சனி, 25 மார்ச், 2017

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்)

தாருல் உலூம் அஷ்ரபிய்யா அரபுக்கல்லூரி வெளியிட்ட பல்சுவை இதழில் எனது கட்டுரை. இதோ உங்கள் பார்வைக்கு ...

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்)

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
துணை ஆசிரியர்: இனிய திசைகள் மாதஇதழ்
இமாம், மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார், மணலி, சென்னை-68

ஜூன் திங்கள் ஐந்தாம் நாள் (1896) கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயீல்  (ரஹ்) திருநெல்வேலியில் உள்ள பேட்டையில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் மியாகான் இராவுத்தர். திருவாங்கூர் அரசக் குடும்பத்தினருக்குத் துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முஸ்லிம் சமயத் தலைவர் (மவ்லவி) ஆகவும் இருந்தார். காயிதே மில்லத் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். அவரின் தாயாரே அரபு மொழியையும், திருக்குர்ஆனையும்  அவருக்குக் கற்றுக்கொடுத்தார். இவர் மனைவியின் பெயர் ஜமால் கமீதாபீவி. இவரின் ஒரே மகன் ஜமால் முகம்மது மியாகான் ஆவார். 

ஒரு தமிழனாக, ஒரு முஸ்லிமாக, ஓர் இந்தியனாக, ஒரு தலைவனாக, மனிதநேயம் உள்ள மாந்தராக எப்படி வாழ வேண்டும் என்ற இலக்கணங்களைத் தமக்குத் தாமே வகுத்துக்கொண்டு, அந்த இலக்கணங்களை விட்டு விலகாத இலக்கியமாகத் தாமே வாழ்ந்துகாட்டிய சிறப்பிற்குரியவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள்.

பிரிட்டிஷ் இந்தியா

தமது பி.ஏ. பொதுத்தேர்வை எழுதாமல் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் பங்கு கொண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினார். இந்தியாவில் முஸ்லிம்களுக்காக 1906-இல் நவாப் சலீம் முல்லாகான் அகில இந்திய முஸ்லிம் லீக் என்ற கட்சியைத் தொடங்கினார். அவருக்குப் பின்னர் முகமது அலீ ஜின்னா, அதனை நடத்தி வந்தார், ஜின்னாவுக்கும் இந்தியப் பிரிவினைக்கும் முஸ்லிம் லீகின் பெரும் தலைவர்களுள் ஒன்றாக இருந்த இவர், ஆற்றிய உதவி அளப்பரிது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

சுதந்திர இந்தியா

1947இல் பாகிஸ்தான் உருவானபோது அங்கு புலம் பெயராமல் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இந்தியாவில் தங்கிவிட்டதால், அவர்களுக்காகக் கட்சிப் பெயரில் இருந்த அகிலஎன்பதை நீக்கிவிட்டு 1949இல் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்என்று மாற்றினார் காயிதே மில்லத். இதன் முதல் மாநாடு சென்னையில் உள்ள இராஜாஜி மண்டபத்தில் நடந்தது. காயிதே மில்லத் நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சித் தலைவராக இருந்தார்.

வகித்த பொறுப்புகள்

தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக, 1948ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராகபழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக, டெல்லி மேல் சபை உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக இப்படிப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

இந்தியர்களைக் காத்த காவலர்

1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாள்களில், பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் அகில இந்திய முஸ்லிம் லீக் கவுன்சிலின் கடைசிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுத்த முடிவுகளின்படி கட்சி இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு ஒரு பொறுப்பாளரும், இந்தியாவுக்கு ஒரு பொறுப்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இரண்டு பொறுப்பாளர்களும் அவரவர் நாட்டில் மூன்று மாதங்களுக்குள்ளாகக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்மானித்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. பாகிஸ்தான் பொறுப்பாளராக லியாகத் அலீகான் அவர்களும், இந்தியாவுக்கான பொறுப்பாளராக  கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இந்தியாவில் உள்ள நான்கு கோடி முஸ்லிம்களைப் பாதுகாக்கின்ற பெரும் பொறுப்பு ஒரு தமிழரின் தோள்களில், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் தோள்களில் அன்று கராச்சியில் சுமத்தப்பட்டது. காயிதே மில்லத் இந்திய முஸ்லிம்களைக் காப்பாற்றும் பணியை, அன்று, கராச்சியிலேயே தொடங்கிவிட்டார்.
ஆம், கூட்டம் முடிந்ததும் பாகிஸ்தான் பிரதமர் அனைவருக்கும் ஒரு விருந்தளித்தார். விருந்தின் முடிவில் லியாகத் அலீகான் காயிதே மில்லத்திடம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும், என்ன உதவி என்றாலும் நாங்கள் செய்யத் தயார் என்று கூறினார். அப்போது தெள்ளத் தெளிவாக, ஆணித்தரமாக காயிதே மில்லத் சொன்னார்:

நீங்கள் ஒரு நாட்டினர். நாங்கள் வேறு நாட்டினர். எங்கள் நாட்டு முஸ்லிம்களின் நன்மை தீமைகளை நாங்களே பார்த்துக் கொள்வோம். அதில் நீங்கள் தலையிட வேண்டியதில்லை. எங்கள் நாட்டு முஸ்லிம்களுக்கு நீங்கள் ஏதேனும் நன்மை செய்ய விரும்பினால், உங்கள் நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்கு (இந்து, சீக்கியர், கிறிஸ்தவர்) ஒரு துயரமும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுபோதும்!எவ்வளவு ஆழமும், அர்த்தமும் பொதிந்த வேண்டுகோள் அது! இந்தியா திரும்பிய காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைக் கூட்டினார். அதில்தான் அவர் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தாய்மொழிப்பற்று மிக்கவர்

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களுள் ஒருவராக 1948ஆம் ஆண்டு அவர் நியமிக்கப்பட்டார். 14.9.1949 அன்று அரசியல் நிர்ணய சபை கூடி இந்தியாவின் தேசிய மொழி பற்றி விவாதித்தபோது இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கும் தகுதி தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு என ஆணித்தரமாக எடுத்துரைத்தார். வரலாற்றின் பொன்னேட்டில் அன்று அவர் பொறித்துச் சென்ற வைர வரிகள் இவை:

ஒரு மொழி இந்திய மொழியாக மட்டும் இருந்தால் போதாது. அம்மொழி இந்நாட்டின் பழமையான மொழியாகவும் இருக்க வேண்டும். அத்தகைய மொழியையே இந்நாட்டின் தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்து இங்கே முன்வைக்கப்பட்டது.

அக்கருத்தை ஏற்று அரசியல் நிர்ணய சபை தேசிய மொழி பற்றிய முடிவை எடுக்குமானால், ஓர் உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்பக் காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதைபொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது எனது தாய்மொழி என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன். அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எளிமை

காயிதே மில்லத் (ரஹ்) அவர்கள் இறைவனுக்கு அஞ்சி, ஓர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். அவர் அரசியலில் இருந்தும் பிற அரசியல்வாதிகளுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார். அதற்குச் சான்றாக அவரது வாழ்க்கையைப் புரட்டிப் பார்ப்போம்.  
குரோம்பேட்டையில் ஒரு சிறிய வீடு. வந்தவர்களை அமரவைக்கப் போதுமான இடவசதி இருக்காது. குரோம்பேட்டையில் இருந்து மின்சாரத் தொடரியில் புறப்பட்டு, கடற்கரை இரயில் நிலையத்தில் இறங்கி, ரிக்ஷாவில் ஏறி மண்ணடி கட்சி அலுவலகம் செல்வார். அவருக்கு ஒரு மகிழுந்தை (கார்) வாங்கித் தரப் பலரும் முயன்றனர். அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு முறை மலேசியா சென்று ஓர் அன்பர் வீட்டில் தங்கியிருந்தபோது, அவர் காயிதே மில்லத்திடம் ஓர் உதவி கேட்டார். ஐயா என்னிடம் வெளிநாட்டு மகிழுந்து உள்ளது. அதைத் தங்கள் வீட்டில் நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். நான் சென்னை வரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும் என்பதால் இந்த உதவியைக் கோருகிறேன்என்று கேட்டார். அதற்கு என் வீட்டில் மகிழுந்தை நிறுத்துவதற்கான கொட்டகை இல்லையே என்று கூறினார் காயிதே மில்லத். மகிழுந்தை நிறுத்துவதற்கான கொட்டகையை நான் கட்டித் தருகிறேன்என்று தெரிவித்தார் மலேசிய அன்பர். நேரடியாக மகிழுந்தைப் பரிசளித்தால் காயிதே மில்லத் வாங்கிக்கொள்ள மறுத்துவிடுவார் என்பதற்காகவே அவர் சுற்றி வளைத்துப் பேசுகிறார் என்பதைப் புரிந்துகொண்ட காயிதே மில்லத் கண்டிப்புடன் அவரது வேண்டுகோளை நிராகரித்து விட்டார்.

கேரளாவில் ஒருமுறை அங்குள்ள கட்சிக்காரர்கள் ஒரு மகிழுந்தை வாங்கி, சாவியைக் காயிதே மில்லத் அவர்களின் கையிலேயே கொடுத்து விட்டார்கள். ஆனால் காயிதே மில்லத் அங்குள்ள இஸ்லாமியக் கல்லூரி ஒன்றின் பயன்பாட்டிற்கு அந்த மகிழுந்தை அங்கேயே கொடுத்துவிட்டார்.

இத்தகைய எளிமையான வாழ்க்கையை மேற்கொண்ட காயிதே மில்லத் அவர்களுக்குக் கிடைத்த மக்கள் பரிசு என்ன தெரியுமா? இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் பங்கேற்ற காயிதே மில்லத் அவர்கள், ஓர் உலகச் சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். 1962, 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் கேரள மாநிலம் மஞ்சேரி தொகுதியில் நின்று தொடர்ந்து மூன்று முறை வென்று காட்டினார். தேர்தலின்போது ஒருமுறை கூட மஞ்சேரி தொகுதிக்குத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் செல்லவே இல்லை.

இறையச்சம்

ஒருமுறை கட்சி அலுவலகத்துக்கு வந்த காயிதே மில்லத் அவர்கள் அங்கிருந்த அலுவலகப் பொறுப்பாளரிடம் ஓர் உறையைக் கொடுத்து பையில் இருந்து இரண்டு அணாவையும் கொடுத்து உரிய தபால் தலைகளை ஒட்டி அஞ்சலில் சேர்த்து விடுமாறு கூறி இருக்கிறார். உடனே அலுவலகப் பொறுப்பாளர் இதனை அலுவலகச் செலவிலேயே அனுப்பலாமே எனக் கேட்டிருக்கிறார். அதற்குக் காயிதே மில்லத் அவர்கள், “இது என் சகோதரருக்கு எழுதுகின்ற கடிதம். எனவே அலுவலகப் பணத்தை இதற்குச் செலவழிக்கக் கூடாதுஎன்று சொல்லியிருக்கிறார்.  அலுவலகப் பொறுப்பாளர் உடனே, “தலைவரின் சகோதரரும் கட்சிப் பொறுப்பில் இருப்பவர்தாமே, எனவே கட்சிப் பணத்தைச் செலவு செய்வதில் என்ன தவறுஎனக் கேட்டிருக்கிறார். உடனே காயிதே மில்லத் அவர்கள், “இந்தக் கடிதத்தில் நான் கட்சி விஷயங்களை எழுதவில்லை. குடும்ப விஷயங்களை எழுதி இருக்கிறேன். எனவே கட்சிப் பணத்தை இதற்குச் செலவழிக்கக் கூடாது. நான் கொடுத்த இரண்டு அணாவில் அஞ்சல் தலைகளை வாங்கி, ஒட்டி அனுப்பி விடுங்கள்எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார்.

இதைப் படிக்கும்போது எனக்கு இரண்டாம் உமர் எனும் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை நெஞ்சில் நிழலாடுகிறது. அவர்கள் இரண்டு விளக்குகள் வைத்திருந்தார்கள்.  அலுவலகப் பணியில் ஈடுபடும்போது அலுவலகப் பணத்தில் வாங்கிய விளக்கைப் பற்றவைத்துக் கொள்வார்கள்.  பின்னர் தம்முடைய சொந்தப் பணியில் ஈடுபடும்போது தம் சொந்தப் பணத்தில் வாங்கிய விளக்கைப் பற்றவைத்துக் கொள்வார்கள். இது அவர்களின் இறையச்சத்துடன்கூடிய வாழ்க்கைக்குத் தக்க சான்றாக உள்ளது. இதுபோலவே  காயிதே மில்லத் அவர்களின் வாழ்வும் அமைந்திருந்தது என நினைக்கையில் உள்ளம் நெகிழ்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் வந்த நான்கு கலீஃபாக்கள் வாழ்ந்து காட்டிய நேர்மையான எளிமையான வாழ்க்கையைத் தாமும் வாழ முயன்று வெற்றி கண்டவர் காயிதே மில்லத் அவர்கள்.

மறைவு

காயிதே மில்லத்முஹம்மது இஸ்மாயில் ஸாகிபுக்கு 1972 மார்ச் 25 ஆம் தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குடல் புண் நோய்க்காக அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. 1972, ஏப்ரல் 5 நள்ளிரவு 1.15 மணிக்கு காயிதே மில்லத் இஸ்மாயில் ஸாகிப் (ரஹ்) மரணமடைந்தார். அவரது உடல் அன்று காலை பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கு வசதியாக இராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரிக்குக் கொண்டு வரப்பட்டது. திராவிடக் கழகத் தலைவர் ஈ.வெ.ரா.பெரியார் உட்படப் பல அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் புதுக்கல்லூரியில் உள்ள மஸ்ஜிதுக்குக் காயிதே மில்லத்தின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு ஜனாஸாத் தொழுகை நடைபெற்றது. பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் போனவர்கள் எண்ணிக்கை இலட்சத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. திருவல்லிக்கேணியில் உள்ள வாலாஜா மஸ்ஜிதில் காயிதே மில்லத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நினைவுச் சின்னங்கள்

காயிதே மில்லத்தை நினைவுகூருமுகமாக, அவரது மறைவுக்குப்பின் தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு காயிதே மில்லத் நாகப்பட்டினம் மாவட்டம்என்று பெயர் சூட்டியது. பின்னர் 1996இல் அரசு பேருந்துக் கழகங்கள், மாவட்டங்களிலிருந்து தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட பின்னர் அதன் பெயர் நாகப்பட்டினம் மாவட்டம் என்று மாற்றப்பட்டு விட்டது. 2003ஆம் ஆண்டு அவர் நினைவாக தமிழக அரசு ஒரு மணிமண்டபத்தைக் கட்டியுள்ளது. காயிதே மில்லத்தின் பெயர் தற்போது தமிழகத்தில் பல கல்வி நிறுவனங்களுக்குச் சூட்டப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள காயிதே மில்லத் அரசினர் பெண்கள் கல்லூரி, சென்னை-மேடவாக்கத்தில் அமைந்துள்ள காயிதே மில்லத் கலைக் கல்லூரி ஆகியவை அவற்றுள் சில. காயிதே மில்லத் நினைவாக சென்னையில் காயிதே மில்லத் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, காயிதே மில்லத் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் காயிதே மில்லத்தை நினைவூட்டும் நினைவுச் சின்னங்களாகத் திகழ்கின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையைப் பின்பற்றி, மிக எளிமையாக வாழ்ந்து காட்டிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் போன்ற தலைசிறந்த, இறையச்சமுடைய இன்னொரு தலைவர் இச்சமுதாயத்திற்குக் கிடைப்பது அரிதிலும் அரிதாகும். அவர் சென்ற அரசியல் பாதையில் இன்றைய தலைவர்கள் செல்ல நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
=============








ஞாயிறு, 19 மார்ச், 2017

யார் நல்லவர்?


-முனைவர் மௌலவி நூ அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

உலகத்தில் நல்லவரைக் காண்பதே அரிதாக உள்ளது என்று ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டிருக்கின்றார். ஒவ்வொருவரும்,  "நான் நல்லவனா?' என்று கேட்டுக்கொண்டு, தம்மைச் சீர்திருத்திக்கொண்டால் எல்லோரும் நல்லவர்களாக மாறிவிடுவார்கள். ஒவ்வொருவரும் பிறந்தபோது நல்லவராகவே பிறந்தார். அவரவர் பெற்றோரின் வளர்ப்பு, சூழ்நிலை, நட்பு-இவையே ஒருவர் தொடர்ந்து நல்லவராக நீடிப்பதற்கும் தீயவராக மாறுவதற்கும் அடிப்படைக் காரணம் ஆகும்.

ஒவ்வொருவரும் நல்லவரே. தீயவராக இருப்பது தற்காலிக நிகழ்வுதான். உலகிலுள்ள எல்லோருமே நல்லவராகத் திகழ வாய்ப்புண்டு. ஆனால் உலகிலுள்ள எல்லோருமே தீயவராக மாற வாய்ப்பில்லை. ஏனென்றால் மனிதன் இயல்பிலேயே நல்லவனாகத்தான் படைக்கப்பட்டுள்ளான். தீயவனாக மாறுவது தற்காலிகமானதுதான். ஆகவே ஒவ்வொருவரும் நல்லவராக மாற நூறு சதவிகித வாய்ப்புண்டு. ஆனால் அதற்கு அவர் தம்மை முழுமையாக மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும். அவ்வளவுதான்.

ஒருவன் நல்லவனாகவும் தீயவனாகவும் மாற பெற்றோரின் வளர்ப்பு முக்கியப் பங்காற்றுகிறது.  பெற்றோர் தம் பிள்ளைகளை வளர்க்கின்றபோது நல்ல பண்புகள், நல்ல பழக்க வழக்கங்கள், நீதிபோதனைகள், அறநெறிகள் முதலானவற்றைக் கற்பிக்க வேண்டும். பாடுபட்டு வளர்க்கின்ற பெற்றோரின் பிள்ளைகள் நல்லவர்களாகவே நீடித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய நல்ல பிள்ளைகள்தாம் இச்சமுதாயத்திற்குத் தேவை.
பெற்றோர் தம் பிள்ளைகளுக்குத் தவறான பழக்க வழக்கங்களைச் சொல்லிக் கொடுத்தால் அல்லது பெற்றோரே கெட்டவர்களாக இருந்தால் அவர்களின் கெட்ட பழக்கம் அவர்கள்தம் பிள்ளைகளிடமும் ஒட்டிக்கொள்ளும். அதன்பின் பொய்பேசுவதும், வாக்கு மாற்றம் செய்வதும், பிறரை ஏமாற்றுவதும், அநியாயம் செய்வதும் அவர்களின் பழக்கமாக மாறிவிடும். அவர்கள் தீயவர்கள் எனும் பட்டியலில் இடம்பிடித்துவிடுவார்கள். 

இரண்டாவது ஒருவன் நல்லவனாக நீடிக்கவும் தீயவனாக மாறிப்போகவும் சூழ்நிலை முக்கியப் பங்காற்றுகிறது. "மனிதன் ஒரு சூழ்நிலைக் கைதி'' என்று கூறுவார்கள். என்னதான் பெற்றோர் நல்லவர்களாக இருந்து நல்ல நல்ல பழக்கங்களை ஊட்டி வளர்த்தாலும் அவனைச் சுற்றியுள்ள சூழ்நிலை அவனைக் கெட்டவனாக மாற்றிவிடுகிறது. ஒருவன் இலஞ்சம் வாங்குவதும், பொய் சொல்வதும், தீய பழக்கங்களுக்கு அடிமையாவதையும் சூழ்நிலைதான் தீர்மானிக்கிறது. சூழ்நிலைதான்  ஒருவனைக் கொலை செய்யத் தூண்டுகிறது. சூழ்நிலைதான் ஒருவனை வன்புணர்வுக்குத் தூண்டுகிறது. எனவே ஒருவன் தன் சூழ்நிலையை நல்லதாக ஆக்கிக்கொள்ள முனைய வேண்டும்.  தவறு செய்யத் தூண்டும் சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ளாமல் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.   அது குறித்து நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள் ஏராளமாக உள்ளன.

இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறியதாவது: "ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்தப் பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இல்லாமல் பயணம் செய்ய வேண்டாம்'' என்று  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 3006)

ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனிமையாய் இருக்கும்போது தவறு செய்யத் தூண்டும் சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்கிறான். ஒரு பெண் தனிமையில் பயணம் செய்யும்போது தவறு செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்கிறாள் அல்லது பிறருக்கு அத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுக்கிறாள்.
சூழ்நிலைதான் ஓர் ஆணையோ ஒரு பெண்ணையோ தவறு செய்யத் தூண்டுகிறது. எனவே அத்தகைய சூழ்நிலையைத் தவிர்த்துக்கொள்ள நம்மால் இயன்ற முயற்சிகளைச் செய்ய வேண்டும்.      அதைத்தான் நபி (ஸல்) அவர்கள் முன்னெச்சரிக்கை செய்கின்றார்கள்.

மூன்றாவது ஒரு மனிதனின் நட்பு அவனை நல்லவனாகவும் தீயவனாகவும் மாற்றியமைக்கும். ஒரு மனிதனின் நல்ல நட்பு அவனை நல்லவனாகவும் தீய நட்பு அவனைத் தீயவனாகவும் மாற்றிவிடும். எனவே நட்பைத் தேர்வு செய்யும்போது நல்ல நட்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நாமே தவறு செய்தாலும் தட்டிக் கேட்கின்ற, அதைத் தடுத்து நிறுத்துகின்ற நட்பாக இருந்தால் நாம் நல்லவனாக நீடித்திருக்க உதவும். இல்லையேல் நாம் தீயவனாக மாறிவிடுவோம். இது குறித்த வழிகாட்டுதலும் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளில் உண்டு.

"நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம்; அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக்கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ உமது ஆடையையோ எரித்துவிடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக்கொள்வீர்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 2101)

நண்பனின் குணம் ஒருவனுக்குப் பிரதிபலிப்பை ஏற்படுத்தும் என்பதை நயமாகக் கூறியுள்ளார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். எனவே நண்பன் நல்லவனாக இருந்தால் அவனோடு சேர்பவனும் நல்லவனாக நீடிப்பான். நண்பன் கெட்டவனாக இருந்தால் அவனோடு சேர்பவனும் கெட்டவனாக மாறுவான். இது இயல்பு. நண்பனிடம் பல்வேறு கெட்ட பழக்கங்கள் இருந்தால் அவற்றுள் சிலவற்றையாவது அவனோடு சேர்பவன் கடைப்பிடிக்கத் தொடங்கிவிடுவான். இதுதான் நட்பின்மூலம் ஏற்படும் மாற்றம். எனவே நாம் சேரும் நண்பர்கள் நல்லவர்களாக இருந்தால்தான் நாம் நல்லவர்களாக நீடித்திருக்க முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால்தான் "உன் நண்பனைப் பற்றிச் சொல். நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்'' என்று தெரிவித்தார் ஓர் அறிஞர்.

இதனால்தான் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: "இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள்.'' (9: 119) உண்மையாளர்களுடன் தொடர்புவைத்துக்கொண்டால் அவர்களின் பழக்கம் நமக்கு வரும். கெட்டவர்களோடு தொடர்புவைத்துக்கொண்டால் கெட்ட பழக்கம் நம்மைத் தொற்றிக்கொள்ளும். இதுதான் நட்பின் இயல்பு. அதேநேரத்தில் நல்லவன் கெட்டவனாக மாறலாம்; கெட்டவன் நல்லவனாக மாறலாம்; நண்பன் எதிரியாக மாறலாம்; எதிரி நண்பனாக மாறலாம். எதுவும் நிரந்தரமல்ல. ஏனென்றால் நல்லவனைக் கெட்டவனாகவும் கெட்டவனை நல்லவனாகவும் மாற்றும் ஆற்றல் சூழ்நிலைக்கு உண்டு என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உணர்த்துகின்றார்கள்.

"உன் நண்பனையும் ஓர் அளவோடு நேசி. ஒரு நாள் அவனும் உன் பகைவனாகலாம். உன் பகைவனையும் ஓர் அளவோடு பகைத்துக்கொள். அவனும் ஒரு நாள் உன் நண்பனாகலாம்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 1920)

நாம் நல்லவர்களாக நீடித்திருக்க வேண்டுமானால் நல்லவர்களோடு சேர்ந்துகொள்ள வேண்டும்; நல்லவர்களோடு பழக வேண்டும்; நல்லவர்களை அடிக்கடிச் சந்திக்க வேண்டும்; அவர்களோடு கலந்துரையாட வேண்டும்; அவர்களோடு சேர்ந்தே இருக்க வேண்டும். இது குறித்து மூதுரை எனும் நூலில் அவ்வை மூதாட்டி கூறியுள்ள பாடலைக் காணலாம்.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே;
நலம்மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.

ஆக, நல்லவர்களைக் காண்பதும் நல்லவர்களின் அறிவுரையைக் கேட்பதும் அவர்கள் கூறிய அறிவுரைகளைப் பிறருக்கு எடுத்துக் கூறுவதும் அவரோடு சேர்ந்து இருப்பதும் நாம் நல்லவர்களாக இருக்கத் தேவையான வழிமுறைகள் ஆகும்.
அதேநேரத்தில்  ஒருவன் தீயவர்களைக் காண்பதும், தீயவர்களின் சொல் கேட்டு அதன்படி நடப்பதும் அவர்கள் கூறுவதைப் பிறருக்குச் சொல்வதும் அவர்களோடு சேர்ந்து இருப்பதும் தீயவனாக மாறுவதற்கான அடிப்படைக் காரணங்கள் ஆகும்.

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது-எனும் மூதுரைப் பாடல் தெளிவாக விளக்குகிறது.

பிறரைப் பார்த்து, இவன் நல்லவனா, கெட்டவனா என்று சிந்திப்பதைவிட, நான் நல்லவனா என்று கேட்டு நம்மைச் சீர்திருத்திக்கொண்டால் நம்மைச் சுற்றியுள்ளோரும் நல்லவர்களாக நமக்குத் தென்படுவார்கள். நாம் கெட்டவர்களாக இருந்துகொண்டு நம்மைச் சுற்றி நல்லவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்தால் அது ஒருபோதும் நடக்காது. ஏனென்றால் நல்லவர்களைச் சுற்றி நல்லவர்கள் இருப்பதும் தீயவர்களைச் சுற்றித் தீயவர்கள் இருப்பதும் இயல்பு. நாம் நல்லவர்களாக இருந்து, நம்மைச் சுற்றிக் கெட்டவர்களாக இருந்தால்  நாம்  நல்லவர்களை நாடிச் செல்ல வேண்டும்.

கெட்டவனாக இருத்தல் என்பது தற்காலிகமானதுதான் என்று சொன்னேன். ஆம். அதனால்தான்  பாவம் செய்யும் இயல்பிலேயே படைக்கப்பட்டுள்ள மனிதன் பாவங்களைச் செய்துவிட்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகின்றபோது அவனை மன்னித்துத் தூய்மைப்படுத்தி விடுகின்றான்.
"ஆதமுடைய பிள்ளைகள் யாவரும் பாவம் செய்யக்கூடியவர்தாம். பாவம் செய்வோருள் சிறந்தோர் (அப்பாவத்திலிருந்து) பாவமீட்சி பெறுபவர்களே ஆவர்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா: 4241)

பாவமீட்சி பெற்றுத் தூய்மையான நிலையில் நல்லவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற நமக்கு ஒரு கவலை ஏற்படுகிறது. நாம் வாழ்ந்து முடித்தபின் நம்மைக் குறித்து மக்கள் என்ன கூறுவார்களோ என்ற கவலைதான் அது. ஆனால் நாம் நல்லவர்களாக வாழ்ந்திருந்தாலும் கெட்டவர்களாக வாழ்ந்திருந்தாலும் இச்சமுதாயமே நமக்குச் சாட்சி சொல்லும்.
நபி (ஸல்) அவர்கள் இருந்த இடத்தின் வழியாகப் பிரேதம் (ஜனாஸா) ஒன்று கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அதைக் குறித்து நல்லவிதமாகப் (புகழ்ந்து) பேசினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், "உறுதியாகி விட்டது'' என்று கூறினார்கள். பிறகு, மற்றொரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அது குறித்து (இகழ்ந்து) கெட்டவிதமாகப் பேசினார்கள். நபி (ஸல்) அவர்கள், "உறுதியாகி விட்டது'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கüடம், "அல்லாஹ்வின் தூதரே! அதற்கும் "உறுதியாகி விட்டது' என்று கூறினீர்கள்; இதற்கும் "உறுதியாகிவிட்டது' என்று கூறினீர்களே (இரண்டிற்குமே இவ்வாறு கூறக் காரணமென்ன?)'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "இது சமுதாயத்தின் சாட்சியமாகும். இறைநம்பிக்கை கொண்டோர் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவர்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 2642)

எனவே நாம் இறந்தபிறகு நம்மைக் குறித்து மக்கள் நல்லவிதமாகப் பேசவேண்டுமென்றால்  வாழுகின்றபோது நல்லவர்களாக, நான்கு பேருக்குப் பயனுள்ளவர்களாக வாழ வேண்டும். அதுதான் நாம் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தமாகும்.
=========================




புதன், 1 மார்ச், 2017

இனிய திசைகள் பிப்ரவரி 2017



​பிப். '2017 இதழைப் படிக்க அட்டைப் படத்தின்மீது “CLICK" செய்க....
 தங்கள் வசதிக்காக PDF இணைப்பும் உள்ளது. 
அன்புகூர்ந்து இனிய திசைகளைப்
படித்தும் தங்கள் உற்றார், உறவினர்,
நண்பர்கள் குழாத்திற்கு அனுப்பிப் பரப்பியும்
தங்களது மேலான சிந்தனைகளைத்
தெரிவித்தும் உதவுக....
நன்றி,
வஸ்ஸலாம்,

Inline image 1

-- 

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

அமைதியைப் பரப்புவோம்!


முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

எங்கு நோக்கினும் வேகம், பரபரப்பு, அடக்குமுறை, வன்மம், அநியாயம் முதலி யவையே மலிந்து காணப்படுகின்றன. பொறுமை எனும் நற்குணம் பூமிக்குள் புதைந்துபோய்விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. மனிதனின் உயர்ந்த குணங்களுள் மிக முக்கியமானது பொறுமை. அதுதான் இன்று காணாமல் போய்விட்டது. யாரிடமும் அதைக் காணமுடியவில்லை. பொறுமை எனும் நற்குணத்தால் மட்டுமே புவியில் அமைதி நிலவும்.

நபி (ஸல்) அவர்களின் தொடக்கக் காலம் வரை, ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வதும் உயிரை மாய்த்துக் கொள்வதுமே அரபியர்களின் வழக்கமாக இருந்தது. அதை மாற்றி ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக்கொள்ளும் மக்களாக மாற்றிய பெருமை நபிகள் நாயகத்தையே சாரும். ஒருவர் மற்றொருவரை எதிர்கொள்ளும்போது "அஸ்ஸலாமு அலைக்கும்' எனக் கூறுவதும் அதற்குப் பதிலளிக்குமுகமாக எதிராளி "வ அலைக்கும் ஸலாம்' என்று கூறுவதும் இஸ்லாமிய மார்க்கம் கற்றுத் தந்த உன்னதமான அமைதிப் புரட்சி ஆகும். மக்கள் மத்தியில் அமைதி ஏற்பட அது கற்றுக்கொடுத்த தாரக மந்திரமாகும். உலகத்தின் எந்த மூலையில் உள்ள முஸ்லி மாக இருந்தாலும் அவர் எதிர்கொள்கின்ற முஸ்லிமைப் பார்த்தவுடன் கூறும் வாக்கியம் "அஸ்ஸலாமு அலைக்கும்' என்பதே. 

அதாவது முற்காலத்தில் ஒருவர் மற்றொருவரை எதிர்கொள்ளும்போது இவன் நம்மை அடித்துவிடுவானோ, கொன்றுவிடுவானோ என்ற அச்சம் ஒவ்வொருவரின் மனத்திலும் இருந்து வந்தது. அதை மாற்றுமுகமாக, "உன்மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக' என்று கூறவைத்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அதாவது "என்னால் உனக்கு எந்தத் தொல்லையும் தீங்கும் இல்லை' என்று ஒருவர் கூற, எதிரே வருபவர், "என்னாலும் உனக்கு எந்தத் தொல்லையும் தீங்கும் இல்லை' என்று கூறுகிறார். இப்படி ஒருவருக்கொருவர் அமைதி ஏற்படுவதற்காகப் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கும்போது வன்முறை எவ்வாறு தலைதூக்கும். இப்படித்தான் இந்த இஸ்லாமிய மார்க்கம் இவ்வுலகில் அமைதியைப் பரப்பியது; பரப்பிக்கொண்டிருக்கிறது.

இந்த அமைதிதான் இன்றைய அவசரத் தேவை. உலகில் வாழும் மக்கள் பலர் அமைதியைத் தேடி அலைந்துகொண்டிருக்கின்றார்கள். இறுதியில் அவர்கள் தஞ்சமடைவது இஸ்லாமிய மார்க்கத்தில்தான். இதுதான் அமைதியான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது. இதுதான் நிம்மதியான வாழ்க்கைக்குத் தேவையான நெறிமுறைகளைக் கொண்டுள்ளது. இதைப் பின்பற்றினாலொழிய மனத்திற்கு அமைதி கிட்டாது என்பதை உணர்ந்தோர் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றத் தொடங்கிவிடுகின்றார்கள். இதைக் காணும் அமைதியை விரும்பாதோர் இஸ்லாமிய மார்க்கத்திற்கெதிராகவும் முஸ்லி ம்களுக்கெதிராகவும் அவதூறான செய்தியைப் பரப்பிக்கொண்டிருக்கின்றார்கள். முஸ்லி ம்களின் எண்ணிக்கை மிகுந்துபோய்விட்டால் உலகம் அமைதியாகிவிடும். உலகம் அமைதியடைந்துவிட்டால் நம்முடைய வியாபாரம் நொடித்துப் போய்விடும் என்ற கவலைதான் அவர்கள் இத்தகைய அவதூறான செய்திகளைப் பரப்புவதற்கான காரணமாகும்.

ஒருவருக்கொருவர் சண்டையிட்டால்தான் ஆயுதங்கள் விற்பனையாகும். நாட்டுக்கு நாடு சண்டையிட்டுக்கொண்டால்தான் துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவை விற்பனையாகும்.  முஸ்லி ம்களால் பல்வேறு வியாபாரம் பாதிப்படையும். ஒரு முஸ்லி ம் வட்டி வாங்க மாட்டான்; விபச்சாரம் செய்யமாட்டான்; மது அருந்தமாட்டான்; போதைப் பொருள்களைப் பயன்படுத்த மாட்டான்; பெண்கள் புர்கா அணிவதால் அழகு சாதனப் பொருள்களை வாங்க மாட்டார்கள். இப்படி எத்தனையோ வியாபாரங்கள் பாதிக்கப்படும். எனவே முஸ்லிம்கள் "தீவிரவாதிகள்' என்ற பொய்யான செய்தியைப் பரப்பினால்தான் மற்றவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளத் தயங்குவார்கள் எனும் வஞ்சகம்தான் அவர்களை அப்படிச் செய்யத் தூண்டுகிறது.

"அமைதியைப் பரப்புங்கள்'' (திர்மிதீ: 2409) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த அமைதியை நாம் பரப்பிக்கொண்டே இருக்க வேண்டும். அதுதான் நம்முடைய நிம்மதியான வாழ்க்கைக்கான வழி; அதுவே உலக அமைதிக்கு வழி; அதுவே நாம் ஒருவரை ஒருவர் நேசம் கொள்வதற்கான வழி. இதைப் பின்வரும் நபிமொழி தெரிவிக்கிறது: "ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே அமைதியை (ஸலாத்தை)ப் பரப்புங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 93)

இஸ்ரேலும் அமெரிக்காவும் அமைதியை விரும்பா நாடுகள். அதனால்தான் இஸ்ரேல் ஃபலஸ்தீனத்தில் அமைதி ஏற்படவிடாமல் நாளுக்கு நாள் வன்முறையில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறது. அமெரிக்காவின் அதிபராகப் புதிதாகப் பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஏழு முஸ்லி ம் நாடுகளைச் சார்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடைவிதித்துள்ளார். இதுவெல்லாம் அமைதியை விரும்புவோர் செய்யும் செயலா?

அவர்கள் எவ்வளவுதான் வன்மத்தைப் பரப்பினாலும் நாம் உணர்ச்சிவசப்பட்டுவிடாமல் பொறுமை காப்பதே நம்மை நாம் காத்துக்கொள்வதற்கான வழியாகும். முஸ்லிம்களைத் "தீவிரவாதிகள்' என்று கூறி நம் உணர்வுகளைத் தூண்டி, அதையே அவர்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்கள். நாம் அவர்களின் சூழ்ச்சித் திட்டத்திற்கு இரையாகிவிடாமல் நம் சமுதாயத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். எத்தருணத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அதைத்தான் திருக்குர்ஆனில் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே, பொறுமை, தொழுகை ஆகியவற்றின் மூலம் (அல்லாஹ்விடம்) உதவிதேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (2: 153)

நச்சுப் பாம்பை வெறுப்பதைப் போன்ற ஒருவிதமான வெறுப்பு உலகெங்கும் வாழும் முஸ்லிம்களுக்கெதிராக ஊடகங்கள்மூலம் வலிந்து வளர்க்கப்படுகிறது. அதன் நீட்சி இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. முஸ்லிம்களுக்கெதிரான அமெரிக்க, யூதர்களின் கை இங்குவரை நீள்வதைக் காணமுடிகிறது. இந்தியாவிலுள்ள இந்து மதவெறி இயக்கங்கள்மூலம் இந்த வெறுப்பு நெருப்பை ஊதி ஊதி மேன்மேலும் வளர்த்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் செயல்பாடு நம் இளைஞர்களின் உணர்வுகளைத் தூண்டலாம்; உதிரத்தைக் கொதிக்கச் செய்யலாம். ஆனால் அந்த உணர்வுகளுக்கு ஆட்பட்டுவிடாமல் அமைதி காக்க வேண்டும்; பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அதில்தான் நமது ஈருலக வெற்றி அடங்கியிருக்கிறது. ஏனெனில், "நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.'' (2: 153)

இளைஞர்கள் இயக்கத் தலைவர்களின் பேச்சைக் கேட்டு, அதன் உந்துதலுக்கு ஆட்பட்டு ஏதாவது வகையில் எதிர்வினையாற்றத் தொடங்கினால் அதனால் அவர்கள் மிகப் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும். தம் வாழ்க்கையையே தொலைக்க வேண்டியது ஏற்படலாம். கடந்த காலங்களில் நம் இளைஞர்கள் தம் இயக்கத் தலைவர்களின் உணர்ச்சிமிகு பேச்சால் உந்தப்பட்டு எதிர்வினையாற்றியதன் விளைவாக இன்று வரை பல ஆண்டுகளாகச் சிறைச்சாலைக்குள் சிக்குண்டு தவிக்கின்றார்கள்; அவர்கள் தம் பிள்ளைகளையும் மனைவியையும் பெற்றோரையும் பிரிந்து வாடுகின்றார்கள்; வாழ்வாதாரம் வழங்க ஆளில்லாமல் அவர்கள்தம் குடும்பத்தார் அல்லல் படுகின்றார்கள். இதையெல்லாம் இன்றைய இளைஞர்கள் கவனத்தில் கொண்டு, தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட வேண்டும்.

திருக்குர்ஆனின் பக்கங்களைப் புரட்டும்போதெல்லாம் பொறுமை குறித்த அறிவுரையை உயர்ந்தோன் அல்லாஹ் ஏதோ ஒரு வகையில் சொல்லாமல் இருப்பதில்லை. ஏனென்றால் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட ஒரே காரணத்திற்காக முஸ்லிம்கள் பிற சமுதாய மக்களிடமிருந்து தொல்லைகளையும் துன்பங்களையும் எதிர்கொள்வார்கள் என்பதை அறிந்த ஏகன் அல்லாஹ் அவர்களுக்கு அது குறித்து முன்னறிவிப்புச் செய்யுமுகமாகப் பின்வருமாறு கூறுகின்றான்:  (இறைநம்பிக்கை கொண்டோரே!) உங்கள் பொருள்கüலும், உங்கள் ஆத்மாக்கüலும்  (இழைக்கப்படும் துன்பத்தின் மூலம்) நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களாலும், இணை வைத்து வணங்குபவர்களாலும், பல வசைமொழிகளை நிச்சயமாக நீங்கள் செவியுறுவீர்கள். (இத்தகைய சிரமங்களை) நீங்கள் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்து அல்லாஹ்வை அஞ்சியவர்களாக வாழ்ந்து வந்தால் (நீங்கள் வெற்றியடைவீர்கள்.) நிச்சயமாக இதுதான் வீரச்செயலாகும். (3: 186)

உயிரிழப்பு, பொருளிழப்பு என இரு வகை இழப்புகளையும் நாம் சந்திக்க நேரிடலாம். அது இறைவனின் சோதனைதான். பொறுமையோடு அதைத் தாங்கிக்கொள்கின்றபோது மறுமையில் சொர்க்க வாழ்க்கையைப் பெறலாம். அதுதான் பொறுமையின் மறுமைப் பரிசு. பொறுமையாளர்களுக்குக் கணக்கற்ற கூலி  உண்டு என்பதை அல்லாஹ் திருக்குர்ஆனில் பதிவுசெய்கின்றான்: நிச்சயமாகப் பொறுமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி  கணக்கின்றியே கொடுக்கப்படும். (39: 10) 

பொறுமை மூவகை உண்டு. 1. இஸ்லாமிய மார்க்கத்திற்காகப் பல்வேறு தொல்லைகளையும் துன்பங்களையும் சகித்துக்கொண்டு பொறுமை காத்தல், 2. அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் ஏற்படுகின்ற சிரமங்களைச் சகித்துக்கொண்டு பொறுமை காத்தல், 3. அன்றாட வாழ்க்கையில் மக்களோடு சேர்ந்து வாழும்போது அவர்களால் ஏற்படும் இன்னல்களையும் துன்பங்களையும் சகித்துக்கொண்டு பொறுமை காத்தல். சிலருக்கு மேற்கண்ட மூவகைச் சோதனைகளும் ஏற்படலாம். சிலருக்கு ஒன்றோ, இரண்டோ ஏற்படலாம். ஆக அனைத்திற்கும் உயர்ந்தோன் அல்லாஹ்விடம் கணக்கற்ற நற்கூலி  உண்டு என்பது மட்டும் உறுதி.

குஜராத்தில் இந்து மதத் தீவிரவாதிகள் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லி ம்களைப் படுகொலை செய்தார்கள். உ.பி. மாநிலம் முஸஃப்பர் நகரில் நூற்றுக்கணக்கானோரைக் கொன்று குவித்தார்கள். இன்னும் பல்வேறு நாடு, நகரங்களிலும் முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றார்கள். அவர்கள் அனைவரும் உயிர்த்தியாகிகள் (ஷஹீதுகள்) ஆவார்கள். அல்லாஹ்விடம் உயர்மதிப்பைப் பெற்றவர்கள். இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டதன் காரணத்தால் தம் இன்னுயிரை ஈந்துள்ளார்கள். எனவே இதையெல்லாம் பார்த்து நாம் பொறுமையிழந்துவிடக் கூடாது; அமைதியிழந்துவிடக் கூடாது; எதிர்வினையாற்றத் துடிக்கக் கூடாது; உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டுவிடக் கூடாது.

உணர்ச்சிகளுக்கு அடிமைப்படுத்தி நாம் செல்ல வேண்டிய, கவனம் செலுத்த வேண்டிய திசையைவிட்டு நம்மைத் திருப்புவதே அவர்களின் தலையாய நோக்கம். எனவே நாம் செல்ல வேண்டிய, அடைய வேண்டிய பாதையை நோக்கிப் பயணம் செய்ய முனைப்புடன் செயல்பட வேண்டும். கல்வித்துறை, மருத்துவத் துறை இரண்டிலும் நாம் கூடுதல் கவனம் செலுத்தி, தீரத்துடன் செயலாற்ற வேண்டும். நம் இளைய தலைமுறைக்கு ஒழுக்கம் சார்ந்த கல்வியைப் புகட்ட வேண்டும்; முறையான அரசியல் பாதையை வகுத்துக்கொடுத்து வழிகாட்ட வேண்டும். அதுவே எதிர்காலச் சமுதாய மக்களின் நல்வாழ்விற்கு நாம் நடுகின்ற அடிக்கல்லாகும்; அமைதிப் புரட்சியுமாகும்.     
=============





புதன், 25 ஜனவரி, 2017

சினிமா பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்

இலங்கையில் நடைபெற்ற (10, 11, 12-12-2016) உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டு இதழுக்கு நான் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை. இதோ உங்கள் பார்வைக்கு... உங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய மறவாதீர்.


சினிமா ஊடகத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட இஸ்லாம் பற்றிய பயங்கரவாத மாயை

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி.

வெளியில் பார்ப்பதைத் திரையிலும் பார்க்கலாம்; வெளியில் பார்க்கத் தகாததைத் திரையிலும் பார்க்கக்கூடாது என்பதே சினிமா பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம் ஆகும். சினிமா என்பது ஓர் ஊடகம். அவ்வளவுதான். அதன்மூலம் மக்கள் மனதில் நன்மையை விதைப்பதும் தீமையை விதைப்பதும் அவரவரின் எண்ணத்திற்கேற்ற வெளிப்பாடு. நல்லெண்ணம் கொண்டு மக்கள் நலன் நாடுவோர் நன்மையைக் கொண்டு செல்கின்றனர்; தீய எண்ணம் கொண்டோர் அதன்மூலம் தீமையை விதைத்துக் கொண்டிருக்கின்றனர். கத்தி நன்மையா, தீமையா என்று கேட்டால் அதனைப் பயன்படுத்துவதை வைத்துதான் அதற்கான விடையைச் சொல்ல முடியும். மாறாக, பொத்தாம் பொதுவாக, ‘அது தீமைஎன்று சொல்லிவிட முடியாது. அதுபோலவே சினிமாவும் அமைந்துள்ளது. மக்களின் அளவற்ற விருப்பத்தால் இது ஊடகத் துறையில் முக்கிய இடத்தைக் கைப்பற்றியுள்ளது.

அதேநேரத்தில் ஓர் ஊடகத்தைப் பிறர் எவ்வாறு பயன்படுத்துகின்றார்களோ அதே விதத்தில்தான் முஸ்லிம்களாகிய நாமும் அதைப் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த ஊடகத்தை நல்வழியில் எவ்வாறு நாம் பயன்படுத்த இயலும் என்பதை யூகித்துணர்ந்து, அதை நோக்கித் திருப்ப வேண்டும். அதற்காகத்தான்  படைத்தோன் அல்லாஹ் நமக்குப் பகுத்தறிவை வழங்கியுள்ளான். வழிகாட்ட வான்மறையும் அண்ணல் நபியின் அமுத மொழிகளும் உள்ளன. அவற்றை மைல்கல்லாகக் கொண்டு நன்மையை நோக்கி மக்களை இழுக்கும் விதத்தில் இந்த சினிமா ஊடகத்தைப் பயன்படுத்த வேண்டும்.

இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சமூக விழிப்புணர்வு, பகுத்தறிவை ஊட்டுதல், மூடப்பழக்கங்களை முறியடித்தல், மதுவின் தீமைகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வரலாற்றைப் பதிவு செய்தல் உள்ளிட்ட எத்தனையெத்தனையோ நல்ல கருத்துகள்மூலம் மக்கள் மனதை மாற்றிச் செம்மைப்படுத்தும் வகையிலான திரைப்படங்கள் வெளிவந்தன. மக்கள் அவற்றைப் பார்த்துப் பொழுதுபோக்கியதோடு நல்ல கருத்துகளையும் தெரிந்துகொண்டனர்.

அதன் பின்னர் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு சினிமா தயாரிக்கப்படலானது. அப்போது தொடங்கி இன்று வரை அது மிகப்பெரிய அளவிலான ஒரு வியாபாரமாகிவிட்டது. வியாபாரம் என்று வந்துவிட்டால் மோசடி என்பதும் அதனைத் தொற்றிக்கொண்டு வந்துவிடும். மோசடி என்பதற்கு முகம் தெரியாது.  யாரை வேண்டுமானாலும் அது மோசடியால் வஞ்சிக்கும். அதனால்தான் இந்த இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட முஸ்லிம்களையே தேசத் துரோகிகளாகக் காட்டத் தொடங்கிவிட்டனர் அந்த மோசடிக்காரர்கள்.

சினிமா என்பது ஓர் ஆற்றல் வாய்ந்த ஊடகம் ஆகும். அது மக்களின் மனதில் நேரடியாகச் சென்று ஆழமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அது இன்றைக்கு மக்களோடு இரண்டறக் கலந்துவிட்டது. அது அவர்களின் பொழுதுபோக்கு மட்டுமல்ல; வாழ்க்கையாகவே மாறிப்போய்விட்டது. இதை நன்றாக அறிந்துகொண்ட யூதர்கள்  ஆங்காங்கே உள்ள திரைப்பட இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பணத்தை அள்ளிக் கொடுத்து, முஸ்லிம் சமுதாயத்திற்கெதிரான தவறான மாயப் பிம்பத்தை மக்கள் மனதில் உருவாக்கும் விதத்தில் கதையை அமைக்க வலைவீசினார்கள். அந்த மாய வலைக்குள் விழுந்தவர்கள்தாம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தும் விதமாகவும் அவர்கள்மீது வெறுப்புணர்வைத் தூண்டுமுகமாகவும் திரைப்படங்களை உருவாக்கினார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை முதன் முதலாக இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு ரோஷா எனும் திரைப்படம் வெளியானது. அதில் காஷ்மீர் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டினார். அதுதான் தொடக்கம். அதன்பிறகு ஒன்றன்பின் ஒன்றாகப் பல்வேறு இயக்குநர்கள் முஸ்லிம்களுக்கெதிரான திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார்கள். அந்த வரிசையில் 2013ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கத்தில் வெளிவந்த விஸ்வரூபம் எனும் திரைப்படம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் ஒன்றிணைந்து ஒரே குரலாகத் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தன. அதன் பயனாக அதிலிருந்து சில காட்சிகள் நீக்கப்பட்டன. இருந்தாலும் அந்தத் திரைப்படம் மக்கள் மனதில் முஸ்லிம்கள் குறித்த ஒரு தவறான பிம்பத்தைப் பதியத்தான் செய்தது. 

Innocence of Muslims  எனும் தலைப்பில் முன்னோட்டம் வெளியாகி, அதன்பின்  The innocent Prophet  எனும் பெயரில் திரைப்படமாக வெளிவந்து, உலக முஸ்லிம்கள் அனைவரும் தம் உயிரைவிட மேலாக மதித்துப் பின்பற்றி வருகின்ற இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைக் கொச்சைப்படுத்தியது; உலக முஸ்லிம்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பியது. ஆக, அவர்களின் நோக்கம் இஸ்லாமிய மார்க்கத்தையும் அதைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்களையும் சொச்சைப்படுத்த வேண்டும். அனைவரும் அவர்களை வெறுக்க வேண்டும் என்பதேயாகும்.

இதன் பின்னணி நோக்கம் என்னவென்றால், உலக அளவில் மக்களை அழிவுக்குள்ளாக்குவதும் அதன்மூலம்  வியாபாரம் செய்வதும்தான். அழிவு என்பது மக்களை நேரடியாக அழித்தல், சமுதாயச் சீர்கேட்டை ஏற்படுத்தி அதன்மூலம் அழித்தல் என இரண்டும் அடங்கும். இவ்வுலகை எவ்வாறு கட்டமைக்க வேண்டும் என யூதர்கள் எண்ணுகிறார்களோ அதற்கேற்பக் கட்டமைக்க முனைகிறார்கள்.

திரைப்படத்தின் மூலம், வன்முறையைத் தூண்டுதல், சமுதாயச் சீர்கேட்டை உண்டுபண்ணுதல், குடும்பத்தைச் சிதைத்தல், ஆடம்பரப் பொருள்களை விரும்பச் செய்தல், நாணத்தை நீக்குதல், உறவுகளைச் சிதைத்தல், சின்னச்சின்ன விஷயங்களுக்காகக் கொலை செய்யத் தூண்டுதல், பாலியல் வன்புணர்வு செய்தல் உள்ளிட்ட பல வகையான கேடுகளைக் காட்சியாகக் காட்டி மக்கள் மனதைக் கெடுத்து, தாம் விரும்பிய கருத்தைத் திணிக்க முயல்கின்றார்கள். தாம் காட்டுவதுதான் நாகரிகம், பண்பாடு என்ற சிந்தையை ஊட்டுகின்றார்கள். 

எல்லாமே அவர்களுக்கு வியாபாரம்தான். வன்முறையைத் தூண்டுவதன்மூலம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிபொருள்கள் வியாபாரம், சிறுவர்களின் மனதைக் கவர்வதன்மூலம் விளையாட்டுப் பொருள்கள், விளையாட்டுகளைப் பதிவிறக்கம் செய்தல் (கேம்ஸ்)குறிப்பிட்ட அலைவரிசைகளைப் பார்க்கத் தூண்டி வியாபாரம், பெண்களைக் கவர்ச்சியாகவும் அழகாகவும் அரைகுறை ஆடைகளுடன் காட்டுவதன்மூலம் ஆடைகள், அழகு சாதனப் பொருள்களின் வியாபாரம், மது குடித்தல், சிகரெட் பிடித்தல் போன்ற காட்சிகளைத் தவறாது ஒவ்வொரு திரைப்படத்திலும் காட்டுவதன்மூலம் மது, சிகரெட் வியாபாரம் என ஒவ்வொன்றிலும் வியாபாரத் தந்திரம் மறைந்துள்ளது. ஏனென்றால் இவை அனைத்தையும் தயாரிப்பது அவர்கள்தாம். 

திரைப்படங்களில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டுவதன்மூலம் புதிதாக யாரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத நிலையை உண்டுபண்ணுவது மற்றொரு தந்திரம். ஏன்? முஸ்லிம்கள் மது குடிப்பதில்லை; போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; புகைப்பழக்கத்திற்கு அடிமையாவதில்லை; வட்டிக்குக் கடன் வாங்குவதில்லை; பெண்கள் புர்கா அணிவதால் அவர்கள் அழகுசாதனப் பொருள்களையோ அரைகுறை ஆடைகளையோ  வாங்கி அலங்கரித்துக்கொண்டு வீதியில் உலா வருவதில்லை; இதனால் அவர்களின் வியாபாரம் கொழிப்பதில்லை. ஆகவேதான் முஸ்லிம்கள்மீது அவர்களுக்கு எந்தவித விருப்பமுமில்லை. அவர்களைப் பொறுத்த வரை முஸ்லிம்களை அவர்களின் வியாபாரத்திற்கு ஒரு தடைக்கல்லாகத்தான் எண்ணுகின்றார்கள்.

தற்போது இந்தியாவில் இருபத்தைந்து கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உள்ளனர். இஸ்லாமிய மார்க்கத்தைப் புரிந்துகொண்டு, அதன் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இன்னும் ஐம்பது கோடிப் பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டால் நிலைமை என்னாகும்? அங்கெல்லாம் மதுக்கடைகள் மூடப்படும்; அழகு சாதனப் பொருள்கள், கவர்ச்சியான ஆடைகளின் வியாபாரம் படுத்துக்கொள்ளும்; விபச்சாரத் தொழில் நசிந்துபோகும்; வட்டிக் கடைகள் வழக்கொழிந்துபோகும்; பீடி, சிகரெட், புகையிலை, பான்பராக், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்கள் மறைந்துபோகும். சமூகம் தூய்மையடைந்து விடுவதால் சமுதாயச் சீர்கேட்டை உண்டுபண்ணுகின்ற எந்த வியாபாரமும் முஸ்லிம்கள் மத்தியில் நடைபெறாது. இவற்றையெல்லாம் அவர்கள் விரும்புவார்களா?

சனிக்கிழமை மீன்பிடிக்கக் கூடாதுஎன்ற இறைக்கட்டளையையும் மீறி, தம் சூழ்ச்சியாலும் தந்திரத்தாலும் மீன்பிடித்தவர்கள்தாமே இந்த யூதர்கள்? அவர்கள் தம் வியாபாரம்  நொடித்துப் போகுமாறு விட்டுவிடுவார்களா? தம் வியாபாரத்திற்கு எதிராக உள்ள எவரையும் வளரத்தான் விடுவார்களா?

இந்தத் திரைப்படங்களின் தாக்கம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சரியாக அறியாதோரின் மனங்களில்  அவர்களைப் பற்றிய தவறான பிம்பத்தைப் பதிவு செய்துவிட்டது. இதனால் முஸ்லிம்கள் உண்மையிலேயே தீவிரவாதிகள்தாம் என்ற மனஓட்டத்திற்கு அவர்களைத் தள்ளிவிட்டது. ஆதலால் அம்மக்கள் முஸ்லிம்களுக்கு வீடு வாடகைக்கு விடுவதில்லை; அவர்களோடு இயல்பாகப் பழகுவதில்லை; நட்புகொள்வதில்லை; அண்டைவீட்டினராக இருக்க விரும்புவதில்லை. இன்னும் ஒருபடி மேலேபோய், அண்ணன்-தம்பிகளாக, மாமன்-மச்சான்களாகப் பழகிவந்தோரும் அவர்களைத் தவறான எண்ணத்தோடும் நம்பிக்கையின்மையோடும் பார்க்கும் நிலைக்கு ஆளாக்கிவிட்டது. அது மட்டுமல்ல, அவர்களை யாராவது அடித்தாலும் ஓடிவந்து தடுப்பதில்லை. அவர்கள் எவ்வகையில் பாதிக்கப்பட்டாலும் கைகொடுப்பதில்லை. இதனால் பிற சமயச் சகோதரர்களைவிட்டு விலகியே வாழ வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் இன்றைய முஸ்லிம்கள்.

இவ்வாறு தீய எண்ணத்தோடு உருவாக்கப்பட்ட திரைப்படங்களின் தாக்கம் அப்போது தோன்றி, குறிப்பிட்ட சில நாள்களோடு முடிந்துபோய்விடுவதில்லை. அந்தத் தவறான கருத்தை அடுத்தடுத்த தலைமுறை வரை கொண்டு போய்ச் சேர்ப்பதில் முனைப்போடு செயல்படுகின்றார்கள். ஆம்! தொலைக்காட்சி அலைவரிசைகளில் அந்த நச்சுக் கருத்தைக் கொண்டுள்ள திரைப்படங்களை அவ்வப்போது ஒளிபரப்புகின்றார்கள். அதைக் காணும் பிஞ்சு உள்ளங்களில் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் தவறான பிம்பம் பதிந்துபோய்விடுகிறது. அது மட்டுமின்றி, யூ-டியூப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவதால் அவை காலந்தோறும் முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் வேலையைச் செவ்வனே செய்துகொண்டே இருக்கும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

1995ஆம் ஆண்டு வெளியான பம்பாய், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான துப்பாக்கிவிஜயகாந்த் நடிப்பில் வெளியான நரசிம்மா உள்ளிட்ட பல திரைப்படங்கள், அர்ஜுன் நடித்துள்ள பல திரைப்படங்கள் முதலியவை முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தி, அவர்களைத் தீவிரவாதிகளாகவும் சமூக விரோதிகளாகவும் நாட்டுப்பற்று இல்லாதவர்களாகவும் கடத்தல்காரர்களாகவும் தவறாகச் சித்திரிப்பதைத் தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றன. இந்தப்போக்கு நிறுத்தப்படாவிட்டால் இவ்வுலகில் அமைதி திரும்பாது; வன்முறை தொடர்ந்துகொண்டே இருக்கும். அதைச் செய்வோர் முஸ்லிம்கள் அல்லர். ஏனென்றால், “பாதையில் இடர்தரும் பொருள்களை அகற்றுவதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதிஎன அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போதித்த பொய்யாமொழியை முஸ்லிம்கள் தம் அன்றாட வாழ்வில் பின்பற்றி வருவதால் அவர்கள் யாருக்கும் எந்த இடையூறும் செய்ய மாட்டார்கள். ஆனால் முஸ்லிம்களின் எதிரிகள் வன்முறைச் செயல்களைத் தொடர்ந்துகொண்டே இருப்பார்கள். அவற்றைச் செய்துமுடித்ததும் முஸ்லிம்கள்மீது பழி போடுவார்கள்; அவர்கள் கைது செய்யப்படுவார்கள்; சிறைக்குள் வைத்துச் சித்திரவதை செய்யப்படுவார்கள். திரைப்படங்களால் தவறான கருத்தை உள்வாங்கிக்கொண்டிருக்கின்ற மக்கள் அதை உண்மையென நம்புவார்கள். இது ஒரு தொடர்கதையாகத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

உலக அளவில் அந்தந்த நாட்டு மொழிகளில் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு உலக மக்கள் அனைவரின் மனதிலும் ஒரே நேரத்தில் இஸ்லாத்திற்கெதிரான கருத்தை விதைக்கும் வேலையை யூதர்கள் தொடர்ந்து மறைமுகமாகவே செய்துகொண்டிருக்கின்றார்கள். காட்சி ஊடகம் மட்டுமின்றி, அச்சு ஊடகத்தின் மூலமாகவும் இஸ்லாத்திற்கு முரணான செய்திகளைப் பரப்பிக்கொண்டிருக்கின்றார்கள். அத்தோடு நயமான நயவஞ்சகப் பேச்சாளர்கள்மூலமும் தவறான கருத்தை விதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கான தீர்வு என்னவென்றால் இஸ்லாமிய மார்க்கத்தையும் அதன் கொள்கைக் கோட்பாடுகளையும் திருக்குர்ஆனையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நயமாக நவின்ற பொய்யாமொழிகளையும் சகோதரச் சமுதாய மக்களுக்கு எவ்வகையிலேனும் தெரியப்படுத்த வேண்டும். அத்தோடு நாம் நடத்துகின்ற இஸ்லாம் சார்ந்த சொற்பொழிவுகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் அவர்களைச் சிறப்பு விருந்தினர்களாக அழைக்க வேண்டும். மேலும் நாம் இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்டு, காட்சி ஊடகத்தையும் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். அப்போதுதான் மக்கள் மனங்களில் உள்ள தவறான மனப்பான்மையை மாற்ற முடியும்.   =====================================