--------------------------------------------------
எனக்குத் தெரிந்த ஒருவர்
(இப்ராஹீம்) நேற்று (10.02.2025) என்னை அலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
நான் 45 ஆண்டுகளுக்குமுன்
அரிசி வியாபாரம் செய்துகொண்டிருந்தபோது, அதே தொழிலைச் செய்துவந்த
ஒருவரோடு எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. அப்போது எனக்கு 18 அல்லது இருபது வயது இருக்கும்.
அவருக்கு அப்போது 45 வயது இருக்கும். அவரும் நானும் தொழில் செய்து வந்த வேளையில், ஒரு நாள் நான் அவரிடம் இருபது ரூபாய் கடன் வாங்கினேன். பிறகு அதைத் திருப்பிச்
செலுத்த மறந்துவிட்டேன்.
இப்போது நான் என்னுடைய
66ஆம் அகவையில் ஓய்வுக் கட்டிலில் படுத்துக்கொண்டு, பழைய
நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தபோது, அது என் நினைவுக்கு
வந்தது. உடனடியாக எழுந்து அமர்ந்துகொண்டு, அதைத் திருப்பிக் கொடுப்பது
பற்றிச் சிந்தித்தேன். அந்தத் தொகையை எடுத்துக்கொண்டு, என் மகனுடைய துணையோடு அவருடைய மஹல்லாவிற்கு, அவரைத் தேடிச் சென்று விசாரித்தேன். அவருடைய
பெயரைச் சொல்லி (உஸ்மான்), அவர் இருக்கின்றாரா அல்லது அவர்தம் உறவினர்கள்
யாரேனும் இருக்கின்றாரா என்றெல்லாம் விசாரித்துப் பார்த்தேன். அந்தப் பெயரில் வயதான
யாரும் இங்கு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்த
முடியவில்லையே என்ற மனவருத்தத்தோடு திரும்பி வந்துவிட்டேன்.
பிறகு ஆலிம்கள் சிலரிடம்
இதற்கான தீர்வு கேட்டேன். திருப்தியான பதில் இல்லை. அதனால் உங்களிடம் கேட்டால் ஒரு
தீர்வு கிடைக்குமே என்ற எண்ணத்தில்தான் உங்களை அழைத்தேன் என்றார்.
“எப்போது, எவ்வளவு கடன் வாங்கினீர்” என்று விசாரித்தேன்.
“1980ஆம்
ஆண்டு இருக்கலாம்; இருபது ரூபாய் மட்டும் கடன் வாங்கினேன்” என்றார்.
“இப்போது
எவ்வளவு அவருக்குக் கொடுக்கப்போகிறீர்?”
“கணக்குப்
பார்த்ததில் 2700 ரூபாய் சொச்சம் வருது. முழுமையாக 3000 ரூபாய் கொடுத்துவிடலாம் என்று
முடிவு செய்துள்ளேன்.”
“எப்படிக்
கணக்குப் போட்டீங்க?”
“அன்றைய
தங்கத்தின் விலையையும் இன்றைய விலையையும் ஒப்பிட்டுக் கணக்கிட்டேன்” என்றார்.
“அப்படியா? சரியாகத்தான் கணக்குப் போட்டுள்ளீர்” என்றேன்.
“சரி
ஹஜ்ரத், அந்தத் தொகையை நான் எப்படி அவருக்குக் கொடுப்பது? அதற்கான தீர்வைச் சொல்லுங்க” என்றார்.
“அதற்கு
ஒரு வழி இருக்கு. அதாவது அவருடைய பெயரில் (நிய்யத் வைத்து) யாரேனும் ஓர் ஏழைக்கு அந்தத் தொகையைத் தர்மம் செய்துவிடுங்கள். அல்லாஹ் அதற்கான
நன்மையை அவருடைய கணக்கில் சேர்த்துவிடுவான்; உங்களுக்கும் நன்மை
உண்டு” என்றேன்.
அதைக் கேட்ட மகிழ்ச்சியில், “அல்ஹம்து லில்லாஹ்” என்றார். “நீங்க இந்தத் தீர்வைச் சொன்ன பிறகுதான்
என்னுடைய கவலை நீங்கியது. ரொம்ப ஷுக்ரியா (நன்றி) ஹஜ்ரத்” என்றார்.
என் பதிலைக் கேட்டு
மனத்திருப்தியடைந்த அவரைப் பார்த்து நான் பெருவியப்படைந்தேன். இந்தக் காலத்தில் இப்படியும்
ஒருவரா!
எத்தனையோ பேர் வாங்கிய
கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடிக்கிறார்கள்; இறுதி
வரை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிவிடுகின்றார்கள். அப்படிப்பட்ட காலத்தில், தம் நினைவுகளை அசைபோட்டு, தாம் வாங்கிய இருபது ரூபாயை நினைவில் கொண்டுவந்து, அதை இன்றைய மதிப்பிற்கேற்ப நிறைவேற்ற வழிதேடுகிறாரே
என்று வியந்தேன்.
இறுதி இறைத்தூதர் முஹம்மது
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போதித்த போதனைகளைப் பின்பற்றுவதில் எவ்வளவு ஆர்வமுடையவராய்
இருக்கின்றார்! மறுமையை எண்ணி எவ்வளவு அஞ்சுகிறார்!
அடியார்கள் தனக்குச்
செய்ய வேண்டிய கடமைகளில் ‘குறை’ செய்துவிட்டால் அதை அல்லாஹ் மன்னித்துவிடுவான். ஆனால் ஓர் அடியார் மற்றோர்
அடியாருக்குக் கொடுக்க வேண்டிய உரிமைகளில் ‘குறை’ செய்தால் அதற்கான தீர்வை அந்த அடியாரிடம்தான்
பெற வேண்டும். ஒருக்கால் அந்த அடியாரிடம் அவர் மன்னிப்புக் கேட்கலாம். பாதிக்கப்பட்ட
அடியார் இறந்துபோயிருந்தால், அவருக்காகவும் தமக்காகவும் அல்லாஹ்விடம்
பாவமன்னிப்புக் கோரலாம். அது தொகையாக இருக்கும் பட்சத்தில், அந்தத் தொகையை அந்த அடியார் பெயரில் யாரேனும்
ஏழைக்குத் தர்மம் செய்துவிடலாம். இதை இன்றைய மனிதர்கள் உணர வேண்டும்.
இல்லையேல் மறுமையில்
- தீர்ப்பு நாளில் அவ்விருவருக்கிடையே அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான். அங்கே பாதிக்கப்பட்ட
மனிதருக்கு நியாயத் தீர்ப்பு வழங்கப்படும். உரிமை மீறலில் ஈடுபட்டவருடைய நன்மை பாதிக்கப்பட்டவருக்குக்
கொடுக்கப்படும் என்பதை நினைவில் கொள்வோம்.
கடன் வாங்கியோர் இயன்ற
அளவிற்குத் துரிதமாக அதனைத் திருப்பிச் செலுத்த முயலுங்கள்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகையில் துஆ செய்யும் போது, "இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடன் படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன?'' என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், "மனிதன் கடன்படும் போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்'' என்று பதிலளித்தார்கள். (புகாரீ: 2397)
அன்புடன்
மௌலவி நூ. அப்துல்
ஹாதி பாகவி
11 02 2025
=============================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக