-------------------------------
ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்வினை உண்டு. நாம் ஒரு நகைச்சுவை சொன்னால் சிரிப்பார்கள்; துக்கமான செய்தியைச் சொன்னால் வருத்தப்படுவார்கள்; நாம் பிறரைத் திட்டினால் அவர்கள் நம்மைத் திட்டுவார்கள்; நாம் அடித்தால் அவர்கள் நம்மை அடிப்பார்கள்; நாம் பிறரிடம் மரியாதையாகவும் ஒழுக்கமாகவும் நடந்துகொண்டால் அவர்கள் நம்மை மரியாதையாக நடத்துவார்கள். நாம் அன்பாக நடந்துகொண்டால் அவர்களும் நம்மிடம் அன்பாக நடந்துகொள்வார்கள். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்வினை உண்டு. ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒருவர் நன்மை செய்தாலும் தீமை செய்தாலும் அவருக்கு அவர்கள் நன்மையே செய்வார்கள். அதுதான் அவர்களின் எதிர்வினை.
நான் அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றுகிற ஒரு முஸ்லிம் என்று சொல்லிக்கொள்வதில் நாம் பெருமிதமடைகிறோம். ஆனால் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தம்மை எதிர்த்தவனை என்ன செய்தார்கள்? தம்மைக் கொல்ல வந்தவனை என்ன செய்தார்கள்? தம்மைத் திட்டியவனை என்ன செய்தார்கள்? மன்னித்தார்கள். அந்தப் பண்பு நம்மிடம் இல்லையே.
நம்மைத் திட்டியவனைத் திட்டுவதைக்கூட நாம் ஒருபுறம் வைத்துவிடுவோம். நம்மை எதிர்த்தவனைக்கூட, நாம் திட்டித்தீர்க்கின்றோமே இது எந்த வகையில் நியாயம்?
இன்று சமூக வலைத்தளங்களில் அடுத்தவனைத் திட்டுவதும், அவனுடைய தனிப்பட்ட செய்திகளை அம்பலப்படுத்துவதுமான பதிவுகள்தாமே நிறைந்து கிடக்கின்றன? அடுத்தவனின் இதயத்தைக் கீறிக் கிழிக்கும் பதிவுகள், அந்தரங்கப் பதிவுகள் ஆகியவைதாமே மலிந்து கிடக்கின்றன?
நமக்கு நன்மை செய்தவனுக்கு ஒரு நன்மை செய்வது பெரிதன்று. நமக்குத் தீங்கு செய்தவனுக்கு நன்மை செய்வதுதான் பெரிதிலும் பெரிது.
உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள் என்னிடம், “உக்பா பின் ஆமிரே! உன் உறவைத் துண்டித்தவரோடு நீ சேர்ந்து வாழ்; உனக்குத் (தராமல்) தடுத்துக்கொண்டவருக்கு நீ கொடு; உனக்கு அநியாயம் செய்தவரை மன்னித்துவிடு” என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மத்: 17452)
உங்கள் எழுத்துகள் பிறரின் உள்ளத்தைக் கீறிக்கிழித்துவிட வேண்டா.
மாறாக உங்கள் எழுத்துகள்
படிப்போரின் உள்ளத்தில் உவகையை ஏற்படுத்தட்டும்.
முடங்கியோரின் வாழ்க்கையை முன்னுக்குக் கொண்டுவரட்டும்.
துவண்டுபோனோரின் உள்ளத்தில் துணிவை ஏற்படுத்தட்டும்.
சோர்ந்து போனோருக்கு ஆறுதலாக அமையட்டும்.
எழுதினால் அப்படி எழுதுங்கள். இல்லையேல் அமைதியாக இருங்கள்.
பேசினால் நல்லதைப் பேசுங்கள். இல்லையேல் அமைதியாக இருங்கள்.
-மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
29 01 2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக