களில் அவர்களைப் பற்றிய கசப்பான உணர்வு ஏற்பட எதிரிகள் செய்துவருகின்ற செயற்கையான சூழ்ச்சி வலை இது.  மாட்டுக்கறி என்றோ, தீவிரவாதி என்றோ எதையாவது சொல்லி அவர்களை அடித்தால் பொதுமக்கள் கண்டுகொள்ளாத மனிதாபிமானமற்ற சூழ்நிலையை உண்டாக்கி வைத்துள்ளார்கள்.  இதைக் கண்டு முஸ்லிம்கள் கலக்கமுறத் தேவையில்லை. ஷைத்தானின் சித்துவிளையாட்டுகளுள் இதுவும் ஒன்று.
இத்தகைய சூழ்ச்சி வலை பின்னப்பட்டுள்ள இத்தருணத்தில் முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொண்டு இறையச்ச உணர்வை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அசைக்க முடியாத இறைநம்பிக்கை ஒன்றுதான் எதையும் கண்டு கலக்கமடையாத மனப்பான்மையை உருவாக்கும். அது ஒன்றே இறைவனுக்கு மட்டும் அஞ்ச வேண்டிய அவசியத்தைத் தெளிவாக்கும்.  அவனுக்கு மட்டுமே அஞ்சுவோர் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை என்பதை உணர்த்தும்.

அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் தம்மோடு பயணம் செய்த சிறுவரான அனஸ் (ரளி) அவர்களைப் பார்த்து, இவ்வாறு அறிவுரை நல்கினார்கள்: 
நான் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில் அமர்ந்து) இருந்தேன். அப்போது அவர்கள், "சிறுவனே! நான் உனக்குச் சில விஷயங்களைக் கற்றுத் தருகிறேன். (அவற்றை நீ நினைவில் வைத்துக்கொள்.) நீ அல்லாஹ்(வின் உத்தர)வைப் பேணிக்காத்திடு. அவன் உன்னைப் பேணிக் காப்பான். நீ அல்லாஹ்வை (அவனுடைய கடமைகளை)ப் பேணி நடந்துகொள்.  அவனை உனக்கு முன்பாக நீ காண்பாய். நீ யாசித்தால் அல்லாஹ்விடமே யாசிப்பாயாக. உதவி கோரினால் அல்லாஹ்விடமே உதவி கோருவாயாக.
அறிந்துகொள்! உனக்கு நன்மை செய்ய ஒட்டுமொத்தச் சமுதாயமும் ஒன்றுசேர்ந்தாலும் உனக்கென அல்லாஹ் எதை எழுதிவிட்டானோ அதைத் தவிர வேறெந்த நன்மையையும் அவர்களால் உனக்குச் செய்ய இயலாது. (அவ்வாறே) உனக்கு ஏதேனும் தீங்கிழைக்க அவர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டாலும் உனக்கெதிராக அல்லாஹ் எதை எழுதிவிட்டானோ அதைத் தவிர வேறெந்தத் தீங்கும் அவர்களால் உனக்கு இழைத்திட இயலாது. (விதி எழுதிய) பேனாக்கள் உயர்த்தப்பட்டுவிட்டன. (விதி எழுதப்பெற்ற) ஏடுகள் உலர்ந்துவிட்டன'' என்று கூறினார்கள்.   (நூல்: திர்மிதீ: 2440)

 ஒரு மனிதன் தன் இறைநம்பிக்கையை வலுப்படுத்திக்கொள்ளத் தேவையான எல்லா அறிவுரைகளும் இந்த நபிமொழியில் உள்ளன. அல்லாஹ்வின் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுவதன்மூலம் அவனை நாம் நம் மனத்தில் பாதுகாத்தால் அவன் நம்மைப் பாதுகாப்பான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை இளநெஞ்சில் விதைக்கின்றார்கள். எப்போது உதவி கேட்டாலும் அல்லாஹ்விடமே உதவி கேட்க வேண்டும் என்பதையும் ஆழமாகப் பதியச் செய்கிறார்கள். இவ்வுலகமே சேர்ந்து நமக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தாலும், அல்லாஹ் விதிக்காத தீமையை அவர்கள் ஒருபோதும் நமக்குச் செய்துவிட முடியாது என்ற திடமான நம்பிக்கையை வளர்க்கின்றார்கள். எல்லாமே எழுதப்பட்டுவிட்டது. அதன்படியே நடப்பவை யாவும் நடக்கும். இனி கவலைப்பட ஒன்றும் இல்லை என்பதை உணர்த்துகிறார்கள்.

ஆகவே முஸ்லிம்களே, நாம் கவலைப்படவோ கலக்கமுறவோ ஒன்றும் இல்லை. நடப்பவை எல்லாம் நல்லவையாகவே நடக்கும் என்ற திடமான இறைநம்பிக்கையே நம்மைக் காத்துக்கொள்ளும் கேடயமாகும். கொஞ்சம் கொஞ்சமாக நம் அடையாளத்தை மாற்றிக்கொள்ள நம் மனத்தை மாற்றும் வேலைதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. நாம் நம்முடைய புற அடையாளத்தை மாற்றிக்கொள்ள முனைந்துவிட்டால் அக அடையாளமான இறைநம்பிக்கையையும் (ஈமானையும்) தளர்த்திக்கொள்ள முனைந்துவிட்டோம் என்று பொருள். எனவே எவ்வளவுதான் சோதனை வந்தாலும் புற அடையாளத்தையும் அக அடையாளத்தையும் இழந்துவிடவே கூடாது.

முந்நூற்றுப் பதின்மூன்று பேர் ஆயிரம் பேரை வெற்றிகொள்ள உதவிய உயர்ந்தோன் அல்லாஹ் நமக்கு உதவமாட்டானா? ஆயிரம் பேரை எதிர்க்கும் வீரமும் பலமும் எங்கிருந்து அவர்களுக்கு வந்தது? அவர்களுடைய இறைநம்பிக்கையின் ஆழமும் அழுத்தமும்தான் காரணம். பன்னிரண்டு ஆண்டுக்கால ஆட்சியில் பல்வேறு மன்னர்களை எதிர்த்து, வெற்றிகொண்டு இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்பும் துணிவு உமர் (ரளி) அவர்களுக்கு எவ்வாறு வந்தது? அசைக்க முடியாத இறைநம்பிக்கையின் பலம் அல்லவா?

இப்படிப் பல்வேறு இறைநம்பிக்கையாளர்களைச் சான்றாகக் காட்டிக்கொண்டே செல்லலாம். இஸ்லாமிய வரலாறு நெடுக அசைக்க முடியாத இறைநம்பிக்கையை மனத்தில் கொண்டவர்கள் மட்டுமே வெற்றிகண்டுள்ளார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? ஆகவே இவர்களுடைய சூழ்ச்சியைக் கண்டு கலங்காத மனம் கொண்டவர்களாகத் திகழ வேண்டுமானால் அது நம்முடைய அசைக்க முடியாத இறைநம்பிக்கையால் மட்டுமே முடியும். எனவே அதை வளர்த்துக்கொள்வதற்கான முயற்சியில் மட்டுமே நாம் கவனம் செலுத்த வேண்டும்.

எதிரிகளின் செயல்பாடுகளைக் கண்டு அச்சமடையத் தேவையில்லை. அது ஷைத்தானின் சூழ்ச்சி வலைகளுள் ஒன்றாகும். நம்முடைய இறைநம்பிக்கையைச் சிதைப்பதற்காக அவன் ஏவிவிடும் அடியாட்கள்தாம் அவர்கள். நம்மை இப்போது மோடி ஆளவில்லை. மோடியை ஆள்பவர்கள் யூதர்கள்.  அவர்கள்தாம் உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கின்றார்கள். அவர்களை ஆட்டிப் படைப்பவன்தான் அவர்கள் கடவுளாக வழிபடும் ஷைத்தான். ஆம், அவர்கள் ஷைத்தானைத்தான் வழிபடுகின்றார்கள். அவன்தான் அவர்களின் கடவுள். அவர்கள் ஒற்றைக் கண்ணனான தஜ்ஜாலை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றார்கள். அமெரிக்காவின் பணத்தில் பொறிக்கப்பட்டுள்ள பிரமிட் படத்தின் மேலே பாருங்கள் ஒற்றைக் கண் தெரியும். அதுதான் அவர்கள் எதிர்பார்த்து வழிபட்டுக்கொண்டுள்ள ஒற்றைக் கண்ணன் தஜ்ஜால். அந்த மனித ஷைத்தானைத்தான் அவர்கள் வழிபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

எனவே நாம் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால் அவன் நமக்கு நிச்சயம் உதவி செய்வான். நாம்  அல்லாஹ்வுக்கு எவ்வாறு உதவி செய்வது? அவனுடைய கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுவதுதான் நாம் அவனுக்குச் செய்யும் உதவியாகும். அக்கடமைகளுள் முதலாவது தொழுகையாகும். ஒவ்வொரு தடவை பாங்கு சொல்லப்படும்போதும் அதைக் காதில் கேட்காதவர்களைப்போல் நாம் அலட்சியப்படுத்துகிறோமே அதனால்தான் அல்லாஹ் இத்தகைய சோதனையை நம்மீது சாட்டியுள்ளான். நாம் அவன்மீதே நம்பிக்கை வைத்து அவனை மட்டும் வழிபட்டு வந்தால் நிச்சயமாக அவன் நம் எதிரிகளை எதிர்கொள்ளும் ஆற்றலை நமக்கு வழங்கி உதவி செய்வான் என்பது திண்ணம்.
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்: தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் நிச்சயமாக உதவுவான். நிச்சயமாக அல்லாஹ் ஆற்றல் உடையோனும் வல்லமை மிக்கோனும் ஆவான்.  பூமியில் அவர்களுக்கு நாம் வாய்ப்பை வழங்கினால் அவர்கள் தொழுகையைக் கடைப்பிடிப்பார்கள்... (22: 40-41)

அவன்மீதே நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் அவன்மீதே பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்றும் அல்லாஹ் பல இடங்களில் கூறுகின்றான்:

(இறைநம்பிக்கை கொண்டோரே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றி கொள்பவர்கள் ஒருவருமில்லை. உங்களை அவன் (கை) விட்டு விட்டாலோ அதற்குப் பின்னர் உங்களுக்கு யார்தாம் உதவி செய்ய முடியும்? ஆதலால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கையாளர்கள் நம்பிக்கை கொள்ளட்டும். (3: 160)

 அவன்மீதே நம்பிக்கை வைத்திருப்பதற்கான அடையாளம்தான் தொழுகை. அதைச் செவ்வனே நாம் நிறைவேற்றினால்தான் அவனது உதவி நமக்குக் கிடைக்கும். அவனது உதவி கிடைத்துவிட்டால் நம்மை அச்சுறுத்தவோ வெல்லவோ யாருமில்லை. ஆகவே நம்பிக்கையை அவன்மீதே வைக்க வேண்டும். சுட்டெரிக்கின்ற சூரியக் கதிர்கள் காகிதத்தை எரித்துவிடுவதில்லை. அதேநேரத்தில் அந்தக் கதிர்களை ஒரு புள்ளியில் குவிக்கின்ற குவியாடி (லென்ஸ்) அந்தக் காகிதத்தைப் பொசுக்கிவிடுகிறது. அதுபோலவே இங்கு கொஞ்சம், அங்கு கொஞ்சம், பொருளாதாரத்தில் கொஞ்சம், வியாபாரத்தில் கொஞ்சம் என நம்முடைய நம்பிக்கை பலவற்றின்மீதும் சிதறிக் கிடக்கிறது. அவற்றையெல்லாம் குவித்து அல்லாஹ் ஒருவன்மீதான நம்பிக்கையாக நம் உள்ளத்தை மாற்றிவிட்டால் அவ்வுள்ளம் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல்மிக்கதாக மாறிப்போகும். அதன்பின்னர் யாரும் நம்மை அச்சமூட்டவோ அச்சுறுத்தவோ முடியாது. மேலும் இறையச்சம் மட்டுமே நம் உள்ளம் முழுவதும் பரவியிருக்கும்போது வேறு எந்த அச்சமும் நம் உள்ளத்தில் தோன்றாது. 

எனவே அன்பான முஸ்லிம் சகோதர, சகோதரிகளே! நாம் அனைவரும் நம் நம்பிக்கையை ஒருமுகப்படுத்தி வலுப்படுத்த வேண்டும். அந்த இறைநம்பிக்கை ஒன்றுதான் நாம் வாழும் இம்மை-மறுமை வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்வதற்கான வழியாகும். அதுதான் தற்காலத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிற நமக்கெதிரான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான மாற்று மருந்தாகும். ஆகவே நம் இறைநம்பிக்கையைச் செம்மைப்படுத்திக்கொண்டு, இறையச்சத்தோடு வாழ்ந்தால் நாம் பயமோ அச்சமோ இன்றி இவ்வுலகில் வாழலாம். அத்தகைய முயற்சியை மேற்கொள்ள நாம் அனைவரும் விரைவோம்.
===============================




திங்கள், 17 ஜூலை, 2017

முனைவர் பட்டம் பெற்றபோது...

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 15 07 2017 அன்று நடைபெற்ற 159ஆவது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் துரைசாமி அவர்களிடமிருந்து நான் முனைவர் பட்டம் பெற்றபோது...

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.


ஞாயிறு, 2 ஜூலை, 2017

நோன்பு என்னை மாற்றியதா?

முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இறைவனின் உவப்பையும் திருப்தியையும் நாடி ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்றோம். சுவையான உணவிருந்தும் உண்ணாமல் மனதிற்குப் பிடித்த குளிர்பானங்கள் இருந்தும் பருகாமல்  அழகான மனைவியிருந்தும் ஊடல் கொள்ளாமல் என் மனதைக் கட்டுப்படுத்தி, இறைவன் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற சிந்தையோடு நோன்பு நோற்ற நான் இனிவரும் காலங்களிலும்  என் மனதைக் கட்டுப்படுத்துவேனா? என்று நம்முள் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

நோன்பு என்பது ஒவ்வொரு மனிதனின் மனதையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளப் பழக்கப்படுத்துகின்ற பயிற்சிப் பட்டறை என்று சொல்கின்ற நாம் அந்தப் பயிற்சியில் முழுமையாக வெற்றிபெற்றோமா?
நோன்பு நோற்ற நிலையில் பொய், புறம் உள்ளிட்ட தீய பேச்சுகளைப் பேசாமல் நாவைக் கட்டுப்படுத்திய நான் இனிவரும் காலங்களிலும் அவ்வாறு கட்டுப்படுத்துவேனா?

அளவை நிறுவையில் குறைவு செய்யாமல் நேர்மையாக வியாபாரம் செய்த நான் இனி எப்போதும் அவ்வாறே செய்வேனா? அதையே என் இயல்பான பழக்கமாக மாற்றிக்கொள்வேனா? என்றெல்லாம்  நம்முள் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

ஒரு மனிதனின் கெட்ட பழக்கங்களெல்லாம் மாறுதலுக்கு உள்ளாகி அவன் நல்ல பழக்கங்களைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டால் உண்மையில் நோன்பு அவனுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கருதலாம். ஏற்கெனவே தவறான வழியில் வியாபாரம் செய்தவன் தன்னைத் திருத்திக்கொண்டு நேர்மையாகப் பொருளீட்டத் தொடங்கிவிட்டால் இந்த நோன்பு அவனில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது என்று சொல்லலாம். புறம் பேசுவதையும் பொய் பேசுவதையும் அறவே விட்டொழித்து வாய்மையை மட்டும் பேசத் தொடங்கிவிட்டால் நோன்பு கொடுத்த பயிற்சியில் தேர்ச்சி பெற்றுவிட்டான் என்று கூறலாம்.

இப்படியான எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லையானால் நாம் நோன்பைச் சரியாக நோற்கவில்லை என்றும், நம்முடைய நோன்புக்கு அல்லாஹ்விடமிருந்து முழுமையான நற்கூலி கிடைக்கவில்லை என்றும் நாம் தீர்மானித்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஒரு மாதம் முழுவதும் இறையச்சத்தோடு இருந்த நாம், அவன் தடுத்துள்ளவற்றைவிட்டுத் தவிர்ந்துகொள்கின்ற நாம், அந்த ஒரு மாதம் முடிந்தவுடன் மீண்டும் நம் பழைய நிலைக்கே திரும்பிவிடுவது எவ்வகையில் நியாயம்? அந்த ஒரு மாதம் மட்டும் அல்லாஹ் நம்மை உற்றுப் பார்ப்பதாகவும் பின்னர் நம்மைப் பார்க்காமல் கண்ணை மூடிக் கொள்வதாகவும் எண்ணமா? எந்த இறைவனுக்காக நாம் ஒரு மாதம் நோன்பு நோற்றோமோ அதே இறைவன்தான் எஞ்சிய காலங்களிலும் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை ஏன் மறந்தோம்? அந்த இறைவன் மன்னிப்பவனாக இருக்கின்ற அதேநேரத்தில் தண்டிப்பவனாகவும் இருக்கின்றான் என்பதை நாம் மறக்கலாமா?

ஒரு மாதம் முழுவதும் ஐவேளைத் தொழுகையைத் தவறவிடாமல் தொழுததோடு இரவுத்தொழுகை, உபரித்தொழுகையிலும் ஈடுபட்ட நாம் இதோ ஷவ்வால் பிறந்ததும் நம் கால்கள் மஸ்ஜிதை நோக்கிச் செல்ல மறுக்கின்றனவே ஏன்? ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகை கட்டாயக் கடமையல்லவா? நம்மைப் படைத்த இறைவனை ஒவ்வொரு நாளும் ஐவேளை தொழுக மறக்கலாமா? இதோ லுஹ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்லியாயிற்று. வாருங்கள், மஸ்ஜிதை நோக்கிச் செல்வோம்!
========================