வியாழன், 30 ஜனவரி, 2020

வரம்புமீறிய சட்டத் திருத்தம்


------------------------------------------
அண்மைக்காலமாகப் பல்வேறு சட்டத் திருத்தங்களும் மக்களுக்கு எதிரான புதிய புதிய சட்டங்களும் இயற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று (புதன்கிழமை 29.01.2020) மக்களவையில் ஒரு புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது கருக்கலைப்புக்கான கால வரம்பை 20லிருந்து 24 வாரமாகத் திருத்தியமைக்கப்பட்ட சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பெரும்பாலான பெண்களின் நலன் கருதி இச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதுஎன மத்திய அமைச்சர் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

இது பெண்களின் உடல் நலனுக்குக் கேடானது. உயிரிழக்கும் ஆபத்தும் இதில் உள்ளது என்பதே உண்மை. கருவில் ஆறு மாதங்கள் வளர்ச்சியடைந்த சிசுவை வயிற்றுக்குள் வைத்துக் கொலை செய்வதே கருக்கலைப்பு. இதனால் எவ்வளவு சிரமத்தை ஒரு பெண் தாங்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை எல்லோரும் யோசிக்க வேண்டிய தருணமிது.

நம் நாட்டில் இயல்பான பிரசவத்திலேயே தாயும் சேயும் சேமத்துடன் வீடு வந்து சேர்வது அதிசயமே. அப்படியிருக்கையில் கவனக்குறைவு நிறைந்த மருத்துவர்கள் பணியாற்றுகின்ற நம் நாட்டில் இதனால் இன்னும் எத்தனை பெண்கள் மடிய இருக்கின்றார்களோ தெரியவில்லை.

இது இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான சட்டமாகும். ஒரு சிசு கருவில் உருவான நான்கு மாதங்களில் ஒரு வானவர் மூலம் அல்லாஹ், அச்சிசுவின் நன்மை-தீமை, வாழ்வாதாரம், ஆயுள், இறப்பு ஆகியவற்றைப் பதிவு செய்து, உயிரையும் ஊதிவிடுகின்றான். உயிர் ஊதப்பட்ட சிசுவைக் கலைப்பது கொலையே ஆகும். இது குறித்து நாளை மறுமையில் விசாரிக்கப்படும்.

அல்லாஹ் கூறுகின்றான்: உயிரோடு புதைக்கப்பட்ட பெண் குழந்தை, என்ன குற்றத்திற்காக நீ கொலை செய்யப்பட்டாய் என்று விசாரிக்கப்படும்.” (81: 8-9) பிறந்த பின் உயிரோடு புதைத்தல், பிறக்குமுன்னரே உயிரோடு அழித்தல் எல்லாமே இவ்வசனத்திற்குள் அடக்கம்.

வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகள் தம்மையறியாமல் கருவுற்றுவிடுகின்றனர். அது அவர்களுக்குத் தெரியாமலே போய்விடுகிறது. ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகுதான் அவர்களுக்கு அது தெரிய வருகிறது. அத்தகைய சிறுமிகளுக்கு இச்சட்டம் ஆதரவாக அமையும்என்றும் தெரிவிக்கப்படுகிறது. அப்படியெனில் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகளுக்கான கருவைக் கலைப்பதில் விதிவிலக்கு உண்டுஎன்றே சட்டத்திருத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, எல்லாப் பெண்களுக்குமான பொதுச்சட்டமாக, கருக்கலைப்பின் கால வரையறையை ஆறு மாதங்களாக மாற்றுவது பல்வேறு சிக்கல்களுக்கும் உயிரிழப்பிற்கும் காரணமாக அமையும். மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள இச்சட்டம் பெண்களுக்கு எதிரானதாக அமையுமே தவிர சாதகமாக அமையாது என்பது உறுதி.

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி,
30 01 2020
===========================
==




கருத்துகள் இல்லை: