புதன், 17 செப்டம்பர், 2014

இருதார மணம் ஷரீஅத்திற்கு எதிரானதா?


            -மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்.,

            உங்களுக்குப் பிடித்த பெண்களுள் இருவரையோ மூவரையோ நால்வரையோ மணமுடித்துக்கொள்ளுங்கள். (4: 3) ஒருவன் ஏதோ காரணத்திற்காக இரண்டாம் தாரமாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் அவனை இச்சமுதாயம் செய்யும் பரிகாசமும் கேலியும் கிண்டலும் கொஞ்ச நஞ்சமல்ல. இதோ போறானே, இவன் ரெண்டு பொண்டாட்டிக்காரன்; இவனுக்கு ஒன்னு இருக்கும்போதே ரெண்டாவது கேக்குதா?;  ஒன்னே வெச்சே கஞ்சி ஊத்த முடியல, இதுல ரெண்டாவது வேறயா?- இவை போன்ற கேலிப் பேச்சுகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாய நிலைதான் ஷரீஅத்படி இரண்டாம் திருமணம் முடித்த ஓர் ஆண் மகனுக்கு இருக்கிறது.

விபச்சாரம் செய்தவனைக்கூட இச்சமுதாயம் மன்னித்துவிடுகிறது. ஆனால் இரண்டாம் தாரமாக ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டால் அது ஷரீஅத்திற்கே எதிரானதைப் போன்ற, அருவருக்கத்தக்க செயலைச் செய்துவிட்டதைப் போன்ற முரண்பாடான தோற்றத்தை ஏற்படுத்தி வைத்துள்ளது இச்சமுதாயம்.

திருமணம் என்பது ஓர் ஆணுக்கான தேவை. சிலரின் தேவை ஒன்றுக்கு மேற்பட்டதாக இருக்கலாம். அதற்கான தீர்வை இஸ்லாம் கூறியிருக்கின்றது. அதை அவர் பயன்படுத்திக்கொள்ளும்போது அவரைக் குறை சொல்ல வேண்டிய அவசியமில்லை. இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படி, ஒருவனுக்கு ஒருத்தி என்பது கிடையாது. மாறாக ஒருவனுக்கு ஒன்று முதல் நான்கு வரை எனச் சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. நான்கிற்கு மேல் சென்றால்தான் பழிக்க வேண்டும்; இகழ வேண்டும்; தண்டிக்க வேண்டும். அதேநேரத்தில் ஒரு பெண்ணைப் பொறுத்தமட்டில் ஒருத்திக்கு ஒருவன் என்ற நிலைப்பாட்டைத்தான் இஸ்லாம் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு நாம் பன்முகக் கலாச்சார மக்களோடு இணைந்து வாழ்வதால், நமக்குக் கொடையாக வழங்கப்பட்டுள்ள இஸ்லாமியப் பண்பாடுகளையும் சட்டங்களையும் பின்பற்றச் சங்கடப் படுகின்றோம்; வெட்கப்படுகின்றோம். இஸ்லாமியப் பண்பாடுகள், சட்டங்கள், நெறிமுறைகள் ஆகியவற்றின் பயன்களை நாமே புரியாமல் இருக்கின்றோம்; புரிந்தோர் பிறருக்கு அதன் நன்மைகளைப் புரிய வைக்காமல் அமைதியாக இருக்கின்றோம். அதனால்தான் நாம் பல்வேறு சிக்கல்களுக்குள் சிக்குண்டதோடு அவற்றிலிருந்து மீள வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றோம் என்பது நிதர்சன உண்மை.

ஒருத்தி இருக்கவே இரண்டாவதாக ஒருத்தியை மணமுடிப்பது ஷரீஅத்திற்கு எதிரானதைப் போன்ற தோற்றம் புரையோடிப் போயிருப்பதால்தான் நீண்ட காலம் வாரிசே இல்லாத் தம்பதிகளாகச் சிலர் வாழ்வதை நாம் காணமுடிகின்றது. இறுதி வரை வாரிசே இல்லாமல் அத்தம்பதிகள் இறந்தும் விடுகின்றனர். இந்நிலைக்கு ஆட்பட்ட ஓர் ஆண் தன் முதல் மனைவி மூலம் குழந்தையைப் பெற்றெடுக்க முடியாவிட்டால் மற்றொரு பெண்ணை மனைவியாக்கிக்கொண்டு அவள்மூலம் குழந்தையைப் பெற்றெடுத்துக்கொள்ள வழிகாட்டுகிறது இஸ்லாம். ஆனால் அத்தகைய ஒருவர் வேறொரு பெண்ணை மணமுடிக்க முன்வந்தால், அது அவ்வளவு எளிதன்று. ஏனென்றால் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வேற்று மதக் கலாச்சாரத்தில் மூழ்கிப்போயிருக்கிறது இஸ்லாமியச் சமுதாயம். அப்படியே அவர் மணமுடிக்க வேண்டுமென்றால் முதல் மனைவியை மணவிலக்குச் செய்ய வேண்டும்; அல்லது அவள் இறந்தபின் அவர் மணந்துகொள்ளலாம். இது தவிர வேறு வழியே இல்லை.

ஒரு மனைவியோடு வாழ்கின்ற ஒருவன், தன் மனைவியிடம் எத்தனையோ குறைகளைக் காணலாம். இல்வாழ்வில் நாட்டமின்மை, குழந்தைகள் பெற்றுக்கொள்ள விருப்பமின்மை, இரத்தசோகை, சர்க்கரை நோய் போன்ற தீராத நோய்கள் உள்ளிட்ட எத்தனையோ குறைபாடுகளைக் காணலாம்.  ஆனால் அவன் பெருந்தன்மையோடு அந்த மனைவியோடு வெறுமனே வாழ்ந்துகொண்டு, வேறொரு பெண்ணையும் மணந்து கொள்ளலாம் என எண்ணுகின்றான். இவ்வளவு காலம் தன்னோடு வாழ்ந்தவளைத் திடீரென ஏன் மணவிலக்குச் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு  இரண்டாம் தாரமாக ஒருத்தியை மணந்துகொள்ள நாட்டம் கொள்கின்றான். ஆனால் இத்தகைய இளைஞனுக்கு இச்சமுதாயம் அவ்வளவு எளிதில் பெண் கொடுத்துவிடாது. ஏன், ஒரு கைம்பெண்ணோ, மணமுறிவு பெற்றவளோகூட அவ்வளவு எளிதில் முன்வருவதில்லை; வாழ்க்கையைப் பங்குபோட்டுக்கொண்டு விட்டுக் கொடுத்து வாழ எப்பெண்ணும் முற்படுவதில்லை. மேலும் ஷரீஅத்திற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. 

ஒருவனுக்கு ஒருத்தி இருக்கவே இரண்டாம் தாரமாக மற்றொருத்தியை மணந்துகொள்வதற்கான இயல்பான சூழ்நிலை சமுதாயத்தில் இல்லாததால்தான், அதிகமான மணமுறிவுகள் (தலாக்) நிகழ்கின்றன. ஆம், தன் மனைவி அடிக்கடி சண்டைபோடுகிறாள்; அடிக்கடி கோபப்படுகின்றாள்இத்தகைய ஏதோ காரணத்திற்காகத் தன் மனைவியைப் பிடிக்கவில்லை. சரி, அதைப் பொறுத்துக்கொண்டு வேறொரு பெண்ணையும் மணந்துகொண்டு வாழலாம் என்று நினைத்தால் இச்சமுதாயம் பெண் கொடுக்காது. மாறாக, ஏளனம் செய்யும்; ச்சீ எனத் துப்பும். அதற்காக இவளை மணவிலக்குச் செய்துவிடுவதுதான் ஒரே வழி. அப்போதுதான் நாம் வேறொரு பெண்ணை மணந்துகொள்ள முடியும் எனத் தீர்மானித்துவிடுகின்றான். அதனால்தான் மணவிலக்குகளும் மணமுறிவுகளும் தொடர்கின்றன.

மணவாழ்க்கையை இழந்த பெண்கள், எவ்விதப் பொறுமையுமின்றி மணவாழ்க்கையை முறித்துக்கொண்ட ஆண்களை விரும்புவர். ஆனால் தன் மனைவியின் குறைகளைப் பொறுத்துக்கொண்டு பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் வாழ்கின்ற ஓர் ஆண், இரண்டாம் தாரமாக மற்றொரு பெண்ணை மணமுடித்துக்கொள்ள முன்வந்தால் அவனைக் கேலியும் கிண்டலும் செய்வர்; எள்ளிநகையாடுவர்; புறக்கணிப்பர்.

இன்னும் சற்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், இரண்டு, மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு, எதிர்பாராவிதமாக இல்வாழ்வை இடையிலேயே இழந்துவிட்ட பல பெண்கள் இச்சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள்கூட ஓர் ஆடவனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட முன்வருவதில்லை. தனக்கும் தன் குழந்தைகளுக்கும் ஒரு காப்பாளனாக இருக்கட்டுமே என்ற எண்ணமில்லை. தனக்கெனத் தனியாக ஒருவன் வேண்டும்; அவனுக்கு ஏற்கெனவே மனைவி இருக்கக்கூடாது என்ற நிபந்தனையோடுதான் திருமணத் தகவலுக்கான வலைத்தளங்களில் பதிவு செய்து வைக்கின்றார்கள் பன்முகக் கலாச்சாரத்தில் ஊறிப்போய்விட்ட  இம்மங்கையர்.

ஒருவன் நல்லதொரு நிறுவனத்தில் பணியாற்றுகின்றான்; கை நிறையச் சம்பாதிக்கின்றான்ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியை வைத்து வாழ்க்கை நடத்த முடியும்; உடல்ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் எந்தக் குறையுமில்லை. இத்தகைய ஒருவனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட இச்சமுதாயத்தில் ஒரு பெண் உண்டா? ஒரு விதவைப் பெண்ணாவது முன்வருவாளா? வாழ்க்கையில் கையறு நிலையில் உள்ள, குழந்தையோடு மணவாழ்க்கையை இழந்துவிட்ட மங்கையாவது அவனை ஏற்றுக்கொள்வாளா?

ஒருவன் ஒரு பெண்ணை இரண்டாம் தாரமாக மணமுடித்துக்கொள்ள அவன் உடல்ரீதியாகத் தகுதியானவனா என்பதைத்தான் முதலாவதாக நோக்க வேண்டுமே தவிர, பொருளாதார ரீதியாகத் தகுதியானவனா என்ற கோணத்தில் உற்று நோக்குவது சமுதாயத்தின் அறியாமையேயாகும். ஏனெனில் இவ்வுலகில் வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் உணவு கொடுக்கும் பொறுப்பு அல்லாஹ்வின் கையிலுள்ளது. அது குறித்துக் கவலை கொள்ள வேண்டிய தேவையே இல்லை. அல்லாஹ்  திருக்குர்ஆனில் கூறுகின்றான்: (மனிதர்களே!) நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொலை செய்து விடாதீர்கள். நாமே அவர்களுக்கும் உங்களுக்கும் உணவளிக்கின்றோம்.   (17: 31) உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை. அவை (வாழ்ந்து) இருக்குமிடத்தையும், அவை (இறந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிந்தே இருக்கிறான். (11: 06) ஒருத்தி இருக்கும்போது இரண்டாவதாக மற்றொருத்தியைத் தாரமாக்கிக் கொள்பவனுக்கு அதற்கேற்றாற்போல் உணவு வழங்குவது இறைவனின் பொறுப்பு. மேலும், நீங்கள் பெற்றெடுத்த பிள்ளைக்கு உணவு கொடுக்க முடியாமல்தான் அவளுக்குத் திருமணம் செய்துகொடுக்கின்றீர்களா? இல்லையே!
திருமணம் பாலுணர்வின் வடிகால் என்று எண்ணுவதைத் தவிர, ஒருவன் ஒரு பெண்ணை மணந்துகொள்வதன்மூலம் வேறு எத்தனையோ தேவைகள் இருக்கின்றன. அவ்விருவரும் நிறைவேற்ற வேண்டிய எத்தனையோ சமுதாயப் பொறுப்புகள் இருக்கின்றன; அவ்விருவரும் இணைந்து சாதிக்க வேண்டியவை இருக்கின்றன. ஒருவன் தன் மனைவியரோடு இணைந்து சமுதாயச் சேவைகள் செய்யவோ, இயலாத மக்களுக்கு உதவிகள் செய்யவோ, மார்க்கப் பிரச்சாரம் செய்யவோ, மார்க்கச் சட்டங்களைப் போதிக்கவோ விரும்பலாம். இவற்றையெல்லாம் யாரும் தொலைநோக்குப் பார்வையோடு சிந்திப்பதே இல்லை; திருமணம் என்றவுடன் சிந்தையில் முந்திக்கொண்டு வந்து நிற்கும் ஒன்றை மட்டும் நினைத்துக்கொண்டிருப்பதே நம்முள் பலரின் வாடிக்கை. அதனால்தான்  ஒருவன் இரண்டாம் தாரமாக ஒருத்தியை மணந்துகொண்டான் என்று கேள்விப்பட்டதும் ஏளனம் செய்யத் தொடங்கிவிடுகின்றார்கள்.

ஷரீஅத் சட்டப்படி இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட முன்வராத பெண்கள் அல்லது தம் மகளை இரண்டாம் தாரமாக மணமுடித்துக் கொடுக்க முன்வராத பெற்றோர், "இச்சமுதாயத்தில் வரதட்சணை மிகுந்துவிட்டது; இளைஞர்கள் வரதட்சணை வாங்கிக்கொண்டுதான் மணமுடிக்கின்றார்கள்'' என்று பேசுவது எவ்வகையில் நியாயம்? மக்கள் ஷரீஅத் சட்டங்களைப் பின்பற்றி வாழ முனையாதபோது, சமுதாயத்தில் தமக்கெதிரான பழக்கவழக்கங்கள் உண்டாகத்தான் செய்யும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அது அவர்களுக்குப் பாதகமாக அமையும்போதுதான் அதன் வலியையும் வேதனையையும் அவர்கள் உணர்வார்கள்.

இளவயதில் வாழ்க்கையை இழந்தவள்; பிள்ளையைப் பெற்றுக்கொண்டு இளவயதில் கணவனை இழந்தவள்; பிள்ளையின்றி வாழ்க்கையை இழந்து முப்பது வயதைத் தாண்டிவிட்டவள்; வாழ்க்கையை இழந்து, பிள்ளைகளை வைத்துக்கொண்டு பணிக்குச் செல்பவள்; பணிக்குச் செல்லாமல் கையறு நிலையில் இரண்டு, மூன்று குழந்தைகளோடு தாய் வீட்டில் வாழ்க்கையை வெறுமனே கழித்துக்கொண்டிருப்பவள்-இப்படிப் பல்வேறு நிலைகளில் நம் சமுதாயப் பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் எதிர்காலம் சீரும் சிறப்புமாக அமைய ஷரீஅத் தெளிவான, எளிய வழியைக் காட்டியிருக்கின்றது.

எனவே தம் வாழ்க்கை இம்மையில் இஸ்லாமிய மார்க்கச் சட்டப்படி அமைய வேண்டும் என்ற நாட்டமுள்ள பெண்கள் பிற மதக் கலாச்சாரப் பழக்கவழக்கங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தன்னை மணக்க வரும் ஆடவனுக்கு, தான் எத்தனையாவது தாரம் என்று பாராமல், தன்னை இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளுக்கு உட்பட்டு வாழ அனுமதிப்பானா என்ற கோணத்தில் மட்டும் பார்த்து மணந்துகொள்ள முன்வாருங்கள். அல்லாஹ்விற்காகவும் அவனுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்காகவும் விட்டுக் கொடுத்து, பொறுமையோடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள். இங்ஙனம் செயல்பட்டால் உங்களின் இம்மை-மறுமை வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
===============





புதன், 20 ஆகஸ்ட், 2014

படிப்பிற்காக வாழ்க்கையைத் தொலைக்கலாமா?


           -மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்.,

     கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமையாகும் (நூல்: இப்னுமாஜா: 220) என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஒவ்வொரு முஸ்லிம் எனும் வார்த்தைக் கோவையிலிருந்து ஆண்-பெண் அனைவர்மீதும் கட்டாயக் கடமை என அறிஞர்கள் விளக்கமளிக்கின்றார்கள்.

     கட்டாயக் கல்வி என்பது ஓர் ஆண் அல்லது ஒரு பெண் தன் இறைவனை அறிந்து அவனை வழிபடுவதற்கான கல்விதான் என மார்க்க அறிஞர்கள் விளக்கமளிக்கின்றார்கள். வேறு சிலர்  பயனுள்ள எக்கல்வியையும் படிக்கலாம் என்று கூறுகின்றனர். விரிவாக விளக்கமளிக்கின்ற மார்க்க அறிஞர்கள், ஓர் ஆண் அல்லது ஒரு பெண் தன் இறைவனை அறிந்து வழிபட என்னென்ன கல்வி தேவையோ அது மட்டுமே கட்டாயக் கல்வி. இது மனிதனுக்கு மனிதன் மாறுபடும். அதாவது சாதாரண நிலையில் உள்ள ஓர் ஏழைக்குத் தொழுகை, நோன்பு ஆகியன குறித்த கல்வியே கட்டாயக் கல்வியாகும். ஓர் ஏழை ஸகாத் பற்றியோ ஹஜ் பற்றியோ தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் ஒரு செல்வர், ஸகாத், ஹஜ் ஆகியன குறித்த அறிவைப் பெறுவது கட்டாயமாகும். ஏனெனில் அவை குறித்த தெளிந்த அறிவு இருந்தால்தான் அவர் உரிய முறையில் அக்கடமைகளை நிறைவேற்ற முடியும். ஆக கட்டாயக் கல்வி என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. இருப்பினும்  கற்றுக் கொடுக்கும் பொறுப்பிலுள்ள ஆசிரியர்கள் அனைத்தையும் படிப்பது அவசியமாகும். அவர்கள் ஆண்களாகவும் இருக்கலாம். பெண்களாகவும் இருக்கலாம். 

     இன்றைக்கு ஆண்கள், பெண்கள் இருபாலரும் மஸ்ஜிதுகளில் நடைபெற்று வருகின்ற பாலர் வகுப்புகளில் கற்பிக்கப்படுகின்ற தீனிய்யாத் கல்வியைக் கற்றுக் கொள்கின்றனர். அதற்கான வாய்ப்புகள் இன்றைக்கு நிறையவே உள்ளன. அவற்றைக் கற்றுக்கொண்டவர்கள் தம்முடைய மார்க்கக் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றி வருகின்றார்கள். பாலர் வகுப்பில் பங்குகொள்ளாதவர்கள்தாம் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதில் குறை செய்கின்றார்கள். அல்லது தப்பும் தவறுமாக ஏதோ ஒரு வகையில் நிறைவேற்றி வருகின்றார்கள்.

     இதனைத் தாண்டிச் சென்று, உலகுசார் கல்வியை ஆண்-பெண் இருபாலரும் பள்ளிக்கூடங்களில் பயில்கின்றனர். பாலர் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி என அரசு வகுத்திருக்கிறது. அனைவரும் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்ற நன்னோக்கம். இதை இஸ்லாம் அங்கீகரிக்கிறது. அதன்பின் பத்தாம் வகுப்பு வரை சிலரும் பன்னிரண்டாம் வகுப்பு வரை சிலரும் பயில்கின்றனர். இதில் குறையேதும் இல்லை.

     அதன்பின் கல்லூரி சென்று ஒரு பட்டதாரியாக ஆகிவிட வேண்டும் எனும் நோக்கில் ஆண்களும் பெண்களும் போட்டி போடுகின்றனர். தமக்குப் பிடித்த கல்லூரியில் சேர்ந்து தமக்குப் பிடித்த துறையில் ஒரு பட்டதாரியாகிவிடுகின்றனர். இதுவரை பயின்ற ஆண்டுகளைக் கணக்கிட்டு அவர்களின் வயதைக் குறித்தால் 21 முதல் 23 வரை இருக்கும். அதாவது திருமண வயது. இதுவரை தம் மகன் அல்லது மகளின் கல்வியில் கவனம் செலுத்திய பெற்றோர் திருமண வயதை நெருங்கிவிட்ட தம் பிள்ளைகளின் திருமணத்தில் கவனம் செலுத்துகின்றனர்; திருமணமும் செய்துவைத்துவிடுகின்றனர். ஆனால் அவர்களுள் விதிவிலக்கானவர்களும் சிலர் உள்ளனர். பட்டதாரி ஆகிவிட்ட தம் பிள்ளைகள் இன்னும் படிக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். எனவே அவர்கள் அடுத்த கட்டத்திற்குச் செல்கின்றனர். முதுகலைப் பட்டம் பெற வேண்டும் என்ற ஆவலில்  அந்தத் துறையில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுவிடுகின்றனர். அதில் ஈராண்டுகள் கழிந்துவிட்டன. அதன்பின்னராவது அவர்கள் தம் பிள்ளைகளின் திருமணத்தில் அக்கறை செலுத்துகின்றார்களா என்றால், இல்லை. மாறாக, அவர்களுள் சிலர் பணிக்குச் செல்ல எத்தனிக்கின்றனர்; வேறு சிலர் மேற்படிப்பைத் தொடரப் போவதாகக் கூறுகின்றனர்.


ஒரு சில ஆண்டுகளில் எம்.ஃபில். எனும் இளம் முனைவர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டு அதன்பின் ஏதோ ஒரு பணியில் சேர்ந்து நல்லபடியாகச் சம்பாதித்துக்கொண்டு இருக்கும்போது மாப்பிள்ளை தேடத் தொடங்குவார்கள். அத்தேடலிலேயே சில ஆண்டுகள் கழியும். இப்போது அப்பெண்ணுக்கு வயது முப்பது. அவர்களுள் சிலர் இன்னும் மேலே உயர நினைத்து முனைவர் பட்டத்திற்காக விண்ணப்பம் செய்கின்றனர். அதைப் பெற ஈராண்டுகள் முதல் ஐந்தாண்டுகள் வரை காத்திருக்க வேண்டும். அதன்பின் அப்பெண்ணின் வயது முப்பத்தைந்து.

     முப்பது வயதில் மணமுடிக்கின்ற ஒரு பெண், இந்தியத் திருமணச் சட்டப்படி 12 ஆண்டுகள் தன் இல்வாழ்க்கையை இழந்துவிட்டாள். முப்பத்தைந்து வயதில் மணமுடிக்கின்ற ஒரு பெண் 17 ஆண்டுகள் இல்வாழ்க்கையை இழந்துவிடுகின்றாள். பத்து முதல் இருபது ஆண்டுகள் நாம் பின்னோக்கிப் பார்த்தால் முப்பத்தைந்து வயதுள்ள ஒரு பெண் தன் பேரன் பேத்திகளோடு கொஞ்சி மகிழ்ந்துகொண்டிருந்திருப்பாள். ஒரு தலைமுறை வாழ்க்கையையே இழந்துவிட்ட இவள் முப்பந்தைந்து வயதிற்குப்பின் என்ன வாழப் போகிறாள்? இதுவரை நான் கூறிவருவது என்னுடைய சொந்தக் கற்பனை அன்று. திருமணத் தகவலுக்காக இயங்கிவருகின்ற வலைத்தளங்களைப் பாருங்கள். உண்மை புரியும். 

     அது மட்டுமல்ல, 30-35 வயதில் பணிக்குச் சென்று சம்பாதிக்கின்ற அந்தப் பெண், தன்னுடைய கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற விவரத்தைப் பட்டியலிடும்போது அவளுக்கு இந்த யுகத்தில் திருமணம் நடக்குமா என்றே கேட்கத் தோன்றுகிறது. படிப்பும் பணமும் இருப்பதால் அவளின் எதிர்பார்ப்புகள் மிகுந்து விடுகின்றன. அவ்வளவு எதிர்பார்ப்புகளும் நிறைவேறும் வகையில் மணமகன் கிடைக்கும் வரை திருமணத்தை ஒத்திப்போடுவதால் அவளுக்கு வயது மட்டும் ஏறிக்கொண்டே போகிறது.

     இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன? படிப்பு வேறு; பணி வேறு; இல்வாழ்க்கை வேறு என்பதைப் பகுத்துப் பார்க்கும் பக்குவம் வந்துவிட்டால் இந்நிலை மாறும். கல்வியை நாம் ஏன் கற்க வேண்டும்; எதற்காகக் கற்க வேண்டும் என்று தீர்மானிக்கத் தெரிய வேண்டும். பெரும்பாலோர் பணியை இலக்காக நோக்கியே படிக்கின்றார்கள். அது ஒரு தவறான இலக்கு; முட்டாள்தனமான இலக்கு. ஏனெனில் படித்தோர் பலர் ஏதோ ஒரு வேலையைத்தான் செய்துகொண்டிருக்கின்றார்களே தவிர உரிய பணி கிடைப்பதில்லை. சரி, முனைவர் (பிஎச்.டி) பட்டம் பெற்றுவிட்டால் உரிய பணி கிடைத்துவிடும் என்று யாராவது உத்திரவாதம் தரமுடியுமா? முனைவர்  பட்டம் பெற்ற பலர் உரிய பணியின்றி ஏதோ ஒரு பணியைச் செய்துகொண்டிருப்பதை நான் அறிவேன். மேலும் படித்துவிட்டதால் பணிக்குச் சென்றுதான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இஸ்லாமியப் பெண்களுக்கு இல்லை.

     படிப்பிற்கேற்ற மணமகனைத் தேடுதல் இரண்டாவது தவறு. நான் இளம் முனைவர் (எம்.ஃபில்.) பட்டம் பெற்றிருப்பதால் என் கணவர் முனைவர் (பிஎச்.டி.) பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது எனக்குச் சமமாக இளம் முனைவர் பட்டமாவது பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும் நான் இவ்வளவு சம்பாதிக்கிறேன்; எனக்குக் கணவனாக வருபவன் என்னைவிடக் கூடுதலாகச் சம்பாதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும் முற்றிலும் தவறு. இதனால் சமுதாயச் சீர்கேடுதான் விளையும் என்பதை இன்றைய பெண்கள் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.


     எனவே இஸ்லாமியச் சகோதரிகள், பிற சமுதாய மக்களோடு தம்மையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வதும், போட்டி போட்டுக்கொண்டு படிப்பதும், நிறைய சம்பாதித்து ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று எண்ணுவதும் அவர்களின் இல்வாழ்க்கையே இல்லாத வாழ்க்கையாக ஆக்கிவிடும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொண்டால்  மகிழ்ச்சி கூடும் என்பதை உணருங்கள். வீண் பகட்டிற்காகவும் பிறர் மெச்சுவதற்காகவும் நான் இவ்வளவு படித்திருக்கிறேன்; இவ்வளவு சம்பாதிக்கிறேன்; என் பிள்ளை இவ்வளவு உயரிய பள்ளியில் படிக்கிறான் என்று சொல்லிக்கொண்டு ஒரு போலியான வாழ்க்கை வாழத்தான் நீங்கள் ஆசைப்படுகின்றீர்களா என்பதை உங்கள் உள்மனதிடம் கேட்டுக்கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே தீர்ப்பு வழங்குங்கள்!



செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

நபிகளார் நவின்ற மூன்றுகள் (தொடர்-15)


(நரகம் தீண்டாத மூன்று கண்கள்)
                                                   

மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, ஃபாஸில் தேவ்பந்தீ, (பிஎச்.டி.)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூசயீத் அல்குத்ரீ (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: திண்ணமாக அல்லாஹ் மூன்று பேர்களைக் கண்டு சிரிக்கிறான். (மகிழ்ச்சியடைகிறான்). தொழுகைக்கான வரிசையில் நிற்பவர், நடு இரவில் தொழுகின்ற மனிதர், போர்க்களத்தில் போராடுகின்ற மனிதர். (படையினர் ஓடிவிட்ட பிறகும் அஞ்சாமல்) கடைசி வரை போராடுகின்ற மனிதர் என்று கூறியதாகக் கருதுகிறேன் என்று அறிவிப்பாளர் கூறுகிறார். (நூல்: இப்னுமாஜா-200)

ஜின் இனத்தையும் மனித இனத்தையும் என்னை வழிபடுவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை என்று (51: 55) உயர்ந்தோன் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான். எனவே ஜின்களுக்கும் மனிதர்களுக்கும் அல்லாஹ்வை வழிபடுவதே மிக முக்கியப் பணியாகும். அது தவிர உள்ள ஏனைய அனைத்துச் செயல்பாடுகளும் அதற்கு அப்பாற்பட்டதுதான். அக்கடமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தன்னைப் படைத்த இறைவனுக்கு அஞ்சி, தொழுகை வரிசையில் நிற்கின்றான் என்றால் அதைப் பார்த்து அல்லாஹ் மகிழ்ச்சியடைகிறான். என்னுடைய அடியான் நான் இட்ட கட்டளையைச் செவ்வனே நிறைவேற்ற நின்றுவிட்டான்; நான் இட்ட கட்டளைக்குப் பணிந்துவிட்டான் என்று கருதிச் சிரிக்கிறான்; உவகை கொள்கிறான்.

அது மட்டுமல்ல, முதல் மனிதரைப் படைத்து அவருக்குச் சிரம் பணியக் கட்டளையிடப்பட்டபோது அவருக்குப் பணிய மறுத்த ஜைத்தான் உன்னுடைய நல்லடியார்களைத் தவிர மற்ற அனைவரையும் நான் வழிகெடுப்பேன் என்று அறைகூவல் விட்டுவிட்டு வந்தானே அவனுடைய அறைகூவல், ஒருவன் தொழுகை வரிசையில் நின்று அல்லாஹ்வை வழிபட முற்படும்போது தோற்றுப்போய்விடுகிறது. அதை எண்ணியும் அல்லாஹ் மகிழ்ச்சியடையலாம்.

இரண்டாவது நடு இரவில் தொழுகின்ற மனிதரைக் கண்டு சிரிக்கின்றான். மற்றவர்களெல்லாம் துயில்கொள்ளும் நடுநிசியில் இவன் மட்டும் எனையஞ்சித் தன் தூக்கத்தைத் தூக்கியெறிந்துவிட்டு என்னை வழிபடுகின்றானே என்று நினைத்தும் ஜைத்தானின் அறைகூவலைத் தோற்கடிக்கச் செய்துவிட்டானே என்று கருதியும் சிரிக்கிறான்; உவகை கொள்கிறான்.

நடுநிசியில் தொழுவது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதாவது: மக்களே! (சலாம் எனும்) முகமனைப் பரப்புங்கள்; (பசித்தோருக்கு) உணவளியுங்கள்; மக்கள் உறங்கும்போது (நடுநிசி) இரவில் தொழுங்கள்; (இவற்றைச் செய்தால்) அமைதியான முறையில் சொர்க்கத்தில் நுழைவீர்கள். (திர்மிதீ: 2409) ஆகவே நடுநிசியில் தொழுவது அல்லாஹ்வின் அன்பிற்கும் அருளுக்கும் உரியதாகும்.

மூன்றாவது, போர்க்களத்தில் போராடுகின்ற மனிதர். இது பொதுவாகச் சொல்லப்பட்டாலும், படையினர் ஓடிவிட்ட பிறகும் அஞ்சாமல் கடைசி வரை போராடுகின்ற மனிதரையே குறிக்கிறது. தம் உயிரையும் துச்சமாகக் கருதி அல்லாஹ்விற்காக இறுதி வரை போராடுகின்ற ஒற்றை மனிதரைக் கண்டு அல்லாஹ் சிரிக்கிறான். ஜைத்தானின் அறைகூவல் தோற்றுப்போய்விட்டதை எண்ணி அல்லாஹ் மகிழ்ச்சி கொள்கிறான்.

மூன்று கண்களை நரகம் தீண்டாது. 1. அல்லாஹ்வின் பாதையில் பறிகொடுக்கப்பட்ட கண், 2. அல்லாஹ்வின் பாதையில் பாதுகாப்பு வழங்கிய கண், 3. அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத கண் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: முஸ்தத்ரக், 2430)

அல்லாஹ்வின் பாதையில் பறிகொடுக்கப்பட்ட கண் என்பது, அல்லாஹ்வின் பாதையில் எதிரிகளை எதிர்த்துப் போராடும்போது, எதிரிகளால் இழந்த கண். நபிகளார் காலத்தில் பல போர்கள் நடந்தன. அப்போது நபித்தோழர்கள் இஸ்லாமிய அறப்போரில் கலந்துகொண்டு தம் உடைமைகளை இழந்ததோடு தம் உயிர்களையும் இழந்தார்கள். அவர்களுள் சிலர் தம் உறுப்புகளை இழந்தார்கள். அதுபோன்று இழந்த உறுப்புகளுள் ஒன்றாகக் கண் இருந்தால் அக்கண்ணுக்கு உரிமையாளரை நரக நெருப்புத் தீண்டாது. இக்காலத்திலும் இஸ்லாமிய எதிரிகளால் முஸ்லிம்களின் உடலுறுப்புகள் சிதைக்கப்படுகின்றன; முஸ்லிம்கள் வெட்டப்படுகின்றார்கள். இத்தகைய முஸ்லிம்களுக்கும் நபிகளாரின் இக்கூற்று பொருந்தும்.

அல்லாஹ்வின் பாதையில் பாதுகாப்பு வழங்கிய கண். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் எதிரிகளை எதிர்த்துப் போராடுவதற்காகப் போருக்குச் செல்லும்போது இரவு நேரத்தில் சிலரைப் பாதுகாப்பிற்காக நிறுத்துவார்கள். அவர்கள் இரவு முழுவதும் துயில் கொள்ளாமல் தம் படையினரைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார்கள். தம் தூக்கத்தையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வின் பாதையில் விழித்திருந்த அந்தக் கண்களையுடையவர்களை நரக நெருப்புத் தீண்டாது.

அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத கண். அல்லாஹ்வின் பயத்தாலும் அச்சத்தாலும் அவனுடைய தண்டனையைப் பயந்து அழுத கண்களை நரக நெருப்புத் தீண்டாது. மேற்கண்ட இரண்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மட்டும் கிடைக்கப்பெற்ற வாய்ப்பு. சில நாடு, நகரங்களில் முஸ்லிம்கள் தாக்கப்படுகின்றார்கள். அவர்களுக்கு இக்காலத்திலும் அந்த வாய்ப்புக் கிடைக்கலாம். ஆனால் மூன்றாவது வாய்ப்பு மறுமை நாள் வரை உள்ள எல்லா முஸ்லிம்களுக்கும் கிடைக்கச் சாத்தியமுள்ளது. அல்லாஹ்வின் அச்சத்தால் ஒவ்வொருவரும் அழுகலாம். அதன்மூலம் நம் கண்களை நரக நெருப்பின் தீண்டுதலைவிட்டுத் தற்காத்துக் கொள்ளலாம்.

நான் அறிந்த அளவிற்கு நீங்கள் அறிந்திருந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 4621)  எனவே நாம் அல்லாஹ்வின் தண்டனையைப் பயந்து அவனை நினைத்து அழுதால் நம் கண்கள் நரக நெருப்பைவிட்டுப் பாதுகாக்கப்படும் என்பதில் ஐயமில்லை. அத்தகைய நற்பாக்கியத்தை உயர்ந்தோன் அல்லாஹ் நம் அனைவருக்கும் தருவானாக.




செவ்வாய், 15 ஜூலை, 2014

ஏற்பது இகழ்ச்சி!


                                    -மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்.,

பிறரைச் சார்ந்து வாழ்வதிலேயே சுகம் கண்டவர்கள் சுயமாக உழைத்து முன்னேறவோ சுயதேவைகளைச் சுயமாகப் பூர்த்தி செய்துகொள்ளவோ முயற்சி மேற்கொள்வதில்லை. பிறரைச் சுரண்டிப் பிழைத்தல், அல்லது பிறரிடம் கையேந்திப் பிழைத்தல் அவர்களின் தொழிலாகும். இன்று எங்கு நோக்கினும் கையேந்திகள் கணக்கின்றிக் காணப்படுகின்றனர். மக்கள் கூடுமிடங்களெல்லாம் அவர்களின் தொழிற்தளங்களாகும். கடற்கரை, பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையம், வழிபாட்டுத் தளங்கள், தெரு முனைகள் என அவர்களின் தளங்கள் விரிந்து கிடக்கின்றன.

உடல் ஆரோக்கியத்தோடும் கட்டுறுதியான உடலமைப்போடும் இருந்துகொண்டு பிறரிடம் தயக்கமின்றிக் கையேந்துகின்றார்கள். மனிதர்களின் இரக்க உணர்வைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இத்தகையோர் சாதி, மத வேறுபாடின்றி அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து காணப்படுகின்றார்கள். மிகுதியானோர் ஊர்விட்டு ஊர் சென்று கையேந்திப் பிழைக்கின்றார்கள். உள்ளூரில் சுயரூபம் தெரிந்துவிடும் எனும் அச்சத்தால் வெளியூருக்குச் சென்று வேடமிட்டுப் பிழைக்கிறார்கள். ஸகாத் வழங்கத் தகுதியானவர்கள்கூடப் பிறர் வழங்கும் ஸகாத்தைக் கைநீட்டிப் பெற வெட்கப்படுவதில்லை. 

யார் யாசகம் பெறத் தகுதியானவர்? எவர் சுயமாகச் சம்பாதிக்க முடியாத அளவுக்கு உடல்ரீதியாக இயலாதவராகவோ, பலவீனமானவராகவோ, உடல்நலம் குன்றியவராகவோ, ஊனமுற்றவராகவோ இருக்கின்றாரோ அவர் தம் பசியைப் போக்கிக் கொள்ளும் அளவிற்குப் பிறரிடம் யாசகம் பெறுவதில் தவறில்லை. இருப்பினும் அவர் தம் பசியைப் போக்கிக்கொள்ளும் நிலைக்கு மேற்பட்டு, சேமிக்கும் அளவிற்கு யாசகம் கேட்பது கூடாது. இதையே நபிகள் நாயகத்தின் கீழ்க்கண்ட கூற்றுகளிலிருந்து நாம் அறிய முடிகிறது.

மக்களிடம் யாசிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ள மனிதன் தனது முகத்தில் சதைத் துண்டு ஏதும் இல்லாதவனாகவே மறுமை நாளன்று வருவான். (நூல்: புகாரீ: 1474)

எவர் வறுமையின்றி யாசகம் கேட்கின்றாரோ அவர் (நரக) நெருப்புக் கங்கைச் சாப்பிடுபவரைப் போன்றவராவார். (நூல்: அஹ்மத்: 16855)

நபிகளார் காலத்தில் ஒருவர் யாசகம் கேட்டு வருகின்றார். அவர் ஓர் இளைஞர். அவரை அழைத்து அவருடைய வீட்டிலுள்ள ஏதேனும் பொருளை எடுத்துவரச் செய்து அதை மக்கள் மத்தியில் ஏலம் விட்டு இரண்டு பொற்காசுகளைப் பெற்று, அவரிடம் கொடுத்து, ஒன்றில் உன் குடும்பத் தேவையை நிறைவேற்றிக்கொள். மற்றொன்றில் ஒரு கோடரி வாங்கி வா என்று கட்டளையிட, அவர் அவ்வாறே ஒரு கோடரியை வாங்கி வந்து நபிகளாரிடம் கொடுக்க, நபிகளார் அதற்குத் தம் பொற்கரங்களால் ஒரு பிடியைப் போட்டுக் கொடுத்து, இதன்மூலம் விறகு வெட்டிப் பிழைத்துக்கொள் என்று கட்டளையிட்டார்கள்.

கட்டுடல் கொண்ட இளைஞர் மக்களிடம் யாசகம் கேட்டுப் பெறத் தகுதியற்றவர் என்பதால் அவருக்கு ஒரு தொழிலைச் சொல்லிக் கொடுத்து, அதன்மூலம் உழைத்துப் பிழைத்துக்கொள் என்று வழிகாட்டினார்கள் அண்ணலார். எனவே நாம் தர்மம் செய்யுமுன் யோசித்துச் செய்வது நல்லது. நாம் கொடுக்கின்ற தர்மத்தைப் பெற இவர் தகுதியானவரா? அல்லது நாம் தர்மம் கொடுத்து இவரைச் சோம்பேறியாக்குகின்றோமா? என்பதை யோசிக்க வேண்டும். சிலர் யாசகம் கேட்பதைத் தம் தொழிலாகவே ஆக்கிக்கொள்கிறார்கள். போதிய பணம் கிடைத்த பின்னரும் அதை வைத்து ஏதேனும் தொழில் செய்யலாம் என்று எண்ணுவதில்லை. அதிலேயே அவர்கள் சுகம் கண்டுவிடுகின்றார்கள்.

இதோ நம்மை நோக்கி புனிதமிகு ரமளான் மாதம் வருகிறது. எல்லோரும் அல்லாஹ்விற்காக உண்ணா நோன்பு நோற்று, தான தர்மங்கள் செய்து நன்மைகளை அறுவடை செய்யக் காத்திருக்கிறோம். ஆனால் நம்முள் வேறு சிலரோ இந்த ரமளானில் எவ்வளவு அறுவடை செய்யலாம். எத்தனை பள்ளிகளில் வசூல் செய்யலாம். எவ்வளவு ஆதாயம் பார்க்கலாம். என்னென்ன நொண்டிச் சாக்குகளைச் சொல்லி வசூல் செய்யலாம் என்று முன்னரே கணக்குப் போட்டுக்கொண்டிருக்கின்றனர்; திட்டமிட்டுக்கொண்டிருக்கின்றனர். ரமளான் மாதத்தை ஓர் அறுவடைப் பருவமாக எண்ணிக்கொண்டு ஒவ்வொரு மஸ்ஜிதையும் நோக்கிப் படையெடுத்துச் செல்லக் காத்திருக்கின்றனர்.

தொழுகை முடிந்து வெளியே வரும்போதும் உள்ளே செல்லும்போதும் கையேந்திகளின் தொல்லைகளை அனுபவிக்காமல் செல்ல முடியாது. இத்தகைய அவல நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது இந்தச் சமுதாயம்.  அதே நேரத்தில் சிலர் தம் கொடிய வறுமையிலும் பிறரிடம் கையேந்த வெட்கப்பட்டு, கிடைத்ததைச் சாப்பிட்டுக்கொண்டும் அல்லாஹ்வை ஐவேளை தொழுதுகொண்டு சுயமரியாதையோடும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இத்தகையோரைக் கண்ணுறும்போது திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறியுள்ள இறைவசனமே நெஞ்சில் நிழலாடுகிறது: மக்களிடம் அவர்கள் வற்புறுத்தி யாசிக்க மாட்டார்கள். (2: 273)

ஏற்பது இகழ்ச்சி என்று கூறிவிட்டுத்தான் ஐயமிட்டு உண் என்று ஔவைப் பாட்டி கூறியுள்ளார். இரண்டிற்குள்ளும் பொருட்செறிவு நிறைந்த அர்த்தங்கள் உள்ளன. பிறரிடம் கையேந்திப் பிச்சையெடுத்தல் இழிவான செயல் என்பதைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்துவிட்டு, உன்னிடம் கேட்டு வருவோரை விரட்டிவிடாதே. அவருக்கு ஐயமிட்டு, நீ உண் என்று செப்புகிறார்.

அதேபோல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தாழும் கையைவிட உயர்ந்த கையே சிறந்தது என்று கூறியுள்ளார்கள்.  நீ உன் வலக்கையால் செய்யும் தர்மம் இடக்கைக்குத் தெரியக்கூடாது என்றும் கூறியுள்ளார்கள். நபிகளாரின் இவ்விரண்டு கூற்றையும் ஒப்புநோக்கிப் பார்க்கும்போது, யாசகம் கேட்பதற்காக ஒருவன் தன் கையை நீட்டும்போது அவனது கை கீழே தாழ்கிறது. அவனுக்குக் கொடுப்பவனின் கை உயர்கிறது. ஆகவே ஒருவர் பிறரிடம் கையேந்தும்போது அவருடைய  சுயமரியாதையும் தாழ்கிறது என்று கூறி எச்சரிக்கை விடுக்கின்றார்கள். அதேநேரத்தில் யாசகம் கேட்போருக்குக் கொடுக்கும்போது விளம்பரமின்றிக் கொடுக்க வேண்டும் என்பதைத்தான் வலக்கையில் கொடுப்பது இடக்கைக்குக்கூடத் தெரியக்கூடாது என்ற கூற்று விளக்குகிறது.

திருக்குர்ஆனில் அல்லாஹ்வின் கூற்றை உற்று நோக்கும்போது, யாசகரை விரட்டாதீர் (93: 10) எனும் கட்டளை காணப்படுகிறது. ஆகவே யாசகம் கேட்பதோ, தர்மம் செய்வதோ தவறில்லை. ஆனால் அதில் ஒரு கட்டுப்பாட்டையும் நிபந்தனையையும் இஸ்லாம் விதிக்கிறது. ஒருவனின் சுய மரியாதைக்குப் பங்கம் வந்துவிடக் கூடாது என்று கருதுகிறது இஸ்லாம். ஆனால் யாசகம் கேட்போர் தம் சுயமரியாதையை இழந்து சுகமாக வாழ்வதற்காகப் பிறரிடம் கையேந்துவதற்கு வெட்கப்படுதில்லை  என்பது இன்றைய நிதர்சன உண்மை.

முக்காடு போட்டுக்கொண்டும் முகத்திரை அணிந்துகொண்டும் பெண்கள் பள்ளிவாசல்தோறும் கையேந்தி நிற்பதைக் கண்டு முகம் சுளிக்காமல் இருக்க முடியவில்லை. இது அவர்களின் பசியின் தூண்டலா? அல்லது மக்களை ஏமாற்றும் செயலா? எது உண்மையெனப் படைத்தவனே அறிவான்.

ஒவ்வோராண்டும் ரமளான் வருகிறது; நோன்பு நோற்கிறோம்; தான தர்மங்கள் செய்கிறோம்; ஸகாத் வழங்குகிறோம்; ரமளான் சென்றுவிடுகிறது. பின்னரும் அதே ஏழைகள், அதே யாசகர்கள் மீண்டும் மீண்டும் பள்ளிவாசல்தோறும் கையேந்தும் நிலையில்தானே காணப்படுகிறார்கள்? இதற்கு மாற்று வழி இல்லையா?


மஹல்லாதோறும் ஏழைகளைக் கணக்கிட்டு, அந்தந்த மஹல்லாவில் ஸகாத், தர்மப் பொருள்கள் அனைத்தையும் வசூலித்து ஒன்றிணைத்து, அங்குள்ள ஏழைகளுக்கு மொத்தமாக வழங்கி, அவருக்கென ஒரு தொழிலைத் துவக்கிக் கொடுத்துவிட்டால் காலப்போக்கில் ஸகாத் பெறத் தகுதியானோர் குறைந்துவிடுவர். பள்ளிவாசல் முற்றங்களில் நின்று பிச்சையெடுக்கும் கூட்டம் குறையும். சமுதாயம்  மேன்மையடையும். இன்ஷா அல்லாஹ் செய்வோமா?






புதன், 9 ஜூலை, 2014

நபிகளார் நவின்ற மூன்றுகள்-14 (தாராளமாகத் தர்மம் செய்வோம்)

நபிகளார் நவின்ற மூன்றுகள்-14
 (தாராளமாகத் தர்மம் செய்வோம்)          

         மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, ஃபாஸில் தேவ்பந்தீ, (பிஎச்.டி.)

ஃபலஸ்தீன்வாசிகளுள் பேச்சாளர் ஒருவர் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் செவியேற்றுள்ளேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த ஏகஇறை)வன் மீதாணையாக! மூன்று விசயங்களை நான் அறுதியிட்டுச் சொல்வேன்; 1. தர்மம் செய்வதால் எந்தச் செல்வமும் குறையாது; ஆகவே, (தாராளமாகத்) தர்மம் செய்யுங்கள். 2. அடியார் ஒருவர் தமக்கிழைக்கப்பட்ட அநீதியொன்றை அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி மன்னித்தால் அதன் காரணமாக அவரது தகுதியை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை. -பனூ ஹாஷிம் குலத்தாரின் முன்னாள் அடிமைகளுள் ஒருவரான அபூசயீத் அல்பஸ்ரி அவர்களது அறிவிப்பில் (இந்த இடத்தில்) அதன் காரணமாக மறுமை நாளில் அவரது கண்ணியத்தை அல்லாஹ் அதிகமாக்காமல் இருப்பதில்லை என இடம் பெற்றுள்ளது. - 3. அடியார் ஒருவர் யாசகத்தின் வாசலைத் திறந்தால் அவருக்கு அல்லாஹ் வறுமையின் வாசலைத் திறக்காமல் இருப்பதில்லை. (நூல்: அஹ்மது: 1584)

தர்மம் செய்வதால் எந்தச் செல்வமும் குறையாது; ஆகவே, தாராளமாகத் தர்மம் செய்யுங்கள் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள கூற்று, நம் இறைநம்பிக்கையை வலுப்படுத்துகிறது. பொதுவாக நாம் அவ்வப்போது ஒரு சில ரூபாய்களைத் தர்மம் செய்தாலும் ரமளான் மாதம் வந்ததும்   நம்முள் நிறையப் பேர் கணக்கின்றித் தர்மம் செய்ய முன்வருவதைப் பார்க்க முடிகிறது. கஞ்சனும் தன் பங்கிற்குத் தர்மம் செய்ய முன்வருவதை ரமளான் மாதத்தில் நாம் காணலாம்.

தர்மம் மனிதனின் நிம்மதியான வாழ்க்கைக்கும் மகிழ்ச்சிக்கும் காரணமாக அமைகிறது. ஒருவன் மனத்தூய்மையோடு பிறருக்குத் தர்மம் செய்தால் அதில் கிடைக்கின்ற சுகமே தனிதான். அதன்மூலம் அவனுக்குக் கிடைக்கின்ற மனத்திருப்திக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை. அது  மட்டுமல்ல, நாம் நம்முடைய பொருளைப் பிறருக்காகச் செலவு செய்தால் வானவர்கள் நமக்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள். எனவே அதில் அபிவிருத்தி ஏற்படுகிறது. ஆகவே நம் செல்வம் நிறையுமே அன்றிக் குறையாது. ஆதலால் நாம் தாராளமாகத் தர்மம் செய்வோம்.
தர்மம் துன்பங்களை அகற்றுகிறது என்பது நபிமொழி. ஏதேனும் நமக்குத் துன்பம் ஏற்பட்டால், அப்போது நாம் நம்மால் இயன்றதை யாருக்கேனும் தர்மம் செய்துவிட்டால் அந்தத் தர்மத்தின் காரணமாக அல்லாஹ் அத்துன்பத்தை அகற்றிவிடுகின்றான். அதை  விட்டுவிட்டு, அந்தத் துன்பத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் ஒன்றும் ஆகப்போவதில்லை. எனவே அல்லாஹ்விற்காகத் தர்மம் செய்தல் நம் நலனுக்கே என்பதை நாம் முதலில் உணர்தல் வேண்டும்.

இரண்டாவது, ஓர் அடியார் தனக்கு இழைத்துவிட்ட அநீதியை அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி மன்னித்துவிடுவதால் அல்லாஹ் மகிழ்ச்சியடைகிறான். அதன் காரணமாக அல்லாஹ் அவரது மதிப்பை இவ்வுலகிலேயே உயர்த்துகிறான். மறுமையிலும் அவரது தகுதியையும் உயர்வையும் மேலோங்கச் செய்கிறான். ஆகவே ஒருவர் தமக்குச் செய்துவிட்ட ஓர் அநீதியைப் பெரிதுபடுத்தாமல் அவரை மன்னித்து விட்டுவிடுவதே ஓர் இறைநம்பிக்கையாளரின் நற்பண்பாகும்.

ஒரு நபிமொழியில் காணப்படுவதாவது: உன் உறவைத் துண்டித்தவரோடு சேர்ந்து வாழ்; உனக்கு(க் கொடுக்காமல்) தடுத்துக்கொண்டவருக்குக் கொடு; உனக்கு அநியாயம் செய்தவரை மன்னித்துவிடு (நூல்: அஹ்மத்: 16810)  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்நபிமொழியிலிருந்து நாம் அறிவது, கொடுக்காதவருக்குக் கொடுப்பதும் அநியாயம் செய்தவரை மன்னித்துவிடுவதும் நல்லோர்களின் பண்பாகும். ஆகவே நமக்கு ஒருவர் அநியாயம் செய்தாலும், திருப்பி அவருக்கெதிராக அநியாயம் செய்யாமல் அவரை மன்னித்து விட்டுவிடுதலே நமக்கு உயர்வைத் தரும். அல்லாஹ் நம் மதிப்பை இம்மையிலும் மறுமையிலும் உயர்த்துவான்.

அது மட்டுமல்ல மன்னிப்போர் குறித்து அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்: அவர்கள்  செல்வ நிலைமையிலும்வறுமை நிலைமையிலும் தானம் செய்து கொண்டேயிருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்(களின் குற்றங்)களை மன்னித்து விடுவார்கள். (3: 134)

இறையச்சமுடையோரைப் பற்றிக் கூறும்போது, அவர்கள் வறுமையிலும் வளத்திலும் பிறருக்குச் செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். பிறரால் கோபங்கொள்ளுமாறு தூண்டப்பட்டாலும் அச்சமயத்தில் அக்கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வார்கள். பிறர் தமக்குச் செய்யும் குற்றங்கள், அநியாயங்கள் ஆகியவற்றை மன்னித்து விட்டுவிடுவார்கள். மாறாக அதற்காகப் பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட மாட்டார்கள். அத்தகையோர்தாம் இறையச்சமுடையோர் ஆவர்.

மூன்றாவது, அடியார் ஒருவர் யாசகத்தின் வாசலைத் திறந்தால் அவருக்கு அல்லாஹ் வறுமையின் வாசலைத் திறக்காமல் இருப்பதில்லை என்ற நபிகளாரின் கூற்றிலிருந்து நாம் விளங்குவது யாதெனில், ஒருவன் தன் தேவைக்காக இறைவனிடம் கையேந்தாமல் மக்களிடம் யாசகம் கேட்பதற்காகக் கையேந்தத் தொடங்கிவிட்டால் அல்லாஹ் அந்த அடியானைத் தன் பொறுப்பிலிருந்து கழற்றி விட்டுவிடுகிறான். ஏனெனில் அவனுக்கு இறைநம்பிக்கை இருந்திருந்தால் அல்லாஹ்விடம் அல்லவா கையேந்தியிருப்பான். அவன் பிறரிடம் கையேந்தத் தொடங்கியதிலிருந்தே அவனுடைய இறைநம்பிக்கையில் குறை இருப்பதாகத் தெரிகிறது. எனவேதான் அல்லாஹ் அவனை விட்டுவிடுகிறான். அது மட்டுமல்ல, அவன் பிறரிடம் எவ்வளவுதான் யாசகம் பெற்றாலும் அதில் ஒரு திருப்தி ஏற்படாமலே போய்விடுகிறது. அதனால் அவனுடைய மனதில் வறுமை நீடித்துவிடுகிறது. இறுதி வரை அவனுக்கு வறுமையின் வாசல் அடைபடாமல் திறந்தே இருக்கிறது. ஆகவே பிறரிடம் கையேந்துவதற்குமுன் படைத்தவனிடம் கையேந்த வேண்டும் என்பதைத்தான்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குச் சொல்லித் தருகின்றார்கள்.

இது தவிர, யாசகத்தின் இழிவைப் பல்வேறு நபிமொழிகள் வாயிலாக அண்ணலார் உணர்த்தியுள்ளார்கள். ஒருவர் பிறரிடம் யாசகம் கேட்பதைவிட, அவர் தம் கையால் உழைத்துச் சாப்பிடுவதே சிறப்பாகும் என்றும் கூறியுள்ளார்கள். உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.  உழைக்கும் கைக்கு முத்தமிட்டு வாழ்த்தியுள்ளார்கள் என்பதை நாம் நபிமொழித் தொகுப்பு நூல்களில் காண்கிறோம்.

மேற்கண்ட நபிகளாரின் பொன்மொழியில் முதல் கூற்றும் மூன்றாம் கூற்றும் ஒன்றுக்கொன்று முரண்படுவதாகத் தோன்றுகிறது. அதாவது, முதல் கூற்றில், தாராளமாகத் தர்மம் செய்யுங்கள் என்றும் மூன்றாம் கூற்றில், யாசகத்தின் வாசலைத் திறந்தால் அல்லாஹ் அவனுக்கு வறுமையின் வாசலைத் திறக்கிறான் என்றும் கூறப்பட்டுள்ளது. யாரும் யாசகமே கேட்காவிட்டால் பிறகு யாருக்குத்தான் தர்மம் செய்ய முடியும்? தர்மத்தின்மூலம் நன்மையை எவ்வாறு ஈட்டிக்கொள்ள முடியும்?

மேலோட்டமாகப் பார்த்தால் முரண்பாடு இருப்பதாகத் தோன்றினாலும், இரண்டுமே இறைவன்மீது நம்பிக்கைகொள்வதைத்தான் குறிப்பிடுகின்றது. ஒருவன் தர்மம் செய்யாமல் இருப்பதற்கும், ஒருவன்  பிறரிடம் யாசகம் கேட்பதற்கும் அடிப்படைக் காரணம் இறைநம்பிக்கையில் உள்ள குறைபாடுதான். இறைவன்மீது முழுமையான நம்பிக்கைகொண்டோர், கொடுத்தால் செல்வம் குறைந்துவிடும் என்ற அவநம்பிக்கையைத் தூக்கியெறிந்துவிட்டுப் பிறருக்குத் தர்மம் செய்யத் துணிந்துவிடுவர். அதேபோல், படைத்த இறைவன் எல்லோருக்கும் வாழ்வாதாரம் வழங்குவதைப்போல் எனக்கும் வழங்குவான் என்ற இறைநம்பிக்கைகொண்ட ஓர் ஏழை பிறரிடம் எவ்வாறு கையேந்துவான்? ஆக, இரண்டு சாராருக்கும் இறைநம்பிக்கையே அடிப்படை. அந்த இறைநம்பிக்கையில் குறைபாடு ஏற்படும்போதுதான் தர்மம் செய்தல் குறைகிறது; யாசகம் கேட்பதும் தலைதூக்குகிறது.

இறைநம்பிக்கையில் குறைபாடுடையோர்தாம் மற்ற காலங்களிலும், குறிப்பாக ரமளான் மாதத்திலும் வீடு வீடாக, கடை கடையாக, பள்ளிவாசல் பள்ளிவாசலாகப் பிச்சையெடுக்க அலைகின்றார்கள்.  அவர்கள் தம் யாசகத்தின்மூலம் எவ்வளவுதான் பணத்தைச் சேர்த்தாலும் அவர்களின் மனது மட்டும் நிறைவடைவதே இல்லை. இன்னும் இன்னும் என்று ஏங்கிக்கொண்டே இருக்கும். அவர்கள் தமக்கான வாசலைத் திறந்துகொண்டதால் அதை அவர்களின் மரணம் வரை அடைக்கவே முடியாது என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

அதேநேரத்தில் இறைநம்பிக்கையில் உறுதியாக உள்ள அடியார்கள் தம் வறுமையிலும் பிறரிடம் கையேந்தாமல், கிடைத்ததைச் சாப்பிட்டுக்கொண்டு அல்லாஹ்விடம் மட்டுமே கையேந்திக்கொண்டு வெளியுலகில் கண்ணியமாக வாழ்வார்கள். அவர்கள் மக்களிடம் வலியுறுத்திக் கேட்க மாட்டார்கள். அத்தகையோரை இனம் கண்டு நாம் நம்முடைய தான தர்மங்களைச் செய்வோம். ஈருலக நன்மைகளை அடைவோம்.     
                                                                       -தொடரும் இன்ஷா அல்லாஹ்

                (நன்றி: மனாருல் ஹுதா ஜூலை 2014 மாத இதழ்)





திங்கள், 23 ஜூன், 2014

நபிகளார் நவின்ற மூன்றுகள்-13


 (மிஅராஜில் வழங்கப்பட்ட மூன்று வெகுமதிகள்)       

                        மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, ஃபாஸில் தேவ்பந்தீ, (பிஎச்.டி.)

அப்துர் ரஹ்மான் பின் ஷிப்ல் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: மூன்று செயல்பாடுகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அவை: (சிரவணக்கம் செய்யும்போது) காக்கை கொத்துவதைப் போன்று (வேக வேகமாகச்) செய்தல், (தொழுகையில் கையை வைக்கும்போது) விலங்கினங்கள் போன்று (முழங்கை வரை) விரித்துவைத்தல், ஒட்டகம் தனக்கென ஓரிடத்தை ஆக்கிக்கொள்வதைப்போல் (மஸ்ஜிதில்) தொழுவதற்கென ஓரிடத்தை நிர்ணயித்துக்கொள்ளுதல் ஆகியனவாகும். (இப்னுமாஜா: 1419)

மேற்கண்ட நபிமொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று விசயங்களைத் தடைசெய்துள்ளார்கள். தொழுகையில் சிரவணக்கம் செய்வோர் அதை முறையாகச் செய்யாமல் காக்கை கொத்துவதைப் போன்று மிகத் துரிதமாகச் செய்துவிட்டுத் தலையைத் தூக்கிக் கொள்கின்றனர். முறையாகவும் அமைதியாகவும் செய்வதில்லை. இது முற்றிலும் தடைசெய்யப்பட்டதாகும். இவ்வாறு செய்வதால் ஒருவருக்குத் தொழுகையில் கிடைக்க வேண்டிய அமைதியும் கண்குளிர்ச்சியும் அறவே கிடைக்காமல் போய்விடுகிறது. எனவே அதில் அதிகமாகக் கவனம் செலுத்திப் பொறுமையாகவும் அமைதியாகவும் செய்ய வேண்டும்.

இரண்டாவது, தொழுகையில் சிரவணக்கம் செய்வதற்காகக் கையை வைக்கும்போது விலங்கினங்கள் போன்று முழங்கை வரை விரித்துவைக்கின்றனர் சிலர். அவ்வாறு வைப்பதால் சுகமாக இருக்கலாம். ஆனால் அது முறையில்லையே. ஆகவே சிரவணக்கம் செய்வதற்காகக் கையைத் தரையில் வைக்கும்போது மணிக்கட்டு வரையுள்ள விரிவாக உள்ள கைப் பகுதியை மட்டுமே வைக்க வேண்டும். மணிக்கட்டிற்குக் கீழ் உள்ள பகுதியைத் தரையிலிருந்து தூக்கியவண்ணம் வைத்திருக்க வேண்டும். இதுதான் நபிவழியாகும்.

மூன்றாவது, ஒட்டகம் தனக்கென ஓரிடத்தை ஆக்கிக்கொள்வதைப்போல் மஸ்ஜிதில் தொழுவதற்கென ஓரிடத்தை நிர்ணயித்துக்கொள்கின்றனர் சிலர். நாள்தோறும் ஒரே இடத்தில் தொழுவதும் அமர்வதும் அவர்களின் வாடிக்கை. இவ்வாறு செய்வதால், பொதுவாக மஸ்ஜிதில் தமக்கு மட்டும் ஓரிடத்தை உரிமையாக்கிக்கொள்வதைப்போன்ற நிலை ஏற்படுகிறது. அவ்விடத்தில் மற்றவர் அமர்ந்துவிட்டால் அவரை ஒதுங்கிக்கொள்ளுமாறு சொல்வதும் நடைபெறுகிறது. இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆக மேற்கண்ட மூன்றுமே தொழுகையில் நடைபெறக்கூடிய நிகழ்வுகளாக இருப்பதால் நாம் அவற்றில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றை எவ்வளவு நுட்பத்தோடு கூறியிருப்பார்கள் என்பதை நாம் விளங்கிச் செயல்பட வேண்டும்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (விண்ணுலகப் பயணத்திற்காக) இரவில் அழைத்துச் செல்லப்பட்டபோது  (வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) சித்ரத்துல் முன்தஹா வரை அவர்கள் கொண்டுசெல்லப்பட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மூன்று (கட்டளைகள்) வழங்கப்பட்டன. அவையாவன: 1. ஐவேளைத் தொழுகைகள் வழங்கப்பட்டன. 2. அல்பகரா அத்தியாயத்தின் இறுதி (மூன்று) வசனங்கள் அருளப்பெற்றன. 3. அவர்களுடைய சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு இணையேதும் வைக்காதவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பெரும்பாவங்கள் மன்னிக்கப்(படுவதாக அறிவிக்கப்)பட்டன. (நூல்: முஸ்லிம்)

முஸ்லிமாக உள்ள ஒவ்வொருவர்மீதும் ஐவேளைத் தொழுகை கடமை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை முறையாகப் பேணுவோர் மிகவும் குறைவு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்புவியில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற வேளையில் திருக்குர்ஆன் வசனங்கள் எத்தனையோ இறங்கின. அப்போதெல்லாம் தொழுகையைப் பற்றிய கட்டளையைக் கூறாமல் அவர்களை விண்ணுலகிற்கு அழைத்து, அங்கு வைத்து ஐவேளைத் தொழுகைகளை உயர்ந்தோன் அல்லாஹ் நபிகளாருக்கு வழங்கியதிலிருந்து இதன் முக்கியத்துவத்தையும் உயர்வையும் அறியலாம். அத்தகைய தொழுகையை முறைப்படி பேணுவோர் நம்முள் எத்தனைபேர்? ஏன் அதில் நம்முள் பலர் அசட்டையாக இருக்கிறோம்? அதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டாமா? நேரம் குறிப்பிடப்பட்ட கடமை என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியும் நம்முள் பலர் அந்தந்த நேரத்தைத் தவறவிட்டு விடுகின்றோமே ஏன்?

அல்பகரா அத்தியாயத்தின் கடைசி மூன்று வசனங்கள் நபிகளாருக்கு வழங்கப்பட்டன. அம்மூன்று வசனங்களில் அல்லாஹ் என்ன கூறியுள்ளான். ஏன் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் என்று நம்முள் பலருக்கு வினா எழும். அவற்றுள் முதலாம் வசனத்தில் அல்லாஹ் தன்னுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் கூறுகின்றான். இரண்டாம் வசனத்தில் தன்னுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் மற்ற இறைநம்பிக்கையாளர்களும் எதையெல்லாம் நம்பிக்கை கொள்வார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றான். மூன்றாவது வசனத்தில், ஒரு மனிதன் தனக்காகத் தன் இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதையும் எப்படியெல்லாம் அவன் தன் இறைவனிடம் நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் கூறுகின்றான். ஆக, திருக்குர்ஆனின் சாரம் இவற்றுள் பொதிந்து கிடப்பதால்தான் இம்மூன்று வசனங்கள் அவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்ணுலகப் பயணத்தில் மூன்றாவதாக வழங்கப்பட்டதாவது, அவர்கள்தம் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு இணையேதும் வைக்காதவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பெரும்பாவங்கள் மன்னிக்கப்படுதல் ஆகும். பொதுவாகத் தமிழர்கள் பஞ்ச மாபாவங்கள் என்று கொலை, களவு, காமம், சூது, பொய் என்று கூறுவார்கள். இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரை சப்த மாபாவங்கள் உள்ளன. அதாவது பெரும்பாவங்கள் ஏழு உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் படைத்த அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் ஆகும். இறைவனுக்கு நிகராக மற்றொருவரை மனத்தால் எண்ணுவதும் வழிபடுவதும் மிகப்பெரும் பாவமாகும். ஆகவே அதைச் செய்யாத ஒருவன் வேறு ஏதேனும் பாவத்தைச் செய்துவிட்டாலும் உயர்ந்தோன் அல்லாஹ் அதை மன்னித்துவிடுகின்றான் என்பதே மேற்கண்ட நபிமொழியின் சாரமாகும்.

ஆகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு விண்ணுலகப் பயணத்தில் வழங்கப்பெற்ற மூன்றும் மனிதனுக்கு மிகவும் பயனுள்ளதாகும். எனவே நாம் ஐவேளைத் தொழுகையை வழுவாது நாள்தோறும் கடைப்பிடித்து, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி மூன்று வசனங்களை ஓதி, இறைவனின் அன்பையும் மன்னிப்பையும் பெற்றிட உயர்ந்தோன் அல்லாஹ் அருள்புரிவானாக!

                                                                        -இன்ஷாஅல்லாஹ் தொடரும்





திங்கள், 16 ஜூன், 2014

பிறர் நலம் பேணல்!


வியாழன், 8 மே, 2014