திங்கள், 18 மார்ச், 2024

விழலுக்கு இறைத்த நீர் போல...


--------------------------------------------

இந்தியா கூட்டணி ஒரு பக்கம் பல்வேறு அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, நீதிக்கெதிரான ஆட்சியை அகற்றுவதற்காகத் தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கது.  அதேநேரத்தில் மறுபக்கம் ஆளும் பிஜேபி அரசு தனக்குச் சாதகமாக மின்னணு வாக்கு இயந்திரங்களை வைத்துக்கொண்டு, அதிகாரத்தோரணையோடு தேர்தல் பரப்புரைகளைச் செய்துவருவது மிகுந்த கவலையளிக்கிறது.

மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கெதிரான அரசியல் கட்சிகளின் போராட்டமெல்லாம் மிதமான போக்கில்தான் இருந்தன. எனவே அவையெல்லாம் தற்போது, கடலில் கரைத்த கற்பூரமாகக் காணாமல் போய்விட்டன.

 

மின்னணு வாக்கு இயந்திரங்களை யாரும் தவறாகப் பயன்படுத்த முடியாது; யாரும் அதை ஹேக் (Hack) செய்ய முடியாது; முடிந்தால் செய்து காட்டுங்கள் என்று தேர்தல் ஆணையம் அறைகூவல் விடுத்து, ஹேக் செய்ய முடியாத இயந்திரத்தை முன்வைத்தது.

அந்த நேரத்தில், “நீங்கள் தேர்தலுக்குப் பயன்படுத்துகிற அத்துணை இயந்திரங்களையும் எங்கள்முன் வையுங்கள்; அவற்றிலிருந்து நாங்கள் விரும்பிய பத்து இயந்திரங்களை எடுத்து ஹேக் செய்து காட்டுகிறோம் என்று நம் பொறியாளர்களுக்குச் சவால்விடத் தெரியவில்லை. அப்படி ஒருவேளை கேட்டிருந்தால் அதை நிரூபித்துக் காட்டியிருக்கலாம். அந்தோ பரிதாபம்! அவ்வாறு யாருக்கும் கேள்வி கேட்கத் தெரியவில்லை.

 

அத்தகைய மின்னணு வாக்கு இயந்திரங்களை வைத்துத் தேர்தல் நடத்திக்கொண்டு, இங்கு மக்களாட்சி நடக்கிறது என்றும் இது மக்களாட்சியை நிலைநிறுத்தும் 18ஆவது ஜனநாயகத் தேர்தல் என்றும் விளம்புவது ஏமாற்று வேலை என்றே பலரும் கூறுகின்றார்கள்.

 

உண்மையில் இது ஜனநாயக நாடு என்றால், மக்களின் ஐயத்திற்குள்ளான ஓர் இயந்திரத்தை வைத்துத் தேர்தல் நடத்தாமல், நாட்டில் பெரும்பாலோர் விரும்புகிற, எல்லோரும் முற்றிலும் நம்புகிற, எல்லோருக்கும் எளிதான வாக்குச் சீட்டு முறையில் தேர்தலை நடத்திக் காட்ட வேண்டும்; அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் வரை தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும்.

 

மின்னணு வாக்கு இயந்திரங்கள்மூலம் தேர்தல் நடத்தப்பட்டு, அதன்மூலம் பிஜேபி மீண்டும் வெற்றி பெற்றால்  அது ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்ததற்குச் சமமாகும். அதன்பிறகு அரசியல் கட்சிகள் போராடிப் பயனில்லை. அதை அகற்ற முனையாமல் தேர்தலை எதிர்கொள்ளும் எதிர்க்கட்சிகளின் பரப்புரை விழலுக்கு இறைத்த நீர் போன்றதாகும்.

 

ஒருக்கால் இதையும் தாண்டி அதிசயம் நடந்தால் இந்திய மக்கள்மீது இறைவன் கருணைகாட்டியுள்ளான் என்று கருதலாம்.

 

பொறுத்திருந்து பார்ப்போம்.

 

அன்புடன்

நூ. அப்துல் ஹாதி பாகவி

18 03 2024

==============



சனி, 16 மார்ச், 2024

போதும்... போதும்...!

  


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

கட்டுரைச் சுருக்கம்:

 

ஸகாத் பெறத் தகுதி இல்லாதவர்கள், எனக்கு வேண்டாம் என ஒதுங்கிக்கொண்டால், தகுதியானவர்கள் அதைப் பெற்றுக்கொள்வார்கள்.

 

தகுதி இல்லாதவர்கள் ஏழைகள் என்ற போர்வையில் ஸகாத் பணத்தைப் பெறுவது ஒருவகை ஏமாற்றமும் மோசடியும் ஆகும்.

 

செல்வர்கள் தம் செல்வத்துக்குரிய ஸகாத்தை முறைப்படி கணக்கிட்டு வழங்கினால் ஏழைகள் பயன்பெறுவார்கள்.

 

பணத்தை யார் நீட்டினாலும், உடனடியாக அதை வாங்கிக்கொள்ளாமல், இது ஸகாத்தா, அன்பளிப்பா என்று கேட்டு, நான் ஸகாத்தைப் பெறுவதில்லை என்று சொல்ல, இறைநம்பிக்கை மிகுந்தவர்களால் மட்டுமே முடியும்.

---------------------------

 

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேவை (டிமாண்ட்) இருந்துகொண்டே இருக்கிறது. நீர், உணவு, உடை, இருப்பிடம், பணம் என அவரவர் தேவைக்கேற்பப் பட்டியல் மாறுபடும்.  நம்முள் பெரும்பாலோர் தம் தேவையைத் தம் உழைப்பின்மூலம் நிவர்த்திசெய்துகொள்கிறார்கள். வேறு சிலரோ தம் ஏழ்மையின் காரணமாகப் பிறர் வழங்குகிற உதவிமூலமே தம் அன்றாட வாழ்க்கையை நடத்திவருகின்றார்கள்.

 

நம்முள் ஒரு வகையினர் தம் உறவினர்கள், நண்பர்கள், அன்பர்கள் எனப் பலர் வழங்குகிற உதவித்தொகையால் தம் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றார்கள். அவர்கள் அந்த உதவியைப் பெற்று வாழ்வதில் தவறில்லை. ஆனால் காலம் முழுவதும் அவ்வாறே வாழ்ந்து முடித்துவிடலாம் என்று அவர்கள் எண்ணுவதுதான் தவறு. குறுகிய எண்ணத்திலேயே காலம் கடத்துவது அல்லது தம்மால் உழைக்க முடியும் என்றிருந்தும் அதற்காக எந்த முயற்சியும் செய்யாமல், பிறர் கொடுப்பதை வைத்தே வாழ்ந்துவிடலாம் என்று எண்ணுவது அவர்களின் நீடித்த சோம்பலுக்கு அடையாளமாகத் திகழ்கிறது.

 

அவர்களுள் யாரும் ஏற்பது இகழ்ச்சி என்ற முதுமொழியை நினைத்துக்கூடப் பார்ப்பது கிடையாது. தாங்கள் இதுவரை எனக்குச் செய்துவந்த உதவிக்கு நன்றி; அல்லாஹ் உங்களுக்கு அதற்கான நற்கூலியை இம்மையிலும் மறுமையிலும் கொடுப்பானாக. எனக்கு இதுவரை நீங்கள் செய்துவந்த உதவி போதும். இனியும் நீங்கள் எனக்குப் பணஉதவி வழங்க வேண்டாம் என்று கூறும் துணிவு எத்தனை பேருக்கு ஏற்பட்டிருக்கிறது? இனி நான் யாரிடமும் உதவி பெறப்போவதில்லை என்று முடிவெடுக்கின்ற மனத்திட்பம் எத்தனை பேருக்கு ஏற்பட்டிருக்கிறது

 

இதுவரை நீங்கள் செய்துவந்த உதவி போதும் என்று சொல்லும் துணிவும் மனஉறுதியும் அவ்வளவு சீக்கிரம் எந்த மனிதனுக்கும் வந்துவிடாது. அவன் தன் நிலையைக் குறித்து, தானே சிந்திக்க வேண்டும்; ‘ஏற்பது இகழ்ச்சி என்ற முதுமொழியை மீண்டும் மீண்டும் தன் மனத்துக்குள் அசைபோட்டுப் பார்க்க வேண்டும்; தன் நிலையைக் கண்டு தானே அசிங்கமாகக் கருத வேண்டும்; சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட வேண்டும். அப்போதுதான் அவ்வாறு முடிவெடுக்கத் தோன்றும்.

 

இந்நாள் வரை பிறரின் தயவோடுதானே வாழ்ந்துகொண்டிருக்கிறேன்; இனியேனும் யாருடைய  உதவியையும் பெறாமல் இறைவனின் உதவியோடு ஏன் வாழக்கூடாது என்ற சிந்தனை உள்ளத்தில் தோன்றினால் மட்டுமே ஒருவன் தன் நிலையை மாற்றிக்கொள்ள முடியும். இல்லையில்லை; அவன் தன்  வாழ்க்கை நிலையை மேம்படுத்திக்கொள்ள முடியும். இது நாள் வரை அவன் எனக்காகச் செலவழித்தான்; இனி நான் அவனுக்காகச் செலவு செய்யாவிட்டாலும், எனக்கேனும் நான் செலவு செய்துகொள்ள  என்னால் இயன்றதை உழைத்துச் சம்பாதிப்பேன்; இனி அவனுடைய உதவியை நான் அறவே பெறமாட்டேன் என்று உறுதியாக முடிவெடுக்க வேண்டும்.

 

நாம் சிறுவராக இருக்கிறபோது ஒவ்வோர் எழுத்தாகக் கற்றுத் தருகிற ஆசிரியர், காலப் போக்கில்  வார்த்தைகளாகக் கற்றுத் தருகிறார்; பின்னர் அதையும் விட்டுவிட்டுச் சரளமாக வாசிக்கத் தொடங்கிவிடுகிறார். ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு நிலையைக் கடந்துசென்றுகொண்டே இருக்கிறோம். ஆக, காலம் செல்லச் செல்ல கற்பிக்கும் நிலை மாறுகிறதல்லவா? அதுபோலவே நம் வாழ்க்கை நிலையும் மாற வேண்டுமல்லவா? கடந்த காலங்களில் பெற்றுக்கொண்டே இருந்தேன்; இனி பெறுவதை நிறுத்திவிடுவேன்; இன்னும் சில ஆண்டுகள் கழித்து, கொடுக்கும் நிலைக்கு உயர்வேன் என்று எண்ணுவதும் அதனை நோக்கி நகர்வதும்தானே வாழ்க்கையில் நாம் அடையும் முன்னேற்றம்?

 

ஆனால் சிலர் ஆண்டுதோறும் பெற்றுக்கொள்ளும் நிலையிலேயே இருக்கிறார்கள். அதற்காக ஆர்வத்தோடு காத்திருக்கின்றார்கள். அவர்கள் கொடுக்கும் நிலைக்கு மனதளவில்கூட வருவதே இல்லை. கொடுக்கும் நிலைக்கு வராவிட்டாலும், தன்னைத்தானே  காத்துக்கொள்ளும் தற்சார்பு நிலைக்குக்கூட வருவதில்லை. பிறர் கையை எதிர்பார்க்கும் இந்த நிலையை எப்போதுதான் அவர்கள் மாற்றிக்கொள்வார்கள்?

 

அஸ்ஸலாமு அலைக்கும் பாய், போன வருஷம் வந்திருந்தேனே உங்களுக்கு நினைவிருக்கிறதா? என்ன பாய் மறந்துட்டீங்களா? நான்தான் காதர்பாய் வந்திருக்கேன். போன வருஷம் மாதிரி, இந்த வருஷமும் உங்களுடைய உதவியை நாடித்தான் வந்திருக்கேன் என்று ஒவ்வோர் ஆண்டும் சொல்லும் பலர் நம்முள் உள்ளனர். அவர்கள் அவ்வாறு சொல்வதையும் பெறுவதையும் இழிவாகக் கருதுவதில்லை. இப்ப நேற்றா நான் வாறேன்; ஒங்க வாப்பா காலத்திலிருந்தே வந்துகிட்டு இருக்கேன் என்று சிலர் தம்முடைய இகழ்ச்சியின் காலநீட்சியைப் பறைசாற்றுவர். 

 

தன்மீதே ரோஷம்கொண்டு, பிறரிடம் பெறுவதை இழிவெனக் கருதி, இறைவன்மீது அளவிலா நம்பிக்கைகொள்ளும்போதுதான், “இதுவரை பெற்றது போதும்; இனி நான் யாரிடமும் எந்த உதவியும் பெறப் போவதில்லை; அல்லாஹ்வையன்றி வேறு யாரிடமும் கையேந்தப்போவதில்லை என்று முடிவெடுக்கத் தூண்டும். அத்தகைய உறுதி மனத்தினுள் தோன்றும்போது அவன் பின்வருமாறு பிரார்த்தனை செய்வான்: அல்லாஹும்மக்ஃபினீ பிஹலாலிக அன் ஹராமிக. வ அஃக்னினீ பி ஃபள்லிக அம்மன் ஸிவாக். பொருள்: அல்லாஹ்வே! நீ விலக்கியதை விட்டுவிலகி, நீ ஆகுமாக்கியதைக் கொண்டு எனக்குப் போதும் என்ற நிலையை உருவாக்குவாயாக! மேலும் உனது கருணையால் உன்னைத் தவிர உள்ள அனைத்தைவிட்டும் என்னைத் தேவையற்றவனாக ஆக்குவாயாக. (நூல்: திர்மிதீ: 3563)

 

மேலும் இறைவன் கூறுவதை மனத்தில் பதித்துக்கொண்டவருக்கே அத்தகைய முடிவெடுக்கும் தன்னம்பிக்கை ஏற்படும். யார் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின்றாரோ, அவருக்கு ஒரு (நல்) வழியை ஏற்படுத்தித் தருவான். மேலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவருக்கு வேண்டிய வாழ்வாதார வசதிகளை அளிப்பான். யார் அல்லாஹ்வைச் சார்ந்திருக்கிறாரோ அவருக்கு அவனே போதும்(65:2-3).

 

பிறரிடம் கேட்கக்கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக, அவர்கள்தம் அன்புத்தோழர்கள் கீழே விழுந்த சாட்டையைக்கூட, ஒட்டகத்திலிருந்து கீழே இறங்கித் தாமே எடுத்துக்கொள்வார்களே தவிர, பிறரிடம் அதை நீ என்னிடம் எடுத்துக்கொடு என்று கேட்கமாட்டார்கள். அந்த அளவிற்குச் சுயமரியாதைகொண்டவர்களாக இருந்தார்கள். கேட்டுப் பெறுவதை இழிவாகக் கருதிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஏற்பது இகழ்ச்சி என்ற மூலமந்திரத்தைத் தம் தோழர்களுக்குப் போதித்தார்கள். நபியவர்களின் வாக்குகளை அப்படியே தம் அன்றாட வாழ்க்கையில் பின்பற்றி, சுயமரியாதைமிக்க சமுதாயமாக வாழ்ந்தார்கள்.

 

சுயமரியாதையைப் போதித்த நபியவர்களின் சமுதாயம்தான் ரமளான் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் பிறரின் உதவிதேடி அலைந்துகொண்டிருக்கிறது. அவர்களுள் பலர் தம் அடிப்படைத் தேவைக்காக அல்லாமல், கையேந்திப் பிழைப்பதையே தொழிலாகச் செய்துவருவோரும் உண்டு. எந்த நாளிலும் போதும் என்ற நிலைக்கு அவர்கள் வருவதே இல்லை.

 

இத்தகையோரைப் பார்த்தே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: ஆதமுடைய மகனுக்கு (மனிதனுக்கு) இரண்டு ஓடைகள் (நிறையத்) தங்கம் இருந்தாலும் தனக்கு மூன்றாவதாக ஓர் ஓடை இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனுடைய வாயை (அடக்கத்தலத்தின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது... (திர்மிதீ: 2259)

 

அதாவது அவன் இறந்து மண்ணுக்குள் புதையுண்டு போகின்ற வரை, ‘கையேந்தும் தொழிலைவிட்டுவிடமாட்டான்; ஏந்திய கைகளை மடக்கவும் மாட்டான்; இறுதி வரை ஏந்திக்கொண்டே இருந்து, கடைசியில் ஏந்திய நிலையிலேயே மரணிப்பான். அல்லாஹ்வை மறந்து, பிறரிடம் கையேந்தியோருக்கு அவன் கொடுக்கும் தண்டனைதான் இது. 

 

போதும் என்ற உணர்வு ஒரு கட்டத்தில் பெரும் செல்வருக்கு ஏற்படும். தொடர்ந்து சம்பாதித்துச் சேர்த்துக்கொண்டே இருந்தால், அதற்கு முடிவுதான் என்ன? அந்தப் பணத்தையெல்லாம் என்னதான் செய்வது, ஏன் சம்பாதிக்கிறோம், ஏன் சேர்க்கிறோம், யாருக்காகச் சேர்த்துக்கொண்டே இருக்கிறோம் என்ற வினாக்கள் தோன்றி, அவருடைய மனத்தைப் புரட்டிப்போடும். இதுவரை சேர்த்தது போதும்இனியேனும் ஏழைகளுக்கும் தேவையுடையோருக்கும் செலவழிப்போம் என்ற உந்துதல் ஏற்படும். அதன்பின் அவர் தாம் சேர்த்து வைத்த பணத்தைச் செலவழிக்கத் தொடங்கிவிடுவார். பின்னர் அவரை யாரும் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது. கேரளாவைச் சார்ந்த தொழிலதிபர் யூசுப் அலீ, அஜீம் பிரேம்ஜி, லெட்சுமி மிட்டல் போன்றோரை இதற்குச் சான்றாகக் காட்டலாம்.

 

அது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: இரண்டு பேர்மீது தவிர வேறெவர்மீதும் பொறாமை கொள்ளக் கூடாது. (அவர்களுள் ஒருவர்) ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்கிறார்... (புகாரீ: 73) 

 

இவ்வாறு வாழ்வாங்கு வாழும் வசதிபடைத்தோர் உரிய முறையில் செலவு செய்யத் தொடங்கிவிட்டால் காலப்போக்கில் சமுதாயத்திலிருந்து ஏழ்மை விடைபெற்றுக்கொள்ளும். அத்தகைய நிலையைத்தான் இஸ்லாம் எதிர்பார்க்கிறது. அல்லாஹ் அதற்காகவே ஸகாத்தைக் கடமையாக்கினான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதைச் செயல்படுத்தினார்கள்; நபித்தோழர்கள் பின்பற்றினார்கள்; நாமும் அதையே பின்பற்றிவருகிறோம்.

 

ஆகவே நம்முள் இதுவரை கையேந்திப் பழக்கப்பட்டவர்கள் அப்பழக்கத்தை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும்; அல்லாஹ்வின் மீதே நம்பிக்கைகொண்டு தம் வாழ்க்கையைத் தொடர முயல வேண்டும்.  நம்முள் வசதிபடைத்தோர் தம் ஸகாத்தை உரிய முறையில் உரியவர்களுக்குச் செலவு செய்ய முன்வர வேண்டும். இந்த இரண்டும் தொடர்ந்தால் காலப்போக்கில் நம் சமுதாயம் மேம்பட்டுவிடும்; சுயமரியாதைமிக்க சமுதாயமாக மாறும். அத்தகைய நிலை உருவாக வல்லோன் அல்லாஹ் மனித மனங்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்துவானாக.

0======================0








சனி, 9 மார்ச், 2024

மது குடிக்க மாட்டேன் (சிறுகதை- Short story)


மது குடிக்க மாட்டேன் (சிறுகதை)

காலத்திற்கேற்ற சிறுகதை

கேளுங்கள்

உங்கள்

கருத்தைக் கூறுங்கள். 

புதன், 14 பிப்ரவரி, 2024

கருவூலம் உருவாக்குவோம்!

  

கருவூலம் உருவாக்குவோம்!

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

ஒவ்வோர் ஊரிலும் மகளிர் சுய உதவிக்குழு இயங்கி வருகிறது என்பதை நம்முள் பலர் அறிவோம்.  அரசு தரும் நிதியுதவி வங்கி வழங்கும் நிதியுதவி இரண்டு சேர்ந்தாற்போல் பத்து முதல் இருபது வரையுள்ள ஒரு மகளிர் குழுவிற்கு வழங்கப்பட்டுவருகிறது. அவர்கள் அந்த நிதியைப் பெற்றுக் கூட்டாகவோ தனித்தனியாகவோ தொழில் செய்வார்கள். அக்குழுவில் பெரும்பாலோர் பயனடைந்து வருகின்றார்கள். தொழில் செய்து இலாபம் ஈட்டுகின்றார்கள்.

 

இலாபம் ஈட்டுவோர் சரியாகப் பணத்தைத் திரும்பச் செலுத்திவிடுகின்றார்கள். தொழிலில் இலாபம் ஈட்ட இயலாதோர் அல்லது அந்த நிதியைப் பெற்று, பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடக் கட்டணம் செலுத்தியோர் குறிப்பிட்ட தவணைக் காலத்தில் அந்தப் பணத்தைத் திரும்பச் செலுத்த இயலாமல் தடுமாறுகின்றார்கள். அப்போது வட்டிக்கு மேல் வட்டி கட்ட வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஆளாகின்றார்கள். அவர்களுள் முஸ்லிம் பெண்களும் அடங்குவர்.

 

சுய உதவிக்குழுவினருக்கு வங்கி வழங்கும் நிதியுதவியைவிடத் தனியார் வழங்கும் நிதியுதவியே அதிகம் எனலாம். தனியார் வங்கிகள் கிராமம் கிராமமாகக் குறி வைத்து, பெண்களுக்குக் கடனுதவி வழங்கி வருகின்றார்கள். அவர்கள் அதைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு ஆளாகின்றபோது வட்டிக்கு மேல் வட்டியை வசூலிக்கின்றனர். வட்டி கட்ட இயலாத பெண்கள், அவர்கள் திட்டும் திட்டுக்களையும் பேச்சுகளையும் செவியேற்க முடியாமல் தவிக்கின்றனர்.

 

வட்டி ஹராம்-தடைசெய்யப்பட்டது என்று சொல்லிவிடுகின்றோம். ஆனால் அதற்கான மாற்றுப் பொருளாதார வழியை நாம் உருவாக்காமலேயே இருந்துவருகிறோம். இஸ்லாமிய மார்க்கமோ அதற்கான மாற்று வழியைத் தெளிவாகவே காட்டியுள்ளது. ஆனால் அதைச் செயல்படுத்தாமல் சமுதாயப் பொறுப்பாளர்களும் ஆலிம்களும் கடந்து சென்றுகொண்டே இருக்கின்றனர். அதைச் செயல்படுத்தத் தயங்குகின்றனர். எனினும் சமுதாயத் தலைவர்களும் மார்க்க அறிஞர்களுமே இதற்கான தீர்வைச் சொல்ல வேண்டும்; செயல்படுத்த வேண்டும். அது அவர்களின் தார்மிகக் கடமையாகும்.

 

கன்ஸுல் மால் அல்லது இம்தாதுல் முஸ்லிமீன் எனும் பெயரில் ஒவ்வொரு மஹல்லாவிலும் பொருளாதாரக் கருவூலம் உருவாக்கி, அதன்மூலம் அந்தந்த மஹல்லாவில் உள்ள ஏழைகளுக்கும் கைம்பெண்களுக்கும் ஆதரவற்ற முதியோருக்கும் மாதந்தோறும் பொருளாதார உதவி வழங்க வேண்டும். தொழில் தொடங்க விருப்பமுள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருளாதார உதவி செய்ய வேண்டும். இதனால் நம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க இயலும்; ஏழைகள் பயன்பெறுவார்கள்.

 

தம்முடைய பணத்தைச் சேமித்து வைக்க எண்ணும் முஸ்லிம்கள் பலர் வங்கியையே நாடுகின்றனர்.

அதேநேரத்தில் வங்கியில் வழங்கப்படும் வட்டியை அவர்கள் பெறுவதில்லை. அல்லது அதை எடுத்து  ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகின்றனர். அதனால் வங்கி மூலம் அவர்களுக்கு எந்த இலாபமும் இல்லை. இதனை மாற்றியமைக்கும் விதத்தில், முஸ்லிம்களின் பொருளாதார வளர்ச்சிக்குச் சமுதாயப் பொறுப்பாளர்களால் உதவ முடியும். குறிப்பிட்ட மஹல்லாக்களில் இஸ்லாமியக் கூட்டுறவு வங்கியைத் தொடங்கி, அதில் முஸ்லிம்கள் சேர்த்து வைக்கின்ற சிறுசேமிப்பைத் தொழிலில் முதலீடு செய்து, அதில் வருகின்ற இலாபத்தைச் சிறுசேமிப்பாளர்களுக்குப் பங்கிட்டு வழங்கலாம். முளாரபா, முராபஹா என்ற கூட்டு வியாபாரத்தை இஸ்லாம் அனுமதித்துள்ளது. அந்த வகையான தொழில்களில் முதலீடு செய்து, அதில் கிடைக்கின்ற இலாபத்தைப் பங்கிட்டு வழங்கலாம்.

 

 

 

இதனால் நம் சகோதர, சகோதரிகளின் பணம் பாதுகாப்பாக இருப்பதோடு, வட்டியில்லாமல் ஹலாலான-ஆகுமான முறையில் வளர்ச்சியும் அடையும். இது எவ்வளவு பெரிய பொருளாதார மாற்றம்! சிறுசேமிப்பாளர்களின் பணத்தைப் பெருநிறுவனங்களில் முதலீடு செய்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தலாம். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் என அனைத்திற்கும் நாம் முன்னோடியாகத் திகழலாம். எல்லாவற்றிற்கும் அரசையே எதிர்பார்க்காமல் நமக்கு நாமே திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயல்பட்டால் பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுவருவதோடு மிகச் சிறந்த முன்னேற்றத்தையும் காணலாம்.

 

கன்ஸுல் மால் திட்டத்தின்மூலம் ஒவ்வோர் ஆண்டும் ரமளான் மாதத்தில் பணக்கார முஸ்லிம்கள் வழங்குகின்ற கட்டாயத் தர்மத்தை (ஸகாத்தை) உரிய முறையில் வசூல் செய்து, அந்தந்த மஹல்லாவில் வாழ்கின்ற ஏழைகள், விளிம்புநிலை மக்கள், கைம்பெண்கள், ஆதரவற்றோர் முதலானோருக்கு வழங்கலாம். அந்த மஹல்லாவில், அதைப் பெற்றுக்கொள்ளும் தகுதி யாருக்கும் இல்லையெனில், அதை அடுத்த மஹல்லா மக்களுக்கு வழங்கலாம்.

 

நபியவர்களின் ஆட்சியில் நமக்கு ஏராளமான படிப்பினைகளும் வழிகாட்டல்களும் உள்ளன. ஆனால் அதையெல்லாம் நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம். கலீஃபாக்களின் ஆட்சிமுறையைக் கூர்ந்து கவனித்தால் பல்வேறு வழிகாட்டல்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று பொருளாதாரச் சிக்கலுக்கான வழிகாட்டல் ஆகும். அதாவது  முஸ்லிம்கள் ஹராமைவிட்டுத் தவிர்ந்துகொண்டு, ஹலாலான- ஆகுமான முறையில் பொருளாதாரத்தை ஈட்டுவதற்கான வழிமுறைகள் உள்ளன. அதைப் பின்பற்றினால் முஸ்லிம்கள் செழிப்பாக வாழலாம் என்பதில் ஐயமில்லை.

 

பணக்கார முஸ்லிம்கள் வழங்குகின்ற கட்டாயத் தர்மத்தை-ஸகாத்தை முறையாக வசூல்செய்து அரசுக் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. அதன்மூலமே  மக்களுக்குத் தேவையான திட்டங்களை அரசு செய்தது. அதன்மூலமே ஏழைகளின் துயர்துடைக்கப்பட்டது; மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டன. அதே முறைப்படி நாம் செயல்பட்டால் நிச்சயமாக நம் மக்கள் வட்டியிலிருந்து விடுபடலாம். அதற்கான வரலாற்றுச் சான்றைப் பாருங்கள்.

 

இஸ்லாத்தின் இரண்டாம் கலீஃபா உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு காலத்திலும் (13-22ஹி) உமர் பின் அப்துல் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ் காலத்திலும் (99-101ஹி) ஸகாத் வறுமையைக் குறைப்பதற்கு அல்லது முற்றிலுமாக ஒழிப்பதற்கான ஒரு வெற்றிகரமான கருவியாக இருந்தது. உமர் பின் அப்தில் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ்  அவர்களின் ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் செழிப்பாக இருந்ததால் ஸகாத் பெறத் தகுதியானவர்கள் இல்லை. ஆகவே ஸகாத் சரியாக நிர்வகிக்கப்பட்டால், அது வறுமையைப் போக்க உதவும் என்பது வரலாற்றிலிருந்து நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

 

ஒருமுறை எகிப்து ஆளுநர் உமர் பின் அப்தில் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ்  அவர்களிடம் ஸகாத் பெறத் தகுதியான நபரைக் கண்டுபிடிக்க முடியாததால் அந்த நிதியை எவ்வாறு செலவு செய்வது எனக் கேட்டார். அதற்கு உமர் பின் அப்தில் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ், “அடிமைகளை வாங்கி விடுதலை செய்யுங்கள்; பயணிகள் ஓய்வெடுக்கத் தங்குமிடம் கட்டுங்கள்; இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் செய்துகொள்ள உதவித்தொகை வழங்குங்கள் என்று பதிலளித்தார்கள்.

 

ஸகாத் தொகையை வசூலித்து, இஸ்லாமியக் கருவூலத்தில் சேர்த்து அதன்மூலம் ஏழைகளுக்கு உதவிசெய்வதோடு இஸ்லாமிய வங்கியையும் ஏற்படுத்தலாம். இஸ்லாமிய வங்கி முறை எப்படி இயங்குகிறது என்றால் பொதுமக்கள் சிறுசேமிப்பாக வழங்குகிற அனைத்தும் முதலீடு என்ற அடிப்படையில் பெறப்படுகிறது. கூட்டாண்மை வணிகம் என்ற நிபந்தனையின்பேரில், வங்கி ஈடுபடுகின்ற வியாபாரத்தில் கிடைக்கின்ற இலாபத்தொகை பொதுமக்களுக்குப் பிரித்துக்கொடுக்கப்படுகிறது. எனவே இது வட்டியாகாமல் இலாபத்தில் கிடைக்கின்ற பங்காகக் கருதப்படுகிறது. இந்தப் பங்கின் அளவு குறிப்பிட்ட அளவாக இருக்காது. வங்கிக்கு இலாபம் எவ்வளவு கிடைக்கிறதோ அதைப் பொருத்து முதலீட்டாளர்களுடைய பங்கின் அளவு கூடலாம், குறையலாம் என்ற நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருப்பதால் யாருக்கும் எந்தச் சிரமமும் இல்லை. ஓராண்டு குறைவாகக் கிடைக்கின்ற இலாபத் தொகை அடுத்த ஆண்டு அதைவிடக் கூடுதலாகக் கிடைக்கலாம். ஆக இஸ்லாமிய வங்கி முறை நம்மை வட்டியிலிருந்து காப்பதோடு பயனையும் நல்குகிறது. அப்படியிருக்கும்போது நாம் ஏன் அதை இன்னும் பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்கின்றோம்?

 

இஸ்லாமிய வங்கிக்கு இந்திய நாட்டில் இதுவரை அனுமதியளிக்கப்படவில்லை என்றாலும் இஸ்லாமியச் சிந்தனையாளர்களின் கூட்டு முயற்சியின் பயனாக, இஸ்லாமியக் கூட்டுறவு வங்கி தொடங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் 31 இடங்களில் இந்தக் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னையில் திருவல்லிக்கேணியில் ஒரு கிளை இயங்கிவருகிறது.  அதுபோல் குறிப்பிட்ட மஹல்லாக்களில் நாமே புதிதாக வங்கியைத் தொடங்கலாம்.

 

இந்த இஸ்லாமிய வங்கி முறை ஃபிக்ஹ் சட்ட முறைப்படி எந்த வகையைச் சார்ந்தது என்று ஆய்வு மேற்கொள்ளும்போது, இது முளாரபா எனும் ஒரு வகை வியாபாரத்தின் அடிப்படையில்தான் செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியலாம். ஆம்! இதில் முதலாளி ஒருவர் தம் பணத்தை ஒப்பந்த அடிப்படையில் முதலீடு செய்வார். ஆனால் அவர் அந்த வியாபாரத்தில் ஈடுபடமாட்டார். பணத்தை வாங்கியவர் ஒப்பந்தத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட தொழிலில் அதை முதலீடு செய்து வியாபாரம் செய்து சம்பாதிப்பார். உழைப்பதற்கான ஊதியத்தை எடுத்துக்கொண்டு, இலாபத் தொகையை ஒப்பந்த அடிப்படையில் பங்கு பிரித்து, முதலாளிக்கும் கொடுத்துவிட்டு, தாமும் வைத்துக்கொள்வார். இதுவே முளாரபா ஆகும்.

 

முதலீடு செய்பவர் தனிமனிதராக இருப்பது ஒரு வகை. பலரும் முதலீடு செய்து சிலர் வியாபாரம் செய்து பொருளீட்டுவது மற்றொரு வகை. அந்த வகையில்தான் இஸ்லாமிய வங்கிகள் செயல்படுகின்றன. அதாவது வங்கியில் பணம் செலுத்துவோர் அனைவரும் முதலீட்டாளர்களே. அவர்கள்  செலுத்தும் தொகை அனைத்தும் வியாபாரத்தில் முதலீடு செய்யப்பட்டு, அதிலிருந்து கிடைக்கின்ற இலாபத் தொகை, ஆண்டுக்கொரு முறை, முதலீட்டாளர்கள் அனைவருக்கும் பிரித்து வழங்கப்படுகிறது. எனவே வணிகத்தில் கிடைக்கின்ற இலாபத் தொகைதான் வங்கிக் கணக்காளர்களுக்கு-சிறுசேமிப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறதே தவிர வட்டி கிடையாது. ஏனென்றால் அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி, வட்டியைத் தடை செய்துள்ளான்.” (2: 275) இந்த முளாரபாவில் இலாபம் என்பது குறிப்பிட்ட தொகையாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை செல்லாது. இலாபம் கூடலாம், குறையலாம் என்ற நிபந்தனையை ஏற்றுக்கொண்டால்தான் இந்த ஒப்பந்தமே செல்லும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

 

ஆக வட்டியிலிருந்து விலகி, நன்மையும் இலாபமும் கிடைக்கின்ற மாற்றுப் பொருளாதார வழியை நோக்கி நாம் ஏன் இன்னும் செல்லாமல் இருக்கிறோம்? இனிவரும் காலங்களிலாவது நம் சமுதாயப் பொறுப்பாளர்களும் தலைவர்களும் ஆலிம்களும் இணைந்து இத்தகைய முயற்சியில் ஈடுபட்டு, முஸ்லிம் சமுதாய மக்களைத் தீய வட்டியிலிருந்து முற்றிலும் விலக்கி, வட்டியில்லாப் பொருளாதாரத்தை அடைவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். சமுதாயப் பொறுப்பாளர்கள் முயல்வார்களா?

============








பெற்றோரை இணைத்த பிள்ளை (சிறுகதை) Short story

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

புதன், 7 பிப்ரவரி, 2024

பற்றுக்கோல் இல்லாப் படர்கொடி (சிறுகதை)



           -நூ. அப்துல் ஹாதி பாகவி

 

அது ஒரு கட்டுப்பாடான ஊர். ஓர் அரபுக்கல்லூரியும் அவ்வூரில் உள்ளது. அங்குள்ள ஆலிம்கள் அவ்வூரை இஸ்லாமியக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார்கள். பெண்கள் அனைவரும் புர்கா அணிந்துகொண்டுதான் வெளியே  செல்வார்கள். அந்நிய ஆண்களும் பெண்களும் பேசிக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் ஆண்கள் ஒன்றுகூடிப் பேசும்போது பெண்கள் குறுக்கிட மாட்டார்கள். குடும்பப் பெரியவர்கள் ஒன்றுகூடி ஏதேனும் முடிவெடுத்துவிட்டால் அதை எதிர்த்து, கருத்து ஏதேனும் தெரிவிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட கட்டுப்பாடான ஊரில் பிறந்தவள்தான் ஷமீமா.

 

ஷமீமாவுக்குப் பதினெட்டு வயதிலேயே திருமணம் நடந்துவிட்டது. மிகக் குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து இரண்டு பெண்பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். அவர்களை வளர்த்து ஆளாக்குவதிலேயே தன் இளமைப் பருவம் முழுவதையும் செலவிட்டாள். அவளுக்குத் தன் கணவன்மீது அவ்வளவாக ஈர்ப்பு இல்லை. கணவனுக்குத் தன்மீது ஈர்ப்பு இல்லை என்பதே அதற்கான காரணம். இந்த முடிவுக்கு அவள் எப்போது வந்தாள்?

திருமணத்திற்குப்பின் அவளுடைய கணவன் அப்துல் நாசிர் கூட்டுக் குடும்பமாக இருந்த தன்னுடைய வீட்டில் ஷமீமாவைக் குடிவைத்தான். கூட்டுக் குடும்பமாக இருந்ததால் தம்பதியர் தாம் விரும்பும் நேரத்தில் எதையும் செய்துவிட முடியாது. இருந்தாலும் தன் அறைக்குள் தன்னோடு சேர்ந்து படுப்பதற்குக்கூட வர இயலாத கணவனின் கையாலாகாத்தனத்தைக் கண்டபோதுதான் அவளுக்கு அவன்மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டது. அதனால் கணவன்மீது இருந்த சிறிதளவு ஈர்ப்பும் கரைந்துபோனது. ச்சீ... என்று வெறுத்துவிட்டாள். அது மட்டுமல்ல, எப்போது பார்த்தாலும் பொய்பேசுவது, கேலி கிண்டல் செய்வது-இவையே அவனது வாடிக்கை. எதையுமே முக்கியமாகக் கருதுவதில்லை. இதுவே காலப்போக்கில் அவள் அவனை வெறுத்தொதுக்குவதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது.

 

அவள் ஈன்றெடுத்த இரண்டு பெண்பிள்ளைகள்தாம் அவளுடைய உலகம். அவர்களையே எப்போதும் அவள் சுற்றிச் சுற்றி வந்தாள். ஆண்பிள்ளை இல்லாதது அவளுக்கு ஒரு குறைதான். இருந்தாலும் அவள் அதை வெளிக்காட்டிக்கொள்வதில்லை.

 

ஆதி மனிதர் மண்ணால் படைக்கப்பட்டார் என்பதற்கேற்பத் தன் கணவனும் களிமண்ணால்தான் படைக்கப்பட்டானோ எனக் கருதிக்கொள்வாள். அவனுக்குத் தன் குடும்பம், தன் பிள்ளைகள், தன் மனைவி என்ற எண்ணமே கிடையாது. தன் அண்ணன் எதைச் சொல்கிறாரோ அதுதான் வேதவாக்கு. தன் பிள்ளைகளின் படிப்பு குறித்தோ, மகிழ்ச்சி குறித்தோ எந்தக் கவலையும் கொண்டதில்லை. அவர்கள்மீது எந்த அக்கறையும் செலுத்தியதில்லை. எனவே ஷமீமாதான் எதற்கெடுத்தாலும் ஆம்பளையைப்போல் ஓட வேண்டும். பிள்ளைகளின் படிப்பிற்காகப் பள்ளிக்கூடம் அழைத்துக்கொண்டு செல்வது, குர்ஆன் வகுப்பிற்காக மத்ரஸா அழைத்துக்கொண்டு செல்வது உள்ளிட்ட அனைத்தையும் இவள்தான் கவனித்தாக வேண்டும். நாளடைவில் அந்த ஊரிலிருந்து தன் தாய்வீடு அமைந்துள்ள ஊருக்கே வந்து, தன் கணவனோடும் பிள்ளைகளோடும் தாய் வீட்டில் ஐக்கியமானாள். அங்கு அவளுடைய இரண்டு அண்ணன்களும் தாய்-தந்தையும் வாழ்ந்துவந்தனர். அவர்களோடு சேர்ந்து குடும்ப வாழ்க்கையைத் தொடர்ந்தாள். தன் அண்ணன்கள் கவனித்து வந்த பலசரக்குக் கடையைக் கவனித்து வந்தான் அவளுடைய கணவன் நாசிர். கூட்டுக் குடும்பமாக இருந்ததால் அவளுடைய குடும்பச் செலவுகளையும் அவளுடைய அண்ணன்களே கவனித்துக்கொண்டார்கள். 

 

ஒரு நாள் தன்னுடைய மூத்த பெண்ணின் திருமணப் பேச்சு வந்தது. அவளுடைய தந்தையின்  முடிவின்படி அவள் தன் மூத்த பெண்ணைத் தன் சின்னம்மா மகன் தாரிக்கிற்குத் திருமணம் செய்துவைக்க ஒத்துக்கொண்டாள். "தாரிக் மருத்துவம் படிப்பதால் பெண்ணும் மருத்துவம் படித்தால்தான் மதிப்பாக இருக்கும்'' என்று அவளுடைய சின்னம்மா கூற, தன் அண்ணன்களிடம் உதவி கேட்டு அவளை மருத்துவப் படிப்பில் சேர்த்துப் படிக்க வைத்தாள். மகளின் படிப்பு முடிந்ததும் இனிதே திருமணம் நடைபெற்றது. திருமணச் செலவு அனைத்தையும் அவளுடைய அண்ணன்களே ஏற்றுச் செய்து முடித்தார்கள்.

 

இதை நன்றாக நோட்டமிட்டுக்கொண்டே இருந்த அவளுடைய அண்ணிகள், தக்க தருணம் பார்த்து, ஷமீமாவைக் குத்திப் பேசத் தொடங்கினார்கள். அவளை ஏளனமாகப் பார்ப்பதும் கீழ்த்தரமாக மதிப்பதும் தொடர்ந்துகொண்டே வந்தது. வெடுக்கென ஏற்படுகின்ற சினமும் சுயமரியாதையை விரும்புகின்ற எண்ணமும் அவளுடைய அணிகலன்கள். ஆகவே சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் தன் கணவனையும் மிச்சமிருந்த ஒரு பெண் பிள்ளையையும் அழைத்துக்கொண்டு அவளுடைய சொந்த ஊரிலிருந்து சிங்காரச் சென்னையை நோக்கி வந்தாள்.... 

சனி, 3 பிப்ரவரி, 2024

தியாகம் (சிறுகதை- Short Story)



தியாகம்

 

-நூ. அப்துல் ஹாதி பாகவி

 

அந்த ஊரின் பெரிய பள்ளிவாசலில் புதிதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண்களுக்கான தொழுகைக்கூடத்திற்கு வெள்ளிக்கிழமை பயான் கேட்பதற்காக புஷ்ரா புறப்பட்டுச் சென்றாள். வழியில், எதேச்சையாக ருஷ்தாவைச் சந்தித்தாள். புஷ்ரா வீட்டில்தான் ருஷ்தா நீண்டகாலமாகக் குடி இருந்தாள். பிறகு அங்கிருந்து மாறி, பக்கத்து ஊருக்குக் குடிபோய்விட்டாள். காலம் உருண்டோடி பத்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. நீண்ட காலத்திற்குப்பின் இப்போதுதான் இருவரும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. புஷ்ராவின் வீட்டில் ருஷ்தா குடியிருந்தபோது இருவரும் தோழிகளைப் போலப் பழகி வந்தனர். பல்வேறு விஷயங்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.  அந்தரங்க விஷயங்களைக்கூட அலசுவார்கள். ஆனால் வரம்பு மீறமாட்டார்கள். புஷ்ராவைவிட ருஷ்தா வயதில் மூத்தவள். எனவே அவள் ருஷ்தாவை "அக்கா' என்றுதான் அழைப்பாள்.

 

"என்னக்கா சுகமா? பார்த்து எவ்வளவு நாளாச்சு? எப்படிக்கா இருக்கீங்க?'' - விசாரித்தாள் புஷ்ரா.  "அல்ஹம்து லில்லாஹ். நல்லவிதமா இருக்கேன். ஒரு கவலையும் இல்லை'' - ருஷ்தா பதிலளித்தாள். 

 

"என்னக்கா இந்தப் பக்கம்? எங்கெ வந்திருக்கீங்க?''

 

"பக்கத்துத் தெருவுல உள்ள எங்க அக்கா வீட்டுக்கு வந்திருக்கேன். நீ எப்டி இருக்கே?''

 

"ம். நான் அல்லாஹ்வின் கிருபையாலே நல்லா இருக்கேன்.''

 

"புஷ்ரா உனக்கு எத்தனை பிள்ளைங்க?''

 

"ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணுதான் ருஷ்தாக்கா''

 

"என்னம்மா சொல்றே. கல்யாணமாயி எத்தனையோ வருஷமாச்சு. ஒரே ஒரு குழந்தைதானா? அதுக்குப் பிறகு ஒன்னுமே இல்லையா?'' - ருஷ்தா ஆச்சரியமாகக் கேட்டாள்.

 

"அந்த ஒன்னுக்கே நான் என் கணவனோட படாதபாடு பட்டுட்டேன். அவருக்குக் கொடுக்க வேண்டிய மருந்தெல்லாம் கொடுத்து, பாதாம், பிஸ்தா, அக்ரோட் என வகை வகையாய்க் கொடுத்தேன்.  அதுக்குப் பிறகுதானே அல்லாஹ்வுடைய கிருபையாலெ ஒரு குழந்தை என்னோட வயித்துல உருவாச்சு.'' - புஷ்ரா கூறினாள்.

 

"ஏம்மா இப்டிச் சொல்றே? அவருக்கு என்ன கொற?'' - ஆர்வமாகக் கேட்டாள்.

 

"அவருக்கு ஆரம்பத்திலிருந்து உடலில் தெம்பு இல்லை, மனசுல தைரியம் இல்லை, மனைவியப் பார்த்தா காதல் இல்லை. மொத்தத்தில், ‘மனிதன் மண்ணால் படைக்கப்பட்டவன்' என்பது அவருக்குத்தான் சரியாப் பொருந்தும்'' என்று வருத்தத்தோடு சொல்லி முடித்தாள் புஷ்ரா....