சனி, 20 ஆகஸ்ட், 2022

உடலுறுப்புகளைத் தானம் செய்யலாமா?

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

-----------------------------

மனித உடலின் உறுப்புகள் ஒவ்வொன்றும் மிக மிக முக்கியமானவை. அவை நமக்கு இறைவனால்  அடைக்கலப்பொருள்களாக வழங்கப்பட்டுள்ளன. எனவே அவற்றைப் பேணி காப்பது நம் கடமை.  நம் உடலில் உள்ள ஓர் உறுப்பு பாதிக்கப்பட்டாலும் அதைச் சரிசெய்வது அவ்வளவு எளிதானதன்று.  இன்று இருசக்கர வாகனங்களிலும் மகிழுந்துகளிலும் பயணம் செய்யும் இளைஞர்கள் மிக வேகமாக அவற்றைச் செலுத்துவதால் அவை அவர்களின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகின்றார்கள். அதனால் உயிரிழப்புகளும் உடலுறுப்புகள் இழப்புகளும் எதிர்பாராவிதமாக ஏற்படுகின்றன. உயிரிழப்பு அடைந்தோரின் வாழ்க்கை அத்தோடு முடிந்துபோய்விடுகிறது. ஆனால் உடலுறுப்புகளை இழந்து எஞ்சிய வாழ்க்கையைக் கழிக்க மிகவும் சிரமப்படுவோரைக் காணும்போதுதான் பரிதாபமாக இருக்கிறது. அவர்கள் அடையும் வேதனையும் அனுபவிக்கும் இன்னல்களும் சொல்லி மாளாது. 

 

மற்றொரு புறம் தவறான உணவுப் பழக்கம், போதைப் பழக்கம் ஆகியவற்றால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, அறுவைச் சிகிச்சை செய்ய நேரிடுகிறது. சர்க்கரை-நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு காலை எடுக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டு விடுகிறது. அதன்பின் அவர்கள் தம் எஞ்சிய வாழ்க்கையை மிகவும் சிரமப்பட்டே கழிக்க வேண்டியுள்ளது. மது, புகையிலை, சிகரெட், பீடி, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு அடிமையாகி, அவற்றைத் தொடர்ந்து உட்கொண்டு அதனால் உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டு, கருகி, அழுகி விடுவதுண்டு. அவற்றை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி அப்புறப்படுத்திவிட்டுப் புதிய உறுப்புகள் பொருத்த வேண்டிய நிலை ஏற்படும். கணையம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடலுறுப்புகள் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுவதில்லை. அவை கிடைத்து, உரிய முறையில் பொருத்தப்பட்டாலும் மீண்டும் பழையபடி இயல்பாக வாழ முடியுமா என்பது கேள்விக்குறியே ஆகும்.

 

உடலுறுப்புகள் தானம் செய்யப்படுவதை இஸ்லாமிய மார்க்கம் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில் மனிதன் கண்ணியமானவன். அவனுடைய உடலுறுப்புகளை அவனுடைய பயன்பாட்டிற்காகவே இறைவன் படைத்துள்ளான். அவற்றை அவன் உரிய முறையில் பயன்படுத்துவதும் பாதுகாப்பதும் அவனுடைய கடமையாகும். அவற்றைப் பிறருக்கு வழங்க அவனுக்கு அனுமதி இல்லை; எந்த உரிமையும் இல்லை.

 

இந்த வகையில் ஒருவரின் சிறுநீரகம் பழுதடைந்துவிட்டால் மற்றொருவரின் சிறுநீரகத்தை அவருக்குப் பொருத்தலாம் என்பது இன்றைய மருத்துவ அறிவியல் வளர்ச்சியாகும். ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்கள் இருப்பதால் அவற்றுள் ஒன்றைத் தானமாகக் கொடுத்தாலும் அவரால் நல்லபடியாக வாழ முடியும் என்பது இன்றைய மருத்துவர்களின் வாதம். இதனால் சிறுநீரகத் தானம்  மக்கள் மத்தியில் ஊக்குவிக்கப்படுகிறது; விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொண்டோருள் பெரும்பாலோர் சில ஆண்டுகளுக்கு மேல் வாழ முடிவதில்லை என்பதே உண்மை வரலாறு.

மாற்றுச் சிறுநீரகங்களைப் பெறுவதற்காகக் காத்திருப்போர் பலர் பல தில்லுமுல்லுகளைச் செய்துபிறருக்கு முதலில் கிடைக்க வேண்டியதைத் தமக்கு வழங்கிடுமாறு கோரி, அதற்காக மருத்துவர்களிடம் பேரம் பேசுகிறார்கள். பல இலட்சங்கள் அதற்காகக் கைமாறுகின்றன. சிலரின் ஏழ்மையைப் பயன்படுத்தி, பணத்தாசை காட்டி அவர்களிடமிருந்து சிறுநீரகங்கள் பெறப்படுகின்றன. சிலரின் உடல்களிலிருந்து சிறுநீரகங்கள் திருடப்படுகின்றன. இதன் பின்னணியில் ஒரு கள்ளச் சந்தையே நடைபெற்று வருகிறது.

 

சிறுநீரகங்களைத் தாண்டி, இன்று பல்வேறு உறுப்புகள் மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்படுகின்றன. ஆனால் அந்த உடலுறுப்புகள் இறந்தோரின் உடலிலிருந்து தானமாகப் பெறப்படுகின்றன. இறந்தோரின் உடலிலிருந்து மருத்துவத் துறைக்குத் தேவையான உடலுறுப்புகள்  எடுத்துக் கொள்ளப்பட்டு எஞ்சிய பாகங்களைத் தைத்துக் கொடுத்துவிடுவார்கள். உறவினர்கள் அதை வாங்கிச் சென்று, இறுதிச் சடங்குகளெல்லாம் செய்தபின் எரிப்பார்கள் அல்லது புதைப்பார்கள். இது கடந்த கால நிகழ்வு. ஆனால் இன்று உடல் முழுவதுமே மருத்துவத் துறையால் பயன்படுத்தப்படுகிறது. கை, கால், தோல், முடி உள்ளிட்ட அனைத்தும் மாற்று உறுப்புகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

 

இறந்துபோகின்ற எல்லோரின் உடலும் மருத்துவத் துறைக்குத் தானமாகக் கிடைத்துவிடுவதில்லை; அதுபோலவே எல்லா உறுப்புகளும் தானமாகக் கிடைத்துவிடுவதில்லை. எனவே மனித உறுப்புகளைப் பெற, அவற்றின்மூலம் பணம் சம்பாதிக்க, மனித விரோதிகளால் மனிதர்கள் கடத்தப்படுகிறார்கள்; அவர்களிடமிருந்து உறுப்புகள் திருடப்படுகின்றன. மேலும் கொலையுண்ட அனைத்து உடல்களும் உடற்கூறாய்வு (போஸ்ட் மார்ட்டம்) மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றிலிருந்து உடலுறுப்புகள் எந்த அனுமதியுமின்றி எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவையெல்லாம் சந்தையில் கள்ளத்தனமாக விற்கப்படுகின்றன.

 

இன்று மனித உறுப்புகளைப் பெறுவதற்காகப் பல்வேறு சதிவேலைகளும் அரங்கேற்றப்படுகின்றன.  விபத்தில் சிக்குண்டு, தலையில் அடிபட்டு நிரந்தர மயக்கநிலைக்குச் (கோமா) சென்றுவிட்டால் அவ்வளவுதான். "மூளைச்சாவு' என்ற வார்த்தையை இன்றைய மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.  அந்த ஒரு வார்த்தையை வைத்தே அவரின் உறவினர்களைப் பயமுறுத்திவிடுகின்றனர். இனி இவரால் எழுந்து நடக்கவோ சுயமாக இயங்கவோ முடியாது. இவரை நீங்களே வீட்டில் வைத்துப் பார்த்துக்கொள்கின்றீர்களா என்று கேட்பார்கள். உணர்வற்ற ஓர் உடலை நாள்தோறும் சுத்தப்படுத்தி, தேவையான மருத்துவ உதவிகளைச் செய்து கவனித்துக்கொள்ள இன்றைய அவசர உலகில் யார் முன்வருவார்

 

அவர்களின் தயக்கத்தைக் காணும் மருத்துவர்கள் அவர்களிடம், "மூளைச்சாவு அடைந்துள்ள உங்கள் மகன் இனி எழுந்து நடக்கப்போவதில்லை. அவனுடைய உடலுறுப்புகளைத் தானமாகக் கொடுத்தால் அதன்மூலம் பலருக்கு மறுவாழ்வு கொடுக்கலாம். உங்களுக்குப் பொருளாதார  உதவியும் கிடைக்கும்'' என்று கூறி அவர்களின் மனதை மாற்றுவார்கள். கடைசியில் மருத்துவர்கள் தம் பேச்சில் வெற்றிபெறுவார்கள். அவனைக் கருணைக்கொலை செய்ய, பெற்றோர் ஒத்துக்கொள்வார்கள். பின்னர் அவனுடைய உடலுறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக எடுக்கப்பட்டு, உரியவர்களுக்குப் பொருத்தப்படும்.

 

இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்த வரை, கருணைக் கொலை என்பது அறவே கூடாது; முற்றிலும் தடை செய்யப்பட்டதாகும். ஒருவேளை அவர் இறந்துவிட்டாலும் அவருடைய உடலுறுப்புகள் வெட்டியெடுக்கப்படுவதை-அங்ககீனப்படுத்தப்படுவதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

 

இதற்கு மாற்று வழியை இஸ்லாம் கூறுகிறது. அதாவது மனித உடலில் ஏதேனும் உறுப்பு சிதைவடைந்துவிட்டால் அவ்வுறுப்பைச் செயற்கையாகச் செய்து பொருத்திக்கொள்ளலாம். மூக்கு, பல் உள்ளிட்ட உடலின் பாகங்கள் பாதிக்கப்பட்ட தோழர்கள் நபியவர்களிடம் இது குறித்துக் கேட்டபோது, தங்கத்தால் அல்லது வெள்ளியால் அவ்வுறுப்புகளைச் செய்து, பொருத்திக் கொள்ளலாம் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுமதியளித்தார்கள்.

 

அப்துர் ரஹ்மான் பின் தரஃபா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது: அறியாமைக் காலத்தில் நடந்த குலாப் போரில் என் பாட்டனார் அர்ஃபஜா பின் அஸ்அத் அவர் களது மூக்கு துண்டிக்கப்பட்டது. எனவே அவர்கள் வெள்ளியால் ஆன (செயற்கை) மூக்கு ஒன்றைச் செய்து) பொருத்திக்கொண்டார்கள். (ஆனால்) அதிலிருந்து அவர்களுக்குத் துர்நாற்றம் வீசியது. எனவே நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், (தங்க மூக்கு செய்துகொள்ள) பணித்தார்கள். அவ்வாறே, அவர்கள் தங்க மூக்கு செய்து (பொருத்திக்) கொண்டார்கள். (அபூதாவூத்: 3696)

 

இறந்தவரின் எலும்புகளை ஒடிப்பது அவர் உயிருடன் இருக்கும்போது உடைப்பதைப் போன்றதாகும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (இப்னுமாஜா: 1605) இறந்த பின்னும் ஒருவரின் உடலிலிருந்து உறுப்புகளை எடுக்கக்கூடாது என்பதற்கு இதனை அறிஞர்கள் ஆதாரமாக முன்வைக்கின்றார்கள். மார்க்க அறிஞர்கள் மத்தியில் கருத்துவேறுபாடு உள்ள மிக நீண்ட விவாதத்தை உடையது இச்சட்டம்.

 

தற்காலத்தில் மருத்துவத்துறை மிகுந்த வளர்ச்சி கண்டுள்ளது. அதனடிப்படையில் சென்னை, கோவை ஆகிய நகரங்களில் செயற்கை உறுப்புகள் அரசு சார்பாகத் தயாரிக்கப்பட்டு, ஏழைகள் உள்ளிட்ட அனைவருக்கும் பொருத்தப்படுகின்றன.

 

மேலும் பிரிட்டன்-அமெரிக்கா ஆகிய இருநாட்டு விஞ்ஞானிகள் கூட்டாகச் சேர்ந்து மனிதத் திசுக்களைச் செயற்கையான முறையில் உருவாக்கியுள்ளனர். இதனால் எதிர்காலத்தில் மனித உடல் உறுப்புகளைப் புதிதாக உருவாக்க முடியும். உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்காக இனிச் செயற்கை உறுப்புகளை நம்பி இருக்கவோ மாற்று உறுப்புகளுக்காகக் காத்திருக்கவோ தேவையில்லை. மாறாக இந்தத் திசுக்களைக்கொண்டு புதிய உறுப்புகளை உருவாக்கிவிடலாம் என்கின்றனர்.

 

ஈரலைச் செயற்கையாக உருவாக்குவது குறித்து 2011ஆம் ஆண்டு சங்கீதா பாட்டியா என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் ஆய்வு செய்தனர். அதனை அடிப்படையாகக்கொண்டே தற்போது  ஆய்வுக் கூடத்தில் செயற்கைக் கல்லீரல், செயற்கை இதயம் உருவாக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு 3டி பிரிண்ட் செய்யப்பட்ட காதுகள், கண்கள் செயற்கையாகத் தயாரிக்கப்படுகின்றன. அதாவது பாதிக்கப்பட்ட மனிதரின் உடலிலிருந்து செல்களைப் பிரித்தெடுத்து, அதைக்கொண்டே செயற்கையான முறையில் இயற்கையான உடலுறுப்புகளைப் போன்று உருவாக்குகிறார்கள். 


ஆக இத்தனை மாற்று வழிகள் இருக்கின்றபோது இவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர மனித உறுப்புகளைத் தானம் செய்யக்கூடாது. மனித உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்குத் தடைவிதித்தால்தான் உடலுறுப்புகளுக்காகக் குழந்தைகள், சிறுவர்-சிறுமியர், பெண்கள் உள்ளிட்டோர் கடத்தப்படுவதும் மூளைச் சாவு எனும் பெயரில் கருணைக்கொலை செய்யப்படுவதும் குறையும்.

===============






வியாழன், 18 ஆகஸ்ட், 2022

வாய்ப்புக் கிடைத்தால்...

 


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

ஒவ்வொரு மனிதனும் பாவம் செய்யும் இயல்பிலேயே படைக்கப்பட்டுள்ளான். எனவே பாவம் செய்வது மனித இயல்பு. அதேநேரத்தில் இறைத்தூதர்கள் பாவம் செய்வதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் ஆவர். பாவம் செய்துவிட்டவன் அதை உணர்ந்து வருந்தி, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவதே அதற்கான பரிகாரமாகும்.  அத்தோடு மீண்டும் அப்பாவத்தைச் செய்யாமல் தவிர்ந்துகொள்ள வேண்டும். ஒருவேளை மீண்டும் அவன் அதே பாவத்தை அல்லது வேறு பாவத்தைச் செய்துவிட்டால், அதற்காக மீண்டும் அவன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. அதற்காக அல்லாஹ் அவனை வெறுத்து ஒதுக்கிவிடுவதில்லை. மீண்டும் மீண்டும் அவன் தன் அடியாரை மன்னிக்கத் தயாராக இருக்கின்றான்.

 

தவறு செய்பவரைக் கண்டால் அவரைச் சமுதாயம் கேவலமாகப் பார்ப்பதும் வெறுத்தொதுக்குவதும் இயல்பு.  ஆனால் வாய்ப்புக் கிடைத்தால் ஒவ்வொருவரும் பாவம் செய்பவரே. இறையச்சமுடையோருக்கு இதில் விதிவிலக்குண்டு. வாய்ப்புக் கிடைக்காத வரை எல்லோரும் நல்லவர்கள்தாம். வாய்ப்புக் கிடைத்துவிட்டால் மனிதன் பாவம் செய்யத் தலைப்பட்டுவிடுகின்றான். அதுவரை அவன் தன் ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டிருக்கின்றான். ஆனால் மிகுந்த இறையச்சமுடையோருக்கு வாய்ப்புக் கிடைத்தாலும், ‘இறைவன் பார்த்துக்கொண்டிருக்கின்றான்; அவன் நம்மோடு இருக்கின்றான்என்ற அச்ச உணர்வின் மிகுதியால் பாவம் செய்வதிலிருந்து தவிர்ந்துகொள்கின்றார்கள்; ஷைத்தானின் தூண்டிலில் சிக்காமல் தப்பித்துக்கொள்கின்றார்கள்.

 

இறைத்தூதர் யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அமைச்சரின் மனைவி தவறான எண்ணத்தோடு அவரைப் பிடித்து இழுத்தபோது அந்தத் தவறிலிருந்து தப்பியோடினார்கள். அவ்வாறு ஓடியபோது பின்புறத்திலிருந்து அவர்தம் சட்டையைப் பிடித்து இழுத்தார். அதில் அவரின் சட்டை கிழிந்துவிட்டது. பின்னர் அதுவே அவர் நிரபராதி என்பதற்கான ஆதாரமாக அமைந்தது. ஆக இறையச்சமுடையோர் பாவங்களிலிருந்து தப்பித்து ஓடிவிடுகின்றார்கள். மற்றவர்களோ வாய்ப்புக் கிடைத்தால் பாவத்தைச் செய்துவிடுகின்றார்கள். சராசரி மனிதனின் நிலை இதுதான்.

 

ஷைத்தானின் தூண்டலால் உந்தப்படுகின்ற மனிதன் பாவம் செய்துவிட்டாலும், அவன் அதனை உணர்ந்து வருந்தி, தன்னிடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும் என்பதே இறைவனின் நாட்டம். அவ்வாறு பாவமன்னிப்புக் கோருவதையே இறைவன் விரும்புகின்றான். ஏனெனில் ஷைத்தான் மனிதனின் பகிரங்க விரோதி. பாவம் செய்யுமாறு மனிதர்களைத் தூண்டிக்கொண்டே இருப்பதுதான் அவனுடைய வேலை. இறையச்சமுள்ளோர் அவனுடைய தூண்டலுக்கு ஆட்பட்டுவிடாமல் பாவம் செய்வதைவிட்டுத் தவிர்ந்துகொள்கின்றார்கள். சராசரி மனிதர்கள் அவனுடைய தூண்டலுக்கு இரையாகி, பாவம் செய்துவிடுகின்றார்கள். அவர்களுக்கான பரிகாரம்தான் பாவமன்னிப்புக் கோரிக்கை. இதைப் புரிந்துகொண்டால் பாவம் செய்தவரைப் பரிகாசம் செய்யும் போக்கிலிருந்து நாம் விலகிவிடுவோம்.

 

பாவம் செய்துவிட்டு அதற்கான தண்டனையைப் பெற்றுக்கொண்டவர் அப்பாவத்திலிருந்து தூய்மையடைந்துவிடுகிறார் என்பதற்கான சான்றாகப் பின்வரும் நபிமொழி அமைந்துள்ளது.

இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த ஒரு பெண், தாம் விபச்சாரம் புரிந்துவிட்டதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர். 'நான் கர்ப்பிணிஎன்று கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்பெண்ணின் காப்பாளரை அழைத்து(வரச் செய்து) இவரை நல்ல முறையில் கவனித்துவாருங்கள். இவர் குழந்தை பெற்றெடுத்ததும் எனக்குத் தெரிவியுங்கள்என்று கூறினார்கள். காப்பாளர் அவ்வாறே செய்தார்.

பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உத்தரவிட, அப்பெண்ணின் மீது அவருடைய துணிகள் கட்டப்பட்டன. பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை வழங்குமாறு உத்தரவிட, அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. பின்னர் அவருக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (ஜனாஸா) இறுதித் தொழுகை நடத்தினார்கள்.

 

அப்போது உமர் ரளியல்லாஹு அன்ஹு, “அல்லாஹ்வின் தூதரே! நீங்களே அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கி(டச் செய்து)விட்டு, பின்னர் நீங்களே அவருக்காகத் தொழவைக்கிறீர்களே?” என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புத் தேடிவிட்டார். மதீனாவாசிகளில் எழுபது பேர்களுக்கு அது பங்கிடப்பட அவர்கள் அனைவருக்கும் அது போதுமானதாக அமையும். அல்லாஹ்வுக்குத் தன் உயிரையே அர்ப்பணித்த (இப்பெண்ணின் அர்ப்பணத்)தைவிடச் சிறந்த ஒன்றை நீர் பார்த்திருக்கிறீரா?” என்று கேட்டார்கள். (திர்மிதீ: 1355)

 

ஒருவன் பாவம் செய்துவிட்டு, உரிய முறையில் பாவமன்னிப்புக் கோரிவிட்டால் இறைவன் அவனது பாவமன்னிப்பை ஏற்றுக்கொண்டு அவனைத் தூய்மைப்படுத்திவிடுகின்றான். அதாவது அவனது பாவங்களை முற்றிலுமாக அழித்துவிடுகின்றான் என்பதை இதன் மூலம் அறிகிறோம்.  இது இருபாலருக்கும் பொதுவானதாகும்.

 

அலுவலகத்தில் இலஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டவரை நாம் கேவலமாகப் பார்க்கலாம்; பரிகாசம் செய்யலாம்கீழ்த்தரமானவன் எனக் கருதலாம். ஆனால் அவனுடைய இடத்தில் நாம் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். நாமும் ஒருவேளை அதே தவறைச் செய்திருக்கலாம் அல்லவா? அத்தகைய வாய்ப்பும் சூழ்நிலையும் நமக்கு அமையவில்லை. எனவே நாம் அந்தத் தவறைச் செய்யவில்லை.

விபச்சாரம் செய்துவிட்டுக் காவல்துறையால் பிடிக்கப்பட்ட பெண்ணைக் கேவலமாகப் பார்க்கிறோம். ஆனால் அவளுடைய சூழ்நிலை என்ன, எதற்காக அந்தச் செயலில் ஈடுபட்டாள் எனச் சிந்திப்பதில்லை. அவளுக்கு ஏற்பட்ட வறுமைநிலையோ, சிரமமோ, நிர்ப்பந்தமோ நமக்கு ஏற்பட்டிருந்தால் நம் நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்று யோசிக்க வேண்டும்.

 

ஒருவன் பணத்தைத் திருடிவிட்டுக் காவல்துறையில் மாட்டிக்கொள்கிறான்; சிறையில் அடைக்கப்படுகின்றான். நாளிதழில் அவனுடைய நிழற்படத்தோடு செய்தி வருகிறது. அதைப் படிக்கின்ற நாம் அவனைக் கேவலமாகத் திட்டுகிறோம்; அசிங்கமாகப் பார்க்கிறோம். ஆனால் அவன் திருடியதற்கான காரணம் என்ன, ஏன் இந்தச் செயலைச் செய்தான் என்றெல்லாம் சிந்தித்தால், அவனது நிலை குறித்து விசாரித்தால் அவனுடைய உண்மை நிலை புரியும்; அவனுடைய சூழ்நிலையும் விளங்கும். எத்தனையோ பேர் சூழ்நிலைக் கைதிகளாய் மாட்டிக்கொண்டு தவறு செய்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

 

திருடுமாறும் பிச்சையெடுக்குமாறும் விபச்சாரம் செய்யுமாறும் அநியாயக்காரர்களால் பலர் தூண்டப்படுகின்றார்கள்; நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். அவர்களின் நிர்ப்பந்தத்தின் காரணமாகவே பலவீனர்கள் அந்தத் தவறைச் செய்துவருகின்றார்கள். ஓர் அதிகாரி நேர்மையாகச் செயல்படவில்லை என அவர்மீது நாம் கோபம் கொள்கின்றோம். ஆனால் நேர்மையாகச் செயல்படவிடாமல் அவரை அவர்தம் மேலதிகாரி நிர்ப்பந்தம் செய்யலாம். அதனால் அவரால் நேர்மையாகச் செயல்பட முடியாமல் போயிருக்கலாம் என்று நாம் யோசிப்பதில்லை.

 

ஒரு நீதிபதி நியாயமாகத் தீர்ப்புக் கூறவில்லை என அவர்மீது நாம் கோபம்கொள்கிறோம். ஆனால் அவர் நீதியோடும் நேர்மையோடும் தீர்ப்பளித்தால் அவருடைய குடும்பத்தைச் சிதைத்துவிடுவதாக ஓர் அநியாயக்கார அரசியல்வாதி மிரட்டுகிறான். எனவே அவரால் நேர்மையாகவும் நீதியாகவும் தீர்ப்பளிக்க இயலாமல் போகலாம். அந்த நிர்ப்பந்தத்தையும் மீறி ஒருவர் நீதியோடும் நேர்மையோடும் வழக்கை விசாரிக்கத் தொடங்கினால் அவர் அந்த அநியாயக்காரனால் கொல்லப்படுவார் என்பது உறுதி. கடந்த காலங்களில் இதைத்தான் நாம் கண்டிருக்கிறோம்.

 

ஆக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நிர்ப்பந்தம் இருக்கலாம். அரசியல் ரீதியான அழுத்தம், மேலதிகாரியின் நிர்ப்பந்தம், அநியாயக்காரர்களின் அடக்குமுறை என ஏதோ ஒரு வகையில் அழுத்தமோ நிர்ப்பந்தமோ நெருக்கடியோ இருக்கலாம். அதுவே அவர்கள் தவறு செய்யக் காரணமாக அமைந்துவிடுகின்றது; அல்லது நியாயமாக நடந்துகொள்ள முடியாமல் போய்விடுகிறது. ஆகவே அத்தகையோர்மீது நாம் கோபம்கொள்ளாமல் மேலாதிக்கம் செய்வோர்மீதுதான் நாம் கோபம் கொள்ள வேண்டும். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் பேருதவியாகும்.

 

ஆக ஷைத்தானின் தூண்டலாலும் அநியாயக்காரர்களின் வற்புறுத்தலாலும் பலர் தவறு செய்துகொண்டிருக்கின்றார்கள்; வாய்ப்புக் கிடைத்தால் பலர் தவறு செய்யத் துணிந்துவிடுகின்றார்கள்; பலர் வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில் இறையச்சம் மிகுந்தோரே வாய்ப்புக் கிடைத்தாலும் இறைவனை அஞ்சி, தவறு செய்வதைவிட்டுத் தவிர்ந்துகொள்கின்றார்கள். அத்தகைய இறையச்சம் மிகுந்தோராகவும் இறைவன் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கின்றான்என்ற எண்ணத்தோடும் நம் கடமைகளைச் செய்ய முயல்வோம்.

=================================








சனி, 13 ஆகஸ்ட், 2022

உளூ செய்த பின் ஓத வேண்டிய துஆ



أشهد أن لا إله إلا الله وحده لا شريكَ له، وأشهد أنَّ محمدًا عبده ورسوله، اللهم اجعلني من التَّوابين، واجعلني من المتطهرين"

அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு  வரஸூலுஹு. 

அல்லாஹும்மஜ் அல்னீ மினத் தவ்வாபீன் வஜ் அல்னீ மினல் முத்ததஹ்ஹிரீன்.

பொருள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். அவன் தனித்தவன்; அவனுக்கு இணை யாருமில்லை. 

நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாராகவும் திருத்தூதராகவும் இருக்கின்றார்கள் என்றும்  நான் சாட்சி கூறுகிறேன்.

இறைவா! பாவமன்னிப்புத் தேடுவோருள் ஒருவராகவும் தூய்மையாளர்களுள் ஒருவராகவும் என்னை ஆக்குவாயாக.

என்று ஓதினால் அவருக்காகச் சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படுகின்றன. அவர் விரும்பும் வாசல் வழியாக அதில் நுழைந்து கொள்ளலாம் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

(நூல் : திர்மிதீ)
_________________

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

இமாம்களின் திறமைகள் முடக்கப்படலாமா?

 

ஒரு பள்ளிவாசலில் இமாமாக உள்ள ஓர் ஆலிம், அப்பள்ளியில் இமாமாக இருந்து, சேவை செய்வதோடு  தம் பணி முடிந்துவிடவில்லை. தம்மால் இயன்ற வேறு பணிகளையும் செய்ய வேண்டும் என எண்ணுகிறார்.   ஆனால் அந்த எண்ணத்திற்குச் சமுதாயம் மதிப்பளிக்கிறதா என்பதே இன்று நம்முன் உள்ள கேள்வி.

ஓர் ஆலிமிடம் எத்தனையோ திறமைகள் இருக்கலாம். இமாமாக இருந்து பணியாற்றுகிற ஓர் ஆலிம் அரபு நூல்களை நன்றாகக் கற்றுக்கொடுக்கும் திறமைமிக்கவராக இருக்கலாம்; மக்கள் மத்தியில் சொற்பொழிவாற்றும் நாவன்மைமிக்கவராக இருக்கலாம். கணிதத்தில் திறன்மிக்கவராக இருக்கலாம். இன்னும் வேறு பல திறமைகளைக் கொண்டவராக இருக்கலாம்.

லுஹர் தொழுகைக்கு விடுப்புப் போட்டுவிடக்கூடாது என்ற எண்ணமே, வேறு எந்தப் பணியையும் செய்யவிடாமல் அவர்களைத் தடுத்துவிடுகிறது. ஐவேளையும் ஒருவரே தொழுகை நடத்த வேண்டும் என்ற நிர்வாகத்தின் நிர்ப்பந்தச் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ள அவர்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாமலும் எந்தப் பணியிலும் ஈடுபட முடியாமலும் தவிக்கின்றார்கள்.

அரபியில் எம்.ஏ. அல்லது எம்.ஃபில். படித்துப் பட்டம்பெற்றவராக உள்ள பலர் இன்று இமாமாகப் பணியாற்றுவதைக் காணலாம். அவர்கள் பக்கத்து ஏரியாவில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஓர் ஆசிரியராகப்  பணியாற்றலாம் என்றால், அது முடியுமா? லுஹருக்கு விடுப்புக் கிடைக்காததால் சிலரால் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகப் பணியில் சேர முடியவில்லை என்பதை அறிந்து வருந்துகிறோம். 

இமாம் ஒருவர் மிகுந்த சிரமப்பட்டு, பல்வேறு போராட்டங்களுக்குப்பிறகு தம் நிர்வாகத்தில் லுஹருக்கு விடுப்பு  எடுத்துக்கொள்ள அனுமதி பெற்றுவிட்டார். மறுநாள் குறிப்பிட்ட அந்த முஸ்லிம் பள்ளிக்கூடத்தில் அரபி ஆசிரியராகச் சேர்வதற்காகச் செல்கிறார். வழமையான நேர்காணல் முடிந்து, ஆசிரியப் பணியை வழங்கப்போகிற நேரத்தில், திடீரென அந்த நிர்வாகி, “நீங்கள் எங்காவது இமாமாக இருக்கின்றீர்களா?” என்று கேட்க, “ஆம்என்று அவர் பதிலளிக்கிறார். நாங்கள் வெள்ளிக்கிழமை உங்களுக்கு விடுப்புத் தரமாட்டோம்; இங்குதான் நீங்கள் தொழ வேண்டும். சம்மதமா?” என்று கேட்டு, அவருடைய கழுத்தில் ஒரு சுருக்குக் கயிறைப் போடுகிறார்.  ஒரு மணி நேரமாவது விடுப்புத் தாருங்கள், போதும்என்று கெஞ்சிப் பார்க்கிறார். கடைசியில் தோல்வியே மிச்சம்.

இவ்வாறு திறமையான ஆலிம்கள்-இமாம்கள் பலர் ஆங்காங்கே பள்ளிவாசல்களுக்குள் முடங்கிக் கிடக்கின்றார்கள் என்பது நிதர்சன உண்மை. பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக வாழலாம் என்று முயன்றால் சமுதாயம் தடைக்கல்லாக இருக்கிறது. இரட்டைச் சம்பளம்பெற்று வாழ்க்கையில் முன்னுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் நம் சமுதாய மக்கள் எவ்வாறெல்லாம் செயல்படுகின்றார்கள் பாருங்கள்.

பள்ளிவாசல் நிர்வாகிகளில் மிக அரிதாக நல்லோர்கள் சிலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களின் தாராளத்தன்மையால் இமாம்கள் சிலர் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்களாகவும் பேராசிரியர்களாகவும் பணியாற்றி வருவதைக் காண முடிகிறது; பேச்சாளர்களாக ஒவ்வோர் ஊருக்கும் செல்ல முடிகிறது; சிறப்பு வகுப்பு நடத்த வெளியூருக்குப் பயணிக்க முடிகிறது. 

அரபுக் கல்லூரி நிர்வாகிகளும் அங்ஙனமே தம் கயிற்றை இறுக்குகின்றார்கள். அங்கு பணியாற்றுகிற பேராசிரியர்கள் தமக்குக் கிடைக்கின்ற வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறையைப் பயன்படுத்தித்தான் பேச்சாளர்களாக ஆங்காங்கே சென்று வருகின்றார்கள். விடுமுறை கிடைப்பதில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால்தான், ஆலிம்கள் சிலர் பெண்கள் மத்ரஸாக்களில் பெயரளவில் ஆசிரியர்களாக இருந்துகொண்டு, நட்சத்திரப் பேச்சாளர்களாக நாட்டுக்குள் வலம் வந்துகொண்டிருக்கின்றார்கள்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் பணியாற்றும் அனைவருக்கும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கிடைத்துவிடுகிறது. ஆனால் இமாமாக உள்ளோருக்குத்தான் கழுத்தில் கயிறு போட்டுச் சுருக்கப்படுகிறது; இறுக்கப்படுகிறது. இமாம்களை இவ்வாறு முடக்கிப்போடுவதால் யாருக்கு என்ன பயன்?

இமாம்கள் தொழுகை நடத்துவதற்காக அவர்களுக்குச் சம்பளம் தரப்படவில்லை; அவர்களின் வாழ்வாதாரத்திற்காகத்தான் சம்பளம் தரப்படுகிறது என்பதை நிர்வாகிகள் உணர்ந்து, அவர்களின் விடுப்பு விஷயத்தில் தளர்வுப்போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். அதனால் இமாம்களாகிய அவர்களுக்கும்  சமுதாயத்திற்கும் பல்வேறு பயன்கள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. நிர்வாகிகள் யோசிப்பார்களா?

அன்புடன்

நூ. அப்துல் ஹாதி பாகவி

11.08.2022

12.01.1444

===============================

வியாழன், 28 ஜூலை, 2022

சதுரங்க விளையாட்டு



சதுரங்க விளையாட்டு விளையாடுவது கூடுமா, கூடாதா என்ற வினா முஸ்லிம்கள் மத்தியில் எழுவது இயல்பானது. சதுரங்க விளையாட்டு மூவகை உள்ளது. அதை வைத்துத்தான் அது கூடுமா, கூடாதா என்று சொல்ல முடியும்.
1. பந்தயம் கட்டி விளையாடுதல். அதாவது நான் வென்றால் நீ எனக்கு நூறு ரூபாய் தர வேண்டும். நீ வென்றால் நான் உனக்கு நூறு ரூபாய் தருவேன் என்று இருவரோ, இரு குழுவினரோ பணம் கட்டி விளையாடுதல். இது முற்றிலும் ஹராம்-தடைசெய்யப்பட்டதாகும். ஏனெனில் இது சூதாட்டம் ஆகும்.

2. கடமைகளை மறந்து விளையாடுதல். அதாவது தொழுகையை விட்டுவிடுதல், பெற்றோருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்யாதிருத்தல், மனைவி-பிள்ளைகளுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாதிருத்தல், பொய் சொல்லுதல், பொய்ச் சத்தியம் செய்தல் முதலானவை. அறிஞர்களின் ஏகோபித்த முடிவின்படி இதுவும் ஹராம்-தடைசெய்யப்பட்டதாகும்.

இறைநம்பிக்கை கொண்டோரே! நிச்சயமாக மது, சூதாட்டம், சிலை வணக்கம், அம்பெறிந்து குறிபார்த்தல் ஆகியவை ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க செயல்களுள் உள்ளவையாகும். ஆகவே, இவற்றிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.
மதுவாலும் சூதாட்டத்தாலும் உங்கள் மத்தியில் பகைமையையும் பொறாமையையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே, அவற்றிலிருந்து) நீங்கள் விலகிக்கொள்வீர்களா? (5: 90-91)
ஷைத்தான் மனிதர்கள் மத்தியில் சூதாட்டத்தின்மூலம் பகைமையை வளர்க்க முனைகின்றான். எனவேதான் அல்லாஹ் அதனைத் தடுக்கின்றான்.

3. மேற்கண்ட இரண்டும் இல்லாமல், பொழுதுபோக்கிற்காக விளையாடுதல். இது கூடுமா கூடாதா என்பதில் அறிஞர்கள் மத்தியில் கருத்துவேறுபாடு நிலவுகிறது. இதுவும் ஹராம்-தடைசெய்யப்பட்டதுதான் என்பதே அபூஹனீஃபா ரஹிமஹுல்லாஹ், அஹ்மத் பின் ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் ஆகியோரின் கூற்றாகும்.
இவ்வாறு விளையாடிக்கொண்டிருந்த ஒரு குழுவினரை அலீ ரளியல்லாஹு அன்ஹு கடந்துசென்றபோது, “நீங்கள் அமர்ந்து (வெகுநேரமாக) விளையாடிக்கொண்டிருக்கிற இந்தச் சிலைகள் (காய்கள்) என்ன?” என்று கேட்டார்கள். இதைக் கேட்டபோது அவர்களின் முகத்தில் ஒருவித வெறுப்புணர்வு வெளிப்பட்டது.


இது மக்ரூஹ் என்பதே இமாம் ஷாஃபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கூற்றாகும்.
சஈத் பின் ஜுபைர், சஈத் பின் அல்முஸய்யப், தாபியீன்களுள் ஒரு குழுவினர் பொழுது போக்கிற்காக இந்த விளையாட்டை விளையாடியுள்ளதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஆக இதில் மூவகை உள்ளது. இரண்டு வகைகள் தடைசெய்யப்பட்டவை. கடைசி வகை வெறுக்கத்தக்கது. இருப்பினும் அறிவுசார் பயன் கருதிச் சற்று நேரம் விளையாடுவதில் தவறில்லை என்றே தெரிகிறது. ஆனால் ‘விளையாட்டு வினையாகும்’ என்ற பழமொழியும் நம்மை எச்சரிக்கிறது. எனவே நாமும் எச்சரிக்கை உணர்வோடு இதனை எதிர்கொள்வோம்.

மேலும் இஸ்லாமிய மார்க்கம்
வீண்விளையாட்டுகளைத் தடைசெய்கிற அதேநேரத்தில், நீச்சல், அம்பெறிந்து பயிற்சி பெறுதல், ஈட்டி எய்தல், ஓட்டப்பயிற்சி பெறுதல், குதிரையேற்றம் முதலிய விளையாட்டுகளை மேற்கொள்ளுமாறு ஊக்குவிக்கிறது என்பதை இந்நேரத்தில் நம் நினைவில் பதிவுசெய்துகொள்வோம்.


அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி
28 07 2022
28 12 1443
=======================



 
x

வெள்ளி, 22 ஜூலை, 2022

ஞாயிறு, 19 ஜூன், 2022

சோம்பல் தவிர்ப்போம்!

 


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
----------------------------

"இறைவா! இயலாமை, சோம்பல் ஆகியவற்றிலிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்'' (புகாரீ: 2823) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிரார்த்தனை செய்துள்ளார்கள். ஓர் ஆணுக்குச் சோம்பல் வந்துவிட்டால் அவனது உழைப்பு முடங்கிப்போய்விடும். ஒரு பெண்ணுக்குச் சோம்பல் வந்துவிட்டால் அக்குடும்பமே செயலற்றுப்போய்விடும். சோம்பலின் கிளைதான் இயலாமை. சோம்பலால் இயலாமை ஏற்படுகிறது. இயலாமை காரணமாக இயங்காமல் இருப்பதால் சோம்பல் ஏற்படுகிறது. ஆக சோம்பலும் இயலாமையும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்.

ஆண்கள் சிலர் தம் சோம்பலால் சரியாக உழைக்காமல், தம் குடும்பத்தைக் கவனிக்காமல் இருப்பார்கள். சிலர் தம் மாமனார் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு, ஊர்சுற்றித் திரிவார்கள். இத்தகையோர் தம் சுயமரியாதை குறித்துச் சிறிதும் கவலைப்பட மாட்டார்கள்; சாடைமாடையாகத் திட்டினாலும் குத்திப் பேசினாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

இவர்களைப்போல் சுயமரியாதையின்றி வாழ நினைக்காமல் கண்ணியத்தோடும் மரியாதையோடும் வாழ நினைப்போர், சோம்பல் எனும் தீய குணத்திலிருந்து விடுபட வேண்டும்; அதற்காக இறைவனிடம் நாள்தோறும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
சோம்பலின் முதற்புள்ளி, அதிகாலை துயிலெழுந்து, பள்ளிவாசல் சென்று, கூட்டுத் தொழுகையை நிறைவேற்றாமையிலிருந்து தொடங்குகிறது. ஷைத்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் இரவில் மூன்று முடிச்சுகள் போடுவதாக ஒரு நபிமொழி கூறுகிறது.


நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சிலும், இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுப்பதற்காக எஞ்சி) இருக்கின்றது. ஆகவே, நீ தூங்கிக் கொண்டேயிரு என்று போதித்து (அவனை விழிக்க விடாமல் உறங்க வைத்து) விடுகின்றான். அவர் (அவனது போதனையைக் கேட்காமல் அதிகாலையில்) கண் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகின்றது. அவர் உளூச் செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்து விடுகின்றது. அவர் (தஹஜ்ஜுத் அல்லது ஃபஜ்ர்) தொழுதுவிட்டால் முடிச்சுகள் முழுவதுமாக அவிழ்ந்து விடுகின்றன. அவர் சுறுசுறுப்புடனும் உற்சாகமான மனநிலையுடனும் காலைப் பொழுதை அடைவார். இல்லையென்றால் மந்தமான மனநிலையுடனும் சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவார் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்கள்: புகாரீ: 3029, முஸ்லிம்: 1295)


அதிகாலை துயிலெழுந்து தொழுகாமல் தாமதமாக எழுந்தால் அவனுடைய மனத்தில் ஒருவிதச் சோம்பலும் சுறுசுறுப்பின்மையும் கூடாரமிட்டு அமர்ந்துவிடுகின்றன. பின்னர் அதுவே அவனுடைய வழக்கமாகிவிடுவதால் நாளடைவில் அவனுடைய மனத்தில் அவை குடிகொண்டுவிடுகின்றன.
அதேநேரத்தில் வைகறை துயிலெழுந்து பள்ளிக்கு விரைந்து சென்று, கூட்டுத் தொழுகையில் கலந்துகொண்டு புத்துணர்வோடு இல்லம் திரும்புகிற ஒருவரைச் சோம்பேறி என யாரும் சொல்ல முடியாது. அவர் நிச்சயம் சுறுசுறுப்பாக இயங்குவார். தம் கடமைகளைச் செவ்வனே செய்வதோடு, உழைத்துச் சம்பாதித்து, தாமும் உண்டு தம் குடும்ப உறுப்பினர்களையும் காப்பார். அத்தகைய சிறந்த மனிதராக வாழ சோம்பல் எனும் கெட்ட பழக்கத்தை உடனடியாகக் கைவிட்டுவிட வேண்டும்.


அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றாத காரணத்தால் உண்டாகிற சோம்பல், அவன் எவ்வளவுதான் குளித்தாலும் முழுகினாலும் அவனது மனத்திலிருந்து அகலுவதில்லை. அவன் செல்லுமிடங்களெல்லாம் அந்தச் சோம்பல் அவனைச் செவ்வனே இயங்கவிடாமல் தடுத்துவிடுகின்றது. உழைக்கவே சென்றாலும் எதுவும் கைகூடாமல் போய்விடுகின்றது. அவனோ அதிர்ஷ்டம் இல்லையென்பான்; எல்லாம் விதி என்பான். எப்போதும் அங்கலாய்த்தவாறே காணப்படுவான். இது எதனால் ஏற்பட்டது எனச் சிந்தித்துணரவே மாட்டான்.


ஒருவனின் சோம்பல் அவனது உழைப்பைத் தடுக்கிறது; தூக்கத்தை மிகைக்கச் செய்கிறது; இலவச இணைப்புகளாக நோய்களை உண்டுபண்ணிவிடுகின்றது. ஒரு மாணவனின் சோம்பல் அவனது படிப்பைக் கெடுத்துவிடுகின்றது. ஓர் இளைஞனின் சோம்பல் அவனது முன்னேற்றத்தைத் தடுத்துவிடுகின்றது. ஓர் ஆடவனின் சோம்பல் அவனது வாழ்க்கையைச் சீரழித்துவிடுகின்றது. ஒரு வியாபாரியின் சோம்பல் அவனது தொழிலைச் சிதைத்து, நட்டத்தை ஏற்படுத்திவிடுகின்றது. ஒரு தொழிலாளியின் சோம்பல் அவனது தொழிலை முடக்கிவிடுகின்றது. ஓர் உழைப்பாளியின் சோம்பல் அவனது உழைப்பைச் சுரண்டிவிடுகின்றது. ஓடியாடி விளையாட வேண்டிய ஒரு பிள்ளையின் சோம்பல் அவனது சுறுசுறுப்பை இழக்கச் செய்துவிடுகின்றது.


இன்றைய குடும்பப் பெண்களிடம் சோம்பல் மிகுந்து காணப்படுகிறது. சோம்பல் மிகுந்த பெண்கள் தம் வீட்டில் சமைப்பதற்குப் பதிலாக உணவகங்களில் தேவையான உணவுகளை வாங்கிக்கொள்கிறார்கள். சிலர் வீட்டில் சமைப்பதையே விட்டுவிடுகின்றார்கள். சிலர் இப்படியும் அப்படியும் செய்துகொள்கிறார்கள். அதாவது அவ்வப்போது உணவகங்களில் உணவை வாங்கிக்கொள்கிறார்கள். அவ்வப்போது வீட்டிலும் சமைத்துக்கொள்கிறார்கள். அவ்வாறு வீட்டில் சமைக்கும் உணவுகளின் மூலப்பொருள் கடைகளில் ஆயத்த நிலையில் (ரெடிமேட்) விற்கப்படுவதாக இருக்கும்.


அதாவது வீட்டில் அரிசியும் உளுந்தும் ஊறவைத்து, மாவரைத்துப் பக்குவப்படுத்தி தோசை, இட்லி என மனமகிழ்வோடு செய்து தம் குடும்ப உறுப்பினர்களுக்குப் பரிமாறுவது அக்காலப் பெண்களின் பழக்கம். இன்றும் இத்தகைய பெண்கள் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் இக்காலப் பெண்கள் பலர் ஒரு வாரத்திற்குத் தேவையான மாவை ஒரே நாளில் அரைத்து, குளிர்பதனப் பெட்டியில் வைத்துக்கொண்டு, அவ்வப்போது தேவைக்கேற்பப் பயன்படுத்தி வருகின்றார்கள்.

வேறு சிலர், வீட்டில் மாவரைக்கும் இயந்திரத்தை ஓரங்கட்டிவிட்டு, நாள்தோறும் தமக்குத் தேவையான மாவை, ஆயத்தநிலையில் விற்கும் கடைகளிலிருந்து வாங்கிக் கொள்கிறார்கள். சிலர் அதை மொத்தமாக வாங்கி, குளிர்பதனப் பெட்டியில் வைத்துக்கொண்டு, சிறிது சிறிதாக ஒரு வாரம் அல்லது பத்து நாள்கள் வரை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.


இவ்வாறு பயன்படுத்தப்படுகிற மாவு தனது ஆற்றலை இழந்துவிடுவதோடு, சிலவேளை நஞ்சாகவும் மாறிவிடுகின்றது. இத்தகைய மாவை உண்டு, அண்மையில் ஒரு குடும்பத்திலுள்ள நான்கு உறுப்பினர்களும் இறந்துவிட்ட செய்தியை நாளிதழில் நாம் படிக்க நேர்ந்தது. ஒரு நாள் அரைக்கின்ற மாவை மறுநாள் அல்லது அதற்கடுத்த நாள் வரை வைத்துக்கொள்ளலாம். மூன்றாம் நாளில் அது நன்றாகப் புளித்துப் போய்விடும். அதிலிருந்து துர்நாற்றம் வெளிப்படத் தொடங்கிவிடும். அதை குளிர்பதனப் பெட்டி மறைத்துவிடுவதால் அதன் கெடுதி தெரியாமல் மக்கள் பயன்படுத்திவருகின்றனர். இது சோம்பலின் உச்சமாகும்.

இதனால் நாளடைவில் நம் உடலின் ஆரோக்கியம் கெட்டு, பல்வேறு உபாதைகளுக்கும் நோய்களுக்கும் ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்வோம்.
குடும்பப் பெண்டிரின் சோம்பல் அவர்கள்தம் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தைக் கெடுத்து, பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடுவதோடு, சிலவேளை உயிரை மாய்த்துவிடுகிற ஆபத்தும் இருக்கிறது என்பதை அவர்கள் உணர வேண்டும். எஞ்சிய துவையல், குழம்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களைக் குளிர்பதனப் பெட்டியில் வைத்து, மறுநாள் அல்லது இரண்டு நாள்கள் கழித்து, அதை எடுத்துச் சூடுபண்ணாமல் அப்படியே உண்ணக் கொடுப்பது மிகவும் ஆபத்தானது. முற்காலங்களில் ஒரு நாள் செய்த குழம்பை இரண்டு நாள்கள்கூட வைத்திருப்பார்கள். ஆனால் அதை அவ்வப்போது சூடுபடுத்திக்கொள்வார்கள்.

அதனால் அது கெட்டுப்போகாமல் இருக்கும். ஆனால் தற்காலத்தில் குளிர்பதனப் பெட்டியில் வைத்து, மறுநாள் எடுத்து, அதைச் சூடுபடுத்தாமல் அப்படியே சிலர் பரிமாறுகின்றனர். இதனால் அவர்களும் நோய்வாய்ப்பட்டு, தம் குடும்ப உறுப்பினர்களும் நோய்வாய்ப்படக் காரணமாக இருக்கின்றார்கள்.


ஆரோக்கியம் இறைவன் நமக்கு வழங்கிய ஓர் அருட்கொடை. அதைப் பாதுகாத்துக்கொள்வது நமது கடமையாகும். மாறாக அதைக் கெடுத்துக்கொள்ளும் விதமாக நாம் நடந்துகொள்ளக்கூடாது. "பிறகு அந்நாளில் (உங்களுக்கு வழங்கப்பட்ட) அருட்கொடை குறித்து நீங்கள் நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்'' (102: 8) என்று அல்லாஹ் கூறுகின்றான்.

இங்கு கூறப்பட்டுள்ள "அருட்கொடை' என்பதற்கு "ஆரோக்கியம்' என்று திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

கிராமங்களைவிட நகரங்களில்தான் இந்நிலை மிகுந்து காணப்படுகிறது. இந்நிலையைக் குடும்பப் பெண்கள் மாற்றிக்கொள்ளவில்லையெனில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவமனையில் குடும்பம் நடத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.


ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்-சிறுமியர் உள்ளிட்ட பல்வேறு வயதுக்காரர்களும் சோம்பல் எனும் கெட்ட பழக்கத்தால் தமது ஆரோக்கியத்தை இழந்துவருகின்றார்கள். எப்போது பார்த்தாலும் நாற்காலியில் அமர்ந்துகொண்டே இருப்பதும் பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது. அதனால் கால்கள் நடக்க மறந்துவிடுகின்றன. பின்னர் சிறிதளவு தூரம் நடந்தாலும் கால்கள் நடக்க மறுக்கின்றன. நாளடைவில் கால்வலியும் மிகுதியாகி மூட்டுவலியும் சேர்ந்துகொண்டு அவர்களைப் பாடாய்ப்படுத்தும். இதுவே பெரும்பாலோரின் இன்றைய நிலை.


ஆக சோம்பலே எல்லா நோய்களுக்கும் அடிப்படைக் காரணமாக உள்ளது என்றால் அது மிகையில்லை. எனவே நாம் அனைவரும் சோம்பலைத் தவிர்த்து, அதற்கு எதிரான குணமாகிய சுறுசுறுப்பைக் கடைப்பிடிப்போம். எப்போதும் ஒரு துள்ளல் நிலையில் துரிதமாகச் செயல்பட நம்மை நாம் தயார் செய்துகொள்வோம். அதுவே நாம் இறுதி வரை ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.
================